Thursday, September 17, 2009

கன்னி ராசி, என் ராசி

எச்சரிக்கை

2008ம் ஆண்டில் பஞ்சமா பாதகங்கள் அல்லது, ஐந்து அநியாயங்கள் அல்லது குற்றமே செய்யாதவர்கள் மட்டும் படிப்பது நல்லது.

மேஷ ராசி ரசிகர்களே… !

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி ரசிகர்களே… !

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது


மிதுன ராசி ரசிகர்களே… !

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு
சவுண்டை' அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி ரசிகர்களே… !

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்
போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால, உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!

சிம்ம ராசி ரசிகர்களே… !

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து !

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.

கன்னி ராசி ரசிகர்களே… !

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.

பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி ரசிகர்களே… !

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது. மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.

விருச்சிக ராசி ரசிகர்களே… !

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி ரசிகர்களே… !

நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு
வித்துருங்க.

பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.

மகர ராசி ரசிகர்களே… !

வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி ரசிகர்களே… !

இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட படிக்கக்கூடாது.

பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி ரசிகர்களே… !

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க

----
இது நானே எழுதியது அல்ல. (மின்)அம்பலத்தில் யாரோ எழுதி என் அண்ணன் அனுப்பியது... எழுதியது யார் என்று தெரிந்தால் சொல்லவும். கூகுளாருக்கும் சரியாக தெரியவில்லை...


Wednesday, September 16, 2009

தென்கச்சி சுவாமிநாதன்: அஞ்சலி

பிரபல தமிழ்ப் பேச்சாளர் தென்கச்சி சுவாமிநாதன் (63) இன்று காலமானார்.


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி. தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகி சென்னை வானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[Information thanks to: thatstamil.com]

Monday, September 14, 2009

அம்மா

அம்மா காட்டிய நிலாவும்,
அம்மா ஊட்டிய சோறும்
என்றுமே ஒருபடி உசத்திதான்.

யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை,
என் தம்பி மட்டும் விதிவிலக்கு.

எனக்கு பிகாஸோவெல்லாம் தெரியாது
மார்கழி மாதக் காலைகளில்
அம்மா போடும் கோலங்கள்தான் தெரியும்.

நவராத்திரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்போதுதான் அம்மா அடிக்கடி பாடுவாள்.

அம்மா கோணலாய் இட்ட விபூதிக் கீற்றில்தான்
என் முகம் அழகாய்த் தெரிகிறது.

என் பரிட்சைகளுக்காக என்னிலும் அதிகமாய்
தூக்கம் தொலைத்தவள் அம்மா.

சிகப்பு நிற சேலைகள் அனைத்தும் அழகானவை
அம்மாவிடம் அவை நிறைய உண்டு.

நான் வேற்றூரிலிருந்து வருகையில்
'வாடா' என்று அழைக்கும் போது
கண்கள் பனிக்கும் போதே தெரியும்
எனக்காக காத்திருந்திருக்கிறாள் என்று.

அம்மா கோவிலுக்குப் போய் சாமி பார்ப்பாள்.
நான் வீட்டிலிருந்து அம்மா பார்ப்பேன்.
இரண்டிற்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசமில்லை.

எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை
பொன் காக்கை.
*******************************************************************************
இது நான் எழுதிய கவிதை இல்லை. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பலப் பல வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு புதினத்தில் படித்தது, சமீபத்தில் கிடைத்தது. இதை இப்போது வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எழுதியவர் பெயர் நினைவில்லை மன்னிக்கவும்.

முரளி.
*******************************************************************************

வாங்க Excel படிக்கலாம் - Pivot Table

ஆடிய‌ன்ஸ்: எக்ஸெலுக்கு அல்லது பிவோட் டேபிளுக்குப் புதிய‌வ‌ர்.

