Thursday, June 28, 2007

அரிசியை விட சிறிய யானை பார்த்திருக்கிறீர்களா ?

அன்பர்களே,

ஒரைகாமி, ஆரிகாமி ஏதோ ஒன்னு ! Origami நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தெரியாதவங்களுக்கு, நம் பள்ளிப் பருவத்தில் நாம் அனைவருமே இதில் ஈடுபட்டிருப்போம். அதாங்க காகிதத்தில கப்பலு, ராக்கெட்டு எல்லாம் செய்வோமே, அதே தான்.

கிரிகாமி (Kirigami) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னது கிருக்குப் புடிச்சிருக்கானு கேட்டு அடிக்க வராதீங்க ;-) காகித்தில் வெட்டி ஏதாவது உருவம் கொண்டு வரும் கலைக்குப் பேரு தாங்க Kirigami.

கீழே உள்ள you tube-ஐ play பண்ணி பாருங்க. சும்மா மனுசன் கத்தரியையும், காகிதத்தையும் வைத்துப் புகுந்து விளையாடுவதைப் பார்த்து அதிசயுங்கள்.



அரிசியை விட சிறிய யானை எப்படி வந்தது-னு பார்த்து அசந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு



-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா

Tuesday, June 26, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2007/06/11.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Monday, June 25, 2007

மீன் பிடிக்க வாரீயளா



அதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது

ஒன்றா இரண்டா
ஓரேழெட் டிருக்குமா ?
அத்தனையும் வேண்டாம்
ஓரிரண்டு பிடித்திடலாம்

என்றே எண்ணியங்கு
தின்னமாய் அமர்ந்து
நெளியும் புழுதனை
நீளமான தூண்டிலிலிட்டு

எவரும் பின்னில்லை
என்றறிந்து வீசியதில்,
மிதக்கும் பந்து
மிதந்து கொண்டேயிருக்க

சிலநேரக் காத்திருப்பில்,
என்ன நடக்குதென்று
சுழற்றி நூலிழுக்கையிலே
முள்ளிலிட்ட புழுவில்லை !

அதோ நெளியுது
இதோ திரியுது
தள்ளிச் செல்லுது
துள்ளிக் குதிக்குது.

Thursday, June 21, 2007

வைராக்கியம் - இருநூறாவது பதிவு!

தஞ்சைப் பெரிய கோவிலின் மணி டாங், டாங், டாங்கென அடித்து அன்றைய சாயங்கால பூசையை ஊருக்கு உரைத்தது.

விபூதிப் பிரசாதம் வாங்கி அணிந்து கொண்டு வெளியில் வந்தார் பரமசிவம். சிலு சிலுவென வீசிய காற்றில் சுற்றுப் பிரகாரத்தில் இருந்த மரங்களின் இலைகள் சிற்றருவியென சலசலத்தன. தென்றலின் தீண்டலில் கோவிலுள் இருந்த புழுக்கம் குறைந்து ஒருவித வேதியல் மாற்றம் நிகழ்ந்து தேகத்தில் குளுமையை உணர்ந்தார் பரமசிவம்.

பெரிய வளாகம் என்பதால், ஓரளவுக்கு மக்கள் இருந்தும் கூட்டமாகத் தெரியவில்லை.



வெளிச்சம் மெல்ல விடைபெற துவங்கியது. வலக்கையை மேல்தூக்கி மலைமுகடாய்ப் புருவங்களின் அருகில் வைத்து நந்தி மண்டபத்தைப் பார்த்தார். 'நாவன்னா' நேரத்துக்கு வந்திட்டானே என வியந்து, அத்திசையை நோக்கி நடையை சற்று துரிதப்படுத்தினார். சக வயதுடையோர் வட்டத்தில், நாராயணபிள்ளையை நாவன்னா என்று தான் அழைப்பார்கள். எனக்கென்ன அவ்வளவு வயதா ஆகிவிட்டது, அந்தக்காலத்து ஆளுக மாதிரி கூப்பிடறீங்களே என்று அன்பாய்க் கடிந்து கொள்வார். அப்படி ஒன்றும் வயோதிகர் இல்லை நாவன்னா, வருகிற ஆவணியில் அவருக்கு வயது 65.

