Thursday, January 26, 2012

பி.கே.எஸ்ஸின் கனல் வரிகள் - 1

சினிமாவின் பால் நாட்டம் கொண்டோரும், அல்லது திரைப்படப் பாடல் வரிகளில் காதல் கொண்டோரும், இவரை சட்டென மறக்க இயலாது. இவர் பற்றி அறியாதார் கூட, இவரது ஒரு பாட்டைக் கேட்டால் போதும், இவர் யாரென அறிந்து கொள்ள பிரியப்படுவார்கள். சினிமாவின் மூலமே நமக்கெல்லாம் அறிமுகம் என்றாலும், தான் கொண்ட கொள்கையிலிருந்து, அரசியல் ஆகட்டும், நாடகம் ஆகட்டும், சினிமாவாகட்டும், பொதுவுடமைச் சித்தாந்தம் ஆகட்டும், சற்றும் மாறாமல், ஆரம்பம் முதல் கடைசி வரை, தன் பாடல் வரிகளில் அதைக் கையாண்டவர். நம் மனதில் என்றும் எளிதில் நினைவில் கொள்ளும் பேராற்றல் கொண்டவர், அவர் தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

'கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும்...' இங்ஙனம் தான் ப‌ட்டுக்கோட்டையாரைப் ப‌ற்றிச் சொல்கின்ற‌ன‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள். அநேக பிரபலங்களைப் போலவே பட்டுக்கோட்டையாரும் பள்ளிக்குச் சென்று அதிகம் படித்தவரில்லை. தந்தையின் வழியிலும், அண்ணனின் வழியிலும், சிறிது காலம் திண்ணைப் பள்ளியிலும் கற்றறிந்தார். அவ்வளவே. மிகச் சிறு வயதிலேயே, பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கையில் அவர் இயற்றிய‌ பாடல்:

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே - கரை
தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே !


ஒரு நாள், வயல் வேலை செய்து கொண்டு சிறிது ஓய்வெடுக்கையிலே, அருகில் இருக்கும் குளத்தில் பட்டுக்கோட்டையாரின் கவனம் செல்கிறது. அங்கே கெண்டைக் குஞ்சுகள் துள்ளி விளையாடும் அழகைக் கண்டு ரசிக்கிறது அவர் மனம். அடுத்த நிமிடம், சிந்தனை வயப்பட்டவரின் நெஞ்சினில் சித்தாந்த வரிகள் பிறக்கிறது. மேற்கண்ட வரிகளை, 'என்ன பிரமாதம்... சாதாரண வரிகள் தானே?' என்று எண்ணலாம். அப்படி எண்ணுவது மாபெரும் தவறு என்பது சற்று ஆழ்ந்து படித்தால் புரியும் நமக்கு. இதனுள்ளும் ஒரு சமூகக் கருத்தைத் திணித்து, எளிமையாய் (நமக்கெல்லாம் புரியனும்ல !) படைத்த வல்லமை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

'மனம் ஒரு குரங்கு', ஒரு இடத்தில் நில்லாது தாவிக்கிட்டே இருக்கும். குணம்? ... நிற்கிறதோ, தாவுகிறதோ, ஆனால், பல வகைகளில் இன்றும் பரிணமிக்கிறது. 'மிருகத்திலிருந்து வந்து விலகி ஆனால் மிருகத்தை விடக் கேவலமாய் இருக்கிறாயே' என எப்படி இவ்வளவு எளிமையாய், வலிமையான வரிகளில் !!! சொல்ல வார்த்தைகள் இல்லை ...

உறங்குகையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் - காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம்- ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்குதல் முதலைக் குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய்
வாழுதடா

பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது

(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)

இச்சுத்தா இச்சுத்தா ... மான் புலியை வேட்டையாடும் இட‌ம் க‌ட்டில், மே மாச‌ம் தொன்னித்தெட்டில் மேஜ‌ர் ஆனேனே ... போன்ற‌ க‌ருத்துச் செரிவு மிக்க பாடல்களைத் தந்து, க‌விஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் திரைப்ப‌ட‌ப் பாட‌ல்க‌ளுக்குத் த‌னி மகுட‌ம் சூட்டி எங்கேயோ கொண்டு சென்றுவிட்ட‌ன‌ர். இவை எல்லாம் பெண்களை இழிவுப‌டுத்துவ‌தாயில்லை? இவை போன்ற‌‌ பாட‌ல்க‌ளைப் பெண் பாட‌க‌ர்க‌ளே பாடியிருப்ப‌து தான் வேத‌னைக்குறிய‌து. இவ‌ற்றிற்கு நேர்மாறாக‌, அந்த‌க் கால‌த்திலேயே (பெரிய‌ விஷ‌ய‌முங்க‌ !) பெண்க‌ளை ம‌தித்து, அவ‌ளுக்கும் ஒரு ம‌திப்பைத் த‌ந்து மெருகேற்றிய பட்டுக்கோட்டையாரின் க‌‌ன‌ல் வ‌ரிக‌ள்...

