Monday, May 18, 2009

ஓல்ட் ரேக் மலை

சென்ற வார இறுதியில் சாரணப் படையுடன் ஒரு முகாமுக்கு சென்றிருந்தேன். வெறும் முகாம் அல்ல. சொர்க்கபுரி! சந்தேகமிருந்தால் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.


அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஒரு பாகமான ஷேனன்டோவா தேசியப்பூங்காவில் இருக்கிறது ஓல்ட் ரேக் மலை (Old Rag Mountain).
ரிச்மண்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி இரவு ஒன்பதரை மணிக்கு ஓல்ட் ரேக் மலையடிவாரத்தை அடைந்தோம். பார்க்கிங் லாட் காலியாக இருந்தது. எங்கள் சாரணப்படையைச் சேர்ந்த புண்ணியவான்கள் இருவர் முதலிலேயே போய் கூடாரங்கள் அமைக்க இடத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

கும்மிருட்டில் மரங்களூடே தடவிக் கொண்டே போய் எங்கள் கூடாரங்களை அமைத்தோம். ஒரே பாறைகளும், மரக்கிளைகளும் நிறைந்த தரையில் அதிர்ஷடவசமாக சமதரை கிடைத்தது எனக்கு. தலையில் கட்டிக்கொள்ளும் லைட் இல்லையென்றால் அதோகதிதான் இந்த முகாம்களில். கூடாரம் அமைத்துவிட்டு வாசனாதி பண்டங்களை ஒரு கரடிப்பையில் போட்டு கட்டி மரத்தில் தூக்கிக் கட்டினோம். வாசனாதி பண்டங்களை கூடாரத்தில் வைத்துக்கொண்டால் கரடி வரும் என்று கரடி விட்டார்கள்.

காலையில் எழுந்து பார்த்தால் உலகமே பாலுமகேந்திரா காமிராவில் பிடித்த மாதிரி இருந்தது.



நான் கொஞ்சம் உலாத்திவிட்டு ஆற்றில் இறங்கி விளையாடிவிட்டு மேலே இருக்கும் வீடியோவை எடுத்துவிட்டு வருவதற்குள் உள்ளங்கையில் அடங்கும் கேஸ் அடுப்பை வைத்து தண்ணீர் சுடவைத்து டீ,காப்பி எல்லாம் தயாராய் இருந்தது. அதையும் ஓட் மீல்-ஐயும் ஒரு கைப்பார்த்துவிட்டு மதிய உணவுக்கு சான்ட்விச் செய்துகொண்டு கிளம்பினோம்.

முதல் நாள் ஈயடித்துக் கொண்டிருந்த பார்க்கிங் லாட்டில் சைக்கிள் நிறுத்தக்கூட இடம் இல்லை. அவ்வளவு கும்பல். காலையிலிருந்தே திருவிழா கூட்டம் போல மக்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். எங்களைத் தவிர இரண்டு சாரணர்படைகள், நிறைய கல்லூரி மாணவர்கள், மலையேறும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களும் வந்து குவிந்திருந்தார்கள். ஓல்ட் ரேக் மிகவும் பிரசித்தமாம். கடினமான பாதைகளும், பாதையிலேயே கடும்பாறைகளும் கொண்டு ரொம்ப சேலஞ்சிங் மலையேற்றம் இது என்று வயிற்றில் புளியைக் கறைத்தார்கள் கூடவந்த மகானுபாவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் ஆரம்பித்தது. மூடுபனியும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி பக்கத்து மலை தரிசனங்கள் கிடைக்க ஆரம்பித்தன. மேலே போகப்போக பாறைகள் பாதையிலே பாறைகள் அதிகம். சில இடங்களில் வெறும் பாறைதான். பாறைகளுக்கு நடுவே குறுகலான பாதை, நெருங்கிய பாறைகளின் இடையே குறுகலான பாதை என்று பலவிதம். சில இடங்களில் பாறைகளுக்கு அடியே தவழ்ந்தும் போக வேண்டியிருந்தது. இங்கே பாருங்கள் கோவர்தன கிரிதாரி!




