Sunday, June 28, 2009

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே...


சென்ற வாரம் போயிருந்த முகாமில் ஒரு நாள் சூரிய உதயத்தைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள். ஐந்து மணிக்கு வரச்சொல்லியிருந்தார்கள். நான் கைக்கடிகாரத்தில் அலாரம் நேரத்தை சரியாக வைத்துவிட்டு அலாரம் ஆன் செய்ய மறந்துவிட்டேன். ஆனால் விப்பூர்வில் பறவைகள் மறக்காமல் எழுப்பிவிட்டன. அலறி அடித்துக்கொண்டு ஓடினால் நார் நாராகக் கிழித்துவிடுவார்கள் என்ற பயத்தால் சத்தம் போடாமல் ஓடினேன்.
எல்லோரும் தூக்கத்தில் நடந்து வந்ததுபோல் இருந்தார்கள். ஒரு இருபது நிமிட நடையில் முகாமுக்கு நேர் மேலே ஒரு உச்சியை அடைந்தோம். அங்கிருந்து பார்த்ததில் தெரிந்த காட்சிதான் மேலே இருக்கும் படம்.

மூங்கில் இலை மீது தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே

இனி நான் குறுக்கே பேசவில்லை. சூரியன் உதிப்பதற்கு முன்னும், பின்னும் எடுத்த படங்களைப் பாருங்கள்.
மலையேற அஞ்சும் எங்கள் தலைக்காக அவர் நகர்ந்து உட்கார்ந்த நாற்காலியில் இருந்து சூரிய உதயத்தைப் பார்க்க கடேசியில் ஒரு வீடியோவும் உண்டு...

சூரிய உதயத்துக்கு முன்னால் வீடியோ...








சூரிய உதயம்...


இந்த வீடியோவில் வேகமாற்றம் ஏதும் இல்லை. நிகழ்ந்த மாதிரியேதான். சூரியன் உதிக்கும் முன் மாறும் நிறங்களைப் பாருங்கள். இது என் டிஜிட்டல் கேமராவின் வீடியோ வசதியில் எடுத்தது. நல்ல கனமான வீடியோ யாராவது தூக்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தால் உங்களுக்கு இன்னும் அற்புதமான படம் கிடைத்திருக்கும். உங்களுக்கு வாய்த்தது இவ்வளவுதான்...

படம் பாரு கடி கேளு - 32


சே! என்னதான் பேண்டா (Panda) மேல் பிரியம் இருந்தாலும் இந்த zoo வில் நமக்கு பேண்டா வேஷம் போட்டுட்டாங்களே!. மரத்துல வேற ஏறச்சொல்லுவாங்களோ!

பாட்டிகளுக்கு ஓர் சமர்ப்பணம்: விமர்சனம்




ஏழு வயதான சாங்-வூ-வின் தாய் சியோல் நகரத்தில் வேலை தேடவிருப்பதால் அவனை சிறு கிராமத்தில் வசிக்கும் வயதான தாயாரிடம் சில நாட்கள் விட்டுச் செல்கிறாள். மிக பின் தங்கிய கிராமத்தில் சிறுவன் சாங்-வூ-விற்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அவனது வீடியோ கேம் மட்டுமே. பாட்டிக்கு பேச முடியாது, நியாபக மறதி வேறு. கிராமத்தில் விளைவிக்கும் காய்கறிகளை அருகில் இருக்கும் சிறு நகர் புறத்தில் விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறாள். ஆரம்பத்தில் பாட்டியை பிடிக்காமல் உதாசின படுத்துகிறான் சாங். ஆனாலும் பாட்டி அவனிடம் தனது நெஞ்சின் மேல் கையால் வட்டமிட்டு சைகையில் மன்னிப்பு கேட்கிறாள். பாட்டி தனது பழைய செருப்பினை தைக்க ஊசி நூல் கோர்த்து கொடுக்குமாறு, பையன் சலிப்புடன் சில முறை கோர்த்து கொடுக்கிறான்.



ஒரு சில நாட்களில் அவனது வீடியோ கேம் பாட்டரி தீர்ந்துவிடுகிறது. பாட்டியிடம் பாட்டரி வாங்க காசு கேட்டு அழுகிறான் சிறுவன். அவளிடம் காசு இல்லாததால் கோபத்தில் அவளது கூந்தல் முடிய வைத்துள்ள பழங்கால பொருளை விற்று விடுகிறான். அவளது ஒரே பழைய செருப்பினை தூக்கி எரிந்துவிடுகிறான். அவன் கொண்டுவந்த டின்னில் அடைத்த உணவுகள் தீர்ந்து விடுகிறது. பாட்டி கொடுக்கும் சாதம் அவனுக்கு பிடிக்கவில்லை. பசியால் வாடும் பேரனை பார்த்த பாட்டி அவனிடம் சைகையில் என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்கிறாள். அவன் தனது புத்தகத்தில் இருக்கும் கோழியை காட்டி கெண்டகி சிக்கன் வேண்டும் என்று கூறுகிறான். பாட்டியும் தனது விளைபொருட்களை எடுத்துக்கொண்டு சிறு நகருக்கு சென்று ஒரு கோழி வாங்கி வந்து நீரில் வேக வைத்து தருகிறாள். ஆனால் சிறுவனோ தனக்கு வறுத்த கோழி வேண்டும் என அழுகிறான்.




