Thursday, July 28, 2011

ரிச்மண்ட் தமிழ் சங்க வன போஜனம் (பிக்னிக்)

ஜூலை 24 , 2011 அன்று ரிச்மண்ட் தமிழ் சங்கம் உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு வன போஜனம் (பிக்னிக்) ஏற்பாடு செய்திருந்தது. ரிச்மண்டில் உள்ள ஆழ ஓட்டப் பூங்காவில் (deep run park) இது நடை பெற்றது.

காலை ஒன்பது மணிக்கு சற்று முன்னர் ஆரம்பித்து தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் களத்தில் இறங்கி அங்குள்ள ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எல்லாம் தயார் ஆனது. முதல் தமிழ் சங்க உறுப்பினருக்காகக் காத்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் டென்னிஸ் மட்டை மற்றும் பந்துகளைக் கொண்டு ஒரு சிறிய கிரிக்கெட் ஆட்டம் தொடங்கினார்கள்.

ஒரு வழியாக உறுப்பினர் பரமேஸ்வரன் மற்றும் குடும்பத்தார் முதலாவதாக வந்த போது, ஆரவாரமான கை தட்டலோடு வரவேற்கப் பட்டனர். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்பினர்கள் வரத் தொடங்கினர். சிறுவர்களுக்கு பல்வேறு சிறு உணவுகள் மற்றும் பானங்கள் வைக்கப்பட்டு இருந்தன. சிறு குழந்தைகள் பூங்காவில் இருந்த விளையாட்டுக் கருவிகளில் ஆடத் தொடங்கினர். ஊஞ்சல்களுக்குக் கடும் கிராக்கி ஏற்பட்டது.

மற்ற உறுப்பினர்கள் வந்தவுடன் தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பெரியகருப்பன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வந்திருக்கும் உறுப்பினர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்து பல விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்றனர். வித்தியாசமான "musical chair " பந்தயம் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது. குழந்தைகளுக்கான தண்ணீர் நிரப்பும் போட்டி, மற்றும் வாயில் கரண்டி கொண்டு நடத்தல் ஆகியவை நடை பெற்றன. ஆண்கள் வாலிபால் ஆடினர். தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர் நிர்மலா மகேஷ் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். தமிழ் சங்க முன் தலைவர் முரளி ராமச்சந்திரன் கௌபாய் தொப்பி அணிந்து நகைச்சுவைச் சூழ்நிலையை உருவாக்கினார்.

உச்சி வேளையின் போது பிட்சாக்கள் பாப்பா ஜான்ஸ் கடையில் இருந்து வந்து சேர்ந்தன. மூன்று வகையான பிட்சாக்கள் பரிமாறப்பட்டன. உணவு வேளை முடிந்த உடன் உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களைக் கண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அடுத்த கட்ட விளையாட்டுகள் தொடங்கின.

சிறிது நேரத்தில் தமிழ் சங்க sponsor -களில் ஒன்றான இந்திய பேஸ்ட்ரி ஹவுஸ் -ல் இருந்து சமோசா, மற்றும் puffs வந்து சேர்ந்து உறுப்பினர்களுக்குப் பரிமாறப் பட்டன. லக்ஷ்மி ஸ்ரீதர் மூலம் சுவையான தேநீர் தயார் செய்யப் பட்டது.

அதன் பின்பு குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு என்று தனித் தனியாகக் கயிறு இழுக்கும் போட்டி நடை பெற்றது. உறுப்பினர்கள் ஆரவாரத்தோடு பங்கு பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். பலூனில் தண்ணீர் நிரப்பி உடையாமல் பிடிக்கும் போட்டி தம்பதியினருக்காக நடை பெற்றது. மலைசாமி /கவிதா தம்பதியினர் இதில் வெற்றி பெற்றார்கள். நாகு பரசு, வெங்கட் செட்டியார், சத்தியா, ஸ்ரீனி ஆகியோர் சிறிய இலக்கியக் கூட்டம் நடத்தினர்.

சுமார் இருபது உறுப்பினர்கள் கிரிக்கெட் ஆடக் கிளம்பினர். சிறுவர்கள் அதே நேரத்தில் கால்பந்து ஆடினார்கள். சத்தியவாகீசுவரன் மற்றும் ஆனந்த் அண்ணாமலை தலைமையில் இரு அணிகள் உருவாக்கப் பட்டன. பெண்களில் இருந்து கவிதா மட்டும் பங்கேற்றார்.

