Monday, November 09, 2009

படம் பாரு கடி கேளு - 41


டேய் விடுடா சங்கிலிய. நான் "Dog Show" க்கு எல்லாம் வரமுடியாது. அதுக்கெல்லாம் வேற ஆள பாரு. நீ சங்கிலிய விடலே, அப்படியே கடிச்சு கொதறிடுவேன் ஜாக்கிரதை!

Friday, November 06, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு --2

ஏ தமிழனே, நம் பாரதி சொன்னது போல " ரௌத்திரம் பழகு" தமிழையும், தமிழை சாடுபவரையும் விட்டு வைக்காதே.

புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது வழக்கம். அது பொங்கினால் மிக உத்தமம். அது போல செயலர் " தமிழ் தளபதி" ஜெய காந்தன் பொங்கினார், ஆனால் அரிசி உலை கொதி நீர் போல அவர் மறுமொழியில் பொங்கி அடங்கினார். பொங்கியதற்கு நன்றி, ஆனால் அடங்குவது முறை அல்ல.

தமிழ் தலைவர் முரளியும் தன பங்கிற்கு தீபாவளி விழாவினை தமிழில் செய்து காட்டி, பெரியவர்கள் தான் பேசுவது இல்லை, குழந்தைகள் எல்லாம் மிக்க ஆர்வத்துடன் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி பெற்றோர்களின் பங்கு குறைவு என்று ஒரு நெற்றியடி கொடுத்து உள்ளார். அன்பான பெற்றோர்களே நீங்கள் தான் அவர்க்கு பதிலடி கொடுக்க வேண்டும்.

"தமிழ் கோ" முத்துவோ இந்த வம்பு தமிழுக்கோ என்று ஒதுங்கி உள்ளார்.
"தமிழ் பேரரசு " பரதேசியும் குழந்தைகளுக்காக ஆங்கிலம் பேசலாம் என்று ஆமோதித்து இருக்கிறார். அனால் சங்கத்தின் தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகள் பேசிய தமிழ் பெரிவர்களிடம் இல்லையே என்று நிருபித்து விட்டனர்.

மிக்சர் மீனாவோ இதனை இன்முகம் காட்டி வரவேற்று உள்ளார்.
டோண்டு வோ, சங்கங்களில் ஆங்கிலம் பேசுவதற்கு காரணம் பெரியாரும், பார்ப்பனர்களும் என்று மரபு திரிந்து வழ்க்கமான அரசியல்வாதியை காரணம் காட்டி புறமுதுகு காட்டி உள்ளது.

நம் வம்போ அது நல்லதா, கெட்டதாஎன்று ஆராய்வது அல்ல. அதனை எப்படி செயல் படுத்துவது என்று தான். அன்பான தமிழனே, நீ உண்மையான தமிழனாக இருந்தால் உண்மையை உணர்வாயாக. அமெரிக்காவில் அதிகம் பேசும் மொழி எது தெரியுமா? ஆங்கிலம் அல்ல என்பது உண்மை. ஸ்பானிஷ் (மெக்சிகோவின் மொழி) என்பது தான் உண்மை. ஏன் தெரியுமா? அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, அவர்களிடம் வேலை வாங்குவதற்கு அமெரிக்கர்கள் ஸ்பானிஷ் கற்று கொள்கிறார்கள். இதே நிலைமை தான் சீன மொழி மற்றும் ஜப்பான் மொழி பேசும் மக்களிடமும் .

உன்னிடம் பணிவு உண்டு, திறமை உண்டு, ஆனால் விட்டு கொடுக்கும் பங்கும் உண்டு. அதனால் தமிழை விட்டு கொடுக்காதே. உன் திறமையை அறிய இந்த உலகம் உன் மொழியை கற்கும என்று இறுமாப்பு கொள். இந்த உலகம் உன் திறமையின் காலடியில். பரங்கியனை பாடாதே. வஞ்சகம் பேசாதே. உன்னால் ஒருவன் மேன்மை அடைகிறான் என்றால் அவன் தமிழன் என்றால் மட்டும் பெருமை கொள்.

நாரதனின் கலகம் இன்னும் ஆரம்பமாக வில்லை.

வேதாந்தி

எங்கள் ஊரில் தீபாவளி

பட்டாசு வெடிக்காத குறை தான், தமிழ் சங்கம் அசத்தி விட்டது. சங்கத்தின் முதல்வரின் முன்னுரை ஒரு கலைஞரின் முன்னுரை போல் இருந்தது. குறள் சொல்லிய குழந்தைகள், பாரதி பாடிய பாப்பா, தீபாவளி பற்றி சொன்ன இளம் சிறார்கள், இவை தான் சிறுவர் பங்கு என்றால் மிகை ஆகாது.

