Tuesday, October 31, 2006

எதிரொலி - 1

நாகு அவர்களே, ஜெயகாந்தன் அவர்களே, எங்க அண்ணாச்சி அவர்களே (உன்னையெல்லாம் மரியாதையா கூப்புடரத எண்ணி த்சொ த்சொ, ஒன்னும் இல்லை விஸ்கி விஸ்கி அழுதேன்). மற்றும் இந்த ப்ளாக்கில் நான் எழுதப் போவதையெல்லாம் தொடர்ந்து படிக்க இருக்கும் கோடான கோடி (ஒரு கோடில நாகு, இன்னொரு கோடில ஜெயகாந்தன்) தமிழ்(ள்/ல் எதுனாச்சும் போட்டுக்குங்க) மக்களே அல்லாருக்கும் வன்கம். நானும் எதிரொலின்னு ஒரு ப்ளாக் புடிச்சு வெச்சுட்டேன், கபால்ன்னு நீங்க என்னை வெளில தள்ளிட்டா என்ன பண்றது, அதான்.

பழைய பதிப்புகளை கொஞ்சம் பிரிச்சு மேஞ்சிருக்கேன். யாருக்காச்சும் sad-ஆ இருந்தா மன்சிகப்பா.

பரதேசியின் ஆகஸ்ட் மாசக் கதை படிச்சேன், தலைப்பு இல்லை கால்ப்பு தான்னு சொல்லிட்டு 'இது எப்படி இருக்கு'-ன்னு கேட்டு இருக்கார். நல்லா கனவு கண்டு எழுதியிருக்கார். நம்மூர்-ல இப்ப எல்லாரும், வயசு வித்தியாசம் இல்லாம செய்யரது கனவு காண்றது. பரதேசியாரின் கனவு கொஞ்சம் டேஞ்சர்தான், இந்தியால இப்ப இருக்கற ஜனத்தொகைக்கு மேல உங்க ஊர்ல இருந்து ஆட்கள் வந்தா கிழிஞ்சுடும், இருந்தாலும் நல்லா கீதுபா.

'இது ஞாயமா' 'புல்லின் டைரி குறிப்பு' ரெண்டும் கவிதையா, கட்டுரையா?

'ஒரு குடாக்கின் புலம்பல்' - கொஞ்சம் நெருடுதே வார்த்தைலாம்.
'பூபாளம் பாடும்போது நீலாம்பரி பாடினால்' அம்மா தாச்சுகினாங்கன்னு அர்தம் ஆவுது,
'நான் சீரியல் சாப்பிடும்போது நீ ஸீரியல் பார்க்கிறாய்' -ன்னா முய்சுகினாங்களா
'நான் அலுவலகம் கிளம்பும்போது நீ அவுட்டிங் கிளம்புகிறாய்' - முய்சுகினு மிட் நைட் ஷாப்பிங்கா?
'நான் உணவருந்தும்போது நீ நித்திரையில் ஆழ்கிறாய்' - மதியம் லஞ்ச்சா? அப்ப அம்மா மருடி தூங்கிட்டாங்களா?

நீ இருப்பதோ இந்தியாவில் நான் இருப்பதோ அமெரிக்காவில்
உனக்கோ வெகேஷன் எனக்கோ டென்ஷன்

இப்படி சொன்னா டைமிங் ஒத்து வர்லியே? சரி ரைமிங்கா இருந்தா சரின்றீங்களா, ஒகே.

வேதாளம் நல்லா வந்து இருக்கு, உங்க ஊர்காரங்களுக்குத்தான் அது புரியும்னு நினைக்கிறேன். எங்க அண்ணாத்தே 3 பேர கண்டு புடிச்சுட்டான்.

செப்டம்பர் மாதப் பதிப்புகளில், கொலு பற்றி நாகுவின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
உயிருள்ள சொற்றொடரகளும், சைவமா வைஷ்ணவமா அருமை. நல்லா என்ன மாதிரி பயலுகளையும் படிக்க வெச்சுட்டார்பா. ஆயிரம் ஆண்டுகளில் முதல் பாயிண்டா 'என்னை மாதிரி ஒன்னு ரெண்டு பேர் நக்கீரன் வேலை பண்ணிட்டு இருப்பாங்க' -ன்னு சேத்துடுங்க.

அக்டோபர் மாதப் பதிப்புகளில், முரளியின் அவருடைய comments பகுதியில் கலைஞனின் 2வரி கதைகளை மாற்றி எழுதியிருக்கார் அதுவும் நாடகத்தனமாகத்தான் இருக்கு.

பசியோடு தென்னை மரத்தடியில் ஒரு தேங்காய் விழாதா என இருந்தவனுக்கு
சித்ரகுப்தன் சொன்னான் விழுந்த தேங்காய் ரொம்ப கனம் என்று.

இது நல்லா இருக்கு.

சென்னையில் அடை மழை. தொட்டுக்க சாம்பார், கெட்டி சட்னி, அவியல் எதுவும் கிடையாது.

மத்தது அடுத்த தபா ரைட்டா?

முடிச்சு வைக்க வாங்க..

ரமேஷ் தன் கைபேசியில் நண்பனை அழைத்தான்.

மறுமுனையில் குரல், "ஹலோ.. யார் பேசரது.."

"டேய் வெண்ணை. எத்தனை வாட்டி உன்னை கூப்பிட்டு மெசேஜ் விடறது. அப்படி என்ன வெட்டி முறிக்கர வேலை ஒனக்கு. திருப்பி கூப்பிட மாட்டயாடா?"

"மெசேஜ் விட்டயா? எப்ப.. எனக்கு மிஸ்டு கால் ஏதும் இல்லையே.."

"போன சனிக்கிழமை மதியம் 2 மணி போல கூப்பிட்டேன். பிறகு செவ்வாய்கிழமை சாயந்திரம் பண்ணினேன்."

"வேலை கொஞ்சம் அதிகம். சரி என்ன விசயம்னு சொல்லு."

"ஒன்னும் இல்லடா கோபால். சும்மாதான் பண்ணினேன். தீபாவளி ரிலீஸ்'ல எந்த படம் பார்த்தே? எது நல்லா இருக்கு.?"

"----------------------------------------------------------------"

இந்த குட்டிக்கதையின் முடிவை ஒரே வரியில் முடியுமாறு பின்னூட்டத்தில் எழுதுங்க.. கோடிட்ட இடத்தில் நான் எனது முடிவு வரியை 2-3 நாளில் பதிக்கிறேன்.

நவம்பர் மாத லொள்ளு மொழிகள்

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

ஸ்கூல் test ல பிட் அடிக்கலாம். காலேஜ் test ல பிட் அடிக்கலாம்.
ஆனா blood test ல பிட் அடிக்க முடியுமா?

