Sunday, February 05, 2012

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சாமி

படித்தவர், பண்டிதர், பொருளாதார வல்லுநர், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசியராக இருந்தவர். IIT டெல்லியில் பொருளாதாரப் பேராசிரியர். கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ என்று குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்த சந்திர சேகரின் மந்திரி சபையில் அமைச்சர். இவரது நல்ல பக்கம் இவையே. இவை அனைத்தும் சிறந்த சாதனைகள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஆனால், இவரைப் பற்றிக் கேட்டல் உடன் ஞாபகம் வருவது, கலங்கிய குட்டையில் மீன் பிடித்துக் குளிர் காயும் இவரது தான் தோன்றித் தனமான செயல்பாடுகள் தான்.

2G வழக்கில் ராஜாவைக் கைது செய்யும் வரை இவர் புத்திசாலி. அதில் இவரது பங்கை மறுக்க முடியாது. ஆனால் சிதம்பரத்தைக் கைது செய்ய வைக்க முயன்று இன்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் வெட்கப் பட மாட்டார், இன்னும் ஏதாவது குழப்பங்களை எங்காவது செய்து கொண்டு காலத்தை ஒட்டி விடுவார் இந்த புத்தியுள்ள மடையர்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரைப் பகைத்துக்கொண்டு நீதி மன்றத்தின் முன்பு சேரிப் பெண்களின் ஆபாச நடனத்தில் அவமானப் பட்டவர். முகத்தில் அமிலம் வீசியது ஜெயலலிதாவின் உத்தரவில்தான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய சந்திர லேகாவுடன் சேர்ந்து கோமாளிக் கட்சி ஒன்றை ஆரம்பித்து கொஞ்ச நாள் ஓட்டினார். கருணாநிதியோடு மேடையில் ஏறி விட்டு அவர் ஒரு சிறந்த தலைவர் என்று கூச்சம் இல்லாமல் பாராட்டினார்.

பின்பு அதே ஜெயலலிதாவுடன் சேர்ந்து கொண்டு சோனியா காந்தியின் உதவியோடு வாஜ்பாயின் ஆட்சியைக் கவிழ்த்து நாரதர் கலக்கம் செய்தார்.

ராமதாஸ் போன்றவர்கள் கட்சி மாறினாலோ, ஆட்சியைக் கவிழ்த்தாலோ நாம் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் புத்திசாலி என்ற போர்வையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத வெறும் குழப்ப அரசியலில் ஈடு பட்டு கோமாளிகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் இவரைப் போல புத்திசாலி முட்டாள்கள்தான் நம் நாட்டின் சாபக் கேடு.

Thursday, February 02, 2012

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

வழக்கமாக உபயோகத்தில் இல்லாத சில பழமொழிகள்

சில வித்தியாசமான பழமொழிகளை கிராமங்களில் கேட்கலாம், அல்லது பழைய பாரதிராஜா படங்களைப் பார்க்கும்போது கேட்கலாம். கேட்ட பலரும் இவற்றை விரும்பியதுண்டு, அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

"என் ராசிக்கு ஆயிரங்கால் மண்டபம் கட்டி ஆண்டாலும் வெயிலுதானே அடிக்கும்" - தொடர்ந்து வரும் ஏமாற்றங்களில் சலித்துக்கொள்ள உதவும். அலுவலகத்தில் உத்தியோக உயர்வு கிடைக்காத பொது, இதைக் கூறி சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

"அங்கயும் இருப்பான் இங்கயும் இருப்பான், திங்கிற சொத்துல பங்கும் கேட்பான்" - ஒரு வேலையும் செய்யாமல் வெட்டியாக இருக்கும் நபர்களைக் கரித்துக் கொட்ட உபயோகிக்கும் சொல். நமது ஒய்வு பெற மறுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல பழமொழி.

"அரிசின்னு அள்ள விட மாட்டேங்கிற, உமின்னு ஊத விட மாட்டேங்கிற" - எது கேட்டாலும் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். நமது அலுவலக மேலாளர்களுக்கு சிறந்த பழமொழி.

"எமனுக்கு வாக்கப் பட்டா எரும மாட்ட மேச்சு தானே ஆகணும்" - வழியில்லாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது அலுத்துக் கொள்ளளலாம். (உதாரணம் - பயிற்சி - நீங்களே சொல்லுங்கள்?)

"நெல்லுக்குப் போறது புல்லுக்கும் போகட்டும்" - ஒரு இடத்தில நடக்கும் விஷயம் திட்டம் இடாமல் இன்னொரு விஷயத்திற்கும் உதவும்போது சொல்லல்லாம். அடுத்தவரின் வெற்றியில் குளிர் காணும் நபர்களுக்கு நல்ல உதாரணம்.