பாதையில் பாதி அடைத்துக் கொண்டிருக்கும் பாறை.



அடுத்தது பார்த்தால் ஒரு பெரிய கும்பலே தர்ம தரிசனத்திற்கு நிற்கிறது. நான் கியூவைப் பார்த்துவிட்டு சரிதான் இங்கேதான் லட்டு கிடைக்கும் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் அங்கே கிடைப்பது அல்வா. ஒரு குறுகலான பாதையில், இரண்டு பாறைகளைக் கடந்து செல்லவேண்டும் - அதுதான் இந்த பாதையிலேயே கடினமான இடம்.



அம்மாடி! அதை ஒரு வழியாக கடந்து ஒரு குகையில் புகுந்து வெளியேறி இரண்டு பாறைகளுக்கு இடையே இறங்கி சிக்கிக்கொள்ளாமல், கணுக்காலை சுளுக்கிக் கொள்ளாமல் தப்பித்து உச்சியை அடைவதற்குள் அம்மாடி - களைத்துவிட்டது. உச்சியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சுற்றிப் பார்த்தால் - பச்சைப்பசேல் என்று எங்கும் பச்சைப்போர்வை போர்த்திய உலகம்.



திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது மேலே இருக்கும் மலையைப் பார்த்தபோது. அங்கிருந்து இறங்குமுகம்தான். சிறிது இறங்கியபிறகு மழை பிடித்துக் கொண்டது. எல்லோரும் பாஞ்சோ எனப்படும் மேலாடையை அணிந்து கொண்டு அடைமழையிலும் விடாது நடந்தோம். எங்கள் குழுவில் இருந்த சிறுவர்கள் இருவரும் மிகவும் சோர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு என்ற பேரில் நானும் அவர்களுடன் மெதுவாக நடந்து வந்து அழகழகான பாலங்களைக் கடந்து முகாமை அடைந்தேன். மொத்த நடை ஏழு மைல்.

வந்து இளைப்பாறிவிட்டு அடுப்பு மூட்டி தண்ணீர் கொதிக்கவைத்தோம். இரவு உணவு நூடுல்ஸ். திடீரென மழை திரும்ப ஆரம்பித்தது. போட்டதை போட்டபடி கூடாரங்களுக்குள் பாய்ந்தோம். சமயோசிதமாக கொதித்துக் கொண்டிருந்த நீரை கோப்பையில் கொட்டிக்கொண்டு கூடாரத்துக்குள்....



Maggi cuppa mania saves the day!

பிறகு மழையிலே சமையல்பாறை மேல் ஒரு கூடாரம் கட்டி மற்றவர்களுக்கு சமைத்து பரிமாறி கூடாரத்துக்குள் கட்டையை சாய்த்ததுதான். காலையில் பறவை ஒலிக்குதான் எழுந்தேன். காலை உணவுக்கு பேகில், டீ! கூடாரங்களைப் பிரித்து, இடத்தை சுத்தம் செய்துவிட்டு (Leave No Trace), வீட்டுக்கு கிளம்பினோம். இன்னொரு அற்புதமான முகாம் இனிதே முடிந்தது.

மற்ற படங்களை இங்கே பார்க்கலாம்.

