Wednesday, March 11, 2009

உங்களுடைய செக் இஞ்சின் லைட் சரி செய்து விட்டீர்களா?

உங்களுடைய காரில் செக் இஞ்சின் லைட் எரிய ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மாதிரி பயந்தாங்குளிகள் அடித்துப் பிடித்து ஓடிப்போய் மெக்கானிக்கிடம் காரை கொண்டுபோய் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு வருவோம். அதே ஒரு கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.

சென்ற வாரம் ஒரு நண்பருக்கு இப்படித்தான். இரண்டு நாட்களாக நெஞ்சுவலி என்று உடல்வலி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை, மூன்றாம் நாள் அவர் மனைவி காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார். அங்கே அவர் உடலை பரிசோதித்துவிட்டு உடனே எமர்ஜென்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு வந்தது மாரடைப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்தக்குழாயில் இருந்த இரண்டு அடைப்புகளை சரி செய்து அனுப்பியிருக்கிறார்கள். நாற்பதுகளில் இருக்கும் நண்பர் நிறைய டென்னிஸ் ஆடுபவர், சுறுசுறுப்பாக, இருக்கும் அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு நிறைய தொண்டு செய்பவர். அவருக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆகவே உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும் ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனை (annual physical checkup)செய்து கொள்ளுங்கள். அதுவும் நாற்பதை தாண்டிவிட்டால் இது மிகவும் கட்டாயம். கொழுப்பெடுத்து எது செய்கிறீர்களோ இல்லையோ - உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நமக்கு நடப்பது, ஓடுவது எல்லாம் மிகவும் குறைந்திருக்கையில், நமது உணவு அதற்கேற்றார்போல மாறாதிருப்பது, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக முக்கிய காரணம். இப்போதும் ஒன்றும் காலதாமதமாகவில்லை. இந்த சனிக்கிழமை மானுமென்ட் அவின்யுவில் பத்து கிலோமீட்டர் ஓடலாம் வருகிறீர்களா?

Monday, March 02, 2009

ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

நமக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கொடுக்கலாமென்றிருந்தார்கள். நான் பெருந்தன்மையாக அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிக் கொண்டால்தான் ஆயிற்று என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்புத்தொல்லை தாங்காமல் நான் வாங்கிக் கொண்ட பட்டம்தான் -  ஆயிரம் புரதம் மடித்த் அபூர்வ சிகாமணி!

 

என்னய்யா மடிக்கிற என்கிறீர்களா? நீங்களும் மடிக்கலாம் இங்கே சென்று... நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள். உங்களையும் மடித்து விடுவார்கள். உங்கள் வீட்டில் கணினி சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்,  அதையும் புரதம் மடிக்க வைக்கலாம். இதனால் பல வியாதிகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியம்.

அதென்னய்யா புரதம் மடிப்பது என்று கேட்பவர்கள்  http://folding.stanford.edu தளத்தில் சென்று படித்து தெரிந்து கொள்ளலாம். வர வர நான் ஒன்று சொன்னால், மக்கள் வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். அதனால் நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை :-)

இப்படிக்கு.

திரு. ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

படம் பாரு கடி கேளு - 25



சார், லாலு சார் தயவு செய்து சீக்கிரம் inspect பண்ணிட்டு போங்க சார். நீங்க inspect பண்ண வர்றீங்கன்னு காலையிலிருந்து என்னை இப்படியே படுக்க வெச்சுட்டாங்க. பாத்ரூம் கூட போக விடலே.

Friday, February 27, 2009

யாரந்த சதங்கா?

மனுஷன் விகடனில் அவர் கவிதைக்கு லிங்க் கொடுத்ததையே மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அடக்கம் ஜாஸ்தியாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.

 விகடனில் கதை வெளியாயிருப்பதை சொல்லவே இல்லை. அடுத்த முறை கூப்பிடட்டும், பேசிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள், சதங்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். பாலு மகேந்திரா ரகுமானை சொன்ன பாணியில், ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

Thursday, February 26, 2009

ஈழத்துப் பாப்பா பாடல்

ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா.



  ---      ---   ---



எழுதியது யாரென்று தெரியவில்லை. நெஞ்சை பிசையும் பாடல். வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு நீர்வை மகள் அனுப்பினார்.... 

ஒரு ஈழத்து நண்பர் சொன்னார்: " எனக்கு இந்த பிரச்சினை எப்படி முடியும் என்று கூட கவலையில்லை. சீக்கிரம் முடிந்தால் நிம்மதி"... 