சிறுவனை அழைத்து கொண்டு சிறு நகருக்கு விளை பொருட்களை விற்க செல்கிறாள் பாட்டி. அவள் கஷ்டப்பட்டு சைகையில் விற்பதை பார்த்த சிறுவனின் மனதில் சிறு மாற்றம் ஏற்படுகிறது. அதில் வந்த பணத்தில் அவனுக்கு நல்ல ஷூ வாங்கி தருகிறாள். அவன் கேட்ட சாக்லேட் வாங்கி தருகிறாள். வீடு திரும்ப பஸ்சுக்கு காசு போதததால், சிறுவனை மட்டும் அருகில் வசிக்கும் ஒரு பையனிடம் பத்திரமாக பஸ்சில் கொண்டு விடும்படி சொல்கிறாள். வீடு திரும்பிய சிறுவன் வெகு நேரமாக பாட்டி வராததால் திரும்ப ரோட்டில் வந்து காத்திருக்கிறான். பாட்டி மாலையில் நடந்தே கிராமத்திற்கு வருவதை பார்த்த பையன் மனம் மிகவும் வருத்தமடைகிறது. பாட்டி தனக்கென மகள் கொடுத்த முதியவர் சாப்பிடும் மருந்துகளை அருகில் வசிக்கும் நோயுற்ற ஒரு முதியவருக்கு அளிக்கிறாள். அதை பார்த்த சிறுவன் மேலும் பாட்டியை மதிக்க ஆரம்பிக்கிறான்.


அவன் தாய் எழுதிய கடிதத்தில் இன்னும் சில நாளில் வந்து அவனை திரும்ப கூடிக்கொண்டு போவதாக சொன்னவுடன் பையன் வருத்தமடைகிறான். பாட்டியை விட்டு சென்றவுடன் எப்படி அவளால் தனக்கு கடிதம் எழுத முடியும் என்று எண்ணி தனது கையால் சில அட்டைகளில் "நலமாய் இருக்கிறேன்", "உடல் நலமில்லை", "உன்னை பார்க்க வேண்டும்" என எழுதி அதை படிக்க வசதியாக சிரிக்கும் படம், சோகமான படம் என வரைந்து தருகிறான். அவனது தாய் வந்து அழைத்து போகும் நாளில் பாட்டியிடம் சைகையில் நெஞ்சின் மேல் வட்டம் வரைந்து மன்னிப்பு கேட்கிறான்.

இந்த படம் நான் நேற்று பார்த்த கொரிய மொழியில் வெளியான "தி வே ஹோம்" படத்தின் கதை. இந்த காலத்து சிறுவர்கள் பார்த்து கற்று கொள்ள வேண்டிய படம் என தோன்றியது. பாட்டியாக நடித்த கிம் இந்த படத்தில் தான் முதன்முதலாக நடிக்கிறார் - இது வரை அவர் சினிமாவே பார்த்ததில்லை என்பது என்னும் ஒரு ஆச்சர்யம்!

ப்லோக்பஸ்டரில் இது வாடகைக்கு கிடைக்கும்.

Saturday, June 27, 2009

மீனாவுடன் மிக்சர் - 6 {பாம்பு செவியா? எனக்கா?}


எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னாங்க. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.

----------------------------------------------

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னவுடன் அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .

இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.

என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?

அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.

ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?

-மீனா சங்கரன்

நலமாய் வாழ பத்து வழிகள்


#அ: நல்ல மருத்துவரை அனுகவும்:
முதலில் அமெரிக்கன் மெடிக்கல் அசொசியோசன் மூலம் நல்ல மருத்துவரை தேர்ந்தெடுங்கள். அவரது அலுவலகம் உங்களுக்கு அருகாமையில் உள்ளதா, நண்பர்கள் பரிந்துரை, போர்டு அங்கீகாரம் பெற்றவரா என பார்த்து தேர்ந்தெடுக்கவும். ஒரு நல்ல மருத்துவர் ஒரு நல்ல வாத்தியாருக்கு இணை. நல்ல மருத்துவரை தேர்ந்தெடுப்பது நல்ல உடல் வளத்துக்கு வழிவகுக்கும்.

