Wednesday, March 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 4, மற்றும் சில சிந்தனைகளும் ...



இத்தொடரை ஆரம்பிக்கும் போதே, அதிகமா வழவழாவென்று இழுக்காமல், சுருக்கமாகச் சொல்ல வந்ததைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் ஆரம்பித்தேன். இன்னும் ஓரிரண்டு பாகத்தில் முடித்திட வேண்டும் என்ற 'நல்லெண்ணத்துடன்', பாகம் நான்கை ஆரம்பித்தால், மனம் குறுக்கும் மறுக்கும் ஓடிக் கொண்டே இருக்கிறது ப‌ல‌ நினைவுக‌ளுக்கு இடையில்.

இரண்டு காரணங்கள். ஒன்று, பாகம் இரண்டில்
பித்தனின், பட்டுக்கோட்டையாரிடம் பாரதியின் தாக்கம் குறித்த பின்னூட்டம். இன்னுமொன்று, நம்ம ரிச்மண்ட் மாஜி பிரசிடென்ட் ஐயா நாகு அவர்கள் தந்த புராண‌ ஒலிப்பேழைகள்.

***

ஒருவன் தன் வாழ்நாளில் நல் அறங்களைச் செய்து வாழ‌ வேண்டும் என வெகுவாக உணர்த்திச் சென்றிருக்கிறார்கள் அக்காலப் புலவர்கள்.

ஔவை தன் மூதுரையில்:
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்தல்
முற்பவத்திற் செய்த வினை.


திருவள்ளுவர் தன் குறளில்:
அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.


பட்டினத்தார் தம் பாடலில்:
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடு கட்டு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!


பட்டினத்தடிகளின் மேற்கண்ட பாடல் வரிகளில் நமக்கொன்று புலனாகிறது. 'எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே !' எனப் புருவச்சுழிப்பில் ஆச்சரியப்படுகிறோம். உண்மை தான். இவ்வரிகளை கண்ணதாசன், தனது 'வீடு வரை உறவு, வீதி வரை மனைவி'யில் பயன்படுத்தி பலரின் பாராட்டுக்கும் உள்ளானார். பட்டினத்தடிகள் பதிலையும் சொல்லிவிட்டார். கண்ணதாசன் கேள்வியைக் கேட்டு, பதிலை நம்மிடம் விட்டுவிட்டார் !

***

எல்லாம் தானாக, 'க‌ல்லைத்தான் ம‌ண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்க‌த்தான்' என்றார் இராமச்சந்திரக் கவிராயர். இவ்வரிகள் பின்னாளில் கவியரசரின், 'பார்த்தேன், சிரித்தேன், பக்கம் வர ...' என்று தேனாக வந்து பலரின் மனம் கவர்ந்திருக்கலாமோ!

உலக நீதியில், 'ம‌தியாதார் த‌லை வாச‌ல் மிதிக்க வேண்டாம்' என்று ஔவை சொன்ன அவ்வரிகளை அப்படியே பயன்படுத்தி, அதில் அர்த்த‌ம் உள்ள‌து என்று மேலும் அழுந்தச் சொன்னார் க‌ண்ண‌தாச‌ன்.

***

வாரியாரின் பிரசங்கம் ஒன்றில், அருணகிரியார் வில்லிபுத்தூராரைச் சந்திக்கும் இடம் பற்றி, இவ்வாறு விவரிக்கிறார்
வாரியார்.

வில்லிபுத்தூரார்: தாங்க‌ள் யார்?
அருணகிரியார்: ம‌னிதன்
வி: பிற‌ந்த‌ ஊர்?
அ:இந்த‌ உட‌ல் பிற‌ந்த‌து திருவ‌ண்ணாமலை
வி:ஓஹோ. த‌ங்க‌ள் பேர்?
அ:ஒரு பேரும் கிடையாது. குழ‌ந்தை பிற‌ந்த‌துனு சொன்னார்க‌ள். என் தாயார் என்னை அருண‌கிரி என்று அழைத்தாள். த‌ந்தையார் ம‌க‌னே என்றார். பாட்ட‌னார் பேர‌ப்பிள்ளை என்றார். த‌மைய‌னார் த‌ம்பி என்றார். த‌ம்பி பிற‌ந்து அண்ணா என்றான். ம‌னைவி வ‌ந்தா என்னாங்க‌ என்பாள். மாம‌னார் மாப்பிள்ள‌ என்பார். ம‌க‌ன் அப்பா என்பான். பேர‌ன் தாத்தா என்பான். வ‌ய‌சாச்சா என்றால் கிழ‌வா என்பார்க‌ள். உயிர்போச்சு என்றால் பிண‌ம் என்பார்க‌ள். சுட்டெரிச்சா சாம்ப‌ல். எத்தனையோ பேர்க‌ள் வ‌ந்து வ‌ந்து போகின்றன.

