Saturday, June 04, 2022

கடிலக்கரையினிலே - பண்ருட்டி பலாச்சுளைகள் - 2

பண்ருட்டியில் எங்கள் வீட்டில் எப்போதும் நண்பர்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். பக்கத்து ஊர்களான கடலூர், விழுப்புரத்தில் கலைக்கல்லூரிகள் இருந்தன. தினமும் மாணவர்கள் ரயிலில் போவார்கள். விழுப்புரத்திலாவது கல்லூரி ரயில்நிலையத்துக்கு அருகில் இருந்தது. கடலூரில் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பேருந்தில் வேறு போகவேண்டும். இருந்தாலும் மாணவர்களுக்கு ரயில் சீசன் பாஸ் சலுகையில் கிடைப்பதால் அனைவரும் ரயிலில்தான் போவார்கள். பண்ருட்டியில் இருந்து தினமும் சிதம்பரத்தில் இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கு போன மாணவர்களும் உண்டு.


அண்ணன்கள் வீட்டில் இருக்கும்போது கடலூர் மாணவர்கள் காலையில் வீட்டுக்கு வந்துவிட்டு ரயிலடிக்குப் போவார்கள். அதில் ஒருவர்தான்…


ராஜா!


ராஜா என்கிற முருகன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அம்மா செல்லம் என்று நினைவு. என்னுடைய நினைவுகளில் தங்கியது இவரின் ஒரு வினோத பழக்கம். நடந்து வரும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும் கைவிரல்களை நீட்டி மடக்கிக் கொண்டே இருப்பார். நான் சிலநாள் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஏன் அப்படி செய்கிறார் என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். ஒரு நாள் அவரிடமே கேட்டு விட்டேன். என்ன செய்கிறீர்கள் விரல்களை? 


டைப் அடிக்கறேண்டா!


டைப்பா!!!???


ஆமாம்! அப்போதுதான் டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்ந்திருந்தார். எழுத்துக்கள் இடம் பழகும்வரை மனசுக்குள்ளே ஏதாவது  வார்த்தை சொல்லி அதை எப்படி டைப் செய்வது என்று பழகிக் கொள் என்று டைப்பிங் வாத்தியார் உபதேசம் செய்தாராம். இவர் அதற்கு ஒரு படி மேலே போய், நாமெல்லாம் சிறுவயதில் காற்றில் கிடார் வாசிப்போமே, அது மாதிரி காற்றில் டைப் அடித்துக் கொண்டிருந்தார். நடக்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது  காதிலோ கண்ணிலோ விழும் சொற்களை காற்றில் டைப் அடித்துக் கொண்டே இருப்பார். 


ராஜா என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது சங்கராபரணம். அதில் ஆண்டாளு என்ற சிறுமி திண்ணையில் ஒரு பாட்டு வாத்தியாரிடம் பாட்டு கற்றுக் கொள்ளும் காட்சி வரும். அந்த வாத்தியார் கர்நாடகமாக இன்னும் பாடிக் கொண்டிராமல் நவீனமாக பாடவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். அப்போது வீதியில் வரும் சங்கர சாஸ்திரி வாத்தியாரை திட்டிவிட்டுப் போவார். அந்த காட்சி ராஜாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. எப்போது வந்தாலும் சங்கராபரணம் கேஸட்டில் அந்த இடத்திற்கு தள்ளி கேட்போம். அதை கேட்பதைவிட அந்தக் காட்சியை ராஜா ரசிப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்பது போல் ஒரு பரவசத்தில் இருப்பார். சிரிப்பை அடக்க முயல்வார். அதுவும் அந்த "ராக்கெட்லு ஜாக்கெட்லு ஜெட்லு" வரும்போது அடக்கவே முடியாது. அப்படி சிரிப்பார்.  பிறகு வாத்தியார் "புரோச்சேவா ரெவருரா"வை பிரித்து மேயும்போதும் தாங்க முடியாமல் சிரிப்பார். அந்த காட்சி முடிந்தவுடன் கேஸட்டை நிறுத்தி விடுவோம். அடுத்த சில நிமிஷங்கள் ராஜா தெரிந்தவரை அந்த டயலாக் எல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார். தவறாமல் "ராக்கெட்லு ஜாக்கெட்லு" உண்டு. வீடே அதிரும்.


ராஜா சில தெலுங்கு ஜோக்குகள் சொல்வார். ஒரு தமிழன் ஆந்திராவில் ரயிலில் போய்க் கொண்டிருந்தானாம். ஒரு இடத்தில் ரயில் நின்றவுடன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவனிடம் தமிழில் "இது என்ன ஊர்" என்று கேட்டானாம். அவன் கேட்டது புரியாமல் "ஏமண்டி" என்றானாம். ஓஹோ அப்படியா, நன்றி! அடுத்த ஊர் வந்தவுடன், அதே கேள்வி. அவனும் "ஏமண்டி" என்று பதில். சரி அது மேல் ஏமண்டி, இது கீழ் ஏமண்டி போல இருக்கும் என்று அமைதியாகி விட்டான். அடுத்த ஊரில் அதே நடந்தது. தமிழனுக்கு வந்ததே கொலைவெறி. என்னடா நானும் பாக்கறேன், ஒவ்வொரு ஊரிலும் ஒரே பெயரை சொல்லி ஏமாத்தற, என்ன பாத்தா நக்கலா தெரியுதான்னு அடிக்கப் போனானாம். பதறிப் போன தெலுங்கன் கொட்டகா, கொட்டகா என்றானாம். ஓ - இந்த ஊர் கொட்டகாவா - ஒழுங்கா சொல்ல வேண்டியதுதானே என்று அமைதியானானாம்.