அனைவருக்கும் எதிரொலியின் வணக்கம்

ஐயா வணக்கமுங்க. உங்க ப்ளாக்ல எழுதியிருக்கர படைப்புகள படிச்சேன். நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் (எங்க அண்ணன் தான்) ஒரு லிங்க் அனுப்பி எனக்கு டைம் இருந்தா எழுதச் சொன்னாரு. முதல்ல இதுவரை எழுதியிருக்கரவங்க படைப்புகளப் பார்த்தா, நம்ம கதை கந்தல்ன்னு நினைக்கிறேன். நமக்கு (என்னடா பெரிய பருப்பு மாதிரி நமக்கு நமக்கு-நு எழுதரான்னு திட்டாதீங்க, என்னை நான் மதிக்கலைனா வேற யார் மதிப்பாங்க, அதான்) அவ்வளவா நல்ல தமிழ் வராது, இங்கிலீஷ் கலக்காம தமிழ் பேசவே வராது, இருந்தாலும், அண்ணாத்தே சொல்லிட்டாரேன்னு எழுதறேன். தப்பு இருந்தா சொல்லுங்க (திருத்திக்க மாட்டேன், எங்க அண்ணன் யாருன்னு சொல்றேன் அவனை பெண்டு எடுங்க, என்னை 'கவனிக்கனும்னா' சிங்காரச் (இப்போ கொஞ்சம் சொதச் சொதச்) சென்னைக்கு வாங்க, அது நம்ம பேட்டை யாபகம் வெச்சுக்கங்க).
என்னாடா எதிரொலி-ந்னு பேர் வெச்சிருக்கேன்னு கேட்பீங்கன்னு பாக்கறேன் ஒருத்தரும் கேக்கல, போனாப் போவுதுன்னு இந்த தடவை நானே சொல்லிடறேன். நெக்ஸ்ட் டைம் நீங்கதான் கேக்கனும் ரைட்டா.

முன்பு ஒரு காலத்தில, சென்னைத் தொ(ல்)லைக் காட்சியில் ரொம்ப ஃபேமஸ் ப்ரோக்ராம் எதிரொலி, அதுல T.S. நாராயணஸ்வாமின்னு ஒருத்தர் வருவார் (பேர் குன்ஸாதான் ஞாபகம் இருக்கு தப்பா இருந்தா, இதுக்கெல்லாம் கட்டைய தூக்கிட்டு வராதீங்க, இதெல்லாம் பேசி தீத்துக்க வேண்டியது), அவரால அந்த ப்ரோக்ராம் சக்க போடு போட்டது, அந்த ஞாபகத்தில இந்த பேரை வெச்சுகிட்டேன், (ஒன் கோலி சோடா ப்ளீஸ்).

மொதல்ல இங்க வந்திருக்கிற கதை, கவித எல்லாத்தையும் பிரிச்சு மேஞ்சிடலாம்னு இருக்கேன். ஒரு தபா யாரோ சொல்லி ஒரு பெரியவர் கேட்டு (நாந்தான்) இன்னிக்கு சொல்றது என்னடான்னா, 'A critic need not be a professional', so, இதுக்கும் கழி, கம்பு எடுத்துகிட்டு வராதீங்க, பாவம் அறியாபுள்ள தெரியாம சொல்லிகினான்னு உடுங்க. (ஐ எனக்கும் நல்லா எதுகை மோனைல எழுத வருது, okay okay, இதெல்லாம் நமக்கு ஜகஜமப்பா).

அடுத்து உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் நன்பன் எதிரொலி.

(பி.கு. இப்படி ஒரு தடவை வணக்கம் சொல்லி எழுதிப் பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசை, எழுதினதுக்கு அப்பரம்தான் தெரியுது சகிக்கலன்னு)

Friday, October 27, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்னுடைய கிறுக்கல்களை http://pkirukkalgal.blogspot.com என்கிற ப்ளாக்கில் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் (அதாங்க comments) தரவும்.

எனது நாலாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2006/10/4.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Monday, October 23, 2006

யார் தலை(வர்)?


தொண்டர்களென்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும். தலைவர் சிலைக்கு மாலை போடலாம். ஆனால் தலைவர் தலையே தெரியாமல் மாலை போட்ட தொண்டர்களின் அபிமானத்தை என்ன சொல்வது?

Saturday, October 21, 2006

கூட்டாங்'ஸ்

அது என்ன கூட்டாங்ஸ்? இந்த வலைப்பதிவில் எழுதும் அன்பர்களின்(சுருக்கமாக பிளாகிகள்) கூட்டு முயற்சியான ஒரு கூட்டாங்கதை, ஒரு கூட்டாங்கவிதை - சேர்த்து சுத்தத் தமிழில் கூட்டாங்ஸ். ஆனால் கூட்டாங்கவிதை இந்த முறை ஒருவர் படைப்புத்தான். கூட்டாங்கதைதான் உண்மையில் கூட்டாங்கதை. நான் எங்கேயோ ஆரம்பித்ததை அனைவரும் கடத்திச் சென்று கடைசியில் தமிழீழத்தில் விட்டு விட்டார்கள்! நீங்களும் படித்துப் பார்த்து கொஞ்சம் திட்டினால் எங்களுக்கெல்லாம் சற்று உற்சாகமாக இருக்கும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Friday, October 20, 2006

தீபாவளி

போராடி கிடைத்த போனஸ்
பளபளக்கும் பட்டாடை
பலவிதத்தில் பணியாரம்
படபடக்கும் பட்டாசு
பழங்கதையில் புதுப்படம்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் பாமரனின் தீபாவளி

மினுமினுக்கும் மோதிரம்
கைகனக்கும் கடிகாரம்
ஜொலி ஜொலிக்கும் வேட்டி
பளபளக்கும் மோட்டார்பைக்
பல்லுடைக்கும் மைசூர்பாக்
படபடக்கும் மைத்துனன்
பரபரக்கும் மாமியார்
பல்லிளிக்கும் மாமனார்
இது தான் தீபாவளி என்பதோ?
ஆம் இது தான் புது மாப்பிள்ளையின் தலை தீபாவளி


சிடுசிடுக்கும் மாப்பிள்ளை
சரிக்கட்டும் செல்லப்பெண்
சிக்கல் தீர்க்கும் மனைவி
சிரித்துக்குலுங்கும் பேத்திகள்
சிலுமிஷம் செய்யும் பேரன்கள்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை

வாசலில் நின்று பயமுறுத்தும் மளிகைக்கடைக்காரர்
வழியில் மடக்கி வாதாடும் தையல்காரர்
விட்டு விட்டு தலையை சொரியும் தபால்காரர்
இது தான் தீபாவளி என்பதோ? இல்லை
தபாலில் வந்து மதிமயக்கும் மாஸ்டர் கார்ட் பில்
தவராமல் வந்து விழி பிதுக்கும் விசா கார்ட் பில்
இது தான் தீபாவளி என்பதோ?
இது பாமரனின் தீபாவளியல்ல
இது புது மாப்பிள்ளையின் தலை தீபாவளியுமல்ல
இது தலைவரின் தீபாவளி
ஆம் குடும்பத்தலைவரின் தீபாவளி!


உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
ப்ளாகிகளே! மேலும் மேலும் ப்ளாகுக!

Tuesday, October 17, 2006

வலையில் சுட்டவை

தமிழ்நாட்டு அரசியல் YouTubeல் இணையம் சிரிக்கிறது (சந்தியெல்லாம் இந்த இன்டெர்நெட் உலகில் ரொம்ப சிறுசுங்க)



அரசியல் கிடக்கட்டும். இரண்டரை வயது வாண்டு தபலாவில் என்னமாய் கலக்குகிறான் பாருங்க!

படித்ததில் பிடித்தவை

"அரண்மனை தையல்கரரிடம் மன்னர் ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்திருக்கராமே?"
"ஆமாம், முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே மாதிரி தெரியும்படி சட்டை தைக்கச் சொல்லியிருக்கார். போரில் புறமுதுகிட்டு ஓடும்போது மானக்கேடா இல்லாம இருக்கத்தான்!"


