Sunday, June 17, 2012

செய்திகள் வாசிப்பது முரளி

செய்திகள் வாசிப்பதுன்னு எழுத ஆரம்பிச்சதும் அடுத்து என்ன சொல்றதுன்னு தெரியலை அதனால குன்சா ஏதோ போட்டிருக்கேன்.  என் சின்ன வயசுல ஆல் இந்தியா ரேடியோல ஒருத்தர் நியூஸ் படிப்பாங்க, கொஞ்சம் ஆம்பளை குரல்ல கர கரன்னு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஷ்வாமி'ன்னு சொல்லுவாங்க அது ஞாபகம் வந்தது, சரி அப்படியே சொல்லலாமேன்னு ஆரம்பிச்சேன்.  எந்த செய்தியைச் சொல்றதுன்னு யோசிச்சதும், சும்மா 4-5 விஷயம் டக்குன்னு மனசுல வந்துச்சு.  யாரும் என்னோடு போன பதிவுக்கு 'யோவ் நிறுத்துய்யா"ன்னு சொல்லலை, நாகு மட்டும் வழக்கம் போல வந்து கமெண்ட் போட்டுட்டு போயிட்டார் அதனால உங்க தலையெழுத்து நல்லா அனுபவியுங்க.  இந்தப் பய சும்மா இல்லாம் நம்மள இழுத்து விட்டுட்டானேன்னு தலைவர், மசலா டீன்னு ரேக்கி விட்டிருக்காரு.

தந்தையர் தினம்:
தினம் தினம் பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி (வாகூம் க்ளீனர் யூஸ் பண்ணியோ, துடைப்பம் யூஸ் பண்ணியோ), அப்பப்ப கார் கழுவி, புல் வெட்டி, கடை கடையா ஏறி இறங்கி (காஸ்ட்கோ, சாம்ஸ் க்ளப், வால் மார்ட்) பால், தயிர், எண்ணெய், அரிசி, காய்கறி, பழம் வாங்குவதிலிருந்து ஒரே ஒரு நாள் (அதுவும் 8 மணி நேரம்தான்) விடுதலை கிடைத்திருக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்.

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க அபார வெற்றி.
அதிமுக எதிர்பார்த்தது போல புதுக் கோட்டை இடைத் தேர்தல்ல சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று புரட்சித் தலைவியின் ஆட்சி பொன்னான ஆட்சின்னு மீண்டும் நிருபிச்சிருக்காங்க.  தாத்தா பாவம் என்ன செய்யரதுன்து தெரியாம, கலாம்ன்னா கலகம்னு மனசுல இருக்கர வெறுப்பை வெளில துப்பியிருக்கார்.  இப்போ கலாம் மைனாரிடின்னு தெரியலை, அதிகம் படிச்சவர்னு தெரியலை, தெளிவானவர்னு தெரியலை, நல்லவர்ன்னு தெரியலை அவர் பெயர்ல கலாம்ன்னா கலகம்ன்னு (எந்த புத்தகத்துல படிச்சாருன்னு தெரியலை) நல்லா உளர மட்டும் தெரிஞ்சிருக்கு.   கழகம் ன்னா சூதாடும் இடம்னு திருக்குறள்ல இருக்கரதா ஒருத்தர் எழுதியிருக்கார் இதையே சோவும் ஒரு தடவை சொன்னதா ஞ்யாபகம்.  அது பரவாயில்லை போல இருக்கு.  இவர் வாயை வெச்சுகிட்டு பொழப்பு கட்டர ஆளு, இப்ப இஸ்லாமிய இயக்கங்கள் இதை கண்டிக்க ஆரம்பிச்சுட்டாங்க, இது தீவிரமானா, இவரே "கலாம்ன்னா கலகத்தை தீர்ப்பவர்ன்னு ஒரு பொருள் இருக்குன்னு  நான் சொல்ல, ஆரிய பத்திரிகைகள் 5 முறை  தமிழகத்தை ஆண்ட நான் ஒரு தாழ்த்தப் பட்டவன் என்பதால், என் மார்பைச் சுற்றி அவர்களைப் போல ஒரு கயிரில்லாத காரணத்தால்,  என்னையையும் என் கண்களான இஸ்லாமியர்களையும் பிரித்தாள, பார்பன பண்டார பரதேசிகள் சேர்ந்து சொல்லாததைச் சொன்னதாக திரித்து சொல்வது என்னைப் போன்ற பகுத்தறிவு இயக்கத்தினர் நம்பாத அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்று, இதை நம் கழகக் கண்மணிகள் நன்கு உணர்ந்து எவ்விடர் வரினும் உங்கள் வாள்களும் வேல்களும், எந்தப் பகைவர்களையும் கொன்று குவிக்காமல் அமைதி காத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" ன்னு ஒரு சொற்பொழிவு கொடுத்தால் போச்சு.


