Friday, October 19, 2007

புத்தகவலம்

என்னய்யா யூட்யூபை வைத்து பதிவு நடத்துகிறாய் என்று அனைவரும்(சரி - ரிச்மண்டில் இருக்கும் இருவர்) கலாய்க்கிறார்கள். அதனால் யூட்யூப் பஜனை இல்லாத பதிவு இது.

முதலில் ஒரு அபூர்வமான படத்தைப் பாருங்க இங்கே. எல்லா ஆரஞ்சு கொக்குகளும் (அதாங்கோ ஃப்ளாமிங்கோ) சேர்ந்து ஒரு பெரிய ஆரஞ்சு கொக்கு செய்திருக்கின்றன. எங்கே ரூம் போட்டு யோசிச்சதுகளோ தெரியலை...

நேற்று ஒரு புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். A Certain Ambiguity: A Mathematical Novel - by Gaurav Suri & Hartosh Singh Bal

கணிதமேதையான ஒரு தாத்தா தன் பேரனுக்கு ஒரு கால்குலேட்டர் கொடுத்து புதிர்களின் மூலம் கணிதத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். பேரன் அமெரிக்கா போய் கணிதம் கற்கவேண்டும் என்று சொத்தை எழுதிவைத்து செத்துப் போகிறார். பேரன் அமெரிக்கா வந்து ஸ்டான்ஃபோர்டில் படிக்கிறான். தாத்தா 1919ல் நியுஜெர்ஸியில் சிறைத்தண்டனை பெற்றதை அறிகிறான். அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கணிதத்தை நாடுகிறார். புத்தகம் கைக்கு வந்ததும் மேலே சொல்கிறேன். :-) வேண்டுமானால் முதல் அத்தியாயத்தை படித்துக் கொள்ளுங்கள் இங்கே.

கணிதம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது சைமன் சிங்கின் புத்தகங்கள். அவருடைய கோட் புக் மிகவும் சுவாரசியமானது. ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரை மனிதன் எப்படி ரகசியமாக சங்கேத மொழியில்(encryption) தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விளக்குகிறார். ஜூலியஸ் சீஸர், ஸ்காட்லாந்து ராணியில் துவங்கி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா-இங்கிலாந்து ரகசிய தொடர்பு கொள்ள என்ன உத்திகள் எல்லாம் கையாண்டார்கள் என்று சுவாரசியமாக போகிறது புத்தகம்.


இந்த கணிணி உலகில் புழக்கத்தில் இருக்கும் என்கிரிப்ஷன் வகைகளும் சுலபமாக புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். மாணவர்கள் படிக்க நல்ல அழகான முறையில் விளக்கியிருக்கிறார். ஜெர்மனி உபயோகப்படுத்திய எனிக்மா கருவி மாணவர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய அருமையான தலைப்பு. வர்ஜினியாவில் புதையுண்டு இருக்கும் பொக்கிஷம் பற்றிய கதையும் சுவாரசியமானது. அதற்கான் வேட்டை இன்னும் வர்ஜினியாவின் லின்ச்பர்க் நகரில் நடக்கிறதாம். அடுத்த முறை அந்த பக்கம் போகும்போது கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.

அவருடைய பிக் பேங் தியரி பற்றிய புத்தகமும் அருமையானது. இந்த புத்தகமும் ஆதி காலத்திலிருந்து பல நாகரீகங்களில் உலகம் மற்றும் அண்டவெளியைப் பற்றி இருந்த பலவிதமான நம்பிக்கைகளில் ஆரம்பித்து இந்த நாள் வரை உலகம் உருவானதற்கான ஆராய்ச்சியைக் கோவையாக சொல்கிறார் சைமன். இவருடைய ஃப்ர்மட் தியரம் பற்றிய புத்தகமும் இந்த வகையில் ஆதிகாலத்து கணித மேதைகளில் ஆரம்பித்து தற்போதைய கண்டுபிடிப்பு வரை விளக்கியிருக்கிறார். இந்த புத்தகம்தான் பாதிக்கு மேல் எனக்கு OHT ஆகிவிட்டது(overhead transmission).