பொறுமை இழந்திடலாமோ?
பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ? - நான்
கருங்கல்லு சிலையோ
காதலெனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ?

(ப‌ட‌ம்: க‌ல்யாண‌ப் ப‌ரிசு)

தமிழ் சினிமா மறபுப்படி வ‌ழக்கம் போல ம‌ர‌த்தைச் சுற்றி, காதலனும் காதலியும் ஓடி ஆடிப் பாடும் பாட்டு. சிற்சில இடைவெளி ஓட்ட‌ங்க‌ளுக்குப் பின் ஒரு ம‌றைவில் நிற்கும் காத‌லியின் விர‌லை, லேசாக‌த் தொட்டு விடுவான் காத‌லன். அவ்வ‌ள‌வு தான், அந்த‌ அம்மாவுக்குக் கோப‌ம் பொத்துக் கொண்டு வ‌ந்துவிடும். 'அடே அறிவு கெட்ட‌வ‌னே, என்னை மான‌ப‌ங்க‌ப் ப‌டுத்த‌ நினைத்த‌ மூட‌னே, உன்னைப் போய் காத‌லித்தேன் பார்' என்றெல்லாம் சீற‌வில்லை. பொறுமை இழந்து புரட்சியில் இறங்கிடாதே, எல்லாம் கல்யணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்ற இதமான சீற்றம் கொண்ட காதலியின் வரிகள் மேலே. இது அன்றைக்கு. இன்று நிலைமையோ வேறு. நேரா 'கட்டிப்புடி கட்டிப்புடி டா ... கண்ணாலா கண்டபடி கட்டிப்புடி டா...' தான்.

'தானத்தில் சிறந்த தானம் எது?' அப்படீன்னு எங்க ஹோம் மினிஸ்டர் கிட்ட கேட்டேன். அவங்க படக்குனு 'என்னது? கண்தானமா?'னு சீரியஸா கேக்க ... அதையினும் மிஞ்சியது ...'நிதான‌ம்' என்றேன். ந‌ம‌க்கு எப்ப‌டி இந்த‌ அறிவு ஞான‌ம் என்று அவ‌ங்க‌ளுக்கு ஒரே ச‌ந்தேக‌ம். முக‌த்திலேயே கேள்வி ப‌ட‌ர்ந்த‌து. ம‌ரியாதை (?!) நிமித்த‌ம் அவ‌ங்க எதும் கேக்க‌ல‌ :)

எம்.ஜி.யாரும் கலைவாணரும் நடித்த‌ 'சீர் மேவு குரு பாதம்' என்று தொடங்கும் கேள்வி ப‌தில் பாட‌ல். எளிமையான கேள்விக‌ள் அழுத்தமான பதில்கள். காய்ந்தவன் வயிறு பற்றியும், நயவஞ்சகனின் நாக்கு பற்றியும் உறைக்கும் பதிலில் நம் உடல் சிலிர்ப்பது உறுதி. க‌‌லைவாண‌ர் கேள்வி கேட்க‌, ஒத்தை வார்த்தையில் எம்.ஜி.ஆர். ப‌தில‌ளிப்பார்.

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்
...
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ
...
புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்
...
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது
(படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957)


இன்று, அதே ஒத்தை வார்த்தையில் பாடல் எழுதச் சொன்னால், நமது கவிஞர்கள் இப்படித் தான் எழுதுகிறார்கள். சமீபத்தில் வ‌ந்த ஒரு பாட‌ல், ந‌ம்மை எல்லாம் கிற‌ங்க‌டிக்கும் ... 'ஒத்த‌ சொல்லால எ(ன்) உசிர் எடுத்து வச்சிகிட்டா ... ரெட்ட கண்ணால ... என்ன தின்னாடா'



மேற்க‌ண்ட 'சீர் மேவு குரு பாதம்' பாட‌ல் ஒருசில‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ளில் 'கிளௌன் சுந்தரம்' என்பவர் எழுதிய‌தாக‌க் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ரியான‌ த‌க‌வ‌ல் தெரிந்த‌வ‌ர்க‌ள் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள். த‌க்க‌ ச‌ன்மான‌ம் நாகு ஐயா வ‌ழ‌ங்குவார்.