ஒரு வங்கிக் கணக்கோ, அல்லது வீட்டுக் கணக்கோ எழுத வேண்டும் என்றால் (நீங்க அப்படி எதுவும் தப்பெல்லாம் செய்யறதில்லையா ? அப்ப நம்ம கூட்டாளி :))), முதலில் கட்டம் கட்டி, பார்டர் போட்டு, 'இன்ன தேதிக்கு பாலுக்கு இவ்வளவு, கீரைக்காரம்மா கிட்ட பேரம் பேசி வாங்கின காய்கறி இவ்வளவு' என்று கட்டங்களைத் தேடி தேடி எழுதுவோம். இரண்டாவது, வரிசையா எழுதிகிட்டு வந்து கடைசியில் (ஒரு குரூப்பா) பிரித்து மொத்தமா பால், காய்கறி என்று அந்த மாதத்திற்கு கணக்கிடுவோம். இந்த இரண்டாவது முறையை கையாண்டு எக்ஸெலில் ரொம்ப எளிதா, சில "க்ளிக் அண்ட் ட்ராக்" மூலம் முதல் முறையான கட்டங்களைப் பெறலாம். எடுத்துவிட்டேன் ர‌ம்ப‌த்தை என‌ எகிறிவிடாதீர்க‌ள் :) எழுத்தைக் குறைத்து, ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் பிவோட் டேபிளிலில் ப‌ய‌ணிக்க‌லாம் வாருங்க‌ள்.


தேதியிட்டு வ‌ரிசையா எழுதிக் கொண்டு வ‌ந்த‌ க‌ண‌க்கு. மொத்த‌த்தையும் செல‌க்ட் செய்து கொள்ளுங்க‌ள்.


"Insert" மெனுவை க்ளிக்கி, "Pivot table"ஐ செலக்ட் செய்யுங்கள். எக்ஸெல் 2003 எனில், Data மெனு.


கணக்கு பார்க்கும் பக்கத்திலேயே பிவோட் டேபிள் போட்டுக் கொள்வோம். அதனால், திறக்கும் குட்டி விண்டோவில், "Existing worksheet" க்ளிக்கி, செல் $E$2வில் க்ளிக்கிக் கொள்ளுங்கள்.


மாயாஜால‌ம் மாதிரி ஆங்காங்கே திற‌க்கும் க‌ட்டங்க‌ள் க‌ண்டு ப‌ய‌ந்துவிடாதீர்க‌ள்.


வ‌ந்த‌ க‌ட்ட‌ங்க‌ளின் வ‌ல‌து மேலே, "Choose fileds to add to report"ல் அனைத்தையும் "டிக்" செய்து கொள்ளுங்க‌ள். இவை முறையே "Row Labels" ம‌ற்றும் "Values" க‌ட்ட‌ங்க‌ளில் பிர‌திப‌லிக்கும். பிவோட் டேபிளும் தயார்.


தேதி வாரியாக‌ப் பார்க்க, தேதியை "Row Label"ல் க்ளிக்கி "Column Label"ல் ட்ராப் செய்யுங்க‌ள்.


தேதி வாரியாக, Nice and Beautiful Pivot table.


ஏதாவ‌து மாற்ற‌ம் செய்ய‌ வேண்டும் எனில், டேட்டா ஏரியாவில் செய்யுங்க‌ள். பின், பிவோட் டேபிளில் "Right Click" செய்து "Refresh" க்ளிக்கினால் போதும்.


மாற்றம் செய்யப்பட்ட பிவோட் டேபிள்.