இந்த புத்தகங்களை எல்லாம் அண்மையில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் ஒன்றிருக்கிறது. பத்ரி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிக் இன்ஃபோ போன்ற தளங்களுக்கு காரணகர்த்தா. இப்போது இந்தியா திரும்பி கிழக்கு பதிப்பகம் என்ற பேரில் தமிழில் புத்தகங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த கிழக்குப் பதிப்பகம் அண்மையில் ஒருவரின் வரலாற்றை புத்தகமாக போட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த நபர் அகால மரணம் அடைந்தபோது நான் அடைந்த சோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.

இவர் இறந்து போன செய்தி கேட்டு, என் நண்பன் ஒருவன் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'தூக்கம் போச்சிடி அம்மா' என்று புலம்பிக் கொண்டிருந்தான். கரெக்ட்! சிலுக்கின் வாழ்க்கை வரலாறுதான் புத்தகமாக வந்திருக்கிறது. இந்த தாளாத துயரத்தைத் தணிக்க - புத்தகம் வந்ததற்கல்ல - எத்தனை முறை மூன்றாம் பிறை பார்த்தாலும் போதாது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் யாராவது இந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தால் என் ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுக்கிறேன்.(தமிழ் சங்க பொருளாளரிடம் சொல்லாதீர்கள்)



இப்போது நான் படித்துக் கொண்டிருப்பது மீரா காம்தார் எழுதிய Planet India. 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் சைனாவுக்கும்தான் சொந்தம் என்கிறார். உலகநாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்தியா என்கிறார். தட்பவெப்பத்தில் பார்த்தால் இமாலயக் குளிரிலிருந்து ராஜபுதன பாலைவன சூடுவரை... அரசியலில் பார்த்தால் கம்யூனிஸ்டுகளில் இருந்து மன்மோகன் சிங் வரை.... சினிமா, பொருளாதாரம், ஏழ்மை, பணம் அனைத்து எல்லா விளிம்புகளையும் அடங்கியதால், இந்தியாவே ஒரு சிறிய உலகம் போன்றது என்றும், எப்படி இந்தியா உலகத்தின் முக்கிய நாடாக திகழப்போகிறது என்று சொல்கிறார் மீரா.


நான் சதங்காவுடன் கூட்டணியை முழுமையாகத் துண்டித்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிக்கட்சிக்காக அல்ல. சுஜாதாவைப் பிடிக்காதாம். அதாவது படித்ததே இல்லை என்கிறார் மனுஷன். தமிழ்நாட்டில் எந்த குகையில் இருந்தார் என்று தெரியவில்லை. சுஜாதா படிக்காத நபர் யாராவது இருப்பார்களா? பிடிப்பது பிடிக்காதது அடுத்த விஷயம். அப்புறம் பிடித்த எழுத்தாளர் என்று நான் கேள்விப்படாத பெயர் எல்லாம் சொல்கிறார். அவருடைய தமிழ் வாத்தியார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த மற்றொரு எழுத்தாளர் அண்மையில் மறைந்த ஆர்ட் பக்வால்ட். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கடைசி பக்கம் நினைவிருக்கிறதா? அதற்காக வாரம் முழுவதும் காத்திருப்பேன். பள்ளியில் ஒருமுறை நான் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு என் ஆசிரியர் 'ஆர்ட் புக்வால்ட்' ரொம்ப படிப்பியா என்று கேட்டார். நியுயார்க் டைம்ஸில் புகழ்பெற்ற மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே கடைசி பேட்டி காண்கிறார்கள். அதில் அவருக்கே உரித்த பாணியில் அவருடைய மரணத்தை அவரே அறிவிப்பதை பாருங்கள். மனுஷன் சிரித்துக் கொண்டே அழவைக்கிறார். சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் P.G.Wodehouse. ரொம்ப நாள் கழித்து சில புத்தகங்களை படித்தேன்(மகனும் விரும்பிப் படிக்கிறான் - மகனுடன் புத்தகத்துக்கு சண்டை போடுவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை). உங்களுக்கு இரண்டு வினாடி வினா கேள்விகள்(அது என்ன வினா கேள்வின்னு கேக்கப்படாது).