இந்தப் பேர் தாக்க‌த்திலேயே 'எந்த‌ ஊர் என்ற‌வ‌னே, இருந்த‌ ஊரைச் சொல்ல‌வா...' என‌ ஊர் பற்றி பாடியிருக்கலாம் கவியரசர்.

நான் அறிந்த கண்ணதாசன் பாடல்களில் சில‌ இங்கு உதாரணங்களாக‌............/; இவர் போன்றே பல கவிஞர்களும், பல இலக்கியப் பாடல்கலைக் கற்று, நம்போன்ற பாமரனுக்கும் புரியும் வண்ணம் நிச்சயம் தந்திருப்பார்கள். க‌ண்ண‌தாச‌னுக்கு முன் சில‌ நூறு ஆண்டுக‌ள் முன் சென்றால்,

'அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை !' என்றார் வள்ளலார். வள்ளலாரின் இவ்வரிகளுக்கும் ஒருவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். பெரியபுராண சொற்பொழிவில் இதற்கு அருமையாக விளக்கம் அளிக்கிறார் கீரன். க‌ட‌வுளுக்கு உரு(வ‌ம்)த் த‌ர‌ எண்ணி அந்த‌ கால‌த்தில் பலவற்றையும் விவாதித்திருப்பார்கள் போல! பேதமில்லா உருவம் தர பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பின் மகிமையை போற்றி, அனைத்து சமயத்தினரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம், இறைவன் ஜோதி வடிவானவன் எனச் சொன்னாராம் மாணிக்கவாசகர். இதையே, 'கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை' என்றார் அவர் தம் திருவாச‌க‌த்தில்.

இவ்வாறு ப‌ல‌ புக‌ழ் பெற்ற‌ புல‌வ‌ர்க‌ளுக்கும் முன்னோடிக‌ள் பலர் இருந்து, பல கருத்துக்களை எழுதியும், ஒரே க‌ருத்தைப் ப‌ல‌வாறு பல பேர் எழுதியும், இம்மானுட‌ம் திருந்த‌வில்லையே என்ப‌தைத் தான் ப‌ட்டுக்கோட்டையார் கோபம் கொண்டு கேட்டார்.

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


ஏதோ கொஞ்ச‌ம் ப‌டித்த‌தனால் தான் இன்னும் மானுட‌ம் த‌ழைக்கிற‌தோ என்ன‌வோ ? புராண‌ங்க‌ளும், அற‌நெறிக‌ளும் இல்லாம‌ல் இருந்திருந்தால் இன்றைய‌ உல‌க‌ம் எவ்வாறு இருந்திருக்கும்? ச‌மீப‌த்தில் ஒரு ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு, த‌மிழ‌க‌த்தையே உலுக்கிய‌தை வெகு சாதார‌ண‌மாக‌ எடுத்துச் சென்றிருக்கும் !!!

க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Saturday, March 10, 2012

படம் பாரு கடி கேளு - 52


பேச்சாளர்: இங்கு கூடியிருக்கும் கோடானுகோடி பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே - இங்கு திரளாக வந்து நம் கட்சியை ஆதரிப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப்பின் பேச பல கழக கண்மணிகள் காத்திருப்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு நமது தலைவரை பேச மேடைக்கு அழைக்கிறேன். நன்றி வணக்கம்.

Friday, March 02, 2012

போலிச் சீர்த்திருத்தங்கள்

       தன்னை பணக்காரனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஏழைகள் என்று மத்திய தர வர்க்கத்தைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்தது சரியானதுதான் என்று பல சமயங்களில் நினைப்பதுண்டு. சில மத்தியதர் வர்க்க குடும்பத் திருமணங்களுக்கு போன சமயங்களில் நான் அந்த விளக்கத்தை பற்றி நினைத்துக் கொள்வேன் தேவையில்லாத ஆடம்பரங்களைச் செய்துவிட்டு திருமணத்துக்காக கடன்பட்டு வாழ்க்கையைச்சுமையாக்கி கொண்ட பலரை எனக்குத் தெரியும்.
 