நன்றி: ஆனந்த விகடன்

Monday, October 16, 2006

கணவன் மனைவி ஜோக்

மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க

தருமி
கடைகளிள் பொருள்கள் வாங்கும் போது நமக்கு கொடுக்கும் பைகளிள் உள்ள படங்கள் சில













































பிளாகிகளின் கூட்டாங்கதை!

ரிச்மண்ட் பிளாகிகளின்(ரமேஷின் பிரயோகம்) கூட்டு முயற்சியில் ஒரு கூட்டாங்கதை உருவாகிறது. மெகா சீரியல் மாதிரி போகும் கவலைக்கிடமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பார்க்கலாம் எப்படி போகிறதென்று. கூடிய விரைவில் பார்ட்டிகளில் செல்வி, மெட்டிஒலியைவிட கூட்டாங்கதை பற்றி விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

பித்தன், பரதேசி, நீர்வைமகள்,தருமி, ஓம்கார், ஜெயகாந்தன், ஷன், கவிநயா, நடராஜ மூர்த்தி மாமரத்துப்பட்டி, முரளி, ரவி, அஷோக்,தமில் பிளாகர் என்று சபை களைகட்டுகிறது. அனைவரும் அமைதிப்படையிலேயே தங்கிவிடாமல், சற்று கொஞ்சம் பதிவுகளை வீச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற வார இறுதியில் ஒரு பூஜையில் காதில் விழுந்தவை:

"ஜெயகாந்தன் என்ற பெயர்ல யாரு எழுதறது?"
"ஜெயகாந்தன்தான்".

"நிஜமா சொல்லுங்க, நீங்கதானே பித்தன்".
"யோவ், யார பாத்து பித்தன்ற?".
"இல்லண்ணா, ப்ளாக்ல எழுதறது நீங்கதானே?"
"ப்ளாகா? யாரவர்??"

"எனக்கு நிச்சயமா தெரியும், நாகுதான் பரதேசின்னு. சும்மா பாவ்லாகாக நாகு பேர்ல பரதேசி பதிவில் கமெண்ட் வேற எழுதறான். சுத்தமா வேல இல்ல போல இருக்கு".

"பித்தன் முத்துதான்"
"இல்லய்யா, அவர்தான் அஷோக்ன்ற பெயர்ல எழுதராரே"
"அது அஷோக் முத்துய்யா"
"என்னய்யா குழப்பற"

"ஓம்கார்ன்ற பேர்ல எழுதறது யாரு?"
"முதல்ல எழுதட்டும். அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"ரவின்ற பேர்ல எழுதறது யாரு?"
"ரவிதான்"
"எந்த ரவின்னு கேட்டன்யா"
"முதல்ல எழுதட்டும். அதயும் அப்பறம் கண்டுபிடிக்கலாம்"

"RTS Blog தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி ஆயிடிச்சி"
"ஏன்?"
"படிக்கறவங்கள விட அதுல எழுதறவங்கதான் ஜாஸ்தி"


அதுக்குமேல தாங்க முடியவில்லை. உட்டேஞ்சவாரி! உலகத்து அனைத்து மூலைகளிலும் படிக்கப்படுவது நமது பதிவுகள். சான்று? இதோ!

அமேயாவின் ரங்க பிரவேசம்!


சாரதா, பாபு ஜம்மி தம்பதியினரின் மகளான அமேயா ஜம்மி நவம்பர் 5ம் தேதி மதியம் 3.30 மணிக்கு காட்வின் பள்ளியில் ரங்க பிரவேசம் செய்கிறாள். குச்சிபுடி நாட்டிய ரசிகர்கள் அனைவரையும் ஜம்மி குடும்பத்தினர் இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறார்கள்.

Sunday, October 15, 2006

நான்கு வயது ஆதித்யாவுக்கு உதவி

நான்கு வயதே நிரம்பிய ஆதித்யாவுக்கு புற்றுநோய். இந்தியாவில் இருக்கும் அவனுக்கு சிகிச்சை அமெரிக்காவில்தான் கிடைக்கிறது. அவன் மருத்துவச் செலவுக்கு உங்களால் முடிந்த உதவி செய்தால் நல்லது. இந்த விவரங்களை தேசிகன் பக்கத்தில் படித்தேன்.

ஆதித்யா பற்றி விவரங்கள் இந்தத் தளத்தில் காணுங்கள். இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவ ஒரு அமைப்பு இருக்கிறது. நீங்கள் விரும்பினால் அந்த நிறுவனத்திற்கும் உதவலாம்.

இன்னொரு முக்கியமான வேண்டுகோள். உங்களால் முடியும்போது எலும்பு மேரோ(தமிழில் என்ன?) தானம் செய்ய பதிந்து கொள்ளுங்கள். ஒரு உயிரைக் காக்கும் புண்ணியம் கிட்டலாம் உங்களுக்கு. => http://www.marrow.org/

Thursday, October 12, 2006

இலக்கியப் போட்டி

The deadline for RTS Literary competition has been extended to October 31, 2006.

இலக்கியப் போட்டியில் கலந்துகொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. முழு விவரம் இங்கே.