1. ஜீவ்ஸின் முதல் பெயர்(first name) என்ன?
2. பெர்ட்ரம் வூஸ்டரின் நடுப் பெயர்(middle name) என்ன?

சரியான பதில் அளிப்பவருக்கு சிலுக்கு புத்தகத்திற்கு கொடுத்தது போக அடுத்த பாதி ராஜ்ஜியம்.

வர்ட்டா.... Toodle-oooo!!!

19 comments:

  1. சுஜாதாவின் படைப்பை வாசிப்பவர் தான் குகையில் இருக்க முடியும். நான் சொல்லவில்லை, அவரது எழுத்துக்களே சான்று.

    பல ஆண்டுகளுக்கு முன் (குமுதம் or ஆ.வி. எதிலோ ஒன்று) இவ்வாறு எழுதுகிறார் :

    உடம்பு சரியில்லாமல் போனபோது, இவர் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் விற்று மருத்துவச் செலவு செய்தாராம். கடைசியில் எஞ்சியது ஒரு பெஞ்சு தான் என்கிறார்.

    நீங்கள்லாம் (வாசகர்கள்) குகைவாசிகள் என்று நக்கலடிக்கிறாரா என்று தெரியவில்லை !

    மற்றும் இவர் போன்று இன்னும் சில பிரபல எழுத்தாளர்களையும் சொன்னேன், அவர்களை விட்டுவிட்டீர்களே !

    சுஜாதா என்று மட்டும் கூகாளாரிடம் கேட்டுப் பாருங்கள். கீழே சில உதாரணச் சுட்டிகள்.

    http://ullal.blogspot.com/2007/10/blog-post_10.html

    http://vivasaayi.blogspot.com/2007/07/blog-post_19.html

    http://baavaa.blogspot.com/2007/07/blog-post_20.html

    இவர்கள் எல்லோரையும் influential எழுத்தாளர்கள் வரிசையில் வைக்கலாமேயன்றி, ஆதர்ஸ எழுத்தாளர் வரிசையில் அல்ல !!!

    நான் சொல்லியவர்களைத் தெரியவில்லை என்றபோது, சுஜாதாவால் குகைக்குள்ளேயே வாழப் பழகியவர் நீங்கள் என்பது நிரூபனமாகிறது =:)

    1. திரு எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி, ஆ.வி. படிப்பவர்கள் அனைவரும் அறிவர். எளிய எழுத்துக்களைத் தெளிவாய், இருக்கத்தோடு வாசகரிடம் சேர்ப்பதில் வல்லவர்.

    2. திரு பிரபஞ்சன். இவர் பற்றித் தெரியவில்லை என்றபோது சற்று ஏமாற்றம் ! தெரியாத மாதிரி விளையாடுகிறீர்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. உங்கள் மனைவியின் ஊர்க்காரர் ஐயா.

    ReplyDelete
  2. Its Reginald and Wilberforce respectively.

    ReplyDelete
  3. வாங்க இந்திரா சாரி. சரியான விடைகள் :-)

    வூஸ்டரின் நடுப்பெயர் ஒரு குதிரையின் ஞாபகமாக வைத்தது என்று நினைவு. சரிதானே?