Tuesday, September 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 11 {சரித்திர நாயகி நானா சாவித்திரியா?}

உலகத்தில் எல்லா மனைவிகளும் அவங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது கிடைக்குமான்னு ஏங்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்த போது நான் வேண்டாம்னு முகம் திருப்பிக்கிட்டேன்னு நினைச்சால் எனக்கே என்னை நினைத்து பெருமையா இருக்குங்க. என்னுடைய இந்த பெருந்தன்மையை பற்றி கேள்விப்பட்டாங்கன்னா நம்ம ஊரு 'அமர்சித்ர கதைகள்' கம்பெனிகாரங்க 'சத்தியவான் சாவித்ரி' கதையோடு சேர்த்து என் கதையையும் வெளியிட்டுருவாங்க. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகமா வெளி வந்து நம்மூர் நண்டு சிண்டெல்லாம் படிக்க நேர்ந்தால் கணவர் மனம் நோகுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.

மூணு வருஷத்துக்கு முன் நடந்த இது ஒரு உண்மை சம்பவம்.

---------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு கோடைகால விடுமுறைக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்தாச்சு. நாளை விடிந்தா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு விமானதளத்துக்கு போக வேண்டியது தான். இந்த நேரத்தில் நீங்களா இருந்தா என்ன செய்வீங்க? நிம்மதியா படுத்து தூங்கி கனவில் அபிமான நடிகர் 'ஹாரிசன் போர்ட்' கையை குலுக்கி விட்டு எழுந்து ஊருக்கு போய் சேருவீங்க. அதை செய்யாமல் விட்டு விட்டு பொழுது போகலைன்னு நான் வாசல் பக்கம் குழந்தைகளுடன் விளையாட போனதை விதின்னு சொல்லாமல் வேறெப்படி சொல்லறது?

முப்பது வயசில் மூணு வயசு குழந்தையின் ஆர்வத்தோட ஸ்கூட்டர் விட்டு விளையாடினால் என்ன நடக்குமோ அது தான் நடந்தது. தார் ரோட்டில் தலை குப்புற விழுந்து வலது கண் பக்கம் பயங்கர அடி. வீங்கிய முகத்துக்குள்ளே புதைஞ்சு போன கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்த போது எதிரில் கலங்கலாய் தெரிஞ்சது வீடு. ஒரு இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ போல் ரத்த சிவப்பான கண்களோடு ஆடிக்கொண்டே வீட்டுக்குள் வந்த என்னை பார்த்து பதறி போன என் கணவர் என்னை பக்கத்து ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து போக அங்கே ஆரம்பிச்சது அவருடைய கெட்ட நேரம்.

கரு ரத்தம் கட்டி போய் வீங்கியிருந்த என் முகத்தை பார்த்த நர்சுகளும் டாக்டர்களும் கோபத்தில் திரும்பி என் கணவரை பார்த்த பார்வையில் இருந்த உக்கிரத்தை பாண்டிய நாட்டு சபையில் நடந்த திருவிளையாடல் காட்சியில் சிவன் "நக்கீரா என்னை நன்றாக பார்" அப்படீன்னுதன் நெற்றிக்கண்ணை கோபத்தில் திறந்த போது கடைசியாக பார்த்த ஞாபகம். அவங்களோட கோவத்தின் காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்த என் கணவரை வெளியே உட்கார சொல்லி விட்டு ஸ்கேன் செய்யும் ரூமுக்கு என்னை அழைத்து போய் அனுதாபத்தோடு பார்த்த நர்சை கண்டு எனக்கும் குழப்பம் தான். ஆனால் மேலே யோசனை பண்ண முடியாமல் முகம் பத்து விசில் வந்த ப்ரெஸ்டீஜ் குக்கர் போல வலியில் தெறித்தது.

ஒரு வழியாக ஸ்கேன் முடிந்து டாக்டர் வந்து பார்த்து வலிக்கு மாத்திரை குடுத்து முடித்த போது தான் என் கணவர் கவலையோடு கதவுக்கு வெளியே நின்னு எட்டி பார்ப்பது தெரிந்தது. அவரை உள்ளே கூப்பிட சொல்லி நான் சொன்ன போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட டாக்டரும் நர்சும் மெதுவாக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏதும் பிரச்சனை என்றால் தைரியமாக சொல்லலாம். பயப்பட வேண்டாம். என்னை போல பெண்களுக்கு பல காப்பகங்கள் இருக்கு. கை நீட்டும் கணவருக்கு பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என் பக்கம் தான். இந்த ரீதியில் இன்னும் பல விஷயங்களை கனிவாக பொறுமையாக சொல்லி கொண்டே போனாங்க. ஒன்றும் புரியாமல் முதலில் விழித்த எனக்கு விஷயம் விளங்க ஆரம்பித்த போது அடி வயத்திலிருந்து பொங்கிய சிரிப்பை மீறி ஒரு விஷயம் உறைத்தது.