ராஜாவின் வீட்டருகில் ஒரு இளம் தம்பதி குடியிருந்தார்கள். அந்த தம்பதிகளின் சண்டை தெருவில் பிரசித்தம். ஒவ்வொரு முறை வரும்போதும் அன்றைய சண்டை குறித்து ராஜா கதை சொல்வார். அதில் ஒரு நாள் நினைவில் நிற்கிறது. அன்று சண்டை அதிகமாகி ஒரே களபரம். சாமான்கள் எல்லாம் உருண்டது. திடீரென கதவைத் திறந்து கணவன் எடுத்தார் ஓட்டம். யாரோ எதோ காரணம் சொல்லி உள்ளே போய் பார்த்தால். நிறைய தட்டு பாத்திரம் எல்லாம் இரைந்து கிடந்தன. அனைத்துக்கும் மேலே - சுவற்றில் டால்டாவோடு ஒட்டிக் கொண்டிருந்த கரண்டி! 


இப்போது பண்ருட்டி வாட்சப் குழுவிலும் ராஜா கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Wednesday, June 01, 2022

கார் புதுசு வாங்கலாமா பழசு பரவாயில்லையா - வள்ளுவர் என்ன சொல்றார்?

 உலகத்துல கார் வாங்க வள்ளுவர்ட்ட யோசனை கேட்கும் ஆளு நீதான்டா. அதும், நான் கார் வாங்குகிறேன், நீ குறளை வைத்து விளையாடுற, நடத்து.

அட சும்மா விளையாட்டுக்கு ஒரு புகழ்பெற்ற குறளை கார் வாங்கும் முடிவில் பொருத்திப் பார்த்தேன் என்றான் செல்வம்.

சரி, ஆரம்பிச்சுட்ட, சொல்லு கேட்போம்.

அந்த ஒரு குறளை மட்டும் விளக்கவா இல்லை "பல குறள் மன்னன்" என சில குறள் விளக்கங்களை இணைத்துச் சொல்லவா?

யப்பா, என் மூளை ஒரு நேரத்தில் ஒன்று என்றே புரிந்துகொள்ளும், நீ ஒரு குறள் மட்டும் சொல்லு இப்போதைக்கு.

"அப்படியே ஆகட்டும்" என்று ரொம்பவே விளையாட்டு மனநிலையில் இருந்தான் செல்வம்.

கார் வாங்க எவ்ளோ காசு வெச்சிருக்க?

ஏற்கனவே கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தேன், இப்போ அலுவலகத்தில் ஊக்கத் தொகை கொஞ்சம் கொடுத்தாங்க; எல்லாமா சேர்த்து கார் வாங்க ரெடி.

கேட்ட கேள்விக்கு முழுசான பதிலைக் காணோம். இருக்கட்டும்.
அடுத்த கேள்வி. என்ன கார் வாங்க யோசிச்சு வெச்சிருக்க?

அங்கதான் கொஞ்சம் இடிக்குது. Tesla வின் புது மாடல் மேல ஒரு கண்ணு. தெரிஞ்சவங்க சிலர் வாங்கிட்டு ஒரே அலப்பறை. எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா காசு கொஞ்சம் பத்தாது. அங்கே இங்கே புரட்டி சமாளிச்சுடலாம்னு நினைக்கிறேன். Tesla வின் புது மாடல்ல base version க்கு போதுமான அளவு தேத்திடுவேன். ஆசை நிறைவேறிடும். என்ன சொல்ற?

நான் என்ன சொல்றது, வள்ளுவர் சொல்கிறார் கேள்.
அதுக்கும் முன் இன்னொரு கேள்வி. ஒரு Fully loaded, 3 ஆண்டு பழைய வண்டி வாங்க உன் சேமிப்பு போதுமா?

தாராளமா போதும். மிச்சம் கூட இருக்கும். ஆனா புதுசு புதுசுதான்டா.

இல்லைங்கலை. இப்போ, வேற ஒரு சூழலுக்கு வள்ளுவர் எழுதிய குறளை இங்கே சொல்றேன், பொருத்திப் பார்த்துக்கோ.

காட்டில் மறைந்திருக்கும் முயலை வெற்றிகரமாக அம்பு எய்து வேட்டையாடுபவனாக இருப்பதைவிட, போர் யானையைக் கொல்ல வேல் வீசும் வீரனாக இருப்பது இனிது என்கிறார். யானை பிழைச்சுட்டா/தப்பிச்சுட்டா கூட பரவாயில்லை முயல் வேட்டைக்காரனாக இருப்பதைக் காட்டிலும் இதுவே இனிது என்கிறார்.

அதாவது, இருக்கிற காசில் புது மாடல் base version காருக்குச் சொந்தக்காரனாய் இருப்பதைவிட, எல்லா வசதிகளும் கொண்டிருக்கும் Fully loaded, 3 ஆண்டு வண்டியை வாங்குவது இனிது என்கிறேன் நான்.

யப்பா டேய்..
உன் விளக்கத்தை வள்ளுவர் கேட்டார்னா குபீர்ன்னு அதிர்ச்சி ஆகிடுவார்டா.

ஒன்னு சொல்றேன் கேளு. என் தமிழாசிரியர் சொல்லிக் கொடுத்த trick.
பொதுவாக மாணவர்கள் தவிர்க்கும் இலக்கண, இலக்கிய வகுப்புகளை எப்படிக் கையாள்வது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

ஏதாவது ஒரு ஆர்வம் மிக்க, தொடர்பற்ற தலைப்பில் பேசத் துவங்க வேண்டும். மாணவர்களின் கவனத்தை முழுசாகப் பெறும் போது, சொல்ல வந்த பாடத்தையும் உள்நுழைத்து பேசிட‌ வேண்டும். தேனில் மருந்தைக் குழைத்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதைப் போல.

