Thursday, November 26, 2009

படம் பாரு கடி கேளு - 43


தூரத்தில் நிற்கும் இருவரில் ஒருவர்: என்ன மாடசாமி அது யாரு நடு வயலில் வயலின் வாசிக்கிறது?
மற்றவர்: யோவ் முனுசாமி, அது வயலின் இல்லைய்யா அது மிருதங்கம்.
அவரு ஏதோ வாசிச்சு பயிர் வளர்க்கறேன்னு சொன்னாரேன்னு நம்ம வயலில் இடம் கொடுத்தேன். அவரு வாசிக்கிறாரு வாசிக்கிறாரு நிறுத்தவே மாட்டேங்கிறாரு. அறுவடை மேல் அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். பரவாயில்லை. நல்ல வருமானம் தான்.

Monday, November 23, 2009

மீனாவுடன் மிக்சர் (அறிவிப்பு)

'கூப்பர்டினோவில் குஞ்சம்மா' எந்த நேரத்தில் எழுத ஆரம்பித்தேனோ தெரியலை, அந்த விமானம் பாவம் இன்னும் தரையை தொட்ட பாடு இல்லை.

ரெண்டாவது பாகம் ஏன் இன்னும் வெளியிடலைன்னு நிறைய பேர் கேக்கறாங்க. வேலை பளு அதிகம்னு கதை விடலாம்னு பார்த்தா உம்மாச்சி கண்ணை குத்திடுமோன்னு வேற பயம்மா இருக்கு. கற்பனை ஊற்று வத்தி போய் பாளம் பாளமா வெடிச்சிருக்கும் பாலைவனம் போல இருக்கு. இது தாங்க உண்மை. நிலைமை கொஞ்சம் சரியாகி எங்க வீட்டு நாயாவது சிரிக்கிற மாதிரி எழுத வந்தா உடனே அடுத்த பாகத்தை எழுதி வெளியிட்டுடுவேன், சரியா? சூளுரைத்து சொல்லறேன், இது என் அடுத்த சபதம். (ஒரு நாளைக்கு நாலு சபதம் போட்டா, இது தான் பிரச்சனை. இது எத்தனாவது சபதம்னு நியாபகம் வர மாட்டேங்குது. நல்ல காலம் Excel spreadsheet ல எழுதி வச்சிருப்பதால தப்பிச்சேன்.)

-மீனா சங்கரன்

Wednesday, November 18, 2009

சந்தைக்கு போவணும், ஆத்தா வையும், எஸ்.எம்.எஸ்ஸ நிப்பாட்டு....

ஏர்-டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் உதவி தொலைபேசி எண்ணுக்கு வரும் அழைப்புகளின் சில மாதிரிகள்....

உண்மையான சம்பவங்களா, இல்லை நக்கலடிக்கும் அழைப்புகளா என்று தெரியவில்லை.....

இங்கே கேட்கலாம்....

Sunday, November 15, 2009

படம் பாரு கடி கேளு - 42


Camera Man: அட சீ ஒத்துய்யா! உன் கிட்டே "close up shot" எடுக்கிறேன்னு சொன்னது தப்பா போச்சே! Camera உள்ளேயே போயிடுவே போலிருக்கே.

Tuesday, November 10, 2009

சங்கீதத் துறை மாற்றங்கள்

தமிழ் நாட்டில் நல்ல் இசை நிகழ்ச்சியை கேட்பதெல்லாம் அரிதாகிவிட்டது. சென்னை நகரத்தில் ஆண்டு இறுதியில் ஒரே காலத்தில் பல மன்றங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. மற்ற நகரங்களில் இத்தகைய மன்றங்கள் சரியாக செயல்படவில்லை. முன்பெல்லாம் திருவிழா காலங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சிகள் கூட வேறு வகையாக போய்விட்டது.