Sunday, May 17, 2009

பாலகுமாரன்

பாலகுமாரன் – 80 களின் துவக்கத்தில் இவருடைய எழுத்தின் பாதிப்பின்றி வளர்வது மிகக் கடினமாக இருந்தது. ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் இவரது எழுத்து மிகப் ப்ரபலமாக வெளிவந்து பலதரப்பட்ட மக்களை புரட்டிப் போட்டது. இவரது பலம், கதை என்பது ஒரு காட்சியாக படிப்பவரின் மனதில் வியாபித்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பி இன்றளவும் அதைப் பின்பற்றிவருவது. சில சமயம் இதுவே இவரது எழுத்தின் பலவீனம் என்றும் நான் கருதுவேன். இவைகளையும் மிஞ்சி இவரது எழுத்து பலரையும் பாதித்து, வெளிஉலகை, வாழ்க்கையை சற்று வித்தியாசமாக பார்க்க வைத்தது. 80 களில் வெளிவந்த மெர்க்குரிப் பூக்களையும், இரும்பு குதிரைகளையும் என்னால் இன்றும் நினைவுகூற முடிகிறது என்றால் அது இவரது எழுத்தின் ஆழம் என்பேன். இவரது எழுத்துக்களைப் போலவே இவரது கதைகளின் தலைப்புகளும் மிக வித்தியாசமான ஒன்று. இவரது எழுத்து மட்டும் இல்லாமல் இவரது கதைகளின் தலைப்பும் இவரை சக எழுத்தாளர்களில் இருந்து எனக்கு இவரை தனித்து அடையாளம் காட்டியது.

விவரமான பதிவை இங்கு படிக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

தமிழ் மணத்துக்கு வந்த சோதனை

என்னடா இது, தமிழ் மணத்துக்கு வந்த சோதனை...

நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு வந்தபோது என்னால் நம்பமுடியவில்லை. இப்ப சின்னப் பசங்கள்ளாம் 'என்ன கொடுமைங்க இது சரவணன்'னு சொல்றீங்களே - நாங்க அந்த காலத்துல பாலையாவின் - என்னடா மதுரைக்கு வந்த சோதனை-யை பயன்படுத்துவாம். அதுதான் தலைப்பு. இதையெல்லாம் படித்துவிட்டு செல்வராஜ் இனி வர்ஜினியாவில ஒரு பயலும் தமிழ்மணத்துல ஒரு வார்த்தை எழுதக்கூடாதுன்னு சொல்லாம இருந்தா சரி! வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும், எங்கள் தமிழ்ச்சங்க பதிவுகளை படிக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன்.

இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு முயற்சி. ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினர்களை எழுத வைப்பதற்காக ஆரம்பித்தது. நிறைய பேர் சேர்ந்தார்கள். ஆனால் விடாமல் எழுதியது ஒரு சிலர்தான். ரிச்மண்ட் தமிழ் சங்க பதிவில் விடாமல் எழுதுகிறார்கள் என்று யாரோ மௌஸ்(கண்) வைத்துவிட்டார்கள். அதுவும் போச்சு. அந்த ஒரு சிலரும் பல காரணங்களுக்காக தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். பலகட்சி ஜனநாயகத்திற்கு பழகிய மக்களாயிற்றே... நான் கொஞ்சம் அங்கே இங்கே திருடி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது டுவிட்டர் வந்து அதையும் கெடுத்தது. பதிவு தேய்ந்து டுவிட் ஆன கதையாய் ஒரு வரி எழுதினால் களைப்பாகிவிடுகிறது.

தமிழ்ச் சங்கப் பதிவுகளை நாலுபேர் கூட படிப்பதில்லை என்று தலைவர் முரளி கலாய்ப்பார். மொத்தம் எழுதுவதே நாலு பேராம். ஒருவர் எழுதினால் அதை படிப்பது மற்ற மூனு பேர்தான் என்பது அவர் கணக்கு. தமிழ்மணத்தின் புண்ணியத்தால் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி நியுசிலாந்துவரை (வணக்கம் டீச்சர்) எங்கள் புகழ் பரவியிருக்கிறது. ஆனாலும் ரிச்மண்டில் படிப்பது இன்றும் அதே மூனுபேர்தான்!