க‌ன‌ல் ப‌ற‌க்கும் ...

15 comments:

  1. சும்மா அதிருதில்ல... :-)

    பழைய பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். வரிகளை நீக்கி விட்டால், நீங்களும், நானும் உட்கார்ந்து ஏதோ இசைக்கருவியை நோண்டியதுபோல இருக்கும். :-)
    கண்ணதாசன் இல்லாவிட்டால் விஸ்வநாதன், ராமமூர்த்தி ஏது?

    சீர்மேவு ஒலி வடிவம் இதோ
    http://www.inbaminge.com/t/c/Chakravarthi%20Thirumagal/Seermavum.eng.html

    எனக்கு என்னவோ உங்களைக் கவர்ந்த இக்காலக் கருத்தாழமிக்கப் பாடல்களை சந்தடி சாக்கில் சொருகுவதற்காகவே இதை எழுதினீர்கள் என்று தோன்றுகிறது. மான் புலி வேட்டை பாட்டை நான் கேள்விப் பட்டதில்லை. முரளியின் அட்றா சக்கை, அட்றா சக்கை இப்போதே கேட்கிறது.

    சீர் மேவு குருபாதம் எழுதியவர் யார் என்று ரவி திருவேங்கடத்தான், இலக்குவன் மற்றும் ரவியே கையெடுத்து கும்பிட்ட பெரிய கருப்பன் ஆகியவர்களை கேட்டுச் சொல்கிறேன்.

    இடையில் யாராவது சரியான பதில் வழங்கினால், அவர்கள் பையனோ, பெண்னோ இருந்தால், சதங்காவிற்கு பெண்ணோ, பையனோ இருந்தால் கல்யாணம் செய்து வைக்கிறேன்(ரெஸ்பெக்டிவ்லி). இது எப்படி இருக்கு.

    ReplyDelete
  2. சதங்கா,
    அசத்தல் பதிவு. சில வருடங்களுக்கு முன்னாடி ஒருத்தர் 'எனக்குப் பிடித்த கவிஞர்கள்'னு எழுத ஆரம்பிச்சுட்டு, அந்த வரிசையில் சில பேரைப் பத்தி எழுதிட்டு அதை கப்புன்னு விட்டுட்டு போயிட்டார். அவர் பட்டுக்கோட்டையாரைப் பத்தி எழுதுவார்ன்னு நானும் காத்துகிட்டிருந்தேன். நீங்க எழுதி அந்த ஏக்கத்தைப் போக்கிட்டீங்க. ஆமாம், கனல் பறக்கும் நு எழுதியிருக்கீங்களே அப்படீன்னா, இது தொடருமா? அட்றா சக்கை, அட்றா சக்கை, அட்றா சக்கை. நாகு. திருப்தியா?

    நாகு, மான் புலியை வேட்டையாடுமிடம் கட்டில் பாட்டு கேட்டதில்லையா, அவ்வளவு நல்லவரா நீங்க, போக்கிரின்னு ஒரு உலக மகா ஹிட் தமிழ் படம், தமிழகத்தின் அடுத்த எம்ஜிஆர் விஜய் நடித்து, அசினுடன் ஆடிப்பாடி, ப்ரபுதேவாவின் டைரக்ஷனில் வந்த படம். பாட்டு எழுதியவர் பா.விஜய். இவருக்கு வித்தகக் கவிஞர் ன்னு ஒரு பட்டமும் இருக்கு. இவர் எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே' பாட்டை அண்ணாமலைப் பல்கலைகழகத்துல ஆராய்ச்சிக்கு வெச்சு இருக்காங்க.

    சதங்கா, இப்படிப் பட்ட பாட்டையெல்லாம் பெண்கள் பாடராங்கன்னு கவலைப்படாதீங்க, சின்ன வீடா வரட்டுமா, பெரியா வீடா வரட்டும்மான்னு பாடினதும் ஒரு பொண்ணுதான், அவங்கதான், கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடிப் போலாமா பாடினாங்க, அவங்க இப்படிப் பலப் பல கருத்தாழம் உள்ள பாடல்கள் பாடியிருக்காங்க. சமீபத்துல டீவில ஒரு பெரிய சோபா செட்டு முழுக்க உக்கார்ந்திருந்தாங்க. அவங்க பாட வந்த போது ஒல்லியா இருந்தது நல்லா ந்யாபகம் இருக்கு. நீங்க சொன்ன மாதிரி அவங்க அப்படிப் பட்ட பாட்டெல்லாம் பாடலைன்னா பாவம் அவங்க எப்படி பணம் சம்பாதிக்கரது, எப்படி வாழரது.