துக்ளக்:
நான் விரும்பி படிக்கர ஒரு பத்திரிகை.  என்னோட பல நண்பர்கள் என்னைப் போலவே தொடர்ந்து படிக்கராங்க.  அதுலயும் கிறுக்கரவர் கண்டிப்பா படிச்சுடுவார்.  அவர்கிட்ட பேச ஆரம்பிச்சா அநேகமா முதல் 5-10 நிமிஷத்துல கேக்கர கேள்வி, "இந்த வார துக்ளக் படிச்சுட்டீங்களா, அதுலயும் இந்த ஆர்டிகில் படிச்சீங்களா, அதைப் பத்தி நீங்க எப்ப எழுதப் போறீங்க" இதுதான்.  சமீபத்தில துக்ளக் ஆசிரியர் சோவுக்கு உடம்பு சரியில்லாம போய் ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வந்திருக்கார் அதைப் பத்தி அவரோட நகைச்சுவை குறையாம இந்த வார துக்ளக்ல எழுதியிருக்காரு.  அதை நான் காபி எடுத்து போட்டாலோ, நானே திரும்ப டைப் பண்ணினாலோ அது காப் ரைட் லா படி தப்புன்னு நினைக்கிறேன்.  ஆனா, இட்லி வடைல இதப் போட்டிருக்காங்க.  அது இந்த லின்க்ல இருக்கு.

http://idlyvadai.blogspot.com/2012/06/blog-post_15.html


அடுத்த ஜனாதிபதி தேர்தல்
இந்தியால அடுத்த ஜனாதிபதியா யாரை கொண்டு வரலாம்னு குடுமி பிடி சண்டை நடக்குது.  ப்ரணாப் முகர்ஜியை காங்கிரஸ் இறக்கியிருக்கு, அப்துல் கலாம் கோதாவுக்கு இன்னும் வரலை.  இந்தியாவுல தன்னோட பெருமைக்கு ஏத்த பதவின்னா அது ஜனாதிபதி பதவிதான்னு சேஷன் கூட ஒரு தடவை நிக்க முயற்சி பண்ணினாருன்னு நினைக்கரேன்.  ஒரு வழியாக் ஊழல் சிரோன்மணி ப்ரதீபா பாடில் வெளில போய்ட்டாங்க, சொல்ல முடியாது ப்ரணாப் ஜனாதிபதிக்கு தான் இப்போ ரெடியில்லைன்னு சொல்லிட்டா அந்தம்மா திரும்ப வந்தாலும் வந்துடும்.

ப்ரணாப் - இவர் இந்திரா காந்தி காலத்துல இருந்து அரசியல்ல ஊழல் பழம் தின்னு, விதை நட்டு அது இப்போ வ்ருட்சமா வளர்ந்திருக்கரத பார்த்திட்டு இருக்கர ஆள்.  இவரப்பத்தி சொல்லனும்னா, பெங்காலிகள் நல்ல புத்திசாலிகள்(மீன் எண்ணெய்), அப்படி ஒரு புத்திசாலி திருடன் எப்படி இருப்பான்னு பார்த்தால் அது இவர் மாதிரிதான் இருப்பான்.  இவர் ஜனாதிபதியா வந்தா, எது நல்லா நடக்குதோ இல்லையோ, 'சிதம்பர' ரகசியம் நல்லா கப்பலேறும்ங்கரது நிச்சயம்.   அடுத்த முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வராதுன்னு நினைக்கிறேன், அப்படி நடந்துச்சுன்னா, இவர் அடுத்து வர்ர கட்சிக்கு குடைச்சல் திலகமா மாறிடுவாரு.  இவர் நாட்டாமை ஜாதி, இவர் ஜனாதிபதியாயிட்டா, நாட்டாமைக்கு இவரில்லாம, காங்கிரஸ் கொஞ்சம் தடுமாறும்ன்னு நினைக்கிறேன்.  பி.வி நரசிம்மராவ் ப்ரதமரா வரதுக்கு முன்னாடி இவரும் அந்த பதவிக்கு நல்லா முயற்சி பண்ணினாரு, கேசரி, குலோப் ஜாமூன்னு(குலாம் நபி ஆஸாட்)  பல பேர் வேலை பாத்து, ராவ் காருவை கொண்டு வந்துட்டாங்க.  இதுல பெரிய காமெடி,  இவர் ராவ் கிட்டயே அமைச்சராவும் வேலை பார்த்தாரு.  ஆனா நல்ல புத்திசாலி.  மன்மோகன் சிங்கும் நல்ல புத்திசாலிதான் என்னத்த கிழிச்சாருன்னு 'கிறுக்கலார்' கத்தறது காதுல விளுது.

கலாம்:  நல்லவர், படிச்சவர், நாட்டு மேல நல்ல பற்று வெச்சிருக்கரவர், படிப்பைப் பத்தி எந்த படாடோபமும் இல்லாதவர்.  இவர் ரெண்டாவது தடவையா ஜனாதிபதி ஆகியிருக்கனும், ஆனால் இவர் நல்லவரா இருக்கரது, ஊழல் மஹாராணி (இத்தாலி)க்கு பிடிக்கலை, தன்னைப் போல இன்னொரு ஊழல் கிழவியை கொண்டுவந்துட்டாங்க.