Wednesday, October 11, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 3

பித்தனின் கிறுக்கல்கள் - 3
தமிழ் சங்கத்துக்கு ஒரு யோசனை:
சமீபத்தில் இலக்கியப் போட்டி 2006-க்கான அறிவிப்பு வந்து இருக்கிறது. மேலும் பரிசுன்னு சொல்லாம, எல்லா படைப்புகளையும் படைப்பாளர்களின் புகைப்படங்களோடு இந்த வளைத்தளத்தில் வெளியிடலாமே? இதனால, ஒன்னு - நிறைய பேர் கலந்து கொள்வார்கள், ரெண்டு - பொறாமை இருக்காது, ஒரு அறிஞன் சொன்னது We see things not as they are but as we are-னு இது இந்த போட்டிக்கு கண்டிப்பாகப் பொருந்தும் காரணம், இந்தப் போட்டியில தலைப்பு எதுவும் தராததினால யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுத முயற்சி செய்யலாம், அது நடுவர் குழுவுக்குப் பிடிக்கலைன்னா நல்லா எழுதியிருந்தாலும் பரிசு கிடைக்காதே? ஊதர சங்கை ஊதிட்டேன், இனி சங்கத்தின் பொறுப்பு, பண்ருட்டியார் பொறுப்பு. 'நாராயண, நாராயண'.
தமிழ் சங்கத்தின் தற்போதைய செயற் குழுவின் பணிக்காலம் முடியப் போவதால், அடுத்த குழுவினர்களைத் தேர்ந்து எடுக்கும் பணியும், பொறுப்பும் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் இந்த முயற்சி இனிது முடிய என் வாழ்த்துக்கள்.
போன வெளியீட்டில் ஒரு சில யோசனைகளைச் சொல்லியிருந்தேன், அது அந்த வெளியீட்டில் கடைசியில் இருந்ததால், பலர் பார்வையில் பட்டிருக்காது எனவே, மீண்டும் ஒரு முறை - சங்கு ஊதி விடுகிறேன்.
பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.
இந்த ப்ளாக் பற்றி
இந்த ப்ளாக்ல நிறைய இலக்கிய படைப்புகள் வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சந்தோஷம் எனக்கு போட்டியா யாரும் இன்னும் அரசியல் விமர்சனம் எழுத ஆரம்பிக்கல, அது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
55 வார்த்தைல கதை கேட்டு இருக்கார் முரளி:
சுஜாதா சொன்னது:
ஒரு ஊர்ல ஒரு நரியாம் அத்தோட கதை சரியாம்
சுவற்றில் ஆணி அடிக்கும் முன் வேலைக்காரப் பையன் கேட்ட கடைசி கேள்வி, ஏங்க
வீட்டில concealed wiring-நு சொன்னீங்களே, மெயின் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டீங்களா?
நான் சமுதாய அவலங்களைச் சாடுவதாக முரளி எழுதியிருக்கார், உங்க எல்லோருக்கும் உள்ள கோபம் என்னிடத்தில் வார்த்தைகளாக வெடிக்கிறது நீங்கள் மனதுக்குள் பொருமுகிறீர்கள் அவ்வளவுதான்.
சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
மக்களுக்காக கக்கூஸ் (கழிப்பறை) கழுவவும், தெருவைக் கூட்டவும் கூட நான் தயார் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பேஷ் பேஷ், இதைவிட கீழே இறங்கி வேறு யாரும் ஓட்டு கேக்க முடியுமா?
************************************************************************
மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களைக் கவர கட்சிகள் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அப்படி போடு அறுவாள! ஓட்டும் கிடைக்கும், கள்ள நோட்டும் கையை விட்டு போயிடுச்சுன்னு கட்சிகள் சந்தோஷப் படும். வாங்கினவங்கதான் பாவம், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சு.
************************************************************************
கருணை மனுக்களை பரிசீலிக்கும்போது அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்வதோ, குறைப்பதோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சபாஷ், இது போன்ற தீர்ப்புகள்தான் நம் நாட்டில் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப் படுத்துகின்றன.
************************************************************************
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிமுக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
என்னங்க இப்படி சொல்றீங்க, அவங்க தயவால ரெண்டு MLA சீட் கிடைச்சு இருக்கு, அதை வெச்சு எவ்வளவு சம்பாதிக்க முடியும்!
************************************************************************
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைளை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.
மெய்யாலுமா!!! ஐ, சும்மா டமாஸ் பண்ணாதீங்க.
************************************************************************
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார், எனவே அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரியுள்ளார்.
அதோட விடுவானேன், அவங்களுக்கு ஒரு MLA சீட்டும் வாங்கி கொடுத்துடுங்க பாவம் பொழைக்கரதுக்கு ஒரு வழி கிடைச்சாமாதிரி இருக்கும்.
************************************************************************
ஏர் இந்தியா விமானத்தை பறவை தாக்கியதால் லண்டனிலிருந்து டெல்லி வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி பரிதவித்த விமான பயணிகள் ஒரு வழியாக 3 நாட்களுக்குப் பிறகு தலைநகர் வந்து சேர்ந்தனர்.
விமானத்துக்கு பறவைக் காய்ச்சல் வந்து இருக்குமோ?
************************************************************************
இந்தவாரம் அரசியல் விமர்சனம் இல்லை! உள்ளாட்சி தேர்தல் முடிவும், மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் முடிவும் வந்ததும் நிறைய எழுதலாம்.
இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