தேன்+மருந்து கலவையை உன் வாயில் போட்டுட்டேன். இனி, காரும் வரும் குறளும் மறக்காது. என்சாய் மாடி, அடுத்த வாரம் வர்றேன் நேரமாச்சு என்றபடியே கிளம்பினான்.

----------

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

கான = கானகம் = காடு

வேறு எந்தச் சொல்லுக்கும் விளக்கம் தேவைப்படாத குறள்.

கானமுயல் = காட்டுமுயல் என்று சொல்லிவிட்டு, யானைக்கு எதும் சொல்லாமல் விடுகிறார். காட்டுயானை அல்ல, போர்க்களத்தில் உள்ள யானை என்று நம்மையே புரிந்து கொள்ள வைக்கிறார். குறள் இருக்கும் அதிகாரம் படைச்செருக்கு. அதனால் போர்க்களம், போர்யானை என்பன இயல்பான சிந்தனை.

எய்த அம்பு = முயலை நோக்கி எய்த அம்பு.
யானை பிழைத்த வேல் = யானையை நோக்கி எறிந்த வேல், ஆனால் யானை பிழைத்துவிட்டது. அப்படியெனில் முயல் பிழைக்கவில்லை என்ற செய்தியும் உள் அடக்கியிருக்கிறார்.

பெரிய முயற்சிகள் செய்பவராக இருப்பது பெருமை, சிறப்பு என்றுகூட சொல்லவில்லை. முழுமையாக வெற்றி கிட்டாவிட்டாலும், அப்படி இருப்பதே "இனிது" என்கிறார். இன்றைய பேச்சு வழக்கில், "அதான் பரவாயில்லை" என்பது போல.

ஐயனே, குறளை நவில் தோறும் வியந்து போகிறோம். வாழிய நின் புகழ்.

 

#குறளும்_பொருளும்

Sunday, May 01, 2022

பண்ருட்டி பலாச்சுளைகள் - 1

 

பண்ருட்டியில் எங்கள் வீட்டைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் எழுதியதில் இருந்து ஒரு யோசனை. நண்பர்களைப் பற்றி எழுதினால் என்ன? தேவதைகள் என்ற தலைப்பில் ஒரு ஶ்ரீரங்கத்துக்காரர் எழுதிவிட்டார். அங்கு கோவில்கள் அதிகம் என்பதால் இருக்கலாம். எனக்கு பண்ருட்டியில் பலா, முந்திரியைத் தாண்டி வேறு என்ன தோன்றப் போகிறது. "பண்ருட்டி பலாச்சுளைகள்" என்கிற தலைப்பில் பண்ருட்டி நண்பர்களைக் குறித்து தொடரப் போகிறேன்!


குலாம்!


இந்தப் பெயரைக் கேட்டாலே என் நண்பர்கள் அனைவர்கள் முகத்திலும் ஒரு புன்சிரிப்பாவது வராமல் இருக்காது. அந்த அளவுக்கு அனைவருக்கும் நண்பன், சிரிக்க வைப்பவன். எப்போதும் முகத்தில் சிரிப்புதான். வகுப்பின் கோமாளி! அவனை கோபமாகவோ, வருத்தமாகவோ பார்த்ததாக நினைவே இல்லை. 


எல்லா ஆசிரியர்களையும் வம்புக்கிழுப்பான். சட்டையின் மேல் பித்தான்கள் போட்டிருக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஒரு ஆசிரியர் பித்தான்களை திறந்து போட்டிருக்கும் மாணவர்களை அடித்து பித்தான்களை போடச் சொல்லுவார். அவரே இவனை அருகில் அழைத்து பித்தான்களை போட்டுவிட்டிருக்கிறார். ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்கள் தமிழ் பாடம் வராமல் ததிங்கணத்தோம் போடுவது சகஜம். ஆனால் இவன் ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியரிடம் ஏழாவது எட்டாவது வகுப்பிற்குமேல் தமிழ் பாடம் தேவையில்லை என்று ஒரு நாள் வாதம் செய்தான். எங்களுக்குத்தான் தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமே இனிமேல் எதற்கு என்று. ஆசிரியரும் ஏதேதோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் உனக்கு தமிழ் நன்றாகத் தெரியும்தானே. ஞமலி என்றால் என்ன என்று கேட்டார். இவன் தெரியாது சார், அப்படி என்றால் என்ன என்றான். நாய் என்றார். இவன் - நான் நாய் என்று சொல்லிவிட்டுப் போகிறேன், எதற்கு ஞமலி, கிமலி எல்லாம் என்றான். வகுப்பே அதிர்ந்தது. ஆசிரியருக்கு என்ன சொல்வதே என்று தெரியவில்லை.