மேடையில் குறள் சொல்லும் குழந்தையை பார்த்து, பார்வையாளர்களை தங்கள் பிள்ளைகளை அவசரமாக ஒரு குறள் சொல்லி கொடுக்கும் நிலையையும் கண்டோம். இதனை பெற்றோர்களின் பேரார்வம் என்பதா அல்லது தமிழ் பற்று என்பதா ?இது அல்லவோ புரட்சி. தமிழ் சங்கத்தின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

இதனையும் மீறி மேடையில் மாறி, மாறி கையை ஆட்டி, கண்களில் கண்ணீர் மாரியுடன், " சூ சூ மாரி " என்று ஒரு இரயில் ஒட்டிய லதாவும், குழந்தைகளும் பார்த்த அனைவரும் தங்கள் கண்களின் ஆனந்த கண்ணீருடன் இருந்தனர் என்பதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

மூன்று இளம் அறிவிப்பாளர்களின் தமிழ் மிக்க அருமை. அவர்களின் உச்சரிப்பு மற்றும் பாராட்டுகளின் ஏற்ற இறக்கங்கள் மிதவும் நேர்த்தி அக இருந்தது. ஆங்கிலத்தில் எழுதி வாசித்தனர் என்று சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டர்கள். அதிலும் ஸ்வேதாவின் தமிழ் தாய் வாழ்த்து மிக்க அருமை. பிரசு என்று சொல்லி அதனை பரிசு என்று திருத்தியது மட்டும் அல்லாமல், மன்னிக்க வேண்டும் என்று கேட்ட அங்கிதாவின் தமிழ் மரபினை பாராட்டியே ஆக வேண்டும்.

சலாம் பாபுவும், முரட்டு காளையும் எல்லோரையும் ஆட வைத்து விட்டது.
மு. கோபால் அய்யா பாரதிக்கும், அவ்வைக்கும் ஒரு பாலமே கட்டி விட்டார். மிக அருமை மற்றும் புதுமை. நடராஜ மூர்த்தியும் கம்பனை கண் முன் நிறுத்தி விட்டார் என்றால் மிகை ஆகாதது.

மிக்க அருமையான கொண்டாட்டம். லக்ஷ்மியின் தனி ஆவர்த்தனுமும், செயலர் ஜெயகாந்தனின் நன்றி அறிவுப்பும் மிக எளிமையாக இருந்தது.
இவ்வளவு அருமைகள் இருந்தும், உங்களின் தமிழ் வகுப்பு ஆசிரியர்களை அறிமுகபடுத்த வில்லை என்ற குறை ஒன்றும் இருந்தது.

Saturday, October 31, 2009

படம் பாரு கடி கேளு - 40


சார், இந்த பழம் லேசா அழுகினா மாதிரி இருக்கு அதிலிருந்து நல்லதா குடுங்க. முடியாதுன்னா சொல்லுங்க நான் பிக்கிற விதத்தில் பிச்சுக்குவேன்.

Saturday, October 24, 2009

தமிழ் சங்கத்தில் ஆங்கிலமா? - ஒரு வம்பு

ஜெயகாந்தனின் "திருக்குறள் காவ்யா" பதிவு படித்ததும் நம் தமிழ் சங்கங்களை வம்புக்கு இழுக்கலாம் என்று தோன்றியது. அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு கிடைத்த பதில்கள் இங்கு மாதிரிக்கு:

அப்ப தான் எல்லோருக்கும் புரிகிறது.
புரிகின்ற மொழியில் பேசுவது ஒன்றும் தப்பு இல்லை.
தமிழர்களை தவிர மற்றவர்களும் வரலாம் இல்லையா?
நமக்கே தமிழ் ஒன்னும் வர மாட்டேங்குது ?
தமிழ் வளர்ப்பதற்கு ஒன்றும் வர வில்லை.
இதை நான் விமர்சிப்பதற்குள் உங்களின் விமர்சனங்களையும் கேட்க விரும்புகிறேன்.
வேதாந்தி

Sunday, October 18, 2009

படம் பாரு கடி கேளு - 39



அட என்னய்யா அநியாயம் இது! இந்த பன்றி காய்ச்சல் வந்தாலும் வந்தது நமக்கும் இதை மாட்டி விட்டுட்டாங்க. ஒரு வார்த்தை பேச முடியலே! ஒண்ணு திங்க முடியலே!

புலவர் புலம்பல்

சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரை தமிழ்நாட்டு வரலாற்றில் மாறாத ஒன்று உண்டென்றால் அதுதான் புலவர்கள் வறுமை. எவ்வளவோ மாற்றங்களும் தமிழ் படித்து தமிழுக்காக வாழ்ந்தவர்களுக்கு நிலையான செல்வ வாழ்வை கொடுத்ததில்லை.