நகரங்களில் பல விழா காலங்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் திரைப்படப் பாடல்களே இடம் பெறும் இந்த மெல்லிசை நிகச்சிகளில் இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

20ம் நூற்றாண்டுக்கு முன்பு கர்நாடக சங்கீதத்திற்கு என்று தனியாக நிகழ்ச்சிகள் நடைபெற்றதில்லை. ஹரிகதா பாணியில் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு இடையில் கர்நாடக பாணியில் கீர்த்தனைகள் பாடப்பட்டன. முழுவதுமாக கீர்த்தனைகளை பக்கவாத்தியங்களுடன் பாடும் வகையில் நிகழ்ச்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தொடங்கின.

மெல்லிசை வகையில் சேரக்கூடிய ஜனரஞ்சகமான பாடல்கள், தெருக்கூத்து, நாடகம் ஆகிய மேடைகளில் பாடப்பட்டன. திரைப்பட வளர்ச்சி பெரிய அளவில் நிகழ்ந்த பிறகு மெல்லிசைக்கான தனி மேடை அமைந்தது. பெரும்பாலும் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் அந்த மேடைகளில் பாடினார்கள்.

மேடைகள் தனியாக அமைந்து நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் ஏற்பட்டது போலவே பக்க வாத்தியங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மெல்லிசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்களின் ஆதிக்கம் அதிகம்.

கர்நாடக சங்கீத மேடையின் நிலைமை வேறு. அதிகமான எண்ணிக்கையில் பக்க வாத்தியங்கள் கொண்ட கச்சேரிகள் இப்பொழுதெல்லாம் அநேகமாக நடைபெறுவதில்லை. மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் இப்படி எல்லா பக்க வாத்தியக் கலஞர்களுக்கும் தொகை கொடுப்பது சற்று கடினமானதாகப் போய்விட்டது முக்கிய காரணம்.

இப்பொழுது பெரும்பாலும் இரண்டே பக்க வாத்தியங்களுடன் நிகழ்ச்சி அமைவது வாடிக்கையாகி விட்டது. சிக்கனமான நிகழ்ச்சிக்கு வயலின் மிருதங்கம் இவை இரண்டும்தான் பிரதான இசைக் கருவிகள் என்ற நிலை வந்து விட்டது.

ஒரு காலத்தில் ஹார்மோனியம் என்ற இசைக் கருவி கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் இடம் பெற்றது. இன்று அந்த இசைக் கருவி கர்நாடக இசை மேடையை விட்டு இறங்கி விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் பாட்டு வாத்தியார் ஹார்மோனியத்துடன்தான் முதல் பாட்டைத் தொடங்குவார். ஆலந்தூர் விசுவநாதய்யர் என்ற சங்கீத வித்வானுடைய ஹார்மோனியம் வாய்திறந்து பேசுவது போல இருக்கும்.

மெல்லிசை நிகழ்ச்சி மேடைகளில் ஹார்மோனியம் தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. நாடக மேடைகளிலும் இன்றும் அது உண்டு.

1930, 1940 களில் உறையூர் காதர் பாட்சா என்ற ஹார்மோனிய இசைக் கலைஞர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்தார். விளம்பர நோட்டீஸ்களில் நாடகத்தின் பெயரை எந்த அளவில் அச்சடிக்கிறார்களோ அந்த அளவில் பெரிதாக காதர்பாட்சாவின் பெயரை அச்சிட்டு விளம்பரம் செய்வார்கள். இரண்டு காட்சிகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவருடைய ஹார்மோனியம் தன் இசையால் ரசிகர்களை கட்டிப் போடும்.
ஆனால் என்ன காரணமோ, பல சங்கீத வித்வான்கள் ஹார்மோனியத்தை கை கழுவி விட்டார்கள். பாரதியார்கூட ஹார்மோனியத்தை நல்ல சங்கீதத்தின் விரோதி என்று எழுதியிருக்கிறார். வானொலி நிலையங்களில் ஹார்மோனியம் அனுமதிக்கப் படுவதில்லை.

வயலின் ஒரு ஐரோப்பிய இசைக் கருவி. இன்று கர்நாடக இசை மேடையில் வயலின் ஒரு உறுதியான இடத்தைப் பிடித்து விட்டது. மிகக் குறைந்த பக்க வாத்தியம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் ஒரு இடம் வயலினுக்கு நிச்சயமாக உண்டு.

