Friday, May 29, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 35

நட்சத்திர வாரம்.
தமிழ்மணத்தின் நட்சத்திர வாரத்தின் முக்கியமான மூன்று விஷயங்கள் ஒன்று நாகு தொடர்ந்து பல விஷயங்களை ஒரே வாரத்தில் எழுதியது, இரண்டு, மீனா சங்கரன் அவர்களின் எழுத்து அறிமுகம். சற்று சிரமப்பட்டால் அவர் சிறந்த நகைச்சுவை எழுத்தாளராக மாறி நம்மையெல்லாம் கலங்கடிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. மூன்று, நாராயணன் அவர்கள் தமிழில் பின்னூட்டமிட்டது. முதல் முதலாக அவர் என்னுடைய ஒரு பதிவிற்கு ஆங்கிலத்தில் பின்னூட்டமிட்டார், இப்போது அழகு தமிழில் பின்னூட்டமிட்டுள்ளார். அவர் எழுதியதும், நாகு எழுதியதும் பல எனக்கு புரியவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏதும் சொல்லப் போவதில்லை. நாராயண்ன் தான் உட்பட பலருக்கும் ‘தான் ஒரு சுப்புடு” என்ற எண்ணம் இருக்கிறது என்றது சற்று விவாதத்திற்கு ஏதுவானது.

நாகு, நான் மீனா அவர்களின் முதல் படைப்புக்கு பின்னூட்டமிட்டதும் என்னை வர வைத்ததற்காக மீனாவை பாராட்டியது கொஞ்சம் ஓவர். நான் யார் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தவறாமல் நமது வலைப்பூவை தினமும் தரிசித்து விடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நான் நமது வலைப்பூவில் எழுதாவிட்டாலும் முடிந்த வரை எனது வலைப்பூவில் அவ்வபோது சில பதிவுகளை பதிந்தே வந்திருக்கிறேன்.

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள்
இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து முடிவுகள் அமெரிக்க தேர்தல் முடிவைப் போலவே எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. 60000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்ட சிபுசோரன் போன்றோரும், ஊழல் என்றால் உடன் நினைவுக்கு வரும் லாலு போன்றோரை வைத்து ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களோடு வெற்றியைத் தந்து தனது தலையில் தானே சேற்றை வாறி இறைத்துக் கொண்டுள்ளது இந்திய ஜனநாயகம். இதில் சென்னையில் எந்த வேட்பாளருக்கு ஒட்டை பதிவிட்டாலும் அது தி.மு.க வேட்பாளர் பெயரில் லைட் அடிக்கிறது என்ற புகாரைத் தொடர்ந்து 18 இடங்களில் மறு வாக்கு பதிவு நடந்தது. இந்த ஓட்டுப் பதிவு எந்திரங்கள் ஊழல்களுக்கு அப்பாற் பட்டவை என்று சில வருடங்களுக்கு முன்பு தனது தலைமேல் அடித்து சத்தியம் செய்தார் மறைந்த எழுத்தாளர் சுஜாதா.

இந்த பதிவு வெளிவரும் நேரம் மு.க. அழகிரி, ராஜா, தயாநிதி மாறன், நெப்போலின (நடிகர்) போன்றோர் மத்திய அமைச்சர்களாகியிருப்பார்கள். இது தேசத்தின் அடுத்த துரதிஷ்டம். இந்த கூட்டத்திற்குத் தலைவர் மன்மோகன் சிங். இதைப் பார்க்கும் போது எனக்கு அலிபாபாவும் 40 திருடர்கள் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஒரு அலிபாபா அவனுக்கு எதிராக 40 திருடர்களா என்று வியந்தது அந்தக் காலம், இப்போது ஒரு பொது ஜனம் அவனுக்கு எதிராக 59 திருடர்கள் சர்வ சாதாரணமாக அமைச்சர்களாக வலம் வரப் போகிறார்கள்.

