Tuesday, September 26, 2017

மீனாவுடன் மிக்சர் 31 - {நவராத்திரி நினைவலைகள் - 2017}

வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு.  வாசல்  கதவை திறந்து வெளியே வந்தாலே  தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது.  அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.

எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்.  பத்து வருஷத்துக்கு முன்னாடி,  கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு  தான் இருந்தது இந்திய குடும்பங்கள்.   தெரியாம ரெண்டு கூமான்  (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க.  களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது. 

ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா  ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு  எங்க அம்மா கிட்ட கேட்டா  சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது. 

இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான்.   நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை   வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே  இவங்க கொண்டாடறாங்கன்னு  ஊர்ல பேசிக்கறாங்க. .  நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய  ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.

ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள்.   Racial  discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம்.  இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய  மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து  வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.

அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க.  புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட  காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.

ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம்.  IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள்  ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம்.  நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும்  சலவை துணி பை  சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம்.  கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று  நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை. 

போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க.  தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே. 

இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க.  மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app  எழுதிக் கொடுக்க கூடாதா?  தெரியாம தான் கேக்கறேன்.  இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா?  இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?  

காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Monday, September 25, 2017

கொடுந்தமிழ். ​அப்படின்னா?

​செந்தமிழ் தெரியும், பைந்தமிழ் கூட தெரியும், அதென்ன கொடுந்தமிழ்?
கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் சரியான பொருளில் பயன்படுத்தப்பட்டிருந்ததா எனப் பார்த்து விடுவோம்.

Spoiler: அது எதிர்மறைச் (negative) சொல் அல்ல.

இலக்கண விதிகள் வழுவாமல் சொற்கள் அப்படியே இருத்தல் நலமே. ஆனால் மக்கள் பல திசைகளுக்கு பணி நிமித்தமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் போய் வரும்போது அந்தந்த வட்டாரங்களின் தன்மைக்கேற்ப தமிழையும் வளைத்து பேசுவர். அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, தவிர்க்கத் தேவை இல்லாததும் கூட.

மேலே  உள்ள பத்தியில் 2 விசைச் சொற்கள் (keywords) உள்ளன. திசை, வளைத்து ஆகியன. வேண்டுமென்றேதான் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எதற்காக என பார்ப்போம்.

தமிழ் பேசப்பட்ட நிலம் செந்தமிழ்-நிலம் (Mainland). அதைச் சுற்றி அமைந்த மற்ற நாடுகளில் இருந்து வந்து போகும் மக்கள் மூலமாக தமிழுக்குள் வரும் சொற்களை திசைச்சொற்கள் என்கிறார் தொல்காப்பியர். அதாவது, ஒரு பொருளைக் குறிக்க வழக்கமான சொல்லைத் தவிர்த்து வேறு புதிய ஒரு சொல்லை பயன்படுத்துவது. எகா: சிறுகுளம் என்பதை கேணி என்று ஆற்காடு பக்கம் சொல்வது.

இப்படி மொழியை வளைத்து, ஒரு பொருளை வேறு ஒரு திசையில் இருந்து வந்த சொல்லின் வழியாக குறிக்கும் போது அந்தச் சொல் "திசைச்சொல்".

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (தொ.கா)


ஆச்சா..
இப்போ, ஏன் "கொடுந்தமிழ்"?
கொடு என்றால் வளைதல்.

எகா:
கொடுவாள் (வளைந்த வாள்), கொடுங்கோல் (வளைந்த அரசு - அறத்தில் இருந்து வளைந்த அரசு), கொடுக்காப்புளி, கொடுக்கு..

அதன்படியே, வளைந்த தமிழ் = கொடுந்தமிழ்.

​நன்னூல் வரை திசைச்சொல் என்றே சொல்லி வந்திருக்கிறார்கள். நன்னூலுக்கு உரை எழுதும்போது தான் "வளைந்திருக்கிறது".​

​இப்போது அதையே நாம் வட்டார வழக்கு என்று சொல்கிறோம்.​

​வீட்டுப்பாடம்:
உங்களுக்கு தெரிந்த கொடுந்தமிழ்/திசைச்சொல்/வட்டார வழக்குகளை குறிப்பிடுங்கள்.​

Monday, September 18, 2017

​தமிழின் மிக நீண்ட சொல்


ஆங்கிலத்தில் மிகப் பெரிய (நீண்ட) சொல் எது எனக் கேட்டால் நம்மில் சிலர் கூகுளை கேட்காமலேகூட சொன்னாலும் சொல்லி விடுவோம்.