சமீபத்தில் காலமான திரு. குன்னக்குடி வைத்தியநாதனுடைய வயலின் இசையை இந்த தலைமுறையினர் கேட்டிருக்கலாம். அவருடைய வயலின் வாய் திற்ந்து பேசும், பாடும், அழும், சிரிக்கும், அவர் மட்டும்தான் அசுர வாத்தியமான தவில் மேளத்தை பக்க வாத்தியமாக வைத்துக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

ஆனால் சில சுத்த கர்நாடக சங்கீத ரசிகர்கள் குன்னக்குடியின் இசையை கர்நாடக பாணியாக ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படி எல்லா துறையிலும் அடிப்படைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் ஏற்படும் மாற்றங்களை யாரும் தடுத்து நிறுத்த முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் கடந்த பத்தாண்டுகளில் பல புதிய அம்சங்கள் தலையெடுத்திருக்கிறது. இந்த மாற்றங்களெல்லாம் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மொழி தொடர்பான விஷயம் கர்நாடக சங்கீத உலகில் பெரிய விவாதத்தை தொடங்கி வைத்து அது இன்றளவும் முழுமையாக முடிந்து விட்டதாக சொல்ல முடியாது.

அந்த விவாதம் தான் தமிழ் இசை தொடர்பான விவாதம்.
19ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் கர்நாடக இசையில் பெரிய எழுச்சி ஏற்பட்டது அதுதான் தியாகராஜ சுவாமிகளின் பிரவேசம். அவருடைய கீர்த்தனைகள் சங்கீத உலகத்துக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான அவருடைய சாகித்யங்கள் தெலுங்கு மொழியின் அழகோடும் சங்கீத இலக்கணம் முழுவதுமாக பொருந்தி பாவத்தோடும் நெஞ்சைத் தொடும் பக்திப் பரவசத்தோடும் பாடுவதை எல்லோரும் ஈடுபாட்டோடு கேட்கத் தொடங்கினார்கள்.

அவருடைய கீர்த்தனைக்ள் பெருமளவில் பாடத் தொடங்கிய பிறகுதான் இசை நிகழ்ச்சிக்கு என்று தனி மேடை அமைந்தது என்று கூட சொல்லலாம். காலப்போக்கில் தியாகைய்யரின் கீர்த்தனைகளே இசை மேடையின் முழு நேரத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டன. மற்றபடி தீட்சிதர், புரந்தரதாசர் பாடல்கள் எல்லாம் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெற்றன. தெலுங்கு, வடமொழி கீர்த்தனைகளுக்கு இடையில் இசைக் கலஞர்கள் தமிழ் மொழி கீர்த்தனைகளை மறந்தே போய் விட்டார்கள். தமிழ் மொழியில் அருணாசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் ஆகியோர் பாடிய, இயற்றிய கீர்த்தனைகளுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.

தியாகைய்யருடைய மேன்மையான கீர்த்தனைகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழ்நாட்டிலேயே தமிழ் இசை பாடல்களை பின்னுக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டது. கர்நாடக இசை மேடையில் தமிழ் மொழிப்பாடல்களுக்கு இடம் கொடுக்காத நிலை பற்றி நியாயமான வருத்தம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய சங்கீதத்துக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு மாநாடு பரோடா நகரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இசைக் கலைஞர்களும், இசைத் துறை ஆய்வாளார்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்தைத் தெரிவித்தனர்.

1916ம் ஆண்டு நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் செர்ந்த தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் கலந்து கொண்டார். ஆபிரகாம் பண்டிதர் ஏற்கனவே கர்நாடக இசை, தமிழ் இசை, பண் வகைகள் பற்றி ஆராய்ச்சி செய்து பல கட்டுரைகள் எழுதியிருந்தார். அவர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்ற நூல் பழங்காலத்திய பண் வகைகளைப் பற்றி தெளிவான விளக்கம் கொண்டதாக உள்ளது. தன்னுடைய கருத்துக்களை எடுத்து சொல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் சங்கீத வித்யா மகா ஜன சங்கம் என்ற சங்கத்தை நிறுவினார். அந்த அமைப்பு மூலம் பல தமிழ் கீர்த்தனைகளை எழுதி இசை அமைத்து கர்நாடக பாணியில் பாடும் முறைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார்.

