Sunday, September 27, 2009

நடையா, இது நடையா...

சென்ற வார இறுதியில் சாரணர்களுடன் தெரியாத்தனமாக ஒரு முகாமுக்கு போக ஒத்துக் கொண்டேன். முதுகில் மூட்டையை சுமந்து கொண்டு ஏழு மைல் நடந்துபோய் முகாம் அமைத்து சமைத்து சாப்பிட வேண்டுமாம். வீட்டில் நம் இடுப்பளவை வைத்து ஒரு சிக்ஸ் சிக்மா பிராஜக்ட் ஆரம்பித்திருப்பதால், இரண்டு நாள் தப்பிக்கலாம் என்று சரி செய்யலாம் என்று கிளம்பினேன். பக்கத்து முகாமில் Wild Women Weekend நடக்கிறது, 21 வயது பெண்குழந்தைகளுக்கு இயற்கையோடு ஒன்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்கள் என்று வேறு ஆசை காட்டினர். அப்படியும் வருகிறேன் என்று சொன்ன நிறைய தந்தையர்குலம் கடைசி நிமிஷத்தில் கழண்டுகொண்டனர். என்னடா விஷயம் என்றால் எனக்குத் தெரியாமல் ஏழு மைல் நடை, ஒன்பதாகியிருந்தது. அடப்பாவிகளா. நம்மை வைத்து இப்படி ஒரு காமெடியா?

நாங்கள் போன இடம் அருமையான இடம். வர்ஜினியா பீச்சிற்கு தெற்கே சுற்றும் நீர் சூழ்ந்த் ஒரு தீபகற்பம்(அப்படி என்றால் என்ன என்று கேட்கக்கூடாது). ஒரு மைல் குறுக்களவில் நீண்டிருக்கும் ஒரு நிலப்பரப்பு. வர்ஜினியாவிலேயே இந்த மாநிலப் பூங்காவிற்குத்தான், மிகக்குறைந்த மக்கள் போவார்களாம். ஏன் தெரியுமா - இந்தப் பூங்காவிற்கு நீங்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோதான் போகலாம். காரில் முடியாது. வயதானவர்களுக்கு சுற்றிக் காண்பிக்க ஒரு டிராம் போகிறது. அதில் ஏற பிறப்புச் சான்றிதழ் எல்லாம் கேட்பார்கள்.

நாங்கள் காலையில் கிளம்பியபோது பேருந்தளவில் இருந்த நம் வேனைப் பார்த்துவிட்டு ஐந்து வா/சாரணர்களை ஏற்றிவிட்டார்கள். போய் சேருவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. ஒருவன் Q94 வை என்கிறான், ஒருவன் 98 வை என்கிறான், ஒருவன் இவன் அடிக்கிறான் என்கிறான்... போங்கடா என்று பாய்ஸ் பாட்டு கேட்கவைத்தேன். அதில் ஒருசில வார்த்தைகள் தமிழில் இருந்தால் அவர்களுக்கு சரியாகப் புரியவில்லை. 'அடியே கொல்லுதே' பசங்களுக்கு கொஞ்சம் ஓகே. Car Talk அது இது என்று ஓட்டிவிட்டேன். பதினோரு மணிக்கு போய் சேர்ந்தோம். கொஞ்சம் நடந்துவிட்டு கொண்டு வந்த மதிய உணவை சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டோம். முதலில் ஒரு தார் ரோடு. நல்லவேளையாக மேகமூட்டமாக இருந்ததால் வெயில்சூட்டில் இருந்து தப்பித்தோம். ஒரு கொடுமை என்ன என்றால், போன வழியில் கடலோசை கேட்கிறது, கடல் வாசம் தெரிகிறது, ஆனால் கடல் தெரியவே இல்லை. கடல்பக்கம் நெடுக்க மணல்குன்றுகள் கடலை மறைத்திருந்தன.


வந்த சிறுவர்களிலேயே சிறியதாக இருந்த பையனின் மூட்டை என் மூட்டையை விட கனமாக இருந்தது. கேட்டால் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் என்கிறான். அவனுக்கு நடக்க மிகவும் சிரமமாக இருந்தது. நம்முடைய புத்திர சிகாமணி ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே எனக்கு இது முடியாது திரும்பவேண்டியதுதான் என்றான். அதனால் அடுத்த ஒரு மணிநேரம் அவன் பக்கமே போகவில்லை. குட்டிப்பையனுக்கு துணையாக நடக்கிறேன் பேர்வழி என்று நானும் அவனுடன் மெதுவாக தவழ்ந்து போனேன்.

கூட வந்த சாரண ஆசிரியர் நாங்கள் நடக்கும் வேகம் ஒரு மணிக்கு ஒரு மைல், இந்த வேகத்தில் இரவு எட்டு மணியாகிவிடும் என்று வயிற்றில் புளியைக் கரைத்தார். ஒரு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தோம். 'அத்தியாவசிய பொருட்களில்' freezer ice pack போன்ற சில குப்பைத்தொட்டிக்கு போனது.

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். பெரிய சாரணர்கள் விரைவில் போய் சேர்ந்து திரும்ப வந்து பொடியன்களின் மூட்டைகளை சுமக்கிறோம் என்று விரைவாகப் போய்விட்டார்கள். நாங்கள் நாரை, மைனா, ஆர்க்டிக் டர்ன்(பையனின் உடான்ஸ்?) என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு மெதுவாகப் போனோம்.