    பட்டுக் கோட்டையார் சின்ன வயசுல இறக்காம இருந்திருந்தா, கண்ணதாசனுக்கு இவ்வளவு பெரிய புகழ் கிடைச்சிருக்காது.

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    முரளி

    ReplyDelete
    Replies
    1. முரளி, பெண் பாடகர்கள் பற்றிய தங்கள் விளக்கம் அருமை. நல்ல நகைச்சுவை நடையும் கூட :)

      கடைசி பத்தி சற்று உடன்பாடில்லை. இவர்கள் இருவருமே லெஜன்ட்ஸ். சிலபல பாடல்கள் ஒருவர் விட்டு மற்றவருக்குப் போயிருக்கலாம். இருவருமே கோலோச்சியிருப்பார்கள். சில பழைய புகழ் பெற்ற எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கவியரசருக்கு வந்த போது, பட்டுக்கோட்டையாருக்கு ரெகமென்ட் செய்ததாகவும் செய்திகள் இருக்கின்றன. உதாரணம்: நாடோடி மன்னன்.

      Delete
  3. முரளி, உங்கள் தயவால் மான் புலிவேட்டைக்கு போன பாட்டைக் கேட்டு ஜென்ப சாபல்யமடைந்தேன். நான் 'மாடு செத்தா மனுஷன் தின்னான்', 'கைல கிளாஸு, ஐஸ்ல டியரு' போன்ற தத்துவப் பாடல்களை மட்டும் கேட்பதால் இந்தப் பாடல்களைக் கேட்டதில்லை.

    சமீபத்தில் கேட்ட பேச்சு - தமிழைக் கடித்துத் துப்பும் உதித் நாராயணை கட்டி வைத்து உதைக்க வேண்டுமாம். அவரை ஏன் உதைக்க வேண்டும். காசு கொடுத்தால் பாடுவதற்கு நான்கூடத்தான் தயார். எனக்கு காசு கொடுத்து பாட அழைக்கிறவர்களைத்தானே கட்டி வைத்து உதைக்க வேண்டும்?

    ReplyDelete
  4. போக்கிரிப் படப் பாடல்கள் கொஞ்சம் கேட்டேன். இசையும், வரிகளும் பாடல்களும் பண்ருட்டிப் பக்கம் டாக்ஸி டிரைவர்கள் வண்டியில் வைத்திருக்கும் பாடல் தொகுப்புகளை நினைவூட்டின. மகா திராபை.

    சரி - பட்டுக்கோட்டையார் விஷயத்துக்கு வருவோம். சில வருடங்களுக்கு முன் வர்ஜினியா டெக் பக்கம் போயிருந்தபோது திடீரென்று ஒரு பெண்மணியை அறிமுகப்படுத்தி இவர்தான் ஒரு பெரும் கவிஞரின் மகள் என்றார்கள். புல்லரித்துப் போய்விட்டேன். உங்களுக்கும் இப்போது புல்லரிக்க வேண்டுமா. அடுத்த வரிகளைப் படித்துவிட்டு கண்களை ஒரு பத்து வினாடி மூடிக் கொள்ளுங்கள், அப்புறம் சொல்லுங்கள். தயாரா?...


    கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
    சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!

    ReplyDelete
    Replies
    1. நாகு,

      கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின் வாரிசை நீங்கள் சந்தித்ததை, தமிழ் சங்கத்தின் ஒரு நிகழ்ச்சியில் நீங்களே சொன்னது மறந்துடுச்சு போல இருக்கு.

      முரளி

      Delete
    2. நாகு: "முரளி, கவிமணிக்கும், நாமக்கல் கவிஞருக்கும் வித்யாசம் தெரியாதா"
      முரளி: "அவங்க என்ன குமுதம்ல வர்ர கார்டூனா வித்யாசம்லாம் பாக்கரதுகு"
      நாகு: "யோவ், குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்னு சாதிக்காதே"
      முரளி: "வீட்டுகுள்ள கார்பெட்ல விழுந்தா"
      நாகு: "திருந்தாத கூட்டத்துல நீயும் ஒருத்தனா"
      முரளி: "சரிப்பா, தப்பா சொல்லிட்டேன், மன்னாப்புப் கேட்டுட்டா போச்சு"
      நாகு: "சீக்கிரம் செய்"

      இப்படி நாகு அன்பா சொல்லிட்டதால, அந்தப் பாட்டை எழுதினது, கவிமணி இல்லை, நாமக்கல் கவிஞர்.

