Friday, April 25, 2008

கிராமத்து மீசை

கிராமத்தில், வரப்பில் இருக்கும் வயோதிகர் முதல், வழித்து தேநீர் ஆற்றும் வாலிபர் வரை, பொதுவாக நிறைய பேர், மீசை என்றாலே, சற்று அளவில் பெரியதாக வைத்திருப்பார்கள். அது பற்றிய கவிதை கிராமத்து மீசை.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_24.html

Thursday, April 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

ரிச்மண்ட் நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி!!!!!


எனது சமீபத்திய தமிழ் சங்கத்து விழாவைப் பற்றிய விமர்சனம் பலருக்கு மனவருத்தத்தை தந்திருப்பதாக சில நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. எனது விமர்சனங்கள் மற்றவர்களைப் புண்படுத்துவதற்காக எழுதப் படவில்லை. நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறியவர்களும் அடுத்த முறை பார்க்கத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் பட்டது. எப்பொழுது ஒரு செயல் மற்றவர்களைத் துன்புறுத்தியதோ அதை உடனடியாக நிறுத்துவதுதான் பண்பு. எனவே இனி வரும் எந்த தமிழ்சங்கத்தின் விழாவைப் பற்றியும் நான் விமர்சனம் எழுதி அதன் மூலம் எவரையும் வேதனைப் படுத்தப் போவதில்லை.

இந்த முடிவு நேற்று காலையிலேயே எடுத்து விட்டேன், சில நிமிடங்களுக்கு முன்பு எனது ஒரு நண்பன் சொன்ன ஒரு தகவலினால் இந்த முடிவை செயல் படுத்துவது சரி என்ற தீர்மானத்தை எடுத்து விட்டேன்.

அவன் என்னைத் தொடர்பு கொண்டு,

"பித்தா, என் மகளை கணிதம் கற்றுத் தரும் ஒரு இடத்தில் விட்டு விட்டு வெளியில் அவளுக்காக காத்திருக்கும் போது நமது சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் நீங்கதான் பித்தனா என்று கேட்டார், நான் இல்லை, நாகுவிடம் கேளுங்களேன் என்று சொல்லி விட்டேன் என்றான்.

அவன் பிறகு, "இந்தாப்பா எல்லோரும் நாந்தான் பித்தன்னு நெனைச்சு கிட்டு என்னை அடிக்க வர்ராங்க, அதனால், ஒன்று நீ யார் என்று சொல்லி விடு இல்லை நம் தமிழ் சங்கத்தைப் பற்றி இனி எழுதி என்னை அடி வாங்க வைக்காதே" என்றான்.

அவன் என்னிடம் இப்படி பேசியது இல்லை எனவே அவன் இப்படி பேசியதும் என்னுடைய இந்த முடிவிற்கு ஒரு காரணம்.


இதுவரை வெளி வந்த எந்த விமர்சனமாவது யாரையாவது எந்த அளவிலாவது வேதனைப் படுத்தியிருந்தால் அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு தமிழ் சங்கத்தின் இணைய தளத்தில் (அல்லது வலைப்பூ) சுதந்திரமாக எழுத அனுமதித்த அனைவருக்கும், முக்கியமாக என்னை எழுத அதிகம் ஊக்குவித்து எனது எழுத்துப் பிழைகளைத் திருத்தி, நான் என்ன எழுதினாலும் தவறாமல் பின்னூட்டமிட்டு எனக்கு ஆதரவளித்த நாகு அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

இதனால் நான் கிறுக்கப்போவதை நிறுத்தப் போவதில்லை, எனக்கென்று பல இருக்கின்றன, இந்திய அரசியல், தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், படித்த/படிக்கும் புத்தகங்கள், பார்த்த படங்கள், பார்த்த நாடகங்கள், பல கதாசிரியர்களின் தனித்துவம் போன்றவற்றை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
நாடகங்களின் விமர்சனத்தில், மே 11 நமது கோவிலில் அரங்கேற இருக்கும் ரம்பம்பம் ஆரம்பம் நாடகம் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை, எனவே கவலை வேண்டாம்.

பித்தன்.
piththanp@gmail.com

Saturday, April 19, 2008

அய‌ல்நாட்டுக் கணிப்பொறியாளன் க(வி)தை

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்றோரின் நிலை என்னவென்று யோசிக்கையில், நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களின் நிலையும், மற்றும் இதே போல நிறைய குடும்பங்களின் நிலையும் இப்படித் தான் இருக்கிறது.

மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். கவிதை எப்படி இருக்கிறது என்றும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_18.html

Thursday, April 17, 2008

வசந்தம்

மலர்கள் மலர்ந்திட
மகரந்தம் சிந்திட
புவிமகள் மீதினில்
பொன்போர்வை போர்த்திட
வசந்தம் வந்ததிங்கே!

வந்துதான் பாருங்களேன்! :)
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_17.html

Tuesday, April 15, 2008

எதிலும் உன் நினைவாய் !

ஒரு காதல் கவிதை. தலைவியைப் பார்த்து தலைவன் பிதற்றுவது.

எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம். (அதைத் தாங்கி நிறுத்தப் போகிறேனா என்று விவாதிக்க வராதீர்கள் =;) ). எண்ணங்களை சேகரித்து வைப்போமே என எண்ணியதன் விளைவு எதிலும் உன் நினைவாய் ! கவிதை.

வழக்கம்போல வந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_14.html

Monday, April 14, 2008

தமிழ்த்திரையுலகம் ஒரு பார்வை

2004ல் தமிழ் சங்க இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை. நம் சினிமா நான்கு வருடங்களில் மாறிவிடுமா என்ன? இன்னமும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.


தமிழ்த் திரையுலகம் ஒரு பார்வை


நடிகர் திலகம், மக்கள் திலகம், கலைவாணர், நடிகவேள், நாகேஷ், சாவித்திரி, பானுமதி, பத்மினி மற்றும் பலர் நடிப்பில் கொடி கட்டிய, இயக்குனர் சிகரம், இயக்குனர் இமயம், மகேந்திரன், ஸ்ரீதர் மற்றும் பலர் இயக்கத்தில் புதிய சகாப்தங்கள் படைத்த தமிழ்த் திரையுலகம் இன்று எங்கே உள்ளது என்று பார்ப்போமா?

முதலாவது தற்போது தமிழ்ப்படத்தில் நடிக்கத் தேவையான தகுதிகள். நடிகர்களை முதலில் எடுத்துக்கொள்வொம். கதாநாயகன் காவல் அதிகாரியாக அல்லாத எந்த ஒரு சமீபத்திய திரைப்படத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். கதாநாயகன் ஒரு வாரம் மழிக்காத தாடியுடன் காணப்படுவார். காரணம் பளிச்சென்று காணப்படும் நடிகரைத் தமிழ் மக்கள்(??) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்(!!) ஸ்ரீகாந்தை எடுத்துக்கொள்ளுங்கள். திருமணக்காட்சியில் கூட தாடியுடன் இருப்பார். இவர் தாடி வைத்திருந்தால் தரணி முழுவதும் இவர் பின்னால் வந்து விடுமா? தாடி இல்லாவிடில் இவர் தலையைக் கொய்து விடுவார்களா? ஏன் இந்த மூட நம்பிக்கை? அஜீத்!! இவர்தான் இந்த பாரம்பரியத்தை அமர்க்களத்தில் ஆரம்பித்து வைத்தார். அந்த உரிமையில் காவல் அதிகாரியாகக்கூட தாடியுடன் வலம் வருகிறார் ஆஞ்சநேயாவில். விஜய்!! காதலை ஏகபோக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு படத்திற்குப் படம் இறுதிக் காட்சிகளில் காதலைப் பற்றி அறிவுரைகளை அள்ளி வழங்கும் இவருக்கு தாடி வளர்வதே இல்லை. மிகவும் கடினப்பட்டு வளர்த்த சிறு தாடியுடன் ரசிகர்களை(!!!) மகிழ்விக்கிறார். காவல் அதிகாரியாக சாமியில் வரும் விக்ரம் கூட இந்த பாரம்பரியத்தை மாற்ற மனமில்லாமல் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு ஒரு காட்சியில் தாடியுடன் நடனமாடி ரசிகர்களை ஜென்ம சாபல்யம் அடைய வைக்கிறார். ஏன்! நம் சூப்பர் ஸ்டாரும் பாபாவில் ஒரு வார தாடியுடன் தோன்றி ரசிகர்களைப் பிறந்த பயனை அனுபவிக்க வைக்கிறார். உலக நாயகன் மாத்திரம் இளப்பமா? காணுங்கள் பம்மல் கே சம்பந்தம். கதாநாயகனுக்குப் பொதுவாக எல்லாமே தெரியும். பாட்டு பாடுவார், நடனம் ஆடுவார். எந்த இசைக்கருவியையும் சரளமாக வாசித்து கதாநாயகியை வியக்க வைப்பார். கராத்தே, சிலம்பு, குத்துச்சண்டை உட்பட சகல சண்டை முறைகளையும் அறிந்தவர். மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்று நினைத்து இவர் கையாளும் பல யுக்திகள் அபத்தங்களாக முடிவதுண்டு. தன் ரசிகர்(!!!)களுக்கு என்ன பிடிக்கும் என்பதை இவர் அறிந்திருக்கும் போது, அடுத்த தலைமுறை நடிக்க வந்து இவரை ஒதுக்கியிருப்பார்கள்.