பொடியனை கொஞ்சி கெஞ்சி நடக்கவைத்து மெதுவாகப் போய்க்கொண்டிருந்தோம். மகமாயி ஒரு போலீஸ்காரி ரூபத்தில் வந்து எங்களுக்கு அருகாமையிலேயே ஒரு கேம்ப் சைட்டில் இடம் கிடைத்திருக்கிறது என்று அருள் பாலித்தாள். மூன்று மைல் நடை மிச்சம். பசங்களுக்கும் அசுரபலம் வந்து ஒரேமூச்சில் முகாமை அடைந்தார்கள். மூட்டையை இறக்கிவைத்தேன். சுமை இறங்கியதும், கால்கள் தன்னாலே நடக்க ஆரம்பித்தன. விசித்திரமான அனுபவம்.





From False Cape State Park

கூடாரங்களை அமைத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம். யாருமே வராத இடம் என்பதால் பூங்கா மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு வகையான லாரல் மரங்கள் அடர்ந்த இடம் நாங்கள் தங்கியிருந்த இடம். தாழ்வாக பரந்து விரிந்த மரங்கள் எங்களூர் முந்திரிக் காடுகளை நினைவூட்டின. அமைதியான வளைகுடா எங்களை இளைப்பாற வைத்தது.

களைப்பெல்லாம் பெரியவர்களுக்குத்தான். பசங்கள் கடற்கரை போகவேண்டும் என்றார்கள். கிளம்பினால் கடற்கரை ஒன்றரை மைல் தூரம் :-(
கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு முகாமுக்குத் திரும்பினோம்.





From False Cape State Park

இரவு உணவு தயார் செய்தோம். வேறென்ன - கொதிக்கவைத்த நீரில் ராமென் நூடுல்ஸ். ஒரு ஆள் பையிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு எடுத்து எண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.





From False Cape State Park

இங்கே கேம்ப் ஃப்யர் எல்லாம் பண்ணக்கூடாது என்பதால் அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம். படுக்கையில் தலையை சாய்த்ததுதான் தெரியும். காலையில் உலகில் உள்ள புள்ளினங்கள் எல்லாம் என் கூடாரத்துக்கு வெளியே போட்ட கூப்பாட்டில்தான் எழுந்தேன். காலை உணவு கொதிக்கும் நீரில் ஓட் மீல். கூடாரங்களைக் கலைத்து, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பினோம். இந்த முறை கடற்கரை ஓரமாக நடை.

நல்ல வெயில். ஆனால் அலையோரமாக நடந்ததால் வெயிலின் சூடு தெரியவில்லை. கரையெல்லாம் நிறைய ஹார்ஸ் ஷூ நண்டு ஓடுகள் கிடந்தன. சிலவற்றில் முழு நண்டின் உடலே இருந்தது. அங்கங்கே குட்டியாக கருப்பில் சுருக்குப்பை மாதிரி கிடந்தது. மெர்மெய்ட் பர்ஸ் என அழைக்கப்படும் அந்தப் பை சுறா முட்டைகள் அடங்கிய பையாம். மேலும் சில பெலிகன்களைப் பார்த்தோம். ஒரு டால்பின் கும்பலையும் பார்த்தோம்.
From False Cape State Park
. கடைசி அரை மைல் கரையில் இருந்து உள்ளே பயணம். அப்போதுதான் வெயிலின் சூடு தாக்க ஆரம்பித்தது. கடைசி அரைமைல் பல்லைக் கடித்துக் கொண்டு விடுவிடுவென நடந்து காரை அடைந்தோம்.

நம்மூர் கர்நாடக சங்கீதம் மாதிரி இந்த மாதிரி நேரத்தில் எதுவும் உதவாது. வண்டியில் இன்னொரு பையனும் சேர்ந்து மொத்தம் ஆறு வா/சாரணர்கள். கிளம்பும்முன் ஒரு எச்சரிக்கை விடுத்தேன். ஏதாவது சண்டையோ சச்சரவோ ஆரம்பித்தால் இதுதான் நடக்கும் என்று ஒரு நிமிடம் ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டுக் காண்பித்தேன். அனைவரும் கப்சிப். வரும் வழியில் ரெண்டே ரெண்டு முறைதான் அந்தப் பாட்டை போடவேண்டி வந்தது.

மற்ற படங்களையும் பார்க்கிறீர்களா?

2 comments:

  1. நாகு,

    கலக்கிட்டீங்க. உங்க பதிவும் அருமை, உங்க படங்கள், சலனப் படங்கள் எல்லாம் அருமை. இது போல இன்னும் பல நூறு, ஆயிரம் முகாமுக்கு போய் வந்து எங்களுக்கு விளக்க வேண்டுகோள் வைக்கிறேன்.

    முரளி.

    ReplyDelete
  2. நன்றி முரளி.

    //இன்னும் பல நூறு, ஆயிரம் முகாமுக்கு போய் வந்து//
    கால் கொப்புளங்கள் இப்போதான் ஆறியது. நூறு, ஆயிரம்னு படிச்சாலே கால் வலிக்குது...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!