Thursday, January 14, 2010

இந்தியப் பயணம் - பகுதி - 2


என்னதான் வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் குரலைத் தொலைபேசியில் கேட்டாலும், சென்னையில் இறங்கி தாய் தந்தையரை நேரில் பார்க்கும் அந்த நேரம், அவர்கள் முகத்தில் வழியும் சந்தோஷம், வாஞ்சை எழுத்தில் வடிக்கமுடியாத ஒன்று.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பா அடித்த ஜோக் “சீக்கிரம் கதவை சாத்துடா கொசு வந்துடும்” அதை அவர் சொல்லி முடிக்கும் முன்பு எனக்கு முன்னால் ஒரு நூறு கொசு எல்லாம் பெரிய வண்டு சைசில் வீட்டிற்குள் இருந்தது. அவைகள் தங்கள் பாஷையில் “பெரிய கூட்டமா வந்துட்டாங்கப்பு, வாங்க வந்து ஒரு சாம்பிள் பார்க்கலாம்”னு பேசி வெச்ச மாதிரி சரமாதிரியாக கடிக்கத் துவங்க, நான் ஒரு ப்ரேக், குச்சுப்புடி, கராத்தே, களரி பயட் எல்லாம் கலந்து கட்டி ஆடத்துவங்க அப்பா சாவகாசமாக, “என்ன கொசு கடிக்குதா, இந்தா இதால அடி” என்று ஒரு ப்ளாஸ்டிக் டென்னிஸ் ராக்கெட்டைத் தந்தார், அதில் ஒரு பொத்தானை அழுத்தினால் விளக்கு ஒன்று எரிகிறது, இன்னொரு பொத்தானை அழுத்தியபடி விஷ்க் விஷ்க் என்று நம் முன்னால் சுற்றினால் ஒரு 20—30 கொசு அதில் மாட்டி பட பட என்று எரிந்து பொத் பொத் என்று விழுகிறது. அதைப் பார்த்ததும் என் பெரிய பெண் குஷியாகி “ஐ, அப்பா மை டர்ன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் அவளுடைய டென்னிஸ் திறமையைக் காட்டினாள். பிறகு அடிப்பதற்கு கொசு இல்லாமல், சிலந்தி, எறும்பு, இந்தப் பூச்சி அந்தப்பூச்சி என்று தேடித் தேடி அடிக்க ஆரம்பித்தாள். ஆமாம், இந்தக் கொசுவை ஒழிக்க ஏன் ஒரு வழியும் இல்லை என்று தெரியவில்லை. இந்தக் கொசு அழிக்கும் மட்டையை எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒன்று வாங்கி வந்திருக்கிறேன். கோடையில் வீட்டின் பின்புறம் டெக்கில் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார முடியாது கொய்ங் என்று ஒரு லட்சம் பூச்சிகள் வந்து தாக்குகின்றது இந்த முறை எனக்காச்சு அவைகளுக்காச்சு, பார்த்துவிடுவோம்.

குரோம்பேட்டை, இது நான் பிறந்து வளர்ந்த ஊர். மண்வாசனை, மர வாசனை என்று ஜல்லியடிக்காமல் சொன்னால் கொஞ்சம் அமைதியான ஊர், அகரம் நாராயணன் என்ற ஒரு ரௌடி எம்.ஜி.ஆர் காலத்தில் அட்டகாசம் செய்த ஒரு நிகழ்வு, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிதடிகளைத் தாண்டி பெரிய வெட்டுக் குத்து கொலை எதுவும் இல்லாத ஒரு அமைதிப் பூங்காவனம். “அப்பா! எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு, ஹும்.”