தமிழில்?

தமிழின் எளிமை அப்படி நீண்ட தனிச் சொற்களை ஊக்குவிப்பதில்லை. எது "சொல்" என்பதற்கே நாம் தெளிவான வரைமுறை வைத்திருக்கிறோம்.
பெயர், வினை. அவ்வளவுதான் வகைகள்.
இடைச்சொல், உரிச்சொல் எல்லாம் பெயர், வினைச் சொற்களைச் சார்ந்தது.

இதிலும்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொ.கா) 
என்ற கட்டுப்பாடு வேறு ​உண்டு.

இப்படி அமையும் சொற்களைப் பிரிக்க (பகுக்க) முடிந்தால் அவை தனிச் சொற்கள் அல்ல. கூட்டுச் சொற்கள்.

அதன் Grammatical terms: பகுபதம், பகாபதம்.
பகும் (பிரியும்) சொற்கள் (பதம்) - பகுபதம்.
பகாச் சொற்கள் - பகாபதம்.

எகா:
படித்தான் = படி + ஆன். இது பகுபதம் (பிரியும் சொல்).
படி என்பதை மேலும் பகுக்க முடியாது​. எனவே பகாபதம். (பிரியாச் சொல்)

ஆச்சா?
இப்போ வருது நன்னூல் உதவி:
பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் 
எழுத்தீ றாகத் தொடரு மென்ப

அதன்படி உயர் அளவாக,
பகாபதம்: 7 எழுத்துக்கள்.
பகுபதம் : 9 எழுத்துக்கள்.

ஆக, technically உயர்ந்த அளவாக 9 எழுத்துக்களே இந்தச் சொல்லிலும் வர முடியும். இதைக் காட்டிலும் நீண்ட சொற்கள் எல்லாம் பல சொற்களை நாமாக சேர்த்து எழுதியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள். மறுப்போரும் உண்டு. ஆனால் நன்னூல் சொல்வது மேலே குறிப்பிட்டது போலத்தான்.

எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுகள்?
புதிய சொற்களை ஆக்கும் போது அவை பயனுள்ளதாக மட்டுமின்றி எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

Wednesday, September 06, 2017

இது உனக்கான பயணம்...!!!

இது உனக்கான பயணம்...!!!

பயணம் தொடர நேரம் வந்தாயிற்று
எத்தனை நேரம்  என் கைகளுக்குள் 
உனது கைகளைப் பொதித்து 
கொள்வது!!

சத்தியமாக உனக்கான பிடி
இங்கு இல்லை அதோ
அங்குள்ளது!
அதைப் பிடித்துக்கொள்வாயாக...!!

நான் உன் ஒரு கையைப் 
பிடித்து இருந்தாலும் 
நீ உன் இன்னொரு கையால் இந்த 
உலகத்தின் கைகளை பற்று!!

உனக்கான நேரத்தில் 
உன் கால்கள் உலகத்தின் மடியில் பட்ட  
மறுநொடி உனக்கான தேடல் ஆரம்பிக்கும்...
உனக்கான பாதுகாப்பை  
நீயே விரைந்து
உறுதி செய்துகொள்....!!

உன் கரம் பிடிக்க நாங்கள் இருந்தாலும் 
சுற்றி உன்னை அறியா பலர் 
உன்பால் அறிந்து அன்பால் உன்னை
மறிக்க கூடும் ...
நீ உன் தேவையறிந்து
இருகப்பற்று 
உனக்கான வாய்ப்பை !!

பல இன்ப துன்பங்கள் கடக்க 
இருக்கும் நீ...
எந்த நிலையிலும் உனை நீயே 
நலம் காக்க கற்றுக்கொள்!!

இவ்வுலகு உனக்கு எதை தர காத்திருக்கிறதோ...
அதை துணிவுடன் எதிர்கொள்!!

அச்சம் உன்னை பின்னுக்கு தள்ளும் 
தைரியம் துணிவுடன் உன்னை 
வெற்றி மேடை ஏற்றும் ...!!