தெய்வ நம்பிக்கை கொண்டவர்தான் நாவன்னா. ஆனால் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு யாரும் பார்த்ததில்லை. வெளிப்பிரகாரத்தோடு சரி. சாமியை வெறும் கல் என்று நினைத்தாரோ, இல்லை அர்ச்சகர்களை வெறுத்தாரோ தெரியவில்லை.

நாவன்னாவை நெருங்கிய பரமசிவம், "என்ன ஓய், மேல்சட்டையில அங்கங்கே அழுக்கு படிந்து இருக்கு" என்றார்.

ஒன்னுமில்லவோய், இன்னிக்கு வேலையில சுந்தரபாண்டி பயல காணோம். வெஷம் குடிச்சிக் கெடக்கானாம். அவன் ஆத்தா செல்லம்மா வந்து சொல்லி அழுதுட்டுப் போறா. இன்னிகுனு பாத்து ஒரு கல்யாண ஆர்டர். அதான் வெறகு மண்டில நானே வெறகு அள்ளி போடவேண்டியதாப் போச்சு. குனிஞ்சு நிமிந்ததில முதுகு தான் கொஞ்சம் வலிக்குது.

துள்ளிக்குதிக்கிற வயசுனு நெனைப்பாய்யா உமக்கு. இன்னோரு ஆளப் போட்டு வேலையப் பாக்கவேண்டியது தானே. என்ன வெறகு மண்டி வச்சு நடத்தறே ? ஊரோட இலவசமா கேஸ் அடுப்பு வேற கவுருமெண்டு கொடுக்குது. வெறகு விக்கிறாராம் வெறகு. நாவன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் பரமசிவம் புலம்பும் புலம்பல் தானிது.

வந்திட்டாரு சிவம். சிவய்யா, நீயும் சொல்லிகிட்டே தான் இருக்கே. நானும் கேட்டுக்கிட்டே தான் இருக்கேன். கையக் கால மடக்கி, ஒடம்ப வளச்சி, வேல பாத்து சாப்பிட்ட உடம்புய்யா. சும்மா உக்காந்து சாப்பிட மனம் வரமாட்டேங்குது.

மேல்துண்டை உதறி படிக்கல்லில் போட்டு நாவன்னாவின் அருகில் பரமசிவமும் அமர்ந்தார். இப்பவாவது சொல்லுமய்யா, ஸ்ரீவிமானத்தின் உச்சியில் இருக்கும் 80 டன் கல், ஒரே கல்லா ? நமக்குத் தெரிஞ்சு அது ஒரே கல்லுனு தான் படிச்சிருக்கோம். ஆனா அது இரு கற்கள் என்றும், ஆரஞ்சுச் சுளையென ஆறேழு கற்கள்னும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களே என்றார்.

உம்ம குசும்பு உம்ம விட்டுப் போகுமாய்யா. என் தம்பி மக கற்பகம் புகுந்த வீடு மூலமா, கணபதி ஸ்தபதி சொந்தக்காரன்னு சொன்னதில இருந்து கோவிலப் பத்தி ஏதாவுது கேட்டுக்கிட்டே இருக்கியே. ஸ்தபதி அவர்களயே ஓரிரு முறைதான் பாத்துருக்கேன். அவுக பாட்டன் பூட்டன் கட்டுன கோவில் பத்தி எனக்கு என்னய்யா தெரியும் என்று சீறித்தள்ளினார் நாவன்னா.

சரி விடுமய்யா. என்னத்த சொல்லிப்புட்டேன். இம்புட்டுக் கோபம் வருது இந்த வயோதிக வாலிபருக்கு என்று மீண்டும் சீண்டினார் பரமசிவம்.

என்னவிட நீர் ரெண்டு வருசம் மூப்புன்றத மறக்காம இருந்தாச்சரி என்றார் நாவன்னா புன்முறுவல் பூத்தபடி.