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த குரோம்பேட்டை முகம் மாறி செல்வ செழிப்பில் மின்னுகிறது. நான் வளர்ந்த எங்கள் தெருவில்மட்டும் 6-7 அடுக்குமாடி குடியிருப்புகள், அதில் ஒரு 10-15 பேரிடம் கார் இருக்கிறது. இதைத் தவிர, தெரு முழுவதும் ஒரு 10 ட்ராவல் கார்கள் 4 டூரிஸ்டர் வேன் என்று ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். குரோம்பேட்டை ஸ்டேஷன் ரோட் நிறையவே மாறி இருக்கிறது, இந்த மாற்றம் சென்னையின் பல பாகங்களிலும் பளிச்சிடுகிறது. ஆட்டோகாரர்கள் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்கிறது, அவர்கள் வைத்ததுதான் சட்டம், கேட்பதுதான் ரேட், இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். கொஞ்சம் காலை பரப்பி வைத்து நின்றால் பட்டென்று உங்கள் கால் பக்கம் போர்ட் வைத்து ஒரு ஆட்டோ ஷெட் போட்டு விடுவார்கள். மறக்காமல் அதில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் போட்டோ இருக்கும். ஆட்சி மாறினால் இருவரையும் அழித்துவிட்டு அம்மா படம் இருக்கும், நல்ல பொழப்புய்யா இது.

தனி வீடு வைத்து இருக்கும் அனைவர் வீட்டிலும் ஒரு அடி பம்ப் இருக்கிறது. கேட்டால், “பாலாறு கனெக்ஷன் இருக்கு இல்ல அது ஒரு தொட்டில வந்து பிறகு அதிலிருந்து வீட்டு மாடில இருக்கர பெரிய டாங்குக்கு மோட்டார் போட்டு ஏத்திடுவோம், வேணும்னா அடி பம்ப் வழியா டக்குன்னு பிடிச்சுடலாம்” இது என்ன லாஜிக் என்பது தெரியவில்லை.

சென்னையில் நிறைய மாதுக்கள் கார் ஓட்டுகிறார்கள். ஹூண்டாய்(5 லட்சம்), டாடா இண்டிகா(3-4 லட்சம்) தூள் பறக்கிறது, பலர் ஹொண்டா சிடி(10 லட்சம்) வைத்திருக்கிறார்கள் என்று அசால்ட்டாக சொல்கிறார்கள். டொயோட்டா காம்ரி 25 லட்சம், எனக்குத் தெரிந்த பல வங்கி மேளாளர்கள் வைத்திருக்கிறார்கள். அவ்வளவு சம்பளமா வங்கிகளில் தருகிறார்கள்? அமெரிக்காவில் இருக்கிறோம், கார், வீடு எல்லாம் இருக்கிறது என்றாலும், சென்னை போனால் ஒரு ஓட்டை சைக்கிள்கூட இல்லை என்பது சற்று கேவலமாகத்தான் இருக்கு.

ரெண்டு தெரு தாண்டி இருக்கும் கோயிலுக்கு போக 25 ரூ ஆட்டோ சார்ஜ் கேட்கிறார்கள். காரணம் பெட்ரோல் லிட்டர் 50 ரூபாய், வீட்டிலிருந்து கோவில் 500 அடிதூரம், ஒரு லிட்டர் பெட்ரோலில் 45 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கிறது ஆட்டோவில், பேசாமல் சென்னைக்கு போய் ஆட்டோ அல்லது கால் டாக்ஸியில் கார் ஓட்டினா நல்ல பைசா பார்க்கலாம். 5 மணி நேரம், 50 கி.மீக்கு 500ரூபாய் வாங்குகிறார்கள். போய் இறங்கிய 4-5 நாட்களுக்கு, பெரிய பருப்பு மாதிரி “ஏங்க ஏ.சி. போடுங்க” என்றால், மறுபேச்சு பேசாமல் போட்டு விடுகிறார்கள், இறங்கும்போது,

“சார் பில் 1200 ரூபாய்”

“எப்படிங்க”,

“என்ன சார் இப்படி கேக்கரீங்க, ஏ.சி. போட்டா டபுள் சார்ஜ் சார்”

“அது சரி, இந்தாங்க”

“...”

“இன்னும் என்ன”

“ட்ரைவர் பேட்டா சார்”

“ஏங்க கார் உங்க சொந்த கார்னு சொன்னீங்க”

“ஆமாம் சார், சொந்த வண்டியா இருந்தாலும் ட்ரைவர் வேலை பார்த்தால் ட்ரைவர் பேட்டா உண்டு சார், அதுதான் கம்பெனி ரூல்.”

“ஆமா உங்க ‘கம்பெனி’ ல எத்தனைபேர் வேலை செய்றாங்க”

“நான் ஒண்டிதாங்க”

“!!!!??”

தொடரும்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!