இவர் ரொம்ப நல்லவரா இருக்கரதுன்னால எப்போ எதைப் பத்தி பேசனும்னு தெரியாம சில சமயம் பேசிடராரு,  உளர்ரத தி.மு.க தலைமைக்கு மொத்த குத்தகைக்கு விட்டாச்சு, அதனால இவர் உளர்ராருன்னு சொல்லக்கூடாது.  சமயா சந்தர்ப்பம் தெரியாம எதையாவது சொல்லிடுவாரு.  உதாரணத்துக்கு ஒரு முறை இந்தியாவோட ராணுவ பலம் எப்படி பாகிஸ்தானை விட நல்லா இருக்குன்னு ஒரு மீட்டிங்கல சொல்லிட்டாரு, எப்படி அணு ஆயுத பரிசோதனையை இந்தியா செஞ்சுதுன்னு சொல்ல ஆரம்பிச்சு நல்ல வேளையா நடுவுல நிறுத்திட்டாரு.  இதுக்கு காரணம் இவர் ஒரு அரசியல்வாதி இல்லை, ஆனா, ஒரு பெரிய நிர்வாகத்துல இயக்குனரா இருந்தார் (இஸ்ரோ) எதை எங்க எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் யோசிச்சு சொல்லனும், இல்லை சொல்லித்தர சரியான ஆளுங்களை பக்கத்துல வெச்சுக்கனும்.  மிகப் பெரிய அறிவாளி, இவர் பல கண்டுபிடிப்புகளுக்கு உதவியா இருந்திருக்காரு.  முக்கியமா, போலியோ அட்டாக் ஆனவங்க மற்றும் செயற்கை கால் வெச்சிருக்கரவங்களுக்கு காலுக்கு கணமான இரும்புல ஒரு கால் கவசம் இல்லை கட்டை கால் வெச்சிருப்பாங்க அதை கனமில்லாத உறுதியான கட்டமைப்புல செய்ய வெச்சு அதை செயல் படுத்தினவர்.  இவர் மிகப் பெரியவர் இவர் இந்த பதவிக்கு கண்டிப்பா உரியவர் ஆனா, இவர் அரசியல்வாதியில்லை அதனால இந்தப் பதவிக்கு இவரால கண்டிப்பா காலம் காலமா பெருமைதான் ஆனால், இந்தப் பதவியினால இவருக்கு துளி கூட பெருமையோ, பலனோ இருக்காது.

ஒரு தடவை நான் வேலை பார்த்த ஒரு இடத்துல ஒரு டைரக்டர் வேலை காலியாச்சு அதுக்கு என்னோட நண்பர் ஒருத்தரை சிபாரிசு பண்ணினேன், அவர 5-6 தடவை இண்டர்வ்யூ பண்ணிட்டு அவங்க சொன்ன ஒரு வார்த்தை கேவலமா இருந்துச்சு, நீ சொன்ன அவர் ரொம்ப புத்திசாலி ஆனா அவரோட வேகம் நம்ம கம்பெனிக்கு ஒத்து வராது, இவர் அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு புத்திசாலித்தனம் இல்லை, அதனால இவரு சீக்கிரம் நம்ம வேலை புடிக்கலைன்னு ஓடிப் போயிடுவாரு, திரும்ப நாங்க இன்னொருத்தர வேலைக்கு எடுக்கனும், அதனால இவர் அளவுக்கு இல்லாம கொஞ்சம் சுமாரா ஒருத்தர நாங்க தேடரோம்ன்னு சொன்னாங்க.  இதுக்கு அப்புறம்  4 வருஷம் கழிச்சுதான் நான் அங்கேந்து கெளம்பினேன் அது வேற விஷயம்.  அது மாதிரி கலாம் ஜனாதிபதியாகிரத காங்கிரஸ் கண்டிப்பா ஆதரிக்காது, ஊழல்ல திளைச்சு இருக்கர தி.மு.க வும் விரும்பாது.

கருணாநிதி: இவர ஏன் ஜனாதிபதியாக்கக்கூடாதுன்னு சத்தியா எழுதரதா சொல்லியிருக்காரு அதனால நான் எழுதல.


நித்தி கைது
நித்தி கைது ஆகி ஜாமீன் வாங்கி திரும்ப கைதாகி திரும்ப ஜாமீன் வாங்கி இப்ப மதுரை ஆதீன மடத்துல இருக்கரதா செய்தி.  ரஞ்சிதா எங்க இருக்காங்கன்னு என்னை கேக்காதீங்க, அது எனக்குத் தெரியாது.  இவரை  கர்நாடகா உள்ள வர விடக் கூடாதுன்னு கர்நாடகாவுல நிறைய பேர் பேச ஆரம்பிச்சிருக்காங்க, இது எனக்குப் புரியலை,  இவர் மேல கேஸ் போட்டிருக்காங்க, கைது பண்ணினாங்க, தீர்ப்புல இவர் குத்தவாளின்னு வந்தா அப்போ இவரை  கர்நாடகாவுல வெச்சிருக்காகூடாதுன்னா என்ன பண்ணுவாங்க, தமிழ்நாட்டுக்கோ, மஹாராஷ்ட்டிராவுக்கோ நாடு கடத்தற மாதிரி மாநிலம் விட்டு மாநிலம் கடத்துவாங்களோ?  ஹைய் ஜாலி, அரசாங்க செலவுல நாலு ஜெயில் பாத்தா மாதிரியிருக்கும்.  ஆனா ஜெயில்ல போயி வாயை மூடிக்கிட்டு இருக்கனும்னு ஒரு ஆர்டர் போடனும், பாவம் அங்க இருக்கர மத்த கைதிங்க,  ஒரே சமயத்துல ஒரு தண்டனைதான் தரனும் இந்த ஆள் பினாத்தரதையெல்லாம் கேட்டு இன்னும் கொலவெறியாகி கூட இருக்கர சக கைதி, இல்லை போலீஸ்காரன்னு யாரையாவது போட்டு தள்ளிறப் போறாங்க.  மொதல்ல இந்த ஆளுக்கு ஒரு ரெபிடெக்ஸ் ஆங்கிலம் பேசுவது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்க, இந்த ஆளு ஆங்கிலம் சகிக்கல, இதுல நடுவுல அப்பப்ப கேணத்தனமா ஒரு சிரிப்பு வேற.

