Thursday, May 22, 2014

தாய் - 4

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் மூன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


இதுவரைக்கும் அம்மா எப்படி தன்னை வளர்த்தாள், எப்படி தன்னை பெற்றெடுத்தாள் ந்னு பாடிய பட்டினத்து ஸ்வாமிகள் அம்மாவின் சிதைக்கு தீ மூட்டி அது அடங்கியதும் நேரடியாக சிவபெருமானிடம் கேட்கும் சில கேள்விகள் இந்தப் பாடலில்;

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ
என்னை மறந்தாளோ சந்தமும் உன்னையே நோக்கி
உகந்து வரம் கிடந்தென் 
தன்னையே ஈன்றெடுத்த தாய்.

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானே எப்பொழுதும் உன்னை தன் அகக் கண்ணால் பார்த்து மகிழ்ந்து குழந்தைப் பேறு வரம் வேண்டித் தவம் கிடந்து என்னை உன் அருளால் ஈன்ற என் தாய் நான் இட்ட தீயினால் வெந்து ஆம்பல் ஆயினளோ, அவள் அன்புக்கு உரிய என்னை மறந்து விட்டாளோ, அவள் உன்னை எப்பொழுதும் மறவாதவள் அதனால் அவள் உன் பதத்திற்கு வந்து பேரின்பம் அடைந்தாளோ என்று கேட்கிறார்.


அடுத்து ஊரார் அனைவரையும் அழைக்கின்றார், அழைத்து இந்த வாழ்க்கை எப்படிப் பட்டது என்பதை நான்கு வரிகளில் தெளிவாக்குகிறார்.

வீற்றிருந்தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


என் தாய் நேற்று உயிருடன் இருந்தாள், திண்ணையில் வீற்றிருந்தாள், பிறகு இறந்து போய் வீதி தனில் கிடந்தாள், இன்று வெந்து சாம்பலாகிப் போனாள்.  இதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிக்காமல், அதற்காக அழாமல் எல்லோரும் அவளுக்காகப் பால் தெளிக்க வாருங்கள்.  இங்கும் அங்கும் எங்கும் பரவி இருப்பது சிவமயமே.

இவ்வளவு நேரம் தனது தாயின் பிரிவை எண்ணி கலங்கிய பட்டினத்தார் எப்படி இந்த கடைசிப் பாடலில் எல்லோரையும் அழாதே என்று சொல்கிறார்ன்னு ஒரு கேள்வி எழும்.  இவருக்கு ஒரு நீதி நமக்கு ஒரு நீதியா? அப்படி இல்லை, அவர் அழுவதாக காட்டியிருப்பது ஒரு தாய் என்பவள் எப்படி பட்ட நல்ல குணங்கள் கொண்டவள், எப்படிப்பட்ட கருணை கொண்டவள் என்று நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்கு புரியவைக்க என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவரது இந்த கருத்தை சார்ந்து பிற்காலத்தில் ஒரு கவிஞர் இப்படிப் பாடினார்:

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ நிலத்தீர்"

தன்னைச் சுமந்து பெற்ற தாய்க்கு இறுதிக் கடன் செய்யும் போது இவர் பாடிய பாடலைப் பார்த்தோம்

அடுத்து இவர் தனக்கு பிறவா வரம் வேண்டி பாடுகிறார் என்று பார்ப்போம்.

எத்தனையூர், எத்தனை வீடு எத்தனைதாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டு அழைக்க ஏன் என்றேன் நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா 
உனக்கு திருவிளையாட்டோ


நமக்கு கிடைத்த இந்த பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்று நமக்கு தெரியாது,
எத்தனை ஊர்ல இருந்தோம் தெரியாது.
எத்தனை வீடுகள்ல இருந்தோம் தெரியாது,
நம்மை பெற்றவர்கள் எத்தனைப் பேர் தெரியாது,
எத்தனைபேர் இட்டு அழைத்தார்கள் தெரியாது - அதாவது எவ்வளவோ பேர் நம்மை அழைத்து பேசியிருப்பார்கள் தெரியாது
இன்னொரு அர்த்தம் - எவ்வளவு பெயர் நமக்கு இதுவரை இருந்தது தெரியாது
இப்படி இத்தனை பிறவிகளில் நான் எல்லோருக்கும் ஏன் ஏன் நு பதில் சொல்லி சொல்லி களைப்பாகி விட்டேன். இது என்ன உனக்கு ஒரு திருவிளையாடலா ந்னு கேக்கரார்.  இந்தப் பாடலில் தன்னைப் பற்றிச் சொல்லி பிறவா வரம் தரச் சொல்லி கெஞ்சுகிறார்.


இந்தப் பாடலைத் தழுவி தமிழ்த் திரைப்படத்தில் வந்த ஒரு பாடல்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா, அந்த ஊர் நீயும் கூட இருந்த ஊர் அல்லவா

 அடுத்த பாடலில் அம்மா, பிரம்மா இருவருக்கும் இருக்கும் கஷ்டத்தைச் சொல்லி பிறவா வரம் கேக்காரார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா

திரு இருப்பையூரில் இருக்கும் சிவனே என்னை பெற்று பெற்று எத்தனையோ அம்மாக்கள் உடல் சலித்து விட்டார்கள், கடுமையான வினைகள் உடைய நான் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலையெழுத்தை எழுதி எழுதி வேதா (பிரமன்) கை சலித்து விட்டான், அதனால் எனக்கு இன்னொரு முறை ஒரு தாயின் கருப்பையில் வாழ வேண்டிய கஷ்டத்தைத் தராதே என்கிறார்.

அடுத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிச் சொல்லி பிறவா வரம் கேக்கிரார்.

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் பண்ணும் அயன்
கையாறவும் அடியேன் காலாறவும் கண்பார்
ஐயா திருவையாறா

திருவையாற்றில் வீற்றிருக்கும் சிவனே, என்னை மீண்டும் படைக்காமல் இருந்தால், மீண்டும் மீண்டும் நான் இறந்து என்னை கொளுத்தி கொளுத்தி இந்த பூமி சூடாவதைத் தடுக்கலாம்.

அப்படி கொளுத்தி கொளுத்தி வெளியேறும் புகையால் வானம் மறைக்கப் படாமல் காக்கலாம்.

பலகோடி தாய்மார்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் கொஞ்சம் இளைப்பாறலாம்
என்னைப் படைத்து படைத்து பிரமன் கை வலியில் துடிக்கிறார் அவருக்கு கொஞ்சம் கை வலியிலிருந்து ஆறுதல் கிடைக்கட்டும்.

உன்னைத் தேடித் தேடி இப்படி அலைந்து அலைந்து வலிக்கும் என் கால்கள் கொஞ்சம் இளைப்பாற எனக்கு பிறவா வரம் தா என்கிறார்.