"கூரையில சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா" - ஒன்ன நம்பி நா இல்லன்னு சவால் விடறதுக்கு உபயோகிக்கும் பழமொழி. நம் கிரிக்கெட் வீரர்கள் டீம்ல இருந்து தூக்கிட்டாலும் IPL இருக்குனு ஒரு தெனாவட்டுல இருக்கிறது ஒரு உதாரணம். இன்னொரு வேலை வாங்கி விட்டு மேலாளரிடம் இதைச் சொல்லி சவாலும் விடலாம்.

"நீ அரிசி கொண்டு வா, நா உமி கொண்டு வாரேன், கலந்து ரெண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம்" - ஒரு முதலீடும் செய்யாமல் அடுத்தவரின் முதலீட்டில் சுகம் காணும் நபர்களுக்குக் கூறப்படும் சொல். கூட்டணிக் கட்சிகளின் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு சீட்டு கொடுக்காமல் நாமம் சாத்தும் அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும் சொல். (இதயத்தில் இடம் இருக்கிறது?)

"மகன் செத்தாலும் பரவாயில்ல, மருமக தாலி அறுக்கணும்" - எனக்கு ரெண்டு கண் போனாலும், பரவாயில்ல, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணுங்கிற ஒரு ஆவேசம்

Tuesday, January 31, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 2



சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?


பளார்னு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது இவ்வரிகளைப் படித்தபோது !!! இன்றுவரை என்ன‌த்த‌ ப‌ண்ணிதான் கிழிச்சோம் நாமெல்லாம் !!! அர‌சிய‌ல்வாதியாக‌ட்டும், திரைத்துறையின‌ராக‌ட்டும், எத்தொழில் செய்ப‌வ‌ராக‌ட்டும், அட‌ சாதார‌ண‌ ச‌க‌ ம‌னித‌னாக‌ட்டும் ...

நல்வழி, மூதுரை, ராமாயணம், மகாபாரதம் இப்படி எண்ணற்ற இதிகாசங்களை வழிவழியாகப் படித்தோம், படித்துக் கொண்டு வருகிறோம். எல்லாம் படித்தும், இன்னும் சூதும் வாதும், ஏச்சும் பேச்சும் வளர்ந்து வந்திருக்கின்றனவே அன்றி குறைந்ததாய் தெரியவில்லை. இன்றைய கார்ப்பரேட் உலக வாழ்வு ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணம். அரசியல்வாதிங்க எல்லாம் இவங்க மேசையில தூசு. மேலதிகார வர்க்கத்தின் அரவணைப்பிருந்தால் டீ பாய் கூட குறுகிய காலத்தில் பீப்பாய் ஆகிடலாம். 'சர்வைவல் ஆஃப் தெ ஃபிட்டஸ்ட்'னு இதற்கு சால்ஜாப்பு வேறு. 'உண்மைக‌ளைப் ப‌டித்து வாழ‌முடியுமா ? என்ன‌ங்க‌ நீங்க‌ இன்னும் அந்த‌க் கால‌த்து ஆளு மாதிரி இருந்துகிட்டு (அதற்குள் நம‌க்கு 50 - 60 அக‌வை தந்த தமிழ்சங்க பிரசிடென்ட் ஐயாவுக்கு நன்றிகள் :)) 'ப‌டிச்சோமா, முடிச்சோமா, அடுத்து எவ‌ன‌டா க‌வுக்க‌லாம்னு பாப்பீங்க‌ளா, அத‌ விட்டுட்டு' என்று தான் இருக்கிற‌து இன்றைய‌ உல‌க‌ம். பட்டுக்கோட்டையார் அன்றைக்கு (அநேக‌மா 40 - 50 ஆண்டுக‌ளுக்கு முன்) எழுதிய மேற்கண்ட பாடலில் உலகம் இன்றும் துளியும் மாற‌வில்லை என்ப‌து எவ்வ‌ள‌வு நித‌ர்ச‌ன‌ம்.

வளர்ந்த(தாக நினைக்கும்) ஜென்மங்களிடம் சொல்லி என்ன‌ பிர‌யோஜ‌னம்? 'ஐந்தில் வ‌ளையாத‌து ஐம்பதிலா வ‌ளையும்?!' நாளைய உலகம் யாருடைய‌ கையில்? இன்றைய சிறுவர்கள் தானே நாளைய உலகினர். நாம் அடிப்பதும், திட்டுவதும், சாப்பிடாத பிள்ளையைப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டுவதும் தானே செய்கிறோம். அல்லது இதற்கு நேர்மாறாக, எதுகேட்டாலும் வாங்கித் தந்து, செல்லம் கொடுத்து அவர்களைப் பிஞ்சிலேயே சிதைக்கிறோம். சிறுவர்களைப் பற்றி பட்டுக்கோட்டையாரின் சிந்தனையே வேறாக இருந்தது. எடுத்தார் பேனாவை, தெளித்தார் க‌ன‌லை.


சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா!
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா நீ எண்ணிப் பாரடா!( சின்னப்பயலே)

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி! (2)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ
தரும் மகிழ்ச்சி! (2)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி - உன்
நரம்போடு தான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி! --- (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா - தம்பி
மனதில் வையடா!
வளர்ந்து வரும் உலகத்துக்கே - நீ
வலது கையடா - நீ
வலது கையடா!

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா! (தனிமையுடமை)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா - எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு (வேப்பமர)
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை (வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே! நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே! நீ
வெம்பி விடாதே!

(திரைப்படம் : அரசிளங்குமரி 1958)

ஒரே பாடலில், அறிவு, காலம், பொதுவுடைமை, மூட ந‌ம்பிக்கை என மிகத் தெளிவாகச் சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதி, 'மனிதனாக வாழ்' எனப் பிஞ்சிலேயே விதைத்தான் அன்றே.

பொதுவா ஒரு பாடல் பற்றி எழுத நினைத்தால், மிகச் சிறந்ததாக நாம் நினைக்கும் சில வரிகளை மட்டும் கோடிட்டு, போல்ட் ஃபான்ட் போட்டு காண்பிப்போம். மற்றொன்று படிக்கிறவருக்கு போரடிக்காம இருக்கணும் என்றும் எண்ணுவோம். அப்படி இப்பாடலில் சிலவரிகளை மட்டும் சிறப்பானது எனப் பிரித்து எடுக்க முடியவில்லை. மாறாக, இப்பாடல் வரிகள் முழுதுமே நம்மைச் சிந்திக்க வைக்கிறது, வைக்கும். ஒவ்வொரு வரியும் சாட்டையாடியாய் நம்மேல் விழும் வரிகள். இப்பாடலின் ஒருசில வரிகள் என் தனித் தளத்தில் (தாய்க் கட்சியில் இருந்து பிரிந்துவிடவில்லை என நாகுவுக்கு நினைவு'படுத்துகிறேன்') முதன்மை வாக்கியங்களாக போட்டுக் கொண்டதில் பெருமை கொள்கிறேன்.

'அவ‌ன‌ நிறுத்த‌ச் சொல்லு நான் நிறுத்த‌றேன்' என்ற‌ புக‌ழ் பெற்ற‌ ந‌கைச்சுவைக் காட்சி நாமெல்லாம் திரைவ‌ழி அறிந்த‌தே. எல்லாவ‌ற்றையும் கூர்ந்து நோக்கின், எல்லாம் எங்கேயோ இருந்தே எடுக்கப்படுகிறது. கீதையின் சாராம்சம் போல, 'நேற்று உன்னுடைய‌து இன்று என்னுடைய‌து' என்று ஆகிவிட்ட‌து. இதுவே, நாளை மற்றொருவ‌ருடைய‌து ஆக‌லாம். பட்டுக்கோட்டையாரின் கீழ்வரும் பாடலில் இருந்து கூட மேற்சொன்ன நகைச்சுவை காட்சி பிறந்திருக்கலாம். திருடுவ‌தும், திருடும் கூட்ட‌மும், அதனைத் தடுக்கப் பாடுபடும் ச‌ட்ட‌மும், முடிவில் திருட‌னாய் ஆகிவிடாதே, அதுவே திருட்டை ஒழிக்கும் ந‌ல்ல‌ செய‌ல் என்றும் சிறுபிள்ளைக்குப் புரியும் வ‌ண்ண‌ம் எளிய‌ த‌மிழில் நல்வழி த‌ந்த‌மை ப‌ட்டுக்கோட்டையாரின் வ‌ல்ல‌மை. அத‌னைப் புரிந்து அத‌ன்வ‌ழி ந‌ட‌க்காத‌து இன்றைய மனித குலத்தின் பேராசை அன்றி வேறேது ?!


திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (2)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது (2)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஓழிக்க முடியாது (2)
திருடாதே ... பாப்பா திருடாதே ...
(திரைப்படம் : திருடாதே 1961)

ஐந்து பைசா திருடினாலும் திருட்டு தான் (உபயம்: அன்னியன் திரைப்ப‌ட‌ம்), ப‌ல்லாயிர‌ம் கோடி திருடினாலும் திருட்டு தான் (உப‌ய‌ம்: 2ஜி ஸ்பெக்ட்ர‌ம் குழுவின‌ர்). முன்ன‌தில் மாட்டுவோர் முட்டிக்கு முட்டி தட்டப்பட்டு நாலைந்து மாதங்களுக்கு நடமாட முடியாமல் தவிப்பர். பின்ன‌தில் மாட்டினோர் நாலைந்து மாத‌ங்களில் ப‌ல‌த்த‌ வ‌ர‌வேற்பிற்குப் பிற‌கு க‌ட்சியில் முக்கிய‌ அந்த‌ஸ்த்தைப் பெறுவ‌ர். 'ப‌ட்டுக்கோட்டை பாப்பாவுக்குத் தான‌ சொன்னாரு, ந‌ம‌க்கு எங்கே சொன்னாரு' என்ற‌ல்லவா இப்படிக் கூட்டங்கள் அலைகிற‌து.

எவ்வளவு சீக்கிரம் தூங்கினாலும் மறுநாள் காலையில் அடிக்கும் அலாரத்தையும் மீறி, தூக்கம் வரும் பாருங்க. அட அட ... அசத்தாலா அப்படியே அமுக்கிப் போடும் நம்மை. ஆனாலும் தொடர முடியாத நிலை. இன்றைய கார்ப்பரேட் உலகில் இதற்கும் நாம் பழகிக்கொண்டோம். சட்டுபுட்டுனு எழுந்தோமா, வண்டிய மிதிச்சு, அல்லது முன்னாடிப் போறவன மிதிச்சு, அடிச்சுப் பிடிச்சு அலுவலகம் ஓடறோமானு இருக்கிறோம். இந்த ஆழ்ந்த தூக்கத்தை அன்றி, அன்றைக்கு திண்ணை தூங்கிப் பசங்களுக்காகவே நிறைய பாடல் பாடியிருக்கிறார் பட்டுக்கோட்டையார். அவற்றை இனிவரும் பதிவுகளில் எழுத எண்ணம். அது சார்ந்த ஒரு பாடல், கீழ்வரும் வரிகளில் பார்ப்போம். இப்பாடலில் வ‌ரும் முத‌ல் வ‌ரி பின்னாளின் மிக‌ப் பிர‌ப‌ல‌ம் அடைந்த‌வை. திரைப்ப‌ட‌த்தின் பெய‌ராக‌வும் வைக்க‌ப்ப‌ட்ட‌து. இது த‌ம்பிக்கு பாடிய‌ பாட்டு. என்ன‌ருமைத் த‌ம்பி தூங்கிக் கிட‌ந்து சோம்பேறி எனும் ப‌ட்ட‌ம் வாங்கிவிடாதே, விழித்தெழு என்று உசுப்பேற்றும் பாட‌ல்.

அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார் (2)
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன் போல்
குறட்டை விடடோரெல்லாம் கோட்டை விட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் - உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(திரைப்படம் : நாடோடி மன்னன் 1958)

பாப்பாவிடம் ஆரம்பித்து, சின்ன பயலுக்கு சேதி சொல்லி, தம்பிக்கு அறிவுறைத்து என இவை எல்லாம் நாம் சிறுவர்களாய் இருந்த‌ வயதில் கேட்டு வந்த பாடல்கள் தான். பட்டுக்கோட்டையாரின் வரிகளிலேயே, 'பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்பது போல, வளர்ந்த பின் நம் குணம் முற்றிலும் மாறி, படிச்சதெல்லாம் ம‌றந்து போச்சு. படிச்சு என்னத்த கிழிச்சோம். நாடும் நாமளும் மோசமா போய்கிட்டே தான் இருக்கோம் !!!


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...



Sunday, January 29, 2012

ஆன்மீகச் சொற்பொழிவுகள்

ராதே ராதே


கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) என்ற தொண்டு நிறுவனமும், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பக்தர்களால் நடத்தப் பட்டு வரும் மதுரமுரளி-சைதன்ய மஹா ப்ரபு நாம பிக்க்ஷா கேந்ரா (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்களால் அமெரிக்காவின் பல பகுதிகளில் சொற்பொழிவுகளை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ பூர்ணிமா ஜி அவர்கள் நமது ரிச்மண்ட் நகரில் தங்கி வரும் பிப்ரவரி மாதம், 3, 4 மற்றும் 5 தேதிகளில் சொற்பொழிவாற்ற இருக்கிறார். சொற்பொழிவு நிகழ்ச்சி விவரங்கள்:


Universal Aspects of Hinduism
On Friday, 2/3/2012 5:30 pm – 7:30 pm @ UVA, Charlottesville, VA

Glory of Mahamantra
On Saturday, 2/4/2012 6:00 pm – 7:30 pm @ Residence of a devotee at Broadmoor Apartments, Richmond, VA
Blissful Path to Everlasting Bliss
On Sunday, 2/5/2012 - 3:00 pm - 5:00 pm
@ Hindu Center of Virginia, 6051, Springfield Road, Glen Allen, VA [Directions]


மேலும் விவரம் வேண்டுவோர் மாலதி முரளியை (804) 747-7997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது gbyes@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://godivinity.org/ என்ற வலைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.

Radhe Radhe


Non profit organization Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) of California, joins hands with a non profit organization madhuramurali - Chaithanya Maha Prabhu Naama Bhiksha Kendra of Chennai (http://www.madhuramurali.org/) (www.namadwaar.org) run by the followers of Sri Sri Muralidhara Swamiji in bringing spiritual speaker Sri Poornima Ji who is giving Discourses at various places in USA. Sri Poornima Ji will be staying in Richmond and giving lectures on February 3rd, 4th and 5th. Schedules of these lectures are given above. Please inform your friends, relatives, associations you are all part of to spread this news and attend these lectures and get benefited.

If you require further details on the satsang schedules, please contact Malathi Murali @ (804) 747-7997 or send an email to gbyes@yahoo.com or visit http://godivinity.org/.


ராதே ராதே

சங்கத் தமிழ் மூன்றும் தா!

மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்கள் கலாசார, மொழி பாரம்பரியங்களை போற்றிக் காப்பது என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். இங்கு ரிச்மண்டில் எனக்கு  இலங்கை, மலேசியா, சிங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் கயானா நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது என்னை மூக்கில் விரல் வைக்க வைப்பார்கள். உதாரணமாக எனது மலேசிய நண்பர் சேகரின் மூலம்தான் 'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும்' என்ற பழமொழியின் அர்த்தம் தெரிந்தது.  ஆமை புகுந்தால் வீட்டுக்கென்ன ஆகும்? அந்த ஆமை வெறும் ஆமையல்ல. பொறாமை!

கயானா நண்பர்களின் வீட்டு பஜனைக் கூட்டத்தில் அவர்கள் வாசித்த டன்டால்  எனும் கருவியின் பிண்ணனியும் சுவாரசியமானது. கரும்புத் தோட்டத்து மாட்டு வண்டியின் அச்சை இசைக்கருவியாக பயன்படுத்தி தங்கள் கலாசாரத்தை காத்திருக்கிறார்கள்.

இன்னும் இது போல பல சொல்லிக் கொண்டு போகலாம். இன்றைய நிகழ்வுக்கு வருகிறேன்.  நேற்று  ஒரு நண்பரின் மகளின் நிச்சயதார்த்தத்துக்கு போய்விட்டு அதற்குப் பிறகு எங்கள் மலேசிய நண்பர்களின் வீட்டுக்குப் போய் ஓய்வாகக் கதை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் அன்றாடம்  தமிழ் மிகக் குறைவாகப் பேசும் சராசரி இந்தியத் தமிழகக் குடும்பங்கள் போன்ற குடும்பம்தான் இவர்களும் :-).  பேச்சு நமது பழக்கவழக்கங்களில் இருந்து பிரார்த்தனை, பூஜை, பாடல்கள் என்று போய்க் கொண்டிருந்தது. சிறு வயதில் கற்ற இறைவாழ்த்து பாடல்கள் பல இருந்தும் நிறைய மறந்துவிட்டது என்று  இரண்டு மலேசியக் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்.  இன்னும் எதெல்லாம் நினைவிருக்கிறது என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டு இல்லத்தரசி தன் இனிய குரலில் ஒரு பாடலைப் பாடி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

இந்தப் பாடல் சத்தியமாக எனக்குத் தெரியாது.  தமிழகத்தில் வளர்ந்த எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  சற்று இந்தப் பாடலைப் பார்ப்போம். ஔவையின் நல்வழியில் வரும் கடவுள் வாழ்த்து இது.


பிள்ளையாரிடம் முத்தமிழ் அறிவைக் கேட்பது போல் அமைந்திருக்கிறது இப்பாடல். ஆனால் அவருடைய பதிவில் இப்பாடலுக்கு  மேலும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்கிறார் சுந்தர வடிவேல்.

*நண்பரின் வேண்டுகோளுக்கிணங்கி அவரது வீடியோவை நீக்கிவிட்டேன்.