இது இப்படி இருக்க தோற்றதற்குக் காரணம் சரியான கூட்டணி இல்லாதது என்பதைப் பற்றி யோசிக்காமல், வருண் காந்தி பேசியதால் ஓட்டு போய் விட்டது, மோடி அடுத்த முறை பிரதமராக வருவார் என்று இப்போதே ஆருடம் சொன்னது என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜா.காவினர். அதற்கு பதில் இந்துத்வா மீது நம்பிக்கை அதீதமாக இருக்கிறதால் இனி பா.ஜா.கா வினர் அனைவரும் வேட்டி சட்டைக்கு பதில் கோமணம் மட்டும் கட்டிக் கொண்டு கையில் ஒரு கமண்டலம் எடுத்துக் கொண்டு, தலையில் ஒரு மொட்டை, கழுத்தில் ஒரு உருத்திராட்சக் கொட்டை, நெற்றியில் ஒரு பெரிய பட்டை என்று 5 வருடம் பார்லிமெண்ட்டை இடம் வலமாக அங்கப் ப்ரதட்சணம் செய்து வந்தால் ஓட்டு கிடைக்கலாம் என்று யோசிக்கலாம். ஒரு தலைவன் எப்போது தோற்கிறானோ அப்போதுதான் வெற்றியின் மீது அதீத பற்று கொள்கிறான் என்று படித்திருக்கிறேன். அது பொய் என்று பா.ஜா.கா வினர் காட்டியிருக்கின்றனர். 70 களில் இந்திரா காந்தி ஜனதா கட்சியிடம் தோற்ற பிறகு, படிப்படியாக அவர்களைப் பிரித்து சரண்சிங்கை ஆதரிப்பதாகச் சொல்லி ஜனதாவை உடைத்து அவரையும் கவிழ்த்து மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்தியாவை சாகும் வரையில் ஆண்டது இப்படி காரணம் தேடிப் பிடித்தல்ல. எப்போது ஒருவன் தனது தோல்வியை மற்றவர் மீது சுமத்த முற்படுகிறானோ அப்போதே அவன் மீண்டும் தோற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டான் என்று அர்த்தம். இதை புரிந்து கொண்டால் பா.ஜா.க சீக்கிரம் ஆட்சிக்கு வந்து விடலாம்.

ஜகஜ்ஜால சாமியார்.
இந்தியாவில் பகுத்தறிவு இல்லை அதனால் போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொண்டு இந்த சமுதாயம் கெட்டு குட்டிச் சுவராகியிருக்கிறது என்று இனி யாரும் சொல்ல முடியாது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமுதாயம் தனது அறிவை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது எனவே இவர்கள் ஒரு போலிச் சாமியாரிடம் (ஆசாமி) ஏமாந்து போயிருக்கிறார்கள் என்பது முதல் வெக்கக் கேடு, இந்த சாமியார் ஒரு டுபாக்கூர் என்பது இவருடைய சொற்பொழிவுகள் சிலவற்றை யூ.ட்யூப்பில் பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது இருந்தும் இவரால் பல அறிவாளிகளை ஏமாற்ற முடிந்திருக்கிறது என்பது இரண்டாவது வெக்கக்கேடு. இத்தனை செய்தும் இவரால் இன்னமும் அமெரிக்காவில் தலை மறைவாக இருக்க முடிகிறது என்பது மூன்றாவது வெக்கக்கேடு.

“என்னய்யா, சும்மா வழ வழன்னு இழுக்கறே, அந்தச் சாமியார் யாருன்னு சொல்லு” என்று நீங்கள் அடிக்க வருவதற்குள் சொல்லி விடுகிறேன். ஜார்ஜியா மாகாணத்தில் இந்துக் கோவில் ஒன்றை நிர்வகிக்கும் செல்வம் அண்ணாமலை தான் அந்த ஜகஜ்ஜால சாமியார்.
இவரது கோவிலைப் பற்றிய பத்திரிகை ‘சித்தி’ பிரதியை நமது ரிச்மண்ட் கோவிலில் இருந்து எடுத்து வந்து பார்த்த போது இவரைப் பற்றி தெரியவந்த்தது. அதில் இவர் ஒரு சித்தர் என்பது போல சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.
சமீபத்தில் ஜார்ஜியா மாகாணம் வழியாக ரிச்மண்ட் வரும் வாய்ப்பு வந்த போதே இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும், எப்படி நம்மை போல இருக்கும் ஒருவர் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக் கொள்கிறார் என்பதை நேரில் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன், அது முடியாமல் போகவே அந்த கோவிலைப் பற்றியும் அதன் நிர்வாகியான இவரைப் பற்றியும் வளைதளத்தில் சோதித்ததில் தன்னைத் தானே சித்தர் என்றும் மருத்துவர் என்றும் அழைத்துக்கொள்ளும் இவரைப் பற்றி பலப் பல மோசடி குற்றச்சாட்டுக்களும், பாலியல் குற்றச்சாட்டுக்களும் இணைய தளத்தில் குவிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது.

