Friday, May 22, 2009

செவிச் செல்வம்.

மே 26, 2009 விகடன் முகப்பில்

சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.

வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் பட்டது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு, குறுகலான பாதைகளில் முன்னேறி செல்வது, சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால் ரம்மியமாக இருக்குமோ ? என்னவோ !! ஆனால், நாமும் அதற்குள் ஐக்கியமாகி செல்லும்போது தான் தெரிந்தது வலி.

"வேர் கேன் ஐ கெட் ஹியரிங் எய்ட் ?" என்று தேடிய என்னை, "செவிட்டு மெஷினத் தான தேடுற, அதுக்குக் கூட அலப்பரை தாங்கலேயேடா ராசா" என்று தோள்களில் தட்டினான் நண்பன் ஸ்ரீதர்.

ஐபாட் மாதிரி இருக்கும் சிலவற்றை எடுத்து மேசையில் வைத்தார், சிரிப்பென்றால் என்னவென்று கேட்கும், சிரிப்பை மறந்த இந்திய ஊழியர்.

'டேய் நந்து, எனக்கு இந்தப் பெரிசு பெரிசா இருக்க மெஷினெல்லாம் வேண்டான்டா. வெளிய‌ எடுப்பாத் தெரியும் வேற‌ ! இப்ப‌ல்லாம் ப‌ட்ட‌ன் சைஸ்ல‌ வ‌ருதாமே. அதைவிட‌க் குட்டியா இருந்தா வாங்கிட்டு வாடா' என்ற‌ தாத்தாவின் குர‌ல் மாட‌ர்னாய் ஒலித்த‌து.

"அதெல்லாம் எக்ஸ்பென்சிவா இருக்கும் !" என்றார் ஊழிய‌ர். ப‌ர‌வாயில்லை எடுங்க‌ என்ற‌த‌ற்கு, வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காண்பித்தார்.

'ரெண்டு ட‌மார‌மும் அவுட்டு. ஒன்னு வ‌ச்சாக் கூட‌ ச‌ரியா வ‌ராது. அத‌னால‌ ரெண்டா வாங்கிட்டு வ‌ந்திருப்பா' என்றிருந்தார் அம்மா.

நானூறு வெள்ளி * 2 க்கு பிங்க் பில் கொடுத்தார். ஏனைய சாமான்க‌ளும், வ‌ழ‌க்க‌ம் போல‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு பாடி ஸ்ப்ரே, வீட்டுக்கு த‌லைவ‌லித் தைல‌ பாட்டில்க‌ள், டைக‌ர் பாம், சில டி.ஷ‌ர்ட்க‌ள், சாக்லேட் வ‌கைய‌றாக்க‌ள். அப்பாடா ஷாப்பிங் முடிச்சாச்சு என்று நிம்ம‌திப் பெருமூச்சு விட்டேன்.

அன்றிர‌வே சென்னை வ‌ந்த‌டைந்து, நேரே ம‌ருத்துவ‌ம‌னைக்குச் சென்று தாத்தாவைப் பார்த்தேன். 'விவேகானந்தன்' என்றவுடன், வேறு கேள்வி கேட்காமல் அவரது அறையில் விட்டனர் என்னை. அவ‌ரை அந்த‌ நிலையில் பார்க்க‌வே பாவ‌மாய் இருந்த‌து. எழுபதுகளின் மத்தியில் இருந்தாலும், சில‌ நாட்க‌ள் வ‌ரை திட‌மாக‌ இருந்த‌வ‌ர். சமீபத்தில் சாலையில் ந‌ட‌ந்து செல்கையில், பின்னால் மிதிவ‌ண்டியில் வ‌ந்த‌ சிறுவ‌ன் மோத‌, கீழே விழுந்து, விலா எலும்பு முறிந்துவிட்ட‌து. மிதிவ‌ண்டியின் ம‌ணியை அடித்துக் கொண்டே வ‌ந்த‌ அவ‌ன், எப்ப‌டியாவ‌து இவ‌ர் வில‌கிக் கொள்வார் என‌ நினைத்து, அவ‌ர் ப‌க்க‌ம் வ‌ரை வ‌ந்து, மோதிவிட்டான்.

ரொம்ப‌ வ‌ருட‌ங்க‌ள் முன்னாலேயே தாத்தாவுக்கு காது கேட்ப‌து நின்றுவிட்டிருந்த‌து. வீட்டில் எல்லோரும் ஹியரிங் எய்ட் வைக்க சொல்லியும், இன்று வ‌ரை அது எதுக்கு, வேண்டாம் என்று ம‌றுத்து வ‌ந்தார். விபத்துக் கார‌ண‌த்தைக் கூறி தாத்தாவை மெஷின் வைக்கச் சொல்லி வற்புறுத்த, ஒரு வ‌ழியாய் ச‌ம்ம‌தித்திருக்கிறார்.

த‌லையில் லேசாய்க் கீர‌லுக்கு ம‌ருந்திட்டு, சிறாய்புக்களுக்கு க‌ட்டுபோட்டு நீட்டிய‌ கால்க‌ளுட‌னும், பெட்டில் புத்த‌க‌ம் வாசித்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர்முன் நிற்க‌, பொக்கை வாய் திற‌ந்து (ப‌ல் செட் அத‌ற்கான‌ அழ‌கிய‌ ப்ளாஸ்டிக் ட‌ப்பாவில் நீந்திக் கொண்டிருந்த‌து), என்னை கிட்டே வ‌ர‌ச் சொல்லி, ஆர‌த் த‌ழுவிக் கொண்டார். எங்கே அழுதுவிடுவாரோ என்று ச‌ற்று வில‌கி த‌ள்ளி நின்று கொண்டேன்.

ச‌த்த‌மாக‌ப் பேசினால் கூட அவருக்கு கேட்கவில்லை. சைகையில் நான் பேச‌, வாய் திற‌ந்து தாத்தா ப‌தில‌ளித்தார். காற்றில் க‌ல‌ந்த‌ க‌ல‌வையாய் வார்த்தைக‌ள் தெறித்த‌து.

பையைப் பிரித்து, அழகாக‌ ஜொலித்த‌ ஹிய‌ரிங் எய்ட் பேக்கிங்கை தாத்தாவிட‌ன் நீட்டினேன். இந்த‌ முறை அழுதே விட்டார்.

ஒன்றைப் பிரித்து, எப்ப‌டி ஆப்ப‌ரேட் செய்ய‌ வேண்டும் என‌ விள‌க்கினேன். ஆசையாய் அதை வாங்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தார். சட்டைப் பொத்தானை விட சிரியதாக இருந்தது. அவ‌ர‌து இட‌து காதில் பொறுத்தினேன்.

"சுத்தமா வெளியில தெரியலைல ..." என்று குஷியானார்.

ப‌ட‌ப‌ட‌வென‌ ப‌ட்டாசு வெடிப்ப‌தாய் உண‌ர்ந்திருப்பார் போல‌. ரொம்ப நாட்கள் கேட்காமல் இருந்த காது, அவருடைய மெல்லிய சத்தத்தையும் பெரிதுபடுத்தி வாங்கியிருக்குமோ, என்னவோ ... லேசாக‌ சிலிர்த்துக் கொண்டார்.

"தாத்தா, எப்படி இருக்கீங்க. இப்ப கேட்குதா ?" என்றேன்.