முரளி இராமச்சந்திரன்.

Monday, June 11, 2012

எச்சரிக்கை....

ரிச்மண்ட் வாழ் தமிழ் கூறும் நல்லுலகைச் சார்ந்தோரே, அன்பர்களே, நண்பர்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே, சிறுவர்களே, சிறுமிகளே, இளைஞர்களே, இளைஞிகளே, நல்லிளம் சிங்கங்காள், உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

யப்ப்ப்பா மூனு வரி சுத்தத் தமிழ்ல எழுதரதுக்கே நாக்கு தள்ளுதே, எப்படிதான் தமிழ்நாட்ல மூச்சு விடாம மணி கணக்குல பேசராங்கன்னு தெரியலை.  விஷயம் ரொம்ப பெரிசில்லைங்க, நம்ம சங்கத்துப் ப்ளாக் 'ஆளில்லாத டீ கடை மாதிரி கிடக்கு'ன்னு சொல்லி யாரும் எழுதவாங்களான்னு சங்கத் தலைவர் கேட்க, கிறுக்கரவர் கிட்ட கேட்டா அவர் "கொஞ்சம் பிஸினஸ்ல பிசி, அதனால மட்டும் இல்லை, நான் கிறுக்கி யார் படிக்கராங்க, அதனால என்னத்த கிறுக்கி என்னத்த மாத்த முடியும் சொல்லு"ன்னு பிட்டை என் பக்கமே திருப்பிட்டார்.

தலைவரே, எழுதலாம் திடீர்ன்னு அவர் ஏன் ஜகா வாங்கினாருன்னு தெரியலை.  நம்ம மு.கோ நல்லாத்தான் எழுதிகிட்டிருந்தாரு, டக்குன்னு ஊருக்கு போயிட்டாரு, அவர எழுதச் சொல்லி அரவிந்தன்கிட்ட சொல்லனும், அதை அவன் எழுதி வெச்சு அவருக்கு ஃபோன் பேசும் போது சொல்லனும், இப்டி ஆயிரம் உம் கொட்டினா எப்ப அது நடக்குமோ எல்லாம் அந்த ஶ்ரீரங்கம் பெருமாளுக்குத்தான் தெரியும். அட இன்னொரு உம்.

சதங்கா எப்ப அடுத்த பட்டுக்கோட்டையார் பதிவை போடுவார்ன்னு நான் கேக்கப் போக, நாகு "யோவ் தடயம் என்ன ஆச்சு"ன்னு என் தலையை உருட்டினா என்ன செய்யரதுன்னு அவரை விட்டுட்டேன்.

அடுத்து நாகு, ஜெயகாந்தன் ரெண்டு பேர்தான், நாகுவை வெளில வாசல்ல பாக்கவே முடியலை என்ன காரணம்னு தெரியலை, மீன் பிடிக்கராரோ, இல்லை விக் வெச்சுகிட்டு எங்க சுத்தராரோ தெரியலை, சரி ஜெயகாந்தனை பிடிக்கலாம்ன்னா நான் வேலை செய்யர அதே இடத்துலதான் அவரும் வேலை செய்யராரு, அவரை எப்படி பின்னி பெடலெடுத்துகிட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியும், (அவர பிடுங்கர பாதி பேர் எங்க குரூப் தான்), சரி எப்படியும் நம்ம மக்களுக்கு இந்த கோடை கொஞ்சம் சோதனையாத்தான் இருக்கப் போறது அதுல நாம எழுதினா என்ன திட்டவா போறாங்க, அப்படியே திட்டினாலும் நாம வீட்டுல வாசல்ல வாங்காத திட்டா சொல்லுங்க.  இதெல்லாம் எழுத்துத் துறைல ரொம்ப சாதாரணமப்பா!

அடுத்து எதைப் பத்தி எழுதலாம்னு ஒன்னும் தோணலை, சரி எதைப் பத்தி வேணும்னாலும் எழுதிடறதுன்னு யோசிச்சா ஒரு ஐடியாவும் கிடைக்கல, யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சு போயி அங்க இங்க நுனிப்புல் மேயும் போது நித்தியைப் பத்தி என் ப்ரெண்ட் ஃபேஸ் புக்ல ஒரு லிங்க் அனுப்பியிருந்தான், அது சூப்பர் காமெடி ஆக்டர் நித்தின்னு வந்திருக்கு.

