Sunday, January 22, 2012

ரயில் பயணங்களில்

இந்த மாதம் 7-ம் தேதி நியூயார்க் டைம்ஸ்  தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி.

நியூயார்க் நகரத்தில் மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகம் இல்லாத விடியற்காலத்தில் நான்கு மணி அளவில் ஒரு பிரயாணி பயணம் செய்த கொண்டிருந்தார். கூட்டம் அதிகம் இல்லாததாலும்  எதிர் வரிசை காலியாக இருந்ததாலும்  ஒரு காலை எதிர் சீட்டில் வைத்தபடி தூங்கிவிட்டார். அப்படி பயணம் செய்வது குற்றம் என்று கூறி காவல்துறை அதிகாரி அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மாஜிஸ்டிரேட்டிடம்  அந்த பிரயாணியை ஒப்படைத்து  12  மணி நேரம் கழித்துதான் அவரை விடுதலை செய்தனர். அவர்  அபராதத் தொகையாக  50 டாலர் கட்டினார்.

            பயணம் செய்யும்போது இங்கிதம் இல்லாமல் நடந்து கொண்டு சக பிரயாணிகளுக்கு இடையூறு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாம். காவல்துறையினர் இது போன்ற விஷயங்களில் கடுமையாக நடந்துகொண்டு  சிறிய குற்றங்களுக்கு கூட நடவடிக்கை எடுப்பது தொடர்ந்து நடப்பதாக புகார்  எழுந்துள்ளது.  இப்படி நடவடிக்கை எடுப்பதால் மெட்ரோ ரயிலில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் பேசப்படுகிறது.


          சென்ற நவம்பர் மாதத்தில் இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பிரயாணி கைது செய்யப் பட்டார். அவர் ஒரு சர்க்கரை நோயாளி. காலியாக இருந்த எதிர் சீட்டில் கால் வைத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் இன்சுலின் போட்டுக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர். ஆகையால் சில மணி நேரம் அவர் இன்சுலின் இல்லாமல் இருக்க நேர்ந்தது. அவர் மயக்கமடைந்து கீழே விழ காவல் துறையினர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள். மூன்று நாள் மருத்துவமனை வாசத்துக்கு  பிறகு வீடு திரும்பியிருக்கிறார். அது விஷயமாக அரசாங்கத்துக்கு 150,000 டாலர் செலவானது என்றும் அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.


       இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எனக்கு இந்த செய்தி கேட்கவே வேடிக்கையாக இருந்தது. சிரித்து முடித்த பிறகு எனக்கு ஏற்பட்ட ரயில் பயண அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. இந்தியாவில் எதிர்  சீட்டில் உட்கார்ந்திருப்பவர் மேலே கூட கால் போட்டுவிட்டு  கவலைப்படாமல் இருக்கும் பிரயாணிகளை நிறையவே பார்த்திருக்கிறேன். இது சம்பந்தமாக  பயணிகளுக்கு இடையில்  வாக்குவாதமோ சண்டையோ வந்தால் பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடுவார்கள். தொடரும் சண்டை சில சமயம் ஊர் போய்ச் சேரும் வரை கூட நீடிப்பதுண்டு. வடநாட்டு பகுதிகளில் ரயில் சண்டை இன்னும் உக்கிரமாக இருக்கும். அசந்தால் சாமான்களைக் கூட  ஆட்கள் மேல் அடுக்கிவிடும் வேடிக்கை நடப்பதுண்டு.


     இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில்  ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.


        ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. நேரடியாக பாதிக்கப்பட்டபோது சங்கடப்பட்டதும் உண்டு. ஒரு அனுபவத்தை மட்டும் இங்கே குறிப்பிடுவது சரியாக இருக்கும்.


          பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பதி போயிருந்தேன். திரும்பி வரும்போது ரயிலுக்காக ஸ்டேஷனில் காத்திருந்தேன். திருப்பதியில் கூட்டத்திற்கு  கேட்கவா வேண்டும். முதல் வகுப்பு பயணிகள் தங்குவதற்கான தங்கும் அறையில் ஓய்வாக  சில நிமிடம் உட்காரலாம்  என்று எண்ணினேன். மனைவியை பெண்களுக்கான தங்கும் அறையில் உட்காரவைத்துவிட்டு முதல் வகுப்பு தங்கும் அறைக்குள் நுழைந்தேன். எல்லா நாற்காலியிலும் பயணிகள் உட்கார்ந்த்ருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள்  சற்று கணித்து பார்த்தபிறகு குடும்பமாக உட்கார்ந்திருந்த ஒரு மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்ததை கவனித்தேன். அந்த நாற்காலியில் போய் உட்காரலாமென்று அந்த இடத்தை நெருங்கினேன்.