"நல்லா இருக்கேன்ட நந்து. நல்லா கேட்குது என்று ப‌தில் அளித்தார்". பெருமித‌ம் தாங்க‌வில்லை அவ‌ருக்கு. விட்டால் எழுந்து ஓடி விடும் அள‌விற்கு முக‌த்தில் ஆன‌ந்த‌ம்.

"தனியாவா இங்க வந்தே. வேற யாரும் கூட வரலை ?!" என்று கேட்டார் தாத்தா.

"ஃப்ரெண்டோட வந்தேன் தாத்தா. அவன் இங்க பக்கத்தில ஏதோ வேலை இருக்குனு போயிருக்கான். அநேகமா இப்ப கீழே காத்திருப்பான். சரி உடம்பப் பார்த்துக்கங்க. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க. நான் காலையில் வர்றேன்." என்று அங்கிருந்து நகர்ந்தேன்.

மறுநாள் நான் மருத்துவமணை செல்ல மதியம் ஆகிவிட்டது. சோகமாக இருந்த தாத்தாவை ஏறிட்டு நோக்கினேன். 'நேற்றிரவு குழந்தை போல இருந்தாரே...' "தாத்தா, என்னாச்சு உங்களுக்கு ?" என்று கேட்ட கேள்விக்கு பதிலில்லை. பக்கத்தில் சென்று படுக்கையில் அமர்ந்த என்னைக் கூர்ந்து கவனித்தார். அதே கேள்வியை மீண்டும் கேட்க ...

"இந்தக் கிழம் விடுற அட்டகாசம் தாங்கலை. என்றும் இளமைனு நெனைப்பு போல. ஆனா என்ன, காசு பார்ட்டி. முழிக்கிற முழியப் பாரு" என்றார் நர்ஸ். "பாத்து பேசுங்கம்மா, அவர் காதுல விழுந்திரப் போகுது" என்ற ஆயாவிற்கு, "இந்த டமாரத்துக்கா ..." என்ற எகத்தாளமான நர்ஸின் பேச்சில், 'அட ஈஸ்வரா !!!' எனக் கூசிப் போனார் விவேகான‌ந்த‌ன்.

"ஏங்க, வந்த உடனே கெளம்பணும்னு சொல்றீங்க. அப்படி இப்படி கொஞ்ச நேரம் இருக்க மாதிரி பாவ்லா காட்டுங்க‌. கைய கால புடிச்சு விடுங்க. நடிக்கவாவது தெரியுதா. உங்க அப்பாவுக்கும், சரி, பையன் தான் நம்ம மேல பாசமா இருக்கானு தோணும். கொட்டிக் குமிச்சு வச்சிருக்கதெல்லாம், அப்புறம் உங்க தங்கச்சி தட்டிகிட்டுல போயிடுவா... விட்டுருவேனா ..." என்று முழக்கிய மருமகளை ஏறிட்டார். வ‌ழிச‌லாய் ஒரு சிரிப்பை காட்டினாள். 'ஐயோ ராமா ... எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இத்தனை நாள் சிரித்த இந்த‌ சிரிப்புக்கு இதுதான் அர்த்த‌மா ?!' என‌ நொந்து போனார்.

வ‌ந்த‌வ‌ரும், போன‌வ‌ரும் ... 'கெழ‌ம் எப்ப‌ போகும், எட‌ம் எப்ப‌ காலியாகும்' என்ற‌ நிலையிலேயே பேசிச் செல்ல, கவுண்டமணி ஒரு படத்தில் செய்வது போல 'என்ன‌ க‌ரும‌த்துக்கு இந்த‌ மெஷின் ந‌ம‌க்கு இனி, பேசாம காது கேட்காம இருக்கதே நல்லதுடாப்பா !!!' என ஹியரிங் எய்டை க‌ழ‌ட்டி குப்பையில் விசிறி அடித்த‌தை தாத்தா சொல்ல‌, வாய் பேசாது மௌனியாய் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இது ஒரு குத்தமா? நீங்களே சொல்லுங்க

நீங்க நம்ப மாட்டீங்க. நானும் கடந்த சில மணி நேரங்களா ரொம்ப கடுமையா முயற்சி செய்யறேன். வீட்ல பல அறைகளில் உட்கார்ந்து பாத்துட்டேன் . உட்கார்ந்திருந்த நாற்காலியை மாத்தி பாத்துட்டேன். சோபாவில் சாய்ந்து மோட்டை வெறித்து பாத்துட்டேன். ஆழ்ந்த யோசனைக்கு அறிகுறியா விரல் நுனியால் மோவாய் கட்டையை தட்டி பாத்துட்டேன். வைரமுத்து கணக்குல குறுக்கும் நெடுக்குமா நடந்து பார்த்துட்டேன். ம்ஹூம் ..........பதிவுக்கு ஒரு நல்ல ஐடியா வரக்காணுமே! நம்ம கற்பனை குதிரைய தட்டி ஓட விடலாம்னு பார்த்தா அது சுருண்டு படுத்து தூங்கிடுத்துங்க.

நாட்டுல மக்கள் அரைப்பக்கத்தில் அம்சமா கதையே எழுதறாங்க. நமக்கு மட்டும் மைண்ட் இப்படி லைசால் ஸ்ப்ரே போட்டு தொடச்ச சமையல் மேடை போல இருக்குதேன்னு கவலையோடு நான் ஜன்னல் வழியே தோட்டத்தை பாத்துண்டு இருந்த போது தான் அது மறுபடி கண்ணில் பட்டுது. பத்து நாளைக்கு முன்னாடி பூத்து குலுங்கிய எங்க வீட்டு செம்பரத்தி செடி இப்போ வாடி வதங்கி கொல்லையில் தொட்டியில கிடக்குது.

முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேன். அந்த செம்பருத்தி செடி காலமாப்போனதுக்கு நான் காரணம் இல்லைங்க. எங்க வீட்ல செத்துப்போன வேறு ஐந்தாறு செடிகளுக்கும் நான் பொறுப்பு இல்லீங்க. ஊருல வேறு விதமா பேச்சு இருக்கும். ஆனா நீங்க நம்பாதீங்க. நடந்ததை நான் வெவரமா உங்களுக்கு சொல்லறேன்.

என் கணவர் சில மாசங்களா அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறார். ஊரில் இருக்கும் போது சின்ன குழந்தைகளை பராமரிக்கிற மாதிரி செடிகளுக்கு தண்ணி விட்டு வளர்ப்பார். ஏன் நான் தண்ணி விட மாட்டேனான்னு கேக்கறீங்க, அப்படி தானே? விடக்கூடாதுன்னு எண்ணம் கிடையாதுங்க. சின்ன வயசுல ஞாபக சக்திக்கு சூரணம் குடுத்த போது நான் துப்பிட்டேன் போல இருக்கு. எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி. என் நினைவாற்றலின் மேல் நம்பிக்கையற்று தான் என் கணவர் தானே செடிகளுக்கு தண்ணி விட்டு, பூச்சி மருந்து அடிச்சு எல்லாம் செய்வார்.

போன மாசம் ரெண்டு வாரம் வெளியூர் போறதுக்கு முன்னாடி என்னைய உக்காத்தி வெச்சு எந்தச்செடிக்கு எத்தனை கப் தண்ணி விடணும்னு வெவரமா சொல்லிட்டு தான் போனார். இந்த முறையாவது இவர் ஊரிலிருந்து திரும்பும்போது வாய் பிளக்குமாறு நாலு இலை பச்சையாக இருக்கட்டும்னு நானும் ரெண்டு நாள் முனைஞ்சு விட்டேங்க. மூணாவது நாள் செம்பருத்தி செடியோட இலைல கொஞ்சம் ஓட்டைங்க இருந்துது. ரெண்டு தடவை அதை சுத்தி வந்து பாத்துட்டு யோசனையா நகந்து போயிட்டேன். அடுத்த நாள் முழு செடியிலும் பூச்சி கடித்து நம்மூர் சல்லடை மாதிரி ஓட்டைங்க.