அரசே கூட உனக்கெதிராக சட்டம் 
அமைக்க கூடும்....
அநீ(ட்)திக்கு எதிராக போராடு 
பதில் வரும் வரை...!!

பூக்கள் தேவைப்படாது ஆனால் 
சாட்டை தேவைப்படும்
சில நேரத்தில்...!!

வா உன்னை வரவேற்க 
காத்திருக்கிறது 
சவாலான பயணம்...!!!
  • ப்ரியன்



Sunday, July 16, 2017

ஒரு சக்களத்திச் சண்டை


என்னமோ ஏதோன்னு பதறிட வேண்டாம். இது தப்பான தொடர்பு பற்றியதல்ல. ​தமிழ் இலக்கணம் தொடர்பானது.

தமிழில் இருபிறப்பி என்று ஒரு சொற்பிரிவு (category) உண்டு. இரு வேறு மொழிகளின் பகுதிகள் இணைந்து புதியதாக ஒரு தமிழ்ச் சொல்லைத் தருவது.

இருபிறப்பி =  Hybrid.
இதுதான் இன்றைய குறிப்பிற்க்கான அடிப்படை.

சக்களத்தி தப்புன்னு தெரியும், சக்களத்தி -ன்னு சொல்வதும் தப்புங்கிறாங்க.
சக + களத்தி = சக்களத்தி.
களத்தி  = துணைவி.
ஆக, இன்னொரு களத்தி = சக களத்தி = சக்களத்தி.

அப்படியானால் அவரவர் தங்களின் "திருமதி மட்டும்"-ன்னு இருந்துட்டா தப்பில்லை; இல்லையா?
Socially சரி. ஆனால் இலக்கணப் படி "திருமதி"-யும் தப்புங்கறாங்க.

ஸ்ரீமதி என்பதன் நேரடி மொழிபெயர்ப்பாம் அது. "அப்படியே" பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க போல.
ஸ்ரீ + மதீ => திரு + மதி. ஏற்கனவே நம்மிடம் மதி = அறிவு* என்று இருப்பதால் அப்படியே விட்டுடாங்களோ என்னவோ.
*(மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் - திருக்குறள்)

இருப்பினும், மனைவி மதி நிறைந்தவராக இருத்தல் மகிழ்வே.

அப்போ எப்படி மணமான பெண்ணை மதிப்போடு குறிப்பிட?
திருவாட்டி என்பதே சரியாம்.

சக்களத்தியை?
எங்கையர்.

ஒரு பாட்டுல, பாணன் கிட்ட புலப்புகிறாள் ஒரு தலைவி.
"அறிவு கெட்டுப் போய் இங்க ஏன்டா வந்த, அவன் அங்கன எங்கைகிட்ட இருப்பான் போ"-ங்கற மாதிரி வரும்.

நீதானறிவயர்ந் தெம்மில்லு ளென்செய்ய வந்தாய்
நெறியதுகா ணெங்கைய ரிற்கு (ஐந்திணையைம்பது)


இப்போ இருபிறப்பிகள் என்னென்ன புழங்கறோம் யோசிச்சு பாருங்க.
தமிழ் + <பிற மொழி >

=====================

இச்சொல்லை வைத்து ஒரு நாடகக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்:

-------------
காட்சி 1:
அவள் : எங்கய்யா, வீட்டுக்கா போயிட்டு வர?
அவன்: எங்கையா வீட்டுக்கு போயிட்டு வரேன்.
அவள்: எங்கே போயிட்டு வர???
அவன்: அதான் சொல்றேனே. எங்கையா வீட்டுக்கு.
அவள்: எடு அந்த தொ.. கட்டையை..

அவன் ஓட, அவள் துரத்த, காட்சி முடிகிறது.
-------------

:-)

Saturday, July 15, 2017

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை

தமிழ் இலக்கணக் குறிப்புகள் - ஒரு சிறிய பார்வை
சிறு வயதில் நாம் படித்த இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கொஞ்சம் நினைவு கூறலாம்.
நான் எட்டாவது படித்துக்கொண்டு இருக்கும்போது தமிழாசிரியர் இலக்கணக் குறிப்பு என்று பலகையில் எழுதித் தள்ளுவார். ஆனால் அது பாடத் திட்டத்தில் கிடையாது. தேர்வில் கேள்விகள் ஒன்பதாம் வகுப்பில் மாத்திரமே வரும். அதனால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

தமிழ் போல நுணுக்கமாக இலக்கணக் குறிப்புகள் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கும் ஒரு இலக்கண குறிப்போடு விளக்கும்போது அந்த வார்த்தைகளின் அர்த்தம் மேலும் மெருகு கூடுகிறது.