#ஆ: கேடு விளைவிக்கும் உணவுகள் தவிர்க்க வேண்டும்:
முதலில் உடலுக்கு கேடு  விளைவிக்கும் ஐந்து உப பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்:
காரன் சிரப்:
இது பொதுவாக எல்லா சோடா குளிர் பானங்களிலும் சுவைக்காக சேர்க்கப்படும். இது நமக்கு தேவையில்லாத சர்க்கரையை உடலுக்கு சேர்த்து கேடு விழைவிக்கும்.

சர்க்கரை:
பொதுவாக சர்க்கரை சேர்த்த இனிப்புகளை உண்டவுடன் உங்கள் மூளை "எனக்கு கலோரிகளை கொடுத்துவிட்டாய், ஆனால் ஊட்டப்பொருள் (nutrients) எதுவும் இன்னமும் அனுப்பவில்லை என மேலும் உணவுக்காக ஏங்க ஆரம்பிக்கும்.

பதப்படுத்தப்பட்டவை ("Enriched"):
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (உ.தா. : மேன்படுத்தப்பட்ட கோதுமை ரொட்டி) அதிலுள்ள ஊட்டசத்துகள் இழப்பதால் அதில் செயற்கையான ஊட்டசத்துகள் சேர்க்கின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல.

கொழுப்பு வகை Trans fat:
பொதுவாக உணவுகளை நீண்ட நாட்கள் கெடாமல் வைக்க ஹைட்ரஜன் சேர்த்த கொழுப்பை உபயோகிப்பார்கள். இது முற்றிலும் கேடான பொருள்.

கொழுப்பு வகை Saturated fats:
இந்த வகை கொழுப்புகள் மாட்டு/பன்றி இறைச்சி, பால் உணவுவகைகளில் காணப்படும். இதுவும் நமக்கு நல்லதில்லை.

#இ: உடல் நலனுக்கு உகந்தவை:

அன்டிஆக்சிடன்ட்ஸ் / Antioxidants
தக்காளி, ப்ரக்கலீ, ராஜ்மா கடலை, நீல பெர்ரி, ஆர்ட்டிசொக், ப்ருன் போன்ற பழங்களில் அதிகமாக காணப்படும். இவை ஒரு நாளுக்கு ஐந்து முதல் ஏழு அளவைகள் (serving) சேர்க்க வேண்டும்.
ஒமேகா மூன்று வகை கொழுப்புகள் / Omega-3 Fats
ஒமேகா மூன்று வகை கொழுப்புகள் ப்ளக்ஸ் விதை , வால்நட், சாலமன் மீன், சோயா, ஸ்குவாஷ் காய்கள் முதிலானவற்றில் காணப்படும் நல்ல வகை கொழுப்புகள்.

நார் வகை:
ஒட் மீல், முழு தானிய ரொட்டி, பருப்பு வகைகள், பட்டாணி, பல காய்கறிகள் நார் சத்து நிறைந்தது.

ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெய் உடலுக்கு மிக உகந்தது.

#ஈ: மல்டி-வைட்டமின்:
மருத்துவரை கலந்தாலோசனை செய்தபின் உங்களுக்கு உகந்த வைட்டமின் மாத்திரைகள் உண்பது நலம். இங்கு எந்த வயதிற்கு என்ன சாப்பிடலாம் என சில ஆலோசனைகள் காணலாம்.

#உ: முக்கியமான எண்கள்:
இடுப்பளவு (பி எம் ஐ), ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், சக்கரை, வைட்டமின் டி, தைராயிட் போன்ற முக்கிய அளவுகோல்கள் உங்களுக்கு உடலில் நடக்கும் மாற்றங்களை உடனே காட்டிவிடும். பெரிய ஆபத்து வருமுன் காத்திடலாம்! நான் இவற்றை கூகிள் https://www.google.com/health - என்ற தளத்தில் இணையத்தில் (பாதுகாப்பாக) சேமித்து வைத்துள்ளேன்.

#ஊ: உடல நல ஆலோசகர்:
உங்கள் மனைவி/கணவர், மகன்/மகள் அல்லது நண்பர் இப்படி யாரவது ஒருவரை உங்கள் நல ஆலோசகராக வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை ஊக்கப்படுதுவதுடன் மருத்துவரை தகுந்த கேள்விகள் கேட்டு உங்களுக்கு உதவ முடியும்.