இந்த காலத்தில் கொஞ்சம் மாறி இருக்கலாம். திரைப்படப் பாடல் எழுதி ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் வாங்கும் கவிஞர்களும் உண்டு. படம் வெளிவந்தும் எழுதிய பாட்டுக்கு பணம் வாங்கத் தயாரிப்பாளர்களிடம் நடையாய் நடக்கும் கவிஞர்களும் உண்டு.

தான் எழுதியதாகச் சொல்லி பாண்டிய மன்னனிடம் கொடுத்த பாடலுக்கு ஆயிரம் பொன் பரிசாக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தான் தருமி என்ற புலவன். அவையில் இருந்த நக்கீரர் பாடலில் பொருள் குற்றம் கண்டவுடன் நம்பிக்கை இழந்த தருமி பட்ட பாட்டை திருவிளையாடல் படத்தில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்போது பட்ட வேதனையை நாகேஷ் அந்த படத்தில் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

நாகேஷுடைய தோற்றமும் உடல் அமைப்பும் தமிழ்ப்புலவர் கதாபாத்திரத்திற்கு தகுந்த முறையில் அமைந்திருக்கும்.
பிற்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பாடு மேலும் மோசமானது. பதவியில் இருக்கும் அரசர்களை பாடிமனம் குளிரச்செய்து
அவர்களிடம் பரிசு பெற்று வாழ்வதுதான் வாழ்வு என்று சுருங்கிபோனார்கள். அதற்காக போர்க்களத்தையே பார்க்காதவனை போரில் அர்ஜுனன் என்றும், கொடுக்க மனம் இல்லாதவனை பாரிவள்ளல் என்றும் பாடி நாட்களை ஓட்டும் போலி வாழ்க்கை பல புலவர்களுக்கு தலைவிதியானது.

இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் குழப்பம் நிலவியது. பல புலவர்கள் ஆதரிப்பார் இல்லாமல் வறுமையில் வாடினார்கள். ஏன் தமிழ் படித்தோம் என்ற வேதனையில் வாழ்ந்தார்கள். இப்படி வேதனைப்பட்ட ஒரு புலவர் காரிகை கற்று கவி பாடுவதிலும் பேரிகை கொட்டி பிழைப்பது நன்றே என்று பாடினார்.

காரிகை என்பது செய்யுள் இலக்கணத்தை விளக்கிச்சொல்லும் யாப்பருங்கலக்கரிகை என்ற நூல். சுருக்கமாக காரிகை என்கிறார் புலவர். ஊருக்கு அறிவிக்க வேண்டிய செய்திகளை தண்டோரா போட்டு சொல்வது அன்றைய வழக்கம். தோலால் செய்யப்பட்ட அந்த கருவியை பேரிகை என்றும் தமுக்கு என்றும் சொல்வதுண்டு.

சுப்ரதீபக்கவிராயர் ஒரு நல்ல கவிஞர். தனக்கு ஆதரவு கொடுத்த குறுநில மன்னரை மகிழ்ச்சியில் குளிப்பாட்ட அவர் பாடிய "விறலிவிடு தூது" என்ற நூல் மிகவும் பிரசித்தம். இன்றைய சினிமாக்களில் வரும் மசாலா பாடல்களுக்கு சவால் விடும் வகையில் எழுதியிருக்கிறார் .என்ன செய்வது? எப்படியாவது பிழைப்பை நடத்த வேண்டுமே. அதற்காகத்தான்.

தமிழ்நாட்டில் சமயப்பிரச்சாரம் செய்ய வந்த கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்து வாழ்க்கையை கழித்தார் கவிராயர். எப்படி வாழ்ந்தாலும் தமிழ்தான் கதி என்று பிடிவாதமாக தமிழை படித்து தமிழுக்காக வாழ்ந்தவர்கள் உண்டு. உ.வே. .சாமிநாதய்யர் அந்த பட்டியலில் இடம் பெற்றவர் . அவர் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலப் படிப்புக்கும் அரசாங்க வேலைக்கும் வாய்ப்பு கொஞ்சம் கிடைக்கத் தொடங்கிய காலம். அவருடைய தந்தை ஜமீன்தார் ஆதரவில் வாழ்ந்த சங்கீத வித்வான். அவருடைய இளைய சகோதரர், சாமிநாதய்யரின் சித்தப்பா, கதையோடு கலந்த சங்கீதம் பாடி பிழைப்பு நடத்தியவர்.

உ.வே சாவின் தந்தைக்கு ஜமீன்தார் தானமாக கொடுத்தநிலம் ஒரு வானம் பார்த்த பூமி. நிலத்திலிருந்து நிரந்தரமான வருமானம் கிடையாது. அந்த ஜமீந்தாரருக்கும் கஷ்டகாலம். தன்னுடைய தேவைக்காக அய்யருக்கு தானமாக கொடுத்த நிலத்தை அவருக்கே தெரியாமல் விற்றுவிட்டார்.