என்னைப் போன்ற மனிதர்கள் இந்த உடலை பேணிவளர்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் இந்த உடலை ஒரு புண் என்கிறார் இவர்:

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு 
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியின் பொடி.

அதோடு இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு இதன் நிலை என்ன என்பதை இந்தப் பாடலில் தெளிவாக்குகிறார்:

எரியெனக்கு என்னும் புழுவோ
எனக்கென்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும் பருந்தோ
எனக்கு எனும் தான் புசிக்க
நரியெனக்கு என்னும் புன் நாய் எனக்கு
என்னும் இந்நாறு உடலைப் 
பிரியமுடன் வளர்த்தேன் இதனால்
என்ன பேறு எனக்கே.

எரி - நெருப்பு, புழு, மண், பருந்து, நரி, நாய் எல்லாம் என் உடலை சாப்பிட ஆவலுடன் இருக்கும் அது தெரியாமல் நாறும் இந்த உடலை இப்படிப் பிரியமாக வளர்த்தேனே இதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்கிறார்.

ஆரணம் நான்கிற்கும் அப்பால் அவர் அறியத் துணிந்த
நாரணன் நான்முகனுக்கு அரியான் நடுவாய் நிறைந்த பூரணன்
எந்தைப் புகலிப் பிரான் பொழில் அத்தனைக்கும் காரணன்
அந்தக் கரணம் கடந்த கருப்பொருளே


வேதங்கள் நான்கிற்கும் அப்பாற்பட்டவன்
அவனை அறியப் புறப்பட்ட நாரணன் மற்றும் பிரமன் இருவருக்கும் தெரியாதவன்
எல்லாப் பொருளிலிலும் இருந்து இயக்குபவன்
என் தகப்பன்
எல்லா உலகங்களுக்கும் வினை முதலானவன்
அந்தக் கரணங்களான - மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என ஒன்றும் இல்லாதவனும் முழு முதற் பொருளானவனுமான அந்தச் சிவனை வணங்கு கின்றேன்.


இந்தப் பாடலோடு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

முரளி இராமச்சந்திரன்.

Wednesday, May 21, 2014

தாய் - 3

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனு நீதியில 4 விஷயங்களை விட்டு வெக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்குன்னு துக்ளக் ஆசிரியர் சோ சொல்லுவார்.  ஒன்னு - விஷம், ரெண்டு - பகை, மூனு - பாம்பு, நாலு - நெருப்பு.  இதுல எதை மிச்சம் வெச்சாலும் அது நம்மள திரும்பி வந்து தாக்கும்.  யோசிச்சு பார்த்தா அது சரின்னு தெரியும்.  நாம யோசிக்கவே வேண்டாம்னுதான் அந்த காலத்துப் பெரியவங்க யோசிச்சிருக்காங்க இருந்தாலும் நாம யோசிப்போமே.  இதுல முக்கியமான ஒன்னு பகை.  அதை அழிக்க பலர் உபயோகிச்ச வழி என்னன்னு பார்த்தால் நெருப்புன்னு தெரியவரும்.  ஒரு ராஜா ஒரு அண்டை நாட்டை தாக்கி அவங்களை வெற்றி பெற்றால், உடனே அவங்களோட இடத்தை தீ வைச்சு அழிப்பாங்க.  இது அந்த நாட்டு மக்களோட மனதுல ஒரு பயத்தையும், அவங்களுக்கு பெரிய செலவையும் கொடுக்கும்ங்கரதும் ஒரு காரணம்.

புராணக் கதையில் சிவன், அசுரர்கள் மூனு பேரோட இடத்தையும் ஒரு சிரிப்பு சிரிச்சு எரிச்சதனால அவரோட பேரே திரிபுராந்தகன்.  அதே மாதிரி அனுமன் இலங்கைக்கு தீ வெச்சார், சிவன், மன்மதனை எரிச்சார்.  இந்த மாதிரி எரிக்கர வேலைகளை செஞ்சது எல்லாம் சிவ பெருமான்தான்.  அனுமன் சிவனோட அம்சம்கரது சொல்லித் தெரியவேண்டியதில்லை.  கந்தபுராணத்துல, மன்மதனை தவம் செய்யர சிவபெருமான் மேல மலர் அம்பு போட ப்ரம்மன் சொல்லும் போது மன்மதன் சொல்றான், அவரை ஒன்னும் பண்ண முடியாது காரணம் அவருக்கு "கையும் தழலாம், மெய்யும் தழலாம், நகையும் தழலாம்" அதே சமயம், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பஞ்ச பூதங்கள் இருக்குங்கு.  பஞ்ச பூதம்னா,  காற்று, நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாசம் அல்லது வெளி.

காற்று - நம்மோட சுவாசப் பைல காற்று இருக்கு.  நிலம் - நம்மோட மூளை மணல் துகல்களால் ஆனதுங்கரதை விஞ்ஞானிகளும் ஆராய்ந்து சொல்லியிருக்காங்க, அதனால நிலம் நம்ம உடம்புல இருக்கு.   நீர் -  தண்ணீரை நாம் குடிப்பதானாலும், இரத்தத்திலும் நீர் இருப்பதாலும் நம்ம உடம்புல நீர் இருக்கு.  நெருப்பு - எல்லோருடைய அடி வயிற்றிலும் நெருப்பு இருக்கு அதனால் நாம சாப்பிடர சாப்பாடு செறிக்கிறது, உடல் நிலை சரியில்லைன்னா, உடம்பு சூடாகிறது, அந்த அடி வயிற்று நெருப்பை குண்டலினி யோகத்தின் மூலம் ஒரு ஜோதியாக நம்ம புருவத்தின் மத்திக்கு கொண்டுவந்தால் ஒரு நீல வர்ணம் தெரியும்னு சொல்லப் படுகிறது, அதுதான் வெளின்னும் சொல்றாங்க.

இதையெல்லாம் நினைவு வெச்சு நமக்கு இந்தப் பாடல்ல பட்டினத்துஸ்வாமிகள் சொல்றார்:

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

இதுல முன்னை ங்கரது முன் + ஐ - அதாவது சிவ பெருமான்னு தெரிஞ்சுக்கனும்.
பின்னை என்பது - பின் + ஐ - அதாவது  லெட்சுமி - சீதை ந்னு தெரிஞ்சுக்கனும்.  அனுமன் தீ வைத்தாலும் அதனை செயல் படுத்தியது சீதை.
அன்னை இட்ட தீ - இதற்கு ரெண்டு அர்த்தம் இருக்கு, ஒன்னு - பட்டினத்துஸ்வாமிகளின் தாயார் இறந்து அந்த துக்கம் ஸ்வாமிகளின் வயிற்றில் ஒரு தீயை மூட்டுகிறது. ரெண்டு - நமது அடிவயிற்றில் இருக்கும் அந்தத் தீ, இந்தத் தாயின் கருப்பையில் இருந்து வந்ததால் நமக்கு வந்தது அதனால் அடிவயிற்றுத் தீ இந்த அன்னை தந்தது.