Monday, October 09, 2006

கம்பன் கவி இன்பம்

இந்த ப்ளாக்கில் நண்பர் (நடராஜமூர்த்தி) உயிருள்ள சொற்றொடர்கள் எழுதி இறை மாட்சியை விளக்குகிறார், மற்றொருவர் (பித்தன் - யாருப்பா இவரு?) கிறுக்கல்கள் மூலம் சமுதாயக் குறைபாடுகளைச் சாடுகிறார், அடுத்து (பரதேசி - என்னைப் போன்ற பலரும் அமெரிக்காவிற்குப் பரதேசிகள்தான்) வாழ்கையைச் சற்று கனவுகளோடு பார்கிறார். என் பங்கிற்கு, நடராஜமூர்த்தி எழுதுவதற்குள் கம்பனின் கவித்திறமை பற்றி எழுதிவிட்டால், நான்தான் இந்த முயற்சியில் முதல் என்று கொஞ்சம் 'படம்' காட்டலாம் என்கின்ற முயற்சியே இது. எனவே குறையிருப்பின் பொருத்தருள்க.
கம்பர் மிகச் சிறந்த படைப்பாளி என்பது உலகம் அறிந்த உண்மை. கம்பர் எழுதிய ராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும், கம்ப சூத்திரம் என்றும், கம்ப நாடகம் என்றும் பலவாறு போற்றுவர் தமிழ் இலக்கியதை நன்கு கற்றவர்.
கம்ப சித்திரம்
- ஒரு காட்சி எப்படி இருக்கிறது, அதில் கதாபாத்திரங்கள் எப்படி இருகின்றார்கள் என்பதை சொல்லால் புனைந்து நம் கண் முன் காட்சியாக வடித்து தருவதால் அது கம்ப சித்திரம்.
கம்ப சூத்திரம்
-
ஒரு உணர்வை அல்லது செயலை அல்லது குணத்தை ஆயிரம் பாடல்களில் விளக்கலாம், அதை ஒரே ஒரு வரியில் விளக்கலாம் என்று காட்டியவர் கம்பர். உதாரணத்திற்கு அரக்கர் என்பவர் யார் என்னும் கேள்விக்கு, அவர்கள் பற்கள் பெரிதாக இருக்கும், கைகள் முறங்கள் போல இருக்கும், நகங்கள் கூராகவும் அழுக்காகவும் இருக்கும், உடல் கரியதாகவும் பெரியதாகவும் இருக்கும், கண்கள் சிவப்பாக இருக்கும், நடந்தால் பூமி அதிரும், அனைவரும் அஞ்சும் தோற்றமும், செயலும் இருக்கும், என்றும் நாம் கூற முற்படுவோம். கம்பன் ஒரே வரியில் எவருக்கு இரக்கம் இல்லையோ அவர் அரக்கர் என்கிறார்.
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மைன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்பொருள் அமுதினைப் பருகுதின் றதுவே.
பொருள்
அரக்கர்கள் செய்த தீவினையும், தேவர்களும் முனிவர்களும் செய்த நல்வினையும், ஏவுதலால், இயற்கையாகத் தன்னிடம் இருக்கும் அருள் தன்மையை விட்டவளும் தூய்மையான நல்ல சொற்களைப் பேசும் மான்போன்ற கைகேயியின் இடத்து இரக்க உணர்வு நீங்கிய காரணத்தினால்தான் இன்றும் இந்த உலகத்தவர் இராமபிரானது பரவிய புகழாகிய அமிழ்தத்தினைப் பருக முடிகின்றது என உணர்த்துவதால் அது கம்ப சூத்திரம்.
கம்ப நாடகம்
-
ஒரு நாடகத்தை காணும் போது அதில் நடிப்பவர்கள், அவர்கள் பேச வேண்டிய வசனங்கள், அவர்கள் நிற்க/நடக்க வேண்டிய இடங்கள், அவர்களது நடை, உடை, பாவனைகளை எப்படி அந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஒரு இயக்குனர் வெளிப்படுத்துவாரோ அதை கம்பர் வெளிப்படுத்துவது தனிஅழகு.
கன்னி மாடத்தில் சீதா பிராட்டியாரை, விசுவாமித்ர முனிவர், இராமன் மற்றும் இளைய பெருமாள் மிதிலையில் முதன்முதல் காணும் காட்சியை கம்பர் இப் பாடல் மூலம் வருணிக்கிறார்.
பொன்னின் சோதி போதினில் நாற்றம் பொலிவேபோல்
தென்உண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன்றுறை கண்டாங்கு அயல் நின்றார்
பொருள்
கன்னி மாடத்தின் மேல் பகுதியில் பொன்னின் ஒளியும், பூவின் நறுமணமும் ஒன்று சேர்ந்து பொலிவதைப் போன்றும், வண்டு விரும்பி உண்ணும் தேனின் சுவை போன்றும், செம்மை விளங்கும் சொற்களாலாகிய கவிதையின் இனிமை போன்றும், களிப்பு மிகுந்த பெண் அன்னம் போன்ற தோழியர்களோடு அரச அன்னம் வீற்றிருக்கும் எழிலைப் போன்று சீதாப் பிராட்டியார் அம் முற்றத்தில் (இதை இக்காலத்தில் பால்கனி என அழைப்பர்) வீற்றிருக்க இம்மூவரும் கண்டார்கள்.
இதைப் படிக்கின்றபோது நம் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு கதையின் நாயகன், தன் நாயகியை முதன் முதல் காணும் போது, அவள் ஒர் உயர்ந்த இடத்தில் இருந்தும், தான் ஒரு தாழ்வான பகுதியில் இருந்தும் காண விரும்பமாட்டான், அதை கம்பரும் மாற்றிப் பாடியிருக்க முடியும், இப்படி அவர் பாடியதன் கருத்தை வள்ளுவர் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்தில் இவ்வாறு விளக்குகிறார்.
புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
எவன் ஒருவன் தன்னை இகழ்பவர்கள் முன் ஒரு எருதின் தன்மையதாய், தலை நிமிர்ந்து நடக்கும் தகுதியில்லாதவனோ அவனுக்கு வாய்த மனைவியின் குணம் சரியில்லை என்று இடித்து கூறுகிறார். இராமன் சீதையை மிதிலையில் காணும் பொழுது திருமணம் ஆகாத ஒரு இளைஞன் ஆகவே அவன் தலை குனிந்து நடக்க வேண்டியிராதவன். சீதை, கற்பின் மொத்த உருவம், அவள் தலை நிமிர்ந்து பிற ஆடவரை நோக்கும் தன்மையில்லாதவள், அவள் தலை கவிழ்ந்து இருந்தவாரே, கீழே தலை நிமிர்ந்து நடக்கும் இராமனைக் காண முடிந்தது, இராமனால் காணப்படவும் முடிந்தது. இதனால் கம்பராமாயணம் கம்ப நாடகம் எனவும் போற்றப்படுகிறது.
இவ்வாறு, தன் புலமையை கொண்டு கவிச்சக்ரவர்த்தி எனப் பெரும் பெயர் பெற்ற கம்பர், ஒரிடத்தில் சீதையின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என இராமாயணத்திலேயே வாக்குமூலம் தருகிறார். இது நமக்கெல்லாம் வியப்பான ஒரு செய்தி. ஒரு கட்டுரையை வடிக்கும் ஆசிரியர், கட்டுரையின் முகப்பில், இந்த கட்டுரையை வடிக்கும் திறமை தன்னிடத்தில் இல்லை என்றால், அதை எவர் படிக்கக் கூடும். ஒரு சொற்பொழிவாளர், கொடுக்கப் பட்டத் தலைப்பில் பேச தனக்குத் திறமை இல்லை என்று கூறினால், அவருடைய சொற்பொழிவை யார் கேட்பர், ஆனால், ஒரு காவியத்தைப் பாடும் கம்பர், காவியத்தலைவின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என்பதை அந்த காவியத்திலேயே சொன்ன பிறகும் நாம் அதைப் படித்து இன்புறுகிறோம் என்றால், அந்த கருத்தைச் சொன்ன கம்பனின் கவி அழகுதான்.
அந்தப் பாடல்:
செப்பும் காலைச் செங்கமலத்தோன் முதல்யாரும்
ஒப்பெண் பாலும் கொண்டு உவமிப்போரும் உவமிக்கும்
அப்பெண் தானே ஆயின போதுஇங்கு அயல் வேறோர்
ஒப்பு எங்கே கொண் டெவ்வகை நாடி உரை செய்வோம்?
பொருள்:
சிறந்த தாமரை மலரில் வாழும் பிரமதேவன் முதல், சாதாரண மனிதர் வரையில் எவரும், ஒப்பாக எண்ணத் தகுந்த பகுதிகளையெல்லம் ஆராய்ந்து உவமிப்பவர்கள் உவமையாகச் சொல்லும் திருமகள் தானே இங்கு வந்திருப்பதால், அத்திருமகளை விட வேறு ஒரு உவமைப் பொருளை நான் எவ்விடம் தேடி உரைக்க முடியும்? எனக் கேட்கின்றார்.
இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் நம் இன்றைய நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தன் மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடும் எல்லா தாயும், தன் மகனுக்கு மஹாலட்சுமி போல ஒரு பெண் தேடுவதாகச் சொல்லுவாள், ஆனால் அவளுக்கு மஹாலட்சுமியே மருமகளாக வந்தால் அவள் என்ன சொல்ல முடியும், அது போல, வேறு ஒரு பெண்ணாக இருந்தாள், நான் இந்த சீதை அழகில் மஹாலட்சுமி போல எனக் கூறலாம், இவள்தான் உலகத்தோர் அனைவரும் ஒப்பு நோக்கும் மஹாலட்சுமி என்கிற போது, நான் எவ்விதம் இவளுக்கு ஒப்புமை கூற முடியும் என்ற கம்பரின் கவி மிக இனிது.
கடைசியாக இந்த பகுதியை நிறைவு செய்ய ஒரு மங்களகரமான பாடல்.
எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
பொருள்
பிறரால் எண்ணுவதற்கும் அரிய நலன்களைச் செய்பவளாகிய சீதாப் பிராட்டி கன்னிமாடத்தில் நின்று கொண்டு இருக்கையில் இருவர் கண்களும் ஒன்றையொன்று உணர்வினால் கவ்வி ஒருவரையொருவர் ஈர்க்க ஒருங்கிணைந்து விளங்க, அண்ணலாகிய இராமனும் நோக்கினான். சீதாப் பிராட்டியும் நோக்கினாள்.
இந்தப்பாடலை பல பேர் பல இடங்களில் விளக்கியுள்ளார்கள். 'பார்த்தல் வேறு, நோக்குதல் வேறு' என்பது பற்றியும், 'அண்ணலும்' என்று எழுதிப் பிறகு 'அவளும்' என்று எழுதியிருகிறார், அதன் காரணத்தை விளக்கியுள்ள பல கட்டுரைகளை நாம் படித்து இருப்போம். ஆயின், நான் வியந்து பார்க்கும் ஒரு பகுதி 'உணர்வும் ஒன்றிட'. தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதல் பார்கின்றபோது இருக்கும் எல்லா எண்ணங்களையும் விவரித்த கம்பர், உணர்வும் ஒன்றிட என்ற சொற்றொடர்மூலம் வாழ்வில் எது முக்கியம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இன்றைக்குத் திருமணமாகி 10, 15, 20 வருடங்கள் இல்வாழ்கை வாழ்ந்த பிறகும், அத்திருமணங்கள் முறிவதற்குக் காரணம் எது என ஆராய்ந்தால், நாம் கண்டு கொள்ளும் ஒர் உண்மை நம் மனங்கள் ஒன்றாததுதான். இராமனும், சீதாபிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற அந்த கணத்திலேயே அவர்கள் இருவருடைய 'உணர்வும்' ஒன்றிவிட்டதாகச் சொன்ன் கம்பனின் கவி மிக மிக இனிது.
-முரளி