      ஓரளவு வட்டமாக இருந்த அந்த மேஜையைச் சுற்றி போடப்பட்டிருந்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அடுத்த நாற்காலியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அந்த பெண்ணின் தாயாக இருக்கலாம். அதற்கடுத்த  நாற்காலியில் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் உட்கார்ந்திருந்தான். அடுத்த நாற்காலியில் ஒரு நடுத்தர வயது நபர் அமர்ந்திருந்தார்.  அந்த பெண் அருகில் இருந்த நாற்காலி மட்டுமே காலியாக இருந்தது. நான் நெருங்கிச் சென்றதும் அதில் உட்கார வருகிறேன் என்பதை புரிந்துகொண்ட அந்த பெண் ஒரு காலைத் தூக்கி காலியாக இருந்த அந்த நாற்காலியில் வைத்துக் கொண்டாள்.


         நான் அந்த நாற்காலியை சற்று நகர்த்தி போட்டுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு மேல் பகுதியில் கை வைத்த அதே நேரத்தில்தான் அந்த பெண் நாற்காலியில் உட்காரும் பகுதியில் காலை வைத்தாள். நான் இதை எதிபார்க்கவில்லை. கையை எடுக்காமல் அந்த பெண்ணை  பார்த்தேன். நாற்காலியை என்பக்கம் இழுக்கலாமா என்று  யோசித்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் சற்று நேரம் பேசாமலிருந்தேன். பாதம் தொடும்  வகையில் ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த பெண்ணுக்கு பதினைந்து அல்லது சற்று கூடுதலான வயது இருக்கலாம். காலைத் தூக்கி நாற்காலியில் வைத்ததால் சற்று சரிந்த உடையை சரி செய்த கொண்டு என்னைப் பார்த்தாள்.நான் அந்த பெண்ணையே உற்று கவனித்தேன். உடனே அந்த பெண் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். பக்கத்தில் அமர்ந்திருந்த தாயும் நிலைமையை புரிந்து கொண்டாள். நான் உட்காருவதை தவிர்க்கவே காலைத் தூக்கி நாற்காலியில் வைத்த பெண்ணிடம் எதுவும் சொல்லாமல் அவளும் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அடுத்த நாற்காலியில் அமர்ந்திருந்த சிறுவன் சுவாரஸ்யமாக ஏதோ தின்பண்டத்தை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இவ்வளவும் ஒரு நிமிடம் நீடித்திருக்கும். நான் நாற்காலியில் கை வைத்தபடியே நின்றிருந்தேன்.

         சிறுவனுக்கு அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த நபர், அந்த பெண்ணின் தந்தை என்று நினைக்கிறேன். அவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருந்து என் அருகில்  வந்தார். நான் அதைப் பொருட்படுத்தாமல் நின்றேன். அருகில் வந்தவர் நாற்காலியில் வைத்திருந்த அந்த பெண்ணின் காலில் ஓங்கி ஒரு அடி வைத்தார்; அடி சுளீரென்று நன்றாகவே விழுந்தது. உடனே அந்த பெண் எழுந்துகொண்டு சற்று பின்னே சென்றாள். உடனே அந்த பெண்ணின்  தாயும் எழுந்திருந்து கணவரிடம் ஏதோ சத்தம் போட்டாள் தெலுங்கு மொழியில்  பேசியதால் எனக்கு எதுவும் புரியவில்லை. அவரும் கோபமாக சில வார்த்தைகளை பதிலுக்கு பேசிவிட்டு என்னிடம் நெருங்கினார். என்னிடம் நாற்காலியை காட்டிஉட்காரச் சொல்லி தெலுங்கில் பேசினார். நான் எனக்கு தெலுங்கு தெரியாது என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.


