Wednesday, September 30, 2009

ரசிகனும் கலைஞனும்


கர்நாடக சங்கீத வித்வான்களின் பெயருக்கு முன்னால் உள்ள ஊரைப் பற்றி விசாரித்தால் அநேகமாக அது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராகத்தான் இருக்கும். இல்லையென்றால் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வித்வானின் சிஷ்யராக இருப்பார். தஞ்சாவூருக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு.

வாய்ப்பாட்டு மட்டுமில்லாமல் பக்க வாத்தியம், நாதஸ்வரம், மேளம் ஆகிய வாத்யங்களையும் பயின்ற நிபுணர்களை கொடுத்த பெருமை தஞ்சைக்கு உண்டு.

இப்படி நல்ல கலைஞர்கள் வளர காரணம் அந்த மாவட்ட மக்களுடைய சங்கீத ரசனை. பல கோயில் திருவிழாக்கள், செல்வந்தர் வீட்டு திருமணங்கள் சங்கீத கச்சேரி இல்லாமல் நடப்பதில்லை. நல்ல கச்சேரிகளைக் கேட்க கிரமங்களிலிருந்து பல மைல் தூரம் நடந்தும், சைக்கிளில் சென்றும் பாட்டு கேட்கும் பாமர ரசிகர்களை தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே பார்க்க முடியும். கேட்ட பாடல்களை பல நாட்கள் முணு முணுத்தபடியே இருக்கும் ரசிகர்களை பார்க்கலாம்.

அப்படிபட்ட ஒரு ரசிகர்தான் சுப்பிரமணிய ஐயர். கிராமத்தில் உள்ள சொற்ப நிலத்தை வைத்துக் கொண்டு வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர். அவருக்கு கர்நாடக சங்கீதம் நாதஸ்வர இசை என்றால் உயிர். அன்று பிரபலமாக இருந்த திருவாரூர் T.N. ராஜரத்னம் பிள்ளையின் நாதஸ்வர கச்சேரி என்றால் விடமாட்டார். சுற்று வட்டாரத்தில் எங்கு நடந்தாலும் பல மைல் பயணம் செய்து சீக்கிரமே சென்று முன் வரிசையில் உட்கார்ந்து நாதஸ்வர இசையில் மூழ்கி எழுந்து சொட்டச் சொட்ட நனைந்து வருவது அவருடைய வழக்கம்.

சுப்பிரமணிய ஐயருடைய ஒரே குமாரனுக்கு உபநயனம் ஏற்பாடாகியிருந்தது. அந்த காலங்களில் திருமண மண்டபம் கிடையாது. உறவினர்கள், ஊர் அக்ரஹாரத்தில் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் சிறிய நிகழ்ச்சி. வீட்டு வாசலில் பந்தல் போட்டு தோரணம் கட்டி வீட்டிலேயே நடக்கும் நிகழ்ச்சி. ஐயர் பத்திரிகைகூட அச்சடிக்கவில்லை. வெளியூரில் உள்ள உறவினர்களுக்கு தபால் கார்டில்தான் எழுதி அழைப்பு அனுப்பினார்.

கடிதங்கள் எழுதுவதற்கு முதல் நாள் ஐயர் திருவாருர் ராஜரத்னம் பிள்ளையின் இசை நிகழ்ச்சியை கேட்டு விட்டு வந்திருந்தார். அந்த சங்கீத சுகத்தில் அவர் மனம் லயித்திருந்தது. கடிதம் எழுதும் போது ஒரு கடிதத்தில் ராஜரத்னம் பிள்ளையின் விலாசத்தை எழுதினார், எல்லா கடிதங்களையும் தபாலில் சேர்த்தார்.

உபநயனத்தன்று காலையில் வேத மந்திரம் முழங்க நிகழ்ச்சி தொடங்கியது. வீட்டில் உள்ள ஹாலில் உறவினர்கள் நெருங்கி அடித்து உட்கார்ந்திருந்தார்கள். சுப்பிரமணிய ஐயர் புரோகிதர் அருகில் உட்கார்ந்து சுபகாரியங்களை செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் ஜரிகை, பட்டு வேஷ்டி பளபளக்க கைவிரல்களில் வைர மோதிரம் ஜொலிக்க ராஜரத்னம் பிள்ளை உள்ளே நுழைந்து கிடைத்த இடத்தில் நெருக்கி அடித்து உட்கார்ந்தார்.

கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் வியப்பு, பரபரப்பு, செய்தியை சற்று தூரத்தில் இருந்த ஐயருக்கு தெரிவிக்க, அவர் திகைப்படைந்தார், எழுந்து ஓடி வந்தார். வந்தவரை கையால் சைகை காட்டி உட்காரச் சொன்னார் ராஜரத்னம் பிள்ளை.

உபநயன நிகழ்ச்சி முடியும் வரை பிள்ளை அங்கேயே இருந்ததால், செய்தி அக்ரஹாரம் முழுவதும் பரவியது. ஊரில் மற்ற பகுதிக்கும் செய்தி பறந்தது.
“T.N. வந்திருக்கார், ஐயர் வீட்டு பூணுலுக்கு T.N. வந்திருக்கார்” இதுதான் பேச்சு.
அன்றைய தஞ்சை மாவட்டத்தில் T.N. என்றால் நாதஸ்வர சக்கரவர்த்தி T.N. ராஜரத்னம் பிள்ளைதான்.

ஐயருக்கு ஒரே பரவசம், கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நிகழ்ச்சி முடிந்து நடந்த விருந்திலும் பிள்ளை கலந்து கொண்டார். அளவு கடந்த மகிழ்ச்சியில் திணறிப் போய் நன்றி தெரிவித்த ஐயருக்கு ராஜரத்னம் பிள்ளை பதில் சொன்னார். “என்னுடைய பல கச்சேரிகளில் நீங்கள் முன்னால் உட்கார்ந்து என் இசையை ரசித்ததை நான் பார்த்திருக்கிறேன், என் மேல் கொண்ட அன்பில் நீங்கள் அனுப்பிய அழைப்புக்கு வரக் கடமைப்பட்டவன். நான் மட்டும் வரவில்லை, வாத்தியங்களுடன் வந்திருக்கிறேன். இங்கேயே கச்சேரிக்கு மேடை போடுங்கள்” என்றார்.

