Friday, February 22, 2008

பதங்களின் சரசம்

அண்ட சராசரம் அனைத்தும் உறைய!
ஆடிய பதங்களில் ஆனந்தம் துலங்க!

இருகரு விழிகளில் கனவுகள் விரிய!
நவரசம் கண்டு நானிலம் மயங்க!

காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
காற்சதங்கை ஒலி பாடல்கள் இசைக்க!

கூந்தல் கலைந்து வானம் அளக்க!
அபிநயம் பார்த்து அகிலம் வியக்க!

சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
வியர்வை கங்கை ஆறாய் ஓட!

நினைவுகள் யாவும் நிர்மலமாக!
உணர்வுகள் மறைந்து உலகம் ஜொலிக்க!

ஆடல் புரிதல் ஆனந்தமன்றோ!!
பதங்களின் சரசம் பரவசமன்றோ!!


--கவிநயா

6 comments:

  1. கவிநயா!!!!!

    வாவ், அருமை, அருமை. ஒரு நடனக் கலைஞர் கண் முன்னே வந்து ஜலீர் ஜலீர் என்று ஆடி அனைவரையும் மயக்கிய உணர்வு. வார்த்தைகளின் ஜாலம், கோர்வை, உணர்வுகளை வெளிப்படுத்திய திறம் ஆஹா, அருமை அருமை.

    அ, ஆ, இ என்று முதல் எழுத்து ஆரம்பித்ததும் எங்கே அந்த கட்டுக்குளேயே இருந்து விடுவீர்களோ என்று இருந்தேன், பளிச்சென்று நவரசம் என்று துவங்கியதும், அதில் நானிலம் மயங்குவதும் சூப்பர்.

    'சுவாசம் சற்றே வேகம் கூட்ட!
    வியர்வை கங்கை ஆறாய் ஓட!
    நினைவுகள் யாவும் நிர்மலமாக!'

    என்ன ஒரு ப்ரவாளமான நடை.

    அன்புடன்,

    முரளி.

    ReplyDelete
  2. ஆஹா. அப்படியே க்லென் ஆலன் கல்சுரல் ஆர்ட்ஸ் செண்டரில் 'யாரோடதோ'(அதாங்க ஆங்கிலத்தில் someone's) அரங்கேற்றம் பார்த்த மாதிரி இருக்கு! (முரளிக்கு சந்தடி சாக்குல ஒரு இடி - அவர் எங்க அத பாத்தார்?)


    சும்மா சொல்லக்கூடாது. அப்படியே எழுந்து ஒரு ஆட்டம் போடனும்போல இருக்கு. மக்கள் பாவம்னு விட்டுர்ரேன். எங்கியோ படிச்சது... ஒரு நல்ல நடிப்ப பாத்தா, நம்மளுக்கும் நடிக்கத் தோணுமாம். அது மாதிரி. சூப்பரோ, சூப்பர்!

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி, முரளி, நாகு! நல்லா சாப்பிடறவங்க இருந்தா சமைக்கலாம்னு சொல்ற மாதிரி, உங்களை மாதிரி ரசிகர்கள் இருந்தா நிறையவே எழுதலாம். மீண்டும் நன்றி!

    ReplyDelete
  4. நாகு,

    அரங்கேற்றத்தை குடும்பத்தோட பார்க்க கொடுத்து வைக்கலை, வீட்டில ஒருத்தர் கைக் குழந்தையைப் பார்த்துக்க வேண்டி இருந்தது. அதனால, அரங்கேற்றத்துக்கு முதல் நாளே அவங்க நடன பயிற்சியை நான் போய் பார்த்தேனே.

    கதை எழுதும் போது அதில் நாம கண்டிப்பாக ஈடுபட்டு எழுதனுமே தவிர அதைப் போலவே நம் வாழ்க்கையில் அனுபவவித்திருக்கனும்னு இல்லையே. நான் வேற கொலை கதை எழுதறேன், அதுக்கெல்லாம் எங்க ஆதாரம்ன்னு யாராவது கேட்டா நான் எங்க போறது. (அப்பாடா, இந்த நாகு தொல்லை தாங்கல).

    //எங்கியோ படிச்சது... ஒரு நல்ல நடிப்ப பாத்தா, நம்மளுக்கும் நடிக்கத் தோணுமாம்.//

    அப்படின்னா, மறுபடியும் 'வேதாளம்' மாதிரி ஏதாவது கவிதை வெளிவரப் போகுதா?

    அன்புடன்,

    முரளி

    ReplyDelete
  5. கவிநயா,

    அருமையான கவிதை. நான் மிகவும் ரசித்த வரிகள்:

    காற்றினில் கால்கள் கவிதைகள் எழுத!
    நினைவுகள் யாவும் நிர்மலமாக!

    ReplyDelete
  6. நன்றி சதங்கா!

    //அதுக்கெல்லாம் எங்க ஆதாரம்ன்னு யாராவது கேட்டா நான் எங்க போறது.//

    முரளி, ஆதாரம் இருந்தா நீங்க உள்ள போக வேண்டியிருக்கும்!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!