யூட்யூபில் இருக்கும் இவரது இந்த ஒளிப்பதிவை பார்த்தால் இவர் எப்படிப் பட்டவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பேசுகிற 10 நிமிடத்தில் இவர் சொல்ல வருவது ஒன்றும் இல்லை, இதற்கு எதற்காக இவர் இத்தனை பேசுகிறார் என்பது தெரியவில்லை.

இவர் மீது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு, தான் ஒரு சித்தர் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது, பலரது க்ரெடிட் கார்டுகளை அவர்கள் அனுமதியின்று உபயோகப் படுத்தியது, பணம், பணம் மற்றும் பணம், மேலும் பணம் என்று அலைந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் வேண்டுவோர் இந்த தொடர்பை க்ளிக்கினால் தெரிந்து கொள்ளலாம். http://www.soulcast.com/post/show/201873/"Doctor-Commander"-Selvam-Sitter-is-a-fraud,-felon,-womanizer,-child-molester
இவரைப் பற்றி அட்லாண்டா மாநகரத்தின் ஃபாக்ஸ் (FOX) தொலைக்காட்சியில் பல பகுதிகளாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவைகள்: பகுதி – 1 பகுதி – 2 பகுதி – 3 பகுதி – 4 பகுதி - 5
இணைய தளத்தில் இருக்கும் ஒளிப்பதிவை பார்க்கையில் இவர் கொஞ்சம் நடிகர் விஜயகாந்தின் சாயலில் இருக்கிறார். இவரிடம் ஏமாந்ததாக ஒரு சிலரே வெளிவந்து புகார் சொல்கின்றனர், மற்றவர்கள் ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. இந்தக் கோயிலில் இருக்கும் திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்கான மண்டபத்தில் யாரும் எதையும் கொண்டுவந்து உண்ணலாம். இதில் எதையும் என்பது குறிப்பிடத்தக்கது. புலால் உண்ணலாம், மது அருந்தலாம், புகை பிடிக்கலாம். இதை இவரே தொலைக்காட்சி நிருபரிடம் சொல்ல அதை ஒரு மறைவான காமிரா மூலம் பதிந்திருக்கிறார்கள்.
சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் பெரியோர். இவர் செய்யும் அத்தனை செயல்களும், ஒரு சிவன் கோவிலில் இருந்து என்பது பெரிய வெக்கக்கேடான விஷயம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

Wednesday, May 27, 2009

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்! (மூன்றாவது பாகம்)

காட்சி - 3
உணவு இடைவேளைக்கு பின் தர்க்கம் தொடர்கிறது
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, ஆஸ்தான புலவரின் மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லி தர்க்கத்தை தொடர தாங்கள் தயாரா?

வெளிநாட்டு புலவரே: ஆமாம் மன்னா.

எலியூர் அரசன்: ஆஸ்தான புலவரே மீண்டும் ஒரு முறை மூன்றாவது கேள்வியை கேளுங்கள்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா. புலவரே, சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: விளம்பரங்களில் நடித்து பற்பல சாமான் விற்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஸ்தான புலவர்: தவறு. அவர்கள் அதற்கு முன் பெரிய திரையில் முன்னிலை கதாநாயகிகளாக நடித்து திருமணமான அடுத்த நாளிலிருந்து அழகையும் கவர்ச்சியையும் இழந்ததாக முத்திரை குத்தப்பட்டு அக்கா, பெரியம்மா, சிறிய தாயார் போன்ற பாத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட சோகத்தில் நொடிந்து போய் நடித்து கொண்டிருந்தார்கள்.

எலியூர் அரசன்: சபாஷ்! சபாஷ்!

