Wednesday, March 11, 2009

உங்களுடைய செக் இஞ்சின் லைட் சரி செய்து விட்டீர்களா?

உங்களுடைய காரில் செக் இஞ்சின் லைட் எரிய ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னை மாதிரி பயந்தாங்குளிகள் அடித்துப் பிடித்து ஓடிப்போய் மெக்கானிக்கிடம் காரை கொண்டுபோய் சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு வருவோம். அதே ஒரு கால்வலியோ, முதுகுவலியோ, நெஞ்சுவலியோ வந்தால் ஒழுங்காக டாக்டரிடம் போகாமல் காலத்தை ஓட்டிக்கொண்டு இருப்போம். ஒரு காருக்கு செலுத்தும் அக்கறை கூட நம் உடல் நலத்தில் செலுத்துவதில்லை.

சென்ற வாரம் ஒரு நண்பருக்கு இப்படித்தான். இரண்டு நாட்களாக நெஞ்சுவலி என்று உடல்வலி மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை, மூன்றாம் நாள் அவர் மனைவி காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனார். அங்கே அவர் உடலை பரிசோதித்துவிட்டு உடனே எமர்ஜென்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு வந்தது மாரடைப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்தக்குழாயில் இருந்த இரண்டு அடைப்புகளை சரி செய்து அனுப்பியிருக்கிறார்கள். நாற்பதுகளில் இருக்கும் நண்பர் நிறைய டென்னிஸ் ஆடுபவர், சுறுசுறுப்பாக, இருக்கும் அனைத்து சங்கங்களிலும் ஈடுபட்டு நிறைய தொண்டு செய்பவர். அவருக்கு மாரடைப்பு வந்தது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆகவே உங்களுக்கு எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நல்ல உடல்நலத்தோடு இருந்தாலும் ஆண்டுக்கொரு முறை உடல்நலப் பரிசோதனை (annual physical checkup)செய்து கொள்ளுங்கள். அதுவும் நாற்பதை தாண்டிவிட்டால் இது மிகவும் கட்டாயம். கொழுப்பெடுத்து எது செய்கிறீர்களோ இல்லையோ - உங்கள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதுவும் இக்கால அன்றாட வாழ்க்கையில் நமக்கு நடப்பது, ஓடுவது எல்லாம் மிகவும் குறைந்திருக்கையில், நமது உணவு அதற்கேற்றார்போல மாறாதிருப்பது, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக முக்கிய காரணம். இப்போதும் ஒன்றும் காலதாமதமாகவில்லை. இந்த சனிக்கிழமை மானுமென்ட் அவின்யுவில் பத்து கிலோமீட்டர் ஓடலாம் வருகிறீர்களா?

Monday, March 02, 2009

ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

நமக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் கொடுக்கலாமென்றிருந்தார்கள். நான் பெருந்தன்மையாக அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் ஏதாவது ஒரு பட்டம் வாங்கிக் கொண்டால்தான் ஆயிற்று என்று வற்புறுத்தினார்கள். அவர்கள் அன்புத்தொல்லை தாங்காமல் நான் வாங்கிக் கொண்ட பட்டம்தான் -  ஆயிரம் புரதம் மடித்த் அபூர்வ சிகாமணி!

 

என்னய்யா மடிக்கிற என்கிறீர்களா? நீங்களும் மடிக்கலாம் இங்கே சென்று... நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள். உங்களையும் மடித்து விடுவார்கள். உங்கள் வீட்டில் கணினி சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால்,  அதையும் புரதம் மடிக்க வைக்கலாம். இதனால் பல வியாதிகளின் அடிப்படை குணாதிசயங்களை அறிந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியம்.

அதென்னய்யா புரதம் மடிப்பது என்று கேட்பவர்கள்  http://folding.stanford.edu தளத்தில் சென்று படித்து தெரிந்து கொள்ளலாம். வர வர நான் ஒன்று சொன்னால், மக்கள் வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். அதனால் நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை :-)

இப்படிக்கு.

திரு. ஆயிரம் புரதம் மடித்த அபூர்வ சிகாமணி

படம் பாரு கடி கேளு - 25



சார், லாலு சார் தயவு செய்து சீக்கிரம் inspect பண்ணிட்டு போங்க சார். நீங்க inspect பண்ண வர்றீங்கன்னு காலையிலிருந்து என்னை இப்படியே படுக்க வெச்சுட்டாங்க. பாத்ரூம் கூட போக விடலே.