இது என்ன அனாவசியமான வம்பு? இந்த செடிக்கு ஒண்ணுன்னா பழி என் மேலல்லவா வரும்? கவலையோட நிமிர்ந்து பார்த்த போது அறை மூலையில் இருந்த விண்டக்ஸ் கண்ணில் பட்டது. ஆஹா, என் கை கொடுக்கும் தெய்வம். எல்லாக்கிருமிகளையும் அழிக்கும் தீர்த்தம். இதன் வீரியத்துக்கு முன்னாடி எந்த பூச்சி ஜெயிக்கும்னு நினைச்சு விண்டக்ஸ் பாட்டிலால் செடியை ஸ்ப்ரே பண்ணி விட்டு 'பகவானே நீ விட்ட வழி' அப்படின்னு போயிட்டேன். மொதல்ல எல்லா பூச்சியும் செத்து போச்சுங்க (நான் சொல்லலை இது வேலை செய்யும்னு?). பிறகு எல்லா இலையும் உதிர்ந்து போச்சுங்க. அப்புறம் செடியே வதங்கி, சுருண்டு படுத்துருச்சுங்க. மனசு நிறைய துக்கத்துல அடுத்த ஒரு வாரம் நானே சரியா சாப்பாடு, தண்ணி இல்லாம வளைய வந்ததுல, மிச்சம் மீதி செடிகளுக்கு தண்ணீர் விட மறந்து போச்சு. இது ஒரு குத்தமா? நீங்களே சொல்லுங்க.

ஊருக்கு போயிட்டு வந்து கோபமா என் மேல் பாய்ந்த கணவரிடம் நிச்சயமா சொல்லிட்டேன். அடுத்த பயணத்தின் போது வீட்டுல இருக்கிற எல்லா செடிகளையும் கூடவே எடுத்துட்டு போக சொல்லி. இவர் பாட்டு ஊருக்கு கிளம்பி போக, இவர் தெரு முனை திரும்பறத்துக்குள்ள செடிகளெல்லாம் மறியல் போராட்டம் செய்து தற்கொலை முயற்சியில் இறங்கினா நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்க?

-மீனா சங்கரன்

Thursday, May 21, 2009

நண்பர்களைக் குறைப்பது எப்படி?

முதலில் அந்த விளம்பரத்தைப் படித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. "நிறைய நண்பர்கள் தொந்தரவா? ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்கிறோம். அல்லது உங்கள் கட்டணம் வாபஸ்!" அந்த மாதிரி ஒரு விளம்பரத்தை நான் பார்த்ததே இல்லை. எனக்கு வெகு சிலரே நண்பர்கள் இருந்தாலும், அவர்களில் ஒரு சிலரை கழட்டிவிடலாம்தான். ஆனாலும் ஒரு நண்பர்கூட இல்லாமல் செய்யும் வழி என்ன என்பதை பார்க்க மிக ஆவலாக இருந்தது. பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன்.

விளம்பரத்தில் இருந்த முகவரியில் போய் நின்றால், அது ஒரு வீடு. சிரித்த முகத்துடன் வந்து என்னை உள்ளே வரவேற்றார் மைக்கேல். இப்படி இனிய சுபாவம் கொண்ட மனிதரா நண்பர்களைத் தொலைக்க வழி சொல்லப் போகிறார் என்ற கேள்வியோடு உள்ளே போனேன். மைக்கேல் அவருடைய நண்பர்கள் குறைக்கும் முறையை விளக்க ஆரம்பித்தார். முதலில் அந்த முறையை எப்படி கண்டுபிடித்தார் என்று சொன்னார். பல மாதங்களுக்கு முன்னால் மைக்கேல் பல்பொருள் அங்காடியில் பண்டம் வாங்கும்போது ஒரு நபரை சந்தித்தாராம். அந்த ஆள் மைக்கேலுக்கு நிறைய சம்பாதிக்கும் ஒரு வியாபாரத்தை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அந்த வியாபாரத்தை சில வருடங்கள் செய்தாலே போதும், நிறைய பணம் சம்பாதித்து வேலையெல்லாம் விட்டுவிட்டு நிம்மதியாக இருக்கலாமாம். இப்படியாக ஆரம்பித்து மெக்டோனால்ட் நிறுவனர் உதாரணம், ரெசிடுவல் இன்கம், உங்கள் கீழே உங்களை பணக்காரர் ஆக்குவதே குறிக்கோளாய் ஒரு கூட்டம், உங்கள் உள்ளே தூங்கிக்கிடக்கும் உங்கள் ஆற்றல், தன்னம்பிக்கை, ஊக்கம், என்று நீட்டி முழக்க, மைக்கேல் எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடினாராம்.

அப்படி தப்பிக்குமுன்னால் மைக்கேலிடம் இரண்டு வீடியோ டேப்புகள் வேறு - இந்த வியாபாரத்தை மேலும் விளக்குவதற்கு. அந்த டேப்புகளில் மேலும் ஒரு விஷயமும் இல்லை என்றார் மைக்கேல். நிறைய தம்பதிகள் இந்த வியாபாரத்தை செய்ததனால் பெரிய மாளிகையில் வாழ்ந்துகொண்டு விடுமுறைக்கு பல ஊர்கள் சுற்றுவது போன்ற படங்கள்தானாம் அந்த வீடியோ முழுக்க. அதிலிருந்து ஆரம்பித்தது மைக்கேலின் ஓடி ஒளியும் ஆட்டம். முதலில் யார் தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள் என்று காண்பிக்கும் சாதனம் வாங்கினார் மைக்கேல். பிறகு பல்பொருள் அங்காடிகளிலோ உணவகங்களிலோ அந்த நபர் தெரிகிறாரா என்று சுற்றுமுற்றும் பார்ப்பாராம். எங்கேயாவது அந்த ஆள் தெரிந்தால் 'கப்'பென்று பதுங்குவாராம். அவருடைய வாழ்க்கையே அந்த நபரால் மாறிவிட்டதாம். தொலைபேசி ஒலித்தால் நடுங்குவது, பக்கத்து ஊருக்குப் போய் பண்டங்கள் வாங்குவது என்று போலீஸில் தப்பித்த கைதி மாதிரி வாழ்ந்தேன் என்றார். ஒரு முறை வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது தொலைபேசி மணியடித்தது. அந்த நபரின் எண் என்று தெரிந்து எடுக்காமல் விட்டுவிட்டாராம். அந்த மணி நாராசமாய் ஒலித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு இந்த மாதிரி யோசனை வந்தது.

அவருடைய இந்த அனுபவங்களை விருப்பு,வெறுப்பின்றி ஆராய்ந்தாராம். அந்த நபரின் உத்திகள், அதனால் இவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றையும் அலசியவுடன் அவருடைய யோசனை கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்தது. மறுநாள் அவருடைய நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து விரைவில் பணக்காரர் ஆவது எப்படி என்று விளக்க ஆரம்பித்தாராம். அவருடைய பிரசங்கத்தில்
அந்த நபரைவிட ஒரு சில படி மேலே போய் கழுத்தில் ரத்தம் கொட்டுமளவு மனிதர் ராவு ராவு என்று ராவினாராம்.