எல்லாம் போய்விட்டது. ஆகையால் மகன் சாமிநாதனை ஆங்கிலம் படிக்க வைத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப முயன்றார். அவருடைய சகோதரர் தம்பி மகன் சாமிநாதனை தனக்கு பின்பாட்டு பாடசங்கீதம் கற்க அழைத்தார். சாமிநாதன் சங்கீதமும் வேண்டாம், ஆங்கிலப்படிப்பும் வேண்டாம், தமிழ்தான் படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தான்.

அவருடைய விருப்பப்படியே மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தார். திருவாவடுதுறையில் இளைஞன் சாமிநாதனுக்கு அக்கிரகாரத்தில் அப்பாசாமி அய்யர் வீட்டில் சாப்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது .

சில மாதங்கள் கழித்து ஆசிரியருடன் ஊரை விட்டு வேறு ஊருக்கு போக வேண்டியதாயிற்று. அப்பொழுதுதான் பல மாதங்கள் உணவு அளித்த அப்பாசாமி அய்யருக்கு ஒப்புக்கொண்ட படி பணம் போய் சேரவில்லை என்ற விஷயம் சாமிநாதனுக்கு தெரியவந்தது . இளைஞனுக்கு சொல்லமுடியாத சங்கடம். ஊரை விட்டு போகுமுன் சாப்பாட்டு கடனை எப்படியாவது தீர்க்க முயன்றார் .

உபனயனகாலத்தில் அவருடைய மாமா செய்து போட்ட வெள்ளி அரைஞான்கயிறு அவருடைய நினைவுக்கு வந்தது. விற்று காசாக்க வேறு எந்த பொருளும் அவரிடம் இல்லை. அரைஞான் கயிற்றை விற்று அப்பாசாமி அய்யருடைய கணக்கை தீர்க்கப் போனான் சாமிநாதன். விஷயம் அறிந்த அப்பாசாமி அய்யர் பணம் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.
"நீ ஊருக்கு பத்திரமாக போய்ச் சேர், பணத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று சாமிநாதனை வழி அனுப்பி வைத்தார் அந்த பெரியவர்.

தமிழ் படித்து ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலத்திலும் சாமிநாதய்யர் வளமாக வாழ்ந்ததாக சொல்லமுடியாது. ஓலைச்சுவடிகளை தேடி ஊர் ஊராகச் சென்றார். தேடல் முயற்சியில் பயணத்துக்கும் இதர வகையிலும் பெரிய தொகையை செலவு செய்ய நேர்ந்தது.

பிற்காலத்தில் எழுதிய புத்தகத்தை அச்சில் பதிப்பித்து வெளியிட நிதி வசதி இல்லாமல் அவதிப்பட்டார். அவர் தயாரித்த சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட்டு புத்தகமாக வெளியிட கையில் பணம் இல்லை.

1896 அண்டு பாண்டிதுரை தேவர் அய்யரை கெளரவம் செய்ய ஒரு விலை உயர்ந்த பொன்னாடையை அவருக்கு போர்த்தினார். அந்த பொன்னாடையை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு புத்தகம் அச்சிட சாமிநாதய்யர் முடிவு செய்தார்.

சுப்ரமன்யதேசிகர் என்ற சைவசமய பெரியவர் விஷயம் அறிந்து அய்யர் பொன்னாடையை விற்பதை தடுக்க முயன்றார்.
கௌரவப்படுத்த அளித்த பொன்னாடையை விற்பதை பாண்டிதுரை தேவருக்கு தெரிந்தால் அவர் மனம் வருந்துவார் என்று கூறி அதை தடுத்தார். அவரே தற்காலியமாக நிதி உதவி ஏற்பாடு செய்தார். அதனால்தான் அய்யரை பாரதியார் வாழ்த்தி பாடும்போது

"நிதி அறியோம் இவ்வுலகத்து ஒரு கோடி இன்பவகை நித்தம் துய்த்தறியோம்"

என்று வருந்த வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். தமிழுக்காக வாழவந்த உனக்கு உலக இன்பங்களைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியாது என்றார் பாரதி. மாறாகத் தமிழ் மொழியின் வரலாற்றில் உனக்கு நிரந்தரமான, பெருமை மிக்க இடம் கிடக்கும் என்று வாழ்த்தினார்.