ஒன்பதாவது படிக்கும்போது ஒரு நாள் ஆங்கில ஆசிரியரை ரொம்பவே சீண்டிவிட்டான். கோபம் வந்து வேப்ப மரத்தில் ஒரு குச்சியை ஒடித்து இவனை போட்டு விளாசி விட்டார். இவனுக்கு நீண்ட காது - புத்தர் காதன் என்று ஒரு பெயர்கூட உண்டு - அதை பிடித்து இழுத்து அடித்ததால், காதே கொஞ்சம் பிய்ந்தமாதிரி ரத்தம் வேறு. பையை எடுத்துக் கொண்டு உங்களை பாத்துக்கறேன் சார் என்று சவால்விட்டு கிளம்பி போய்விட்டான். ஆசிரியர் சினம் தணிந்து உட்கார்ந்தார். குலாம் என்ன பண்ணப் போகிறானோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார். பையன்கள் வேறு - சார், அவனுக்கு பனங்காட்டுத் தெருவில் நிறைய நண்பர்கள் உண்டு என்று அவர் பீதியை இன்னும் கொஞ்சம் கிளப்பிவிட்டார்கள். "வீரர்கள்" நிறைந்த தெரு, அவன் வீட்டருகில் இருக்கும் பனங்காட்டுத் தெரு. அவர் அமைதியாக பாடம் நடத்தத் தொடங்கினாலும், புத்தகத்தை பிடித்திருந்த கை நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்களெல்லாம் என்ன ஆகப் போகிறதோ என்று காத்திருந்தோம். மதிய உணவு இடைவேளைப் பிறகு அழகாக மாப்பிள்ளை மாதிரி முகம் கழுவி பவுடர் எல்லாம் போட்டுக்கொண்டு வந்தான். எங்கடா போனே என்று கேட்டோம். நான் வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போட்டு, மதியம் சாப்பிட்டு வந்தேன் என்று சிரித்தான். சும்மா உதார் விட்டிருக்கிறான்.  


பத்தாவது படிக்கும்போது தமிழ் ஆசிரியரை படாத பாடு படுத்தினான். இவனை ஏதோ கேள்வி கேட்டு இவன் பதில் தப்பாகச் சொன்னான். இவன் அருகில் வரலாம் என்று இருக்கையில் இருந்து ஆசிரியர் எழுந்தார். கிட்ட வராதீங்க சார், வந்தா அடிப்பீங்க என்றான். இல்லடா, நான் வந்து நீசொன்னதை திருத்தி சொல்லித் தறேன் என்றார். அதற்கு குலாமின் பதில்: அங்கிருந்தே திருத்துங்க சார்! மேஜை மேல் ஏறி தாவித் தாவி அடிக்கு தப்புவதெல்லாம் சகஜமாக நடக்கும். பத்தாவது பரீட்சையில் எனக்கு பக்கத்தில் உட்கார்ந்தான். ஒவ்வொரு நாளும் வரும் கண்காணிப்பாளரிடம் எங்களுக்கு இந்தப் பாடம் நடத்த ஆசிரியரே இல்லை, அதனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று தயங்காமல் ரீல் விடுவான். கொஞ்சம் சம்மதம் மாதிரி தெரிந்த அன்றெல்லாம் அவ்வளவுதான் - அப்படியே என் பதில்களை ஜெராக்ஸ் எடுத்தான். ஒரே சிரிப்பும், கும்மாளமும். பத்தாவது பரீட்சை மாதிரியே இருந்ததில்லை இவன் செய்த கலாட்டாவினால்.


பள்ளியில் இவ்வளவு வால்தனம் பண்ணுகிறவனை அவர்கள் கடையில் பார்த்தால் நம்பவே முடியாது. அண்ணனுக்கு பயந்தவன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் அப்பாவி போல் பவ்யமாக உட்கார்ந்திருப்பான். மாலையில் மளிகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப் போவான். எதாவது ஒரு சினிமாவில் நுழைந்து கொஞ்சம் நேரம் படம் பார்ப்பான். "அலைகள் ஓய்வதில்லை" ஓடும்போது இது தினம் நடந்தது.  எங்கள் வீட்டுப் பக்கம் வசூலிக்க வந்தால் எங்கள் வீட்டுக்கு வருவான். என்னவோ என் ஒரு அண்ணன் மேல் அதீத பாசம். அவனை அடித்துக் கொண்டோ கிள்ளிக்கொண்டேதான் இருப்பான். அண்ணனும் பொறுத்துக் கொள்வான். இவனை கோபித்து அடிக்கக்கூட மனம் வராது. செய்வதை எல்லாம் சிரித்துக் கொண்டே செய்பவன்.  இவன் அடிக்கும் லூட்டியைப் பார்த்து ரொம்பவே அதிர்பவர் எங்கள் அப்பாதான். ஏனென்றால் அவனை அவர்கள் கடையில் எப்படி இருப்பான் என்று பார்த்தவர். 


இவன் பயன்படுத்தும் சில பல சொற்றொடர்கள் என் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம். இன்றும் பள்ளி நண்பர்களுடன் பேசினால், குலாமின் சொற்கள் இல்லாமல் பேச்சு முடியாது.


அப்படி இருந்த குலாம் எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி கொடுத்தான். "குலாம் போயிட்டாண்டா" என்று சிங்கப்பூரில் இருந்து அழைத்து  ரஃபி அழுதுகொண்டே சொன்னதை என்றும் மறக்க முடியாது. 

Saturday, February 26, 2022

கமா, சோம்பல் மற்றும் பக்கோடா

 

வாடா செல்வம், நேத்திக்கே உங்கிட்ட பேசணும்னு நெனச்சேன், முடியாம போய்டுச்சு. உட்கார், ஒரு காபி போட்டுட்டு வர்றேன் குடிச்சுட்டே பேசலாம்.

வேலையெல்லாம் எப்படி போகுது?