முதலில் மட்டை ஏந்திய சத்தியா அணி ஏழு ஓவர்களில் 76 ரன்கள் எடுத்தது. பந்து நேரிடும் முன்பே ரன்-அவுட் ஆனா மகேஷ் எதிரணியின் பெருந்தன்மையில் மட்டை ஏந்த அனுமதிக்கப் பட்டார். முக்காவாசி ரன்களை அவர் மட்டுமே எடுத்து ஏகப்பட்ட சிக்ஸர்-களை விளாசி அதன் மூலம் எதிரணியினர் அவர்களின் பெருந்தன்மைக்கு மிகவும் வருந்தினார்கள். ஆனந்த் தலைவர் என்ற முறையில் சிறப்பாகப் பந்து வீசினார். கவிதா விஸ்வாவின் தலைக்கு மேலே பந்து வீசி அவரை போல்ட் செய்து அதிர்ச்சி அடைய வைத்தார்.

பின்பு ஆடிய ஆனந்த் அணியினர் மெதுவாகத் தொடங்கினர். கவிதா ஒரு சிக்ஸர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மட்டையாளர்கள் கூடியதால் ஆனந்த் அணியினருக்கு ஒரு ஓவர் கூடுதல் ஒதுக்கப் பட்டது. நடுவர் ஸ்ரீனிவாசன் தாறுமாறாக அகலப் பந்துகளை வழங்கி கடும் எதிர்ப்பைப் பெற்று பின்பு ஒவ்வொரு அகலப் பந்தையும் வழங்குவதற்கு முன் பீல்டிங் அணியினரின் சம்மதம் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனந்ந் நன்றாக அடித்து கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையைக் கொண்டு வந்தார். செல்வாவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் சத்தியா அணியினர் வெற்றி அடைந்தனர்.

35 குடும்பத்தினரைச் சிறந்த சுமார் 125 உறுப்பினர்கள் இந்த பிக்னிக்கில் பங்கு பெற்றனர். சில உறுப்பினர்களின் பெற்றோர்களும் இதில் பங்கு பெற்றிருந்தனர். பெரும்பாலான உறுப்பினர்கள் கடைசி வரை இருந்தனர். சுமார் ஐந்து மணிக்கு இது நிறைவு பெற்றது.

தமிழ் சங்கத் தலைவர் முத்து ஜீவானந்தம் மற்றும் பொருளாளர் தியாகா பெரும்பாலான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மார்செலின் மற்றும் செந்தில் பல்வேறு விளையாட்டுகளை நடத்தினர். சுகந்தி மற்றும் விஜி முன்னரே வந்திருந்து செயற்குழு உறுப்பினர்களை ஊக்குவித்தனர். மற்ற செயற்குழு உறுப்பினர்களும் பல்வேறு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு இந்த பிக்னிக்கை ஒரு சிறந்த முறையில் நடத்தினர். அவர்களுக்கு தமிழ் சங்க உறுப்பினர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புகைப்படங்களுக்கு இந்த இணைப்பை உபயோகப்படுத்தவும்.

Monday, July 11, 2011

தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் முற்போக்குக் கூட்டணிகள்

தமிழக அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் மற்றும் முற்போக்குக் கூட்டணிகள்

அரசியலில் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது "வழக்கத்தில் நைந்து போன்ற சொற்றொடர்" (cliche). இந்த ஒரு வாக்கியத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் எத்தனையோ முறை கூட்டணிகள் மாறி இருக்கின்றன. அரசியல்வாதிகள் கட்சி மாறி இருக்கிறார்கள். சந்தர்ப்பாதக் கூட்டணிக்கு ஒரு கௌரவமான பெயர்தான் முற்போக்குக் கூட்டணி. அவற்றில் சிலவற்றை சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்போம். கூட்டணிக்கு முன்பும் பின்பும் உள்ள சில சம்பவங்களையும் முழுமைக்காக விவரித்துள்ளேன். என்னுடைய அனுபவங்கள் 1985 -க்கு அப்புறமே. எனவே அதற்கு முன்புள்ள சம்பவங்கள் அதிகம் விவரிக்க முடியவில்லை. (இந்தப் பதிவில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்)