நாட்டு விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபை இந்தியாவில் பல கலைகள் புத்துயிர்ச்சி பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தது. குறிப்பாக இந்தியாவின் இசை பாரம்பரியம் காக்கப்படுவது பற்றி பலர் ஆர்வம் காட்டினார்கள். 1927ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபை வருடாந்திர கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் வரவேற்புக்குழு மாநாட்டுச் செலவு போக மீதம் இருந்த தொகையை நிதி உதவியாக கொடுத்தது. அதை மூலதனமாக கொண்டு மியூசிக் அகாடெமி என்ற அமைப்பை உருவாக்கினர். மியூசிக் அகாடெமி ஆண்டு தோறும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் இசைத் துறை தொடர்பான ஆராய்ச்சி நடக்கவும், இசைப் பயிற்சி கொடுத்து இளைய தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்குவதிலும் செயல் பட்டு வருகிறது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள கீர்த்தனைகளை பாடவேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் நிறைவேறவில்லை. பலர் இது பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

உ.வே. சாமிநாதய்யர் தமிழர்கள் இசையும், இசைக் கருவிகளும் என்ற தலைப்பில் சென்னையில் ஒரு ஆராய்ச்சி சொற்பொழிவு நிகழ்த்தினார். அந்த சொற்பொழிவில் பழைய தமிழ் பண்களுக்கு சமமான கர்நாடக இசை ராகங்களை எடுத்து விளக்கி அவற்றில் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

சி.ஆர். சீனிவாச அய்யங்கார் என்ற அறிஞர் மியூசிக் அகாடெமி ஏற்பாடு செய்த இளைஞர்களுக்கான கோடைக்கால இசைப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்துப் பேசினார். தன் உரையில் தமிழில் கீர்த்தனைகள் இல்லை என்ற வாதத்தை மறுத்து தன் இளமைப் பருவ காலத்தில் மேடைகளில் பாடப்பட்ட அருணாசல கவிராயர், கவி. குஞ்சர பாரதி பாடல்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேன்மையை விளக்கினார்.

செட்டிநாட்டரசர் ராஜா அண்ணாமலைச் செட்டியார் சிதம்பரம் கல்லூரியில் சங்கீதத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

சங்கீதத்திற்கு மொழி கிடையாது. சங்கீதமே ஒரு தனி மொழி. ஆகையால், கர்நாடக சங்கீதத்தில் மொழிப் பிரட்சினையை எழுப்பக் கூடாது என்று சிலர் வாதம் செய்தனர். சில சமயங்களில் தமிழ் இசைக் கோரிக்கைகளுக்கு ஜாதி வர்ணம் பூசும் முயற்சியும் நடந்தது. ஆனால் பல முன்னணி இசைக் கலைஞர்களும், கல்கி போன்ற பத்திரிகையாளர்களும் தமிழிசை வளர்ச்சியின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்தினார்கள். கல்கி தன்னுடைய பத்திரிகையில் தமிழிசை பற்றி தொடர்ந்து வலியுறுத்தி எழுதினார். நாமக்கல் கவிஞர் போன்ற இலக்கியத்துறை சார்ந்தோரும் வலியுறுத்தினர்.

பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் ஆகியோர் புதியதாக பல நல்ல தமிழ் கீர்த்தனைகளை எழுதினர். பாபநாசம் சிவன் எழுதிய சில திரைப் படப் பாடல்களும் தமிழ் இசை நிகழ்ச்சி மேடைகளில் பாடத்தக்க அளவில் தகுதியானவையாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் தமிழிசைக்கு சரியான அளவில் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழிசை சங்கங்கள் வைத்தது. தமிழ் மொழி ஆர்வலர்களும், இசை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதால் இன்று கர்நாடக இசை மேடையில் தமிழிசை ஓரளவுக்கு இடம் பெறத் தொடங்கி விட்டது. கர்நாடக இசைத் துறையில் கடந்த பல ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இசைக் கருவிகளில் மாற்றம், ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் மென்மையான செல்வாக்கு, இப்படி எவ்வளவோ மாற்றங்களும் ஏற்படுத்தாத சலசலப்பை சங்கீத உலகில் தமிழ் இசை பற்றிய விவாதம் ஏற்படுத்தி விட்டது.

இதற்கு முக்கியமான காரணம் சங்கீத உலகத்திற்கு அப்பாற்பட்ட சமூக காரணங்கள். அந்த பிரச்சனையில் நுழைவது நம்முடைய நோக்கமல்ல, அதற்கான நேரமும் இல்லை.

மு. கோபாலகிருஷ்ணன்.

Monday, November 09, 2009

படம் பாரு கடி கேளு - 41


டேய் விடுடா சங்கிலிய. நான் "Dog Show" க்கு எல்லாம் வரமுடியாது. அதுக்கெல்லாம் வேற ஆள பாரு. நீ சங்கிலிய விடலே, அப்படியே கடிச்சு கொதறிடுவேன் ஜாக்கிரதை!

Friday, November 06, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு --2

ஏ தமிழனே, நம் பாரதி சொன்னது போல " ரௌத்திரம் பழகு" தமிழையும், தமிழை சாடுபவரையும் விட்டு வைக்காதே.

புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது வழக்கம். அது பொங்கினால் மிக உத்தமம். அது போல செயலர் " தமிழ் தளபதி" ஜெய காந்தன் பொங்கினார், ஆனால் அரிசி உலை கொதி நீர் போல அவர் மறுமொழியில் பொங்கி அடங்கினார். பொங்கியதற்கு நன்றி, ஆனால் அடங்குவது முறை அல்ல.

தமிழ் தலைவர் முரளியும் தன பங்கிற்கு தீபாவளி விழாவினை தமிழில் செய்து காட்டி, பெரியவர்கள் தான் பேசுவது இல்லை, குழந்தைகள் எல்லாம் மிக்க ஆர்வத்துடன் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களின் பங்கு குறைவு என்று ஒரு நெற்றியடி கொடுத்து உள்ளார். அன்பான பெற்றோர்களே நீங்கள் தான் அவர்க்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

"தமிழ் கோ" முத்துவோ இந்த வம்பு தமிழுக்கோ என்று ஒதுங்கி உள்ளார்.
"தமிழ் பேரரசு " பரதேசியும் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேசலாம் என்று ஆமோதித்து இருக்கிறார். அனால் சங்கத்தின் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் பேசிய தமிழ் பெரிவர்களிடம் இல்லையே என்று நிருபித்து விட்டனர்.

மிக்சர் மீனாவோ இதனை இன்முகம் காட்டி வரவேற்று உள்ளார்.
டோண்டு வோ, சங்கங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு காரணம் பெரியாரும், பார்ப்பனர்களும் என்று மரபு திரிந்து வழ்க்கமான அரசியல்வாதியை காரணம் காட்டி புறமுதுகு காட்டி உள்ளது.

நம் வம்போ அது நல்லதா, கெட்டதாஎன்று ஆராய்வது அல்ல. அதனை எப்படி செயல் படுத்துவது என்று தான். அன்பான தமிழனே, நீ உண்மையான தமிழனாக இருந்தால் உண்மையை உணர்வாயாக. அமெரிக்காவில் அதிகம் பேசும் மொழி எது தெரியுமா? ஆங்கிலம் அல்ல என்பது உண்மை. ஸ்பானிஷ் (மெக்சிகோவின் மொழி) என்பது தான் உண்மை. ஏன் தெரியுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, அவர்களிடம் வேலை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் ஸ்பானிஷ் கற்று கொள்கிறார்கள். இதே நிலைமை தான் சீன மொழி மற்றும் ஜப்பான் மொழி பேசும் மக்களிடமும் .

