Sunday, July 09, 2017

இரண்டு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருமா, எப்படி? (ஞா.போ)


ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது மேலே உள்ள கேள்வி வந்தது.

மகிழ்ச்சி. பார்த்திடுவோம்.
 
தலைப்பிற்குள் போகும் முன் இன்னொரு குறிப்பு:
அமெரிக்கச் சாலைகளின் 1 U turn = 2 left turns என்று தனித்தனியாகக் கருதும் விதியைப் போல தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் மெய் + உயிர் என்று தனித்தனியாகவே கருதப்படுகிறது. அசை பிரிக்க மெனக்கெட வேண்டியதில்லை.
 
எ.கா:
அம்மா = அ + ம் + ம் + ஆ

இப்படி, இரு மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவதை வெகு இயல்பாக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதுபோல வரும் மெய்யெழுத்து பயன்பாட்டிற்கு ஒரு கலைச்சொல் (Technical term) இருக்கிறது.

மெய் மயக்கம்.

அதில் உட்பிரிவுகள் உண்டு. என்னென்ன எழுத்துக்கள் எதனை தொடர்ந்து வர வேண்டும் என்பதற்கெல்லாம் விதிகள் உண்டு. தமிழ் கற்போரை மிரட்ட அல்ல; கவிதைகளின் (பாடல்/பா/செய்யுள்) ஓசை இனிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த விதிகள்.

மெய்ம்மயக்கத்தில் ஒரு வகை உடனிலை.
அம்மா = ம் என்ற மெய், தன்னுடன் இன்னொரு முறை தானே வரும் நிலை.
உடன் + நிலை.

அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை (தொ.கா)
இது போல் எளிய வகைகளும் அதனைக் குறிக்க விதிகளும் உள்ளன.

இப்போதைக்கு முதல் வரியில் கேட்ட கேள்விக்கு பதில்:
மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும். அதற்கு பெயர் மெய்மயக்கம் (மெய்ம்மயக்கம் என்றும் சொல்வதுண்டு).

மெய் எழுத்தைத் தொடர்ந்து உயிர்மெய்யாக இல்லாது straight-ஆக இன்னொரு மெய் எழுத்து வருவது ஈரொற்று மயக்கம்.
பெரிசா ஒன்னும் இல்லை.
இரண்டு ஒற்று மயக்கம் = ஈரொற்று மயக்கம். அவ்வளவுதான்.

மூன்று மெய்கள் கூட மயங்கி (சேர்ந்து) வரும்: வாழ்த்து = வா + ழ் + த் + த் + உ

Btw, மயக்கம் என்றால் சேர்ந்து வருதல். தலை சுற்றல் மட்டுமில்லை.
தமிழ் படிக்கையில் தலைசுற்றல் இருக்கக் கூடாது. :)

என் பங்குக்கு இரு சொற்களை இரண்டாம் வரியில் சொல்லி இருக்கிறேன். 
(மகிழ்ச்சி, பார்த்(த்+இ)டுவோம் = பார்த்திடுவோம்)
படிப்பவர்களும் உங்கள் பங்குக்கு முயன்று பாருங்கள்
​இனிய, எளிய தமிழ்.
வாழ்க.​
 
 


 

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!