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி வளர்ப்பாளாம், அந்தக் குழந்தை வெளியில் விளையாடப் போனால் அந்தக் குழந்தை பின்னாடியே போவாளாம், அப்படி போய், அந்தக் குழந்தை விளையாடும் போது வெட்டப் படாமல் இருக்கர அந்தக் குழந்தையோட சிகையைப் பார்த்து ஒரு சிறு குருவி கூடு கட்டிடலாம்னு நினைச்சு அந்தக் குழந்தையை சுத்தி வட்டமா பறக்குமாம், அதை விரட்டுவாளாம்.  பறவைகள் குழந்தை கையில் இருக்கர பட்சணத்தை பறிக்க வருமாம், அதனால அதை விரட்டுவாளாம்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த கை தாயின் கை ந்னு இந்தப் பாடல்ல சொல்றார்.

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே
பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல்
கோதாட்டி, என்னைக் கருதி
வளர்தெடுத்த கை.

இப்படி என்னை வளர்த்த கை இப்போது பாவியாகிய நான் வெச்ச நெருப்பால் வெந்து பொடி சாம்பல் ஆகுதே என்ன செய்வேன்னு சொல்றார்.

முரளி இராமச்சந்திரன்
தொடரும்.

Tuesday, May 20, 2014

தாய் - 2

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நாமெல்லோரும், மாடு, ஆடு இதெல்லாம் கன்று ஈன்று பாத்திருப்போம்.  அதெல்லாம் கன்று ஈன்றதும், கொஞ்ச நேரம் அதன் குட்டிகளோடு இருக்கும், அப்புறம், அந்த குட்டிகள்தான் தாயைத் தேடி வரனும்.  யாராவது குட்டிகள் கிட்ட வந்தா அப்போ தாய் பசுவோ அல்லது தாய் ஆடோ பயந்து போய் அவங்க கிட்ட இருந்து குட்டியை காப்பாத்த ஓடி வரும் மத்தபடி குட்டிகள் அதனோட தாயின் அருகாமையில நல்லா விளையாட்டிட்டு இருக்கும்.  ஆனா மனிதக் குழந்தைகள் விஷயம் அப்படி இல்லை, குழந்தைகள் ஒரு 2-3 வயசு வரும் வரைக்கும், அம்மாவோட அன்றாட பராமரிப்பு, இல்லை இல்லை ஒவ்வொரு கணமும் அம்மாவோட பராமரிப்பு அவசியம் தேவை.  ஒரு தாய்ப் பறவை அதன் குஞ்சுகளுக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஒவ்வொரு குஞ்சின் வாயிலும் தானே ஊட்டும், பிறகு அந்தக் குஞ்சிற்கு இறக்கை முளைத்து பறக்க துவங்கியதும், அதை விரட்டி விட்டுவிடும்.  ஆனால் நம்மை வளர்க்கும் அம்மா ஒரு போதும் மகனையோ மகளையோ அப்படி விரட்டி விடுவதில்லை.

நமக்கு கிடைக்கும் முதல் மெத்தை அம்மாவின் மடிதான், தூளி அம்மாவின் கைகள்தான், தொட்டில் அம்மாவின் தோள்கள்தான், போர்வை அம்மாவின் புடவைதான், நாம் பெற்ற முதல் காதல் அம்மாவின் காதல்தான்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்

இந்தப் பாடலில் வரும் "முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றி" என்ற வரிகளை பாசமலர் என்ற படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலிலும் பார்க்கலாம்.

நாம் பிறப்பதற்கு முன்னாடி எவ்வளவு தொல்லைகளை அம்மாவுக்கு கொடுத்தாலும், அம்மா அதற்காக நம்ம கிட்ட கோபம் காட்டரது இல்லை.  குழந்தை நடு இரவில வீல்ன்னு கத்தும், பத்து நாள் சாப்பிடாத மாதிரி கதறும், நாம தங்கும் விடுதி (apartment) மேல கீழ இருக்கர அடுத்த குடித்தனக்காரங்க அடுத்த நாள் சண்டைக்கு வர்ர மாதிரி இருக்கும் நிலைமை, அப்போ, என்னை மாதிரி பொறுப்பில்லாத தகப்பன்கள் பட்டுனு எழுந்து தலைகாணியை எடுத்திட்டு அடுத்த ரூமுக்கு போயி தூங்கிடுவோம், ஆனா, அம்மா அப்படி இல்லை, அவ வீட்டு வேலைகளை முடிச்சுட்டு படுத்து ஒரு அரை மணி நேரம்தான் ஆயிருக்கும், இருந்தாலும், சலிக்காம எழுந்து ஒரு கோப்பை பாலை சுடப் பண்ணி அதை பக்குவமா சூடாற்றி, ஒரு பாட்டிலில போட்டு, குழந்தைக்கு கோடுத்தா அது ரெண்டு வாய் குடிச்சுட்டு தூங்கிடும்.  இது நம்மை மாதிரி சாதாரண மக்களுக்கு நடக்கர விஷயம் மட்டும் இல்லையாம்.  முருகன் இப்படித்தான் இருப்பானாம்.  அதை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்துல "எள்ளத்தணை வந்து உறு பசிக்கும்" நு எழுதறார்.  எள் அளவு பசி அதுவும் உறு பசி, அதாவது தாங்க முடியாத பசி கொண்டவன் முருகப் பெருமான்னு சொல்றார்.

இதைப் பட்டினத்துஸ்வாமிகள் பாடும் அழகைப் பாருங்கள்:

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து
வளர்தெடுத்துத் தாழாமே அந்திப் பகல் 
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்.

குழந்தை முதல் முதலா பேசரதை கேக்கரது ஒரு ஆனந்தம்.  அதை வார்த்தைகளால வர்ணிக்க முடியாது.  திருவள்ளுவர் - "குழலினிது யாழினிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர்" நு எழுதறார்.  அதுலயும் தம் மக்கள் இதுதான் முக்கியம்.  அடுத்த வீட்டு குழந்தை ஒன்னே முக்கால் வயசு, மழலையாப் பேசினா இந்த வீட்டுல அப்பாவும் அம்மாவும் சொல்வாங்க, "ஒன்னே முக்கா வயசு ஆச்சு இன்னும் என்ன மழலை பேச்சு அது விளங்கினாப்புலதான்"னு.  ஆனா அதே சமயம் இவங்களோட 12 வயசு பையன் கொஞ்சி கொஞ்சி பேசினா, "அவன் வெகுளி, பால் மணம் மாறாத பாலகன்".  இதுதான் அந்த தம் மக்கள்ங்கரதுக்கான வித்தியாசம்.  அப்படி நாம செய்யர, சொல்ற எல்லாத்தையும், பார்த்து பார்த்து ரசிச்சு, ரசிச்சு, மகிழ்ந்து, நம்மை கொஞ்சி குழாவி, சீராட்டி பாராட்டி வளர்பவள் தாய்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த தாய்க்கு நாம பலப் பல நல்ல ஆகாரங்களை செய்து தந்து அவளுக்கு தினமும் வித விதமான உணவு தந்து பராமரிப்பது நம்ம கடமை.


அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு மானே
என அழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு


முரளி இராமச்சந்திரன்
தொடரும்

தாய் - 1

உலகத்துல ரெண்டு பேர் இல்லாம யாரும் இல்லை.  அம்மாவும் அப்பாவும்.  அதுலயும் அம்மா எல்லோருக்கும் ரொம்ப முக்கியம்.  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்-னு பாட்டு பாடுவாங்க, ஆனால் அம்மா என்பது இறைவன் கொடுக்கர வரமில்லை, அது இறைவனின் கருணை.  இறைவன் வரம் தரனும்னா நாம ஏதாவது செய்யனும், தவமோ, யோகமோ, யாகமோ.  ஆனா அவனுடைய கருணைக்கு இதெல்லாம் தேவையில்லை, வெறும அவனோட நாமாவைச் சொன்னா போதும்.  வரம் கேட்டு வாங்கரது, கருணை தானா பொழியறது.

நமக்கெல்லாம், அன்னையர் தினம் ன்னு சொன்னதும், அமெரிக்காவுல இருந்த, ஆனா ஜார்விஸ் ங்கர (Anna Jarvis) ஒரு பெண்மணியைத்தான் நினைச்சுக்குவீங்க.  நான் முகப் புத்தகத்துல சொன்ன மாதிரி இந்தியாவுல காலங்காலமா தயாரிக்கர பாஸ்மதி அரிசி, மஞ்சள் எல்லாம் காபி ரைட் வாங்கிட்டோம்னு மேலை நாடுகள் உரிமை கொண்டாடர மாதிரி நம்மூர்ல 11ம் நூற்றாண்டுல வாழ்ந்த ஒரு மகான் தன்னோட அம்மாவை நினைச்சு உருகி உருகி பாடினத வெச்சு இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சிருக்காங்கன்னு நான் நினைக்கறேன்.  அவர் மாதிரி யாரும் அம்மாவை நெனச்சு பாடினாங்களான்னு தெரியலை.  அதனால அன்னையர் தினம்னு சொன்னா எனக்கு நினைவுக்கு வரது அவர் தான்.

அவர் - 11ம் நூற்றாண்டுல காவிரி புகும் பட்டினத்துல சிவநேசர் - ஞானகலை தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்.  இயற்பெயர் திருவெண்காடர்.  இவரது வளர்ப்பு மகன் மருதவாணன் சொல்லும் "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே" வாக்கியத்தை கேட்டு உடன் துறவு கொண்டவர்.  அதன் பிறகு இவரது பெயர் "பட்டினத்தார்" என மாறியது.  இவருடைய வாழ்க்கையை பத்தி ஒரு தனி நாவலே எழுதலாம் அவ்வளவு செய்திகள் கொட்டி கிடக்கு.  இந்த பதிவு அம்மா, அவளோட தியாகம் அதை ஒரு மகான் எப்படி பார்த்தார்ங்கரது பத்தி மட்டும் தான்.

நாம நம்ம அன்றாட வாழ்க்கைல பாக்கலாம், போலீஸ்காரங்க போட்டிருக்கர தொப்பி கனமா இருக்கேன்னு சில சமயம் எடுத்துடுவாங்க.  கோட்டு போட்டிருக்கரவங்க, கோட்டு கனமா இருக்கேன்னு அதை கழட்டி ஒரு நாற்காலில வெச்சுடுவாங்க.  நாம குளிர்காலத்துல தோலால் செய்த மேல் சட்டை போட்டுட்டு யார் வீட்டுக்காவது போனா, உள்ளே நுழைஞ்ச உடனே அதை கழட்டி  ஒரு இடத்துல போட்டுடுவோம்.  சில பேர் கைல கடிகாரம் கட்ட மாட்டாங்க, ஏன்னு கேட்டா "அது எதுக்குங்க கைல கனமா இருக்கு"ந்னு பதில் வரும்.  ஏன்னா அது எல்லாம் ஒரு தேவையில்லாத கனமான பொருள்கள்ன்னு நமக்கு ஒரு எண்ணம்.

நம்மூர்ல ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கர பல பேர் சொல்றது, "யப்பா ஒடினா உடம்பு குறையும்னு சொல்றாங்க, ஆனா கால் இப்படி வலிக்குதே".  இதச் சொல்லிட்டு, அடுத்த ஒரு வாரம் ஓட்டப்பந்தய பயிற்சிக்கு போக மாட்டாங்க.

கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நடந்தா கால் வலிக்கும், எழுதிகிட்டே இருந்தால் கை வலிக்கும், சாப்பிட்டு கிட்டே இருந்தா வாய், வயிறு ரெண்டும் வலிக்கும், படிச்சு கிட்டே இருந்தா, இல்லை சினிமா, டி.வி பார்த்துகிட்டே இருந்தா கண் வலிக்கும், ஏதாவது நறுமணத்தை ரொம்ப வாசனை பிடிச்சா, தலை வலிக்கும், இல்லை யாராவது உறக்க டி.வி. இல்லை பாட்டு வெச்சா, அதனால தலை வலிக்கும் ஆனால் ஒரே சமயத்துல இது எல்லாம் வந்தா ஒரு மனுஷனுக்கு எப்படி இருக்கும்.  அந்த நேரத்துல டாக்டர் வந்து "இதப் பாருங்க உங்களுக்கு வந்திருக்கரது ஒரு புது விதமான வியாதி அந்த வியாதி வந்தா இப்படித்தான் உடம்பெல்லாம் வலிக்கும், ஆன அதுக்காக நீங்க எந்த மருந்தும் சாப்பிடக் கூடாது"ந்னு  சொன்னா எப்படி இருக்கும்.  அந்த டாக்டர் தலைமேல ஓங்கி குட்டலாமான்னு தோணாது.

ஆனா ஒரு தாய், ஒரு குழந்தையை ஒரு நாள் இல்லை, ரெண்டு நாள் இல்லை 10 மாசம் சுமக்க வேண்டியிருக்கு.

இதைத்தான் பட்டினத்தார்

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி  நு பாடரார்.