எனக்கு மீண்டும் மீண்டும் கானா ப்ரபாவின் பதிவின் முகப்பில் அவருடைய சிரித்த முகத்திற்கு கீழே இருக்கும் வரிகள்தாம் மனதில் ஓடுகின்றன...  

ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்....

என்று தணியும் இந்தத் துயரம்?

Sunday, February 22, 2009

ரகுமானுக்கு வாழ்த்துக்கள்!




ஆஸ்கர் பரிசு பெற்ற முதல் தமிழர் ஏ. ஆர். ரகுமானுக்கு எங்கள் வாழ்த்துக்கள். பரிசு வாங்கும்போது தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றதற்கு எங்கள் நன்றி! மேலும், மேலும் உயர வாழ்த்துக்கள்!

Saturday, February 21, 2009

பஞ்சமில்லை பஞ்சமில்லை

பஞ்சமில்லை பஞ்சமில்லை

எங்கே என்ன பஞ்சம் என்று கேட்கிறீர்களா?
அந்த கால படங்களின் பெயர்களுக்கும் சர், இந்த கால படங்களின் பெயர்களுக்கும் சரி. பஞ்சமே இல்லை.

தமிழ் படங்களின் பெயர்கள் ஒரு பெரிய சுற்று (cycle) முடிந்து அடுத்த சுற்று ஆரம்பித்து விட்டாற்போல் இருக்கிறது.
அந்த கால படங்களில் சிலவற்றில் விநோதமானவை சில:

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
மணாளனே மங்கையின் பாக்கியம் (
அசட்டுப்பிள்ளை (1943)
மடசாம்பிராணி (1939)
குமாஸ்தாவின் பெண் (1941)
காலேஜ் குமாரி (1942)
டம்பாச்சாரி (1935)
டேஞ்சர் சிக்னல் (1937)
திகம்பர சாமியார் (1950)
கலிகால மைனர் (1945)
குட்டி (1937)
சகடயோகம் (1946)
சாந்த சக்குபாய் (1939)
சிரிக்காதே (1939)
பக்கா ரௌடி (1937)
பஞ்ஜாப் கேசரி (1938)
பிழைக்கும் வழி (1948)
பைத்தியக்காரன் (1947)
மாயா மச்சீந்திரா (1939)
மூன்று முட்டாள்கள் (1936)

இந்த கால தமிழ் படங்களின் சில அபத்தமானவைகளும், சில விநோதமானவைகளும் இதோ:

பொய் சொல்ல போறோம்
ஓடி போலாமா
வெண்ணிலா கபடி குழு
சற்று முன் கிடைத்த தகவல்
கதைன்னா சும்மா இல்லை
கொட்டாரம் தாலுகா திருநெல்வேலி
அதே நேரம் அதே இடம்
பேட்டை முதல் கோட்டை வரை
துபாய் ராணி
குளிர் 100 டிகிரி
மாயாண்டி குடும்பத்தார்
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு
குண்டக்க மண்டக்க
தெனாவட்டு திமிரு
திருட்டு பயலே
தொட்டி ஜயா
எம்டன் மகன்
நீ வேணும்டா செல்லம்
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
சிவா மனசுல சக்தி

இது போதாதென்று ஆனா ஆவன்னாவிலிருந்து ஒன்று இரண்டு என்று ஒன்றையும் விடு வைக்கவில்லை நம் தமிழ் திரையுலகம்:

உதாரணம்:

அ ஆ இ ஈ
ABCD
ஆதி
123
ரெண்டு
Plus 2
நியூட்டனின் 3ம் விதி
4 students
ஐந்தாம் படை
ஆறு
7G Rainbow colony
அந்த ஏழு நாட்கள்
சென்னை 28
வருஷம் 16
16 நாட்கள்
16 வயதினிலே
1977
February 14th
June R
டிசம்பர் பூக்கள்

பொருட்களின் பெயர்களிலும் சில படங்கள்:

விசில்
வில்லு
வேல்
கோவில்
கொக்கி
கிரீடம்
தொலைபேசி
தாஜ் மகால்
சூரியன்
ஜீன்ஸ்
பாறை
நிழல்கள்
ஆல்பம்

பெயர் பஞ்சம் ஏற்பட்டு ஒன்று அல்லது இரண்டு எழுத்துக்களிலும் சில பெயர்கள்:

ஜி

பொய்
பொரி
தாஸ்
தம்
பாபா
பாலா
ரன்
சாமி
கிரி
கஜா
பையா

கீழ்கண்டவைகளை எத்துடன் சேர்ப்பது?