#எ: மருத்துவ கோப்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கவும்
மருத்துவரை பார்த்து வெளிவருமுன் அந்த நாளைய குறிப்புகளை ஒரு பிரதி எடுத்து தருமாறு கேட்கவும். வேறு ஒரு மருத்துவரை இரண்டாம் கருத்து கேட்கவோ அல்லது உங்கள் குடும்ப நல வரலாறு அறிய இந்து உதவும். தற்போது கூகிள் https://www.google.com/health - என்ற தளத்தில் இணையத்தில் சேமிக்கும் வசதியை தந்துள்ளார்கள். சில மருத்துவமனைகள், பார்மசி கூகிள் உடன் நேரடி தொடர்பு கொண்டு உங்கள் நல வரலாற்றினை பரிமாறிக்கொள்ள வழி செய்திருக்கின்றனர்.

#ஏ: மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்யவும்:
வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை, இரு முறை பல் பரிசோதனை, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்தல் நலம். அது தவிர வயதிற்கு ஏற்ப ஆண்/பெண் இன்னும் பல மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். இது குறித்து மேலும் விபரங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு அறியவும்.

#ஐ: உடற்பயிற்சி:
தற்கால கணினி பொறியாளர்கள் "எலியை" நகர்த்துவது தவிர வேறு வேலை எதுவும் உடலுக்கு கொடுப்பதில்லை. நல்ல உணவுடன், தினமும் முப்பது நிமிடம் நடக்க வேண்டும். முடிந்தால் முப்பது நிமிடம் மேல் உடல், கீழ் உடல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலை பலப்படுத்தி தசைகளுக்கு வலுவூட்டும். யோகா போன்ற தியான பயிற்சிகள் செய்தல் மனதை வளமாக வைக்க உதவும்.

#ஒ: தூக்கம்:

மனிதனுக்கு ஒரு நாளைக்கு எழு முதல் எட்டு மணி நேர தூக்கம் மிக அவசியம். #அ முதல் #ஐ வரை இருப்பவை சரியாக பின்பற்றினாலும் தூக்கம் இல்லையென்றால் இவை அனைத்தும் வீணாகிவிடும்.

நன்றி: டாக்டர் ஒஸ். இந்த பகுதி சமிபத்தில் "ஒபரா" வழங்கிய நிகழ்ச்சியிலிருந்து தமிழ் படுத்தப்பட்டது.

Thursday, June 25, 2009

இந்த வார சொர்க்கம்

சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நான் ஒரு சாரண முகாமில் இருக்கிறேன். வர்ஜினியாவின் ப்ளூரிட்ஜ் மலைத் தொடரில் இருக்கும் ஒரு பெரிய சாரண முகாம். புலஸ்கி கவுண்டியில் ஹிவாஸ்ஸி என்ற கிராமத்துக்கு அருகில். மலைகளும் சிறு நதிகளும் நிறைந்த இந்த இடம் இன்னொரு சொர்க்கபுரி.

இணையத்தொடர்பும் அலைபேசி தொடர்பும் வேலை செய்யாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.  சொர்க்கத்தை அனுபவிக்காமல் இங்கே என்னய்யா செய்கிறீர்கள் என்பவர்களுக்கு - எல்லாம் உங்கள் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்ளத்தான். சொர்க்கத்தின் ஒரு உதாரணம்...


இது என்ன என்கிறீர்களா?

எனது ஊஞ்சலில்(ஹம்மாக்) இருந்து எனக்கு தெரிவதெல்லாம் இதுதான்! போய் இன்னும் இன்றைக்கும் இந்த வாரம் மீதமிருக்கும் வேலைகளை எல்லாம் முடியுங்கள் சரியா? நான் கொஞ்சம் தூங்க வேண்டும்.

அடுத்த வாரம் விவரமாக...


விவரமாக அடுத்த வாரம்.