வட்ட பல்புகளும், நீள ட்யூப்லைட்டுகளும் மினுக்கி கோவில் வளாகம் முழுதும் ஒளி பரவியது. கம்பீரமாகக் காட்சி அளித்தது ஸ்ரீவிமானம். நந்தியின் மேல் தடவிய எண்ணையின் பளபளப்பில் மேலும் மின்னியது நந்தி மண்டபம். கோவிலிருந்து ஓரிருவராக வெளியேறத் துவங்கினர்.

நம்ம நக்கல் பேச்சு கெடக்கட்டும். என்னவாம் அந்த பயலுக்கு, எதுக்கு வெஷம் குடிச்சானாம் என்று நாவன்னாவைக் கேட்டார்.

வா நடந்துகிட்டே பேசிக்கிட்டு போகலாம் என்று நாவன்னா எழுந்தார். பரமசிவமும் அவரைத் தொடர்ந்தார். மண்டபத்தை விட்டு இறங்கி இருவரும் நடக்கத் தொடங்கினர்.

மராத்தியர் கட்டிய கோட்டைச் சுவர் வாயிலில் சுந்தரபாண்டியனின் தாய் நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டு கொண்ட நாவன்னா, என்னம்மா பய எப்படி இருக்கான் இப்போ என்றார். அழுத அவளின் கண்களால் வீங்கியிருந்தது ஒட்டிப்போன கன்னங்கள்.

நைந்துபோன முந்தானையை வாயில் வைத்தபடி
, கண்களில் நீர் பெருக்கெடுக்க "அப்படியே தான் கெடக்கான். சோறு தண்ணி எறங்க மாட்டேங்குதுய்யா". நெலக்குத்தின தேர் மாதிரி விட்டத்தை வெறித்த படி கெடக்கான்யா என்று தாங்கமுடியாத அழுகையை அடக்கிக் கொண்டாள்.

சுப்ரமணிக்குச் சேதி தெரியுமா என்று கேட்டார் பரமசிவம்.

ஊர் ஊரா போற பொளப்பு அவருக்கு. எப்ப வருவாருனு தெரியல. இப்ப எந்த ஊர்ல இருக்காருன்னும் தெரியல. எப்பவாவுது பக்கத்து வீட்டு போன்ல கூப்பிட்டு பேசுவாரு. அவரா கூப்புட்டாத்தான்யா என்று விம்மினாள்.

ஏதாவுது பேசறானா ? நான் என்ன செய்யட்டும் என்றார் நாவன்னா.

படிக்கனும், படிக்கனும்னு சொல்லிக்கிட்டே இருக்கான்யா. ஆயிரத்துக்கு மேல மார்க் எடுத்து என்னய்யா ப்ரயோசனம். மேலே படிக்க வைக்க முடியாத வசதியற்ற என் வயிற்றில் பொறந்து இப்படிக் கஷ்டப்படுறானே என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

படிக்கும்போதே உங்க வெறகு மண்டில வேலை செஞ்சுகிட்டே தானய்யா படிச்சான். அதையே முழுசா செய்யிடானு சொன்னாலும் கேக்க மாட்டேன்கிறான்யா என்று தளுதளுத்தாள்.

சரி சரி கண்ண தொடச்சுக்கவே. பெத்தவ கஷ்டம் எங்களுக்கும் புரியுது. நாங்க நாளைக்கு அவன வந்து பாக்குறோம் என்று சொல்லி, கையில் தொங்கிய மஞ்சப் பையில் கையைவிட்டு, சில நூறு ரூபாய்த்தாள்களை உருவி, செல்லம்மாளிடம் நீட்டினார் நாவன்னா. மேல்படிப்புக்கு நாங்க உதவி பண்றோம்னு சுந்தரபாண்டி கிட்ட சொல்லு. வேற ஏதாவுது உதவி தேவைனா சொல்லு என்று சொல்லி அவளை அனுப்பிவைத்தனர் பரமசிவமும் நாவன்னாவும்.

சோகம் அப்பிய செல்லம்மாளின் விழிகள் வியப்பில் ஆனந்தக் கண்ணீர் சிந்தியது முதல் முறையாய். கைகூப்பி இருவரையும் வணங்கி வீடு நோக்கி விறைந்தாள்.