ஐ லவ் யூ டா
அபியும் நானும்
மதுரை சம்பவம்
குரு என் ஆளு
அந்தோணி யார்
அடடா என்ன அழகு
அங்காடி தெரு
அச்சமுண்டு அச்சமுண்டு
ரைட்டா தப்பா

பிரபல பாடல்களை நினைவூட்டும் பெயர்களும் சில:

நினைத்தாலே இனிக்கும்
ஒளியும் ஒலியும்
அலையோடு விளையாடு
எங்க ராசி நல்ல ராசி
யாவரும் நலம்
காதலன் காதலி
குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
சொல்ல சொல்ல இனிக்கும்
சிந்தனை செய்
வானம் பார்த்த சீமையிலே
என்னை தெரியுமா

ரிப்பீட்டே! படங்களும் சில:

ஜகன் மோகினி
பில்லா
வாலிபன் சுற்றும் உலகம்
திருவிளையாடல் ஆரம்பம்
ராமன் தேடிய சீதை
நான் அவனில்லை
God Father
தசாவதாரம்

Saturday, January 31, 2009

நாகேஷ் காலமானார்

நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னையில் இன்று காலமானார்.

திருவிளையாடல், எதிர்நீச்சல், நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் அவரது கதாபாத்திரங்களினால் நம் அனைவரையும் மகிழ்வித்த நாகேஷ் தமிழ் திரையுலகின் ஒப்பற்ற நகைச்சுவை நடிகர்.

ஒரு காலத்தில் நாகேஷ் திரையில் தோன்றினாலே அரங்கம் சிரிப்பில் வெடிக்கும். நகைச்சுவை பாத்திரங்களிலும் குணச்சித்திர பாத்திரங்களிலும் அவர் நடிப்புக்கு இணை அவர்தான். யதார்த்தமான நடிப்பு தமிழில் அவர்தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.

அவருடைய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பொம்மலாட்டம், காதலிக்க நேரமில்லை, நீர்க்குமிழி, ... பட்டியல் நீண்டுகொண்டே போகும்...

நாகேஷின் ஆன்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.

Sunday, January 25, 2009

நமது ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் அடுத்த கலைவிழா

பொங்கல், குடியரசு தினம் மற்றும் காதலர் தின விழா இம்மூன்றையும் ஒரு சேரக் கொண்டாட நமது சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் அனைவரும் ஒரு மனதாக முடிவு செய்து வரும் பிப்ரவரி மாதம், 28ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை நமது ரிச்மண்ட் கோவிலில் (ஹிந்து சென்டரில்) ஒரு கலாச்சார விழாவினை நடத்த இருக்கிறோம். பல கலை நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து பட்டியலிடும் பணியில் கலாச்சாரக் குழு தங்களை ஈடு படுத்திக் கொண்டுள்ளார்கள்.

ஒரு கலை நிகழ்ச்சி முடிந்து அடுத்த கலைநிகழ்ச்சி துவங்கும் முன்பு இருக்கும் இடைவெளிகளின் ஊடே சிறுவர் சிறுமிகள் தங்களுக்குத் தெரிந்த ஒரு திருக்குறளைச் சொல்ல (முடிந்தால் அதற்கு விளக்கமும் சொல்ல) ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். திருக்குறள் சொல்லும் (முடிந்தால் விளக்கமும் சொல்லும்) ஒவ்வொரு சிறுவர் சிறுமிக்கும் ஒரு சிறிய பரிசும் உண்டு. இந்தப் பங்கேற்பு முக்கிய கலைநிகழ்ச்சியின் எண்ணிக்கையில் சேராது எனவே, உங்கள் குழந்தைகள் எவ்வளவு திருக்குறள் சொல்ல விழைந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப் படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அல்லது மேலும் விவரம் வேண்டுவோர் நமது சங்கத்தின் நிர்வாகக் குழுவினரை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

வாருங்கள் எல்லோரும் வடம் பிடிப்போம், வரலாற்றில் ஓர் இடம் பிடிப்போம்.


அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

Saturday, January 24, 2009

அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க...

புதிய செயற்குழு மும்முரமாக அடுத்த நிகழ்ச்சியை - அவர்களின் முதல் நிகழ்ச்சியை தயார் செய்வதாக செய்தி பரவுகிறது. அதற்கு முன்னோடியாக சென்ற விழாவிலிருந்து ஒரு வீடியோ ( no pressure :-)