Wednesday, June 24, 2009

sorry. kozuppu konjam over

சாரி கொழுப்பு கொஞ்சம் ஓவர்
(இந்த கதைக்கும் மீனாவுக்கும் சம்பந்தம் இல்லை. கதையில் வருவன யாவும் கற்பனையே. மீனாவின் அனுபவம் எங்களது கற்பனயில் )
மனைவி மற்றும் குழ்ந்தைகள் அனைவரையும் இந்தியா அனுப்பி விட்டு அடுத்த நாள் கோவிலுக்கு சென்றேன். அங்கு அன்னபூரணியில் மீனாவை சந்தித்த போது அவர்கள் இந்தியா செல்ல இருப்பதாகவும், அவர்களின் சாம்பார் வடை சபதம் பற்றியும் சொன்னார்கள். நானும் அதே நாளில் அதே விமானத்தில் பயணம் செய்கிறேன் என்று சொன்னதும் அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனால் சாம்பார் வடை சபதம் மட்டும் எனக்கு உறுத்தி கொண்டு இருந்தது. மனதுக்குள் அதனை சவாலாக எடுத்து கொண்டு, மீனாவை முந்தி விட வேண்டும் என்று நினைத்தவாறே கோவிலை விட்டு வெளியே வந்தேன். எல்லாம் இறைவனின் திருவிளையாடல்.
அது படியே நான் சவாலில் ஜெயித்து விட்டேன். எப்படி என்று தானே கேட்கிறீங்க. அதுக்கு தானே இந்த கற்பனையே.
என் கதையை படிச்சுட்டு நாகு இன்னொரு பஜ்ஜி ன்னு கமென்ட் அடிக்க போறாரு. அவருக்கு கொஞ்சம் லொள்ளு ஓவர் தான். இப்பவே அவருக்காக பஜ்ஜி ஆர்டர் பண்ணி வச்சுட்டேன், கூடவே கொஞ்சம் அல்வாவும், ஏன்னா அவர் வாயையும் திறக்க கூடாதுன்னு தான். தமிழனுக்கு ரொம்ப நல்ல எண்ணம்.
எங்கள் குடும்பம் பாசம் மிகுந்த பெரிய கூட்டு குடும்பம். அதுனால என் அண்ணனிடம் சாம்பார் வடை சவால் பற்றி சொன்னேன். அவர் கவலை படாதேன்னு சொல்லி விமான நிலையத்திற்கு வரும் போதே வாங்கி வந்து விடுகிறேன்னுட்டார். பயண நாளும் வந்தது, சாம்பார் வாடையும கிடைக்க போகுது.
அண்ணன் சொன்ன மாதிரியே வடை வாங்கி வந்து விட்டார். உடனே மீனாவை தேடினேன், அவரை காணவில்லை. சரி என்று நானே சாப்பிட்டு விட்டேன். மீனாவுக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும் என்று தான் ஆசை, அனால் அவர் வீட்டிற்கு போனவுடன் தான் பேச முடியும். மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.
என் முகத்தில் எதையோ சாதித்தது போல ஒரு பெருமை.
காரில் ஏறி வீட்டிற்கு வந்தால் அங்கு ஏக கூட்டம். எல்லோருக்கும் ஹாய் சொல்லிவிட்டு, ஒரு குளியல் போட்டு வந்து உட்கார்ந்தால், அங்கு ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. என் அம்மாவிற்கு எப்படியோ வடை ரகசியம் தெரிந்து என் மனைவியை திட்டி கொண்டே ஒரு வடை கூட செஞ்சு கொடுக்க கூடாதான்னு சொல்லி கொண்டே வடை சுட்டு வைத்து இருந்தார்கள். பத்து வடையை (சும்மா ஒரு கணக்கு தான்) சாப்பிட்டு விட்டு கூடவே சுட சுட மதுர மல்லிகைப்பூ இட்லி, மல்லி சட்னியுடன் இட்லி பொடியும் சேரவே நாக்குல தண்ணி கொட்ட கொட்ட சாப்பிட்டு எழுந்தேன். சொந்த கதை எல்லாம் பேசி முடிக்க நைட் 2 1/2 மணி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் தூங்க போய் விட்டேன். காலை முழிச்சு பார்த்தால் மணி 12. வீட்டுல எல்லோரும் பயண களைப்பு என்று சும்மா கண்டுக்காம விட்டு விட்டாங்க. நைட் பட்ட வேதனை எனக்கு தான் தெரியும். எத்தனை தடவ தான் போறது. எனக்கோ யாரோ அமுக்குவது போல ஒரு வேதனை. சத்தம் போட்டு கூப்பிடலாமுன்னு பார்த்ததால் யாரும் வந்த மாதிரி தெரியலை. சிரிக்காதீங்கப்பா, எவ்வளவு வேதனை தெரியுமா.