என் கணவரின் குடுமி அந்த ஒரு வினாடி என் கையில். என் ஒரு தலை அசைப்பில் பாவம் அவர் மாமியார் வீட்டு களியை ருசி பார்க்க வேண்டி இருக்கும். ஆஹா! எப்பேர்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! கோடானு கோடி மனைவிகள் உலகத்தில் தங்கள் வலது புருவத்தை வெட்டி கொடுக்க தயாராக இருக்கும் (மாசம் ரெண்டு தரம் அழகு நிலையம் சென்று தீட்டி விட்டு கொண்டும் வரும் அதே புருவத்தை தான் சொல்லறேன்) இந்த ஒரு வாய்ப்பு தேடாமல் கனிந்த பழம் போல என் மடியில் விழுந்த போது மனம் சஞ்சலப்படாமல் நெஞ்சில் உரமுடன் 'இவர் இதற்கு காரணமில்லை. இவர் நிரபராதி' ன்னு சொல்லி சட்டத்தின் கொடும் பிடியில் சிக்காமல் என் கணவரை மீட்டு கொண்டு வந்த நானா இல்லை சத்யவானின் சாவித்ரியா சரித்திர நாயகி?

-மீனா சங்கரன்

Monday, September 07, 2009

பத்திரமான இடம்

"மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்ன கண்ணு"

என்ற பாடல் பிரபலமானது.

சினிமா பாடல்களை எல்லாம் "டப்பாங்குத்து பாட்டு" என்று வெறுத்து தள்ளும் சங்கீத ரசிகர்களை கூட சற்று நேரம் காது கொடுத்து கேட்கச் செய்யும் பாடல் அது. எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டில் சொல்லப்படும் செய்தியையும் கவனிக்க வேண்டும். கிராமிய பின்னணியில் அமைந்த கதைக்கு, மருதகாசி போன்ற பாடல் ஆசிரியர்கள் இப்படி எல்லாம் பாடல் எழுதினார்கள் என்ற விஷயம் இன்றைய இளம் ரசிகர்களை வியக்க வைக்கும். இப்படி பட்ட நல்ல செய்திகள் மருதகாசியின் பாடல்களில் நிறையவே இருக்கும்.

நிலத்தில் எப்படி பாடுபட வேண்டும், எப்படி விளைச்சலை பாதுக்காக்க வேண்டும் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போவார். கடைசியாக, கிடைத்த பலனை பாதுகாப்பாக வைக்க மருதகாசி சொல்லும் முறைதான் இங்கே முக்கியம்.

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு"

ஏன் அம்மா கையில் கொடுக்க வேண்டும்?

"அவங்க ஆறை நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு" என்ற வரியுடன் பாடல் முடியும்.