இவர் அடிக்கர கூத்துக்கு முன்னாடி ஒரு கூத்தும் நிக்காது போல இருக்கு.

http://www.youtube.com/watch?v=wEFBQjCnFao&feature=endscreen&NR=1

இவர் பேசரத கேட்டதுக்கு அப்புறம் எப்படி இத்தனை பேர் இவர் பின்னாடி வராங்கன்னு தெரியலை. நல்லா ஒரு ஹெட் ஃபோன் காதுல மாட்டிகிட்டு, ரெண்டு சீட் தள்ளி ரஞ்சிதா வோட ஒரு பெரிய பேட்டியை கொடுக்கராரு.  இவர் பேசரது ஒரு காமெடின்னா, அந்தம்மா, சும்மா சொல்டி சொல்டி ஆங்கிலத்துல அடிக்கராங்க, அதுக்கு பின்னனியில கவுண்டர் டைலாக் ஓட்டரது சூப்பர்.


நித்தி மதுரை ஆதீனமா வந்தது சரியா தப்பான்னு ஒரு பட்டி மன்றம் போட்டு விவாதிக்கலாமான்னு தமிழ் சங்க சீனிவாசன் கிட்ட கேக்கனும்.   நல்ல தமாஷா இருக்கும்.  நேத்திக்கு அவரை அரெஸ்ட் பண்ண கர்நாடகா போலீஸ் தேடுதாம், இவர் தலைமறைவா இருக்காராம்.  இத்தனை நாள் டிவி, பேப்பர், பத்திரிகைன்னு போட்டோ வந்த ஒருத்தர் தமிழ்நாட்டுல தலைமறைவா இருக்காராம், இவரை போலீஸ் தேடுதாம், நல்லாத்தான் கதை வுடராங்க.

கிறுக்கரவர் கிட்ட நித்தியைப் பத்தி கேட்டேன். "ஏஏஏன் எவன் எப்படி போனா எனக்கு என்ன, ரிச்மண்ட் ஆளுங்க பல பேர் மதுரைதான் அவங்கள கேளு அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்" ன்னுட்டாரு.  அப்படியே, உங்க ஊர் பண்ருட்டிகாரர் என்ன சொல்றார்ன்னு கேக்கச் சொன்னாரு கேட்டுட்டேன்.

சென்னை வீட்டுக்கு ஃபோன் போட்டா, சென்னைல வெயில் மண்டைய ஒடைக்குதாம், இதுல ரெண்டு மணி நேரம் கரண்ட் கட்டாம், இல்லாத கரெண்டுக்கு ஏண்டா காசு வாங்கரீங்கன்னு பல பேர் கத்தராங்களாம்.  சரின்னு  நம்ம அண்ணாச்சிகளுக்கு ஃபோன் போட்டா, ஐ.பி.எல் ல சென்னை தோத்து போச்சு, காசு வாங்கிட்டு ஆடிட்டாங்கன்னு அவங்க ஆலாபனை, சென்னை எப்படிடா ஃபைனல்ஸ்க்கு வந்தாங்கன்னு கேக்கலாம்,  கேட்டா, "ஐ.பி.எல்லை பத்தி உனக்கு என்னடா தெரியும்"ன்னு அவங்க கேட்டா எனக்கு என்ன தெரியும் சொல்லுங்க.  எழுதரது ஒரு மாதிரி கோர்வையா வருதுல்ல, ஹூம்,  இதெல்லாம் ஒரு கதை நாடகம் எழுதும் போது வரமாட்டேங்குது.  


அடுத்து, ஜெவும் சசியும் சேர்ந்துட்டாங்கன்னு சங்கத் தலைவர் ரொம்ப கோபமா இருந்தாரு, இப்ப என்ன நிலைமைன்னு தெரியலை.  ராஜா வெளில வந்துட்டார், நேரு ஶ்ரீரங்கனுக்கு நேர்ந்து கிட்டு சமீபத்துல மொட்டை போட்டுட்டாராம்.  இந்தப் பகுத்தறிவுக்கு முன்னாடி யார் என்ன சொல்ல முடியும்னு தெரியலை.

நாளைக்கு ரிச்மண்ட்ல எலெக்‌ஷன், காலைல போய் ஓட்டு போட்டுட்டு வேலைக்கு போகனும். 10 K ரேஸ் ஓடும்போது ஒரு இந்திய இளைஞன் "நான் எரிக் காண்டருக்கு எதிரா தேர்தல்ல நிக்கப் போறேன்"னு சொன்னான், அவனை நம்பி அவன் நீட்டின ஒரு அட்டைல கையெழுத்து போட்டுட்டு வந்தேன், அவன் கதி என்ன ஆச்சுன்னு தெரியலை.

நம்மூர் லைப்ரரில புத்தக ஆய்வுன்னு ஒன்னு அடிக்கடி நடத்தராங்க, அதுமாதிரி தமிழ் சங்கத்து சார்புலயோ இல்லை தனியாவோ செஞ்சா என்ன?  நீங்க யாராவது ரெடின்னா, எனக்கு ஒரு இ-மெயில் அனுப்புங்க(rmurali@gmail.com).  புத்தகம்னு இல்லை, சினிமா, டிராமா எதுவா இருந்தாலும் பரவாயில்லை, அட சும்மா கூடி உக்காந்து அரட்டை அடிக்கலாமா சொல்லுங்க நான் ரெடி.