பொதியமலை பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய்அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே

என்று பாடினார். கடுமையான வறுமையிலும் தன்னம்பிக்கை குறையாமல் பிடிவாதம் தளராமல் வாழ்ந்த புலவர்கள் உண்டு. தன்னுடைய புலமையையும் நிலையையும் எண்ணி பெருமிதம் கொண்ட கவிஞர்களுமுண்டு. இல்லையென்றால்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் வானோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

என்று பாடி இருக்கமுடியுமா ? வேறு சில புலவர்கள் வருமையின்கொடுமை யால் தாங்கள் விதியை நொந்து பாடியது உண்டு. அப்போதுகூட தம் மொழியின் வளமையை காட்டும்வகையில் பாடி இருக்கிறார்கள். தங்கள் வேதனையை சொல்லி நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு புலவர் நடனம் ஆட கற்காமல், கழைக்கூத்தாட கற்காமல், செப்பிடுவித்தை கற்காமல், பிழைப்புக்காக தமிழை படித்தோமே என்று தன் வேதனையை வெளிப்படுத்துகிறார். அவர் அதோடு நிறுத்தவில்லை. அழகான பெண்ணாக பிறக்காமல் போனோமே என்கிறார். இன்னும் சற்று மேலே போய் வேறு ஏதாவது கேவலமான தொழில் செய்யப்போகாமல் தமிழைப் படித்தோமே என்று புலவர் புலம்பித் தீர்த்து விடுகிறார்.

பாட்டைப் பாருங்கள். புலவருக்காக நீங்கள் அனுதாபப்படுவதோடு நிச்சயமாக சிரிக்கவும் செய்வீர்கள். புலவர் நோக்கமும் உங்களை சிரிக்க வைப்பதுதான் .

அடகெடுவாய் பலதொழிலும் இருக்க கல்வி
அதிகமென்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல்
திடமுள மோகனமாடக் கழைக்கூத்தாடச்
செப்பிடு வித்தைகளாட தெரிந்தோமில்லை
தடமுலை வேசையராய்ப் பிறந்தோமில்லை
கனியான தமிழைவிட்டுத் தையலார்தம்
இடமிருந்து தூது சென்று பிழைத்தோமில்லை
என்ன சென்மமெடுத்துலகில் இருக்கின்றோமோ !!

தனக்கு வாழ்வு கொடுக்க தவறிவிட்ட தமிழ் மீது அவருக்கு உண்மையில் வெறுப்பு எதுவும் இல்லை. இருந்தால் "கனியான தமிழை விட்டு" என்று புலவர் பாடுவாரா?

மு.கோபாலகிருஷ்ணன்

Wednesday, October 14, 2009

மீனாவுடன் மிக்சர் - 13 {கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்}

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான விஷயம்: நான்கு மாதம் முன்பு வெள்ளைவீட்டு சட்ட சபையில் காங்கரெஸ் ஆசீர்வதித்த ஒரு புது மனுவின் படி பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, துணி தோய்ப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்கு அயல் நாட்டிலிருந்து வேலையாட்களை கூப்பிட்டு கொண்டு வரலாம். இந்த மனுவிற்கு அமெரிக்காவில் வந்து குடிபுகுந்துள்ள இந்திய மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

மைதிலி: இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு விமானம் வந்து இறங்க. சீக்கிரமா வாங்க. க்யூவுல முதல் இடம் கிடைச்சா தானே நம்பள யாராவது தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு? ஆமாம் அந்த ஏஜன்சி பேரு என்ன சொன்னீங்க?

செந்தில்: சபீனா ஸர்ப் சர்வதேச ஏஜென்சி. இவங்க இந்தியாவோட எல்லா மாநிலத்திலையும் நல்லா அலசி வீட்டு வேலைக்கு ஆட்கள் திரட்டி நேர்முகத்தேர்வேல்லாம் பண்ணி இப்போ அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டு வராங்களாம். வேலையாட்கள் ப்ளேன்ல வந்து இறங்கினப்பரம் ஏர்போர்ட்ல அந்த காலத்து சுயம்வரம் போல ஏதோ நடக்குமாம். வேலையாட்கள் எல்லா குடும்பங்களையும் நல்லா அலசி பல கேள்விகள் கேட்டு அவங்களுக்கு பிடிச்ச ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுப்பாங்களாம் . நம்பள தேர்ந்தெடுத்தாங்கன்னா ஏஜன்சி கிட்டே கையெழுத்து போட்டுட்டு நம்ம அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு வேலைக்கு ஆளை அழைச்சுகிட்டு போக சொல்லியிருக்காங்க.

மைதிலி: புண்ணியவான்கள் அந்த ஏஜன்சிகாரங்க. கடவுள் கடாக்ஷம் என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு. மனசு குளிர்ந்து சொல்லறேங்க.

செந்தில்: சரி சரி போதும் வா. ரொம்ப குளிர்ந்தா ஜன்னி வந்திட போகுது. விட்டா சபீனா ஸர்ப் ஏஜென்சி பெயர்ல Trust Fund ஆரம்பிச்சு ஏழை பாழைங்களுக்கு தர்ம காரியங்களே பண்ணுவ போல இருக்கே.