எளிதாக ஆரம்பிக்கலாம். எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

"ஊறுகாய்" : வினைத்தொகை. ஊறுகாயை "ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊரும் காய்" என்று எந்த காலத்துக்கும் ஒவ்வுமாறு கூற முடிவதால், வினை மறைந்திருக்கிறது. எனவே வினைத்தொகை.

மேலும் சில எளிய இலக்கணக் குறிப்புகள்
  • எல்லோருக்கும் தெரிந்த மறக்க முடியாத ஒன்று "ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சம்" - உதாரணம் - அணையா விளக்கு. அணையாத விளக்கில் "" -வை நாம் ஒதுக்கி விடுவதால் இந்த பெயர்.
  • வாழ்க , வருக - இவற்றை "வியங்கோள் வினைமுற்று" என்பார்கள்.
  • வந்தவன் சென்றான் - இந்த "வந்தவனை" வினையாலணையும் பெயர் என்று கூறுவார்கள்.
அடுத்து சில உயர்வு , தாழ்வு சிறப்புகள். சில இடங்களில் "உம்" அல்லது "ஏ" இவை உயர்வு அல்லது தாழ்வைக் குறிக்கும். நான் சாத்தூரில் 11 -ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த போது, ஆசிரியர் ஒரு மன்னர் போர் செய்த கதையை விளக்கும்போது அதில் "மன்னனும் தோற்றான்" என்ற வாக்கியம் வந்தது. அவர் அதை "தோற்கக் கூடாத மன்னனே தோற்று விட்டான், இந்த உம்மை "தாழ்வுச் சிறப்பும்மை" என்று கூறினார். நான் உடனே எழுந்து "இந்த இடத்தில் தோற்க மாட்டான் என்று எதிர் பார்க்கப்பட்ட மன்னனே தோற்று விட்டான், அந்த உம்மையில் மன்னனின் உயர்ச்சி வெளிப்படுகிறது, அதனால் இது "உயர்வுச் சிறப்பும்மை" என்று கூறினேன். அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அந்த வகுப்பில் நான் புதிய மாணவனும் கூட. நல்ல வேளையாக அவர் தவறாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் வகுப்பில் அவர் நுழைந்த உடன், என்னை எழுப்பி உன் பெயர் என்ன அன்று கேட்டு விட்டு, இந்த "மன்னனும்" பற்றி நான் மற்ற இரண்டு தமிழ் ஆசிரியர்களிடம் விவாதித்திருந்தேன். அது உயர்வுச் சிறப்பும்மை - தான் அன்று பெருந்தன்மையாக தன தவறை திருத்திக் கொண்டார்.

தாழ்வு சிறப்பும்மை - ஹர்பஜன் சிங்கும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருக்கிறார். இந்த இடத்தில் "உம்" ஹர்பஜன் சிங் ஒரு நல்ல மட்டையாளர் அல்ல என்று உணர்த்துகிறது. எனவே தாழ்வு சிறப்பும்மை.

இது போல ஏகாரம். ஸ்ரீதர் நல்ல கேரம் வீரர். நான் உப்புச் சப்பிலாமல் ஆடி அவரை எப்படியோ வென்று விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். அவர் கூறுகிறார் "இவன் என்னையே ஜெயித்து விட்டான்". இது ஸ்ரீதரின் திறமையை உயர்வாகக் குறிப்பிடும் "உயர்வுச் சிறப்பு ஏகாரம்". நான் கூறுகிறேன். "நானே ஸ்ரீதரை ஜெயித்து விட்டேன்" இது என்னுடைய திறமையின்மையைக் குறிக்கும் தாழ்வுச் சிறப்பு ஏகாரம்"

இன்னொரு வித்தியாசமான "உம்மை". வகுப்பறைக்கு ஆசிரியரும் வந்து விட்டார் என்ற தொடரில் உள்ள "உம்", மாணவர்கள் ஏற்கனவே வந்து விட்ட ஒரு விஷயத்தை தெரிவிக்கிறது. இது "இறந்தது தழுவிய எச்ச உம்மை" என்று கூறப் படுகிறது.