உன்னிடம் பணிவு உண்டு, திறமை உண்டு, ஆனால் விட்டு கொடுக்கும் பங்கும் உண்டு. அதனால் தமிழை விட்டு கொடுக்காதே. உன் திறமையை அறிய இந்த உலகம் உன் மொழியை கற்கும என்று இறுமாப்பு கொள். இந்த உலகம் உன் திறமையின் காலடியில். பரங்கியனை பாடாதே. வஞ்சகம் பேசாதே. உன்னால் ஒருவன் மேன்மை அடைகிறான் என்றால் அவன் தமிழன் என்றால் மட்டும் பெருமை கொள்.

நாரதனின் கலகம் இன்னும் ஆரம்பமாக வில்லை.

வேதாந்தி

எங்கள் ஊரில் தீபாவளி

பட்டாசு வெடிக்காத குறை தான், தமிழ் சங்கம் அசத்தி விட்டது. சங்கத்தின் முதல்வரின் முன்னுரை ஒரு கலைஞரின் முன்னுரை போல் இருந்தது. குறள் சொல்லிய குழந்தைகள், பாரதி பாடிய பாப்பா, தீபாவளி பற்றி சொன்ன இளம் சிறார்கள், இவை தான் சிறுவர் பங்கு என்றால் மிகை ஆகாது.

மேடையில் குறள் சொல்லும் குழந்தையை பார்த்து, பார்வையாளர்களை தங்கள் பிள்ளைகளை அவசரமாக ஒரு குறள் சொல்லி கொடுக்கும் நிலையையும் கண்டோம். இதனை பெற்றோர்களின் பேரார்வம் என்பதா அல்லது தமிழ் பற்று என்பதா ?இது அல்லவோ புரட்சி. தமிழ் சங்கத்தின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

இதனையும் மீறி மேடையில் மாறி, மாறி கையை ஆட்டி, கண்களில் கண்ணீர் மாரியுடன், " சூ சூ மாரி " என்று ஒரு இரயில் ஒட்டிய லதாவும், குழந்தைகளும் பார்த்த அனைவரும் தங்கள் கண்களின் ஆனந்த கண்ணீருடன் இருந்தனர் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

மூன்று இளம் அறிவிப்பாளர்களின் தமிழ் மிக்க அருமை. அவர்களின் உச்சரிப்பு மற்றும் பாராட்டுகளின் ஏற்ற இறக்கங்கள் மிதவும் நேர்த்தி அக இருந்தது. ஆங்கிலத்தில் எழுதி வாசித்தனர் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டர்கள். அதிலும் ஸ்வேதாவின் தமிழ் தாய் வாழ்த்து மிக்க அருமை. பிரசு என்று சொல்லி அதனை பரிசு என்று திருத்தியது மட்டும் அல்லாமல், மன்னிக்க வேண்டும் என்று கேட்ட அங்கிதாவின் தமிழ் மரபினை பாராட்டியே ஆக வேண்டும்.

சலாம் பாபுவும், முரட்டு காளையும் எல்லோரையும் ஆட வைத்து விட்டது.
மு. கோபால் அய்யா பாரதிக்கும், அவ்வைக்கும் ஒரு பாலமே கட்டி விட்டார். மிக அருமை மற்றும் புதுமை. நடராஜ மூர்த்தியும் கம்பனை கண் முன் நிறுத்தி விட்டார் என்றால் மிகை ஆகாதது.

மிக்க அருமையான கொண்டாட்டம். லக்ஷ்மியின் தனி ஆவர்த்தனுமும், செயலர் ஜெயகாந்தனின் நன்றி அறிவுப்பும் மிக எளிமையாக இருந்தது.
இவ்வளவு அருமைகள் இருந்தும், உங்களின் தமிழ் வகுப்பு ஆசிரியர்களை அறிமுகபடுத்த வில்லை என்ற குறை ஒன்றும் இருந்தது.