    ReplyDelete
  4. //சுஜாதாவின் படைப்பை வாசிப்பவர் தான் குகையில் இருக்க முடியும். நான் சொல்லவில்லை, அவரது எழுத்துக்களே சான்று.//

    பரவாயில்லை. மனுஷர் பொங்கியெழுந்துவிட்டார் :-) நான் தமிழில் புதிதாக படிப்பது எல்லாம் 80களோடு நின்றுவிட்டது. ஆகையால் தமிழ் எழுத்துக்களைப் பொறுத்தவரையில் நான் குகைவாசிதான். சுஜாதாவை ஆதர்ச எழுத்தாளர் என்று எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதைப்பற்றி என் வீட்டிலேயே சகோதரர்களுடன் நல்ல சண்டை நடக்கும். அவர் எழுதியவற்றில் ஒன்றும் நீங்கள் படிக்காததுதான் எனக்கு ஆச்சரியம்!

    ஏனய்யா மனைவியின் ஊர்க்காரர் என்றெல்லாம் சொல்லி குடும்பத்தில் குழப்பம் உண்டுபண்ணுகிறீர். ஃப்ரைட் ரைஸ் பின்னூட்டத்துக்கு பழியா? நடத்தும்!!


    குகைவாசி என்று அழைத்தால் நல்ல -ரெஸ்பான்ஸுக்கு என்னங்க தமிழில் - இருப்பதால், இதோ அடுத்த தாக்குதல்கள். கீழ்க்கண்ட நம் பதிவாளர்களை அன்புடன் குகைவாசிகளே என்று அழைக்கிறேன்.
    1. பரதேசி
    2. பித்தன்
    3. ஷான்
    4. ஜெயகாந்தன்
    5. கவிநயா
    6. இரமேஷ்
    7. முரளி
    8. அஜாதசத்ரு
    9. தேனப்பன்
    10. தருமி

    நான் பதிவுகளை யூட்யுபோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் போலிருக்கிறது. என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  5. பிரபஞ்சன்: எனக்கு மிகவும் பிடித்த கதைகள் - "மானுடம் வெல்லும்" மற்றும் "வானம் வசப்படும் (?)". இவை இரண்டும் 1700 களில் புதுச்சேரியில் பிரென்ச் ஆளுமையின் கீழ் வேலை பார்த்த ஒரு துபாஷ் பற்றிய கதை. அருமையான நடை, வட்டார மற்றும் 1700களின் வழக்கு சொல். இதற்காகவே ஆ.வி.க்காக காத்திருந்த காலம் உண்டு.

    சுஜாதா (எழுத்தை) பற்றி: அவரது நடை மற்றும் "technical" சமாச்சாரம் கலந்த கதைகள் பல மிக நல்ல எடுத்துகாட்டுகள். இவரது அறிவுஜீவி தனத்தை பலர் குறை சொன்னதுண்டு. 1990ல் கோவையில் அவரது நேருக்கு நேர் நிகழ்ச்சியில் 2 மணி நேரம் அசராமல் பலரின் (விதவிதமான topics) கேள்விகளுக்கு எளிய தமிழில் பதிலளித்தது எனைக் கவர்ந்தது. (இந்த காலத்தினரை போல கூகிளாண்டவர் துணையுடன் கட்&பேஸ்ட் அடித்து பதில் சொல்ல வில்லை.) ஆனால் இவரது எல்லா படைப்புகளும் எனக்கு ஒத்து வந்ததில்லை. அதற்காக அதை படிப்பவர்கள் குகைவாசிகள் அல்லர். உங்களுக்கு தெரிந்த/பிடித்த "Sci-Fi" அல்லது "fiction" வகைகளை தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் பெயரை வரிசை படுத்துங்கள். படித்துவிட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  6. // பிழை: ஆ.வி அல்ல தினமணி கதிர்.//

    ReplyDelete
  7. ராமகிருஷ்ணன் பெயர் எங்கேயோ நம்ம குகையிலேயே கேள்விப்பட்டிருக்கிறோமே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆ ஹா வந்துருச்சு... அதுவும் நான் எழுதியதில் சம்மந்தமான விஷயம்தான். நம் புகழ் பெற்ற ஞாபகசக்தியிலிருந்து(மீஜிக் இந்தியா ஆன்லைன் துணையுடன்) இதோ இந்த இறவா வரிகள்:

    "பின்குறிப்பு. தம்பி ராமகிருஷ்ணா - கூச்சப்படாம மற்றவைகளையும் படித்துக் காட்டவும்!"