நான் பார்ப்பவர்களையெல்லாம் எழுதச் சொல்லி படுத்தியதினால், சிலபேர் ஊரை விட்டும், நாட்டை விட்டும் ஓடிவிட்டார்கள். ஆம்வேயைக் கண்டால் தூர ஓடு என்ற புதுமொழியில் கிட்டத்தட்ட என்பேரை போடவிருந்தார்கள். பதிவுப் புராணம் போகட்டும். ரிச்மண்டைப் பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்காவின் தலைநகரின் தெற்கே ஒரு பெரிய முக்கோண வடிவில் இருக்கும் மாநிலம் வர்ஜினியா. அந்த மாநிலத்தில் நடு சென்டரில் ஒரு புள்ளி வைத்தால், அதுதான் ரிச்மண்ட்! மைக்ரோசாஃப்ட் இருக்கிறதே அந்த ஊர்தானே என்பார்கள் சில மேதாவிகள். அது ரெட்மண்ட். ரிச்மண்ட் இந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் தெரியுமா? இந்தக் கதையைக் கேளுங்கள். நான் வாஷிங்டன் டிசி பகுதியில் இருந்தபோது ரிச்மண்ட் வேலைக்காக ஒரு தொலைபேசி தேர்வு நடந்தது. முடியும்போது அந்த மேலாளரிடம் என் கேள்வி: "ரிச்மண்ட் எங்கே இருக்கிறது?" அவர் கேட்டார் - வாஷிங்டனில் இருந்து தெற்கே எங்கேயாவது போயிருக்கிறாயா? ஆமாம் வடகரோலினா போயிருக்கிறேன் என்றேன். அப்படியானால் நீ ரிச்மண்டை பார்த்திருக்கிறாய்!

அமெரிக்க சரித்திரத்தில் ரிச்மண்டுக்கும், வர்ஜினியாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. அமெரிக்கா ஆரம்பித்ததே வர்ஜினியாவில் ஆரம்பித்த ஒரு குடியேற்றத்தினால்தான். அமெரிக்க சுதந்திரத்திற்கு வித்திட்டதும் வர்ஜினியாவில்தான். ஜார்ஜ் வாஷிங்டன், சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸனில் ஆரம்பித்து பல அமெரிக்க ஜனாதிபதிகளை அளித்திருக்கிறது வர்ஜினியா. "கிவ் மீ லிபர்டி ஆர் கிவ் மி டெத்" என்ற வாசகம் அமெரிக்க வரலாற்றில் புகழ் பெற்றது. பேட்ரிக் ஹென்றி அந்த வாசகத்தை முழங்கியது ரிச்மண்டில்தான்.

நான் ரிச்மண்டுக்கு வந்த புதிதில் சக ஊழியனிடம் இந்த ஊரைப் பற்றிக் கேட்டேன். அவர் இரண்டு யுத்தங்களிலும் எரிக்க்ப்பட்ட ஒரே ஊர் ரிச்மண்ட்தான் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு முதல் உலகப்போர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இரண்டாம் போரில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டது ஹவாய் மட்டும்தானே என்று கேட்டேன். அவர் குழம்பிவிட்டார். நீ எந்தப்போரைப் பற்றி பேசுகிறாய் என்று இருவரும் கொஞ்சம் சண்டைப் போட்டோம். பிறகுதான் அவர் விளக்கினார். அவர் சொன்னது அமெரிக்க சுதந்திரப் போர், மற்றும் உள்நாட்டுப் போர் - American Revolutionary war and American Civil War. அமெரிக்கன் சிவில் வார்... யாரவர்? அமெரிக்கா இரண்டாக உடைந்தபோது உண்டான அல்பாய்சு இரண்டாம் நாட்டின் அல்பாய்சு தலைநகர் ரிச்மண்டாம்.

கான் வித் விண்ட் படித்ததில்லையா, பார்த்ததில்லையா என்றும் யாருக்கும் கொலைவெறி வரவேண்டாம். பார்த்திருக்கிறேன் - ஆனால் அது உண்மை சம்பவங்களை வைத்து எடுத்த படம் என்று சாணக்யாவில் இரவு முழு மப்பில் பார்த்தவனிடம் யாரும் சொல்லவில்லை.