          காஞ்சி பெரியவர் கூட ஒரு சமயம் தேவையில்லாமல் அதிக படாடோபத்துடன் நடக்கும் திருமணங்களைப் பற்றி பேசியிருக்கிறார். ஒரு சமயம் சலிப்படைந்து போய் திருமணப் பத்திரிகையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்று போடுவதைக் கூட தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்காக எந்த சங்கர மடத்துச் சீடனும் தான் மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்வதை தவிர்த்ததில்லை. குறைத்துக் கொண்டதுமில்லை. கடன் படுவது பெண் வீட்டுக் காரனாக இருப்பதுதான் இதற்கான காரணம். மதம் தோன்றிய காலத்திலிருந்தே போலித்தனமும் பிறந்துவிட்டது.
 
ஆடம்பரமான திருமணம் தன்னுடைய சமூக அந்தஸ்தை மற்றவர்களுக்கு காட்டும் ஒரு முறை. மதத் தலைவர்களுக்கு பக்கத்தில் பயபக்தியுடன் நிற்பதும் அந்தஸ்து தேடிக் கொள்ளும் ஒரு வழிதான்.
 
         திருமணத்தில் பல வகையான சீர்திருத்தங்கள் தேவை என்ற கருத்துள்ளவன் நான். சில சமயங்களில் திருமணங்களுக்கு போவதையே  தவிர்த்து வந்தேன் ஆனால் அப்படி செய்வது எல்லா நேரங்களிலும் சாத்தியமாவதில்லை.
 
           பெரியார் ஈ .வே. ரா   இரு சாதிகளைச் சேர்ந்த மணமக்களுக்கு நடக்கும் திருமணத்தை சீர்திருத்த திருமணம் என்றார். அவருடைய தொண்டர்கள் நடத்தும் திருமண விழாவில் ஆடம்பரம் கிடையாது. புரோகிதர்கள் கிடையாது. தாலி கட்டும் வழக்கமும் கிடையாது. வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பெயரில் வாக்குறுதியை மணமக்கள் படிக்கும் விழா தான் அங்கே திருமணமாகிறது.
 
         இந்த வகை திருமணங்களும் இப்பொழுது பெயரளவுக்குத் தான் சீர்திருத்த திருமணம். ஒரே சாதியைச் சேர்ந்த மணமக்களுடைய திருமணத்தையும் சீர்திருத்த திருமணம்  என்று முத்திரை குத்தி விட்டார்கள். ஒரே மாற்றம் அங்கே பிராமண புரோகிதர் கிடையாது. தீ வளர்ப்பதில்லை.  சில திருமணங்களில் தாலி கட்டுகிறார்கள் . சில திருமணங்களில் அது இல்லை.
 
                  ஆனால் எல்லா சீர்திருத்த திருமணங்களிலும் ஒன்று ந மட்டும் நிச்சயமாக உண்டு. அதுதான் மேடைப் பேச்சு.
 
                  என்னுடைய அலுவலகத்துக்கு ஒரு பெண் புதிதாக வேலையில்சேர்ந்தாள். தினமும் தஞ்சாவூரிலிருந்து ரயிலில் அலுவலகத்துக்கு வருவாள். செல்வி என்று பெயர். நல்ல பெண் சுறுசுறுப்பான பெண் வந்த சில நாட்களிலேயே வேலையைக் கற்றுக் கொண்டாள். எல்லோரிடமும் இனிமையாகப் பேசினாள். பழகினாள் அந்த பெண்ணின் தந்தையும் ரயில்வேயில் வேறு ஒரு பிரிவில் வேலை  செய்பவர். அவரை நான் முன்பே பார்த்திருக்கிறேன், ஆனால் பழக்கமில்லை அவர் வந்து என்னிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். 
 
              அவர் பெரியாருடைய பக்தர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் ஆவேசமாக அரசியல் பேசுவார் என்றும் எனக்குத் தெரியும்.
 
          ஒரு ஆண்டு கழித்து அந்த பெண் தன்  திருமணப் பத்திரிகையை கொண்டுவந்தாள் நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்றாள் .மறுநாள் பெண்ணின் தந்தையும் வந்து அழைத்தார்.
 
         பத்திரிகையில் வாழ்க்கை ஒப்பந்த விழா என்று அச்சடித்திருந்தார்கள் .வாழ்த்திப் பேசுவதற்காக பல கட்சித் தலைவர்களுடைய பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. அநேகமாக தஞ்சாவூரில் உள்ள எல்லா கட்சிப் பிரமுகர்கள் பெயர்களும் அந்த பேச்சாளர் பட்டியலில் இருந்தது.
 