Sunday, October 08, 2006

மனிதாபிமானம்


"அடுத்தது",
கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவரின் சப்தத்தையும் நிறுத்தியது.
அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான்.
அவன் கண்களில் ஒளியில்லை, முகத்தில் அடர்ந்த தாடி, தலை எண்ணெயைக் கண்டு குறைந்தது 2 வருடமாவது இருக்கும், உலகில் உள்ள அழுக்கெல்லாம் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு அழுக்காக இருந்தான், உடம்பில் உள்ள எலும்புகளை எக்ஸ்-ரே இல்லாமலேயே எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு ஒல்லியாக இருந்தான். கையில் ஒரு நசுங்கின, அழுக்கான ஒர் அலுமினிய தட்டு வைத்து இருந்தான், அதில் கொஞ்சம் காசு இருந்தது. தோளில் ஒர் பழைய துணி மூட்டை இருந்தது, அவனுடைய துணிகளும் மிகவும் அழுக்காக இருந்தது, ஒரு பழைய கிழிந்த சட்டையும், கறையேறிய வேட்டியும் அணிந்து இருந்தான்.

அவனைப்பார்த்த கூட்டம் ஸ்தம்பித்து போனது. யாருக்கும் பேசக்கூட தோன்றவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு 6 அடி உயர வண்ண ஓவியம் என்பது கூட அவர்களுக்கு மறந்து போனது. அந்த ஓவியத்தில் லயித்து அவனுடைய தட்டில் போட, சிலர் தன்னிச்சையாக தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தனர். அப்போது அந்த ஓவியக் கல்லூரியின் தலைவரும், நிருவனருமான கலாதர் மைக் அருகில் வந்து தெளிவான ஆங்கிலத்தில் பேசத்துவங்கினார்.

"இனிய கலா ரசிகர்களே, நீங்கள் ஏலம் கேட்க இருக்கும் இந்த பிச்சைக்காரனின் படத்தையும் இது போன்ற மேலும், 3 ஓவியத்தையும் நான் வெறும் விற்பனைக்காக வரையவில்லை. நீங்கள் இந்த ஓவியப் பள்ளிக்கு பக்கத்து சந்தில் இவனைப்பார்த்து இருப்பீர்கள். இவனைப்போல பலர் அங்கு இருக்கின்றார்கள். இந்த ஓவியக் கல்லூரிக்கு வரும் பலர், இவனையும், இவன் கூட இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களையும் இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டினர். இவர்களை அடித்து விரட்டுவது ஒரு காட்டுமிறாண்டித்தனம் என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து. அதை விடுத்து இவனுக்கும், இவனைப்போன்ற பலருக்கும் ஒரு புது வாழ்க்கைக்கு வழி செய்யுமாறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசினேன், அவர்களும் இதை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடு கட்டவே இந்த ஓவியங்களை வரைந்து ஏலத்தில் விற்கிறேன். எனவே, இது ஒரு நல்ல காரியத்திற்கு என்பதை கருத்தில் கொண்டு தாராளமாக ஏலம் கேளுங்கள். அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைமைப் பொருப்பாளர் திரு. மோகன் இங்கு வந்துள்ளார், இன்று ஏலம் முடிந்ததும், அந்தப் பணம் அவாரிடம் தரப்படும்.”

“முதல் படம் துவக்க மதிப்பு ரூ.5000/-“

அப்போது, கூட்டத்தில் ஒருவர், எழுந்து, “ரூ. 10,000” என்றார், மற்றொருவர் “ரூ.20,000” என்றார். 5 நிமிடத்தில் அது 2 லட்சமாகிவிட்டது.

கலாதர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. கூடியிருந்தவர்களின் அன்பின் மிகுதியால் அவருக்கு அதிகம் பேசவும் தோன்றவில்லை. அனைவரையும் பார்த்து "2 லட்சம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்" என்று கூறி முதல் படத்தின் ஏலத்தை முடித்தார்.

இதை அடுத்து மேலும் 3 படங்களை கலாதாரின் உதவியாளர்கள் கொண்டுவந்து மேடையில் வைத்தனர். எல்லாம், முதல் படத்தைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. எல்லாப் படங்களும் முதல் படத்தைப் போலவே நிமிடத்தில் விற்று தீர்ந்தது.

பிறகு கலாதர், தழுதழுத்த குரலில் " உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தொ¢யவில்லை. ஒரு நல்ல காரியத்திற்கு என்றவுடன் இப்படி தாராளமாக ஏலம் கேட்டு இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும், நீண்ட ஆயுளையும், நல்ல வசதியையும், எப்போதும் இது போன்ற நல்ல எண்ணத்தையும் ஆண்டவன் தரட்டும்" என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்த படி கூறினார்.

பிறகு பள்ளியின் மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வந்தது. ஓர் உதவியாளர் ஒவ்வொரு ஓவியமாக கொண்டு வந்து மேடையில் வைக்க, மற்றோர் உதவியாளர் அதன் விலையை கூறினார். அவற்றில் பல நல்ல விலைக்கு விற்கப்பட்டது, சில சாதாரண விலைக்கு விற்கப்பட்டது.

ஏலம் முடிவுக்கு வந்ததும், அவரவர்கள் ஏலம் எடுத்த படத்தை பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொண்டனர்.

பிறகு கலாதர் மேடைக்கு வந்து “4 படங்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த 7 லட்சத்திற்கான காசோலையையும், இந்த கல்லூரியின் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையையும் திரு.மோகனிடம் உங்கள் சார்பாக அளிக்கிறேன்” என்றார்.

திரு.மோகன் மேடைக்கு வந்து காசோலையை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினபிறகு எல்லோரும் கலைந்து சென்றனர்.

அனைவரின் கார்களும் சென்றபின் கடைசியாக திரு. மோகன், கலாதாரிடம் கை குலுக்கி விட்டு, “நீங்கள், மிக நல்லவர், மிக நல்ல ஒரு செயலை இன்று செய்து இருக்கின்றீர்கள், மிக்க நன்றி” என்றார்.

“மோகன், இது நாம் இருக்கும் சமுதாயத்திற்கு, நாம் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை, அதனால் இதை பெரிதாக்காதீர்கள். அந்த பிச்சைக்காரகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதுவே போதும். நீங்கள் எப்படி போகப்போகிறீர்கள், நான் உங்களை என் காரில் ட்ராப் செய்யட்டுமா?”

“வேண்டாம், நான் வழக்கம் போல் பஸ்சில் போயிடுவேன்”.

மோகன் கல்லுரியை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு காரில் பின் கதவைத்திறந்து ஏறிக்கொண்டார். அதன் ட்ரைவர் திரும்பிகூடப் பார்க்காமல், “ஐயா, போன காரியம் என்னங்க ஆச்சு?” என்றான்.

“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, நம்ம எஸ்.ஐ. செல்லதுரைக்கு ஃபோன் போட்டு அந்த பிச்சைக்காரங்களை நாளைக்கு ஒரு லாரியில கூட்டி கிட்டு போய், ஊருக்கு 20 கி.மீ. தள்ளி இறக்கி விட்டுட சொல்லு.” என்றார்.