கொஞ்ச நேரத்தில் ஐயர் வீட்டு எதிரில் தெருவிலேயே சிறிய மேடை தயாரானது. ஊர் மக்கள் அனைவரும் தகவல் அறிந்து கூடினார்கள். பெரிய கூட்டம் இல்லையென்றாலும் அவருடைய அன்றைய கச்சேரி பெரும் அமிர்தகானமாக அமைந்தது. அவருடைய நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்ச்சி என்பார்கள்.

தோடி ராகத்தில் புகழ் பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரிகள் அந்தக் காலத்தில் ஜமீன்தார்கள், சமஸ்தான மன்னர்கள் வீட்டுத் திருமணங்களில் மட்டுமே நடக்க முடியும் என்பார்கள். அந்த அளவுக்கு பெரிய தொகையை அவர் வாங்கினார்.

சாதாரண ரசிகரான சுப்பிரமணிய ஐயர் வீட்டு சிறிய உபநயன நிகழ்ச்சிக்கு அன்று அவருடைய நிகழ்ச்சி அமைந்த்து.

கடைசியாக ஒரு முக்கியமான செய்தியோடு இதை முடிக்கிறேன்.

அதே தினத்தில் பம்பாய் மாநகரத்தில் தனக்கு ஏற்பாடாகியிருந்த இசை நிகழ்ச்சிக்குத் தன்னால் வர முடியவில்லை என்று ராஜரத்னம் பிள்ளை தந்தி கொடுத்திருந்தார்.

மு. கோபாலகிருஷ்ணன்

(தட்டச்சில் தயாரித்த முரளி ராமச்சந்திரனுக்கு நன்றி)

Sunday, September 27, 2009

நடையா, இது நடையா...

சென்ற வார இறுதியில் சாரணர்களுடன் தெரியாத்தனமாக ஒரு முகாமுக்கு போக ஒத்துக் கொண்டேன். முதுகில் மூட்டையை சுமந்து கொண்டு ஏழு மைல் நடந்துபோய் முகாம் அமைத்து சமைத்து சாப்பிட வேண்டுமாம். வீட்டில் நம் இடுப்பளவை வைத்து ஒரு சிக்ஸ் சிக்மா பிராஜக்ட் ஆரம்பித்திருப்பதால், இரண்டு நாள் தப்பிக்கலாம் என்று சரி செய்யலாம் என்று கிளம்பினேன். பக்கத்து முகாமில் Wild Women Weekend நடக்கிறது, 21 வயது பெண்குழந்தைகளுக்கு இயற்கையோடு ஒன்றுவது எப்படி என்று சொல்லித் தருகிறார்கள் என்று வேறு ஆசை காட்டினர். அப்படியும் வருகிறேன் என்று சொன்ன நிறைய தந்தையர்குலம் கடைசி நிமிஷத்தில் கழண்டுகொண்டனர். என்னடா விஷயம் என்றால் எனக்குத் தெரியாமல் ஏழு மைல் நடை, ஒன்பதாகியிருந்தது. அடப்பாவிகளா. நம்மை வைத்து இப்படி ஒரு காமெடியா?

நாங்கள் போன இடம் அருமையான இடம். வர்ஜினியா பீச்சிற்கு தெற்கே சுற்றும் நீர் சூழ்ந்த் ஒரு தீபகற்பம்(அப்படி என்றால் என்ன என்று கேட்கக்கூடாது). ஒரு மைல் குறுக்களவில் நீண்டிருக்கும் ஒரு நிலப்பரப்பு. வர்ஜினியாவிலேயே இந்த மாநிலப் பூங்காவிற்குத்தான், மிகக்குறைந்த மக்கள் போவார்களாம். ஏன் தெரியுமா - இந்தப் பூங்காவிற்கு நீங்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோதான் போகலாம். காரில் முடியாது. வயதானவர்களுக்கு சுற்றிக் காண்பிக்க ஒரு டிராம் போகிறது. அதில் ஏற பிறப்புச் சான்றிதழ் எல்லாம் கேட்பார்கள்.

நாங்கள் காலையில் கிளம்பியபோது பேருந்தளவில் இருந்த நம் வேனைப் பார்த்துவிட்டு ஐந்து வா/சாரணர்களை ஏற்றிவிட்டார்கள். போய் சேருவதற்குள் தாவு தீர்ந்து விட்டது. ஒருவன் Q94 வை என்கிறான், ஒருவன் 98 வை என்கிறான், ஒருவன் இவன் அடிக்கிறான் என்கிறான்... போங்கடா என்று பாய்ஸ் பாட்டு கேட்கவைத்தேன். அதில் ஒருசில வார்த்தைகள் தமிழில் இருந்தால் அவர்களுக்கு சரியாகப் புரியவில்லை. 'அடியே கொல்லுதே' பசங்களுக்கு கொஞ்சம் ஓகே. Car Talk அது இது என்று ஓட்டிவிட்டேன். பதினோரு மணிக்கு போய் சேர்ந்தோம். கொஞ்சம் நடந்துவிட்டு கொண்டு வந்த மதிய உணவை சாப்பிடலாம் என்று கிளம்பிவிட்டோம். முதலில் ஒரு தார் ரோடு. நல்லவேளையாக மேகமூட்டமாக இருந்ததால் வெயில்சூட்டில் இருந்து தப்பித்தோம். ஒரு கொடுமை என்ன என்றால், போன வழியில் கடலோசை கேட்கிறது, கடல் வாசம் தெரிகிறது, ஆனால் கடல் தெரியவே இல்லை. கடல்பக்கம் நெடுக்க மணல்குன்றுகள் கடலை மறைத்திருந்தன.