          திருமணத்துக்கு சரியான நேரத்தில் போய்ச்  சேர்ந்தேன். தஞ்சாவூரில் ஒரு பிரபல திருமண மண்டபத்தில் நடந்தது. நாதஸ்வர இசை முழங்கிக் கொண்டிருந்தது. மேடையில் அலங்கரிக்கப் பட்ட இரண்டு  நாற்காலிகள் மேலும் பேச்சாளர்களுக்காக மேலும் பல நாற்காலிகள் போடப் பட்டிருந்தன.
மேடையின் வலது புறத்தில் பெண்ணுக்கு சீராகக் கொடுக்கவிருக்கும் பொருட்களை காட்சிக்காக வைத்திருந்தார்கள். எவர்சில்வர் பாத்திரங்கள், வகைவகையான இதர பொருட்கள் ஸ்கூட்டர், பீரோ,கட்டில், மெத்தை,
தலையணை, மற்ற  துணி வகைகள் இப்படி ஏராளம். 
 
       இதையெல்லாம் பார்த்து நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். இதில் எங்கே சீர்திருத்தம் இருக்கிறது என்று தேடித் பார்க்க வேண்டியிருந்தது.  சில நிமிடங்களுக்குப்ம்பிறகு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. பெண்ணினுடைய தந்தை மேடைக்கு வந்து விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மணப் பெண்ணும் மணமகனும் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தார்கள்.
 
       பிறகு பேச்சாளர்கள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.க ,தி.மு.க இப்படி எல்லா கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் மாறி மாறி பேசினார்கள். தமிழர்களுக்கு தாலி அணியும் பழக்கம் கிடையாது அது ஆரியம் புகுத்திய அடிமைச் சங்கிலி என்றார் ஒருவர். இன்னொருவர் வேட்டைக்குச் சென்று வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தை தன் காதலிக்கு அணிவித்தான் தமிழன். அதுதான் பிறகு தாலியானது என்று தன் ஆராய்ச்சி உண்மைகளை போட்டு வெளுத்துக் கட்டினார். பேசிய
பெரும்பாலான கருத்துகள் திருமண நிகழ்ச்சிக்கு எந்த தொடர்பும் இல்லாத வெற்றுப் பேச்சுகள் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு சலிப்பு ஏற்பட்டது.
 
    சுமார் இரண்டு மணி நேரமாக பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது நான் மேடைக்கு சற்று அருகில்தான் உட்கார்ந்திருந்தேன். புறப்பட்டு போகலாம் என்று கூட நினைத்தேன். பெண்ணிடம் தனிப்பட்ட முறையில் என் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு நகரலாம் என்று பொறுமையாக காத்திருந்தேன்.
 
         மேடையில் இருந்த பெண்ணைப் பார்த்தேன். மணப்பெண் செல்வி மேடையில் தூங்கி தூங்கி விழித்துக் கொண்டிருந்தாள். எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தாள்  எனக்கு புரிந்துவிட்டது .ஐயோ அந்த பெண்
பாவம் என்றுதான் எனக்கு தோன்றியது.தொடர்ந்து இரண்டு மணி நேரம் யார்தான் இந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியும்?
 
         ஒரு வழியாக எல்லா பேச்சாளர்களும் பேசி முடித்தார்கள் ஒருவர் உறுதிமொழி பத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு படித்தார்.அதைத் தொடர்ந்து மணமகனும் ,மணமகளும் அந்த ஒப்பந்தத்தை படித்தார்கள் விழா முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏதோ அரசியல் கூட்டத்துக்கு போன உணர்வோடு நாற்காலியை விட்டு எழுந்தேன் . பிறகு விருந்து தொடங்கியது தஞ்சாவூர் பாணியில் அருமையான அறுசுவை  விருந்து.
 
         திருமணத்தை தொடர்ந்து பதினைந்து நாள் விடுமுறை யில் சென்ற செல்வி ஒரு நாள் அலுவலகத்துக்கு வந்தாள். புதியதாக திருமணமான அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
 
என்னம்மா ஹனிமூனுக்கு எங்கே போயிருந்தாய்?என்று கேட்டேன் பெங்களூர் ,மைசூர் போயிருந்ததாகச் சொன்னாள்அடுத்து திருமண விருந்தை பற்றி பேசினேன். மற்ற பேச்சுக்கு இடையில் சிரித்துக் கொண்டே கேட்டேன் என்னம்மா செல்வி கல்யாண மேடையிலேயே உனக்கு தூக்கம் தள்ளியதே.அந்த பேச்செல்லாம் உனக்கு பிடிக்கவில்லையா?என்று கேட்டேன். 
 