சிறிது தூரம் நடந்து, யாரும் அவர்கள் அருகில் இல்லை என்று அறிந்து, "ஏய்யா நாவன்னா, புத்தி மழுங்கிப் போச்சாய்யா உமக்கு. நல்லாப் படிக்கிற பையனையா வேலைக்கு வெச்சிருந்தே ?" கையக் கால மடக்கி வேல செஞ்சு சாப்பிட்டா மட்டும் போதுமா ? அந்த வைராக்கியம் செய்யற செயல்லயும் இருக்க வேணாமா ? ஒன்னுமில்லாத பயலெல்லாம் ஓகோனு இருக்க இந்தக் காலத்தில படிக்கிற ஒரு பய அழியலாமா ? அதுக்கு நாமலும் உடந்தையா இருக்கலாமா ? என எண்ணையிலிட்ட எள்ளாய்ப் பொறிந்து தள்ளினார் பரமசிவம்.

படிப்புச் செலவுக்கு எங்க வருமானம் பத்தல. நீங்க உதவி பண்ணி அவனுக்கு வேல போட்டுக் கொடுங்க. அந்த சம்பளத்தில அவன் படிச்சிக்கிருவான் என்று ஆத்தாளும், அப்பனும் விழுந்து கெஞ்சினதுக்கு நான் பண்ணின காரியம் அது. என்ன பண்ணச் சொல்றே இப்போ என்று சீறினார் நாவன்னா.

கோவிலைச் சுற்றி வந்து தற்போது சிவகங்கைக் குளத்தருகே இருந்தனர் இருவரும். குப்பையும், முட்புதர்களும் அண்டி இருந்தது. ஒருகாலத்தில் அரண்மனைக்கு இணையாக பராமரிக்கப் பட்ட இடமாக இருக்கலாம் ! குப்பையில் தான் மாணிக்கம் இருக்கும் என்பதால் குளமெங்கும் குப்பையோ என்னவோ !

நாளைக் காலை நேரா சுப்ரமணி வீட்ல சந்திப்போம் என்று சொல்லி இருவரும் விடைபெற்றனர்.

குடியானவர் தெரு, வெறித்த கண்கள் விலகாமல் மேல் பார்த்துக் கிடந்த சுந்தரபாண்டியனின் அருகில் செல்லம்மாள் விரித்த கிழிந்த பாயில் அமர்ந்திருந்தனர் பரமசிவமும், நாவன்னாவும்.

முட்டாப்பய மவனே, இப்படிப் பண்ணிப்புட்டியேடா. மார்க் எடுக்கத் தெரிஞ்ச உனக்கு மத்த விசயம் தெரியலையேடா. படிச்சா மட்டும் போதுமா? உன்கிட்ட வசதியில்லேன்ற காரணத்துக்காக உசிரக்குடுக்கத் துணிஞ்ச நீ, அந்த வைராக்கியத்தை உங்க ஆத்தா சொல்ற மாதிரி முழுநேரம் வேலை செஞ்சு நாளப்பின்ன ஒரு பெரிய ஆளா ஆகிக் காமிக்க வேண்டாமா ?

தமிழ் நாட்டையே ஆண்ட காமராசர் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சாருனு தெரியுமா உனக்கு. பள்ளிக்கூடத்தில் மழையைப் பார்த்துக்கொண்டு படிக்காமல் போன கி.ரா. ஒரு பல்கலைகழகத்துல சிறப்புப் பேராசிரியரா இருந்திருக்கார். கண்ணதாசன் படிச்சாரா என்ன ? எத்தனையோ கவிஞர்கள் இன்னிக்கு இருந்தாலும் உலகம் பூரா அவரத் தான இன்னும் கவியரசர்னு சொல்லுது. இப்படியே சொல்லிகிட்டே போகலாம் படிக்காத மேதைகளைப் பத்தி. வைராக்கியத்துல வேகமா இருக்கத விட விவேகமா இருக்கனும். பாடத்தவிட இதையல்லவா நீ படிச்சிருக்கனும் மொதல்ல. யோசிக்கறதே இல்ல, இந்தக் காலப் பசங்க சட்டுபுட்டுனு முடிவெடுக்கறீங்க. வாழ்ந்து காட்டணும், அது தான் வைராக்கியம்.