        அந்த பெண் காலி செய்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச்
சொல்லி என்னிடம் கூறினார் சரளமான ஆங்கிலத்தில்பேசினார். நானும் ஒப்புக்காக சில
வார்த்தைகள் பேச வேண்டுமென்று அவரை சமாதானப் படுத்தினேன். என்ன இருந்தாலும் பெண்ணை நீங்கள் அடித்திருக்கவேண்டம் என்றேன். இதுவெல்லாம் தலைமுறை (generation gap) பிரச்னைகள்  என்றேன். என்ன தலைமுறைக் கோளாறோ, வயதில் பெரியவருக்கு இடம் கொடுத்து உட்காரவைக்க வேண்டும் என்ற அடிப்படை பண்பாட்டைக்  கூட இழந்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையாகவே  ஆதங்கத்துடன் கூறினார்.

      நீங்கள் ரொம்பவும் வேதனைப்பட்டீரா  என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை பொதுவாகவே இப்பொழுதெல்லாம் இது போல நடந்துகொள்ளும் இளைய தலைமுறையினர்தான் அதிகம் என்றேன்.  அந்த பெண் கண்ணை கசக்கிக் கொண்டு சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தாள் அவர் எழுந்திருந்து  அந்த பெண்ணிடத்தில் போய்  ஏதோ சொன்னவுடன் அவருடைய மனைவி பெரிய குரலில் அவரிடம் எதிர்குரல் கொடுத்தாள். நான் அவரை திரும்ப அழைத்து பிரச்னையை இத்துடன் விடுங்கள் என்று கூறி வேறு விஷயத்தை பேசத் தொடங்கினேன்  அவருடைய பெயரைக் கேட்டேன்,  ஊரைக் கேட்டேன்.

          மனிதர் பண்பானவராகத் தெரிந்தார். சற்று நேரம் உலக நடப்பை மற்ற ஏதோ விவரங்களைப் பேசினார் நான் புறப்பட வேண்டிய ரயில் வரும் நேரத்தில் அவரிடம் சொன்னேன், உங்கள் பெண்ணுக்கு நான் உண்மையிலேயே நன்றி சொல்ல வேண்டும் ஒரு நல்ல மனிதரை சந்திக்க இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது உங்கள் பெண்தானே என்றேன். அவர் சிரித்துக் கொண்டே என்னிடம் விடை பெற்றுக் கொண்டார்.

               சற்று தள்ளி நின்ற அவருடைய மனைவியும் அந்த பெண்ணும் இன்னும் சமாதானமாகவில்லை என்று தெரிந்துகொண்டேன். அவர்களிடமும் சிரித்தபடியே போய் வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டேன். இரண்டு பேரிடத்திலும் எந்த அசைவும் இல்லை.
- மு.கோபாலகிருஷ்ணன்

10 comments:

  1. எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு!

    ReplyDelete
  2. சம்பவ இடத்திற்குக் கூட்டிச் செல்லும் அருமையான எழுத்து நடை. கடைசிக்கு முந்தின பத்தி நெகிழ வைக்கிறது.

    ReplyDelete
  3. அமெரிக்காவில் அடுத்த இருக்கையில் கால் வைக்கக் கூடாது என்ற விதிமுறை எனக்குத் தெரியாது. நல்ல வேளை தெரிவித்தீர்கள். அருமையான கட்டுரை. நன்றி.

    ReplyDelete
  4. இந்தியாவில் முதல்வகுப்பில் யாரும் பயண சீட்டு இல்லாமல் நுழைந்துவிடமுடியாது.அதனால் மட்டுமே தொல்லை இல்லை.நீங்கள் குறிப்பிட்ட படி வடநாட்டு ரயில் பிரயாணங்கள் இன்னமும் அப்படித்தான்.எவ்வளவு நிறுத்தங்கள் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தொல்லைகளும்,பயணிகளுக்கு வசதிகுறைச்சல்களும்,தொந்தரவுகளும் அதிகமாக இருக்கும்.சுதந்திரம் கிடைத்த காலத்தைய ரயில் பயணத்தைப்பற்றி ஒரு மேனாட்டு பெண் எழுத்தாளரது கட்டுரை ஒன்று பித்தது நினைவுக்கு வருகிறது."முதல் வகுப்பு பிரயாணிகள் ரயில்வே பணியாளர்களை கவுரவ குறைச்சலாக நடத்துகிறார்கள். மூன்றாம் வகுப்பு பிரயாணிகளை ரயில்வே பணியாளர்கள் கவுரவ குறைச்சலாக நடத்துகிறார்கள். இரண்டாம் வகுப்பு பிரயாணிகளும்,ரயில்வே பணியாளர்களும் ஒருவரை ஒருவர் கவுரவ குறைச்சலாக நடத்திக்கொள்கிறார்கள்."