வந்த சிறுவர்களிலேயே சிறியதாக இருந்த பையனின் மூட்டை என் மூட்டையை விட கனமாக இருந்தது. கேட்டால் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் என்கிறான். அவனுக்கு நடக்க மிகவும் சிரமமாக இருந்தது. நம்முடைய புத்திர சிகாமணி ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே எனக்கு இது முடியாது திரும்பவேண்டியதுதான் என்றான். அதனால் அடுத்த ஒரு மணிநேரம் அவன் பக்கமே போகவில்லை. குட்டிப்பையனுக்கு துணையாக நடக்கிறேன் பேர்வழி என்று நானும் அவனுடன் மெதுவாக தவழ்ந்து போனேன்.

கூட வந்த சாரண ஆசிரியர் நாங்கள் நடக்கும் வேகம் ஒரு மணிக்கு ஒரு மைல், இந்த வேகத்தில் இரவு எட்டு மணியாகிவிடும் என்று வயிற்றில் புளியைக் கரைத்தார். ஒரு மணிக்கு சாப்பிட உட்கார்ந்தோம். 'அத்தியாவசிய பொருட்களில்' freezer ice pack போன்ற சில குப்பைத்தொட்டிக்கு போனது.

மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். பெரிய சாரணர்கள் விரைவில் போய் சேர்ந்து திரும்ப வந்து பொடியன்களின் மூட்டைகளை சுமக்கிறோம் என்று விரைவாகப் போய்விட்டார்கள். நாங்கள் நாரை, மைனா, ஆர்க்டிக் டர்ன்(பையனின் உடான்ஸ்?) என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு மெதுவாகப் போனோம்.



பொடியனை கொஞ்சி கெஞ்சி நடக்கவைத்து மெதுவாகப் போய்க்கொண்டிருந்தோம். மகமாயி ஒரு போலீஸ்காரி ரூபத்தில் வந்து எங்களுக்கு அருகாமையிலேயே ஒரு கேம்ப் சைட்டில் இடம் கிடைத்திருக்கிறது என்று அருள் பாலித்தாள். மூன்று மைல் நடை மிச்சம். பசங்களுக்கும் அசுரபலம் வந்து ஒரேமூச்சில் முகாமை அடைந்தார்கள். மூட்டையை இறக்கிவைத்தேன். சுமை இறங்கியதும், கால்கள் தன்னாலே நடக்க ஆரம்பித்தன. விசித்திரமான அனுபவம்.





From False Cape State Park

கூடாரங்களை அமைத்துவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தோம். யாருமே வராத இடம் என்பதால் பூங்கா மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு வகையான லாரல் மரங்கள் அடர்ந்த இடம் நாங்கள் தங்கியிருந்த இடம். தாழ்வாக பரந்து விரிந்த மரங்கள் எங்களூர் முந்திரிக் காடுகளை நினைவூட்டின. அமைதியான வளைகுடா எங்களை இளைப்பாற வைத்தது.

களைப்பெல்லாம் பெரியவர்களுக்குத்தான். பசங்கள் கடற்கரை போகவேண்டும் என்றார்கள். கிளம்பினால் கடற்கரை ஒன்றரை மைல் தூரம் :-(
கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு முகாமுக்குத் திரும்பினோம்.





From False Cape State Park

இரவு உணவு தயார் செய்தோம். வேறென்ன - கொதிக்கவைத்த நீரில் ராமென் நூடுல்ஸ். ஒரு ஆள் பையிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு எடுத்து எண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.





From False Cape State Park

இங்கே கேம்ப் ஃப்யர் எல்லாம் பண்ணக்கூடாது என்பதால் அனைவரும் சீக்கிரம் தூங்கிவிட்டோம். படுக்கையில் தலையை சாய்த்ததுதான் தெரியும். காலையில் உலகில் உள்ள புள்ளினங்கள் எல்லாம் என் கூடாரத்துக்கு வெளியே போட்ட கூப்பாட்டில்தான் எழுந்தேன். காலை உணவு கொதிக்கும் நீரில் ஓட் மீல். கூடாரங்களைக் கலைத்து, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பினோம். இந்த முறை கடற்கரை ஓரமாக நடை.

நல்ல வெயில். ஆனால் அலையோரமாக நடந்ததால் வெயிலின் சூடு தெரியவில்லை. கரையெல்லாம் நிறைய ஹார்ஸ் ஷூ நண்டு ஓடுகள் கிடந்தன. சிலவற்றில் முழு நண்டின் உடலே இருந்தது. அங்கங்கே குட்டியாக கருப்பில் சுருக்குப்பை மாதிரி கிடந்தது. மெர்மெய்ட் பர்ஸ் என அழைக்கப்படும் அந்தப் பை சுறா முட்டைகள் அடங்கிய பையாம். மேலும் சில பெலிகன்களைப் பார்த்தோம். ஒரு டால்பின் கும்பலையும் பார்த்தோம்.
From False Cape State Park
. கடைசி அரை மைல் கரையில் இருந்து உள்ளே பயணம். அப்போதுதான் வெயிலின் சூடு தாக்க ஆரம்பித்தது. கடைசி அரைமைல் பல்லைக் கடித்துக் கொண்டு விடுவிடுவென நடந்து காரை அடைந்தோம்.

நம்மூர் கர்நாடக சங்கீதம் மாதிரி இந்த மாதிரி நேரத்தில் எதுவும் உதவாது. வண்டியில் இன்னொரு பையனும் சேர்ந்து மொத்தம் ஆறு வா/சாரணர்கள். கிளம்பும்முன் ஒரு எச்சரிக்கை விடுத்தேன். ஏதாவது சண்டையோ சச்சரவோ ஆரம்பித்தால் இதுதான் நடக்கும் என்று ஒரு நிமிடம் ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டுக் காண்பித்தேன். அனைவரும் கப்சிப். வரும் வழியில் ரெண்டே ரெண்டு முறைதான் அந்தப் பாட்டை போடவேண்டி வந்தது.

மற்ற படங்களையும் பார்க்கிறீர்களா?

Sunday, September 20, 2009

கோவிந்தா கோவிந்தா

பாரதியார் ஆசிரியர் பொறுப்பு ஏற்று நடத்தி வந்த இந்தியா பத்திரிகையை பிரிட்டிஷ் அரசாங்கம் 1908 -ம் ஆண்டு தடை செய்தது. பாரதியாரை கைது செய்யவும் உத்திரவு போட்டது. கைது உத்தரவு பற்றி முன் கூட்டியே அறிந்த பாரதியார் தலைமறைவாக பாண்டிச்சேரிக்கு போய்ச் சேர்ந்தார்.