ஒரு மணி தூரத்தில் கடலும், ஒரு மணி தூரத்தில் மலைத்தொடர்களுமாக அமைந்திருக்கிறது ரிச்மண்ட். வெயில் நாளில் சென்னையை நினைவுறுத்துமாறு புழுக்கமும் வேர்வையும்கூட உண்டு! வர்ஜினியா, ரிச்மண்ட் வரலாறு, புவியியல் பற்றி விரிவாக வேறு சமயம் எழுதப் போகிறேன்(அடப்பாவி இன்னுமா?). இப்போது சங்க காலம் பற்றிப் பார்ப்போம். ரிச்மண்டில் சங்க காலம் 1999ல் ஆரம்பித்து, பத்தாண்டுகள் கடந்து, இன்று வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சங்க கால விளையாட்டுகளான டென்னிஸ், பௌலிங்ம் டேபிள் டென்னிஸ் எல்லாம் உண்டு. இந்த வரியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்தால் அதற்கு முன் இரண்டு வரிகளைத் திரும்ப படிக்கவும்.

ரிச்மண்ட் மாதிரியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் மாதிரியும் அமெரிக்காவில் பார்ப்பது கடினம். ஊர் அவ்வளவு பெரிய ஊரும் இல்லை, சிறிசும் இல்லை. எல்லா இடங்களுக்கும் பத்து நிமிடங்களில் போய்விடலாம். கால்பந்தாட்டமா, டென்னிஸா, நீச்சல் வகுப்பா, சங்கீத வகுப்பா, நாட்டிய வகுப்பா, கோவிலா, நாகு வீடா, தமிழ் சினிமாவா, டாஸ்மாக் கடையா, ஆபிஸா, ஆர்தர் ஆஷ் சிலையா - எல்லாம் பத்து நிமிடங்களில்!

தமிழர்கள் அன்புடன், மனதால் மிகவும் நெருங்கி வாழும் ஊர் ரிச்மண்ட். மக்கள் இந்த ஊரைவிட்டு போனாலும், திரும்ப வந்து விடுவார்கள். ரிச்மண்டில் வாழ்ந்துவிட்டு வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியே ஏன் அவர்கள் திரும்பவில்லை என்றும் கேளுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லையா, துணைவி/வன் ஊருக்குப் போயிருக்கிறார்களா - சாப்பாடு வந்து குவிந்துவிடும். எங்களூரில் நண்பர்களை அப்படி கவனித்துக் கொள்வோம். ஊரார் கணவரை ஊட்டி வளர்த்தால் தன்கணவன் தொப்பை தானே வளரும் என்பதில் மிக்க நம்பிக்கை உள்ள ஊர் ரிச்மண்ட்! நியுயார்க், வாஷிங்டன் போன்ற ஊர்களில் இருந்தால் ஊர் சுற்றிப் பார்க்க நண்பர்களும் நிறைய 'அழையா விருந்தாளிகளும்' வந்து குவிவார்கள். ரிச்மண்டில்தான் உண்மையான அன்புள்ள விருந்தாளிகள் வருவார்கள்! இங்கே வருபவர்கள் எங்களைப் பார்ப்பதற்குத்தான் வரவேண்டும் :-)

Tuesday, May 12, 2009

வலை வலம்.

அமெரிக்க வீடுகளில்  தபால் பெட்டியில் வைக்கப்படும் ஜங்க் மெயில் எனப்படும் "குப்பை" விளம்பர காகிதங்கள் மிக அதிகமாகி விட்டன. வருடத்திற்கு சுமார் ஆயிரம் பக்கம் விளம்பரங்கள் உங்கள் வீட்டை வந்தடையும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. இதனால் வருடத்திற்கு பல கோடி மரங்கள் அழிக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு அழைப்பின்றி வரும் இவற்றை எவ்வாறு கட்டுபடுத்துவது என சமீபத்தில் படித்தேன்.  http://dmachoice.org என்ற இணைய தளத்தில் நமது வீட்டு 
முகவரியை பதிவு செய்து,  தேவை இல்லாத விளம்பரங்களை முழுவதுமாக நிறுத்திவிடலாம்! இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான விளம்பரங்களை தெரிவு செய்தால் அவை மட்டும் உங்களுக்கு வந்தடையும். எதோ நம்மால் முடிந்தது சில மரங்களையாவது விட்டு வைப்போமே!! 