ம்.. கொஞ்சம் கடியாத்தான் போகுது. எதையாவது உடைச்சிடறானுக; அப்புறம் நாம விடிய விடிய உட்காந்து சரிசெய்ய வேண்டி இருக்கு. ப்ச்., அதுக்குத்தானே சம்பளம் குடுக்கறாங்கன்னு ஒன்னும் பேசறதில்லை. புகார் படிக்க ஆரம்பிக்கும் போதே முற்றுப்புள்ளி வெச்சிடறது. எதுக்கு வம்பு.

காபி நல்லாயிருக்கு.

அடுத்த முறை வரும்போது கொஞ்சம் வெங்காய பக்கோடா போடு; இல்லாட்டி நான் போட்டு எடுத்து வர்றேன். வெறும் காபி குடிக்கறத்துக்கு அது இன்னும் நல்லாயிருக்கும்.

உனக்கு இல்லாமலா? கண்டிப்பா. இன்னிக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு, அடுத்த முறை போண்டா போட்டு வைக்கிறேன்.
அது கிடக்கட்டும், முற்றுப்புள்ளின்னதும் நினைவுக்கு வருது, தமிழில் நிறுத்தக்குறிகள் எனும் punctuations போன நூற்றாண்டு வரை இல்லைன்னு சொன்னாயாமே? உண்மையாவாடா?

ஆமா.
அச்சு இயந்திரங்கள் வந்து, நாம புத்தகங்கள் அச்சிடும் போது கூட நிறுத்தக் குறிகள் தமிழில் புழக்கத்தில் கிடையாது. ஐரோப்பிய மொழிகள் அறிமுகம் ஆன போது, நமக்கு punctuations புதுசா இருந்திருக்கு. அவர்களுக்கே அது அப்போது ஒரு மாதிரி புதுசுதான். நாமளும் சும்மா இருக்காம உரைநடையில் பயன்படுத்திப் பார்த்த போது, அட இதுகூட வசதியாத்தானே இருக்குன்னு கபால்ன்னு பிடிச்சிகிட்டோம்.

ஆங்கில punctuation பற்றி ஒரு interesting ஆன trivia சொல்லவா?

ம், சொல்லு கேட்போம்.

வரிசையா பட்டியல் இடும்போது நடுவில் கமா போடறோம் இல்லையா? கடைசிச் சொல்லுக்கு முன் and என்று எழுதி கடைசிப் பட்டியல் பொருளை எழுதி முடிச்சிடறோம்.
அதாவது,
Fri, Sat and Sun. என்று.

கொஞ்ச காலம் முன் வரை கூட andக்கு முன் ஒரு கமா இருந்திருக்கிறது. Fri, Sat, and Sun. என்று.
அதான் and இருக்கே வெட்டியா எதுக்கு கமா - அச்சு செலவை மிச்சம் பிடிக்கலாம் என்று தூக்கிட்டானுக.

ஓ வாவ்!

சரி சோம்பேறி. நான் கிளம்பறேன்.

டேய் இருடா. சோம்பல் போய்டுச்சு. பக்கோடா போட்டுத் தர்றேன் சாப்டுகிட்டே இன்னும் கொஞ்ம் நேரம் பேசிட்டு இருக்கலாம்.

சரி, செய். சோம்பல் இல்லா மன்னவனுக்கு அவன் ஆட்கள் அளந்த நிலமெல்லாம் சொந்தமாகும்னு வள்ளுவரே சொல்லியிருக்கார். சோம்பலை வென்ற உன்னால் கொஞ்சம் வெங்காய பக்கோடா சொந்தமாகாதா என்ன. நீ ஆரம்பி, நான் முடிக்கிறேன் - சாப்பிட்டு.

இப்போ சொன்னியே அந்தக் குறளையும் அதற்கான விளக்கத்தையும் இந்த வெங்காயத்தை வெட்டிட்டே சொல்லு, நான் மாவு கரைக்கிறேன்.

மடியிலா மன்னவன் எய்தும் அடி, அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

அதாவது,
சோம்பல் இல்லாத மன்னவன் அடையும் எல்லை என்பது, அவன் ஆட்கள் - surveyors-ன்னு வெச்சுக்கோயேன்; அளந்த எல்லா நிலமும் உள் அடங்கியது என்கிறார்.

இப்போதைக்கு நீ சுடும் பக்கோடாவின் கலோரிகளை அளக்கிறேன், அளவாக உண்கிறேன்.

பக்கோடாவும் நல்லாயிருக்கு. ஒரு டப்பால 4 போட்டுக் கொடு அப்புறமா கொஞ்சம் சாப்பிடறேன்.

நேரமாச்சு, கிளம்பறேன். அடுத்த வாரம் வர்றேன். Bye.

---

மடி = சோம்பல்
மடியிலா = சோம்பல் இல்லாத
மன்னவன் எய்தும் அடி = மன்னவன் எய்தும் எல்லை
அளந்தான் = Surveyor
தாயது = சொத்து
எல்லாம் ஒருங்கு = எல்லாம் சேர்ந்து
---

மடியிலா மன்னவன் எய்தும் அடி,  அளந்தான் தாயது எல்லாம் ஒருங்கு

சோம்பல் இல்லா மன்னவன் எய்தும் எல்லை, நில அளவர்கள் -surveyors அளந்த தாயம் எல்லாம் உள் அடங்கியது.


---

 

#குறளும்_பொருளும்

Sunday, February 13, 2022

நீங்க படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு நான் தலைமை ஆசிரியர், தம்பிகளா!

 
கண்மணி, அன்போட காதலன் நான் எழுதும் கடிதம்..
கண்மணியே காதல் என்பது..
கண்மணி நீ வர காத்திருந்தேன்..
கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது..
கண்மணி ஓ காதல் கண்மணி..