ஒரு மணி நேரமில்லை, ஒரு நாளில்லை, ஒரு வாரமில்லை, ஒரு மாசமில்லை  10 மாசம், அங்கமெல்லாம் நொந்து பெற்று - ஒரு வலியில்லை, ஒரே வலி, ஆனாலும் அவளுக்கு அந்த சுமையை இறக்கி வைக்க வழியில்லை.  அதுக்கு அப்புறம், அவளுக்கு ஆகாரம் இருக்கோ இல்லையோ, குழந்தைக்கு ஆகாரமாக தன்னோட இரத்தத்தை பாலாக்கி தந்தவளை எந்தப் பிறவியில் பார்ப்பேன் என்று பாடரார்.  இந்தப் பாடல் இவருடைய தாய் இறந்த உடனே பாடறார்.  உலகத்துல இருக்கர எல்லா சுகத்தையும் விட்டுட்டு போன ஒரு மகான் தாய் பாசம் தாங்காம இப்படி பாடும் போதே தெரியனும் அம்மாங்கரது ஒரு சாதாரண வார்த்தையோ இல்லை ஒரு சாதாரண விஷயமோ இல்லைன்னு.

நம்மூர்ல ஒரு வழக்கம் உண்டு, குழந்தையை கொஞ்சும் போது அம்மா சொல்வாள், என்னைப் பெத்த ராஜாவேன்னு, அந்தக் குழந்தையா அம்மாவை பெத்தது, அவதான அந்தக் குழந்தையை பெத்தாள்.  ஒரு குழந்தை பேறுங்கரது ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு மறு பிறப்பு, அதனாலதான் அவ அந்தக் குழந்தை பிறந்ததும் தாயான அவள் இறந்து போகாமல் இருக்கரது அந்தக் குழந்தையின் அருள்தான் காரணம் நு சொல்லி அவளோட தியாகத்தை குழந்தையோட த்யாகமாக மாத்தி பாடரா.  இந்தக் கருணையை நாம கடவுளைத்தாண்டி அம்மா கிட்ட மட்டும்தான் பாக்க முடியும்.

ஒரு குழந்தை நல்ல படியா பிறக்கனும்னு அவ பண்ணக்கூடிய பூஜைகள் என்ன, ஜபங்கள் என்ன, தவங்கள் என்ன, இதோடு கூட அவளோட வயத்துல வளர்ர குழந்தை தினமும் பெரிசாகி ப்ரசவ சமயத்துல நல்ல எடையுடன் கூட இருக்கும் அப்படி இருக்கும் சமயத்துல அவளுடைய வயிறு கீழ் நோக்கி இறங்கி அவள் நடக்கவே சிரமமாக இருக்கும், நடக்காவிட்டால் கால்கள் நீர் கொண்டு வலியெடுக்கும்.  அவள் அப்போதும் குழந்தையை நோகாமல், சிவனை நினைச்சு காலத்தை தள்ளுவாள்

முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள்சுமந்தே
அந்திப் பகலாச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்றத் தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.


முரளி

தொடரும்....


Monday, May 12, 2014

நின்ற படி நகைச்சுவை - அடுத்த தாக்குதல்.

ரொம்ப பயப்படாதீங்க, இது பெரிய பதிவில்லை.  சமீபத்துல (ரெண்டு நாள் முன்னாடிதான்) நடந்த தமிழ் சங்கத்தின் தமிழ்ப் புத்தாண்டு விழாவில் மற்றும் ஒரு பெண்மணி, நின்ற படி நகைச்சுவை அதாங்க Standup Comedy செய்தார்.  இதை நம்ம தமிழ் சங்கத்தில் நிகழ்த்தும் இரண்டாவது பெண்மணி.  முதல்ல திருமதி மீனா சங்கரன், இப்போ, ஶ்ரீவித்யா கிருஷ்ணமூர்த்தி.  இன்னும் ஆண்கள் பக்கத்துல இருந்து ஒருத்தரும் வரலை,  என்ன பயமோ?


முரளி .


Sunday, May 04, 2014

படம் பாரு கடி கேளு - 61


"Hands-Free" மாங்கா-4S from "Samdidn'tsing"

Wednesday, April 30, 2014

முதல் பதிவு

Ca2+(aq) + 2 Cl−(aq) + 2 Ag+(aq) + 2 NO3−(aq) → Ca2+(aq) + 2 NO3−(aq) + 2 AgCl(s)

என்னடா இது 'ப்ரேக்கிங் பாட்'  நாடகத்தோட 'டைட்டில் க்ரெடிட்ஸ்' மாதிரி இருக்கே-னு யோசிக்கிறீங்களா?


இது தான் என்னோட தற்போதய ‘state of mind’. ஏன் என் மன நிலை இந்த ‘complex chemical equation’ மாதிரி கொழம்பி இருக்கு. அதுக்கு காரணம் என்ன?


'நுணலும் தன் வாயால் கெடும்'–னு சொல்ற மாதிரி நானே என்னை மாட்டி விட்ட கதையா, தமிழ் சங்க பதிவுல எதாவது எழுதலாமேனு தீர்மானிச்சு தான் தாமதம். உடனடியா நான் கண்டுப்பிடிச்சது எனக்கு ‘creative block’டிஸிஸ் இருக்கறது... அதென்ன ‘creative block’? அதெல்லாமா வரும்?


அப்படி என்ன பெரிய எழுத்தாளர் நீ?

உலகத்துல எங்கும் இல்லாத எழுத்தாளர்? – னு
நீங்க பராசக்தி styleல கேக்கறது புரியுது.சொல்றேன் சொல்றேன்...மேல படிங்க...

சரி எடுத்த கார்யத்தை முடிப்போம்'னு எழுத உட்கார்ந்தேன்...முதல்ல யோசனை வந்தது... தற்போதய சூடான செய்திகள்'ல வர இந்திய தேர்தல் பத்தி எதாவது எழுதலாம்....ம்ம்ம்... இந்திய தேர்தல் பத்தி எழுதுறதுனா ஸ்டாலின் சொன்ன 3 பேரு-ல ஒருத்தர பத்தி கண்டிப்பா எழுதனம். அவர பத்தி என்ன ஏற்கனவே எழுதல நான் புதுசா எழுதறதுக்கு...? மறுபடியும் யோசிச்சேன்... "மோடியும் அவரது வெள்ளை தாடியும்" அப்படினு தலைப்பு போட்டு முதல் பதிவு எழுதலாம். ஆனா போயும் போயும் ஆறம்பிக்கறது தான் ஆறம்பிக்கறோம் வெள்ளை தாடிய பத்தியா எழுதனம். எதாவது மங்களகரமா சிவப்போ மஞ்சள்  நிறத்திலயோ இருந்தா கூடா பரவால்ல....அதுவும் இல்லேனா... அவர் தாடி ஏன் வைத்தார்...தற்போதைய இந்திய பிரதமர் மாதிரி இருபார்'னு சொல்றதுக்கா? இல்ல வெள்ளை தாடி வெச்சவன் எல்லாம் இந்திய பிரதமர் ஆகலாம்'னு சொல்றதுக்கா? ஒரு பத்து நிமிஷம் யோசிச்சேன் அதுக்கு மேல எதுவுமே தோனல...