மாறி மாறி ஒவ்வொருவராக அறுத்தால் தூக்கம் வராதா என்றாள் . சிறிது தாமதித்து மேலும் சொன்னாள். எல்லாம் டிராமா சார் என்றாள்.
 
        எனக்கு ஒன்றும் புரியாமல் என்ன சொல்கிறாய் என்று கேட்டேன். அந்த பெண் சொன்னாள் எங்க அப்பா செய்ததெல்லாம் வெறும் டிராமா தான் சார் .காலையிலேயே எனக்கு மாரியம்மன் கோயிலில் என் கணவர் கழுத்தில் தாலி கட்டிவிட்டார் என்றாள். 
 
நான் சிரித்துக் கொண்டே உண்மையாகவா? என்றேன்.  ஆமாம் என்று தலையாட்டிவிட்டு திரும்பவும் உறுதியாக சொன்னாள்.
 
       நீங்கள் மட்டும் போனீர்களா ?என்று கேட்டதற்கு அந்த பெண் சொன்னாள். நான், என் கணவர் என் அப்பா என் அம்மா, மாமனார், மாமியார் எல்லோரும் கோயிலுக்கு போனோம் ஆனால் என் அப்பா கோயிலுக்குள் வர வில்லை வெளியே நின்று கொண்டு விட்டார். என்றாள்.
 
             இந்த வகை சீர்திருத்தங்களை கண்டு சிரிப்பதா, வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்த மணப்பெண்ணே இப்பொழுது மாமியார் ஆகிவிட்டாள்.
 
 
                                                                                                                                மு.கோபாலகிருஷ்ணன்
 

Tuesday, February 14, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 3 - காதல் ஸ்பெஷல்





பட்டுக்கோட்டையாரின் திருமணம்



மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?

பொதுவா பொதுவுடமைக் கருத்துக்களை எழுதுபவர்களால் காதல் கவிதைகள் படைக்க இயலாது. அப்படியே படைத்தாலும் அதிலும் ஏதாவது அறிவுரையும், ஆதங்கமும் வெளிப்படலாம். ஆனால், இவற்றிற்கு நேர்மாறாக, பொதுவுடமைக் கருத்துக்களின்பால் அதிகம் நாட்டம் கொண்ட நம் கவிஞர் இயற்றிய காதல் பாடல்கள், ஒவ்வொரு சாமான்யனின் மனதிலும் ஏறி அமர்ந்து கொள்ளும். இரு வரி உதாரணம் மேலே.

கடந்த இரண்டு பாகங்களில் பறந்த கனலைக் கொஞ்சம் தனல் தணித்து பட்டுக்கோட்டையாரின் 'காதல்' வரிகளை இந்தப் பாகத்தில் வாசிக்கலாம். நம்மளும் ஒரு பாட்டு, அதுவும் காதல் பாட்டு எழுதலாம் என அமர்ந்தால், விரல் அச்சுப் பலகையத் தட்டுதோ இல்லையோ, வெறும் காத்துத் தான் வருது ;) மானே, தேனே, மயிலே, ஒயிலே, கண்ணே, கருவிழியே எல்லாம் போட்டு பிரமாதமா ஒன்னு எழுதிடனும்னு ஒரு கமிட்மென்ட் இல்லாம, மனசு பாட்டுக்கு அது போக்குல போகுது :)

என்னதான் பயிற்சி எடுத்தாலும், சிலரை சில போட்டிகளில் விஞ்ச முடியாது. அதுவும் முக்கியமாகக் கலைத்துறையில். அன்றைய கவிஞர்கள் மனதில் தங்கும் கருத்துக்களை எழுதினார்கள். இன்றைய அநேக கவிஞர்கள் மனதைக் கெடுக்கும் கருத்துக்களை எழுதுகிறார்கள். எழுதிவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல, 'இது படத்துல வர்ற சிட்டுவேஷன், யாரையும் புண்படுத்தறதுக்கு இல்ல'னு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள். பட்டுக்கோட்டையார் இதில் முதல் வகை என்பது நாமெல்லாம் அறிந்ததே ! 'செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன் ?' என்று தன்னிலையைப் பாடியவர், அவரெல்லாம் எங்கே ரூம் போட்டு யோசித்திருப்பார். தான் கொண்ட கருத்தில் நேர்மை, எதிலும் எங்கும் சிறு வக்கிரம் தொனிக்காமல் காதல் வரிகள் படைத்த விதம், எளிமையாக இயற்கையோடு ஒன்றிக் காதலைச் சுமந்து வரும் பாடல்கள் என நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன் அவர். இது கவிஞரின் கேள்வி பதில் காதல்.