அன்மொழித் தொகை - இது சற்று புதிரானது.

செங்கொடி வந்தாள் - இதில் செங்கொடி என்பது "செம்மையான கொடி". செம்மை என்பது ஒரு பண்பு. அது மறைந்து வருவதால் இது ஒரு பண்புத்தொகை. ஆனால் இங்கு செங்கொடி என்பது செம்மையான கொடி போன்ற ஒரு பெண்ணைக் குறிக்கிறது. அதனால் இது " பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படுகிறது.

இது போல் தேன்மொழி வந்தாள் என்ற தொடரில் தேன்மொழி "உவமைத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை" என்று கூறப்படும். (தேன் போல மொழி பேசும் பெண் வந்தாள்)

ஓடு -
இந்த சிறிய வார்த்தையின் இலக்கணக் குறிப்பு கொஞ்சம் நீளமானது. செய் எனும் வாய்பாட்டு ஏவல் ஒருமை வினைமுற்று.

தமிழ் இலக்கணம் பற்றி பேச ஆரம்பித்தால் அது ஒரு கடல், நாம் கொஞ்சம் கையில்
அள்ள முடிந்தால் நம்முடைய பாக்கியம்.

நன்றி.






Sunday, July 09, 2017

இரண்டு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருமா, எப்படி? (ஞா.போ)


ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது மேலே உள்ள கேள்வி வந்தது.

மகிழ்ச்சி. பார்த்திடுவோம்.
 
தலைப்பிற்குள் போகும் முன் இன்னொரு குறிப்பு:
அமெரிக்கச் சாலைகளின் 1 U turn = 2 left turns என்று தனித்தனியாகக் கருதும் விதியைப் போல தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் மெய் + உயிர் என்று தனித்தனியாகவே கருதப்படுகிறது. அசை பிரிக்க மெனக்கெட வேண்டியதில்லை.
 
எ.கா:
அம்மா = அ + ம் + ம் + ஆ

இப்படி, இரு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவதை வெகு இயல்பாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோல வரும் மெய்யெழுத்து பயன்பாட்டிற்கு ஒரு கலைச்சொல் (Technical term) இருக்கிறது.

மெய் மயக்கம்.

அதில் உட்பிரிவுகள் உண்டு. என்னென்ன எழுத்துக்கள் எதனை தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு. தமிழ் கற்போரை மிரட்ட அல்ல; கவிதைகளின் (பாடல்/பா/செய்யுள்) ஓசை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விதிகள்.

மெய்ம்மயக்கத்தில் ஒரு வகை உடனிலை.
அம்மா = ம் என்ற மெய், தன்னுடன் இன்னொரு முறை தானே வரும் நிலை.
உடன் + நிலை.

அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை (தொ.கா)
இது போல் எளிய வகைகளும் அதனைக் குறிக்க விதிகளும் உள்ளன.

இப்போதைக்கு முதல் வரியில் கேட்ட கேள்விக்கு பதில்:
மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும். அதற்கு பெயர் மெய்மயக்கம் (மெய்ம்மயக்கம் என்றும் சொல்வதுண்டு).

மெய் எழுத்தைத் தொடர்ந்து உயிர்மெய்யாக இல்லாது straight-ஆக இன்னொரு மெய் எழுத்து வருவது ஈரொற்று மயக்கம்.
பெரிசா ஒன்னும் இல்லை.
இரண்டு ஒற்று மயக்கம் = ஈரொற்று மயக்கம். அவ்வளவுதான்.

மூன்று மெய்கள் கூட மயங்கி (சேர்ந்து) வரும்: வாழ்த்து = வா + ழ் + த் + த் + உ

Btw, மயக்கம் என்றால் சேர்ந்து வருதல். தலை சுற்றல் மட்டுமில்லை.
தமிழ் படிக்கையில் தலைசுற்றல் இருக்கக் கூடாது. :)

என் பங்குக்கு இரு சொற்களை இரண்டாம் வரியில் சொல்லி இருக்கிறேன். 
(மகிழ்ச்சி, பார்த்(த்+இ)டுவோம் = பார்த்திடுவோம்)
படிப்பவர்களும் உங்கள் பங்குக்கு முயன்று பாருங்கள்
​இனிய, எளிய தமிழ்.
வாழ்க.​
 