சரி வேறு எதாவது எழுதலாம்னு எல்லா மொழி படங்களிலும் காமிக்கற மாதிரி...paperஅ சுருட்டி தரையில கீழ போட்டு புதுசா ஒரு வெள்ளை தாளை எடுத்தேன்... ஏன் எழுத்தாளர்கள காமிக்கனம்'னு நினைக்கற  எல்லா படங்களிலும் கண்டிப்பா அந்த writer ஒரு paperஅ சுருட்டி போடற காட்சி வைக்கறாங்க? என்ன காரணமா இருந்தாலும் paper சுருட்டி போட்டா தான் writer’னு முடிவானதுக்கப்பறம் நானும் செய்யலேன்னா எப்படி? புதுசா இருக்கற வெள்ளை தாள்ல 'முக புஸ்தகமும் முதியோர் கல்வியும்' னு ஒரு தலைப்ப போட்டு ரெண்டு கோடு கீழ போட்டு underline பண்ணிணேன். எனக்கு இந்த 15 நிமிஷத்துல மனசுல வந்த ஆங்கில வார்த்தைகள்ல கணகச்சிதமா தமிழுக்கு ‘மொழி மாற்றம் செய்ய தெரிஞ்சது இந்த முக புஸ்தகம் மட்டும் தான். சரி..சரி...தலைப்புக்குள்ள போறேன்...ஏன் இந்த முக புஸ்தகத்துலேருந்து இளம் users எல்லாம் ஓடி போறாங்க'னு சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன். அதுல நிறைய தாத்தா பாட்டிகள் வந்து அவங்களோட தம்பட்ட புராணத்த எழுதர்துனாலயாம். முக புஸ்தகத்த படிக்கிறதுக்கு கீதா புத்தகத்தையோ, பகவத் பாகவதத்தையோ படிச்சா புண்யமாவது சேருமே... முக புஸ்தகம் ஏன் டம்ப வர்ஜனம் பண்ர இடம் ஆச்சு? நம்ம அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான ‘values’ கொடுக்கிறோம்? யோசிச்சு பாத்தா...’social anger' தான் வருது... எழுதறதுக்கு எந்த சமாசாரமும் வரல...அதுவும் இல்லாம இது ரொம்ப ‘sensitive subject’அ இருக்குமோ... முதல் post... குறைந்த பட்சம் ஒரு 10 பேராவது படிக்க வேன்டாமா? அதையும் ஏன் கெடுப்பானே'னு நெனச்சு இந்த தலைப்பையும் சுருட்டி கீழ போட்டேன்... என்ன…. "லுடேரா" படுத்துல வர சோனாக்ஷி சின்கா வுக்கு அவ வீட்டு வேலை பாக்ற அம்மா  வந்து சுருட்டி போட்ட paper எல்லாம் எடுத்து குப்பை தொட்டில போடும்... நம்ம வீட்ல நம்மளயே இல்ல குப்ப தொட்டில போடுவாங்க... அதனால நான் சுருட்டி போட்ட ரெண்டு paperயும் நானே குப்பை தொட்டில போட்டிட்டு... இனிமே "போ பச்சை"(Go Green) எழுத்தாளரா இருக்கலாம்னு முடிவு மட்டும் பண்ணிணேன்.


இரண்டு முறையும் தோல்வி...மூன்று முறை முயன்றால் முடியாததே இல்லை'னு முப்பத்து முக்கோடி தேவர்கள்ளேருந்து முப்பது வயசு முட்டாள் வரை எல்லாருக்குமே தெரியுமே...அதனாலே திரும்பவும் எழுத முயற்ச்சி பண்ணேன்...


ரிச்மண்ட் தமிழ் சங்கம் வலைபூவில எழுதறோம். பேசாம ரிச்மண்ட பத்தியே எழுதினா என்ன? "ரிச்மண்டில் மாம்பழ ஸீசன் - இந்த முறை வருமா வராதா..."? நல்ல தலைப்பு...எல்லா audience கும் போய் சேரும்... gender neutral... யார் மனதையும் புண்படுத்தாது...இது தான்டா தலைப்பு'னு முடிவு பண்ணி எழுத தொடங்கினேன். ஏன் ரிச்மண்டில் இந்த முறை வெயில் காலம் வரவே இல்லை? மே மாசமே வந்தாச்சே...இன்னும் மழையும் குளிரும் ஏன் இருக்கு? என்னிக்கி ‘sweat shirt’ போடாம வெளியில போக முடியும்? ஒரு வேளை இது எல்லாத்துக்கும் காரணம் "Global Warming" ஆ இருக்குமோ... அதே தான்...கண்டிப்பா "Global Warming" தான் காரணம். ஆனா அத எப்படி என் பதிவுல விளக்கி சொல்றது? இந்த மாதிரி அறிவியல் பத்தி எல்லாம் பேசனம்னா கொஞ்சம் புத்திசாலியா இருக்கனமே? நமக்கோ "Global Warming"கு தமிழாக்கம் என்னனு கூட தெரியல... நம்ம எப்படி இத பத்தி எழுத முடியும்..ஒரு வேளை இதுவும் நமக்கு தோதான தலைப்பு இல்லையோ....மறுபடியும் ஒரு 15 நிமிஷம் உக்காந்து யோசிச்சேன்... ஆரம்பிச்ச இடத்துகே வந்துடேன்..."Creative block”. ஆமாம் அதுனால தான் எதுவும் புதுசா தோனல...இல்லைனா கண்டிப்பா நல்ல கருத்து சொல்லிருக்கலாம்...


ஆனா Chemistry'ல ஆரம்பித்து Science'ல முடிச்சிருக்கேன்.. முன்னுரையும், முடிவுரையும் பொருந்துதே... அப்போனா இதுவே கட்டுரை இலக்கணத்துக்கு சரியா வருமே...பேசாம இதயே ஒரு பதிவா போட்டுட்டு..அடுத்த தடவைக்குள்ளவாது எதாவது உருப்படியா எழுத முடியுமான்னு பாக்கலாம்.


நல்ல யோசனை'னு இறைவனையும் இணையதள எழுதாளர்களையும் வணங்கி இந்த 'post'அ  'submit' செய்கிறேன்.


தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல விதமான ‘spelling mistakes’ களையும், ‘grammatical errors’யும் பொறுத்தருள வேண்டுமாய் ப்ரார்த்திக்கிறேன்.