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

(திரைப்படம்: இரும்புத்திரை 1960)

இதுவரையிலும் பேசாத தென்றல் (காற்று) இன்று மட்டும் வந்து இன்பம் என்று சொல்வது ஏனோ ? ... என்னே ஒரு கற்பனை ! 'வெறும் காத்துத் தான் வருது' என்ற நகைச்சுவைக் காட்சி இங்கிருந்து தான் பிறந்திருக்குமோ ? மேற்கண்ட பாடலில் காதலி காதலனிடம் கேள்விகளால் துளைக்கிறாள். பொறுமையாக சூசகமாகப் பதிலுரைக்கிறான் காதலன். மரக்கிளையையும், கொடியையும் இணைத்துக் காதலி கேட்ட கேள்வியும், அதற்குக் காதலன் அளித்த பதிலும் அதி அற்புதம். இன்றைக்கு இது போல எங்காவது காதலர்களைக் காண முடியுமா? இதைப் பற்றி பதிவு பதிவா எழுதலாம் :) ஆனால், இதுவல்ல இடம்.

பொதுவாகக் காதலுக்குத் தூது போவது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். சக தோழமைகளை நம்பித் தூது அனுப்பி, கவிழ்ந்த காதல்கள் பற்றி ஏராளமான தமிழ் திரைப்படங்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம் ;) மனிதனை நம்பினால் இதான் கதி. இது கவிஞருக்கு அன்றே தெரிந்திருக்கிறது :) அதான் அடுத்த பாடலில் வெண்ணிலாவைத் தூது அனுப்புகிறார்.

நான் பேதையாய் இருந்தேன், என் இதயத்தைத் திருடிவிட்டாள், அதை அவளிடம் இருந்து பறித்து என்னிடம் திருப்பிக் கொடு என்று வெண்ணிலாவை அழைக்கிறார் பட்டுக்கோட்டையார். அதுவும், சும்மா போய் கெஞ்சினால் தரமாட்டாள், பறித்து வந்து தந்துவிடு, பயம் கொள்ளத் தேவையில்லை, இது அவள் தந்த பாடம் என்று கூறும் அற்புத வரிகள். இது கவிஞரின் தூதுக் காதல்.

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
...
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
(திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960)


காதலியின் முகத்திற்கு ஒரு வர்ணனை எழுதச் சொன்னால், கண்ணாடி மாதிரி, பளிங்கு மாதிரி, இன்னும் அதீதக் கற்பனையில் தக்காளி மாதிரி என்றெல்லாம் தான் இன்று கவிஞர்கள் எழுதுகிறார்கள். ப‌ட்டுக்கோட்டையாரோ, முகத்தையே ஒப்பிடுகிறார்.

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
...
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
(திரைப்படம்: தங்கப் பதுமை 1959)

புற அழகைச் சுமந்து வந்த பாடலில், அக அழகையும் சொல்லி, எத்தனை சுகமானாலும் இருவருக்கும் பொதுவாக்கலாம் என காதலில் பொதுவுடமையைப் பாடியது மற்றவர்களில் இருந்து நம் கவிஞரை சற்றே தள்ளி நின்று வியக்க வைக்கிறது. இது கவிஞரின் பொதுவுடமைக் காதல்.

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
(திரைப்படம்: அமுதவல்லி 1959)
இயற்கையோடு இணைத்து கவிஞர் எழுதிய மேற்காணும் பாடல் வரிகளில் மயங்காதவர் உண்டோ. 'தேமதுரத் தமிழோசை' என்றான் பாரதி. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்பத் தமிழோசை வந்து நம் செவிகளில் பாயுமே ! இது கவிஞரின் அழகுக் காதல்.

அழகு நிலாவின் பவனியிலே
அமைதி கொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
ஆடும் காரணம் ஏதோ

களங்கமிலா என் மனதினிலே
கலையழகே உமதன்பாலே
இன்ப உதயம் ஆவது போலே
இதய உறவினினாலே
அல்லி மலர்ந்தே ஆடுதே
(திரைப்படம்: மஹேஸ்வரி 1955)

'அமைதியான இரவில் அல்லி மலர்ந்து ஆடுதே. காரணம் ஏதோ ?' என வினவுகிறாள் காதலி. இரவில் அல்லி மலர்வதற்கான காரணத்தை அன்பு உறவின் மூலம் அழுத்தமாக எடுத்துரைக்கும் இப்பாடல், கவிஞரின் இயற்கைக் காதல்

இப்பொழுதெல்லாம் காதலியர் என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்கள் எனச் சிந்தித்தால், அதாவது நம் இன்றைய கவிஞர்கள் என்ன எழுதுவார்கள் என்றால் ... சிறந்த ஒரு உதாரணம், நம்மை எல்லாம் துள்ளி ஆட்டம் போட வைத்த 'கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ? ... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா? ...' பாடலின்றி வேறேது !