அப்போது அவருடைய செல் ·போன் ஒலித்தது. அதை எடுத்து அவர்,

“சொல்லு!” “ம், ம், அப்படியா!, வெரிகுட்”, என்றார்.

பிறகு ட்ரைவரைப் பார்த்து, “எஸ்.ஐ. க்கு ·போன் செய்து விட்டாயா?”

“இன்னும் இல்லை, இப்பவே பண்ணட்டுமா, இல்ல ஆபிஸ் போய் பண்ணட்டுமா?”

“இப்பவே பண்ணிடு, செல் ஃபோன்ல இருந்து பண்ணாதே, அந்த பி.சி.ஓ. -ல இருந்து செய், அந்த பிச்சைக்காரங்களை ஊருக்கு வெளியில கொண்டு போய் விடச்சொல்லாதே, அவங்களை போன மாசம் திறந்தாங்களே அந்த 5-ஸ்டார் ஓட்டல் பக்கத்தில விடச்சொல்லு, அப்படியே அவருடைய கவர் ரெடி, இன்னிக்கு ஈவினிங் அவர் வீட்டுக்கு வந்துடும்- னு சொல்லிடு”

ட்ரைவர் ஃபோன் செய்யப் போனபோது மனதில் குத்து மதிப்பாக ஒரு 20 லட்சம் அந்த 5-ஸ்டார் ஓட்டலில் இருந்து கறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதை நினைக்கும் போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.

-முரளி
55 வார்த்தையில் 2வது சிறுகதை

வரன்

"என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா!"

"கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம்."

"என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை?".

அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ·போன் போட்டு ,"நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம்" என்றார்.

"அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே?"

"சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும்".

- முரளி
55 வார்த்தையில் முதல் சிறுகதை

'விபத்து'

நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்த போது ஒரு குழந்தை திடீரென சாலையை கடந்தது.

பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஐயோ!" என்று அலறினர்.

அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,"இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தெரியலை?"

- முரளி

Saturday, October 07, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 2

பித்தனின் கிறுக்கல்கள் - 2

மரண தண்டனை ஒழிப்பு:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முகமது அப்சலின் தூக்கு தண்டனை தீர்ப்பு இன்று இந்தியாவில் மாநகரத்தின் முக்கிய பேச்சாக (அதாங்க talk of the town) இருக்கிறது. நம்ம ஊர் அரசியல்வாதி திருமாவளவன் இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றும், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள்' வெளிக்காட்டியுள்ளன என்றும், மக்கள் விரோதச் சட்டம் என்று பெருவாரியான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட பொடோசட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது இதனால் இதை ரத்து செய்து மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் விளங்க வேண்டும் என்று தன் 'திரு' வாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு கண்டு பிடிப்பு, என்ன ஒரு நாட்டுப் பற்று, என்ன ஒரு மனித நேயம் இவை எல்லாம் மெய் சிலிர்க வைக்கிறது. எப்படி இதுபோல சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி யோசிப்பதற்கு படிப்பு என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் - மிக ஞாயமான கோரிக்கை, அவர் என்ன ஆங்கிலத்தில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெயர் வைத்தாரா? தங்கர் பச்சானை திட்டினாரா? விரப்பனை கொடுங்கோலன் என்று சொன்னாரா? பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னாரா? இல்லையே சும்மா நமது மரியாதைக்குரிய பாரளுமன்றத்தை தாக்கி அவருடைய பல சகாக்களை அநியாயமாய் இழந்து, பல அப்பாவி மக்கள், தோட்டகாரர், பாதுகாப்புப் படையினர் என்று பலரையும் கொன்று, இன்று பிடிபட்டு, இந்திய நீதிமன்றம் அவரது வாதங்களை கேட்ட பிறகு இப்படி ஒரு தண்டனை பெற்று, அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருப்பவருக்கு கண்டிப்பாக கருணை காட்டத்தான் வேண்டும்.

உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன':
என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன என்றால், ஒரு நாட்டில் எதற்கு ராணுவம், எதற்கு போலீஸ், எதற்கு சட்டங்கள், எதற்கு தண்டனைகள் அட எதற்கு இவரைப் போல அரசியல்வாதிகள், எந்த சட்டத்தாலும், தண்டனையாலும் குற்றங்கள் குறையப் போவது இல்லையே, மக்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே. உலக அரங்கில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த இன்று இருக்கின்ற சட்டங்கள், தண்டனைகள் போதவில்லை என்று எல்லா நாடுகளும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, உலகில் தீவிரவாதத்தால் தினம்தோறும், அதிகம் பாதிக்கப்படும் இந்தியாவில் இவரைப் போன்றவர்கள் இப்படி பேசி வருவது நமக்கெல்லாம் ஒரு சாபம்.

மக்கள் விரோதச் சட்டம் என்று கைவிடப் பட்ட பொடோ சட்டம்
தீவிரவாதத்தை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முயன்ற ஒரு சட்டமே பொடோ. அதையும் இவரைப் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் குழி தோண்டி புதைத்து விட்டனர். 1000 பொதுமக்கள் உயிர் இழக்கலாம், ஆனால், இவர்களுக்கு ஒரு தீவிரவாதி உயிர் இழக்கக் கூடாது, மனித உயிர்களை மதிக்க முடியாத தீவிரவாதிக்கு எப்படி மனித உரிமைக் கமிஷனும், இவரைப் போன்றவர்களும் வக்காலத்து வாங்குகின்றனரோ தெரியவில்லை.

ஒரு ஏழை பாடகன் முக்காலத்தையும் அறிந்து இந்திய விடுதலைக்கு முன்பே எழுதினான்:

நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ.

சொந்த அரசும்புவிச் சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ?

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே செம்மை மறன்தாரடீ.


மேல் குறிப்பிட்ட அரசியல் வாதியை நம்பும் நம் நாட்டு மக்களைப் பற்றி இந்த மகா கவி பாடுகிறார்:

நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே

பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.

இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/2.html
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

Wednesday, October 04, 2006

பித்தனின் கிறுக்கல்கள் ஒரு துவக்கம்.

'பித்தனின் கிறுக்கல்கள்' என்ற தலைப்பில் பல காரசாரமான விவாதங்களுக்கு அடித்தளமிடக்கூடிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த பகுதியைத் துவக்குகிறேன். இதில் இந்திய அரசியல், சமூகம், விளையாட்டு, அறிவியல், இலக்கியம், புதுக் கவிதைகள் (மரபுக் கவிதை அதிகம் பரிச்சயமில்லை), கட்டுரைகள், புத்தகங்கள், நகைச்சுவை காட்சிகள், கதைகள், பத்திரிகைகளின் திரை விமர்சனம், தொலைக்காட்சி, திரைப்படம் பற்றிய பல வியங்களை (நாகு, மூர்த்தி, முரளி, பரதேசி, பட்டாம்பூச்சி, தருமி(எந்த ஊர்) - - வட மொழியாச்சே பரவாயில்லையா?) இங்கு அலச இருக்கிறேன்.