மறுநாளில் இருந்து ஆரம்பித்தது அவருடைய பரிசோதனையின் விளைவு. அவருடைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள தினமும் முயன்றாராம். ஒருவர் கூட சிக்கவில்லை. அவருடைய ஐடியா வேலை செய்ய ஆரம்பித்ததில் அவருக்கு கொள்ளை மகிழ்ச்சி. உள்ளூர் போன் கம்பெனி அவருக்கு ஒரு பரிசு அனுப்பியதாம். இவரால் தொலைபேசி எண் காண்பிக்கும் சாதனம் அமோக விற்பனையாம் ஊரில்.

அப்படியே படிப்படியாக அவரது செயல்முறையை மேம்படுத்தி ஆட்களையே காணாமல் போவது வரை கொண்டு வந்திருக்கிறேன் இப்போது என்றார் மைக்கேல். என்னால் நம்ப முடியவில்லை. சரி வா, நீயே உன் கண்களால் பார்த்துக் கொள் என்று வீட்டுக்கு பின்புறம் அழைத்துக் கொண்டு போனார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் ஏதோ வேலையாக இருந்தார். மைக்கேல் அவரை பெயர் சொல்லி அழைத்ததுதான். அடுத்த விநாடி அந்த ஆள் மாயமாய் மறைந்தார். நிஜமாகவே காணோம். சினிமாவில் வருவதுபோல் ஒரு 'உஷ்' இல்லை, ஒரு 'ஜிங்' இல்லை. ஒரு விநாடி இருந்தார். மறுவிநாடி காணோம். அவ்வளவுதான்.

எனக்கு அப்படியும் சந்தேகம், இது ஏதோ மனோவசியமா என்ன என்று. இன்னும் சிலமுறை செய்து காண்பியுங்கள் என்றேன். மைக்கேல் என்னை ஜேம்ஸ் நதிப்பக்கம் அழைத்துக் கொண்டு போனார். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடியில் நிறைய செய்து காண்பிக்கலாம். ஆனால் இப்பொதெல்லாம் அவரை உள்ளே விடுவதில்லையாம். நதிக்கறையில் நிறைய பேர் நடப்பதும், ஓட்டமுமாக இருந்தார்கள். சிலர் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். யாராவது தெரிந்தவர்கள் இருக்கிரார்களா என்று நோட்டம் விட்டுக்கொண்டே போனார் மைக்கேல். அவருடைய சக ஊழியர் ஒருவர் கயாக் படகில் வந்து கொண்டிருந்தார். மைக்கேல் கூப்பிட்டு கையை அசைத்தார். அவ்வளவுதான். மறுவிநாடி வெறும் கயாக் மட்டும் தண்ணீரில் ஆடிக் கொண்டிருந்தது.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் எனக்கு ஒரு சந்தேகம். அப்படி மாயமாய் மறையும் மனிதர்கள் திரும்ப வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டேன். மைக்கேல் சிரித்துக் கொண்டே சொன்னார், "யாருக்குத் தெரியும்....."

எரியும் ஈழம்

ஈழ மண்ணில் நடந்த கொடூரங்களுக்கு இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டும். இனிமேல் நாம் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சில குறித்து நண்பர் கானா பிரபாவின் பதிவைப் படியுங்கள்.



மடத்துவாசல் பிள்ளையாரடி: பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

இனி அனைவரும் செய்ய வேண்டியது புலிகள்/பிரபாகரன் குறித்து விவாதிப்பதல்ல. இலங்கை அரசின் போர்க்கால அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்தான சர்வதேச நடவடிக்கைகள், தமிழர்களுக்கு உரிமை மற்றும் மிக முக்கியமாக போரால் இடம்பெயர்ந்த மக்கள் அவர்தம் வீடு(?) திரும்ப நடவடிக்கை.

Wednesday, May 20, 2009

விஞ்ஞானத்த வளக்க போறேண்டி

அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கவனித்தேன் தொலைபேசி மின்னிக் கொண்டிருந்தது. வீட்டுக்கு உடனே வரும்படி கோமதி மாமி தகவல் வைத்திருந்தார். ஒரு வாரமாக வேலையில் வெளியூர் சென்றிருந்ததால், கோமதி மாமி வீட்டுக்கு போகவில்லை. வாரத்திற்கு மூன்று, நான்கு முறையாவது அங்கே போய்விடுவேன். என்னுடன் வேலை செய்யும் குமாரின் தாயார்தான் கோமதி மாமி.

போன உடனே குழந்தை மாதிரி குதித்து வந்து என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனார்.

இந்த வேடிக்கைய பாருடா'

நம்ம ஊர் டீக்கடை பாய்லருக்கு கை கால் முளைத்த மாதிரி ஒரு வஸ்து சக்கரங்களுடன் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.
என்ன மாமி இது என்றேன்.
"இருடா அவரசப் படாதே. இப்ப பாரு. ஏ மாது யாரு வந்திருக்கா பாரு", என்றார் அந்த பாய்லரிடம்.

பாய்லர் என் பக்கம் திரும்பி, "யாரு அம்பி, நீதான் செல்வமா. உன்னப் பத்திதான் மாமி ஓயாம பேசிண்டே இருக்கா" என்றது. சுத்தமாக இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. "என்னது மாதுவா", என்றேன். இதுக்கே வாய பெளக்கறியாடா. இன்னும் பாரு வேடிக்கய என்றார் மாமி. ஏ மாது. செல்வத்துக்கு போண்டான்னா உசுரு. போட்டுத் தரியா.
"அதுக்கென்ன. போட்டுட்டா போச்சு. சித்த மாமி கிட்ட பேசிண்டு இருங்கோ அரநாழில பண்ணிட்றேன்", என்றது.

போண்டா போடும் பாய்லரா?

பாய்லர்/மாது சுறுசுறுப்பாக போண்டா தயாரிப்பில் மும்முரமானது. மாமியைப் பார்த்தேன் கேள்வியுடன். "சமையக்கார மிஷின்டா, இது. ஐ.நா.சபையோட எக்ஸ்பெரிமெண்டாம். குமார் ஏதோ வெப் சைட்ல பேர போட்டானாம். ரெண்டு நாள் முன்ன கொண்டாந்து வெச்சுட்டா. ஒரே கூத்துதான் போ", என்றார் மாமி.
"நான் மாதுன்னு பேரு வச்சுட்டேன். எல்லா பாஷையும் பேசும்டா. எல்லா ஊர் சமையலும் அத்துபடி இதுக்கு தெரியுமோ. உனக்கு கன்னடம் தெரியுமில்ல. இப்ப பாரு", என்று ஒரு ரிமோட்டை எடுத்து சில எண்களை அமுக்கினார் கோமதி மாமி. சமையல் அறையில் இருந்து, "நாளே ஹோலிகே மாடுபோதா" என்றார் பாய்லர் ராயர். அத விட வேடிக்கய பாரு என்று வேறு சில எண்களை அனுப்பினார். "இன்னா நைனா, போண்டா கூட ஒரு டீயும் அடிக்கிறியா". மாமி திரும்ப மாதுவுக்கே மாற்ற, மாது சொன்னது - "மாமி - அந்த ஜக்குவ கொஞ்சம் சும்மா விட்றேளா - எனக்கு தாங்கலே". ஃபீலிங்க்ஸ் வேறயா இதுக்கு!