ஆமிர் கான் சமீபத்துல 'சத்ய மேவ ஜயதே'ன்னு ஒரு ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிச்சிருக்கார்,  அதை தமிழ்ல  விஜய் டிவி ல பார்க்காதீங்க, முடிஞ்சா யூ ட்யூப்ல யோ இல்லை Star TVலயோ பாருங்க, ஹிந்தில பார்த்தா ஒரு பாதிப்பு இருக்கத்தான் செய்யுது.  முதல் வார நிகழ்ச்சியை பார்க்க முடியலை அவ்வளவு கொடுமைக்கார கணவர்களை காமிச்சாங்க.  பார்த்ததுக்கு அப்புறம் கொஞ்சம் மனசு கனமா இருந்தாலும், நிச்சயம் பூனைக்கு மணியை நல்லாத்தான் கட்டறாரு.

இந்தப் பதிவை முடிக்கரதுக்கு முன்னாடி, புதுக்கோட்டை இடைத் தேர்தல்ல புரட்சித் தலைவியின் அ.இஅ.தி.மு.க அமோக வெற்றி பெற வாழ்த்தி, போட்டிக்கு வரதுக்கு முன்னாடியே, பயந்து போய் ஒடிவிட்ட தி.மு.க வின் தலைமைக்கு ஆறுதலைச் சொல்லி, ராசா ஒருவழியா ஜாமீன் கிடைச்சு வந்திருக்கார் அவர்கிட்ட வாங்க வேண்டிய பங்கையெல்லாம் வாங்கிட்டு அதையெல்லாம் மனைவி, துணைவி, ஒட்டினது, ஒட்டாதது, சேர்ந்தது, சேராததுன்னு எல்லாத்துக்கும் பங்கு போட்டு கொடுத்துட்டு உளியின் ஓசை மாதிரி ரம்பத்தின் ரீங்காரம்னு ஒரு டப்பா கதை எழுத கிழவரை வாழ்த்திவிட்டு அடுத்த முறை சந்திக்கிறேன்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, May 03, 2012

குறளா? குறளையா?








சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ஆண்டாளுடைய திருப்பாவையில் இரண்டாவது பாசுரத்தின் பொருள் பற்றிய சந்தேகத்தை என்னிடம் கேட்டார்.

மார்கழி மாதம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நோன்பு பற்றி பாடுகிறாள். திருப்பாவையின் முதற் பாடலில் மார்கழி மாதம் பிறந்து விட்டதைப் பற்றியும் அந்த மாதத்தில் நோன்பு இருந்து திருமாலை வேண்டி பெற விருக்கும் செல்வங்கள் பற்றியும் பாடுகிறாள். இரண்டாவது பாடலில் நோன்பு இருக்கும் முறை பற்றி பாடுகிறாள்.


“பாற்கடலில் துயில் கொண்டுள்ள திருமாலின் பெருமையைப் பாடி
நெய்யுண்ணோம்பாலுண்ணோம்,   நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்."

(திருப்பாவை பாசுரம் எண். 2)

என்று பாடுகிறார். ஆண்டாள் இந்த பாசுரத்தில் திருக்குறளைத்தானே குறிப்பிடுகிறார் என்று கேட்டார்.

இதே கேள்வியை சில மாதங்களுக்கு முன் வேறொரு நண்பரும் கேட்டார். அவர்களுடைய ஐயம் நியாயமானதுதான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு பொறுப்புள்ள தமிழ் அறிஞர் ஆண்டாள் திருக்குறளைத்தான் குறிப்பிடுகிறார் என்று எழுதியிருந்த கட்டுரையை படித்தேன். அவர் எழுதியது அறியாமையில் அல்ல.தவறான நோக்கத்தோடு பாட்டின் பொருளை புரட்டி எழுதியிருக்கிறார். அவர்களைத் திருத்த முயற்சி செய்வது  நம்  நோக்கம் அல்ல. அந்த முயற்சி நம்முடைய நேரம் வீணாவதில்தான் முடியும்

நண்பர்களின் ஐயத்தை போக்க வேண்டிய கடமைக்கு திரும்புவோம்.ஆண்டாள் தீக்குறளை என்று இங்கே கூறுவதை புறங்கூறல் என்ற தீய குணத்தை என்று பொருள் கொள்ள வேண்டும். ஒருவர் இல்லாதபோது அவர் பற்றி ஒருவர் தெரிவித்த கருத்துகளை அவரிடமே போய் சொல்வதை குறளை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இங்கே குறள்- அல்ல. குறளை என்பது ஒரு தனிச் சொல்

கோள் என்று சாதாரண மக்கள் மத்தியில் வழக்கில் உள்ள சொல் இலக்கியத்தில் குறளை என்று  குறிப்பிடப்படுகிறது. தமிழில் கோள் என்ற சொல்லுக்கு நட்சத்திரம் என்றும் ஒரு பொருள்   உண்டுசென்று ஓதோம் என்ற பாடல் அடியை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்.   அப்படியானால் இந்த குறளை என்ற சொல் இலக்கியத்தில் கோள் என்ற பொருளில் கையாளப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டினால் சந்தேகம் முழுமையாக விலகும்.

மணிமேகலை சங்க காலத்துக்கு பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல். அந்த நூல் ஆசிரியர் சீத்தலை சாத்தனார் ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். மணிமேகலை முழுவதும் பௌத்த மதப் பிரச்சாரம் மேலோங்கி நிற்கும். அந்த நூலில் ஆசிரியர், மனிதன் சொல், செயல், மனத்தால் செய்யும் பத்து குற்றங்களைப் பட்டியல் இடுகிறார்.