      முரளி.

      Delete
  5. http://www.gandhitoday.in/2011/09/blog-post_29.html

    ReplyDelete
  6. மெட்டுக்காக பாட்டா....
    பாட்டுக்காக மெட்டா ....
    என்ற கேள்விக்கு
    துட்டுக்காக பாட்டு என்ற கவிஞர்களுள்ள நாட்டில்
    மக்களுக்காக பாட்டெளுதியவன்.பி.கே.எஸ்...
    நான்காண்டுகளுக்கு மட்டுமே
    திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினாலும்
    நூற்றாண்டு பெருமை சேர்த்த
    கவிஞனை நினைவு கூர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  7. செல்வா, துட்டுக்காக பாட்டு - நன்றாக இருக்கிறது.

    சதங்கா - இன்று காலை சங்கத் தலைவர் கேட்டார். பட்டுக்கோட்டை ப்ரபாகர் - மன்னிக்கவும், பட்டுக்கோட்டையார் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாரே இந்த சதங்காவுக்கு, என்ன ஒரு 50, 60 வயதிருக்குமா?

    அதற்கும் மேலே - சரியான தொண்டு கிழம் என்று சொல்லியிருக்கிறேன். அப்புறம்தான் உம் சில கிளுகிளு பதிவுகளைக் காட்ட வேண்டும். அதனால் வயது குறைந்தவராய் இருக்க வேண்டுமா என்ன. உம்மைப் போன்ற கிழங்கள் அடிக்கும் லூட்டிதான் தாங்கவில்லை. :-)

    மான் வேட்டை பாட்டை 'உம்மைப் போன்ற' முதியவர்கள் கேட்டிருப்பார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. நானே கேட்டதில்லை...

    ReplyDelete
    Replies
    1. //அதற்கும் மேலே - சரியான தொண்டு கிழம் என்று சொல்லியிருக்கிறேன்.//

      அப்ப தான் உங்க கமிட்டில இருக்க முடியுமோ ;))

      Delete
  8. திரு. மு.கோ.விடம் இருந்து மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவு கூர்ந்து எழுதப்பட்ட கட்டுரை அருமை. கனல்
    வரிகள் தொடரும் என்று படித்தவுடன் ஒரு நிம்மதி. அவருடைய பாடல்களைப் பற்றியே தொடரும் என்று நினைக்கிறேன். சினிமாப் பாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்து வாங்கிக் கொடுத்தவர்களில் அவரும் ஒருவர். இன்னொருவர் கண்ணதாசன் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பட்டுக்கோட்டையாரின் மற்ற பாடல்களையும் குறிப்பிடாமல் கட்டுரை முழு நிறைவு பெற முடியாது.

    அவருடைய இறை போடும் மனிதர்க்கே இறையாகும் வெள்ளாடே என்ற பாட்டை மறக்க
    முடியுமா?

    தமிழ் மொழி உள்ளவரை (தமிழ்நாட்டில் சோம்பேறிகள் இருக்கும் வரை ) நிலைத்து
    நிற்கும் மற்றொரு பாடல்

    தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

    இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
    மு.gopalakrishnan

    ReplyDelete
    Replies
    1. மு.கோ அவர்களின் மின்னஞ்சலுக்கு அதை இங்கு பிரசுரித்ததற்கும் நன்றி !!!

      //அவருடைய பாடல்களைப் பற்றியே தொடரும் என்று நினைக்கிறேன். //

      நிச்சயம். அடுத்த பதிவில் அவர் இளைய தலைமுறையினருக்கு எழுதிய பாடல்களை மேற்கோள் காட்டுவது தான் எண்ணம். அதை இங்கே குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. மு.கோ.விற்கு தொடரும் என்று படித்தவுடனே நிம்மதியாச்சாம். எனக்கு டென்ஷனே அங்கேதான் ஆரம்பித்திருக்கிறது :-) என்ன செய்வது, நம்ம பதிவின் ராசி அப்படி.

    அவர் சொல்லியிருக்கிறபடியே விரைவாக பட்டுக்கோட்டையாரின் கவிகளைப் பற்றி எழுதுங்கள். அப்படி தாமதமானால் அவரின் பின்னூட்டத்தில் கடைசி வரிகளைப் படிக்கவும்...

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!