    NSS campலிருந்து இரவு நழுவி சிதம்பரத்தில் பார்த்த படம். பாட்டில் வரும் காமாட்சி படத்தில் யாரென்று சொல்பவர்களுக்கு ஒரு பரிசும் கிடையாது. ராஜ்ஜியம் காலி!

    ReplyDelete
  8. //பிரபஞ்சன்: எனக்கு மிகவும் பிடித்த கதைகள் - "மானுடம் வெல்லும்" //

    இது தான் முதலில் படித்த பிரபஞ்சன் அவர்களின் படைப்பு. நீங்கள் சொன்னதுபோல அவரின் எழுத்து நடை அற்புதம். ஆனந்தரங்கம்பிள்ளை என்று நினைவு, அவரது டைரிக்குறிப்பை வைத்துத் தான் அந்நாவலை பிரபஞ்சன் எழுதியதாகச் சொன்னார்.

    //உங்களுக்கு தெரிந்த/பிடித்த "Sci-Fi" அல்லது "fiction" வகைகளை தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் பெயரை வரிசை படுத்துங்கள்.//

    சுஜாதா பேசாமல் Comics எழுதப் போயிருக்கலாம் ... ஒரு வேளை எனக்குப் பிடித்திருக்கும் :)

    சிங்கம் சிங்கிளா வருவதை fiction-ல் சேர்த்துக் கொள்ளலாமா ? அதுவும் ஆண் சிங்கம் ???

    ReplyDelete
  9. /ராமகிருஷ்ணன் பெயர் எங்கேயோ நம்ம குகையிலேயே கேள்விப்பட்டிருக்கிறோமே//

    80-ஐ விட்டு வெளியே வாருமய்யா ... ராமகிருஷ்ணனுக்கும், சிலுக்கும் என்ன சம்பந்தம் ? இப்படி ஒரு முடிச்சுப் போட உம்மால் தான் முடியும். ஆமா ... என்ன கொஞ்ச நாளா சிலுக்கு புராணம் பாடறீர் ? உங்க வீட்டுக்காரம்மா blog பாக்கறதில்லையா ?

    ஹைய்யா பத்திக்கிச்சு ....

    :)

    ReplyDelete
  10. ஹ்ம். வழிக்கு வந்திருக்கார் சதங்கா.

    அய்யா, அவர் இது தவிர நிறைய எழுதியிருக்கார். சும்மா கமர்சியல் மசாலாவ வச்சு அவர எட போடக்கூடாது.

    சண்டைகோழிக்கு வசனம்/பாடல் எழுதியது உங்க ராமகிருஷ்னன் இல்லேயே?!

    ReplyDelete
  11. //சிங்கம் சிங்கிளா வருவதை fiction-ல் சேர்த்துக் கொள்ளலாமா ? அதுவும் ஆண் சிங்கம் ???//

    "குருவிக்காரன் பொஞ்சாதி" என்னும் சினிமா பாடலை மட்டும் கேட்டுவிட்டு பாலமுரளி கிருஷ்ணாவை விமர்சிப்பது போலிருக்கிறது :-)

    ReplyDelete
  12. ஒ.கே ... ரெண்டு பேரு குகைய வெளியே வர முயற்சி செய்கிறீர்காள் ... வாழ்த்துக்கள் !

    //சிங்கம் சிங்கிளா வருவதை fiction-ல் சேர்த்துக் கொள்ளலாமா ? அதுவும் ஆண் சிங்கம் ???//

    இப்படி எழுதியது தவறென்று சொல்லவில்லை. ஏன் இளையராஜா, குன்னக்குடி, TMS, MSV போடாத மெட்டுக்களா, பாட்டுக்களா ... அவர்கள் நடைமுறையில் உள்ளவற்றை சொன்னார்கள். உங்கள் அறிவுஜீவி எந்த National Geographic சானலில் மேற்கண்ட காட்சியைக் கண்டார். அல்லது குகைவாசிகள் யாரேனும் சொல்லி எழுதினாரா ?