என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட ஒரு ஏழெட்டு கண்மணி பாட்டாவது சொல்லிடுவோம். திரைப்பாடல்கள் மட்டுமல்ல தினப்படி வாழ்க்கையிலும் "கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்குவேன்", "கண்ணுக்கு கண்ணானவள்" என்று கண்மணி எனும் பாவையைப் பற்றிப் பேசாதவர் இல்லை, பாடாத புலவர்கள் இல்லை, காதலர்களும் இருந்ததில்லை; இருப்பதில்லை.

மனிதர்களோ, விலங்கு, பறவை மற்ற உயிரினங்களோ, எல்லாவற்றுக்கும் கண்ணும் அதன் பார்வைக்குக் காரணமான பாவையும் (கண்மணி)யும் எவ்வளவு இன்றியமையாதது என அறிந்திருப்பதால் காதலன்/காதலியை அந்தக் கண்மணி போன்றவர் என்று சொல்லி மகிழ்கிறோம்.

மேலே சொன்னமாதிரியான திரைப்பாடல் ஆசிரியர்கள், புலவர்கள், எல்லோரும் காதலன்/காதலியை அவ்வளவு சிறந்த கண்மணிக்கு ஒப்பாக வைத்து கிறங்கிப் போய் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்.

நம்மாளு வள்ளுவர் அவர்களைப் பார்த்து, தம்பிகளா சின்னப் பசங்க எல்லாம் ஓரமா போய் விளையாடுங்க என்கிறார் ஒரே ஒரு குறள் மூலமாக.

காதலன் தன் காதலியை நினைத்து தன் கண்மணியிடம் பேசுவது போல ஒரு குறள்.

"யய்யா கண்மணி, நீ மிக உயர்ந்த, மிக மிக மதிப்பு மிக்க உறுப்புதான். இல்லைங்கல. ஆனா பாரு, என் காதலி உன்னைவிட உயர்ந்தவள். அந்த அழகு நெற்றியாளை என் கண்ணுக்குள் வைத்து அவள் வழியாக உலகைப் பார்க்கப் போகிறேன்; நீ கொஞ்சம் இடத்தைக் காலி பண்ணு" என்கிறார்.

படிப்பதை நிறுத்திவிட்டு இக்காட்சியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நம் உடலின் உறுப்புகளில் மிக உயர்ந்ததான கண்மணியை விட உயர்ந்தவளாம் காதலி. கண்மணி இருக்கும் இடத்தில் அவளை வைத்து காண்பவை எல்லாம் அவளாகவே காண விரும்புகிறானாம். அதனால் தன் சொந்தக் கண்மணியை இடத்தைக் காலி செய், போ என்கிறானாம்.

யோவ் வள்ளுவரே, காதல் மன்னன்யா நீர். பின்றய்யா என்று சொல்ல வைக்கும் குறள்.

கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

கருமணியின் = கண்ணின்
பாவாய் = Pupil
நீ = நீ
போதாயாம் = போய்விடேன்
வீழும் = நான் மயங்கிப் போய் காதலில் வீழ்ந்து கிடக்கும்
திரு + நுதற்கு = அழகு + நெற்றி கொண்டவளுக்கு

இப்படிப் படிக்கலாம்:
"கண்ணின் பாவையே நீ போய்விடேன் - என்னைக் காதலில் வீழ்த்திய அழகு நெற்றியாள் இங்கு வருகிறாள்; அவளுக்கு நீ இருப்பதால் இடமில்லாமல் இருக்கிறது"

இதில் ஒரு இரட்டுற மொழிதல் (Double meaning) வேறு - நல்ல விதமாகத்தான் :)

பாவை என்ற சொல்லுக்கு பெண் என்ற பொருளும் உண்டு. இவன் கண்ணுக்குள் இருக்கும் பாவையை போகக் சொல்லிட்டு மனதுக்குள் இருக்கும் பாவையை (காதலியை) அங்கே வைக்கப் போகிறானாம்.

கவிதையில் அழகு, மாபெரும் கற்பனை, செய்யுள் வடிவம் மாறாமல் தளை தட்டாமல் எழுதிய ஒன்றரை அடி அதிசயம். 
ஐயனே, உம்மை நவில் தோறும் அதிசயிக்கிறோம். 
 

Thursday, September 23, 2021

உணவு

சனிக்கிழமைசோம்பெறிதனம் அதிகம் இருக்கவேமதிய சாப்பாடு வெளியே போய் சாப்பிடலாம்னு தீர்மானம்பண்ணிட்டு சில்லரை வீட்டு வேலைகளை செய்து முடித்தேன்

மெதுவாக தயாராகிஎந்த கடைக்கு செல்லலாம் என்ற சர்ச்சையை எப்படியோ சுமுகமாக சமாளித்துஒத்துதீர்ப்பான கடைக்குள் நுழைந்தோம்


நல்ல கூட்டம்கடையின் கதவிலேயே வரிசை நெருக்கமாக நின்றதுஎப்படியும் வெறொரு கடைக்குசென்றாலும் தாமதம் ஆக வாய்ப்பு இருந்ததால் வரிசையில் தீர்மானமாக நின்றாகிவிட்டது


ஆமை வேகத்தில் வரிசை நகர்வதக்குள் நானும் என் பிள்ளையும் பல தெரிந்த விளையாட்டுகளை  விளையாடிமுடித்து சில புதிய விளையாட்டுகளை கண்டுபிடிக்க தயாராகும் தருவாயில் எங்கள் வாய்ப்பு வந்தது.