"நம்ம ஊர் மட்டும் இல்லேடா. ஃப்ரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோன்னு எல்லாம் தெரியுது இதுக்கு."

"பாத்து மாமி, ஜாக்கிரதையா இருங்கோ. அப்புறம் ஆடு, மாடுன்னு ஏதாவது பண்ணிடப் போவுது. ஆமாம் அது என்ன பாய்லர் மாதிரி இருக்கு".
"சும்மா ட்ரயல்தானேடா. அவா நிஜமா விக்கும்போது இன்னும் நல்லா மனுஷா மாதிரியே பண்ணுவாளாம்".

போண்டா சூடு பறக்க வந்தது. மாது என்னிடம் கொடுத்துவிட்டு, "உப்பு எல்லாம் நல்லா வந்துருக்கா பாருடா அம்பி" என்றது. மாமிக்கு பெருமை தாங்கவில்லை. "பார்டா பேசறதுகூட என்ன மாதிரியே காப்பி அடிக்கறது".

"போண்டா சூப்பர்தான் மாது. மாமி - என்ன இருந்தாலும் உங்க போண்டா மாதிரி வருமா", என்றேன். "நீ சும்மா வழியாதேடா. உனக்கும், குமாருக்கும் செஞ்சு போட்டே எனக்கு கை ஓஞ்சு போச்சு. நான் இனிமே ஃபுல் ரெஸ்ட்லதான்", என்றார் மாமி.


"சரி, குமார் உள்ள இருக்கான். நீ போயி பேசிண்டு இரு. ராத்திரி மாதுவ பெசரட்டு பண்ண சொல்றேன். போயிடாதே......"

"ஏங்க - ஏந்திரிச்சி சாப்பிட வரீங்களா", என்ற சகதர்மிணியின் குரல் என்னை எழுப்பியது. எல்லாம் நேற்று ரொம்ப நாளுக்கப்புறம் கேட்ட என்.எஸ்.கே, டி.ஏ. மதுரம் பாடலின் விளைவு - "பட்டன தட்டி விட்டா ரெண்டு தட்டுல இட்டிலியும், காபி நம்ம பக்கத்துல வந்துடனும்". சாப்பிட உட்கார்ந்தால், தட்டில் பெசரட்டு. காலைக்கனவு பலிக்காமல் போகவில்லை.

பீச்சுக்கு போகலாமா ?! (அரைபக்கக் கதை)

சரியாகக் காலை பத்து மணிக்கு சிணுங்கியது செல்.

மறுமுனையில் செந்தில். "மாலதி ! இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் வச்சுக்காத. சாயந்திரம் பீச்சுக்கு போகலாம் !"

'சாயந்திரம் போற‌த்துக்கு இப்பவே என்ன அவசரம் ! என் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல' என்று பெருமிதம் கொண்டாள் மாலதி.

சமையலில் மூழ்கினாள், புத்தகம் வாசித்தாள். அயற்சியாக இருக்க சிறிது கண்ணயர்ந்தாள்.

பண்ணிரண்டு முப்பதுக்கு மீண்டும் செல்லின் சிணுங்கல்.

"மாலதி ! நான் குணா. இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் இல்லியே ?! சாயந்திரம் பீச்சுக்கு போகலாமா ?"

'இல்லடா, செந்தில் கூப்பிட்டு இருக்கான்னு சொல்லிடலாமா ?!' என யோசித்து, அவன் என்னடான்னா போகலாம் என்று உத்தரவிடுகிறான். இவன் என்னடா என்றால் போகலாமா என்று கேட்கிறான். யாருக்கு என்ன பதில் சொல்வது'

"உனக்கு எத்தனை தடவை சொல்வது. பசங்களுக்கு இந்த அளவிற்கு செல்லம் கொடுத்து வளர்க்காதே என்று !!! பேரு சொல்லிக் கூப்பிட்டாங்க, ச‌ரி, அத ஆரம்பத்துலேயே கண்டிச்சிருக்கணும். விட்டாச்சு. இவனுங்க எலியும் பூனையுமா இருந்துகிட்டு, நம்மள பிரிக்கிறானுங்க. இப்ப பாரு, ஊர்ல எவ்வளவோ அழகழ‌கா புள்ளைக இருக்கு. எதிர்த்து நின்னு என்ன அழகா பேசுது. அதுல யாரையாவது புடிச்சு கிடிச்சு பீச்சுக்கு போக வேண்டியது தானே !!! என் பொண்டாட்டிய என் கூட அனுப்ப மாட்டேங்கிறானுங்க" என்று ம‌திய‌ச் சாப்பாட்டிற்கு வ‌ந்த‌ அர்ஜூன் வழக்கம் போல அலுத்துக் கொண்டார்.

Tuesday, May 19, 2009

என் தமிழுக்கு ஒரு தளமா?

நல்லா கண்ணை கசக்கி விட்டுட்டு பார்த்தேன் ....... ஹுஉம்.....எதுக்கும் ஒரு தரம் கண்ணில் தண்ணீர் போட்டு அலம்பி விட்டுட்டு பார்த்துடலாம் னு செய்து பார்த்தா, இன்னமும் அப்படி தான் தெரியுது. என்னைத்தான் ரிச்மண்ட் தமிழ் சங்கம் ப்ளாகில் எழுத கூப்பிட்டிருக்காங்க!

ரொம்ப யோசனை பண்ணி பார்த்தப்புறம் எனக்கு இப்போ புரிஞ்சு போச்சுங்க. நல்ல தோழர் நாகு அன்னிக்கு ஒரு தரம் பேசிண்டு இருந்த போது வருத்தமாக சொன்னார். "நம்ம தமிழ் சங்கம் ப்ளாக படிக்கறது மொத்தமா நாலு பேரு தான்" அப்படின்னு. நான் எழுதி இனி படிப்பவர்கள் எண்ணிக்கை குறைய வழியில்லன்னு நிச்சயமா தெரிஞ்சப்பறம் தான் என்னைய எழுத கூப்பிட்டிருக்காங்க. நம்ம ரிச்மண்ட் தமிழர்களின் அறிவுத்திறனை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அப்படியே நம்மை நம்பி கூப்பிட்ட நல்ல உள்ளங்களின் நம்பிக்கையில் மண் விழாமல் இருக்க வினை தீர்க்கும் விநாயகனுக்கு மானசீக (ஏன் நாலடி நடந்து போய் பூஜை அறையில் நிஜமாகவே போடக்கூடாதா ன்னு கேக்கறது காதுல விழுதுங்க ..இது கொஞ்சம் ஈசின்னு பார்த்தேன்...ஹி ஹி) தோப்புக்கரணம் போட்டுவிட்டு ஆரம்பிக்கிறேன்.