கொலை, களவு, காமத்தால் மனிதன் மூன்று குற்றங்களை உடலால் செய்கிறான். பொய்குறளை, (புறம் கூறல் ) கடுஞ்சொல்பயனில்லா சொல் பேசுதல் ஆகிய நான்கு குற்றங்களை சொல்லால் செய்கிறான். பொறாமை, கோபம்பிறருக்கு தீங்கு நினைத்தல், ஆகிய மூன்று குற்றங்களை மனத்தால் செய்கிறான் என்று பட்டியல் இடுகிறார்.

கொலையே, களவே, காமத்தீ விழைவு,
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்,
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்.
வெக்கல், வெகுளல், பொல்லாக் காட்சி என்று
உள்ளம் தன்னில் உதிப்பான மூன்றும் பத்தும் குற்றம்

(மணிமேகலை)

ஆக ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர்கள் குறளை என்ற சொல்லை பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். காலப் போக்கில் குறளை என்ற சொல் வழக்கொழிந்து போய்விட்டிருக்கிறது. அதே பொருளை குறிக்கும் வேறு சொல் வழக்கில் இருக்கலாம். வைணவர்கள் மற்ற சமய இலக்கியங்களை பரந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்கள் என்று சொல்வதற்கில்லை. பல வைணவ சமயப் பிரச்சாரகர்கள் தவறிக் கூட பிற சமய இலக்கியங்களை மேற்கோளாகக் கூட சொல்ல மாட்டார்கள். சைவ சமயப் பிரச்சாரகர்களும் அப்படியே. சில தனித் தமிழ் இயக்கப் பேச்சாளர்கள் பாரதியின் பெயரைக் கூட சொல்லமாட்டர்கள். அது தமிழ்நாட்டை பிடித்த நோய்.

ஆனால் ஆண்டாள் அந்த குற்றத்தைச் செய்ததாக சொல்வது சரியல்ல. வைணவ உரை ஆசிரியர்கள் வள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பெருமையோடுகுறிப்பிட்டிருக்கிறார்கள்.என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சைவ சமயமும் இப்பொழுது வள்ளுவரை தன் பக்கம் ஏற்றுக் கொண்டு விட்டது. இடைக் காலத்தில் சில நூற்றாண்டுகள் நிலவிய சமயக் காழ்ப்பு உணர்ச்சி இந்த நூற்றாண்டில் இல்லை என்று சொல்ல வேண்டும். திருக்குறளை உரையுடன் மலிவுப் பதிப்பு வெளியிடும் நல்ல காரியத்தையும் சில சைவ மடங்கள் செய்து வருகின்றன.

நீண்ட வரலாறு கொண்ட எந்த மொழியிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். இந்த வகையில் வழக்கிழந்த சொற்கள் காலப் போக்கில் திரும்பவும்  மாறுபட்ட பொருளில் வழங்கப்படுவதும் உண்டுதமிழ் மொழி வளமான மொழி. சொல்வளமும்பொருள்வளமும் மிக்க மொழி. பரந்த நிலப்பரப்பில்பல்வேறு இயற்கைச் சூழலில் வாழும் மக்கள் பேசும் மொழி. ஒரே பொருளை குறிக்க பல சொற்களைக் கொண்டு இயங்கும் மொழி தமிழ்நாட்டில் வடபகுதியில் வழக்கில் இருக்கும் சில சொற்களுக்கு தென் மாவட்ட மக்களுக்கு பொருள் தெரியாமல் போகக் கூடும். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வழக்கில் இருக்கும் வட்டாரச் சொற்களும் உண்டு. எல்லைப் புற மாவட்டங்களில் வழக்கில் இருக்கும் சில சொற்களின் மீது மற்ற மொழிகளின் செல்வாக்கு இருக்கும்.

கிராமங்களில் வாழும் விவசாயிகள் தானியங்களை அளக்க பயன்படுத்தும் அளவைகள் கூட மாவட்டத்துக்குமாவட்டம் வேறுபாடும். சென்னையில் மெதுவாக என்று சொல்வதை மதுரை மாவட்டத்தில் பைய்ய என்று கூறுவார்கள். பைய்ய என்ற சொல் இலக்கியத்திலும் பயின்று வருவதைப் பார்க்கலாம்.

"பைய்யவே சென்று பாண்டியர்க்கு ஆகவே"

என்று ஞானசம்பந்தருடைய தேவாரம் கூறும்.

தேவாரம் என்றவுடன் இங்கே இன்னொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும்தேவாரம் என்றவுடன் சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்புதான் நம் நினைவுக்கு வரும்ஆனால் கடந்த காலத்தில் இந்த சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உண்டு. மன்னர்கள் அரண்மனையில் தங்களுடைய தினசரி வழிபாட்டுக்காக கட்டிக் கொள்ளும் சிறிய கோயிலை தேவாரம் என்ற சொல்லால் குறிப்பிட்டார்கள்.