என் பிள்ளை முதலில் அவளுக்கு தேவயான உணவு வகைகளை பட்டியலிருந்து சொல்லி முடித்தாள்அப்போதுதான் கவனித்தேன்வேலை செய்யும் பெண்ணைஒவ்வொரு அசைவும் அவள் வேலைக்கு புதிதென்பதை மெல்லதெரிவித்து


அடுத்து நான் என்பதை கூட உணராமல் அவளின் மேலான என் ஆராய்ச்சியில் இருக்கஎன் பிள்ளை என்னைஉலுக்கினாள்அம்மா உன் வாய்ப்பு என்றாள்


மெதுவாக நகர்ந்து அவள் அருகில் சென்று எனக்கு தேவையானதை தெளிவாக சொன்னேன்கேட்டு முடித்துஅவள் செயல்பட்டுக் கொண்டே அருகில் இருந்த ஊழியரிடம் என்னுடைய ஆர்டரை திரும்ப சென்னாள்


அவளுக்கு நான் ஆர்டர் செய்த பொருளை செய்யத் தெரியவில்லை என்பதை உணர்வதற்கு முன் சக ஊழியர்அந்த உணவை குப்பையில் எறிந்திருந்தார்நான் ஒரு நிமிடம் ச்தம்பித்து அசையாமல் நின்றேன்


சக ஊழியர் இப்போ என்னை பார்த்துமன்னிக்கணும் அவள் நடுவில் cheese போடுவதற்கு பதிலாக வலது பக்கம்தொடங்கிவிட்டாள் அதான்உங்கள் உணவு இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடும் என்று அடுத்த ஆர்டரில்மூழ்கினாள் ஆனால் நான் அந்த குப்பையில் போன உணவிலேயே இருந்தேன்அந்த பெண்ணின் முகமும்மாறியிருந்தது


ஒரு நொடியில் கேடே இல்லாத தின்பண்டம் குப்பையில்மனதில் நெருடலுடன் கடந்து பணம் கொடுத்துசாப்பாட்டை வாங்கி சாப்பிட்டும் ஆனதுஆனாலும் தைத்து கொண்டே இருந்தது


வண்டியில் ஏறி ப்ரீவே எடுக்க சிக்னலில் நிற்க ஒரு ஏழை குடும்பம்ஒரு சிறிய பொட்டலத்தை பங்குபோட்டுகொண்டிருந்தது


இருப்பவனுக்கு அலட்சியம்இல்லாதவனுக்கு பொக்கிஷம் 

Friday, April 02, 2021

சூடா


அப்பாடா வெள்ளிக்கிழமை (ஆனா, வர்றதும் தெரியல போறதும் தெரியலன்னு உங்களுக்கு தோணிச்சா, எனக்கும் தான்), இரவு உணவு முடிந்து, ஒரு படமும் பார்த்து முடிச்சாசு, நம்ம வடிவேலு சார் நடையில் (Vadivel Sir Style - lite) ஒரு சின்ன பசி. சிந்தனை உணவில் சுற்றி உருளைக்கிழங்கில் நின்றது.

சூடா சாதம், அதுல இரண்டு சொட்டு நெய், சூடா சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல் - நாக்கில் எச்சில் ஊறியது. யார் செஞ்சு தர்றது? சரி விடு. பேசாம, வண்டிய எடுத்துட்டு McD போய் ஒரு பிரெஞ்சு ஃப்ரைஸ் வாங்கிட்டு வரலாம்னு பார்த்தா, சமயம் தாண்டிடுச்சு. 

அதுக்குள்ள மனசு சுட சுட புஸ் புஸ் பூரி (சபோலா Saffalo எண்ணெய் விளம்பரத்தில் வர மாதிரி), மஞ்சள் கிழங்கு மாசாலாவோட சாப்டா எப்படி இருக்கும்கிற ஆலோசனைக்கு தாவி இருந்தது. "கடுப்பேத்துறார் மை லார்ட்", என்ன செய்ய? mind voice கேக்குது. 

டாக்கோ பெல் போய் சூடா பியஸ்டா Fiesta கிழங்கு வாங்கி sour cream வச்சு சாப்டா, செம்மயா இருக்குமே. "Taco Bell - Closed now" சொல்லியது கூகிள். அடுத்து Waffle House போய், சூடா Hashbrown, கொஞ்சம் வெங்காயம், காளான், மிளகாய் போட்டு முறுகலா வாங்கலாம்னா, பக்கத்துல கூட இல்லைன்னு கூகிள் ஆண்டவர் தகவல் சொன்னார்.

கடுப்பில் சமையலறையில் நுழைந்தேன் (கண்டிப்பா சமைக்க இல்லை), என்ன சரக்கு (Pantry la தாங்க) உள்ளது என்று தேடினேன், கையில் ஒரு பெரிய சிப்ஸ் பாக்கேட் சிக்கியது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. மிளகாய் தூள் எடுத்தேன், சிப்ஸ்ஸில் தூவினேன், சூடானா (காரமான) உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி. கடைசியில் ஆனேன் (couch potato) சோம்பேறியாக ..... வார இறுதியிலும். 





Saturday, March 27, 2021

மிகப் பெருமைக்குரிய இந்தியச் சமையலறை - ஒரு பார்வை (The Great Indian Kitchen)

நேற்று The Great Indian Kitchen திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பதிவிட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன. இதை ஒரு வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கிறேன். இந்தப் படத்தில் காட்சி அமைப்புகளே முக்கியம், இறுதிக் காட்சி எப்படி இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உண்டாவது உண்மை, அதனால் நான் அதை விவரிக்கப் போவதில்லை.