மைதிலி: நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? போன வாரம் ஜிம்முல நாலு பேர் என்னை மடக்கி 'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

செந்தில்: ஆமாம், கிளம்பறத்துக்கு முன்னாடி பூஜை அறைல அவ்வளவு நேரம் கண்ணை மூடி என்ன தான் வேண்டிகிட்ட?

மைதிலி: வேறென்ன, யாராவது ஒரு வேலயாளுக்காவது நம்ம குடும்பத்தை பிடிக்கணுமேன்னு கவலை எனக்கு. நம்மளை யாராவது தேர்வு செய்தாங்கன்னா இன்னிக்கு சாயந்திரமே Concord முருகன் கோவிலுக்கு வந்து பதினோரு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன். அந்த முருகன் மேல தான் பாரத்தை போட்டிருக்கேன். வேலும் மயிலும் தான் நமக்கு துணை.

செந்தில்: விட்டா நீ ஏர்போர்ட்ல உட்கார்ந்து கந்த சஷ்டி கவசமே பாடிடுவ. நீ கொஞ்சம் நேரம் இந்த பேனரை தூக்கிண்டு வரியா? எனக்கு கை வலிக்கறது. பொணம் கணம் கணக்கறது இது.

மைதிலி: அபசகுனமா இப்படி அச்சுபிச்சுன்னு பேசாதீங்க. அந்த பேனரை இப்படி என்கிட்டே குடுங்க. __________________அய்யய்யோ முக்கியமானதை எழுத விட்டுட்டீங்களே? நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. இதுல காணுமே. என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே!

செந்தில்: உனக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல? நான் வேணும்னா இனிமே பாத்திரம் தேய்க்கிறேன். எனக்கு Benz வாங்கி கொடு முதல்ல. சரி சரி பேசினது போதும் வா. நல்ல காலம் க்யூவில் ரொம்ப பேர் இல்லை. வீட்டை விட்டு சீக்கிரம் கிளம்பினது நல்லதா போச்சு.

(தொடரும்)

-----------------

இது போல் நிஜமாவே வருங்காலத்தில் நடக்குமா? நீங்க என்ன நினைக்கறீங்க?

-மீனா சங்கரன்

Tuesday, October 13, 2009

பித்தனின் கிறுக்கல்கள் – 36

நோபல் பரிசு

சமீபத்தில் உலக சமாதான நோபல் பரிசு வழங்கியதில் என்ன லாஜிக்? அவருக்கு அதைப் பெறுவதற்கு தகுதி உண்டா? அவர் என்ன சாதித்து அதைப் பெற்றார்? என்றெல்லாம் கவைக்குதவாத கேள்விகளைக் கேட்டு எதற்கு எல்லோரும் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. நோபல் பரிசு தனிப்பட்ட ஒரு நிருவனத்தால் தரப்படுவது. சமாதானத்திற்கு எப்போது அவர்கள் அண்ணல் மாகாத்மாவை 5 முறை தகுதியற்றவர் என்று நிராகரிக்க முடிந்ததோ அப்போதே அவர்கள் தரும் விருதைப் பெறாதவர்கள் ஒன்றும் சோடை போனவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்த விருதை சமீபத்தில் அறிவித்த உடன் எனக்கு நினைவுக்கு வந்தது சென்னை அண்ணா மேம்பாலம் அருகே இரு புறமும் இரண்டு குதிரைகளை இருவர் இழுத்து பிடித்தது போல இருக்கும் இரு சிலைகள்தான். அதில் ஒரு வாசகம் எழுதியிருக்கும் தமிழக அரசு குதிரைப் பந்தயத்தை நிறுத்துவதாக முடிவு செய்ததை ஒட்டி இந்த சிலைகளை முதல்வர் ..... திறந்து வைக்கிறார் என்று, அந்த சிலைகளைத் திறந்து வைத்த பிறகு சாதாரணமாக இருந்த குதிரைப் பந்தயம் ஜாம் ஜாம் என்று இன்றளவும் நடந்து வருகிறது. அந்த கேலிக்கூத்துக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

இந்த பரிசு அறிவிப்பு தவறு என்றால், அண்ணாத்துரை என்ற ஒரு 3ம் தர பேச்சாளர் எப்படி கழிசடை கழகங்களால் பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டாரே அது சரியா? சாதாரண கல்லூரி ஆசிரியர் அன்பழகன் எப்படி பேராசிரியர் ஆனாரே அது சரியா? இந்தியப் படங்களில் மட்டுமே நடிக்கும் கமலஹாசன் உலகநாயகன் என்று பட்டம் பெற்றாரே அது சரியா? விரல் சொடுக்கும் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று சின்னபுள்ளத் தனமா ஆனாரே அது சரியா?, தமிழில் காமத்துப் பாலை மட்டும் கரைத்துக் குடித்த கருணாநிதி முத்தமிழ் வித்தகராக ஆனாரே அது சரியா? நடிப்பு என்றால் சிவாஜி, சிவாஜி என்றால் நடிப்பு என்று இருந்தாலும் அவருக்கு இந்தியாவிலேயே விருது தர மனமில்லாத கேடு கெட்ட அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக ரிக்ஸாகாரன் என்ற திராபைபடத்தில் மகா திராபையாக நடித்து சண்டை காட்சிகளில் மட்டும் தூள் கிளப்பிய எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் கொடுத்தது சரியா?