இந்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள், இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை. இந்த எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு காலவிரயம். எனக்கு இந்தப் பகுதியை துவக்கி எழுதலாம் என்கிற துணிவைத் தந்தது பலருடைய எழுத்துக்கள். 'சோ' -வின் - நினைத்தேன் எழுதுகிறேன், சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (கணையாழி இன்னும் வருதான்னு தெரியல), கண்ணதாசன் எழுதிய கடைசிப் பக்கங்கள், தி.ஜா வின் தெளிவான மற்றும் புதுமைப் பித்தனின் தைரியமான எழுத்துக்கள்.

பீடிகை போதும்னு நினைக்கிறேன். இனி......

தமிழ் நாட்டில் உள்ளாட்சி மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்.

இதனால் என்ன பயன்? எல்லா சுவர்களும் மேலும் கறைபடியும், சாராய விற்பனை வானைத்தொடும், முட்டை, கோழி வறுவல் வியாபாரம் தூள் பறக்கும், எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.50 க்கு விற்கும். ரேஷனில் எல்லா நாட்களும் எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லா கட்சிகாரர்களையும் (முதல்வரை கூட) சுலபமாக பார்க்கலாம். சன் டிவியில் தமிழ் நாடு எப்படி சுபிட்சமாக இருக்கிறது என்று காட்டுவார்கள். பஞ்சம், பட்டினி எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என சத்தியம் செய்வார்கள். ஜே டிவியில் தமிழ்நாடு எப்படி குட்டிசுவராக இருக்கிறது என்று பட்டிமன்றமே போடுவார்கள். சோ துக்ளக்கில் கருணாநிதி எப்படி 2 ஏக்கர் கொடுக்காமல் இழுத்தடிப்பார் என்ற தன் சந்தேகத்தை எழுதுவார். விகடன்/ஜூ.விகடன் கருணாநிதியின் ராஜதந்திரம் பற்றி இரண்டு வாரம் எழுதுவார்கள். சென்னை தெருக்களுக்கு உடனடி மேக்கப் நடக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் சென்னையில் நல்லா கிடைக்கும். மழை அதிகமானால் நிவாரணம் உடனே கிடைக்கும். அரசு ஊழியர்கள் சின்னதாக ஒரு அடையாள ஸ்ட்ரைக் செய்வார்கள், முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி உடனே ஒப்புக் கொள்வார். ஸ்டாலினும் - அழகிரியும் சண்டை இல்லாமல் பத்திரிகைகளுக்கு சிரித்த படி போஸ் கொடுப்பார்கள். சுப்ரமணியஸ்வாமி பத்திரிகையாளர்களைக் கூட்டி கருணாநிதி, தயாநிதி மாறன், சோனியா மூவரும் சேர்ந்து செய்த ஊழலைப் பற்றிய ஒரு முக்கிய தடயம் தன்னிடம் இருக்கிறது, இன்னும் ஒரே வாரத்தில் இவர்கள் அனைவரையும் பதவியிறக்குவேன் என்று சவால் விடுவார். தமிழக காங்கிரஸில் எந்த சண்டையும் இல்லை என்று எல்லா தமிழக காங்கிரஸாரும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார்கள். வைகோ தன் புலிப்பாசத்தை கொஞ்ச நாட்களுக்கு வெளிக் காட்டாமல் இருப்பார். தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்.

சரி நமக்கு என்ன பயன்?

முகத்தை சோப்பு போட்டு அலம்பி நல்லா துடைத்து வைத்துக் கொண்டால் போதும், கழகங்கள், கட்சிகள் நல்லா, அழகா, பட்டையா ஒரு நாமத்தைப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஜாக்கிரதை.

சமீபத்தில் பார்த்த படம்

'நாளை' - மிகச் சாதாரணமான கதை, நடிக-நடிகைகள் 4 அல்லது 5 பேர்தான் பழைய ஆட்கள் மற்ற அனைவரும் புதுசு. நிறைவான நடிப்பு, நல்ல காட்சி அமைப்பு எல்லாம் இருந்தும் வழக்கம் போல் கமர்ஷியலுக்காக 2 குத்து பாட்டு புகுத்தப்பட்டு, கடைசி காட்சியில் எல்லோரும் செத்து போய்விட 'அட போங்கடா'-ன்னு திட்டத்தான் தோணுது. S.V.சேகர் ஒரு நாடகத்தில் ஒரு drawing கொண்டு வந்து காட்டி அதில் "நான் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வரைந்சு இருக்கேன், அதுல ரெயில் வந்து நிக்குது, ஜனங்க இறங்கி போறாங்க இதை எல்லாம் நான் தத்ரூபமா வரைந்சு இருக்கேன்", என்பார்.

அவர் friend "ரெயில் எங்கடா?"
சேகர்: "ஜனங்களை எறக்கி விட்டுட்டு ரெயில் போயிடுத்து"
friend: "ஜனங்க எங்கடா?"
சேகர்: "அவங்க என்ன ஸ்டேஷன்லேயேவா இருப்பாங்க, வீட்டுக்கு போயிட்டாங்க"
friend: "ஸ்டேஷன் எங்கடா?"
சேகர்: "அது சமீபத்தில புயல் அடிச்சுது இல்லை அப்ப அதுவும் அடிச்சுட்டு போயிடுத்து" என்பார். அதுதான் ஞாபகம் வந்தது.

இந்தப் பதிவை பித்தனின் ப்ளாகில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
http://pkirukkalgal.blogspot.com/2006/10/blog-post.html

-கிறுக்கல்கள் தொடரும்.

கொலு பாக்க வாங்க - 2




இது எங்க வீட்டு கொலு.




கொலுவை அறிமுகப் படுத்தும் மஹிமாவிற்கு இந்த கொலுவில் ரொம்பப் பிடித்தது பாடுவதும், பார்கில் விளையாடுவதும்.
-முரளி.


கொலு பாக்க வாங்க - 1



இது சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு. சிறிய, ஆனால் செழிப்பான கொலு. ஜன்னலில் இருக்கும் செட்டியார் குடும்பம் கொலுவை மேற்பார்வை செய்வது நல்ல அழகு.
-முரளி.

55 வார்த்தைகளில் ஒரு சிறு கதை எழுத முடியுமா?

முடியும். என்கிறார் நம்ம ஊர் சுஜாதா மாமா(தாத்தான்னே சொல்லலாம்). அவர் சொல்லும் சான்று Steve Moss தொகுத்துள்ள 'The World's Shortest Stories ' என்ற புத்தகம். நீங்களும் முயற்சி செய்து பாருங்க, அப்பரமா நான் எழுதிய ரெண்டு கதைகளை இங்கே publish பண்றேன்.

- முரளி.

Monday, October 02, 2006

காந்தி கோவில்

குஷ்பு கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "டக்" என்று பதில் வருகிறது. ஆனால் காந்தி கோவில் எங்குள்ளது என்று கேட்டால் "எந்த காந்தி?" என்று தான் பதில் வருகிறதே ஏன்? நேரம்யா நேரம்.



ஆனால் இந்திய தேசப்பிதா காந்தியடிகளுக்கு கோவில் கட்டி கும்பிடுகிறார்கள். எங்கே என்று கேட்கிறீர்களா? இதோ இதைப்படியுங்கள்...

Sunday, October 01, 2006

அக்டோபர் மாத லொள்ளு மொழி(கள்)

ஆடத்தெரியாதவள் மேடை குறையென்றாள்
ஆடத்தெரிந்தவள் ஆடை(யை) குறையென்றாள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு மேக்கப்பில் தெரியும்