ஒரு வழியாக என் அம்மா வந்து பார்த்தார்கள். என் நெலமையை பார்த்தட்வுன்ஒரே அழுகை. என்னவோ ஏதோ என்று மற்றவர்களும் மேல வந்தவுடன் சாம்பார் வடையின் விபரீதம் அவர்களுக்கு தெரிந்தது.
என் தங்கையோ ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து, கொஞ்சமா சாப்பிடனும், எதோ காஞ்ச மாடு கம்பம் கொல்லைல பாஞ்ச மாதிரி சாப்பிட்ட இப்படித் தான்.
என் அப்பாவோ, அது என்ன வந்ததும் வராததுமா சாம்பார் வடை. இவனை சொல்லி குத்தமில்ல, இவனுக்கு வடையை வாங்கி கொடுத்தவன தான் சொல்லனும்ன்னு என் அண்ணனுக்கு ஒரு குட்டு வைத்தார். என் அண்ணன் அங்கிருந்தால் வம்புன்னுட்டு உடனே எஸ் ஆயிட்டான்.
இதுக்கு அப்புறம் தான் ரகளையே.
என் அப்பா உடனே காரில் ஏற்றி அவருக்கு தெரிந்த நர்சிங் ஹோம் என்று ஒரு புது ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார். அங்கு அதே அனுபவம் தான். ஆனா ஒரு வித்தியாசம். டாக்டருக்கு தான் அனுபவம் பத்தலை. நம்ம உடம்ப பார்க்காம வேகம் அதிகமா இருக்குற மாத்திரையை கொடுக்க, அது தன வேலையை காட்டிடுச்சு. அலர்ஜி ஆகி, வேற மாத்திரை கொடுக்குறதுக்குள்ள மீனாவோட எல்லா அனுபவமும் அனுபவிச்சுட்டேன்.
நம்மள சமாதான் படுத்த டாக்டரும், நீங்கள் லோக்கல்ல இருந்தா ஒன்னு இரண்டு மாத்திரை கொடுத்து இருப்பேன். ஆனா நீங்கள் வெளி நாடுல இருந்து வந்து இருக்கீங்க, எப்பவாவது தானே வருவீங்க, அதுனால தான் இந்த கம்ப்ளீட் சிகிச்சைன்னு ஒரு சமாளிப்பு. அடுத்து கிரெடிட் கார்டு நம்பர் கேட்டாரு, அது எல்லாம் எடுத்து வரலைன்னு நானும் பதிலுக்கு ஒரு சமாளிப்பு ( எப்படி நம்ம திறமை) சமாளிச்சுட்டு வந்துட்டேன்.
ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தா, என் அம்மா கையில ஆரத்தி தட்டும் எலுமிச்சம் பழமும் நின்னு கிட்டு யாரையோ திட்டி கொண்டே இருந்தாங்க. எந்த பாவி கண்ணு பட்டுதோ, வந்ததும் வராததுமா இப்படி ஆயிடுச்சே.
ஆரத்தி எடுத்த கையோட, திருப்பதிக்கு மொட்டை போடனும்னு வேண்டிகிட்டங்க.
அடுத்த நாள் என் அண்ணனோ அவன் ஒரு ஹோமியோபதியை கூட்டி வந்து இருந்தார். அவரும் கை பிடித்து பார்த்து விட்டு சில மாத்திரைகளை கொடுத்தது விட்டு சாப்பாட்டில கவனமா இருக்க சொல்லிட்டு போய்ட்டாரு.
இது இப்படி இருக்க என் சித்தி விஷயம் அறிந்து ஒரு பச்சிலை வைத்தியரை கூடி வந்து விட்டார்கள். அவரும் கதையை எல்லாம் கேட்டு விட்டு, ஒரு தொக்கு எடுத்தால் சரி ஆகிவிடும் என்று வயிற்றை சுற்றி சாம்பல் தடவி தொக்கு எடுத்து சென்றார். ( இந்த வழி இன்னும் போக வில்லை)