இதெல்லாம் சரி என்றால் இந்த வருட சமாதான நோபல் விருது இவருக்கு வழங்கப் படுவதும் சரிதான்.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவர்,ஜிம்மி கார்டருக்கு தந்தார்கள், அல் கோருக்கு தந்தார்கள் அதைப் பற்றியும் எழுது என்று கேட்டார், ஜிம்மி கார்ட்டருக்கு நம்மூர் மேல்சபை பதவியை தருவது போல தந்தார்கள், அல் கோருக்கு வழங்கியது அவர் சார்ந்த கட்சி இணைய தளத்தை கண்டு பிடித்ததை நமக்கு தெரிவித்ததற்காக தந்திருக்கலாம் அது இதயம் இனித்தது, கண்கள் பனித்தது டைலாகிற்கு சமம் என்றேன். அப்படியா சரி, யாசர் அராபத் போன்ற தீவிரவாதிக்கு எப்படி தந்தார்கள் என்று கேட்டார் அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை, உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

இலங்கையில் இந்திய (தமிழக) நாடாளுமன்ற உறுப்பினர்களின் விஜயம்.

இது என்ன் லாஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இதனால் இந்திய அரசியலின் லாஜிக் எனக்கு விளங்கி, தமிழக அரசியலின் லாஜிக் மட்டும் விளங்கவில்லை என்று சொல்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ரெண்டு லாஜிக்கும் குப்பை என்பது எம் கருத்து.

ஒரு புறம் ஆயுத உதவி, மறு புறம் அப்படி எதுவும் இல்லை என்ற டைலாக். மத்திய அரசில் பங்கு வகிக்கும் தமிழக முக்கிய கட்சியான தி.மு.க தனக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் ஒரு டைலாக் ஒரு நாள், 50 வருடங்களாக எனக்கு தூக்கமே இல்லை என்று ஒரு டைலாக் மறுநாள், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லையே, என்ன செய்வது என்று யாராவது சொல்லுங்களேன் என்று கண்ணீர் மல்க டைலாக் அடுத்தநாள், இவர் ஒரு தமிழினத் தலைவர், இவர் ஒரு முத்தமிழ் காவலர், நவீன சாணக்கியர், பலம் பொருந்திய ராஜ தந்திரி என்று தினமும் இவருக்கு அள்ளக்கைகளின் பாராட்டுகள். சீசீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு என்று ஒரு ஏழைக்கவிஞன் பாடியது இவர் போன்றவர்களைப் பற்றித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.

இனி தொடங்கிய தலைப்புக்கு வருவோம். இந்த குழு சொல்லி வைத்து சென்றதனால், அங்குள்ள தமிழர் முகாம்களில் பல ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்க முடியும், இருந்தாலும் இலங்கை அரசாங்கம் இவர்கள் வருகையை தடைசெய்யாததே பெரிய விஷயம். அங்கு சென்ற அனைவரின் ஒருங்கிணைந்த ஒரு செய்தியோ அல்லது வெள்ளை அறிக்கையோ வெளிவருவதற்குள், காங்கிரஸ் எம்.பி, சுதர்சன நாச்சியப்பன் முந்திக்கொண்டு வவுனியா ஆட்சியாளரை பாராட்டி ஒரு பெரிய பாராட்டு பத்திரம் வாசித்ததே, ஏதோ ஒன்று சரியில்லையே என்று எண்ணத் தோன்றுகிறது. அங்கு சென்ற திமுக எம்.பிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி போன்றோர் வழக்கம் போல உளறி விட்டு வந்திருக்கிறார்கள். நல்லவேலை தொல். திருமாவளவன்ஏதும் பேசாமல் வந்திருக்கிறார். அவரை பேச விடவில்லை என்றும், அவர் தமிழர்களை சந்திக்கவும் சிங்கள ராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், அது சரியானதே. இல்லையெனில இலங்கை வாழ் தமிழர்களுக்கு பால், தேன் எல்லாம் ஆறாக வரப்போகிறது என்ற அளவில் ஏதாவது டைலாக் விட்டிருப்பார், அது தவிர்க்கப் பட்டது நல்லதே.

எப்படி இவர்களால் அசராமல், சளைக்காமல் உளற முடிகிறது, கேட்பவர்கள் கேணையர்கள் என்று எப்படி இவர்களால் தானாகவே ஊகம் செய்து கொள்ள முடிகிறது என்பது எனக்கு புரியாத ஒன்று.