அண்ணா மறைவிற்குப் பின் கருணாநிதி பல சாணக்யத்தனங்களுக்குப் பின் முதல்வரானார். அப்போது கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டால் என் மனைவி கூட என்னை மதிக்க மாட்டாள் என்று சொன்ன அன்பழகன், இன்னும் திமுகவில் உள்ளார். பரம விரோதிகளாய் இருந்த காமராஜரும், இராஜாஜியும் 1971 -ல் இந்திரா காந்தி மற்றும் கருணாநிதியின் கூட்டணியை எதிர்க்க அணி சேர்ந்தனர். அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். பின்பு அவசர நிலை பிரயோகத்தின் பொது எம்ஜியாரின் தூண்டுதலோடு இந்திரா காந்தி திமுக ஆட்சியைக் கலைத்தார்.

எம்ஜியார் கட்சியை விட்டு வெளியேறிய போது நெடுஞ்செழியன் பெருந்தன்மையாக (??) திமுகவில் அமைச்சராகத் தொடர்ந்தார். திமுக ஆட்சி கலைக்கப் பட்ட பின், அவர் தனிக் கட்சி தொடங்கி அதில் தோற்ற பின் கட்சியைக் கலைத்து விட்டு உடனே அதிமுகவிற்குத் தாவினார். அமைச்சர் பதவி தரும் கட்சியில் இருப்பது என்பது இவரது கொள்கை.

1977 -ல் எம்ஜியார் தனித்து நின்று வென்ற பிறகு, கருணாநிதியும் இந்திரா காந்தியும் மீண்டும் நண்பர்கள் ஆனார்கள். அந்த நட்பின் புளகாங்கிதத்தில் தமிழ் மக்கள் அவர்களை 37 மக்கள் சபைத் தொகுதிகளில் வெல்ல வைத்தார்கள். அந்த வெற்றிக் களிப்பில் கருணாநிதி 1975 -ல் தன ஆட்சி கலைக்கப் பட்டதிற்க்குப் பழி வாங்கும் விதமாக அதிமுக ஆட்சியில் கலைக்க வைத்தார். உடனே நடந்த சட்ட சபைதேர்தலில் தலா 110 தொகுதிகளில் நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி தோல்வி அடைந்தது.

அப்போது இந்திரா காந்தி இனி திமுக கூட்டணியால் பலன் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, அதிமுக கூட்டணிக்குத் தாவினார். 1984 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியோடு அதிமுக வெற்றி பெற்றது. (இந்திராவின் மரணத்திற்குப் பின்)

எம்ஜியாரின் மரணத்திற்குப் பின் மிகப் பெரிய நகைச்சுவைகள் அரங்கேறின. நெடுஞ்செழியன் எம்ஜியாரின் மனைவி ஜானகி அம்மாளோடு முதல்வர் பதவிக்குப் போட்டி போட்டு அது கிடைக்கவில்லை என்றவுடன் உடனே ஜெயலலிதாவின் பிரிவுக்குத் தாவினார். திருநாவுக்கரசு, KKSSR , பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் ஜெயலலிதாவின் பிரிவில் இருந்தனர். அப்போது சட்டசபையில் ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடை பெற்று மக்களை மகிழ்ச்சிக் களிப்பில் ஆழ்த்தின. KKSSR கொஞ்சம் MLA -களை ஒளித்து வைத்து விளையாட்டுக் காட்டினார். தாமரைக்கனி பண்ருட்டியாரை ஒரு கை பார்த்து உடம்பில் கட்டு போட வைத்தார். பின்பு ஆட்சி கலைக்கப்பட்டது.