பிரெஞ்சு நிர்வாகத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தங்கி கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து எழுதும் நோக்கத்துடன்தான் அங்கே போய் சேர்ந்தார். அங்கு தங்கி இருந்த படி பல பத்திரிகைகளை எழுதினார்.அவர் எழுதிய கட்டுரைகள் பாண்டிச்சேரியில் அச்சடித்து பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்கு கடத்தி வர பட்டு விநியோகிக்க பட்டது.

1918 -ம ஆண்டு வரை பத்து ஆண்டுகள் பாரதி பாண்டிச்சேரியில்தான் வாழ்ந்தார். அங்கே வாசம் செய்த காலத்தில்தான் பாரதியார் பாஞ்சாலி சபதத்தை எழுதினார். பல இலக்கிய விமர்சகர்கள் பாஞ்சாலி சபதத்தை பாரதியின் படைப்புகளிலேயே உன்னதமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர். வ.வே.சு ஐயர் பாஞ்சாலி சபதத்தை "அக்ஷர லக்ஷம்" பெறும் என்று கூறி பாராட்டி இருக்கிறார். இப்படி எல்லோராலும் பாராட்ட பட்ட பாஞ்சாலி சபதத்தை பாரதி என்ன நோக்கத்தில் எழுதினார்?? பாரதியாரை பாஞ்சாலி சபதம் எழுத வைத்த அந்த ரசமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.

பாண்டிச்சேரியில் பாரதியாருக்கு ஏராளமான நண்பர்கள் கிடைத்தனர். அரவிந்தருடனும் பாரதிதாசனுடனும் தொடர்பு கிடைத்தது அந்த நாட்களில்தான்.

பல நண்பர்களுடன் கூடி ரசமான இலக்கிய விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. பாரதியார் மிகச்சிறந்த முறையில் விவாதிக்கும் திறன் கொண்டவர். நகைச்சுவையாக பேசி தன் கருத்துக்களை முன்வைக்கும் ஆற்றல் அவருக்கு அதிகம். போலித்தனத்தையும் மூடநம்பிக்கையையும் கேலியும் கிண்டலும் செய்து குபீர் சிரிப்பு வரவழைப்பார்.

ஒரு நாள் இரவு வேளையில் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு போனார்.அன்று ஏதோ விசேஷமான நாள். அதை ஒட்டி நண்பர் வீட்டு அருகில் தெருவில் உபந்நியாசம் ஏற்பாடு ஆகி இருந்தது. மகாபாரத கதையின் ஒரு பகுதியை ஒருவர் பிரசங்கம் செய்து விளக்கி கொண்டு இருந்தார்.

பாரதி தேடி போன நண்பர் வீட்டில் இல்லை. ஆகையால், பாரதியார் நண்பர் வீட்டு அருகில் நின்று கொண்டு கதை பிரசங்கத்தை கேட்டு கொண்டிருந்தார். பிரசங்கம் செய்து கொண்டிருந்தவர் பேச்சில் சத்தும் இல்லை சாரமும் இல்லை. இடையில் சொல்லுக்கும் தடுமாறினார். சொல்ல வந்த பொருளையும் தேடி தேடி சொன்னதால் பேச்சு தடைப் பட்டது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கூட்டத்தில் இருந்தவர்கள் கதை கேட்டு கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் பலர் தூங்கி கொண்டிருந்தார்கள். விசேஷ நாட்களில் புராணம் சொல்வதை கேட்டால் போகும் இடத்துக்கு புண்ணியம். அதை தூங்கி கொண்டு கேட்டால் என்ன? விழித்துக்கொண்டு கேட்டால் என்ன ?

சொல்ல வந்த விஷயம் நினைவுக்கு வராதபோது அதை சமாளிக்க பிரசங்கி " கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா " என்று குரல் கொடுத்தார்.

அவருடைய ஓங்கிய குரலை கேட்டு தூங்கி கொண்டிருந்தவர்களும் விழித்துக் கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்று குரல் கொடுத்தார்கள். இப்படியாக தூங்கி கொண்டிருந்தவர்களை விழிக்க செய்ய கோவிந்தன் பெயர் பயன் பட்டது .

இந்த காட்சியை தொடர்ந்து அரை மணி நேரம் பார்த்து கொண்டிருந்தார் பாரதியார். அவருக்கு மனதில் பெரும் வேதனை. வீர காவியமான மகாபாரதத்தை பொழுது போக்கவும் புண்ணியம் தேட குறுக்கு வழியாகவும் எண்ணிய மக்களைப் பற்றி நினைத்து வேதனை பட்டார். அரைகுறையாக படித்து விட்டு கதை சொல்லி பிழைப்பு நடத்தும் பிரசங்கியை நினைத்து வருந்தினார். பக்தி என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்பதை ஒருபோதும் பாரதியார் ஏற்று கொண்டதில்லை.

பாரதியின் நண்பர் வீட்டு வேலைக்காரன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அவனுடைய பெயர் கோவிந்தன். பாரதியார் அவனை அழைத்தார். அவனிடம் சொன்னார்: அந்த ஐயர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். இடையில் கோவிந்தா கோவிந்தா என்பார். அப்படி அவர் சொன்னவுடன் அவரிடம் ஓடி போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்று கேள் என்றார்.

வேலைக்காரன் தயங்கினான். பாரதியார் அவனை வற்ப்புறுத்தி தைரியமாக போய் நான் சொன்னபடி செய் என்றார். வேலைக்காரன் கோவிந்தனும் பிரசங்கி அருகில் போய் நின்றான்.

சில நிமிடங்கள் கழித்து பிரசங்கி வழக்கம் போல் "கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா" என்றார். வேலைக்காரன் கோவிந்தன் அவர் அருகில் போய் "ஏன் சாமி, கூப்பிடீங்களா" என்றான்.