செல்லம்மாள் கொடுத்த நீர்க்காபியை அருந்திக் கொண்டே பரமசிவம் சொன்ன சொற்கள் காபியைவிடச் சூடாய் இருந்தது.

நாவன்னா கிட்ட பேசி உன்னோட படிப்புச் செலவுக்கு உதவி பண்ணச் சொல்லியிருக்கேன். நடந்தத மறந்துட்டு நல்லாப் படிச்சு, வேலைக்குப் போய்ட்டு பிற்பாடு நாவன்னாவுக்கு settle பண்ணிடு. என்ன நாஞ்சொல்றது என்று கேட்டார் பரமசிவம்.

கண்கள் மெல்லத் துடிக்க, உடலை சற்று நெளித்து எழுந்து அமர்ந்தான் சுந்தரபாண்டி. நாவன்னாவிடம், எப்ப வரணும்னு சொல்லுங்கய்யா வேலைக்கு என்றான் !

நாற்பது வருடம் முன்பு இவ்வுலகைவிட்டுப் பிரிந்த தன் தமையன் வேலுச்சாமியின் எண்ணம் பரமசிவத்தின் கண்களில் முத்துக்களாய் உதிர்ந்தது.

மார்ச் 30, 2009 யூத்ஃபுல் விகடனில்

-------------

இது எங்க சங்கத்து இருநூறாவது (200) பதிவு. அத பதியறதுல முதல்ல பெருமைப்படறேன். இந்த எண்ணிக்கைகு உழைத்த எங்க சங்கத்து மக்கள் அனைவருக்கும் என்னோட நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.

இதுவரைக்கும் படித்து, பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இனிமேலும் படிக்கப் போகிறவர்களுக்கு நன்றிகள் பல.

தஞ்சைப் படம், நம்ம தமிழ் ப்ளாக்ல இருந்து எடுத்து போட்டிருக்கேன். அதன் உரிமையாளருக்கு என் நன்றி.

கதை பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

படம் பாரு கடி கேளூ - 13


ஐயையோ! ஒவரா குங்பூ ஜம்ப் பண்ணிட்டேனோ? அது என்னது கீழே கார் பஸ் எல்லாம் போகுது?

படம் பாரு கடி கேளூ - 12


ஆ! ஆ! டாக்டர் அந்த கடைசி பல்லு தான் கொஞ்சம் வலிக்குது. தைரியமா கையை விட்டு பாருங்க ப்ளீஸ்.

படம் பாரு கடி கேளு - 11


அப்பா! என்ன கனம்! கடைசி வரை இந்த பளு தூக்கிற போட்டியிலே எதை தூக்கணும்னு சொல்லாம ஏமாத்திட்டாங்களே! என் முதுகு வேறு நமநமன்னு அரிக்குது. யாராவது சொரிஞ்சு விடுங்க ப்ளீஸ்!

Wednesday, June 20, 2007

சிவாஜி வாயிலே ஜிலேபி


சின்ன வயதில் எல்லோரும் இந்த குறுக்கெழுத்து வார்த்தைகளை கேள்விப்பட்டிருப்பீர்கள். இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும், வார்த்தைகள் மாறாது. எனக்கு நினைவிருக்கும் இரண்டு:



சிவாஜி
வாயிலே
ஜிலேபி



டி
யில்
டில்லி



சிவாஜி வாயிலே ஜிலேபி என்றால் ரசிகர்கள் வாயில் என்ன என்று முயற்சித்தேன். இதற்கு மேல் போகமுடியவில்லை.



சி
சிவாஜி
ஜினி




இதிலும் முழு வார்த்தைகளில்லை. நாலெழுத்தில் ஒன்றும் தோன்றவில்லை. பார்ப்போம். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் பின்னூட்டத்தில். நான் ஜெயிப்பவர்களுக்கு தண்டனையாக ஒரு தசாவதாரம் டிக்கெட் :-)

பின்னூட்டமிடும் மக்களே - நான் பாலின்ட்ரோம் தேடவில்லை. பாலின்ட்ரோம் என்றால் இடமிருந்து வடமாகவும் வடமிருந்து இடமாகப் படித்தாலும் ஒன்றாக இருக்கும். நான் கேட்பது - மூன்று வார்த்தைகள் - மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் - அட மேலே இருக்கும் வார்த்தைகள் போல - இருக்க வேண்டும்.