ஆஸ்தான புலவர்: நன்றி அரசே! இதோ எனது அடுத்த கேள்வி. ஒரு மெகா தொடரை இன்று பார்த்த பின்பு ஒரு வருடம் சென்ற பின்பு மறுபடி பார்த்தால் கதையில் மாற்றம் இருக்குமா இருக்காதா?

வெளிநாட்டு புலவர்: அது எப்படி ஒரு வருடத்தில் மாற்றம் இல்லாமல் போகும்? நிச்சயம் ஒரு வருடத்தில் பல சம்பவங்கள் முடிந்திருக்கும்.

ஆஸ்தான புலவர்: அது தான் இல்லை. வாரத்தில் ஒரு முறை அரைமணி நேரம் வரும் தொடரில் இருபத்தெட்டு நிமிடம் விளம்பரங்கள் போட்டு இரண்டு நிமிடம் மட்டுமே தொடர் வருவதால் ஒரு வருடத்தில் கதை நகர சிறிதும் வாய்ப்பில்லை.

இதோ எனது கடைசி கேள்வி புலவரே. கொலைக் காட்சி போன்ற ஒரு முக்கியமான காட்சியில் வில்லன் கத்தியை உயர்த்தி பிடித்து குத்துவதற்கு முன்பு அதிர்ச்சி தருவது போல பின்னணி இசை வரும். அப்பொழுது என்ன நடக்கும்?

வெளிநாட்டு புலவர்: இதற்கு விடை எனக்கு தெரியாது புலவரே. உங்கள் புலமைக்கு நான் தலை வணங்கி இந்த தர்க்கத்தை நீங்களே வென்றீர் என ஒத்துக் கொள்கிறேன். உங்களது கடைசி கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள் ஐயா.

ஆஸ்தான புலவர்: இதோ அதன் பதில் புலவரே. ஒன்றுமே நடக்காது. மறுபடி அடுத்த வாரம் தொடரும் என்று கூறி நேயர்களை நோகடிப்பார்கள். அவ்வளவு தான்.

வெளிநாட்டு புலவர்: நான் தோற்று விட்டேன் மன்னா. உங்கள் நாட்டு புலவரின் அறிவாற்றலின் முன்பு நான் தலை குனிகிறேன் அரசே. இனி நான் எலியூர் பக்கம் எந்த ஒரு தர்க்கத்திற்கும் வர மாட்டேன் என்று கூறி விடை பெறுகிறேன்.

எலியூர் அரசன்: சென்று வாரும் புலவரே. சின்னத் திரையை கரைத்து குடித்திருக்கும் எங்கள் புலவரிடம் தோற்றது உமக்கு இழிவு அல்ல. பெருமை தான். ஆஸ்தான புலவரே, நன்று செய்தீர், இந்நாட்டின் பெருமையை உயர்த்தினீர். உங்களின் சின்னத் திரை மெகா தொடர்களின் பண்டிதத்தை பாராட்டி 'மெகா புலவர்' என்று பட்டம் அளித்து இந்த பத்து பொற்காசுகளை சமானமாக அளிக்கிறேன்.

ஆஸ்தான புலவர்: கொடைவள்ளல் அழுமூஞ்சிவர்மா! உங்கள் அல்பத்தனத்துக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கேன். வாழ்க எலியூர் மன்னன்! வளர்க அவன் புகழ்!

(முடிவுற்றது)
---------------------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Tuesday, May 26, 2009

நட்சத்திர வாரத்தின் சாதனை

தமிழ் மணத்தில் நட்சத்திர வாரம் என்பது ஒரு மிகப் பெரிய கெளரவம் அதை ஒரு சாதாரண விஷயம் போல அசத்தி இருக்கிற நாகுவிற்கும், ஒத்துழைத்த சதங்கா, மீனா சங்கரன் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாகுவின் இரண்டாவது மலையேறுதலுக்கு முன்பு அவரிடம் கூகுள் சாட் மூலம் பேசிக்கொண்டிருந்தேன் அவரோடு பகிர்ந்து கொண்ட முக்கியமான விஷயம் தமிழ் மணத்தின் இந்த கெளரவமும் அதை மிகச் சரியாக பயன் படுத்திக் கொண்டதும்.