பாகவதர் திகைத்து போனார். கூட்டத்தில் இருந்த எல்லோரும் விஷயம் அறிந்து சிரித்தார்கள். இப்பொழுதுதான் எல்லோருடைய தூக்கமும் முழுமையாக கலைந்தது.

சற்று தூரத்தில் நண்பர் வீட்டு வாசலில் நின்றபடியே அந்த காட்சியை பாரதியார் ரசித்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய உள்மனதில் ஒரு வேதனை இருந்தது. அந்த வேதனை அவருக்கு பல நாள் தொடர்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரகாவியத்தின் உண்மை பொருளை உணர்த்தும் நோக்கத்தோடும், காவியம் சொல்லும் நீதிகளை சமகாலத்துக்கு பொருத்தமான முறையில் சொல்லும் நோக்கத்தோடும்தான் பாரதியார் பாஞ்சாலி சபதம் எழுதினார்.

மு. கோபாலகிருஷ்ணன்

Thursday, September 17, 2009

கன்னி ராசி, என் ராசி

எச்சரிக்கை

2008ம் ஆண்டில் பஞ்சமா பாதகங்கள் அல்லது, ஐந்து அநியாயங்கள் அல்லது குற்றமே செய்யாதவர்கள் மட்டும் படிப்பது நல்லது.

மேஷ ராசி ரசிகர்களே… !

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம் டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.

ரிஷப ராசி ரசிகர்களே… !

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது. 98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாததெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு, பாதகாதிபதியான சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது இடம் கிடைக்கும்.
பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை பால்' குடிக்கிறது நல்லது


மிதுன ராசி ரசிகர்களே… !

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே, அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது, காதாலயும் தொடக்கூடாது. குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம் பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும் பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம். இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு
சவுண்டை' அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய் விளக்கு போடணும்.

கடக ராசி ரசிகர்களே… !

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுற நீங்க, இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது. அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா ஓடுறது நல்லது. ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட அஞ்சாவது வீட்டை குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய் மறந்து தினகரன் வாங்கிடப்
போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல சனி இருக்கறதால, உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய், பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று தேடிப்பாருங்கோ!

சிம்ம ராசி ரசிகர்களே… !

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login' ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது. சாட் ஆகவே ஆகாது. 'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது. முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே வரக்கூடாது. ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால, மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து !

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு வடைமாலை சாத்தறது உத்தமம்.

கன்னி ராசி ரசிகர்களே… !

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும் உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது. வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு போயிடறது நல்லது. முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.

பரிகாரம்: வாரம் ஒருமுறை மூணு கிலோ 'கவித' பொஸ்தகம் வாங்கி, 'கழுதை'க்கு தானம் பண்ணனும்.

துலாம் ராசி ரசிகர்களே… !

கார்ப்பரேட் கம்பெனிகள் எடுக்குற எந்த சினிமாவுலயும் கதையே இல்லாததால உங்க வாழ்க்கைக் கதையில எதிர்பாராத யூ-டர்ன் வர வாய்ப்பிருக்கு. ஆகவே நீங்க இன்னும் நாலேகால் மாசத்துக்கு நயன்தாராவைப் பார்க்கக்கூடாது. ஸ்ரேயா ஆகவே ஆகாது. மல்லிகா ஷெராவத்தை மனசால நினைச்சாகூட எதிர்த்த வீட்டு ஆயா, ஆப்பக்கரண்டியால அடிக்க வாய்ப்பிருக்குது. முக்கியமா, தியேட்டர், டி.வி, விசிடி இப்படி எதுல சினிமா பாத்தாலும் உங்களுக்கு சனிமா!

பரிகாரம்: வடபழனி அருகே கோடம்பாக்கத்தில் அருள்பாலிக்கும் நமீதாம்பாளை வடக்கே சூலம் இருக்கும் நாளில் சென்று வணங்குதல் நல்லது.

விருச்சிக ராசி ரசிகர்களே… !

யார் எதைச்சொன்னாலும் கேட்காத விருச்சிக மக்களே, நான் இப்ப சொல்லுறதையும் நீங்க கேட்கப்போறதில்ல. அதனால நானும் எதுவும் சொல்லப் போறதில்ல!

பரிகாரம்: யார் என்ன பரிகாரம் சொன்னாலும் செய்யாமலிருப்பது.

தனுசு ராசி ரசிகர்களே… !

நீங்க 'i'ல ஆரம்பிக்கிற பேங்குல அக்கௌண்ட் வைச்சிருந்தா உடனே அதை வேற எங்கேயாவது மாத்திடுங்க. இன்னும் 8 மாசத்துக்கு 'i'யோட சகவாசமே ஆகாது. இவ்ளோ நாள் ஒஸாமா லக்கினத்துல இருந்த குரு இப்போ ஒபாமா லக்கினத்துக்கு கம்பி நீட்டியிருக்கிறதால உங்களுக்கு கார்டுல கண்டம். கிரெடிட் கார்டை கிழிச்சுப் போடுங்க. டெபிட் கார்டை டெலிட் பண்ணுங்க. ரேஷன் கார்டை 'ஒரு ரூபாய்'க்கு
வித்துருங்க.

பரிகாரம்: தினமும் ஒரு ஆளுக்கு ஒபாமா ஹேர்கட்டிங் செஞ்சு விடுறது நல்லது.

மகர ராசி ரசிகர்களே… !

வாஸ்துப்படி குரு உங்களுக்கு குண்டக்க மண்டக்க பெயர்ச்சி அடைஞ்சிருக்கறதால, இன்னும் 7 மாசத்துக்கு நீங்க உங்க வீட்டுக்குள்ள முன்வாசல் வழியா நுழையக்கூடாது. பின்வாசலும் ஆகாது. அதனால சன்னல் வழியா போனா இன்னல் இருக்காது. டூ பாத்ரூம் டாய்லெட்ல போகாதீங்க. கோலத்தை வாசல்ல போடாதீங்க. மீறினா, தேற மாட்டீங்க.

பரிகாரம்: பேசாம கொஞ்ச நாளைக்கு ஃப்ளாட்பாரத்துல வாழுங்க!