நடந்து வரும் (நடக்கவுள்ள) இந்திய நாடாளுமன்ற தேர்தல் காமெடிகளை பார்த்தால் கடவுளே வந்தாலும் நம்ம மக்களை திருத்தமுடியாது என்றே தோன்றுகிறது! இதிலும் சில நம்பிக்கை வேட்பாளர்கள் இருப்பது சின்ன ஆறுதல். எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள், கடந்த தேர்தலில் யார் வென்றார்கள், அவர்களுடைய சொத்து, படிப்பு (அட ஆமாங்க), கிரிமினல் விபரங்கள் (வெளியே தெரிந்தது :-( மட்டும் ) , எத்தனை நாட்கள் பாராளுமன்றத்தில் பங்குபெற்றார்கள் (அதில்  எத்தனை கேள்விகள் எழுப்பினார்கள்)  போன்ற விபரங்களை கூகிள் தளத்தில்  காணலாம்.
 
அதில் வேடிக்கை என்னவென்றால் கோடிஸ்வரகள், அமைச்சர்கள் சொத்து விசயத்தில் வறுமைகோட்டிற்கு அருகே இருப்பதாக காட்டியிருப்பது  தான்!  மிக சில நல்ல அதிகாரிகள் கடந்த சில தேர்தல்களில் பல நல்ல கட்டுப்பாடுகள், விதிமுறைகள் என்று இந்த காமெடிகள் அதிகரிக்காமல் செய்திருக்கிறார்கள்! 
கடந்த  இடைதேர்தல் மாதிரி ஓட்டுக்கு ருபாய், பிரியாணி, சரக்கு என்று இந்த முறையும் மாநிலம் முழுக்க கிடைக்குமா என்று தெரியவில்லை. நம்ம முன்னாள் தலைவர் நாகு  இந்த முறை வாக்களிக்க முடியாமைக்கு மி்கவும் வருத்தப்பட்டு பேஸ்புக்கில் பதித்திருந்தார் - ஏன் என்று இங்கே சென்று பாருங்கள்

காரமான மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று படித்திருப்போம். 
ஆனால் அவற்றிலும் சில நன்மைகள் இருக்கிறது என்று சமீபத்தில் படித்தேன்.  ரத்த அழுத்தத்தை குறைப்பது, அல்செய்மர் (Alzheimer)  நோய் தடுப்பு சக்தி அதிகரிப்பு, உடல் எடை மற்றும் பருமனை குறைப்பது, டிப்ரஷன் எனப்படும் மன அழுத்தத்தை குறைப்பது என பல நன்மைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள் . அடிக்கடி லெட்டுஸ், தக்காளி, ஆலிவ் பழங்கள், வெள்ளரியை பன்னுக்கு இடையே வைத்து சாப்பிட்டு பழகினதால் என்னால் இப்பவெல்லாம் ஒரு சில்லி பரோட்டாவை கூட (இந்தியாவில்)  தொட முடிவதில்லை.  


  

Tuesday, April 28, 2009

போடுங்கம்மா ஓட்டு, சிலேட்டு சின்னத்த பார்த்து!...

யூடியூப் படம் காட்டி கொஞ்ச நாளாயிற்று. அதான்!



மனிதர் இணையத்தில் கலக்குகிறார். ஆர்க்குட், ஃபேஸ்புக் தளங்களில் பக்கங்கள் இருக்கின்றன. தளத்தில் அவரது எலெக்சன் மானிஃபெஸ்டோ ஈபேப்பரில். பார்லிமெண்டில் இருந்து ட்விட்டர் செய்ய என் ஆசிகள்.(நான் காலேஜ் சீனியர் ஆச்சே - அதான் ஆசி!)