சம்பாதித்தால் போதுமா? சீராக செலவு செய்து சிக்கனமாக வாழ வேண்டாமா? சம்பாதித்த பணத்தை வீட்டில் போனவுடன் மனைவி கையில் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்ற பாடத்தை பலபேர் சொல்வதுண்டு.வாங்கிய பணத்தை முனை முறியாமல் மனைவியிடம் கொடுத்துவிட்டு தன கைச் செலவுக்கு கூட மனைவியிடம் கைநீட்டி வாங்கி வாழும் அப்பாவி ஆண்கள் பலர் உண்டு. குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதித்தால் நிலைமை வேறு. யார் கை ஓங்கி நிற்கிறதோ, அவர்கள் ஆதிக்கம் நிலைக்கும். மனைவியிடம் எல்லா காசையும் கொடுத்து விட்டு நிற்கும் ஆண் பிள்ளைகளை கேலியாகவும் பேசுவதுண்டு. எது சரி என்பது வேறு விஷயம். ஆண் செலவாளியாக இருந்தால் நிதி நிர்வாகம் பெண்ணிடம் இருப்பது ஒரு வகையில் நல்லதுதானே. ஆனாலும் பெண்களிடம் பணத்தை கொடுத்துவிடுவதை கேலி செய்வது இன்றும் தொடர்கிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயரை இன்றும் சிலராவது நினைத்துக் கொண்டிருப்பார்கள். சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டு சிறை சென்றவர். சுதந்திர இயக்க பாடல்களை பாடியவர். அவர் எழுதிய "மலைக்கள்ளன்" பிற்காலத்தில் திரைப்படமாக வெளி வந்தது.

இந்த நாமக்கல் கவிஞருக்கு பாராட்டு மற்றும் நிதி அளிப்பு விழா ஏற்பாடாகி இருந்தது. நிகழ்ச்சியில் ராஜாஜி நிதி முடிப்பை நாமக்கல் கவிஞர் கையில் கொடுத்தார். காமிராக்காரர்கள் போட்டோ எடுத்து முடித்தார்கள். ராஜாஜி பேச்சை தொடங்க மைக் அருகில் சென்றார். அந்த நேரத்தில் கவிஞர் நிதி முடிப்பை அருகில் இருந்த தன் மனைவி கையில் கொடுத்தார்.

இதை பார்த்த ராஜாஜி பேச்சை இப்படி தொடங்கினார். "பணம் போகவேண்டிய இடத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்து விட்டது. கவலை வேண்டாம்" என்றார்.

கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.

மு. கோபாலகிருஷ்ணன்

Saturday, August 29, 2009

பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது


சக ப்ளாகிகள் சதங்கா மற்றும் பரதேசி இருவரும் எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி பல வாரங்கள் (மாதங்கள்னா சொல்லறீங்க? சே சே இருக்காது) ஆன பிறகு நிதானமா இப்படி வந்து பட்டாம்பூச்சிகள் பறக்க விடறத்துக்கு நீங்க என்னை மன்னிக்கணும். இந்த முறை லேட்டா வந்ததுக்கு சோம்பேறித்தனம் காரணம் இல்லைங்க. பட்டாம்பூச்சி பறக்காத இடமே ப்ளாக் உலகில் இல்லைன்னு நினைக்கும் அளவுக்கு எல்லா இடத்துலயும் பட்டாம்பூச்சி பறக்குது. கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு தேடி பார்த்ததில் (கண்ணு லேசா எரியரா மாதிரி இருக்கு) எனக்கு பிடித்த மூவர்.

முதலாவதாக இந்த விருதை நான் அளிக்க விரும்புவது
ஸ்ரீராம் அய்யர் அவர்களுக்கு. அவ்வப்போது எழுதினாலும் மிக அருமையாக எழுதுபவர் இவர். கர்நாடக இசை கீர்த்தனைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அர்த்தத்தை விளக்குவதில் வல்லவர். இன்னும் நிறைய இது போல் எழுத இவருக்கு இந்த விருது.

அடுத்ததாக இந்த விருதை வாங்க மேடைக்கு வருமாறு அம்பி என்பவரை கூப்பிடுகிறேன். சமீப காலமாக தான் இவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்திருக்கேன். இவருடைய இயல்பான நடை எனக்கு மிகவும் பிடித்தது. கொஞ்சம் யதார்த்தம், கொஞ்சம் கிண்டல், நிறைய சிரிப்பு ன்னு கலக்கறார் இவர்.