கடந்த சில வாரங்களில் ஏதாவது பொது நிகழ்ச்சியில் இதர பல தமிழ் குடும்பங்களை பார்க்க நேர்திருந்தால் உங்களுக்கு இந்நேரம் ஒரு விஷயம் தெரிந்திருக்கும். உங்களுக்கு தெரிந்த பத்து குடும்பங்களில் ஐந்து பேராவது இன்னும் மூன்று வாரங்களில் வெய்யில் கால விடுமுறைக்கு இந்தியா செல்ல விறுவிறுவென்று ஏற்பாடுகள் செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்று. எங்கள் குடும்பமும் அதில் ஒன்று. ஆனால் இன்னும் நாங்கள் ஒரு பெட்டி கூட தூசு தட்டி வீட்டின் மேல் தளத்திலிருந்து இறக்கவில்லை. இதில் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லைங்க ஏன்னா எங்க வழி சற்று தனி வழிங்க. விமானத்தளத்திற்கு கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கு முன் நாங்க ஒரு வித்யாசமான டெக்னிக் உபயோகித்து தயாராகிடுவோம். உங்களுக்கு மட்டும் அந்த டெக்னிக் சொல்லறேங்க. கடைகளில் இருந்து வாங்கி வந்த பைகளை திறந்து சாமான்களை பெட்டியில் பரத்திக்கொட்டவேண்டும். பிறகு உங்கள் குடும்பத்தினரின் உடைகளை அதன் மேல் கவிழ்த்து கொட்ட வேண்டும். பெட்டி நிரம்பும் வரை இதை ரிபீட் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு குழந்தையை பெட்டியின் மேல் ஏறி உயர குதிக்கச்சொல்லி பெட்டியை மூடவும். ஒவ்வொரு முறையும் நாங்கள் உபயோகப்படுத்தும் நம்பிக்கைக்குகந்த டெக்னிக் இது. :-)

வால்மார்ட், காஸ்ட்கோ கடைகளில் இந்தியா செல்லும் மக்களுக்காகவே மெமோரியல் டே விடுமுறையில் இருந்து ஓட்ஸ், ஜிப்லாக் பைகள், சாக்லேட், ஹனி பஞ்சஸ் ஒப் ஓட்ஸ் மற்றும் பௌன்ட்டி பேப்பர் துண்டுகள் ஸ்டாக் அதிகரித்துள்ளார்களாம். கேள்விப்பட்டேங்க. அது மட்டுமா, பள்ளி விடுமுறை விட்டவுடன் சுமார் பத்து தமிழ் குடும்பங்கள் எங்களுடன் சேர்ந்து ரிச்மண்டிலிருந்து ஒரே விமானத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்கின்றனர். சிறு வயதில் கலந்த சாதம், சிப்சை கையில் கட்டிக்கொண்டு பத்து பதினைந்து குடும்பத்தினரோடு ரயில் பயணம் செய்த சுவையான நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.

கொஞ்சம் சீக்கிரமே விமானத்தளத்திற்கு சென்று கர்சீப் போட்டு எல்லா சக ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தினருக்கும் பக்கத்து பக்கத்தில் எடம் போடனும்னு பிளான் இருக்கு. பார்ப்போம். இப்போது உங்களிடம் விடை வாங்கிக்கொண்டு நான் போய் அந்த பத்து குடும்பங்களையும் அணுகி யார் யார் எந்த எந்த சாப்பாடு கட்டி கொண்டு வருவார்கள்னு விசாரிக்க வேண்டும். அந்த விமானத்தில் பணி செய்பவர்கள் இது போல் ஒரு கலாட்டா கும்பலை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ரிச்மண்ட் தமிழ் சங்க ப்ளாக் படிப்பவர்களின் எண்ணிக்கை என்னால் குறையாமல் இருக்குமாயின் மீண்டும் உங்களை சந்திக்க வருவேன்.

-மீனா சங்கரன்

Monday, May 18, 2009

ஓல்ட் ரேக் மலை

சென்ற வார இறுதியில் சாரணப் படையுடன் ஒரு முகாமுக்கு சென்றிருந்தேன். வெறும் முகாம் அல்ல. சொர்க்கபுரி! சந்தேகமிருந்தால் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.


அப்பலேச்சியன் மலைத்தொடரில் ஒரு பாகமான ஷேனன்டோவா தேசியப்பூங்காவில் இருக்கிறது ஓல்ட் ரேக் மலை (Old Rag Mountain).
ரிச்மண்டில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி இரவு ஒன்பதரை மணிக்கு ஓல்ட் ரேக் மலையடிவாரத்தை அடைந்தோம். பார்க்கிங் லாட் காலியாக இருந்தது. எங்கள் சாரணப்படையைச் சேர்ந்த புண்ணியவான்கள் இருவர் முதலிலேயே போய் கூடாரங்கள் அமைக்க இடத்தை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

கும்மிருட்டில் மரங்களூடே தடவிக் கொண்டே போய் எங்கள் கூடாரங்களை அமைத்தோம். ஒரே பாறைகளும், மரக்கிளைகளும் நிறைந்த தரையில் அதிர்ஷடவசமாக சமதரை கிடைத்தது எனக்கு. தலையில் கட்டிக்கொள்ளும் லைட் இல்லையென்றால் அதோகதிதான் இந்த முகாம்களில். கூடாரம் அமைத்துவிட்டு வாசனாதி பண்டங்களை ஒரு கரடிப்பையில் போட்டு கட்டி மரத்தில் தூக்கிக் கட்டினோம். வாசனாதி பண்டங்களை கூடாரத்தில் வைத்துக்கொண்டால் கரடி வரும் என்று கரடி விட்டார்கள்.

காலையில் எழுந்து பார்த்தால் உலகமே பாலுமகேந்திரா காமிராவில் பிடித்த மாதிரி இருந்தது.



நான் கொஞ்சம் உலாத்திவிட்டு ஆற்றில் இறங்கி விளையாடிவிட்டு மேலே இருக்கும் வீடியோவை எடுத்துவிட்டு வருவதற்குள் உள்ளங்கையில் அடங்கும் கேஸ் அடுப்பை வைத்து தண்ணீர் சுடவைத்து டீ,காப்பி எல்லாம் தயாராய் இருந்தது. அதையும் ஓட் மீல்-ஐயும் ஒரு கைப்பார்த்துவிட்டு மதிய உணவுக்கு சான்ட்விச் செய்துகொண்டு கிளம்பினோம்.

முதல் நாள் ஈயடித்துக் கொண்டிருந்த பார்க்கிங் லாட்டில் சைக்கிள் நிறுத்தக்கூட இடம் இல்லை. அவ்வளவு கும்பல். காலையிலிருந்தே திருவிழா கூட்டம் போல மக்கள் வரிசையாக போய்க் கொண்டிருந்தார்கள். எங்களைத் தவிர இரண்டு சாரணர்படைகள், நிறைய கல்லூரி மாணவர்கள், மலையேறும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களும் வந்து குவிந்திருந்தார்கள். ஓல்ட் ரேக் மிகவும் பிரசித்தமாம். கடினமான பாதைகளும், பாதையிலேயே கடும்பாறைகளும் கொண்டு ரொம்ப சேலஞ்சிங் மலையேற்றம் இது என்று வயிற்றில் புளியைக் கறைத்தார்கள் கூடவந்த மகானுபாவர்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் ஆரம்பித்தது. மூடுபனியும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி பக்கத்து மலை தரிசனங்கள் கிடைக்க ஆரம்பித்தன. மேலே போகப்போக பாறைகள் பாதையிலே பாறைகள் அதிகம். சில இடங்களில் வெறும் பாறைதான். பாறைகளுக்கு நடுவே குறுகலான பாதை, நெருங்கிய பாறைகளின் இடையே குறுகலான பாதை என்று பலவிதம். சில இடங்களில் பாறைகளுக்கு அடியே தவழ்ந்தும் போக வேண்டியிருந்தது. இங்கே பாருங்கள் கோவர்தன கிரிதாரி!




பாதையில் பாதி அடைத்துக் கொண்டிருக்கும் பாறை.