    ReplyDelete
  5. என்னது, நம்ம தார்மீக உரிமைல போலீஸ் தலையிடுதா? இதெல்லாம் ரொம்ப ஓவர். போலீஸ்னா எப்படி இருக்கனும்னு தமிழ்நாட்டுல ஒரு ட்ரெயினிங் எடுத்துக்க சொல்லனும். 2-3 வருஷம் முன்னாடி சென்னைக்கு போயிட்டு அங்க இருந்து பங்களூருக்கு ட்ரெயின்ல போகலாம்னு ப்ளான் பண்ணி விடிய காலைல சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் போனா, அதிகாலை 5 மணிக்கு ஒரு 20-30 பிச்சைக்காரங்க நம்மள காரை விட்டு (வாடகை கார்தான்) இறங்க விடாம சொல்லை பண்றாங்க. அவங்களத் தாண்டி ட்ரெயின் வர்ர ப்ளாட்ஃபார்ம் போனா, அங்க இருக்கர பென்ச் எல்லாத்துலேயும் பிச்சைக்காரங்க தூங்கிட்டு இருந்தாங்க. நியூயார்க் ரூல் நம்ம ஊர்ல கண்டிப்பா செல்லுபடியாகாது. அதனால, ஒரு பெட்டிஷன் போட்டுட வேண்டியதுதான்

    மு.கோ. உங்க பதிவுல எங்க ட்விஸ்ட் இருக்குன்னு யூகிக்கவே முடியாது. அதை இந்தப் பதிவுலயும் வெச்சுட்டீங்க. சதங்கா சொன்ன மாதிரி கடைசி பாரவுக்கு முந்தின பார அபாரம்.
    முரளி

    ReplyDelete
  6. சத்யா - அடுத்த சீட்டில் காலை வைக்கக் கூடாது என்பது இந்த நாட்டின் விதியல்ல. நியுயார்க் நகர சட்டம். அதற்காக இங்கே சீட்டில் கால் வைத்துவிட்டு அபராதம் கட்ட நேர்ந்தால் என்னிடம் வரக்கூடாது :-)

    ReplyDelete
  7. புதுகை செல்வா - வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி. பிரயாணிகளும் ரயில்வே ஊழியர்கள் பற்றிய கருத்து தமாஷான உண்மை...

    ReplyDelete
  8. நாகு, இந்த நியூ யார்க் விதி ரொம்ப ஓவர். ஆயிரம் டாலர் அபராதம்னு சொல்லுங்க, ஓகே, ஆனா கைதுங்கறது ஏதோ ஒரு மாங்கா மடையன் கிறுக்கின ரூல். யாராவது பெரிய அளவுல வழக்கு போட்டா இத ரத்து பண்ண முடியும்னு நெனக்கிறேன். தூங்கும் போது தெரியாம பக்கத்து சீட்டுல சாஞ்சா கைதுன்னா நியூ யார்க்குக்கும் காபூலுக்கும் என்னய்யா வித்தியாசம் ?

    ReplyDelete
  9. சத்யா,
    ஆக, நாற்காலில கால் வெச்சா அதுக்கு 1000 டாலர் வரைக்கும் குடுக்கலாங்கரது உங்க பட்ஜெட்டா? அவ்வளவு வசதி மிக்க புலவரா நீங்க. நமக்கு 5-10 டாலர் போட்டாலே போச்சு, அந்த மாச பாக்கெட் மணில பாதி கட்டு. இதுகெல்லாம் சண்டை போட்டுகிட்டு இருந்தா விளங்கிடும்.

    முரளி

    ReplyDelete
  10. தாத்தா ,
    மிக அருமையான கட்டுரை ...Generation Gap என்று நீங்கள் கூறியது மிகவும் சரி... இன்றும் சில இளைஞர்கள் பஸ்ஸில் ரயிலில் பயணம் செய்யும் வயதான ,கர்பிணி பெண்கள்,ஊனமுற்றோருக்கு இடம் தர யோசனை செய்கின்றனர்...அரசாங்கம் இட ஒதுக்கீடு கொடுத்தாலும் , சில மக்கள் இடம் கொடுக்க யோசிகிறார்கள்...

    வைஷ்ணவி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!