 


 

Sunday, June 25, 2017

நமக்கு எதுக்கு 'ப்ரச்ன' ? (ஞாயிறு போற்றுதும்)

சில நாட்களுக்கு முன் 'அறிவோம் நம் மொழியை' என்னும் பகுதியில் ஒரு நாளிதழில் வந்த கட்டுரையைத் தொடர்ந்து:

"இந்தப் 'ப்ரச்ன'யை எப்படித் தீர்ப்பது?" என்பது தான் அதன் தலைப்பு (https://goo.gl/BdMVjI)

"ப்ரச்ன" எனும் இந்த சமற்கிருதச் சொல்லைத் தமிழாக்குவதற்கு முன், அந்தச் சொல் தமிழுக்கு உண்மையிலேயே தேவையா என்பதை பார்ப்போம்.

----------------------------------
ஒரு மொழியில் ஒவ்வொரு செயலின்/பொருளின் மெல்லிய வேறுபாட்டையும் குறிக்க சொற்கள் இருப்பது அதன் அழகு, சிறப்பு.
சரியான சொற்களைப் பயன்படுத்துவது குழப்பமில்லாமல் செய்தியைத் தெரிவிக்கும். இல்லையா?
இப்போ "பிரச்சினை"க்கு வருவோம். 
எந்த ஒரு எதிர்மறை நிகழ்வைச் சொல்லவும் "பிரச்சினை" என்கிறோம். யோசிச்சு பாருங்க, பொருத்தமான சொற்கள் தமிழில் பல இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாது "பிரச்சினை"யைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

நம்மிடம் ஏற்கனவே இருக்கும் எதிர்மறைச் சொற்கள் சில:
சிக்கல், தகராறு, மனவருத்தம், சண்டை, கோளாறு, பற்றாக்குறை, குறைபாடு, இடைஞ்சல், வம்பு, குழப்பம், குளறுபடி, தவறு, பழுது...
மேலே சொன்ன எல்லாச் சொல்லுக்கும் இப்போது நமக்கு புழக்கத்தில் உள்ளது ஒரே "பிரச்சினை" தான்.
கோபுரத்துக்கெல்லாம் அடி அடின்னு சுண்ணாம்பு அடிச்சு வைக்கிறோமே அது போல. எல்லாமே பிரச்சினை தான். வண்ணப் பூச்சே கிடையாது. வெறும் வெள்ளையடித்தல் மட்டுமே.

"அங்கே ஏதோ பிரச்சினை". அவ்வளவுதான்.
அது சண்டையாகவும் இருக்கலாம், பற்றாக்குறையாகவும் இருக்கலாம், குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனால் ஒரே "பிரச்சினை" தான். அது என்னன்னு சொல்ல கூடுதல் விளக்கம் தேவைப்படும்.

அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே இதுல உங்களுக்கு என்னங்க பிரச்சினை-ன்னு யாரவது கேட்டால், ​எங்களுக்கு எப்பவுமே பிரச்சினை வேண்டாங்க, இது என் ஆதங்கம்-ன்னு சொல்லலாம். :)

Vocabulary-யை சரியாக பயன்படுத்த வேண்டும். அதுவே மொழிக்கும் பேசுபவருக்கும் அழகு & பலம்.

வேறு சில "பிரச்சினை" சொற்களை பட்டியலிடுங்கள்.

Tuesday, June 20, 2017

தாயுமான என் தாய்மாமன் வெ.பாலன்.




பிறந்த நொடி முதல் என்னை தன் மகளாய் பாசத்தை கொட்டி வளர்த்தீர் - எனது வாழ்க்கையை மிக அழகாக செதுக்கியதற்கு கோடி நன்றி!
தங்கை மகளுக்கு இன்னொரு தகப்பனாய் என் வாழ்க்கைக்கு ஆதாரமாய் விளங்கினீர் - நீர் எமக்கு செய்தவை எண்ணில் அடங்கா!
வாயார 'அம்மா' என்று அழைக்கும் அந்த பாசக் குரலையும், கம்பீர சிரிப்பை கேட்கவும், வாரா வாரம் கிடைக்கும் அந்த அன்பு முத்தமும் இனி நான் அழுது புரண்டாலும் கிட்டாது!
மடிமீது அமர்த்தி காது குத்தியது முதல், என் முதல் வாகன பூஜை வரை அனைத்தும் முன்னின்று செய்தீர்கள்.
என் நலத்தில் என்னைவிட அதிக அக்கறை கொள்வீர் - நீர் எமக்கு என்றுமே கடவுளின் அன்புப் பரிசு!