மூன்றாவதாக இந்த விருதை நான் அளிப்பது நம்மூர் அரவிந்தனுடைய அப்பாகோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு. ரிச்மன்ட் தமிழ் சங்கத்தினுடைய புதிய ப்ளாகர் இவர். முதல் பதிவிலேய கலக்கிய இவரை மேலும் பல பல பதிவுகள் தருமாறு வேண்டி இந்த விருதை அளிக்கிறேன்.


நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Friday, August 28, 2009

படம் பாரு கடி கேளு - 38


TTE: Footboardல தொங்கறவங்கள உடனே இறக்கிவிடறேன் பார். Driver, வண்டிய உடனே நிறுத்துங்க!
Driver: இருங்க TTE சார். என்னாலே எஞ்சின் ரூம் உள்ளே போகமுடியலே.

அடை மழை !


Photo Credit: fineartamerica.com

நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, பலத்த வேலைப் பளுவிற்கு இடையிலும் (நாம சொல்லிக்காம வேற யாரு சொல்லறதாம் :)), இந்த அரைபக்கக் கதை.

-----

கருமுகில் போர்த்திய அடர்த்தியில் கனன்று கொண்டிருந்த வானம் சற்றைக்கெல்லாம் வெண் மழை தூவ ஆரம்பித்திருந்தது.

இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கால்கள் சுறுக்கி, கைகள் பிணைத்து கருப்பைக் குழந்தையாய் இருக்க முடியாமல், இன்றும் வேலைக்குப் போவது மாதிரி ஆன‌தே என வருந்தினாள் நந்தினி.

பஸ் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்குப் பத்துப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். பாராசூட்டையும் விட சிறிதான குடை கொண்ட பஸ்டாப்பில், அண்டிய ஆட்டுக் குட்டிகளாய் அப்பிய ஜனத்திரளுடன் சில நிமிடங்கள் ஒண்டி நின்றாள். மழை நின்றபின் வீட்டுக்குப் போய், முதல் வேலையாய் இழுத்துப் போர்த்திப் படுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அடைம‌ழையாய் விடாது பெய்த‌து ம‌ழை.

வழக்கம் போல இன்றும் குடை எடுத்துவர மறந்திருந்தாள். அரை மணி நேரத்தில் பொறுமை இழந்து, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். சொட்டுச் சொட்டாய் விழுந்த மழை நீர், தலை முடியின் வழி பல கிளைகள் கொண்ட நீர்வீழ்ச்சிகளாய் கொட்டியது.

நேற்றும் இதனால் தான் அம்மாவுடன் சண்டை. "மழை நாளா இருக்கு. ரெண்டு நாள் லீவ‌ப் போட்டு வீட்டுல‌ இரேண்டி. அப்ப‌டி என்ன‌ ஆபிஸ‌க் க‌ட்டி அழுக‌றே ! பாக்குறது என்னவோ தையல் வேலை தான‌" என்று த‌வித்தார். "பெரிய குடை எடுத்துப் போகத் தான் கூச்சமா இருக்கு. ஹேன்பேக்கில் ஒரு சின்னக் குடையாவ‌து வ‌ச்சிக்க‌ வேண்டாமா ?" என்றும் திட்டினார். அத்தோடு அம்மாவுட‌ன் பேச்சை நிறுத்தி இப்போ, இருபத்தி மூணு ம‌ணி, ப‌தினைந்து நிமிட‌ம், (வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்) ஏழு நொடிக‌ள் ஆகியிருந்த‌து.