Monday, June 18, 2007

பொல்லாதவன்


பொல்லா தவனெறி நில்லா தவனைம் புலன்கடமை
வெல்லா தவன்கல்வி கல்லா தவன்மெய் யடியவர்பாற்
செல்லா தவனுண்மை சொல்லா தவனின் திருவடிக்கன்
பில்லா தவன்மண்ணி லேன்பிறந் தேன்கச்சி யேகம்பனே.


சத்தியமாக இது நான் எழுதியதல்ல. கிண்டலாக வேறு யாரும் சமீபத்தில் யாரும் எழுதியதுமல்ல. நம் வெண்பா வேந்தர் சதங்காவையே கொந்தளிக்க வைக்கும் ரஜினி படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை :) நம்மை பட்டினத்தார் சில நாட்களுக்கு முன் அலைக்கழித்தார் இல்லையா? அதிலிருந்து அவ்வப்போது அவரைக் கொஞ்சம் கண்டுகொள்வது வழக்கமாயிருக்கிறது. அப்படி கண்டுகொள்ளும்போதுதான் கண்டுபிடித்தேன் திருவேகம்பமாலையில் ஒளிந்திருக்கும் பொல்லாதவனையும், பில்லாவையும். மண்சோறு உண்டுவிட்டு பால்குடம் சுமந்து செல்லும் வழியில் இதைப் பாடிக்கொண்டு சென்றால் கொஞ்சம் புண்ணியம் கிட்டும்.

மேலே இருக்கும் பாடல் எளிமையானதுதான். இதை நீங்கள் உங்களுக்கு தெரிந்த பாடல் மெட்டில் பாட முயற்சித்தால் நான் பொறுப்பில்லை.(இரண்டாவது வரியிலேயே சித்து விளையாட்டு ஆரம்பித்து விடுகிறார் பட்டினத்தார்). இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையென்றால் தமிழை நீங்கள் சன் டீவியோடு நிறுத்திக்கொல்வது உத்தமம்.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.


வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம தாம்பொழுது
காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே.


இதில் மூன்றாம் அடிக்குத்தான் கொஞ்சம் உதவி வேண்டும். சூரிய சந்திர வொளிபோல ஆத்மா ஒளிமயமாகிற பொழுது(இறங்குங்காலத்தில்) மரணத்தின் பின்னுள்ள வழித்துணைக்குக் காதறுந்த ஊசியும் உடன் வாராது.

பட்டினத்தார் பாடல்கள் - திரு.வி.க. விளக்கவுரை. பொழிப்புரையும், விருத்தியுரையும் எழுதியிருக்கிறார். பல இடங்களில் மற்ற இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையைக் கூட்டுகிறது. காதற்ற ஊசி பற்றி சொல்லும்போது, "பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால், உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார், கொண்ட விரதமும் ஞானமும் அல்லது, மண்டி அவருடன் வழிநடவாதே" திருமந்திரம்.

அன்னையின் தேகத்தை வாழைமட்டைகள் மேலிட்டு எரியச் செய்த பாடல்:


முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
அன்னை யிட்டதீ யடிவ யிற்றிலே
யானு மிட்டதீ மூள்க மூள்கவே.


தாயைப் பற்றி உருகி உருகி பாடிய பட்டினத்தார் ஏன் பெண்களை போட்டுத் தாக்குகிறார்? தாயும் ஒரு பெண்தான் என்பதை மறந்ததேனோ?
இன்னும் நிறைய இருக்கிறது. ஒரு சில பாடல்களைப்பற்றி அவ்வப்போது எழுத உத்தேசம். ரிச்மண்ட் மக்கள் கரும்பு கொண்டு நம்மை புடைக்காமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

கங்கை புத்தக நிலையத்தாருக்கு ஒரு வேண்டுகோள். இப்படி பொ-ரை, வி-ரை என்று சுருக்கவேண்டாம். சுருக்கவேண்டுமென்றால், பொ:, வி: என்று எழுதினால் போதும்.