1989 தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுகவின் ஜானகி மற்றும் ஜெயலலிதா பிரிவுகள் என்று நான்கு முனைப்போட்டி நடந்தது. அதிமுகவின் இரு பிரிவுகளும் சக்தி வாய்ந்த இரட்டை இலைச் சின்னத்திற்கு சண்டை போட்டு இரண்டு பேருக்குமே வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா நெடுஞ்செழியன், பண்ருட்டி, திருநாவுக்கரசு மற்றும் அரங்கநாயகத்தைக் கட்சியை விட்டு வெளியேற்றினார். அவர்களை "உதிர்ந்த முடிகள்" என்று கௌரவமாக அழைத்தார். அவர்கள் நால்வர் அணி என்ற பிரிவை ஆரம்பித்தனர். அந்த அணி திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளுக்கு நல்ல கருக்களைக் கொடுத்தது. நெடுஞ்செழியன் மயிலாப்பூர் தொகுதியில் நின்று SV சேகரை விடக் குறைவாக ஓட்டுக்கள் வாங்கியது இன்னும் சிறந்த அரசியல் நகைச்சுவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தப் பிளவில் பெரும் பயன் அடைந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைக்கப்பட்டது. ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்த காளிமுத்து, RM வீரப்பன் போன்றவர்கள் "காலத்தின் கட்டளை" என்று கூறிக்கொண்டு ஒன்று பட்ட அதிமுகவில் இணைந்தனர். இதில் காளிமுத்து இடைப்பட்ட காலத்தில் திமுகவில் இணைந்து தோல்வி அடைந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். யாரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

இந்த நேரத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட்டதால்தான் தோற்க நேரிட்டது என்று காரணம் காட்டி வாழப்பாடி ராமமூர்த்தி மூப்பனாருக்கு எதிராகப் போர்க்கொடி தொடுத்து காங்கிரஸ் தலைவர் ஆகி அதிமுக கூட்டணி அமைத்தார்.

ஒன்றுபட்ட அதிமுக மற்றும் காங்கிரஸ் இணைந்து மக்கள் சபை தேர்தலில் போட்டி இட்டதில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. VP சிங் பிரதமர் ஆனதால் திமுக கொஞ்ச நாள் தப்பித்தது.

அதன் பின், எப்படியாவது சாகும் முன் பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சந்திரசேகர் காங்கிரஸ் உதவியுடன் பிரதமர் ஆனார். அப்போது ஜெயலலிதா காங்கிரஸ் உதவியுடன் விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி திமுக ஆட்சியைக் கலைக்கக் காரணமாக இருந்தார்.

பின்பு நடை பெற்ற 1991 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிமுக வரலாறு காணாத வெற்றி பெற்றது. இடைத் தேர்தலில் பிரசார வேனில் தொங்கிக்கொண்டு சென்ற அமைச்சர் SD சோமசுந்தரம் சரித்திரத்தில் இடம் பிடித்து, சில திரைப்படக் காட்சிகளுக்கு மூலமாக அமைந்தார்.

இதன் இடையில் திமுகவில் வைகோவை ஒதுக்க ஆரம்பித்து அதன் உச்சக் கட்டமாக கருணாநிதி வைகோவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இதை அடுத்து தன்மானச் சிங்கம் வைகோ திமுகவை விட்டு வெளியேறி மதிமுக-வைத் தொடங்கினார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு மாற்றாகத் தன்னை அறிவித்தார்.

அளவுக்கதிகமான பெரும்பான்மையில் இருந்த அதிமுக, ஊழலில் அதிருப்தியைப் பெற்றது. சசிகலாவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்திலும், 300 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வளர்ப்பு மகன் திருமணத்திலும் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். தனக்குப் பிடிக்காதவர்கள் மேலே ஜெயலலிதா கடும் ஆத்திரம் அடைந்தார். TN சேஷனை விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு அதிமுக தொண்டர்களை விட்டுத் தாக்கினார். சுப்ரமணிய சாமியைக் கைது செய்ய முயன்ற தோல்வியில் ஆத்திரம் அடைந்து சேரிப் பெண்களை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்து நீதி மன்ற வளாகத்தில் தமிழக கௌரவத்தை நடுத் தெருவில் நிறுத்தினார். தனக்குத் தொல்லையாகக் கருதிய IAS அதிகாரி சந்திர லேகாவின் முகத்தில் ரௌடிகள் மூலம் அமிலம் வீசினார் என்பது பரவலான ஊகம். இதன் உச்சக்கட்டமாகத் தனக்கும் பெரும் தலைவலியாக இருந்த தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி தன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றம் சாட்டி நாட்டையே அதிர வைத்தார். மக்களும், மற்ற அரசியல் வல்லுனர்களும் இத நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்கொண்டதால் பெரிய அளவுக்கு அரசியல் சாசனப் பிரச்சனைகள் வரவில்லை. எதிர்க் கட்சியாக இருந்த காங்கிரசை ஜெயலலிதா ஒரு பொருட்டாக மதிக்காமல் அதன் தலைவர்களை உதாசீனப் படுத்தினார்.