என் அப்பவோ ஒரு படி மேல போய் ஜோசியரை கூடி வந்து விட்டார். ஆயுள் பலம் பற்றி கேட்டு விட்டு ஏதாவது பரிகாரம் உண்டான்னு கேட்க, ஜோசியரும் குசியாக தண்ணீரில் கண்டம் இருக்கு, வெறும் பிஸ்லேரி தண்ணி மட்டும் குடிக்க சொல்லி விட்டு அவர் பையை நிரப்பி விட்டு சென்றார்.
அடுத்த நாள் என்ன நடக்கும் என்று யோசிப்பதற்குள் காலையிலேயே உடுக்கை சத்தம் கேட்டது. என்னடாவென்றால் என் பாட்டி அவர் பங்கிற்கு ஒரு மாந்த்ரிகரை கூட்டி வந்து இருந்தார்கள்.
அவன் இது ஒரு செய்வன, நான் சாப்பிட்ட வடையை எடுத்து விட்டால் சரி ஆகி விடும் என்றான். சாப்பிட்டு மூணு நாளாச்சு, இப்ப எடுக்க போறாரா? நம்ம பேச்சை யார் கேட்க போகிறார்கள்? என்னால் ஒன்றும் பேச விடாமல் தண்ணீரை எடுத்து என் மேல் தெளித்தான்.
எப்படி என் வாயில் வடையை திணித்தான் என்று யோசிப்பதற்குள் வடையை வாயில் இருந்து எடுத்து எல்லோரிடமும் காட்டினான். என் பாட்டிக்கோ ஓர் சந்தோசம். செய்வன வடையை எடுத்தாச்சு என்று.
நல்ல வேளை, நான் 10+2 வடை சாப்பிட்டத சொல்லலை. சொன்ன இன்னும் 11 வடையை எடுக்கணும்ன்னு சொல்லி கொடுமை படுத்தி விடுவான். எப்படி நம்ம அறிவு. என் அண்ணனோ இது வேற வடை மாதிரி இல்ல இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருந்தான்.
இதுக்கு மேல் இங்க இருந்தா பைத்தியம் பிடித்து விடும் என்று மாமனார் வீட்டிற்கு வந்தேன். அங்கு வந்தால் மனைவியும், குழந்தையும் ஓர் அழுகை. எனக்கு ஒன்றும் இல்லை என்று சமாதானப் படுத்தும் போது, என் மனைவி சொன்னாள். அதுக்கெல்லாம் நாங்க அழவில்லை. நான் இப்படி இருக்கறதால அவர்களால் எங்கும் செல்ல முடிய வில்லையாம். இந்தியா வந்ததே வேஷ்ட்டுனு சொல்லி மீண்டும் ஓர் அழுகை.நம்ம என்ன செய்யறது, அவரவர் கவலை அவரவர்க்கு.
உள்ளே சென்ற மனைவி கையில் ஒரு லிஸ்டுடன் வந்தால். உங்கள் இரண்டு வார லீவு முடிய போகுது, அங்க இங்க சுத்தாம இதுல இருக்குறதா வாங்கி பேக் பண்ணுங்க. மறந்துறாம அமெரிக்க எடுத்துட்டு போங்கன்னு ஒரு அட்வைஸ்.
சரின்னு தலையை ஆட்டி விட்டு வீட்டுக்கு வந்தேன். என் அம்மா வேண்டுதலை நிறைவேத்தாம ஊருக்கு போக கூடாதுன்னுட்டு திருப்பதிக்கு டிக்கெட் புக் வேற பண்ணி வச்சுட்டாங்க. எனக்கோ முடி கொஞ்சம் கூட இல்லை. இதுல எங்க போய் மொட்டை போடறது. இறைவா இது எல்லாம் உன் திருவிளையாடல் தானே. அடுத்த தடவையாவது நல்ல சாப்பாடு கிடைக்க வழி செய்யப்பா என்று வேண்டி கொண்டே பேக் பண்ண ஆரம்பித்து விட்டேன்.
இன்று வரை உடம்பு சரி இல்லாததால் மீனா கூட கால் பண்ணி பேச கூட முடியவில்லை.
கொழுப்பு கொஞ்சம் ஓவர் தான்னு மீனாவோட புலம்பல் கேட்குது. அதுனால கற்பனையை இப்படியே ஓரம் கட்டி வச்சுட்டு ஊருக்கு கிளம்ப ஆயத்தமாயிட்டேன்.
- வேதாந்தி