இனி வாரம் ஒரு பதிவு நமது வளைப்பூவில் வெளியாக முயல்வோம். எனக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால் அதிகம் எழுத முடிவதில்லை இது இன்றைய கால கட்டத்தில் தேவையான ஒன்று என்று நினைக்கிறேன். இருந்தாலும், எழுதுவதை நிறுத்தாமல் எழுதி முடிக்கவேண்டிய மர்மத்தொடரிலிருந்து, மர்ம நாடகம், சமீபத்தில் எனது நண்பர் பெரியபுராண கதைகளை எனது பாணியில்(!) எழுதும்படி எனக்கு கொடுத்த வேலைவரை உள்ள அனைத்தையும் விரைவில் செய்து முடிக்க முயலுகிறேன்.

மீனா: உங்கள் பாணி மிக அருமை. உங்களின் இந்தியப் பயணத்தை ஒரு நகைச்சுவை கட்டுரையாக எழுதினால் அருமையாக இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

என்னடா இது உடுப்பிக்கு வந்த சோதனை?

நாமதான் உடுப்பி ரெஸ்டாரெண்டுன்னு அடிச்சிக்கனும். உடுப்பில மக்கள் என்ன சாப்பிடறாங்க தெரியுமா? கூகுள்ல உடுப்பி ரெஸ்டாரெண்டு மெனுன்னு தேடினா என்ன வந்து நிக்குது பாருங்க...

விகடன் தளத்தில் முதல் பக்கத்தில்...

கீழே இருக்கும் படத்து மேலே கிளிக்கி பெரிதான படத்தில் தேடுங்கள். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் ஏன் இதை இங்கே போட்டிருக்கிறேன் என்று?




பெண்கள் படம் எல்லாம் தாண்டி வலது பக்கம் கீழே - சதங்காவின் கதை - விகடன்.காமில் வந்திருக்கிறது. முதல் பக்கத்திலே சுட்டி வேறு.
வாழ்த்துக்கள் சதங்கா.

ஆமாம் - என்ன மாதிரி ஆட்கள் எழுதுவதற்கு யூத்புல் நிகர் வேறு எதாவது தளம் இருக்கா விகடனில்? :-)

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்! (இரண்டாம் பாகம்)

காட்சி - 2
புலவர்களின் மோதல்
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

பல்லியூர் புலவர்: மன்னாதி மன்னா, பல்லியூர் நாட்டு மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, வருக வருக...இன்று எங்கள் ஆஸ்தான புலவர் உங்கள் பண்டிதத்தை சோதனை செய்வார். ஆஸ்தான புலவரே, தர்க்கத்தை துவக்கலாம்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா.

புலவரே, இதோ உங்களுடைய முதல் கேள்வி. சின்னத் திரையில் வரும் மெகா சீரியலில் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளுக்கு இன்முகத்துடன் காப்பி பானம் கொடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அவருக்கு மருமகளிடம் அபரிதமான அன்பென்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: தவறு. பானத்தில் விஷம் கலந்து கொடுத்து "சென்று வா மகளே" என்று சொல்கிறார் என்று அர்த்தம். இதோ உங்களுடைய அடுத்த கேள்வி. தமிழ் மெகா சீரியலில் கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும் ஒரு பெரியவர் குனிந்த தலையுடன் அழுகையில் உடம்பு குலுங்க ஒரு துண்டால் வாயை மூடி கொண்டு ஒரு வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அந்த வீட்டில் அவருடைய உறவினர் ஒருவர் தவறி விட்டார் என்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: இல்லை. அவருடைய மகள் புகுந்த வீட்டில் வேலைக்காரியாக உழைப்பதை கண்டு ரத்த கண்ணீர் பெருகி மகளின் கணவரையும், மாமியாரையும் "இது நியாயமா?" என்று கேள்வி கேட்டு அவர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்புகிறார் என்று அர்த்தம்.

இதோ உங்களுடைய மூன்றாவது கேள்வி. சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: இந்தக் கேள்வி சற்று கடினமாக உள்ளது. எனக்கு சிறிது நேர அவகாசம் வேண்டும் புலவரே.

எலியூர் அரசன்: ஒரு மணி நேர உணவு இடைவேளைக்கு பின் தர்க்கத்தை மறுபடியும் தொடரலாம்.

புலவர்கள்: அப்படியே ஆகட்டும் மன்னா.