அடுத்தது பார்த்தால் ஒரு பெரிய கும்பலே தர்ம தரிசனத்திற்கு நிற்கிறது. நான் கியூவைப் பார்த்துவிட்டு சரிதான் இங்கேதான் லட்டு கிடைக்கும் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் அங்கே கிடைப்பது அல்வா. ஒரு குறுகலான பாதையில், இரண்டு பாறைகளைக் கடந்து செல்லவேண்டும் - அதுதான் இந்த பாதையிலேயே கடினமான இடம்.



அம்மாடி! அதை ஒரு வழியாக கடந்து ஒரு குகையில் புகுந்து வெளியேறி இரண்டு பாறைகளுக்கு இடையே இறங்கி சிக்கிக்கொள்ளாமல், கணுக்காலை சுளுக்கிக் கொள்ளாமல் தப்பித்து உச்சியை அடைவதற்குள் அம்மாடி - களைத்துவிட்டது. உச்சியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சுற்றிப் பார்த்தால் - பச்சைப்பசேல் என்று எங்கும் பச்சைப்போர்வை போர்த்திய உலகம்.



திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது மேலே இருக்கும் மலையைப் பார்த்தபோது. அங்கிருந்து இறங்குமுகம்தான். சிறிது இறங்கியபிறகு மழை பிடித்துக் கொண்டது. எல்லோரும் பாஞ்சோ எனப்படும் மேலாடையை அணிந்து கொண்டு அடைமழையிலும் விடாது நடந்தோம். எங்கள் குழுவில் இருந்த சிறுவர்கள் இருவரும் மிகவும் சோர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு என்ற பேரில் நானும் அவர்களுடன் மெதுவாக நடந்து வந்து அழகழகான பாலங்களைக் கடந்து முகாமை அடைந்தேன். மொத்த நடை ஏழு மைல்.

வந்து இளைப்பாறிவிட்டு அடுப்பு மூட்டி தண்ணீர் கொதிக்கவைத்தோம். இரவு உணவு நூடுல்ஸ். திடீரென மழை திரும்ப ஆரம்பித்தது. போட்டதை போட்டபடி கூடாரங்களுக்குள் பாய்ந்தோம். சமயோசிதமாக கொதித்துக் கொண்டிருந்த நீரை கோப்பையில் கொட்டிக்கொண்டு கூடாரத்துக்குள்....



Maggi cuppa mania saves the day!

பிறகு மழையிலே சமையல்பாறை மேல் ஒரு கூடாரம் கட்டி மற்றவர்களுக்கு சமைத்து பரிமாறி கூடாரத்துக்குள் கட்டையை சாய்த்ததுதான். காலையில் பறவை ஒலிக்குதான் எழுந்தேன். காலை உணவுக்கு பேகில், டீ! கூடாரங்களைப் பிரித்து, இடத்தை சுத்தம் செய்துவிட்டு (Leave No Trace), வீட்டுக்கு கிளம்பினோம். இன்னொரு அற்புதமான முகாம் இனிதே முடிந்தது.

மற்ற படங்களை இங்கே பார்க்கலாம்.

Sunday, May 17, 2009

பாலகுமாரன்

பாலகுமாரன் – 80 களின் துவக்கத்தில் இவருடைய எழுத்தின் பாதிப்பின்றி வளர்வது மிகக் கடினமாக இருந்தது. ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் இவரது எழுத்து மிகப் ப்ரபலமாக வெளிவந்து பலதரப்பட்ட மக்களை புரட்டிப் போட்டது. இவரது பலம், கதை என்பது ஒரு காட்சியாக படிப்பவரின் மனதில் வியாபித்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பி இன்றளவும் அதைப் பின்பற்றிவருவது. சில சமயம் இதுவே இவரது எழுத்தின் பலவீனம் என்றும் நான் கருதுவேன். இவைகளையும் மிஞ்சி இவரது எழுத்து பலரையும் பாதித்து, வெளிஉலகை, வாழ்க்கையை சற்று வித்தியாசமாக பார்க்க வைத்தது. 80 களில் வெளிவந்த மெர்க்குரிப் பூக்களையும், இரும்பு குதிரைகளையும் என்னால் இன்றும் நினைவுகூற முடிகிறது என்றால் அது இவரது எழுத்தின் ஆழம் என்பேன். இவரது எழுத்துக்களைப் போலவே இவரது கதைகளின் தலைப்புகளும் மிக வித்தியாசமான ஒன்று. இவரது எழுத்து மட்டும் இல்லாமல் இவரது கதைகளின் தலைப்பும் இவரை சக எழுத்தாளர்களில் இருந்து எனக்கு இவரை தனித்து அடையாளம் காட்டியது.

விவரமான பதிவை இங்கு படிக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

தமிழ் மணத்துக்கு வந்த சோதனை

என்னடா இது, தமிழ் மணத்துக்கு வந்த சோதனை...

நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு வந்தபோது என்னால் நம்பமுடியவில்லை. இப்ப சின்னப் பசங்கள்ளாம் 'என்ன கொடுமைங்க இது சரவணன்'னு சொல்றீங்களே - நாங்க அந்த காலத்துல பாலையாவின் - என்னடா மதுரைக்கு வந்த சோதனை-யை பயன்படுத்துவாம். அதுதான் தலைப்பு. இதையெல்லாம் படித்துவிட்டு செல்வராஜ் இனி வர்ஜினியாவில ஒரு பயலும் தமிழ்மணத்துல ஒரு வார்த்தை எழுதக்கூடாதுன்னு சொல்லாம இருந்தா சரி! வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கும், எங்கள் தமிழ்ச்சங்க பதிவுகளை படிக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன்.

இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு முயற்சி. ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தின் அங்கத்தினர்களை எழுத வைப்பதற்காக ஆரம்பித்தது. நிறைய பேர் சேர்ந்தார்கள். ஆனால் விடாமல் எழுதியது ஒரு சிலர்தான். ரிச்மண்ட் தமிழ் சங்க பதிவில் விடாமல் எழுதுகிறார்கள் என்று யாரோ மௌஸ்(கண்) வைத்துவிட்டார்கள். அதுவும் போச்சு. அந்த ஒரு சிலரும் பல காரணங்களுக்காக தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார்கள். பலகட்சி ஜனநாயகத்திற்கு பழகிய மக்களாயிற்றே... நான் கொஞ்சம் அங்கே இங்கே திருடி எழுதிக் கொண்டிருந்தேன். இப்போது டுவிட்டர் வந்து அதையும் கெடுத்தது. பதிவு தேய்ந்து டுவிட் ஆன கதையாய் ஒரு வரி எழுதினால் களைப்பாகிவிடுகிறது.

தமிழ்ச் சங்கப் பதிவுகளை நாலுபேர் கூட படிப்பதில்லை என்று தலைவர் முரளி கலாய்ப்பார். மொத்தம் எழுதுவதே நாலு பேராம். ஒருவர் எழுதினால் அதை படிப்பது மற்ற மூனு பேர்தான் என்பது அவர் கணக்கு. தமிழ்மணத்தின் புண்ணியத்தால் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி நியுசிலாந்துவரை (வணக்கம் டீச்சர்) எங்கள் புகழ் பரவியிருக்கிறது. ஆனாலும் ரிச்மண்டில் படிப்பது இன்றும் அதே மூனுபேர்தான்!