புற அக அழகை, இயற்கையை, பண்பை, நானத்தை, பொதுவுடமையைக் காதலில் எழுதிய நம் கவிஞர், துள்ளி ஆட்டம் போட வைக்கும் காதலையும் சொல்லியிருக்கிறார். தினம் நம் வீட்டில் இன்றும் நடக்கும் சின்னச் சின்ன ஏச்சுப் பேச்சுக்களை, கொஞ்சல்களை மையமாகக் கொண்ட காதல் வரிகள். இது கவிஞரின் கிராமியக் காதல்.

உன் அத்தானும் நான் தானே
சட்டை பொத்தானும் நீதானே
...
உன்னை மலை போல நினைச்சிருக்கேன்
நீ அசையாமல் இருக்காதே...
உன்னையும் தங்க சிலை போல நினைச்சிருக்கேன்
.. உம்ம்.. . பேசாமல் இருக்காதே...
கண்ணு... என் கண்ணூ.......
உன்னாட்டம் புத்திசாலி உலகினில் ஏது... (ஓஹோ.....)
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது...
உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது..
என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது..
என்னாளும் நமக்கு இனி கிடையாது
சுந்தரியே .. அடி சுந்தரியே...
கண்ணு சுந்தரியே..
அந்தரங்கமே
மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே...
சுந்தரியே அந்தரங்கமே...

(திரைப்படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957 )
கிராமியக் காதலின் காணொளி


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

Monday, February 13, 2012

சதுரங்கப் போட்டி முடிவுகள்

சமீபத்தில் நமது தமிழ்ச் சங்கம் நடத்திய சதுரங்கப் போட்டிகளின் முடிவுகள்:

பத்து வயதுக்குட்பட்ட பிரிவு:

சக்தி ராமசாமி - முதல் இடம்
ராகுல் பழனி    - இரண்டாம் இடம்
விஸ்வநாதன் சுப்பிரமணியன் - மூன்றாம் இடம்

பத்திலிருந்து பதினைந்து வயது பிரிவு:

அவிஜித் ராஜன் - முதல் இடம்
சத்யா வடிவழகு - இரண்டாம் இடம்
வருண் நடராஜன் - மூன்றாம் இடம்

பெரியவர்கள் பிரிவு:

சீனு ஐயர் - முதல் இடம்
அழகப்பன் அருணாசலம் - இரண்டாம் இடம்



போட்டியில் பங்குபெற்ற மற்ற குழந்தைகள்:
அஞ்சு நடராஜன், ஆதித்யா பரமேஸ்வரன், ஆகாஷ் சுகுமாரன், ஐஸ்வர்யா சுகுமாரன், குகன் சுந்தரேசன், ஹம்சினி முரளிகிருஷ்ணன், சக்தி குப்புசாமி, ஷ்ரேயஸ் முத்துசாமி, ஸ்ருதி வெங்கடேசன், சிவா சரவணன், தேஜஸ் முத்துசாமி, வைஷ்ணவி ரங்கநாதன்


போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

Sunday, February 05, 2012

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

படித்தவர், பண்டிதர், பொருளாதார வல்லுநர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசியராக இருந்தவர். IIT டெல்லியில் பொருளாதாரப் பேராசிரியர். கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ என்று குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த சந்திர சேகரின் மந்திரி சபையில் அமைச்சர். இவரது நல்ல பக்கம் இவையே. இவை அனைத்தும் சிறந்த சாதனைகள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஆனால், இவரைப் பற்றிக் கேட்டல் உடன் ஞாபகம் வருவது, கலங்கிய குட்டையில் மீன் பிடித்துக் குளிர் காயும் இவரது தான் தோன்றித் தனமான செயல்பாடுகள் தான்.