    வாதம் செய்வது, வழிக்கு வருவது ... see again you are trying to be influential ... என்னத்தச் சொல்ல ...

    ReplyDelete
  13. எனக்கு இந்த 'அறிவுஜீவி' வாதம் புரியவில்லை. நீங்களோ சுஜாதா எழுதியது எதையும் படித்ததில்லை என்கிறீர்கள். எனக்குத் தெரிந்தவரை சுஜாதா அவரை அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்ளவில்லை.

    நீங்கள் என்ன ராமகிருஷ்ணன், பிரபஞ்சன் அவர்களின் character certificate வாங்கி வைத்துக்கொண்டு படிக்கிறீர்களா? இல்லை அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல என்று எந்த கட்டப்ஞ்சாயத்திலும் தீர்ப்பு கொடுத்தார்களா? சுஜாதா தம்மை எப்படி நினைத்துக் கொண்டால் நமக்கென்ன? name-dropping ஒரு குற்றமென்றால், என் இந்த பதிவு எந்த வகை? :-)

    எழுதுபவரின் குணநலன்களைப் பார்த்தால் உங்களூரில் மூக்குடைப்பட்ட கவிச்சக்கரவர்த்தி முத்ற்கொண்டு யாரையும் படிக்கமுடியாது!!!

    ReplyDelete
  14. இதில் personal character எப்படி வந்தது ? அப்படி எனது பின்னூட்டங்கள் இருந்தால் மன்னிக்கவும்.

    முழுக்க விமரிசிப்பது அவரது கர்வமான எழுத்தை. அவரை அல்ல.

    கணையாழியின் கடைசிப்பக்கம்
    ஹைக்கூ என்றுளறல்
    அரசாங்க ஓட்டுமெசின்
    இன்டெர்நெட் ஒருங்கிணைப்பு
    என்று இவரிலாத்
    துறையே இல்லை

    இதற்கு மேல் தானொரு அறிவுஜீவி என்று நேரிடையாய் அவர் சொல்லாத குறை. எல்லாவற்றிலும் பங்கு பெறுவது நல்ல விசயம். ஆனால் அதற்கெல்லாம் அவர் விடும் built-up இருக்கே. அப்பப்பா ...

    //சுஜாதா தம்மை எப்படி நினைத்துக் கொண்டால் நமக்கென்ன? name-dropping ஒரு குற்றமென்றால், என் இந்த பதிவு எந்த வகை? :-)//

    நினைத்துக் கொள்ளலாம், அதில் தவறில்லை. ஆனால் தனது படைப்புக்களில் புகட்டாதவரை =:)

    ReplyDelete
  15. //
    இதற்கு மேல் தானொரு அறிவுஜீவி என்று நேரிடையாய் அவர் சொல்லாத குறை. எல்லாவற்றிலும் பங்கு பெறுவது நல்ல விசயம். ஆனால் அதற்கெல்லாம் அவர் விடும் built-up இருக்கே. அப்பப்பா
    //

    சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல. ஒருத்தர் எல்லா துறையிலும் தெரிந்து வைத்து தனது எழுத்துகளில் அதைப்பற்றி சொல்ல வருவது எந்த விதத்தில் தவறு!! எனக்கு அவர் built-up எங்கெ விட்டாருன்னு தெரிந்து கொள்ள ஆசை.


    படிக்கர ஒரு சிலர் மட்டும் அவர அறிவு ஜீவின்னு நெனச்சிட்ட பத்தாது. அதுக்கு சில தகுதிகள் உண்டு.(அது தனியா விவாதிக்கலாம்). நீங்களா சில படைப்புகள வச்சு "அறிவு ஜீவித்தனம்" என சொல்வதை என்னால் ஒத்துக்க முடியல.