மிக்க நன்றி...கூடிய விரைவில் சந்திபோம்...


Sunday, April 27, 2014

படம் பாரு கடி கேளு


சச்சின்:  நாகு மாமா தூங்கறாரா, வேலை பண்றாரா?
ஷ்ரவன்: ஏண்டா வேலை பண்ணினா, ஸ்க்ரீன்ல நாம மட்டும் எப்படிடா இருப்போம்? வேற ஏதாவது ஆணி புடுங்கற அப்ளிகேஷன் இருக்கனுமே... தூக்கம்தான்...

கணவனின் பார்வையில்!!!!



கல்லூரிக் காலத்தில்
குடும்பம் பற்றிப் பல கனவுகள்
குறிப்பாக மனைவி
புடவை உடுத்தி
பொட்டு வைத்து
பின்னல் இட்டு
பூ முடித்து
கூட்டுக் குடும்பதில்
அமைதி அடக்கத்துடன்
அனைவரையும் கவர்ந்தாள்
கனவில் அவள்
பேசியதேயில்லை
பேசியிருந்தால்
பித்தம் அன்றே தெளிந்திருக்கும்

கனவு கல்யாணம் வரை தொடர்ந்தது
உள்ளுர் ஜோதிடரின் தயவால் மணநாளும் வந்தது
விடுப்பெடுத்து விமானம் ஏறி
ஊர் கூட்டி உறவுகள் சூழ
அவள் கரம் பற்றிக் கணவனானேன்

மணமேடையில் அவள் தலை தாழ்த்தி நின்றது
அடக்கத்தாலோ அச்சத்தாலோ அல்ல
அணிந்திருந்த மாலை நகைகளின் பாரத்தால்
என்பது போகப் போக புரிந்தது

வீட்டில்
தாய் தந்தை அவளிடம் பரிவு காட்ட
அவளும் அவர்களிடம் பாசத்தைக் கொட்ட
இல்லற இன்பத்தை
இதயம் முழுக்க அனுபவித்தேன்

வீட்டின் சிரிப்பொலிக்கு
வினை விருந்துருவில் வந்தது
வீட்டிற்குப் புதிதாக வந்த ஓட்டைக் கைப்பற்ற
விருந்திற்கு அழைத்தனர் உறவினர்கள்

விருந்தறையில் நான் மட்டும் வீற்றிருக்கச்
சமையலறையில்
என் குடும்ப சரித்திரத்தைச்
சத்தமில்லாமல் அவளிடம் வாசிக்க
அதில் என்
காதில் விழும்படி சொல்லப்பட்ட
கடைசி வரி
இவன் மட்டும் நல்லவன்

வீட்டில் அதுவரை
பூத்துக்குலுங்கிய
அவளின் புன்சிரிப்பு
விருந்திற்குப் பின்
புன்னகையாய் சுருங்கியது

விடுப்பு முடிந்து விமானநிலையத்தில்
வழியனுப்ப வந்த
அவள் வீட்டினர்கள்
அனுசரித்து நடக்கும் அறிவுரையை
அவளிடம் கூறாமல் என்னிடம் கூற
அதிர்ச்சியோடு அவளுடன்
அமெரிக்கா திரும்பினேன்

முதல் நாள் மாலை
தனிமையின் கொடுமை இனியில்லை என
ணியாத ஆர்வத்துடன்
தாமதிக்காமல் வேலை முடித்து
பூக்களோடு வீடு திரும்ப
அண்டை நாட்டு
அரசன் கைப்பற்றிய
அரண்மனை போல் வீடு
சூரையாடப்பட்டிருந்தது

படித்த புத்தகங்கள்
பழைய பாடல்கள்
படுக்கை விரிப்புக்கள்
பாதுகைகள்
பாத்திரங்கள்
பாதித் துணிமணிகள்
பார்வைக்குத் தென்படவில்லை
அவளைத் தவிர நான் ரசித்த எதையும்
அவள் ரசிக்கவில்லை என்பது
விளங்கியது

புதியன வாங்கப் புறப்பட்டோம்
அந்த அநியாயத்திற்கு
ஆங்கிலத்தில் Shopping என்று பெயர்

கடுங்குளிரிலும் கார் ஓட்டிக்
கடைகள் பல ஏறி இறங்கிக்
கதவை நான் திறந்து பிடிக்க
அவள்
கால்களால் கடை அளந்து
கண்களால் பொருள் அளக்க
நான்
கடிவாளம் கட்டிய குதிரையாய் அவள் பின் நடந்து
கால்கடுக்கக் காத்திருந்து
கடுங்கோத்தைக் கட்டுப்படுத்தி
காலம் கடத்த
கடைசியில் கண்டதையும் காட்டிக்
கட்டாயம் வேண்டுமென அவள் கூறக்
காரணமே தெரியாமல் அனைத்தையும்
கணிப்பொறியில் கணக்கிட்டுக்
கடன் அட்டையில் வாங்கிக்
கார் நோக்கி நடந்த
என் கை முழுக்கக் குடும்ப பாரம்

இதுவே வாடிக்கையாக
அதலபாதாள்த்தில் இருந்த
அமெரிக்கப் பொருளாதாரம்
அவ்வாண்டே மீண்டது

வீட்டில்
சீதனமாய்க் கொண்டு வந்த
சமையல் புத்தகத்தை
அவள் புரட்டிய போதெல்லாம்
நான் சோதனைக் கூட எலியானேன்

கடுகினும் சிறிய பொட்டை
கவனிக்த் வறினாலும்
காதல் இல்லை
பாசம் இல்லை
போன்ற பழிச்சொற்களுக்கு ஆளானேன்
 அதுவரை
உலக செய்திகளை மட்டுமே
உற்று கவனித்து வந்த நான்
அன்று முதல்
உடைந்த நகம்
உதிர்ந்த முடி
காதணியின் கற்கள்
காலணியின் அழகு
இவற்றையெல்லாம்
உன்னிப்பாய்க் கவனித்து
உடனுக்குடன் தெரிவித்தேன்

அவளைப் பற்றிய வியங்களில்
என்னோடு கலந்து பேசி
அவளே முடிவு செய்தாள்
என்னைப் ற்றிய விசயங்களில்
முடிவு முன்பே எடுக்கப்பட்டு
என்னிடம் அறிவிக்கப்பட்டன

இடைவிடாது பேசி
இடை இடையே கேள்விகளால்
என் கவனத்தை அவள் சோதிக்க
பதில் தவறானால்
பாடத்தைப் பாதியிலேயே நிறுத்தி
அவள் பாரா முகம் காட்ட
பள்ளியிலே ஆசிரியை
பாடத்தை நிறுத்தினால்
ஆனந்தம் அடைந்த நான்
பள்ளியறையிலோ
அதிர்ச்சியில் உறைந்தேன்
என் ஐம்புலன்களையும் கூராக்கி
அக்கால குருகுல சீடனைப்போல்
பாடத்தைத் தொடர மன்றாடினேன்

குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன
குறைகள் அனைத்தும் மறக்கப்பட்டன
பிழைகள் அனைத்தும் ரசிக்கப்பட்டன

மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாள்
தொண்ணூறு நாட்கள் கழித்துத்
திருமணத்திற்கு பின்
முதல் முறையாக
மூளை தன் இருப்பை உணர்த்தி
நான்
எத்தனை முறை ஏமாளியானேன்
என்ற எண்ணிக்கையை எடுத்துரைக்க
எதிர்க்கத் தயாரானேன் நான்

துரும்பெல்லாம் தூணாக
வீடு போர்க்களமானது
அதுவரை கணவனாக மட்டுமே இருந்த நான்
ஒட்டு மொத்த ஆண் இனத்தின்
பிரதிநிதியாக ஆக்கப்பட்டு
ஆண் இனம் இழைத்த
அனைத்துக் கொடுமைகளின் பழியும்
என் மீது சுமத்தப்பட
சளைக்காமல் நானும் அதைச் சமாளிக்கச்
சற்றும் எதிர்பாரா நேரத்தில்
ஓர் அழிவு ஆயுதம் என்னைத் தாக்கியது
மூளையைச் செயல் இழக்ச் செய்து
பேசும் ஆற்றலைத் டுத்து
பயங்கர எரிச்சலை எற்படுத்திய
அந்த ரசாயன ஆயுதத்திற்குக்
கண்ணீர் என்று பெயர்

ரிது ரிது மானிடராய்ப் பிறப்பதரிது
அதனினும் ரிது ஆசை இல்லாத பெண்
அதனினும் ரிது அழத் தெரியாத பெண்

அழுகைக்குப் பின்
படுக்கை அறையின்
பக்கத்து அறை அவளின்
தற்காலித் தாய் வீடானது

அமைதி முயற்சிக்கு நடந்த
அனைத்துச் சுற்றுப் பேச்சு வார்தைகளும்
தோல்வியில் முடிந்தது

சண்டையை முடிக்கச்
சரணடைவதைத் தவிர
வேறு வழியெதுமில்லை என
என் பாழாய்ப் போ மனம் பரிதவிக்க
சரி என்ற
ஈறேழுத்து மந்திரத்தை நான்
இடை விடாது உச்சரிக்க
இல்லத்தில் அமைதி திரும்பி
குடும்பம் ஒரு கோவிலானது
நான் ஒரு கோமாளியானேன்

பழைய நண்பர்களைப்
புதிய கோணத்தில் பார்க்க வைத்தாள்
நண்பனின் மனைவியை இவளுக்கு
பிடித்திருந்தால் மட்டுமே
நட்பு நீடித்தது

ஆசைப்பட்ட அனைத்தும்
வேண்டுமென அடம் பிடித்தாள்
வேண்டியது கிடைக்காவிட்டால்
வேலை நிறுத்தம்
மனைவி ஒரு மந்திரி
என்பதற்கு என்ன பொருள்
லஞ்சம் இல்லாமல்
வேலையேதும் நடக்காது என்று பொருள்

செலவைச் மாளிக்க
நான் வீட்டுக் கணக்கைக் கையில் எடுக்க
அவளோ
நான் வீட்டுக்கு அனுப்பும் கணக்கைக் கையில் எடுத்தாள்
இனி
சம்பள உயர்வைத் தவிர
வேறு வழியில்லை எனச்
சண்டையிட்டு நான் பெற்ற
சம்பள உயர்வை
தான் வந்த வேளை என்றாள்

முருகா ஈசா பெருமாளே
உணர்ந்தேன் உங்கள் பெருமைகளை 
அப்பப்பா ஒன்றுக்கே என் உயிர் பிதுங்க 
இரண்டு கொண்டு சமாளிக்கும் நீங்கள் எல்லாம் 
கண்டிப்பா கடவுளப்பா!

மாதங்கள் பல உருண்டன
மணவாழ்வின் அடுத்த கட்டம்
மனைவி கருவுற்றாள்
மகிழ்ச்சி மசக்கை வரை நீடித்தது
அவள் படும் அவஸ்தைகள்
ஆண்களுக்கு இல்லை
படைப்பின் பிழைக்கு
நான் பலியானேன்
இன்னல்களை இடைவிடாது கூறி
நாளுக்கு நாள் நச்சரிதத்தாள்
இடுப்பு வலிக்கு
இப்போதே பயந்தாள்
இனி வீட்டு வேலை
இருவருக்கு போது என்றாள்
இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்து முடிக்க
என் இடுப்பு அன்றே வலி கண்டது
பிரசவத்திற்கு அத்தை வர
பிழைத்தேன் நான்

தாயும் மகளுமே ஆனாலும்
ஒரே வீட்டில்
இரண்டு பெண்கள்
இணக்கமாக வாழ்ந்தால்
அது எட்டாவது உலக அதிசயமாகத்தான்
இருக்க முடியும்

நான் தின்று செரித்த
என் தாய் மண்னை மகனுக்கு
அடையாளம் காட்டும் ஆவலில்
தாயகம் சென்றோம்
யார் வீட்டில் எத்தனை நாள்
என்னும் விடையில்லாக் கேள்விக்கு
மாமியார் மருமகளுக்கு இடையிலான
பனிப்போர் பதிலானது
பெயரில் தான் பனி
நிஜத்தில் வெப்பம் என்னை தாக்கியது
பனிப்போர் பார்வைப் போராகிப்
பின் சொற்போராய் முடிந்தது
இறந்தகாப் ண்பாட்டைத் தாய் கூற
எதிர்காப் பெண்னுரிமையை இவள் பேச
இருவருக்கு இடையில் சிக்கிய என்
நிகழ்கால நிம்மதி நாசமானது
தம்பிக்கு பெண் பார்க்க
மறக்காமல் ஜோதிடரை மாற்றினார்கள்


விடுப்பு முடிந்து திரும்பியதும்
விரைந்து பச்சை அட்டைக்கு விண்ப்பித்தேன்
நண்பர்களின் கேள்விக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
த் மிழைத் துணைக்கழைத்தேன்

சிக்கல்கள் இருந்தும்
சிந்தையில் அவளே
சிம்மாசனம் இட்டு
வீற்றிருக்க் காரணம்
வேதாளம் இல்லா
விக்கிரமன் வீண்


-வாசு சண்முகம்


மிசெளரி தமிழ்ச் சங்கத்தின் 2004 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாக் கவியரங்கத்திற்காக எழுதி வாசித்தக் கவிதை