தென் சென்னைக்கு தொலைபேசினால் நீங்கள் அவசியம் சேர்த்துக் கொள்ளவேண்டிய இந்தப் பதிவின் தலைப்பு. சரியா?

Sunday, April 26, 2009

படம் பாரு கடி கேளு - 27



அதெல்லாம் முடியாதும்மா. ஓட்டு போட்டவங்களுக்கு இந்த ஒரு விரலில் தான் மை வெக்க முடியும். நீ எல்லா விரலிலும் "நக பாலீஷ்" போட சொல்றியே. அடுத்த தேர்தலில இதுக்கே ஒரு சட்டம் கொண்டு வரணும் போலிருக்கே!

படம் பாரு கடி கேளு - 26



ஏதோ செல் போனுக்கு தான் மாடலிங் செய்ய கூப்பிட்டாங்கன்னு வந்தா இவ்வளவு பெரிய போனை என் தலையில மாட்டிட்டாங்க!

Friday, April 17, 2009

கில்லாடிப் பையன்!

இந்தியாவில் லோகசபை தேர்தல் ஆரம்பித்திருக்கிறது. 'உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத்தின்' தேர்தல். இந்த தேர்தலில் என்னைக் கவர்ந்த வேட்பாளர்: சரத்பாபு! சினிமா நடிகர் சரத்பாபு இல்லை!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சரத்பாபு. அவரைப் பற்றி நான் இன்னும் சொன்னால், சொந்த கல்லூரி பெருமை பேசுகிறான் என்று நீங்கள் தள்ளிவிடாமல் இருக்க - இதோ இட்லிவடையாரின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

தென்சென்னையில் வாழும் உங்கள் உற்றார் உறவினர் அனைவரையும் இவருக்கு ஓட்டுப் போடச்சொல்லுங்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள், சரத்!

Wednesday, April 08, 2009

கில்லாடி பசங்க - 2

ரிச்மண்ட் வட்டார அறிவியல் போட்டியில் வேதியியல்  பிரிவில் முதல் பரிசு வாங்கிய விஜய் கோவிந்தராஜ்,  சூட்டோடு சூடாக மாநில சுற்றில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறான்.

சென்ற வார இறுதியில் வர்ஜினியா மாநில அளவில் நடந்த அறிவியல் போட்டியில் வேதியியல் பிரிவில் இரண்டாம் பரிசு வாங்கியிருக்கும் விஜய் கோவிந்தராஜுக்கும், அவனது பெற்றோர் ஷோபனா, கோவிந்தராஜுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

விவரங்கள் இந்தத் தளத்தில்.(விரைவில் வரும்)

Monday, April 06, 2009

கில்லாடி பசங்க...

ரிச்மண்டிலிருக்கும் தமிழ் குடும்பத்து சிறுவர் சிறுமியர் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். சமீபத்தில் நடந்த அறிவியல் போட்டிகளில் நம்ப பசங்க வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். மிட்லோதியனில் வசிக்கும் பார்கவி, கணேஷ் தம்பதியினரின் மகன் தருன் ஜுனியர் பிரிவில் பொறியியல் போட்டியில் வெற்றி வாகை சூடியிருக்கிறான். மேற்குக் கோடியில் வசிக்கும் ஷோபனா, கோவிந்தராஜ் தம்பதியினரின் மகன் விஜய் சீனியர் பிரிவில் வேதியியல் போட்டியில் வென்றிருக்கிறான். தருனுக்கும், விஜய்க்கும் வாழ்த்துக்கள்!


முழுப் பட்டியல் இங்கே....


கீழே இருக்கும் படத்தில் இருக்கும் டென்னிஸ் போட்டி முடிவுகளைப் பாருங்கள்.