கும்ப ராசி ரசிகர்களே… !

இப்ப 'கரண்ட்'ஆ நடந்திருக்கிற குரு பெயர்ச்சியால, உங்களுக்கு 'கரண்டுல' கண்டம். அதனால வீட்டுல உள்ள எலெக்ட்ரிக் ஐயிட்டத்தையெல்லாம் வித்துடுங்க. ஜீரோ வாட்ஸ் பல்பு கூட இருக்கக் கூடாது. சொல்லப்போனா, பேப்பர்ல வர்ற 'கரண்ட்' நியூஸைக்கூட படிக்கக்கூடாது.

பரிகாரம்: அமாவாசை அன்னிக்கு மின்சார வாரியம் புள்ளையார் கோயில்ல ஆற்காட்டார் பெயருல அர்ச்சனை பண்ணுங்க.

மீன ராசி ரசிகர்களே… !

குரு நார்த் ஈஸ்ட்டுக்கும், சௌத் வெஸ்ட்டுக்கும் இடையில ஈஸ்ட்வெஸ்ட்டுல ரெண்டு டிகிரி நகர்ந்து இருக்கிறதால, நீங்க அடுத்த பஸ்ஸையோ, ட்ரெயினையோ அல்லது அடுத்த சந்திராயனையோ புடிச்சு வியாழன் கெரகத்துக்கு போயிடுறது நல்லது. கடமையைச் செய் பலனை எதிர்பாருன்னு பகவத் கீதையில சொல்லாததால, தேமுதிக மஞ்சக்கலர்ல முண்டா பனியன் போட்டுக்கிட்டா, கலைஞர்கள் வாழ்வில் விடிவு ஏற்படும்.

பரிகாரம்: எந்த ஜோசியக்காரனைப் பாத்தாலும் வெக்கப்படாம கடன் கேளுங்க

----
இது நானே எழுதியது அல்ல. (மின்)அம்பலத்தில் யாரோ எழுதி என் அண்ணன் அனுப்பியது... எழுதியது யார் என்று தெரிந்தால் சொல்லவும். கூகுளாருக்கும் சரியாக தெரியவில்லை...


Wednesday, September 16, 2009

தென்கச்சி சுவாமிநாதன்: அஞ்சலி

பிரபல தமிழ்ப் பேச்சாளர் தென்கச்சி சுவாமிநாதன் (63) இன்று காலமானார்.


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி. தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகி சென்னை வானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[Information thanks to: thatstamil.com]

Monday, September 14, 2009

அம்மா

அம்மா காட்டிய நிலாவும்,
அம்மா ஊட்டிய சோறும்
என்றுமே ஒருபடி உசத்திதான்.

யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை,
என் தம்பி மட்டும் விதிவிலக்கு.

எனக்கு பிகாஸோவெல்லாம் தெரியாது
மார்கழி மாதக் காலைகளில்
அம்மா போடும் கோலங்கள்தான் தெரியும்.

நவராத்திரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்போதுதான் அம்மா அடிக்கடி பாடுவாள்.

அம்மா கோணலாய் இட்ட விபூதிக் கீற்றில்தான்
என் முகம் அழகாய்த் தெரிகிறது.

என் பரிட்சைகளுக்காக என்னிலும் அதிகமாய்
தூக்கம் தொலைத்தவள் அம்மா.

சிகப்பு நிற சேலைகள் அனைத்தும் அழகானவை
அம்மாவிடம் அவை நிறைய உண்டு.

நான் வேற்றூரிலிருந்து வருகையில்
'வாடா' என்று அழைக்கும் போது
கண்கள் பனிக்கும் போதே தெரியும்
எனக்காக காத்திருந்திருக்கிறாள் என்று.

அம்மா கோவிலுக்குப் போய் சாமி பார்ப்பாள்.
நான் வீட்டிலிருந்து அம்மா பார்ப்பேன்.
இரண்டிற்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசமில்லை.

எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை
பொன் காக்கை.
*******************************************************************************
இது நான் எழுதிய கவிதை இல்லை. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பலப் பல வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு புதினத்தில் படித்தது, சமீபத்தில் கிடைத்தது. இதை இப்போது வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எழுதியவர் பெயர் நினைவில்லை மன்னிக்கவும்.

முரளி.
*******************************************************************************

வாங்க Excel படிக்கலாம் - Pivot Table

ஆடிய‌ன்ஸ்: எக்ஸெலுக்கு அல்லது பிவோட் டேபிளுக்குப் புதிய‌வ‌ர்.

ஒரு வங்கிக் கணக்கோ, அல்லது வீட்டுக் கணக்கோ எழுத வேண்டும் என்றால் (நீங்க அப்படி எதுவும் தப்பெல்லாம் செய்யறதில்லையா ? அப்ப நம்ம கூட்டாளி :))), முதலில் கட்டம் கட்டி, பார்டர் போட்டு, 'இன்ன தேதிக்கு பாலுக்கு இவ்வளவு, கீரைக்காரம்மா கிட்ட பேரம் பேசி வாங்கின காய்கறி இவ்வளவு' என்று கட்டங்களைத் தேடி தேடி எழுதுவோம். இரண்டாவது, வரிசையா எழுதிகிட்டு வந்து கடைசியில் (ஒரு குரூப்பா) பிரித்து மொத்தமா பால், காய்கறி என்று அந்த மாதத்திற்கு கணக்கிடுவோம். இந்த இரண்டாவது முறையை கையாண்டு எக்ஸெலில் ரொம்ப எளிதா, சில "க்ளிக் அண்ட் ட்ராக்" மூலம் முதல் முறையான கட்டங்களைப் பெறலாம். எடுத்துவிட்டேன் ர‌ம்ப‌த்தை என‌ எகிறிவிடாதீர்க‌ள் :) எழுத்தைக் குறைத்து, ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் பிவோட் டேபிளிலில் ப‌ய‌ணிக்க‌லாம் வாருங்க‌ள்.