2G வழக்கில் ராஜாவைக் கைது செய்யும் வரை இவர் புத்திசாலி. அதில் இவரது பங்கை மறுக்க முடியாது. ஆனால் சிதம்பரத்தைக் கைது செய்ய வைக்க முயன்று இன்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் வெட்கப் பட மாட்டார், இன்னும் ஏதாவது குழப்பங்களை எங்காவது செய்து கொண்டு காலத்தை ஒட்டி விடுவார் இந்த புத்தியுள்ள மடையர்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரைப் பகைத்துக்கொண்டு நீதி மன்றத்தின் முன்பு சேரிப் பெண்களின் ஆபாச நடனத்தில் அவமானப் பட்டவர். முகத்தில் அமிலம் வீசியது ஜெயலலிதாவின் உத்தரவில்தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய சந்திர லேகாவுடன் சேர்ந்து கோமாளிக் கட்சி ஒன்றை ஆரம்பித்து கொஞ்ச நாள் ஓட்டினார். கருணாநிதியோடு மேடையில் ஏறி விட்டு அவர் ஒரு சிறந்த தலைவர் என்று கூச்சம் இல்லாமல் பாராட்டினார்.

பின்பு அதே ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு சோனியா காந்தியின் உதவியோடு வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்து நாரதர் கலக்கம் செய்தார்.

ராமதாஸ் போன்றவர்கள் கட்சி மாறினாலோ, ஆட்சியைக் கவிழ்த்தாலோ நாம் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் புத்திசாலி என்ற போர்வையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத வெறும் குழப்ப அரசியலில் ஈடு பட்டு கோமாளிகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவரைப் போல புத்திசாலி முட்டாள்கள்தான் நம் நாட்டின் சாபக் கேடு.

Thursday, February 02, 2012

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

சில வித்தியாசமான பழமொழிகளை கிராமங்களில் கேட்கலாம், அல்லது பழைய பாரதிராஜா படங்களைப் பார்க்கும்போது கேட்கலாம். கேட்ட பலரும் இவற்றை விரும்பியதுண்டு, அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

"என் ராசிக்கு ஆயிரங்கால் மண்டபம் கட்டி ஆண்டாலும் வெயிலுதானே அடிக்கும்" - தொடர்ந்து வரும் ஏமாற்றங்களில் சலித்துக்கொள்ள உதவும். அலுவலகத்தில் உத்தியோக உயர்வு கிடைக்காத பொது, இதைக் கூறி சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

"அங்கயும் இருப்பான் இங்கயும் இருப்பான், திங்கிற சொத்துல பங்கும் கேட்பான்" - ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாக இருக்கும் நபர்களைக் கரித்துக் கொட்ட உபயோகிக்கும் சொல். நமது ஒய்வு பெற மறுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பழமொழி.

"அரிசின்னு அள்ள விட மாட்டேங்கிற, உமின்னு ஊத விட மாட்டேங்கிற" - எது கேட்டாலும் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். நமது அலுவலக மேலாளர்களுக்கு சிறந்த பழமொழி.

"எமனுக்கு வாக்கப் பட்டா எரும மாட்ட மேச்சு தானே ஆகணும்" - வழியில்லாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது அலுத்துக் கொள்ளளலாம். (உதாரணம் - பயிற்சி - நீங்களே சொல்லுங்கள்?)

"நெல்லுக்குப் போறது புல்லுக்கும் போகட்டும்" - ஒரு இடத்தில நடக்கும் விஷயம் திட்டம் இடாமல் இன்னொரு விஷயத்திற்கும் உதவும்போது சொல்லல்லாம். அடுத்தவரின் வெற்றியில் குளிர் காணும் நபர்களுக்கு நல்ல உதாரணம்.

"கூரையில சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா" - ஒன்ன நம்பி நா இல்லன்னு சவால் விடறதுக்கு உபயோகிக்கும் பழமொழி. நம் கிரிக்கெட் வீரர்கள் டீம்ல இருந்து தூக்கிட்டாலும் IPL இருக்குனு ஒரு தெனாவட்டுல இருக்கிறது ஒரு உதாரணம். இன்னொரு வேலை வாங்கி விட்டு மேலாளரிடம் இதைச் சொல்லி சவாலும் விடலாம்.

"நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வாரேன், கலந்து ரெண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம்" - ஒரு முதலீடும் செய்யாமல் அடுத்தவரின் முதலீட்டில் சுகம் காணும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். கூட்டணிக் கட்சிகளின் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுக்காமல் நாமம் சாத்தும் அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும் சொல். (இதயத்தில் இடம் இருக்கிறது?)

"மகன் செத்தாலும் பரவாயில்ல, மருமக தாலி அறுக்கணும்" - எனக்கு ரெண்டு கண் போனாலும், பரவாயில்ல, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணுங்கிற ஒரு ஆவேசம்