1996 தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, காங்கிரஸ் மூப்பனார், சிதம்பரம் போன்ற தலைவர்கள் தலைவர்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி இட வேண்டும் என்று மேலிடத்தை வலியுறுத்தினர். அது வரை தலையை ஆட்டி வந்த மேலிடம்(!), அதிமுகவுடன் கூட்டணி என்று திடீரென்று முடிவு செய்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி அனந்தன் கடைசி நிமிடம் வரை மூப்பனாரோடு இருந்து விட்டு, திடீரென்று டெல்லி சென்று தலைமை(?)க்குக் கட்டுப் படுவதாக அறிக்கை விட்டார். (காங்கிரசை எதிர்த்துக் கட்சியை விட்டு விலகி இந்திரா காந்தி படத்தை எரித்து விட்டு கா.கா.தே.கா என்ற கட்சியைத் தொடங்கிப் பின்பு அதைக் கலைத்து விட்டு காங்கிரசிலேயே மீண்டும் சேர்ந்தவர் குமரியார் என்பது குறிப்பிடத் தக்கது.) தொண்டர்கள் ஆத்திரம் அடைந்து குமரி அனந்தன் மற்றும் நரசம்மராவின் படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கொதித்தெழுந்த மூப்பனார் த.மா.கா கட்சியைத் தொடங்கினார். எழுத்தாளர் சோ-வின் முயற்சியோடு த.மா.கா திமுக-வோடு கூட்டணி சேர்ந்தது. பாட்ஷா படப் பரபரப்பிற்குப் பின் அரசியலில் குதிப்பார்(?) என்று எதிர்பார்க்கப் பட்ட ரஜினியும் இதற்க்கு ஆதரவு தெரிவித்து ஒரு சலசலப்பு உண்டாக்கினார். தேர்தல் பிரசாரத்தில் ஆளே இல்லாத பொதுக் கூட்டங்களில் குமரி அனந்தன் பேசிக் கொண்டிருந்த புகைப்படச் செய்திகள், மக்களை மகிழ வைத்தன.

இடைப்பட்ட சூழ்நிலையில் ஜாதியை முன்னிலை வைத்து டாக்டர் ராமதாஸ் பாமக கட்சியை வளர்த்து 70 சீட்டு கேட்டு திமுகவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார். தமாகா வந்தவுடன் திமுக ராமதாசைக் கை கழுவியது. வைகோவும் ராமதாசும் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியதில் கூட்டணிக்கு யார் தலைவர்(?) என்பதில் உடன்பாடு வராத காரணத்தால் அந்தக் கூட்டணி முறிந்தது.

காங்கிரஸ்-அதிமுக கூட்டணி வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. தனித்துப் போட்டி இட்ட மதிமுக ஒரு இடம் கூட வெல்லவில்லை. பாமக நான்கு இடங்களில் வென்று, ஜாதி ஓட்டிற்கு மதிப்பு உள்ளதை வெளிப்படுத்தியது.

பாபர் மசூதி இடிக்கப்பட சூழ்நிலையில் BJP மதச் சார்புள்ள கட்சியாகப் பறை சாற்றப்பட்டு எல்லோருடைய எண்ணமும் யார் வந்தாலும் பரவாயில்லை, பிஜேபி வரக்கூடாது என்று காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்தன. 13 நாள் பிஜேபி ஆட்சிக்குப் பிறகு மக்களவையில் தேவ கௌடா பிரதமராகிப் பத்திரிகைக்காரர்களுக்கு எப்போதும் சுவாரஸ்யமான செய்திகளைத் தந்தார். காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியை தினமும் நமஸ்காரம் செய்து காலத்தைக் கழித்தார். கடுமையான உழைப்பின் காரணம், இவருக்குப் பொதுக்கூட்டங்களில் மாத்திரமே தூங்க வாய்ப்பு கிடைத்தது.