கதை சாராம்சம்: ஒரு படித்த பெண், பழைய ஆச்சாரங்கள் கொண்ட ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கப் படுகிறாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் சமையலறையில் அல்லாடுவது படத்தின் முக்கியக் கரு. வித விதமான உணவு வகைகளைச் சமைப்பது மட்டுமல்ல, பாத்திரங்களை நாள் முழுவதும் கழுவுவது, அளவு கடந்த வீட்டு வேலைகள் செய்யும் பரிதாபத்திற்குரிய மருமகள் மற்றும் கொஞ்சம் கூட ஒரு இரக்கம் இல்லாமல் உணவுக் கழிவுகளை விட்டு விட்டுக் கை கழுவிச் செல்லும் குடும்பத் தலைவர்களை இந்தப் படம் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

மென்மையான குணாதிசயம் உள்ளவராகக் காட்டியிருக்கும் மாமனார்தான் அதிகப் பட்சமான அட்டூழியங்களைச் செய்கிறார். மிக்ஸி, வாஷிங் மெசின் ஆகியவற்றைத் தன் சாமர்த்தியமான பேச்சில் ஒதுக்கி வைத்துக் கருணையே இல்லாமல் மருமகள் தலையில் வேலைகளைக் குவிக்கிறார். ஓட்டலில் நாகரீகமாக நடக்கும் கணவன், வீட்டில் அதைச் செயல்படுத்த மறுக்கும்போது, அதைக் கேட்கும் மனைவியிடம், அப்படித்தான் இருப்பேன், நீ என்ன கேட்பது என்று கொக்கரிக்கிறார். கணவரும் மாமனாரும் மருமகள் வேலைக்குப் போவதைச் சாதுர்யமாகத் தடுக்கிறார்கள்.

அதே கண்ணியவான்கள், மருமகள் மாத விடாயில் இருக்கும் போது, அவளை ஒதுக்கி வைத்து வேலைக்காரி சாப்பாட்டில் கூச்சமில்லாமல் உண்கிறார்கள். (Hypocrites - கபடதாரிகள்?). அப்போது அங்கு இருக்கும் மாமனாரின் சகோதரி, அவளின் படுக்கையைப் பிடுங்கி தரையில் படுக்கச் சொல்லி, குடும்பப் பெண்களின் சீரழிந்த வாழ்க்கைக்கு, ஆண்கள் மட்டும் காரணமல்ல என்று உணர்த்தி, படம் பார்க்கும் ஆண்களின் வயிற்றில் பால் வார்க்கிறார். 

உள்ளுக்குள் குமுறிக் கொண்டு இருக்கும் நாயகிக்கு, பொங்கி எழும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கணவன் மற்றும் மாமனார் அய்யப்பன் மாலையின் போர்வையில், அவர்களின் அட்டகாசங்கள் அதிகமாகி, நாயகி கொதித்தெழுந்து நீதி நாடுகிறாள்.

நாயகி அளவுக்கு தீர்மானங்களை எடுக்கும் தைரியமோ, சுதந்திரமோ,  சூழ்நிலைகளோ 99.99 சதவீதம் பெண்களுக்கு உண்டாகப் போவதில்லை. ஆனால் படத்தைப் பார்க்கும் நமக்கு, நம்மை சரிபடுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் நினைவிருக்கிறது. பொறுப்பற்ற உறவினர்கள் வீட்டுக்கு வந்து பல நாட்கள் தங்கி இருந்து உண்டு விட்டுப் போவார்கள். வேலை முழுவதும் அன்னையர்க்கு. அதற்கு நன்றியோ பலனோ கிடையாது. விருந்தோம்பல் என்ற போர்வையில், நம் குடும்பப் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்குக் கணக்கே கிடையாது. இதில் மாமனார், மாமியார், நாத்தனார் கொடுமைகள் தனி. இது எதுவுமே நடப்பது அறியாமல் இருக்கும் பொறுப்பற்ற கணவர்கள் பாதி, தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாத பெரும்பான்மையான கையாலாகாத கும்பல், பிறகு இப்படித்தான் இருப்போம் என்று ஆணாதிக்கம் பிடித்த கயவர் கூட்டம். பெண்களும் மருமகள் ஸ்தானத்திலிருந்து நாத்தனாராகவோ, மாமியாராகவோ மாறும் போது, யான் பெற்ற கொடுமைகள் மற்ற மருமகள்கள் பெறட்டும் என்ற ஒரு கீழ்த்தரமான எண்ணம்.

இவர்கள் பெரும்பாலும் மாறப் போவதில்லை. அடுத்த முறை உங்கள் தட்டுக்களைக் கழுவாமல் மேசையில் இடும்போதோ, வேலை முடிந்து ஓய்வெடுக்கும் மனைவியிடமோ தாயாரிடமோ தேனீர் கேட்கும் போதோ, தயவு செய்து ஒருமுறை யோசியுங்கள் 



 

Monday, February 01, 2021

 

பித்தனின் கிறுக்கல்கள் - 52

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

2019 மார்ச் 3ம் தேதிக்கு பிறகு 697 நாட்களுக்குப் பிறகு மீண்டும்  வலைப்பூவில் சந்திக்கின்றோம். 

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், ஆஸ்த்ரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை, சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி வழக்கம் போல இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம். வழக்கம் போல் நாம் எழுதியதை படித்தோ/படிக்காமலேயோ திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் படித்த பிறகும் எங்களுக்கு என் மீது கொலைவெறி எதுவும் இருக்காது என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் .

அமெரிக்க தேர்தல் .

இந்திய வேளான் விவசாயிகள் சட்டம்

திரைப்படங்கள்

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்