தேதியிட்டு வ‌ரிசையா எழுதிக் கொண்டு வ‌ந்த‌ க‌ண‌க்கு. மொத்த‌த்தையும் செல‌க்ட் செய்து கொள்ளுங்க‌ள்.


"Insert" மெனுவை க்ளிக்கி, "Pivot table"ஐ செலக்ட் செய்யுங்கள். எக்ஸெல் 2003 எனில், Data மெனு.


கணக்கு பார்க்கும் பக்கத்திலேயே பிவோட் டேபிள் போட்டுக் கொள்வோம். அதனால், திறக்கும் குட்டி விண்டோவில், "Existing worksheet" க்ளிக்கி, செல் $E$2வில் க்ளிக்கிக் கொள்ளுங்கள்.


மாயாஜால‌ம் மாதிரி ஆங்காங்கே திற‌க்கும் க‌ட்டங்க‌ள் க‌ண்டு ப‌ய‌ந்துவிடாதீர்க‌ள்.


வ‌ந்த‌ க‌ட்ட‌ங்க‌ளின் வ‌ல‌து மேலே, "Choose fileds to add to report"ல் அனைத்தையும் "டிக்" செய்து கொள்ளுங்க‌ள். இவை முறையே "Row Labels" ம‌ற்றும் "Values" க‌ட்ட‌ங்க‌ளில் பிர‌திப‌லிக்கும். பிவோட் டேபிளும் தயார்.


தேதி வாரியாக‌ப் பார்க்க, தேதியை "Row Label"ல் க்ளிக்கி "Column Label"ல் ட்ராப் செய்யுங்க‌ள்.


தேதி வாரியாக, Nice and Beautiful Pivot table.


ஏதாவ‌து மாற்ற‌ம் செய்ய‌ வேண்டும் எனில், டேட்டா ஏரியாவில் செய்யுங்க‌ள். பின், பிவோட் டேபிளில் "Right Click" செய்து "Refresh" க்ளிக்கினால் போதும்.


மாற்றம் செய்யப்பட்ட பிவோட் டேபிள்.

Tuesday, September 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 11 {சரித்திர நாயகி நானா சாவித்திரியா?}

உலகத்தில் எல்லா மனைவிகளும் அவங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது கிடைக்குமான்னு ஏங்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்த போது நான் வேண்டாம்னு முகம் திருப்பிக்கிட்டேன்னு நினைச்சால் எனக்கே என்னை நினைத்து பெருமையா இருக்குங்க. என்னுடைய இந்த பெருந்தன்மையை பற்றி கேள்விப்பட்டாங்கன்னா நம்ம ஊரு 'அமர்சித்ர கதைகள்' கம்பெனிகாரங்க 'சத்தியவான் சாவித்ரி' கதையோடு சேர்த்து என் கதையையும் வெளியிட்டுருவாங்க. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகமா வெளி வந்து நம்மூர் நண்டு சிண்டெல்லாம் படிக்க நேர்ந்தால் கணவர் மனம் நோகுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.

மூணு வருஷத்துக்கு முன் நடந்த இது ஒரு உண்மை சம்பவம்.

---------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு கோடைகால விடுமுறைக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்தாச்சு. நாளை விடிந்தா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு விமானதளத்துக்கு போக வேண்டியது தான். இந்த நேரத்தில் நீங்களா இருந்தா என்ன செய்வீங்க? நிம்மதியா படுத்து தூங்கி கனவில் அபிமான நடிகர் 'ஹாரிசன் போர்ட்' கையை குலுக்கி விட்டு எழுந்து ஊருக்கு போய் சேருவீங்க. அதை செய்யாமல் விட்டு விட்டு பொழுது போகலைன்னு நான் வாசல் பக்கம் குழந்தைகளுடன் விளையாட போனதை விதின்னு சொல்லாமல் வேறெப்படி சொல்லறது?

முப்பது வயசில் மூணு வயசு குழந்தையின் ஆர்வத்தோட ஸ்கூட்டர் விட்டு விளையாடினால் என்ன நடக்குமோ அது தான் நடந்தது. தார் ரோட்டில் தலை குப்புற விழுந்து வலது கண் பக்கம் பயங்கர அடி. வீங்கிய முகத்துக்குள்ளே புதைஞ்சு போன கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்த போது எதிரில் கலங்கலாய் தெரிஞ்சது வீடு. ஒரு இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ போல் ரத்த சிவப்பான கண்களோடு ஆடிக்கொண்டே வீட்டுக்குள் வந்த என்னை பார்த்து பதறி போன என் கணவர் என்னை பக்கத்து ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து போக அங்கே ஆரம்பிச்சது அவருடைய கெட்ட நேரம்.

கரு ரத்தம் கட்டி போய் வீங்கியிருந்த என் முகத்தை பார்த்த நர்சுகளும் டாக்டர்களும் கோபத்தில் திரும்பி என் கணவரை பார்த்த பார்வையில் இருந்த உக்கிரத்தை பாண்டிய நாட்டு சபையில் நடந்த திருவிளையாடல் காட்சியில் சிவன் "நக்கீரா என்னை நன்றாக பார்" அப்படீன்னுதன் நெற்றிக்கண்ணை கோபத்தில் திறந்த போது கடைசியாக பார்த்த ஞாபகம். அவங்களோட கோவத்தின் காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்த என் கணவரை வெளியே உட்கார சொல்லி விட்டு ஸ்கேன் செய்யும் ரூமுக்கு என்னை அழைத்து போய் அனுதாபத்தோடு பார்த்த நர்சை கண்டு எனக்கும் குழப்பம் தான். ஆனால் மேலே யோசனை பண்ண முடியாமல் முகம் பத்து விசில் வந்த ப்ரெஸ்டீஜ் குக்கர் போல வலியில் தெறித்தது.