ராஜ சபையை விட்டு அனைவரும் வெளியேறுகிறார்கள்.

(சீக்கிரமே தொடரும்)
-------------------------------------------------------------------------------------

-மீனா சங்கரன்

Monday, May 25, 2009

படம் பாரு கடி கேளு - 28


சிலை 1: இந்த கலைகாட்சியில் காலையிலிருந்து நின்று காலெல்லாம் ஒரே வலி. ஒரு 5 நிமிடம் உட்காருவோம்.
சிலை 2: அது தான் முடியாது. ஒரு குடாக்கு பின்னாலே நைசா வந்து பாக்கிறான். நாம நிக்க வேண்டிய நேரம்தான்.

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்!

காட்சி - 1
எலியூர் அரண்மனை

"யாரங்கே?" இடி போல் முழங்கியது எலியூர் அரசனின் குரல். இரு காவலாளிகள் எங்கிருந்தோ நொடியில் வந்து வணங்கினர்.

"மன்னா, தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்."

"உடனே சென்று ஆஸ்தான புலவரை அரண்மனைக்கு அழைத்து வரவும். இரண்டு நாட்களாக அவர் சபைக்கு வரவில்லை. இன்று பல்லியூரில் இருந்து வந்த புலவரை தர்க்கத்தில் நான்கு கேள்விகள் கேட்க நம் சபையில் ஒருவரும் இல்லை. எலியூருக்கு எத்தனை பெரிய அவமானம்?" கோபத்தில் அரசனின் முடுக்கிய மீசை துடித்தது.

விரைந்து சென்ற காவலாளிகள் சில நிமிடங்களில் புலவருடன் திரும்பினர். அழுது வீங்கி நிராசையுற்ற கண்களுடன் தன் முன்னே நின்ற புலவரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் மன்னன்.

"புலவரே, என் நாட்டின் குடிமகனின் கண்களில் கண்ணீரா? ஐயகோ, நான் என் கடமையை செய்ய தவறியவன் ஆனேனே. என்ன குறை உங்களுக்கு? என்னிடம் சொல்லுங்கள்."

"சின்னத்திரையில் ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிரும் மெகா சீரியல் இன்றுடன் முடிவடைகிறது மன்னா. ஐந்து வருடங்களாக என் குடும்பத்தின் அங்கமாகவே ஆகி விட்ட சின்னத்திரை நடிகர்களை இனி பார்க்கவே முடியாதே என்ற வருத்தத்தில் அழுது அழுது எனக்கு ஜன்னி கண்டு விட்டது. அதனால் தான் என்னால் சபைக்கு வர இயலவில்லை அரசே."

"என்னது, சின்னத் திரையில் வரும் மெகா சீரியல் நடிகர்களிடம் உங்களுக்கு அவ்வளவு பிரியமா? ஆச்சர்யமாக உள்ளதே! அதன் காரணத்தை சற்றே விளக்கமாக சொல்லுங்கள் புலவரே."

"எலியூர் அரசே, தினமும் சபை முடிந்து வீடு திரும்பினால் எனக்காக மெகா சீரியல் குடும்பங்கள் காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரங்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது மன்னா. இவைகளின் கதாநாயகிகள் மாமியாரிடம் உதைப்பட்டு, கணவனிடம் அடிபட்டு, பிறந்த வீட்டார் முன் அவமானப்பட்டு, தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டு, கொலை சூழ்ச்சியில் அகப்பட்டு........அப்பப்பா...அவர்கள் படும் பாட்டை பார்த்து எத்தனை நாட்கள் நான் கண்ணீர் விட்டுருப்பேன். அரசே.....உங்கள் கண்களில் கண்ணீரா?"

"புலவரே...போதும் போதும். இனி சொல்லாதீர்கள். உங்கள் மெகா சீரியலில் நல்லது எதுவுமே நடக்காதா?"

"மன்னா....எலியூரில் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்...மெகா சீரியலில் நல்லதாக எதுவும் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை."

"புலவரே, எனக்கு ஒரு நல்ல யோசனை. நாளை பல்லியூர் புலவர் சபைக்கு வரும் போது நீர் இந்த மெகா சீரியல் பற்றி நாலு கேள்வி அவரைக் கேளுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே."