திமுக அரசு ஜெயலலிதா உட்பட அனைத்து அதிமுக அமைச்சகள் மேலும் ஊழல் வழக்குகள் தொடர்வதிலேயே கவனம் செலுத்தியது. ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் தேவகௌடா தொக்கப்பட்டு IK குஜ்ரால் கொஞ்ச நாள் பிரதமராக இருந்தார். பின்பு ஆட்சி கவிழ்ந்தது. 1998 -ல் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், ஜெயலலிதா ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அது வரை தமிழ் நாட்டில் தீண்டத் தகாத கட்சியாக இருந்த பிஜேபி-யுடன் கூட்டணி அமைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை வசை பாடி வந்த வைகோ இந்த முற்போக்குக் கூட்டணியில் சேர்ந்தார். ரஜினி மீண்டும் திமுக/தமாகா கூட்டணியை ஆதரித்தார். ஆனால் தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்று பிஜேபி ஆட்சி அமைத்தது. இந்த முறை பிஜேபி 13 மாதங்கள் தாக்குப் பிடித்தது. ஜெயலலிதாவின் பரம விரோதியாக இருந்த சுப்ரமணிய சாமி சோனியா காந்தியோடு ஜெயலலிதாவை அழைத்து ஒரு தேநீர் விருந்து வைத்து நாரதர் கலகம் உருவாக்கினார். அதில் கடுப்பாய திமுக, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் அந்தர் பல்டி அடித்து, எங்களது முதல் எதிரி ஊழல்தான் என்று கூறி, பிஜேபி-யை ஆதரித்தது. அப்படியும் தீர்மானம் தோற்று பிஜேபி ஆட்சியை இழந்தது.

பின்னர் வந்த 1999 மக்களவைத் தேர்தலில், வைகோ காலத்தின் கட்டாயத்தில் திமுகவோடு கூட்டணி சேர்ந்தார். ராமதாசும் திமுகவோடு இருந்தார். பிஜேபி-யின் வரவால் தமாக திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் தனியாக நின்று பூஜ்யம் பெற்றார்கள். திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. பிஜேபி கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதன் பிறகு நடந்த 2001 மாநில தேர்தலில் பல திருப்பங்கள். கூட்டணி மாற வேண்டும் என்றால் தலைவர்கள் பொதுவாகத் தயங்குவார்கள். பத்திரிகையாளர்களைச் சந்திக்க பயப்படுவார்கள். டாக்டர் ராமதாஸ் இதில் ஒரு புதிய சரித்திரம் படைத்தார். கூட்டணி மாறக் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் இருப்பதில் இவர் வல்லவர். கூட்டணி மாற இவருக்குத் தேவை பல்லிளுப்பும் ஒரு பூங்கொத்தும் மட்டுமே. திமுக கூட்டணியில் மத்திய ஆட்சியில் அமைச்சர்கள் பதவியில் இருந்து கொண்டே இவர் ஜெயலலிதாவைச் சந்தித்து மலர்க்கொத்தைக் கொடுத்துக் கூட்டணி அமைத்தார். என் குடும்பத்தில் யாரவது பதவி கேட்டால் என்னைச் செருப்பால் அடியுங்கள் என்று முழங்கிய இவர், கூச்சமே இல்லாமல் தன் மகனுக்கு மருத்துவத் துறையைக் கேட்டு வாங்கி அழகு பார்த்தார்.

1996 -ல் அதிமுக கூட்டணியை எதிர்த்து மாத்திரமே ஆரம்பிக்கப்பட தமாகா, இந்த முறை அதிமுக கூட்டணியில் சேர்ந்தது. இதில் மூப்பனார் கடும் அதிருப்தியைச் சம்பாதித்தார். ப.சிதம்பரம் இந்த முடிவை எதிர்த்துத் தனிக் கட்சி ஆரம்பித்தார்.