சீன எதிர்ப்பு.

இந்திய ப்ரதமர் இந்தியாவின் மாநிலமான அருணாச்சல் ப்ரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்துஇந்தியாவுக்கான சீனத் தூதரை இன்று அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்தியாவின் ஒரு பாகமான அருணாச்சல் ப்ரதேசத்தின் கலாச்சாரம் சீன கலாச்சாரத்தின் சாயலுடன் இருப்பதால், அது அவர்கள் நாட்டுக்குச் சொந்தம் என்பது சீனாவின் வாதம். எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய வீட்டில் நேபாள நாட்டு கூர்க் குடும்பம் வசித்தார்கள். அவர்கள் இன்றுவரை இரவு காப்பாளர்களாக எங்கள் ஊரில் ரோந்துக்கு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு சீனர்கள் போலவே இருப்பார்கள், அதனால், நாமும் சீனர்களை நம் ஊருக்கு வந்து இரவு ரோந்துக்கு செல்லும்படி சொல்வது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் சீனாவுக்கு நமது அருணாச்சல ப்ரதேசத்தின் மீது இருக்கும் உரிமை.

மன்மோகன் சிங்கின் அருணாசசல ப்ரதேச விஜயத்தை கண்டிக்கும் சீனாவின் போக்கு எவ்வளவு அபத்தம் மற்றும் தவறான செயல் என்பதை சீனா கண்டிப்பாக உணரப்போவதில்லை. அவர்களுக்கு அதை உணர்த்த இந்தியாவும் முயலப்போவதில்லை. ஆனால் இந்தியா சீனாவுக்கு இதை உணர்த்த இரண்டு செயல்களைச் செய்தால் போதும், ஒன்று, அவர்கள் நாட்டு தூதுவரை திரும்ப செல்லுமாறு பணித்தல், இரண்டு, அவர்கள் நாட்டு இறக்குமதிகளை காலவரையின்றி நிறுத்தி வைத்தல். அது நமது நாட்டு வியாபாரிகளின் முதலீட்டுக்கு ஆபத்து எனில், இனி சீனாவுடன் செயல்படுத்தப்படும் எந்த முதலீடுகளும் இந்திய அரசாங்கத்தின் பரிசீலனைக்குப் பின்பே நடைபெறவேண்டும், இதை இந்திய அரசாங்கம் வழக்கம் போல கால தாமதமாகச் செய்ய செய்ய, இந்திய வியாபாரிகள் வேறு நாட்டோடு இறக்குமதிக்கு ஏற்பாடுகளைச் செய்வார்கள், அது சீனாவுக்கு சரியான அடியாக இருக்கும்.

சீனாவின் இந்த விதமான அட்டூழிங்களைப் பார்க்கும் போது, இரண்டாம் உலகப்போரில் உலகத்தையே கண்களில் விரல் விட்டு ஆட்டிய ஜப்பானியர்கள் அதற்கு முன் சீனாவின் பெரும் பகுதியை தன் கட்டுக்குள் வைத்திருந்து ஆட்டிப் படைத்ததை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்கா/இங்கிலாந்துடன் போரில் இறங்கியதை நாமும் மறந்து சீனாவை சற்று கதறடியுங்கள் என்று சற்று சுதந்திரமாக விட்டால் போதும், சீனாவின் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு கட்டி விடுவார்கள்.

கடைசியாக தமிழகத்தில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகுள்ளான ஒரு நடிகையின் வாக்குமூலம் பற்றிய செய்தி ஒரு தினசரி பத்திரிகையில் வந்த சம்பவம் பற்றி என்னை ஒரு நண்பர் எழுதச் சொன்னார், அது பல தமிழ் பத்திரிகைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்திதான் அது இந்த தினசரியில் வந்ததுதான் தவறே தவிர, செய்தி அல்ல. இதற்கு மேல் இந்த செய்தியை பற்றி விவாதிப்பது என் தரத்துக்கு உகந்தது அல்ல.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Thursday, October 08, 2009

மீனாவுடன் மிக்சர் - 12 {ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்}

ஒரு வழியா நவராத்திரி சுண்டல் சாப்பிட்ட அஜீரணம் போய் இப்ப தான் மிக்சர் பக்கம் வர முடிஞ்சது. நான் எட்டிப்பார்க்காத இந்த சில வாரங்களில் ஏதோதோ அருமையான பதிவுகளெல்லாம் வந்திருக்கு தமிழ் சங்கத்துல. அதெல்லாம் படிக்கறத்துக்கு முன்னாடி என்னை அதிசயத்தில் ஆழ்த்தும் எங்க ஊர் தமிழ் பெண்களின் சமூக உணர்வைப் பத்தி உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்.

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை. கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?