பள்ளிக்கு அடியெடுத்து வைக்கும் முதல்நாள் அரிசியில் 'அ' என எழுதி, என் கல்வி வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது தொடங்கி, நான் பல்கலைக்கழக பட்டம் பெறும் வரை எனக்கு தூண்டுகோலாய் விளங்கினீர் - எனது ஒவ்வொரு வெற்றிக்கும் தாங்களே முதன்மை காரணம்.

என் முதல் ஆசானாய், ஆலோசகராய், நண்பராய், நல்ல மனிதராய், எழுத்தாளராய், சிறந்த தலைவராய், சமுதாய நலன்விரும்பியாய் பல பரிணாமங்களில் திகழ்ந்தீர் - உங்களின் மறைவு நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூதாயத்திற்கே பேரிழப்பு!

இந்நேரம் சொர்க்கமும் தங்கள் வரவால் மகிழ்ந்திருக்கும்!
தாய் மாமன் எனும் உறவிற்கு தங்களைவிட வேறு எவராலும் பெருமை சேர்த்திருக்க முடியாது!

நீர் எமக்கு செய்த அனைத்திற்கும் நன்றி நவில வார்த்தைகள் போதாது மாமா.
எனது முதல் கவியையும் கண்ணீரையும் சமர்பிக்கின்றேன்!
நீர் எமக்கு தாய் மாமன் மட்டுமல்ல - தாயுமானவர்!

 - பா.பவித்ரா

(மலேசியாவில் பிறந்து வளர்ந்த பவித்ரா, அண்மையில் மறைந்த தாய்மாமனுக்காக எழுதிய தந்தையர் தின கவிதை. புகைப்படமும் அவர்களுடையதுதான்...)

Monday, June 12, 2017

மீனாவுடன் மிக்சர் 30 - தில்லாலங்கிடி மோகனாம்பாள்: ஒரு அலசல்

ரிச்மண்ட் நகருக்கு  எங்க குடும்பம் குடி வந்து இதோட பத்து வருஷம் ஆகப் போகுது.  ஒரு சராசரி NRI தமிழச்சி தன் வாழ்க்கையில் கொட்டற குப்பைக்கு எந்த விதத்துலயும்  குறையாம அதே இத்துப்போன  பக்கெட்ல நானும் கொட்டறேன்னு மிதப்பா நினைச்சிட்டிருந்த  என் வாழ்க்கைல நேத்து ஒரு ஆச்சரிய குறி போடும் புது அனுபவம்.

இது நாள் வரைக்கும் தமிழ்ச்சங்கம் தொகுத்து வழங்கியிருக்கும் பல கலை நிகழ்ச்சிகளை சமோசா டீ சகிதம் பல முறை ரசிச்சிருக்கேன் நான்.   சங்கீதம், நாட்டியம், பட்டிமன்றம் எல்லாம் எங்க ரிச்மண்ட் மக்களுக்கு தண்ணி பட்ட பாடு.  ஒரு சிலருக்கு இளையராஜா  ஒண்ணு விட்ட சித்தப்பா முறைனா பலருக்கு  தியாகராஜ ஸ்வாமிகள் வருஷா வருஷம் பொங்கலிட்டு தீ மிதிக்கும் குலதெய்வம்.  இது குயில் பறக்கும் ஊர் அப்படீன்னு  யாரைக் கேட்டாலும் உங்க தலைலயே நச்சுனு அடிச்சு சொல்லுவாங்க.