    //ஹைக்கூ என்றுளறல்
    - huh!

    (சரி, சண்டக்கோழி வசனம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணனனா மேலே குறிப்பிட்டது?)

    ReplyDelete
  16. Let me summarize what you are saying...

    சுஜாதா இந்தியாவில் தேர்தலில் ஓட்டு போடும் மெஷின் தயாரித்து அதை தேர்தல்களில் பயன்படுத்துவதற்கும் மெனக்கெடலாம். ஆனால் அதைப் பற்றி அவர் எழுதினால் மேதாவித்தனம்.

    சங்ககாலப் பாடல்களை எளிய மரபுக்கவிதைகள் மூலமே விளக்கலாம். ஆனால் அது புத்திசாலித்தனமாக இருக்கக்கூடாது. அனைவர்க்கும் புரிகிறமாதிரி அறிவியல் புத்தகங்களும், புதினங்களும் எழுதலாம். ஆனால் அதில் புத்திசாலித்தனமாக எதுவும் இருக்கக்கூடாது.

    'எட்டு வரி எழுத எட்டுப் புத்தகங்களைப் படிக்கிறவர்' அந்த எதையும் மேற்கோள் காட்டாமல் அடக்கி வாசிக்கவேண்டும்.

    சிறுகதைகள் எழுதுவதில் புதிய உத்திகளை புகுத்தியவர், மேடை நாடகங்களை காட்சியமைப்பு முதற்கொண்டு எழுதி கலக்கியவர் தன் பாத்திரங்களில் தனது புத்திசாலித் தனம் எதையும் காண்பிக்கக்கூடாது. அவரது பாத்திரங்கள் அனைவரும் Forrest Gump மாதிரி இருக்க வேண்டும்.

    I agree. It's a tall order and he fails badly.

    எழுதுகிறவரின் புத்திசாலித்தனம் பாத்திரம் மூலமாகத்தான் தெரியும். எனக்கு இந்த 'அறிவுஜீவி' வாதம் இன்னும் புரிபடவில்லை. ஷெர்லாக் ஹோம்ஸின் புத்திசாலித்தனம் எங்கிருந்து வந்தது என்கிறீர்கள்?

    ReplyDelete
  17. //'எட்டு வரி எழுத எட்டுப் புத்தகங்களைப் படிக்கிறவர்' அந்த எதையும் மேற்கோள் காட்டாமல் அடக்கி வாசிக்கவேண்டும்.//

    இவ்வளவு ஆராய்ச்சி செய்து, சினிமா வசனங்களில் கோட்டை விடுவது ஆச்சரியம். மசாலா அப்படினா, மட்டம் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா ?

    'பாய்ஸ்'னு ஒரு அற்(புத)மான படம். பல கோடி மக்கள் பார்த்த படத்திற்கு, நம்ம 'அறிவுஜீவி' அவர்களின் வசனம். என்னய்யா, இப்படி தூள் கிளப்பியிருக்காறே சுஜாதா என்று கேட்டதற்கு, அது அவர் முடிவல்ல, திரைக்குழுவினர் முடிவு என்கிறீர். ஒரு உயர்ந்த நிலையில் இருக்கும் இவர், ஏன் தன்னை compromise செய்து கொள்ளவேண்டும் ? போனால் போகிறது, மட்டமான மசாலா தானே என்றா ?

    நம்ம ப்ளாக்ல ஒரு 'ஞ்' கவிதய எழுதிப் போட்டபோது, எத்தனை பேர் வாசித்திருப்பார்கள் ? ஒரு ஐந்து, பத்து ? அதுக்கே சிலர் பொங்கி எழுந்தார்கள் ! அப்படி இருக்கையில் மேற்கண்ட படத்திற்கு எழுதிய வசனத்தை விமரிசித்தால், அது மசாலா, அதைப் பற்றி பேச வேண்டாம் என்கிறீர்கள் !