தமிழ்ப்படக் கதாநாயகிக்குக் குறைந்த பட்சத் தேவை, தமிழ்நாட்டில் பிறந்திருக்கக் கூடாது. அப்படிப் பிறந்திருந்தாலும் மும்பையில் வளர்ந்ததாகப் பொய் சொல்ல வேண்டும். பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளில் தோன்றி வேண்டுமென்றே அரைகுறைத் தமிழில் பேசி ரசிகர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்ய வேண்டும். வாய்ப்புகள் குறையும் போது, எனக்கு முதலிடம், இரண்டாம் இடம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை என்றும் வாய்ப்புகள் அறவே இல்லாதபோது கன்னடத்திலும், கேரளத்திலும் முழு கவனம் செலுத்துவதாகவும் சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை, ஆனால் அதுவே ஆபாசமாக மாறி விடக் கூடாது எனபதில் இவர் உறுதியாக இருப்பார். படத்தில் ஒரு நடனம் மட்டும் ஆடும்போது 'சங்கர் சார் படம் என்பதால் ஒத்துக்கொண்டேன், என் மார்க்கெட் ஒன்றும் சரிந்து விடவில்லை' என்று சப்பைக்கட்டு கட்டுவார். ஒரு இயக்குனரின் முதல் மனைவியாகவோ அல்லது புகழ் பெற்ற நடிகரின் இரண்டாவது மனைவியாகவோ சரணடைந்து தொலைக்காட்சி நெடுந்தொடரில் நடிக்க முடிவு செய்யும் போது இவரது வாழ்க்கை முழுமை பெறுகிறது.

அடுத்து நகைச்சுவை. நகைச்சுவை நடிகருக்கு பொது அறிவு தேவை. 'அடப்பாவி, நீ என்ன ஜார்ஜ் புஷ்ஷா? நா என்ன பின் லேடனா? மெட்ராஸ் என்ன டோரா போராவா?' என்று தற்காலிக உலக நடப்புகளைப் பற்றிப் பேசி ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும். தரக்குறைவான விஷயங்களைப் பற்றிக் கூச்சப்படாமல் பேச வேண்டும். சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை சரளமாக உபயோகப்படுத்தத் தெரிய வேண்டும். மனைவி கணவனைக் கரிக்கட்டை என்றும், கணவன் மனைவியைக் குறத்தி என்றும் அன்பாக அழைத்து ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். நாயகன் எவ்வழியோ இவர் அவ்வழி. நாயகன் பேட்டை ரௌடி என்றால் இவர் உதவியாளனாக வந்து சண்டையும் இடுவார். நாயகியிடம் நாயகனின் உள்ளே இருக்கும் ஈர மனதை பக்குவமாக எடுத்தும் சொல்வார். நாயகன் கல்லூரி மாணவர் என்றால் நாற்பது வயதாகும் இவர், கல்லூரியில் தேறாமல் பல வருடங்கள் படித்து வரும் முதிய மாணவராக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார். நாயகன் உயர் காவலதிகாரி என்றால் இவர் கான்ஸ்டபிளாக வந்து பெண் கான்ஸ்டபிளிடம் சில்மிஷங்கள் புரிய வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் வீணடிப்பதில்லை. மதங்களையும் மூடநம்பிக்கைகளையும் விளாசும் இவர் தற்காப்புக்கு தன் ஜாதிச் சங்கங்களை நாடுவார்.