சரி பாட்டை விடுங்க. வீட்டுக்கு ஒரு மரம்  வளர்த்து நீங்க நிச்சயம் பாத்திருப்பீங்க.  ஆனா தெருவுக்கு ஒரு பெண் குழந்தையை நாட்டியப் பேரொளியாய் வளர்க்கும் ஊரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?  பரதம், குச்சிப்புடி,  கோலிவுட், ஹாலிவுட் அப்படீன்னு முழுசா நாங்க நாட்டிய சாஸ்த்திரத்தை  குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாளாச்சு.  பட்டிமன்றமா? ஹா! நாங்கள் வாய்ச்சொல்லிலும் வீரரடி. வீட்டுக்குள்ளயும் அடிச்சுக்குவோம் அப்புறம் டக்குனு குதிச்சு மேடை ஏறி ஊரறியவும் அடிச்சுக்குவோம்.  கூச்ச நாச்சமெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. சொற்போரில் எங்களை வெல்ல இன்னொரு பாப்பையா பிறந்து தான் வரணும்னு பரவலா ஒரு கருத்து இருப்பது உண்மை.

எதுக்கு இத்தனை பெரிய முகவுரைன்னு குழப்பமா இருக்கா?  ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம்னு சொன்ன அதே தமிழ் மரபு,  ஒரு பக்கப் பதிவை எழுத முடியாம முழி பிதுங்கி  தவிக்கும் ஒரு அப்பாவி தமிழ் பெண் (நாந்தேன்) நாற்பது வார்த்தையை கூட்டி எழுதினா கோவிச்சுக்கவா போறது?  சரி சரி, நீங்க நெற்றிக்கண்ணை மூடுங்க. விஷயத்துக்கு வந்துட்டேன்.

இந்தியாவிலிருந்து வந்து Y.G. மதுவந்தியின் தலைமையில் நடக்கும் மஹம் கலைக்குழு நேத்து சாயந்திரம் ரிச்மண்ட் இந்துக்  கோவிலில் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அப்படீன்னு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் போட்டு அசத்தினாங்க.  ரெண்டு மணி நேரம் சிரிப்பலையில் அந்த அரங்கமே ஆட்டம் கண்டு போச்சு.  வாய் விட்டு சிரிப்பது ஒரு வரம்.  ஒரு சில மணி நேரம் எல்லாக் கவலையையும் மறந்து ஒரு ஊரையே சிரிக்க வச்ச புண்ணியம் தில்லாலங்கிடி குழுவினருக்கு தான் சேரும்.

மேடை நாடகம் எப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான கலைன்னு நேத்து வரைக்கும் எனக்கு தெரிஞ்சதில்லை. நடிகர்கள் அவங்க வரிகளை மறந்தா இதுல  take 2 கிடையாது. பார்வையாளர்கள் டீ குடிக்கற ஜோர்ல ஜோக்கை கோட்டை விட்டாங்கன்னா நிறுத்தி அவங்களுக்கு மறுபடியும் எடுத்துச் சொல்ல pause பட்டனும் கிடையாது.  ஒவ்வொரு ஸீனுக்கு நடுவிலும் backdrop மாத்துவதிலிருந்து, லைட்ஸ் சவுண்ட் set பண்ணுவது வரை பல விதத்திலும் கடினமான கலையாக தெரியும் மேடை நாடகத்தை அசால்ட்டாக நேற்று செய்தனர் மஹம் கலைக்குழுவினர்.

சரி இவங்களாவது நாடகம் மேடை ஏத்தறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கன்னு சொல்லலாம்.  தினந்தோறும் கணினியோட வேலையில் மாரடிக்கும்  சில ரிச்மண்ட் வாசிகளும் இதில் பங்கேற்று மிக அருமையாக நடித்து பார்வையாளர்களை அசத்தியது தான் இன்னும் சிறப்பான அம்சம்.

இதுக்கு முன்னாடி வாயை குவித்து எத்தனையோ முறை விசிலடிக்க பாத்து தோத்து போயிருக்கிற  நான் நேத்து எங்க ஊர் ரிச்மண்ட் மக்களை நாடக மேடையில் பார்த்த சந்தோஷத்துல உணர்ச்சி வசப்பட்டு  ஊதிய வேகத்துல எனக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவரோட அழுந்த வாரிய தலைமுடி கலைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்.  அவர் திரும்பி பார்த்து முறைச்சதும் இனி இப்படி பாசப்பறவையை அடிக்கடி பறக்க விடமாட்டேன்னு அவருக்கு வாக்கு வேற கொடுத்திருக்கேன்.

மஹம் குழுவிற்கும், அவர்களை இங்கு வரவழைத்து 'தில்லாலங்கிடி மோகனாம்பாள்' நாடகத்தை எங்களுக்கு அளித்த ரிச்மண்ட் executive committee குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

- மீனா சங்கரன்