    //எழுதுகிறவரின் புத்திசாலித்தனம் பாத்திரம் மூலமாகத்தான் தெரியும். எனக்கு இந்த 'அறிவுஜீவி' வாதம் இன்னும் புரிபடவில்லை. ஷெர்லாக் ஹோம்ஸின் புத்திசாலித்தனம் எங்கிருந்து வந்தது என்கிறீர்கள்?//

    அப்ப. கொலையைப் பற்றி அழகாகச் சித்தரித்து எழுதினால் அந்த எழுத்தாளர் கொலையாளியா ? கயமை பற்றி எழுதினால் நயவஞ்சகனா ? காதல் பற்றி எழுதினால் மன்மதனா ?

    சண்டைக்கோழி என்று படம் வந்ததே பலருக்குத் தெரியாது. அதற்கு வசனம் யாரென்றும் தெரியாது. காரணம் என்னவாக இருக்கும் ? ராமகிருஷ்ணன் யாரென்றே தெரியாது என்ற நீங்கள், இந்தப் படத்திற்கு அவர் தானே வசனம் என்று கேட்பது, ராமகிருஷ்ணன் யாரென்று தெரிந்த எனக்கு, அவர் தான் வசனம் எழுதினார் என்று தெரியாமல் போனது இரட்டை ஆச்சரியமாக உள்ளது !!

    ஏன், அரசாங்க ஓட்டு மெசின் இவரில்லை என்றால் ஓடாதா ? அல்லது மற்ற நடைபெறாமல்ப் போன நல்ல அரசு விசயங்கள் இவர் இல்லாததால் தான் நின்று போனதா ? அல்லது நடைபெற்றவை இவரது தயவால் தானா ?

    நிற்க.

    இடுகைக்கு முன் வருவோம். எனக்கு அவரை, அதாவது அவரது எழுத்தைப் பிடிக்கவில்லை என்று சொன்னேன். அதையே தான் இப்பவும் சொல்கிறேன். நான் கற்றது கைம்மண்ணளவே ஆயினும், பெற்றது பெரிதாக ஒன்றும் இல்லை. சுஜாதாவிற்காக நீங்க நம்ம கூட்டணிய முறிச்சிக்கறேன்னு சொன்னதால் தான் இவ்வளவு விளக்கம் தர வேண்டியதாகிவிட்டது.

    பின்னூட்டங்களை நீட்டிக் கொண்டு சென்றால், ராமகிருஷ்ணனோ, சுஜாதாவோ நமக்குச் சோறு போடப் போவதில்லை. "இன்னைக்கு வேல செஞ்சா நாளைக்குக் காசு". ஆள உடுங்க சாமிகளா ....

    ReplyDelete
  18. //சண்டைக்கோழி என்று படம் வந்ததே பலருக்குத் தெரியாது. அதற்கு வசனம் யாரென்றும் தெரியாது. காரணம் என்னவாக இருக்கும் ? ராமகிருஷ்ணன் யாரென்றே தெரியாது என்ற நீங்கள், இந்தப் படத்திற்கு அவர் தானே வசனம் என்று கேட்பது, ராமகிருஷ்ணன் யாரென்று தெரிந்த எனக்கு, அவர் தான் வசனம் எழுதினார் என்று தெரியாமல் போனது இரட்டை ஆச்சரியமாக உள்ளது !!
    //

    சதங்கா: அந்த ராமகிருஷ்ணன் தான் நீங்க சொன்னவரான்னு "இந்த பின்னூட்டத்திற்காக தெடும்வரை" தெரியாது. ப்ளாகிகள் அவரை குடைந்து எடுத்த வரிகளில் "சண்டைக்கோழி" மட்டுமே பிரதானமாக தெரிந்தது. இருக்கும் பல லட்ச எழுத்தாளர்களையும் தெரிந்து வைத்திருப்பது எல்லோராலம் முடியாது!!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!