ச‌ர் ச‌ர்ரென்று க‌ட‌ந்து செல்லும் வாக‌ன‌ங்க‌ள். சாலைக் க‌ழிவோடு இர‌ண்ட‌ற‌க் க‌லந்திருந்தது ம‌ழை நீர். ச‌க‌தியாய் போன தெருக்கள் ஸ்கேட்டிங்க் போர்ட் இல்லாமலேயே வழுக்கியது. வெள்ளிக் கம்பியாய் மின்னல் கீற்றுக்கள் வேறு நடைக்குத் தடையாய் இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் பஸ்ஸாட்ப்பிலேயே நின்றிருக்கலாமோ ?' என‌ யோசித்தாள். 'நின்றிருந்தால் நின்று கொண்டே தான் இருப்போம். ந‌ல்ல‌ வேளை. இதோ இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வீட்டை அடைந்து விட‌லாம் !' என்று அடிமேல் அடிவைத்து ந‌ட‌ந்தாள்.

தொப்ப‌லாய் ந‌னைந்து வீட்டுப் ப‌டியேறி, காலிங் பெல்லை அடித்துக் காத்திருந்தாள். அம்மா வ‌ந்து திற‌ப்பதற்கான‌ அறிகுறி எதுவும் தென்ப‌ட‌வில்லை. 'இன்னும் அம்மாவுக்குக் கோப‌ம் த‌னிய‌ல‌ போல‌ !' என‌ நினைத்து, ஹேன்பேக்கில் முன் பக்கம், கையை விட்டுத் த‌ன்னிட‌ம் இருக்கும் சாவியைத் தேடினாள். அக‌ப்ப‌ட‌வில்லை, 'சாவியையும் ம‌றந்து விட்டோமா ? என்ன‌திது சோத‌னை' என்று சுவ‌ற்றில் சாய்ந்தாள். ஏதோ நினைவில் மீண்டும் ஹேன்ட்பேக்கின் மைய‌ப் ப‌குதிக்குள் கையை விட‌, ரிமோட் க‌ண்ட்ரோல் போல எட்டிப் பார்த்தது, தன் குழந்தையின் குணம் அறிந்து அவளது ஹேன்ட்பேக்கில் அம்மா நேற்றிரவே போட்டு வைத்த‌ அந்த அழகிய‌ குட்டிக் குடை !

ஆகஸ்ட் 31, யூத்ஃபுல் விகடனில்

Thursday, August 27, 2009

ஆபீஸில் தூங்கலாமா?

"சபாபதிக்கு வேறொரு தெய்வம் சமானமாகுமோ" என்ற பாடல் தமிழ்நாட்டில் எல்லா சங்கீத மேடைகளிலும் கேட்கலாம்.

"மீசை நரைத்த தாத்தா உனக்கு ஆசை நரைக்கலையே" என்ற கேலி பாட்டு தெருக்கூத்துகளில் அடிக்கடி ஓலிக்கும். இப்படி சங்கீத மேடையிலும், தெருக்கூத்துகளில் பாடும் பாடல்களையும் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் கோபலகிருஷ்ண பாரதி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகளில்தான் இந்த பாடல்கள் இடம் பெற்றன. அவர் எழுதிய பாடல்களையும் மற்ற புராணங்களையும், பாடியும் பேசியும் பிழைப்பு நடத்திய ஏழை பிராமணர் அவர். இரவு உணவு வேளைக்கு பிறகு நடைபெறும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க அந்த காலத்தில் நல்ல கூட்டம் கூடும்.

பிரெஞ்சு காரர்கள் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலுக்கு அருகில், பிரிட்டிஷார் பொறுப்பில் இருந்த தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் கோபலகிருஷ்ண பாரதியின் தொடர்க்கதை பிரசங்கம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. காரைக்காலில் உள்ள french agent அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 குமாஸ்தாக்கள் பாரதியின் பேச்சை இரவு வெகு நேரம் கேட்டுவிட்டு, விடியும் முன்பு காரைக்காலுக்கு திரும்பி போனார்கள்.