"அப்படியே செய்யலாம் மன்னா. நாளைக் காலையில் சபையில் பல்லியூர் புலவரை சந்திக்க தயாராக வருகிறேன்."

காட்சி - 2
புலவர்களின் மோதல் (சீக்கிரமே தொடரும்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க, இதுவே ஒரு மெகா சீரியல் மாதிரி இழுக்குதேன்னு பாக்கறீங்களா? இன்றைய சம்பவங்களை வரலாற்று நாட்களில் புகுத்தி பார்க்க ஆசைப்பட்டேன். அதன் விளைவு தான் இது. சீரியல் மாதிரி இழுக்காமல் சீக்கிரமே முடிக்க முயற்சி செய்கிறேன்.

-மீனா சங்கரன்

Sunday, May 24, 2009

தமிழ் மணத்துக்கு நன்றி

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுத்ததற்கு தமிழ்மண நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி. தொடர்ந்து எழுத எனக்கு மிகவும் ஊக்கமளித்தமைக்கும் நன்றி. உங்கள் புண்ணியத்தால் ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சில பதிவுகளை எழுதி முடித்தேன். வருகை தந்த வாசகர்களுக்கும் தொடர்ந்து எங்கள் சங்கப் பதிவுகளை படித்து எங்களுக்கு உற்சாகமூட்டிவரும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கம்.

தமிழ் மணத்து இந்த செயலால் எனது தலை இந்த வாரம் கொஞ்சம் பெருத்துப் போனதென்னவோ நிஜம். இரண்டு நாட்கள் முன்னால் அங்காடிக்குப் போயிருந்த போது தமிழ் பேசும் ஒரு தம்பதியினரைப் பார்த்தேன். முன்பின் தெரியாத அவர்களிடம் போய் இந்த வாரம் தமிழ்மணத்து நட்சத்திரம் நாந்தான் தெரியுமா என்றேன். மனைவி கணவனின் சட்டையை இழுத்து - எங்களுக்கு இந்த பிசினெஸ் கிசினெஸ் எல்லாம் பிடிக்காதுன்னு சொல்லிட்டு வாங்க என்றாள்.

என்னடா இது தமிழ்மணத்துக்கு வந்த சோதனை?

இன்னொரு மலை ஏறினோமே....

இன்று காலை எழுந்தவுடன் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். தலைவர் முரளியின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. சரி செய்ய ஒன்றுமில்லையென்றால் அவருக்காவது இன்னும் கொஞ்சம் பூஜை நடக்கவைக்கலாமென்று குடும்பத்தோடு கிளம்பிவிட்டேன் எங்களுடைய நீலத் தொடர்ச்சி மலைகளுக்கு. எங்கள் ப்ளூ ரிட்ஜ் மலைத்தொடர் மிகவும் அழகானது. வசந்தமாகட்டும், வெயில்காலமாகட்டும், இலையுதிர்காலமாகட்டும் - எல்லாக் காலங்களிலும் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இடம் இது.

இன்றைய குறி ஹம்ப் பேக் ராக்ஸ் சிகரம் - Humpback Rocks! நடப்பது நிறைய இல்லாவிட்டாலும் சற்று கடினமான ஏற்றமென்றும் மேலிருந்து காட்சி ரொம்ப அழகானதென்றும் கேள்விப்பட்டிருந்தேன். 'கடினமான ஏற்ற' விஷயம் மனைவியிடம் சொல்ல 'மறந்து'விட்டு கிளம்பியாயிற்று. ஹம்ப்பேக் ராக் நிறுத்தத்தை அடைந்த போது மழை வருகிறமாதிரி இருந்தது. கொண்டு போயிருந்த சாப்பாட்டு சமாச்சாரங்களை கொஞ்சம் கவனித்துவிட்டு அங்கிருக்கும் பண்ணை நிலத்து வழியே நடந்தோம். அந்தக் காலத்தில் வர்ஜினியா கடல்கரைப்பக்கம், நடுப்பகுதியில் மட்டும் மக்கள் குடியேறினார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேற்குப்பகுதியில் குடியேற்றம் நடந்தது. அப்படி குடியேற்றத்தை ஊக்குவிக்க நிறைய நிலமெல்லாம் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பண்ணையை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

பண்ணையில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்கிறார் இவர்.