நான் பார்ப்பவர்களையெல்லாம் எழுதச் சொல்லி படுத்தியதினால், சிலபேர் ஊரை விட்டும், நாட்டை விட்டும் ஓடிவிட்டார்கள். ஆம்வேயைக் கண்டால் தூர ஓடு என்ற புதுமொழியில் கிட்டத்தட்ட என்பேரை போடவிருந்தார்கள். பதிவுப் புராணம் போகட்டும். ரிச்மண்டைப் பற்றிப் பார்ப்போம்.

அமெரிக்காவின் தலைநகரின் தெற்கே ஒரு பெரிய முக்கோண வடிவில் இருக்கும் மாநிலம் வர்ஜினியா. அந்த மாநிலத்தில் நடு சென்டரில் ஒரு புள்ளி வைத்தால், அதுதான் ரிச்மண்ட்! மைக்ரோசாஃப்ட் இருக்கிறதே அந்த ஊர்தானே என்பார்கள் சில மேதாவிகள். அது ரெட்மண்ட். ரிச்மண்ட் இந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் தெரியுமா? இந்தக் கதையைக் கேளுங்கள். நான் வாஷிங்டன் டிசி பகுதியில் இருந்தபோது ரிச்மண்ட் வேலைக்காக ஒரு தொலைபேசி தேர்வு நடந்தது. முடியும்போது அந்த மேலாளரிடம் என் கேள்வி: "ரிச்மண்ட் எங்கே இருக்கிறது?" அவர் கேட்டார் - வாஷிங்டனில் இருந்து தெற்கே எங்கேயாவது போயிருக்கிறாயா? ஆமாம் வடகரோலினா போயிருக்கிறேன் என்றேன். அப்படியானால் நீ ரிச்மண்டை பார்த்திருக்கிறாய்!

அமெரிக்க சரித்திரத்தில் ரிச்மண்டுக்கும், வர்ஜினியாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. அமெரிக்கா ஆரம்பித்ததே வர்ஜினியாவில் ஆரம்பித்த ஒரு குடியேற்றத்தினால்தான். அமெரிக்க சுதந்திரத்திற்கு வித்திட்டதும் வர்ஜினியாவில்தான். ஜார்ஜ் வாஷிங்டன், சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெஃபர்ஸனில் ஆரம்பித்து பல அமெரிக்க ஜனாதிபதிகளை அளித்திருக்கிறது வர்ஜினியா. "கிவ் மீ லிபர்டி ஆர் கிவ் மி டெத்" என்ற வாசகம் அமெரிக்க வரலாற்றில் புகழ் பெற்றது. பேட்ரிக் ஹென்றி அந்த வாசகத்தை முழங்கியது ரிச்மண்டில்தான்.

நான் ரிச்மண்டுக்கு வந்த புதிதில் சக ஊழியனிடம் இந்த ஊரைப் பற்றிக் கேட்டேன். அவர் இரண்டு யுத்தங்களிலும் எரிக்க்ப்பட்ட ஒரே ஊர் ரிச்மண்ட்தான் என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு முதல் உலகப்போர் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இரண்டாம் போரில் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டது ஹவாய் மட்டும்தானே என்று கேட்டேன். அவர் குழம்பிவிட்டார். நீ எந்தப்போரைப் பற்றி பேசுகிறாய் என்று இருவரும் கொஞ்சம் சண்டைப் போட்டோம். பிறகுதான் அவர் விளக்கினார். அவர் சொன்னது அமெரிக்க சுதந்திரப் போர், மற்றும் உள்நாட்டுப் போர் - American Revolutionary war and American Civil War. அமெரிக்கன் சிவில் வார்... யாரவர்? அமெரிக்கா இரண்டாக உடைந்தபோது உண்டான அல்பாய்சு இரண்டாம் நாட்டின் அல்பாய்சு தலைநகர் ரிச்மண்டாம்.

கான் வித் விண்ட் படித்ததில்லையா, பார்த்ததில்லையா என்றும் யாருக்கும் கொலைவெறி வரவேண்டாம். பார்த்திருக்கிறேன் - ஆனால் அது உண்மை சம்பவங்களை வைத்து எடுத்த படம் என்று சாணக்யாவில் இரவு முழு மப்பில் பார்த்தவனிடம் யாரும் சொல்லவில்லை.

ஒரு மணி தூரத்தில் கடலும், ஒரு மணி தூரத்தில் மலைத்தொடர்களுமாக அமைந்திருக்கிறது ரிச்மண்ட். வெயில் நாளில் சென்னையை நினைவுறுத்துமாறு புழுக்கமும் வேர்வையும்கூட உண்டு! வர்ஜினியா, ரிச்மண்ட் வரலாறு, புவியியல் பற்றி விரிவாக வேறு சமயம் எழுதப் போகிறேன்(அடப்பாவி இன்னுமா?). இப்போது சங்க காலம் பற்றிப் பார்ப்போம். ரிச்மண்டில் சங்க காலம் 1999ல் ஆரம்பித்து, பத்தாண்டுகள் கடந்து, இன்று வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. சங்க கால விளையாட்டுகளான டென்னிஸ், பௌலிங்ம் டேபிள் டென்னிஸ் எல்லாம் உண்டு. இந்த வரியைப் பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்தால் அதற்கு முன் இரண்டு வரிகளைத் திரும்ப படிக்கவும்.

ரிச்மண்ட் மாதிரியும் இங்கு வாழும் தமிழ் மக்கள் மாதிரியும் அமெரிக்காவில் பார்ப்பது கடினம். ஊர் அவ்வளவு பெரிய ஊரும் இல்லை, சிறிசும் இல்லை. எல்லா இடங்களுக்கும் பத்து நிமிடங்களில் போய்விடலாம். கால்பந்தாட்டமா, டென்னிஸா, நீச்சல் வகுப்பா, சங்கீத வகுப்பா, நாட்டிய வகுப்பா, கோவிலா, நாகு வீடா, தமிழ் சினிமாவா, டாஸ்மாக் கடையா, ஆபிஸா, ஆர்தர் ஆஷ் சிலையா - எல்லாம் பத்து நிமிடங்களில்!

தமிழர்கள் அன்புடன், மனதால் மிகவும் நெருங்கி வாழும் ஊர் ரிச்மண்ட். மக்கள் இந்த ஊரைவிட்டு போனாலும், திரும்ப வந்து விடுவார்கள். ரிச்மண்டில் வாழ்ந்துவிட்டு வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படியே ஏன் அவர்கள் திரும்பவில்லை என்றும் கேளுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லையா, துணைவி/வன் ஊருக்குப் போயிருக்கிறார்களா - சாப்பாடு வந்து குவிந்துவிடும். எங்களூரில் நண்பர்களை அப்படி கவனித்துக் கொள்வோம். ஊரார் கணவரை ஊட்டி வளர்த்தால் தன்கணவன் தொப்பை தானே வளரும் என்பதில் மிக்க நம்பிக்கை உள்ள ஊர் ரிச்மண்ட்! நியுயார்க், வாஷிங்டன் போன்ற ஊர்களில் இருந்தால் ஊர் சுற்றிப் பார்க்க நண்பர்களும் நிறைய 'அழையா விருந்தாளிகளும்' வந்து குவிவார்கள். ரிச்மண்டில்தான் உண்மையான அன்புள்ள விருந்தாளிகள் வருவார்கள்! இங்கே வருபவர்கள் எங்களைப் பார்ப்பதற்குத்தான் வரவேண்டும் :-)