Saturday, June 20, 2009

மீனாவுடன் மிக்சர் - 5 {வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா)

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.

-மீனா சங்கரன்

அப்பாக்கள் தினம்

அப்பாவின் பேச்சுக்கள் எல்லாம் அனத்தல் என்று தான் தெரியும் ஆனால் அது அவரது ஏக்கம் என்று யாருக்கும் புரியாது. இன்றைக்கு அப்பாக்கள் தினம். எல்லோருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னுடைய நண்பன் ஒருவன் அவர்களது பெற்றோர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்திருந்தான். அப்பாக்கள் தினத்தன்று உன் அப்பாவிற்கு எதாவது செய் என்று கூறினேன். அவனோ என்னை ஒரு வித்தியாசமாக பார்த்தான். அது எல்லாம் அமெரிக்கர்களுக்கு தான் பொருந்தும் நமக்கு ஒன்றும் இல்லை.
நானும் யோசித்தேன், நாம் அப்பாவிற்கு சிறப்பாக என்ன செய்தோம் என்று. பணம் அனுப்புவதைத தவிர அவருடைய அன்றாட தேவைகளைப் பற்றி நான் ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நண்பர்களே இந்த நாளில் ஒரு வாழ்த்து சொன்னால் கண்டிப்பாக அவரின் மனம் குளிரும். இதில் அமெரிக்கர்கள், இந்தியர்கள் என்று பேதம் பார்க்க வேண்டாம்.
இந்த உண்மை நிகழ்ச்சியை கேட்டால் நீங்கள் அப்பாவின் அனத்தலை புரிந்து கொள்வீர்கள்.
என்னுடைய மிக நெருங்கிய நண்பன் ஒருவன் நீண்ட நாள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். ஆனால் வந்த இரண்டாவது மாதமே மிக சோகமாக இருந்தான். காரணம் கேட்ட போது அவன் தந்தை தவறி விட்டார் என்று தெரிய வந்தது. அவனை ஆறுதல் தேற்ற எப்படி இறந்தார் என்று கேட்க அவன் குமுறி குமுறி அழுக ஆரம்பித்து விட்டான். இறுதியில் அவன் அமெரிக்கா வந்ததால் தான் இறந்து விட்டார் என்றான். எனக்கோ ஒன்றும் புரிய வில்லை. மகன் அமெரிக்கா வந்தால் அப்பாக்கள் சந்தோசம் தானே படுவார்கள். இவனோ இப்படி சொல்லுகிறான் என்று குழ்ப்பம்.
மீண்டும் அவனை விசாரித்தேன்.
நீண்ட நாள் முயற்சியில் ஒரு நாள் அவனுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்தது. அவனுக்கும் அவன் பெற்றோர்களுக்கும் மிக்க சந்தோசம். பையன் முதன் முதலாக வெளிநாடு செல்லுகிறான் என்று பெருமிதம். அவனுக்கும் அது தான் முதல் பயணம். வீட்டை விட்டு வெளியில் செல்லாத ஒருவனுக்கு விமானம் ஏறி வெளிநாடு செல்லப்போகிறான், அவன் அப்பாவிற்கு ஒரு வித பயம் கலந்த சந்தோசம். பயத்தை வெளிக்காட்டாமல் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மிக்க ஆர்வமாயிருந்தார். ஒரு வழியாக அந்த நாளும் வந்தது. அவர்களும் கிராமத்தை விட்டு சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள். அவனுடன் அவன் அப்பாவும் வழியனுப்ப சென்னை வந்தார். விமான நிலையத்திற்கு மிக முன்னதாகவே வந்து விட்டார்கள். டிக்கெட்டை செக் இன் பண்ணும் போது அதிகாரிகள் அன்று பயணம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். அவனுக்கோ தலை சுற்றியது. கரணம் விசாரித்தால் டிக்கெட் ரீ கன்பர்ம் பண்ண வில்லை என்று சொல்லி விட்டனர், மேலும் 48 மணி நேரம் கழித்து தான் பயணம் செய்ய முடியும் என்று சொல்லி விட்டனர்.
அவனும் அவனது தந்தையும் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. ஒரு வழியாக அதிகாரிகள் நண்பனுக்கு மட்டும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இவனும் அப்பாவை ஊருக்கு போக சொல்லி விட்டு இரு நாட்கள் கழித்து அமெரிக்கா வந்து சேர்ந்தான். வந்து ஒரு வாரத்தில் அவனுடைய அப்பாவிற்கு இதய வலி. காரணம் அவன் முதற் பயணம் தடை பட்டு விட்ட கவலையிலும், மகனை பிரிந்த கவலையிலும் இதய வலி வந்து விட்டது. அது நாளடைவில் அவரை நிரந்தரமாக பிரித்து விட்டது.
ஒரு வேளை நண்பன் இங்கு வராமல் இருந்தால் அவனது தந்தை உயிரோடு இருந்திருப்பாரோ?

வேதாந்தி

அரசியல்வாதி

தினசரி பத்திரிக்கையில் ஒரே பரபரப்பு. அன்றைய தலைப்பு செய்தி இது தான். ஒரு மந்திரியின் மகன் தமிழ்நாட்டிலே உள்ள ஒரு கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்கிறான். மந்திரியிடம் பேட்டி. பேட்டியில் மந்திரி தன மகனை ஒரு சாதரண ஏழை குடிமகனாக வளர்ப்பேன் என்று சொல்லிவிட்டார். கட்சியிலும் மற்றும் மக்கள் மத்தியில் மந்திரியின் செல்வாக்கு கூடியது. சில வருடங்கள் கழித்து அதே பரபரப்பு மகனை சாதரண ஒரு ஏழைப பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.
மக்கள் மத்தியில் அவர் ஒரு அவதார புருசனாக சித்தரிக்கப் பட்டார். அவர் மகனுக்கோ ஒன்றும் விளங்க வில்லை. என்ன ஆச்சு அப்பாவிற்கு. தன்னை ஏன் இப்படி நடத்துகிறார். ஒரு நாள் அவரிடம் தனியாக சென்று விசாரித்தான். உங்களின் விளம்பரத்திற்கு என்னை ஏன் பலிகடா ஆக்குகிறிர்கள்?
அவரோ பலமாக சிரித்து விட்டு கிறுக்கா உனக்கு ஒன்றும் புரியாது. ஒரு மந்திரியின் மகன் என்றால் அவன் ஒரு இளவரசனுக்கு சமம். அனால் நீயோ ஒரு அனாதைப் பயல். உன்னை நான் தத்து தான் எடுத்தேன். இப்பொழுது புரிகிறதா உன் பிறவிப் பயன். உன் பிறவியால் நான் பயன் பெற வேண்டும் என்று உன் தலைவிதி
அப்பொழுது தான் அவனுக்கு புரிந்தது அவர் அப்பா இல்லை ஒரு அரசியல்வாதி என்று.
வேதாந்தி