இயக்குனருக்கு வருவோம். இவருக்கு இயக்கத் தெரிந்திருக்க அவசியமில்லை. ஒரு கதை வைத்திருப்பார். அந்தக் கதை இது வரையில் எந்தப் படத்திலும் சொல்லப்படவில்லை என்பதில் அசாத்திய நம்பிக்கை உள்ளவர். இந்தக் கதையை அங்கீகரிக்கும் ஒரு அப்பாவி தயாரிப்பாளர் கிடைத்து விட்டால் இயக்கம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைப்பவர். குழந்தைகள் கூட எளிதாக ஊகிக்கும் ஒரு விஷயத்தைத் துருப்புச் சீட்டாக எண்ணி இறுதிக் காட்சியில் அமைப்பவர். ஒரு மும்பை நாயகி, அவளை இது வரை எந்த நாயகனும் செய்திராத வகையில் வித்தியாசமாகக் காதலிக்கும் ஒரு வார தாடி வைத்த நாயகன், இறுதிக் காட்சியில் நாயகன் நாயகிக்காகச் செய்யப்போகும் தியாகம், புதிதாகப்(!!) போடப்பட்டது என்ற உறுதிமொழியொடு இசையமைப்பாளர் அளித்து அயல்தேசத்தில் படம் பிடிக்கப்பட்ட சில பாடல்கள் ஆகியவற்றை நம்பி 'A, B சென்டர்ல ஓடிரும் சார், C மாத்திரம் பிக் அப் ஆயிடுச்சின்னா 2 வாரத்தில போட்டபணம் எடுத்திடலாம்' என்று தயாரிப்பாளருக்கு ஆசை காட்டுபவர். 'வழக்கமான முக்கோணக் காதல் கதை என்றாலும், ஒரு மாறுபட்ட கோணத்தில் (270 டிகிரீஸ்???) எடுத்திருக்கிறோம் என்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பவர். படம் ஓடவில்லை என்றால் 'ரசனை கெட்ட ஜென்மங்கள்' என்ற பட்டத்தை மக்களுக்குத் தருபவர்.

இசையமைப்பாளர், இவருக்கு இவரே சூட்டிக்கொண்ட ஒரு பட்டம் இருக்கும். மறு உபயோகத்தில் அபார நம்பிக்கை கொண்ட இவர் ஒருபோதும் சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிப்பதில்லை. பொருள் சார்ந்த முறை (OOM) யைப் பயன்படுத்தி இவர் மென்பொருள் தயாரிக்க முடிவு செய்தால் கிரேடி பூச் போன்றவர்கள் இசைத்துறைக்கு மாற வேண்டி இருக்கும். இசை அமைப்பதை ஒரு தொழிற்சாலை நடத்துவது போலக் கருதும் இவருக்குத் தரக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை இருப்பதில்லை. திரைப்பட அரங்குகளில் சிறுகடை நடத்துபவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களின் அபிமானத்துக்கு உரியவர். பாடல்களில் கூடுமான வரை அர்த்தம் இருக்கக் கூடாது. அகராதியில் உள்ள வார்த்தைகளை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். தம்பியின் நினைவு தினத்தை 'போடாங்கோ' என்று பாடி அனுசரிக்கலாம். ஓடிப் போவது கல்யாணத்திற்கு முன்பா பின்பா என்று உபயோகமான ஆலோசனைகளை அள்ளி வழங்கலாம்.

கதைக்கு செல்வோமா? மிக எளிது. நாயகன் நாயகியை எப்படியாவது காதலிக்க வேண்டும். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும். நாக்கை வெட்டிக் கொள்ளலாம். பார்க்காமல் காதலிக்கலாம். தொலைபேசியில் காதலிக்கலாம். முதல் காட்சியில் நாயகனும் நாயகியும் சந்தித்து எந்த தகவலும் பரிமாரிக்கொள்ளாமல் பிரிந்து விட்டு, பின்னர் படம் முழுவதும் பரஸ்பரம் தேடலில் செலவு செய்யலாம். காதல் ஒருமுறைதான் வரும், இரண்டாவது முறை வந்தால் அது காதலே அல்ல என்று காதலையே கண்டு பிடித்தது போல வசனம் பேசலாம். கண்டிப்பாக பாடல்கள் வேண்டும். நாயகனும் நாயகியும் டூயட் பாடும்போது சம்பந்தமே இல்லாமல் இருபது ஆண்களும் இருபது பெண்களும் பின்னால் ஆடி, தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
நாயகன் முதல்வராக இருந்தாலும் சரி, தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக நடனம் ஆடி ரசிகர்களைத் திருப்தி அடையச் செய்ய வேண்டும். தென்னவனில் விஜய்காந்த் தேர்தல் அதிகாரியாக வந்து நீலம், மஞ்சள், ஊதா, சிகப்பு மற்றும் பல கலர்களில் கிரணுடன் நடனம் ஆடி அரசு அதிகாரிகள் மீது நமக்குள்ள மரியாதையை உயர்த்துவது போகப் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை நிறைவு செயகிறார். நாயகனுக்கோ நாயகிக்கோ இறுதிக் காடசியில் வரும் நோய்கள் ஜனங்களின் மருத்துவ அறிவை அதிகரிக்கும். இறுதியாக சராசரி ரசிகன். இவனுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறியத் தலையைப் பிய்த்துக்கொள்ளும் திரைப்படக் கலைஞர்களுக்கு இவனுக்கே அது தெரியாது என்ற ரகசியம் தெரியாது. தன் அபிமான நடிகனின் உயர்ச்சியில் ஜென்ம சாபல்யம் அடையும் இவன், தன் வாழ்க்கையின் ஒரு பெரும் பகுதியைத் திரை அரங்கின் வெளியே கள்ள டிக்கெட் வாங்குவதிலும், VCD தேடி அலைவதிலும் செலவு செய்கிறான். முக்கால்வாசி நேரம் இளித்தவாயனாகவே இருக்கும் இவனே மொத்த திரையுலகின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாயகன்.