ஒரு வழியாக ஸ்கேன் முடிந்து டாக்டர் வந்து பார்த்து வலிக்கு மாத்திரை குடுத்து முடித்த போது தான் என் கணவர் கவலையோடு கதவுக்கு வெளியே நின்னு எட்டி பார்ப்பது தெரிந்தது. அவரை உள்ளே கூப்பிட சொல்லி நான் சொன்ன போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட டாக்டரும் நர்சும் மெதுவாக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏதும் பிரச்சனை என்றால் தைரியமாக சொல்லலாம். பயப்பட வேண்டாம். என்னை போல பெண்களுக்கு பல காப்பகங்கள் இருக்கு. கை நீட்டும் கணவருக்கு பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என் பக்கம் தான். இந்த ரீதியில் இன்னும் பல விஷயங்களை கனிவாக பொறுமையாக சொல்லி கொண்டே போனாங்க. ஒன்றும் புரியாமல் முதலில் விழித்த எனக்கு விஷயம் விளங்க ஆரம்பித்த போது அடி வயத்திலிருந்து பொங்கிய சிரிப்பை மீறி ஒரு விஷயம் உறைத்தது.

என் கணவரின் குடுமி அந்த ஒரு வினாடி என் கையில். என் ஒரு தலை அசைப்பில் பாவம் அவர் மாமியார் வீட்டு களியை ருசி பார்க்க வேண்டி இருக்கும். ஆஹா! எப்பேர்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! கோடானு கோடி மனைவிகள் உலகத்தில் தங்கள் வலது புருவத்தை வெட்டி கொடுக்க தயாராக இருக்கும் (மாசம் ரெண்டு தரம் அழகு நிலையம் சென்று தீட்டி விட்டு கொண்டும் வரும் அதே புருவத்தை தான் சொல்லறேன்) இந்த ஒரு வாய்ப்பு தேடாமல் கனிந்த பழம் போல என் மடியில் விழுந்த போது மனம் சஞ்சலப்படாமல் நெஞ்சில் உரமுடன் 'இவர் இதற்கு காரணமில்லை. இவர் நிரபராதி' ன்னு சொல்லி சட்டத்தின் கொடும் பிடியில் சிக்காமல் என் கணவரை மீட்டு கொண்டு வந்த நானா இல்லை சத்யவானின் சாவித்ரியா சரித்திர நாயகி?

-மீனா சங்கரன்

Monday, September 07, 2009

பத்திரமான இடம்

"மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்ன கண்ணு"

என்ற பாடல் பிரபலமானது.

சினிமா பாடல்களை எல்லாம் "டப்பாங்குத்து பாட்டு" என்று வெறுத்து தள்ளும் சங்கீத ரசிகர்களை கூட சற்று நேரம் காது கொடுத்து கேட்கச் செய்யும் பாடல் அது. எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டில் சொல்லப்படும் செய்தியையும் கவனிக்க வேண்டும். கிராமிய பின்னணியில் அமைந்த கதைக்கு, மருதகாசி போன்ற பாடல் ஆசிரியர்கள் இப்படி எல்லாம் பாடல் எழுதினார்கள் என்ற விஷயம் இன்றைய இளம் ரசிகர்களை வியக்க வைக்கும். இப்படி பட்ட நல்ல செய்திகள் மருதகாசியின் பாடல்களில் நிறையவே இருக்கும்.

நிலத்தில் எப்படி பாடுபட வேண்டும், எப்படி விளைச்சலை பாதுக்காக்க வேண்டும் என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போவார். கடைசியாக, கிடைத்த பலனை பாதுகாப்பாக வைக்க மருதகாசி சொல்லும் முறைதான் இங்கே முக்கியம்.

"சேத்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக்கண்ணு"

ஏன் அம்மா கையில் கொடுக்க வேண்டும்?

"அவங்க ஆறை நூறா ஆக்குவாங்க செல்லக்கண்ணு" என்ற வரியுடன் பாடல் முடியும்.

சம்பாதித்தால் போதுமா? சீராக செலவு செய்து சிக்கனமாக வாழ வேண்டாமா? சம்பாதித்த பணத்தை வீட்டில் போனவுடன் மனைவி கையில் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்ற பாடத்தை பலபேர் சொல்வதுண்டு.வாங்கிய பணத்தை முனை முறியாமல் மனைவியிடம் கொடுத்துவிட்டு தன கைச் செலவுக்கு கூட மனைவியிடம் கைநீட்டி வாங்கி வாழும் அப்பாவி ஆண்கள் பலர் உண்டு. குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதித்தால் நிலைமை வேறு. யார் கை ஓங்கி நிற்கிறதோ, அவர்கள் ஆதிக்கம் நிலைக்கும். மனைவியிடம் எல்லா காசையும் கொடுத்து விட்டு நிற்கும் ஆண் பிள்ளைகளை கேலியாகவும் பேசுவதுண்டு. எது சரி என்பது வேறு விஷயம். ஆண் செலவாளியாக இருந்தால் நிதி நிர்வாகம் பெண்ணிடம் இருப்பது ஒரு வகையில் நல்லதுதானே. ஆனாலும் பெண்களிடம் பணத்தை கொடுத்துவிடுவதை கேலி செய்வது இன்றும் தொடர்கிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயரை இன்றும் சிலராவது நினைத்துக் கொண்டிருப்பார்கள். சுதந்திர போராட்டத்தில் கலந்துக் கொண்டு சிறை சென்றவர். சுதந்திர இயக்க பாடல்களை பாடியவர். அவர் எழுதிய "மலைக்கள்ளன்" பிற்காலத்தில் திரைப்படமாக வெளி வந்தது.

இந்த நாமக்கல் கவிஞருக்கு பாராட்டு மற்றும் நிதி அளிப்பு விழா ஏற்பாடாகி இருந்தது. நிகழ்ச்சியில் ராஜாஜி நிதி முடிப்பை நாமக்கல் கவிஞர் கையில் கொடுத்தார். காமிராக்காரர்கள் போட்டோ எடுத்து முடித்தார்கள். ராஜாஜி பேச்சை தொடங்க மைக் அருகில் சென்றார். அந்த நேரத்தில் கவிஞர் நிதி முடிப்பை அருகில் இருந்த தன் மனைவி கையில் கொடுத்தார்.

இதை பார்த்த ராஜாஜி பேச்சை இப்படி தொடங்கினார். "பணம் போகவேண்டிய இடத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்து விட்டது. கவலை வேண்டாம்" என்றார்.

கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.

மு. கோபாலகிருஷ்ணன்