அந்தக் காலத்து பண்ணைவீடு.

உள்ளே நுழைந்து பார்த்தோம். அட நம்ம ஊர் கை ராட்டினம்.

இவர்கள் எதற்கு பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காலத்து உடையணிந்த இருவர் வீட்டில் வேலை செய்வது போல பாவ்லா காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நெருப்புமூலைக்கு மேலே பார்த்தால்....

சின்ன வயசில் நான் தொலைத்த சிலேட்டு! பின்னாடி ஒரு கட்டைத் துப்பாக்கி! வீட்டுப் பரணில் ஏழு குழந்தைகள் தூங்கும் இடமாம். பையன்களை மட்டும் எட்டிப் பார்க்க சொல்லிவிட்டு ஜகா வாங்கினோம். வெளியே வழியில் அந்த காலத்து ஸ்டோர் ரூம். பக்கத்தில் அந்தக் காலத்து ஃப்ரிட்ஜ்!

இந்த அறையின் கீழே ஒரு ஓடை ஓடுகிறது. அது இந்த அறையைக் குளுமையாக வைத்திருக்குமாம். அதுதான் ஃப்ரிட்ஜ்.

அப்படியே பண்ணையிலிருந்து ரோட்டைத் தாண்டினால் ஹம்ப்பேக் ராக் மலைக்கான பாதை ஆரம்பித்தது. மொத்தம் ஒரு மைல்தான் என்றாலும், செங்குத்தாக ஆரம்பிக்கிறது ஏற்றம். கொஞ்ச தூரம் ராஜபாட்டை மாதிரி கற்கள் கொட்டிய பாதை. பிறகு கல்லும் பாறையும் காலுக்கு மெத்தை....

வழி நெடுக அதே கதைதான்...

இடையே மழை தூற ஆரம்பித்தது. நாம்தான் இந்த விஷயத்தில் அனுபவசாலிகளாயிற்றே. பையில் வைத்த பாஞ்சோவை எடுத்து மாட்டிக் கொண்டோம். மழை உடனே நின்று விட்டது. எதிரில் வந்தவர்கள் எல்லாம் எங்களைப் பார்த்து பயந்து விலகிப் போனார்கள். உடனே பாஞ்சோவைக் கழட்டிவிட்டோம். மேகமூட்டமாகவே இருந்ததால் மலையேற்றம் சூடில்லாமல் இதமாக இருந்தது. அவ்வப்போது திறந்த வானத்தில்...
நாமும் கொஞ்சம் பாலுமகேந்திரா ஆகிக் கொண்டோம்.
ஒரு வழியாக பாதைத் தவறாமல் உச்சியை அடைந்தோம்.

நிறையக் கூட்டம் மேலே. திருச்சி உச்சிப் பிளளையார் கோவில்தான் நினைவுக்கு வந்தது...
நாமும் பாறைகள் மீது ஏறி உட்கார்ந்தோம். அந்தப் பாறைகளைத் தவிர சுற்றும் பச்சைப் பசேல்தான்.


இதோ சுற்றிக் காண்பிக்கிறேன், நீங்களே பாருங்கள்.



கொஞ்ச நேரம் மலையுச்சியில் காற்று வாங்கிவிட்டு கீழே இறங்கினோம். செங்குத்தாக இறங்கும் பாதை சுலபமாக இருந்தாலும், நம் கால்களின் அதிர்ச்சி குறைப்பான்கள்(shock absorber) பலவீனமாக இருப்பதால் உருண்டோடுவதைத் தவிர்ப்பதற்காக கொஞ்சம் மெதுவாகவே வந்தோம்.

கீழே பார்த்தால் ஒரு பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு ஞாயிறு மாலையும் மூன்றிலிருந்து நாலு வரை கச்சேரியாம். எட்டுப் பட்டி நாட்டாமைகளும் நாற்காலி எல்லாம் கொண்டுவந்து உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



ஏற்கனவே களைத்திருந்ததால், இந்த புல்புல்தாரா வெல்லாம் நமக்கு வேண்டாம் என்று கிளம்பிவிட்டோம்.

படங்களை பெரிதாக பார்க்க, இங்கே செல்லவும்.