இந்த வகையில் ஒரு சொல் காலப் போக்கில் வழக்கொழிந்துபிறகு அதே சொல் வேறு பொருளைக் குறிப்பதாக அமைவதும் உண்டு. இன்று நாற்றம் என்ற சொல்லை துர்நாற்றத்தைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்துகிறோம். ஆனால் சங்க காலத்திலும் பிற்காலத்திலும், அந்த சொல்லை பூவின் வாசனை உட்பட எல்லா நறுமணங்களையும் குறிப்பிட பயன்படுத்தியிருக்கிறார்கள் தூக்கி எறிய வேண்டிய பயனற்ற பொருள்களின் குவியலை குப்பை என்ற சொல்லால் இன்று நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் பழங்காலத்தில் முன்னோர்கள் குவித்து வைக்கப்பட்ட எல்லா செல்வத்தையும்தானியங்களையும் குப்பை என்றே குறிப்பிட்டார்கள். நெல் குவித்து வைக்கப்பட்டால் அது நெற்குப்பை. வளமான வயல்களைக் கொண்ட ஊர்களுக்கு நெற்குப்பை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இரண்டு பொருள் தரும் சொற்களும் தமிழில் அதிகம் உண்டு. இந்த வகை சொற்களைக் கொண்டு நகைச்சுவையோடு பாடல்களைப் பாடிய புலவர்கள் பலர் உண்டு. அத்தகைய புலவர்களில் காளமேகப் புலவர் முக்கியமானவர். தமிழில் பல பொருள்களை குறிப்பிடும் சொற்களும் உண்டு. சொல்லை  பயன்படுத்தியிருக்கும் இடத்துக்கு தக்கபடி பொருள் கொள்ள வேண்டும். உதாரணமாக வண்ணம் என்ற சொல்லை குறிப்பிடலாம்.அந்த சொல்லை பயன்படுத்தி ஒரு அற்புதமான கவிதையை கம்பர் கொடுத்திருக்கிறார். அந்த கவிதையை சற்று ரசிக்கலாம்.

கௌசிக முனிவருடைய மனைவி அகலிகை மீது இந்திரனுக்கு தீராத மோகம். ஒரு நள்ளிரவில் முனிவருடைய ஆசிரமத்துக்கு அருகில் வந்து சேவல் போல குரல் கொடுக்கிறான். இந்திரன். முனிவர் பொழுது விடிந்து விட்டதாக நினைத்து எழுந்து குளிப்பதற்காக நதிக்கரைக்கு போகிறார். அந்த நேரத்தில் இந்திரன் முனிவருடைய உருவத்தில் உள்ளே நுழைந்து அகலிகையை அடைந்து விடுகிறான். நதிக் கரையை நெருங்கிய பிறகு இன்னும் விடியவில்லை என்பதை உணர்ந்த கௌசிக முனிவர் ஆசிரமத்துக்கு திரும்புகிறார். உள்ளே நுழைந்தவர் இந்திரனையும் தன் மனைவி அகலிகையையும் அலங்கோலமான நிலையில் பார்த்து விடுகிறார். உடனே கோபத்தில் முனிவர் இந்திரனுக்கு சாபம் கொடுக்கிறார். அகலிகையை கல்லாகப் போகும்படி சாபம் கொடுக்கிறார். தன்னை அறியாமல் தவறு செய்து விட்ட அகலிகைக்கு சாப விமோசனமும் கொடுக்கிறார். பிற்காலத்தில் ஒரு மகாபுருஷனுடைய கால்பட்டு சாபம் நீங்கி மனித உருவம் பெறுவாள்  என்பதுதான் அந்த சாப விமோசனம்.

தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அயோத்தியிலிருந்து ராமனையும், இலக்குவனையும் அழைத்து வந்த விசுவாமித்திரர் அவர்களுடைய பாதுகாப்பில் யாகத்தை வெற்றிகரமாக முடிக்கிறார். தாடகையை வாதம் செய்து யாகத்தை பாதுகாத்த ராம இலக்குவனோடுவிசுவாமித்திரர் காட்டில் நடக்கிறார். வரும் வழியில் ராமனுடைய கால் பட்ட ஒரு கல்லிலிருந்து ஒரு பெண் உருவம் தோன்றுகிறது. எழுந்த அந்த பெண் ராமனை வணங்கி நிற்கிறாள். ராமன் திகைத்துப் போய் நிற்கிறான். கௌசிக முனிவரின் சாபத்தையும் முந்தைய விவரங்களையும் அறிந்த விசுவாமித்திரர் ராமனிடம் எல்லாவற்றையும் விளக்கமாக கூறுகிறார்.

இதுதான் கம்பராமாயணத்தில் அகலிகைப் படலத்தின் சுருக்கம். தொடக்க காலத்திலிருந்து எல்லாவற்றையும் கூறிய பிறகு முத்தாய்ப்பாக விசுவாமித்திரர் கூறியதாக அமைந்த கடைசிப் பாடலை சற்று பார்ப்போம்.

"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணமன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில்மழை வண்ணத்து அண்ணலே, உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்கால் வண்ணம் இங்குக் கண்டேன்."

வண்ணம் என்றால் முறை, நிறம், திறமை என்று பலபொருள் உண்டு. இந்த பொருளை பொருத்தி கவிதையை திரும்பப் படியுங்கள். இதுதான் கம்பன் தமிழ். இப்படி எத்தனையோ பாடல்கள் உண்டு.


மு.கோபாலகிருஷ்ணன்.