மறுநாள் ஆபீஸுக்கு வந்த இரண்டு குமாஸ்தாக்களுக்கும் நல்ல அசதி. வேலை செய்ய முடிய வில்லை. இரவில் கண் விழித்தாலும் நடந்த களைப்பும் அவர்களை கொஞ்சம் கண் மூட செய்து விட்டது. கொஞ்சம் என்ன, நல்ல தூக்கம்தான் !! அந்த சமயம் பார்த்து பிரெஞ்சு அரசாங்க அதிகாரி ( மாவட்ட கலெக்டருக்கு சமமானவர்) ஆபீஸுக்கு வந்து விட்டார். தூங்கி கொண்டு இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குமாஸ்தாவை அனுப்பி அந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வரச் செய்தார். கையை கட்டி கொண்டு நடுங்கியபடி நின்றார்கள். அதிகாரியினுடைய மிரட்டலை கண்டு, பயந்து, இரவில் கதை கேட்க போனதையும் தூக்கம் இல்லாமல் சில மைல் தூரம் நடந்து வந்த அசதியில் தூங்கி விட்டதாக உண்மையை சொன்னார்கள். "யார் கதை சொன்னார்" என்று அதிகாரி கேட்டார். கோபலகிருஷ்ண பாரதி என்று பதில் அளித்தார்கள்.

அவ்வளவுதான்.

அதிகாரியின் முகத்தில் இப்பொழுது கோபம் போயி ஆச்சரியம். "காசே" என்ற அந்த அதிகாரி கோபலகிருஷ்ண பாரதியை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும். அதுமட்டும் அல்ல அவருக்கு தமிழ் மொழி மீது பற்றும் உண்டு.

பாரதியின் கதை சொல்லும் திறமை பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும், தானும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க வேண்டும் என்று சொன்னார்.

கதை பிரசங்கம் நடக்கும் இடம் மற்ற விவரங்களை கேட்டறிந்தார். பாரதியின் கதை நிகழ்ச்சி தொடர்ந்து சில நாட்களுக்கு அங்கே நடக்கும் என்ற விவரங்களையும் அதிகாரியிடம் அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு அந்த இரண்டு குமாஸ்தாக்களோடும் வேறு சில பாதுகாப்போடும் அந்த அதிகாரி இரவு நேர இருட்டில் தன்னை மறைத்துக்கொள்ளும் அளவுக்கு வேஷம் போட்டு, பாரதியின் கதை நிகழ்ச்சி நடக்கும் கிராமத்துக்கு சென்றார். வெகு தூரத்தில் நின்று நிகழ்ச்சியை கேட்டு விட்டு காரைக்காலுக்கு இரவிலேயே திரும்பினார். பிரெஞ்சு அதிகாரி ஆன அவர் பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்குள் நுழைவது பற்றி  தயக்கம் இருந்ததால் தன்னை அப்படி மறைத்து கொண்டார்.

சில நாட்களுக்கு பிறகு கோபலகிருஷ்ண பாரதியை காரைக்காலுக்கு வரவழைத்து அவர் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பற்றி மேலும் விவரங்கள் கேட்டறிந்தார் அந்த பிரெஞ்சு அதிகாரி. அந்த காலத்தில் புத்தகங்களை அச்சிடுவது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு விஷயம். ஆகையால் பாரதி தன்னுடைய நூல்களை ஓலைச் சுவடியில்தான் எழுதி வைத்திருந்தார்.

நந்தனார் சரித்திர கீர்த்தனையை புத்தகமாக வெளியிடலாமே என்று அந்த அதிகாரி கேட்டார். தன்னுடைய வறுமை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்று பாரதி கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த பிரெஞ்சு அதிகாரி காசே கொடுத்த நிதி உதவியைக்கொண்டு நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் புத்தகமாக வெளிவந்தது.

இப்பொழுது சொல்லுங்கள். ஆபீஸில் தூங்கினால் நல்லதா? கேட்டதா?

எப்படியோ!! இரண்டு பேர் தூங்கியதால் தமிழுக்கு ஒரு நல்லது நடந்தது.

மு. கோபாலகிருஷ்ணன்
(அரவிந்தின் தந்தை)