டேவிஸ் போட்டி முடிவுகள் மாதிரி தெரிகிறதா? எல்லாம் நம்ப உள்ளூர் செய்திதான். உயர்நிலைப் பள்ளி டென்னிஸ் போட்டிகள் முடிவுகளின் மாதிரிதான் இவை. உயர்நிலைப்பள்ளி டென்னிஸ் குழுக்கள் மேல் தடுக்கி விழுந்தால் நம்ம பசங்க மேல்தான் விழவேண்டும். ஹென்ரைகோ பள்ளியில் வித்யா, வெங்கட் தம்பதியினரின் மகன் அர்ஜுன், செல்வி,மோகன் தம்பதியினரின் மகன் விக்னேஷும், வனஜா, பொருளாளர் நாராயணன் தம்பதியினரின் மகன் அஷ்வினும் கலக்குகிறார்கள். டீப் ரன் பள்ளியில் பிருந்தா, சங்கர் தம்பதியினரின் மகன் பரணி சங்கர், வேதா, சேகர் நாகேந்திரா தம்பதியினரின் மகன் ஜெயந்த். காட்வின் பள்ளியில் ஷீலா, கார்த்திகேயன் தம்பதியினரின் மகன் அர்ஜுன்!

ச ில போட்டி முடிவுகள் இதோ....

இவர்களிடம் இருந்து பெரியவர்களைக் காக்கத்தான் சென்ற முறை 20-25 வயது, 26-34 வயது, 35-37.5 வயது என்று பல பிரிவுகளாக தமிழ் சங்க டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றதாக ஊரில் வதந்தி.


பசங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா என்று பெரியவர்கள் சென்ற மார்ச் 28ல் 10 கிலோமீட்டர் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள். நானும் குடும்பத்தோடு கலந்து கொண்டேன். எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் (தமிழில் என்ன) எண்பது வயதான சங்கர் கலாவர்! ரிச்மண்டில் வசிக்கும் விஷால் உபாத்யாவின் தந்தை மூன்றாவது முறையாக கலந்து கொள்கிறார். சென்ற செயற்குழுவின் பங்கேற்பு அபாரம். நான், பொருளாளர் அரவிந்தன், செயலாளர் லஷ்மியின் கணவர் ஹரி(செயலாளரும் ஓடவேண்டியது கடைசி நிமிஷத்தில் ஜகா), பொதுச்சேவை சரண்யாவின் கணவர் சத்யா என்று கலக்கிவிட்டோம். இந்த குழுவின் மானத்தைக் காப்பாற்ற தலைவரின் மனைவி சாவித்திரி ஓடினார்கள். கூடவே ஷீலா கார்த்திகேயன்(கார்த்திக் க. நி. ஜ). ரவிச்சந்திரன் திருவேங்கடத்தானும்(லாவண்யா க.நி.ஜ), அஷோக் செட்டியும், ஜெயா செல்லையாவும் ஓடிய மற்ற பிரபலங்கள்.

முப்பதாயிரம் பேர் கலந்து கொண்ட இப்போட்டி கலகலவென்று திருவிழா மாதிரி இருந்தது. பலவகையான மனிதர்கள்! ஒரு கர்ப்பிணிப் பெண் என்னை விட வேகமாக ஓடினார். நிறைய பேர் மாறுவேஷத்தில் ஓடினார்கள். கர்ப்பிணிப்பெண்ணும் மாறுவேஷமோ என்று ஒரு சம்சயம்!


இந்த ஓட்டப்பந்தயப் போட்டிகளின் முடிவுகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாவது இப்படி சுட்டி கொடுத்தால், நாந்தான் எல்லோர் வயதையும் அம்பலப்படுத்தி விட்டேன் என்று கழுவேற்றி விடுவார்கள். ஏன் வம்பு? :-) திறமையிருந்தால் உங்களுக்கு தெரிந்த பெயர்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள். படங்களையும் பார்க்கலாம் இந்தத் தளத்தில். மாறுவேடத்தில் ஓடியவர்கள் படங்களையும், பல பந்தயப் படங்களையும், சிறுவர் ஓட்டப் பந்தய படங்களையும் பாருங்கள்.


என்ன, அடுத்த வருடம் நீங்களும் ஓடுகிறீர்களா?