நன்றி
ச.சத்தியவாகீஸ்வரன்.

Sunday, April 13, 2008

அருவி

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சித்திரை வெயிலுக்கு இதமா அருவில வந்து கொஞ்சம் நனைஞ்சுட்டு போலாமே :)

Monday, April 07, 2008

தத்தி நடை பழகி

ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும், பிள்ளைகள் என்ன பண்ணுது, பேசச் சொல்லேன் என்றும், புதுசா போட்டா புடிச்சிருக்கீங்களா அனுப்பி வைங்க என்றும் நமது பெற்றோர் கேட்பது வெகுவான NRI நடைமுறையில் உள்ள ஒன்று. அவர்களைப் பற்றி இயன்றவரையில் ஒரு கவிதையில் வடித்திருக்கிறேன். வாசித்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_07.html

பெண்

நீங்க ஆணா இருந்தாலும் இதைப் படிக்கலாம்; தப்பில்லை.

Sunday, April 06, 2008

எது பெரிது


எந்த ஊனில் எந்தப் புற்றோ?

இந்தப் புற்றுநோயின் கொடுமை பெரிதா?
இத்தீங்கு வந்தவரின் துயரம் பெரிதா?

இந்நோயை வெல்ல முயன்ற பெவினின் உறுதி பெரிதா?
அவனுக்கு துணை நின்ற நண்பர்களின் நட்பு பெரிதா?
பலர் கண்களைத் திறந்த வினய்யின், சமீரின் சாதனை பெரிதா?
எட்டு வயது ஆதித்யாவை இழந்த பெற்றோரின் சோகம் பெரிதா?
எட்டு மாதம்கூட நிரம்பாமல் சென்ற பிரனவின் இழப்பு பெரிதா?

சிகிச்சை பெற்றுவரும் தாயைப் பிரிந்த இரு சிறார்களின் தவிப்பு பெரிதா?
மருத்துவமனையிலேயே குடியிருக்கும் இவர்தம் குடும்பத்தின் பொறுமை பெரிதா?
குழந்தைகளுடனும் மருத்துவமனைக்கும் அல்லாடும் மனைவியின் மனதிடம் பெரிதா?
மகன் படும் இன்னலை பார்க்கும் வயதான தந்தையின் சகிப்பு பெரிதா?
இவர்க்கு உதவ முடியாமல் தவிக்கும் உற்றாரின் இயலாமை பெரிதா?
இந்நோயின் தீவிரம் உணரா மக்களின் உதாசீனம் பெரிதா?

இவர்க்கு பொருத்தம் தேட உழைக்கும் நண்பர் உழைப்பு பெரிதா?
பொருத்தம் கிடைத்தவுடன் அனைவரும் அடையும் மகிழ்ச்சி பெரிதா?
பொருள் வழங்கும் அறிமுகமற்ற மக்கள் மனித நேயம் பெரிதா?
இந்நோயை வெல்ல முயலும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் முயற்சி பெரிதா?
எண்ணற்ற மருத்துவர்களின் ஆராய்ச்சி பெரிதா?

இவ்வனைத்தையும்விட பெரிதாக வேண்டும்