வைகோ திமுக கூட்டணியில் சேர்ந்த போது கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். சமாளித்து முன்பு செல்லும்போது, கூட்டணிப் பங்கீடில் உடன்பாடு இல்லாத சூழ்நிலையில் தனியாக நின்றார். திமுக ஸ்டாலினின் பிடிவாதத்தில் கூட்டணிகளின் அதிருப்தியைப் பெற்றது. தேர்தலில் படு தோல்வி அடைந்தது. வைகோ பல தொகுதிகளில் ஓட்டைப் பிரித்துத் திமுகவின் தோல்விக்கு வழி வகுத்தார். ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, பழி வாங்கும் விதமாக கருணாநிதி, ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோரைக் கைது செய்து புளகாங்கிதம் அடைந்தார். இதனிடையே மூப்பனாரின் மறைவிற்குப் பின் தமாகா காங்கிரசோடு இணைக்கப்பட்டது.

அதன் பின்பு நடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்தது. அதிமுக பிஜேபி-க்குத் தாவியது. (இதன் பின்னணி அதிகம் தெரியவில்லை, அயோத்யா பிரச்சினை என்று google கூறுகிறது). இதில் ரஜினிகாந்த் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ரஜினி இதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானதும் அல்லாது, அணி அவர் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற சூழ்நிலை உருவானது. இந்த சமயம் டாக்டர் ராமதாஸ் மீண்டும் திமுக கூட்டணிக்குத் தாவி ஐந்து தொகுதிகள் வென்றார். வைகோவும் திமுகவோடு சமரசம் ஆகி நான்கு தொகுதிகள் வென்றார். அப்போது அவர் பொடா சட்டத்தில் சிறையில் இருந்தார். கருணாநிதி அவரை வெளியே கொண்டு வர முயற்சிகள் செய்தார்(?).

இதன் பின்பு 2006 சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடில் அதிருப்தி அடைந்த வைகோ மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து கேலிக்கு ஆளானது மட்டும் அல்லது, அவரது எதிர் காலத்தையே கேள்விக்குறி ஆக்கினார். கொஞ்சம் நகைச்சுவை தர வேண்டி , திமுகவில் வெகு நாள் இருந்த சரத்குமாரும் விலகி அதிமுகவில் சேர்ந்தார். இருவரும் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தனர்.

திமுக தனிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சி அமைத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர மறுத்து விட்டது. அதே சமயம் மத்திய அரசில் பங்கு பெறத் தயங்கவில்லை.

இந்த தருணத்தில் திமுகவில் குடும்பச் சண்டைகளில் தயாநிதி மாறன் தொலை தொடர்புத் துறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்பு வந்த ராஜா மூலம் நடந்த கூத்துக்கள் எல்லாருக்கும் தெரியும்.

பின்பு 2009 -ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ராமதாஸ் மீண்டும் அதிமுகவிற்குத் தாவினார். வைகோ அதிமுகவில் தொடர்ந்தார். திமுக கூட்டணி தோல்வி அடையும் என்று எதிர் பார்க்கப் பட்டது. ஆனாலும் வெற்றி பெற்றது. பண பலம் என்ற பரவலான குற்றச்சாட்டு இருந்தது. பாமக எல்லாத் தொகுதிகளிலும் தோற்று பெரும்பாலான மக்களின் வரவேற்பைப் பெற்றது.

பின்பு சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ராமதாஸ் மீண்டும் திமுக அணிக்கு ஓடி வந்தார். 2006 -ல் ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு எதிராகப் புரட்சி தொடங்கிய விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தானும் அதே குட்டையில் ஊறிய மட்டை என்பதைத் தெளிவு படுத்தினார். ஜெயலலிதா ஓரிலக்க எண்ணிக்கையில் இடம் தருவதாகக் கூறி வைகோவைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக வெளியற்றி அவர் தேர்தலில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்யும் அளவுக்கு விரக்தியில் தள்ளினார். காங்கிரஸ் 2G ஊழலை வைத்து திமுகவை மிரட்டி 60 சீட்டுகள் வாங்கியது.

திமுக குடும்ப அரசியல் மற்றும் 2G ஊழலின் பிரதிபலிப்பில் படு தோல்வியைச் சந்தித்தது. ராமதாசுக்கு மீண்டும் பட்டை நாமம். காங்கிரஸ் சட்டியில் இல்லாமலேயே அகப்பையில் எடுக்க முயன்று உண்மை நிலையை இப்போது உணர்ந்திருக்கலாம்.

முடிவு

அரசியலில் சந்தர்ப்ப வாதம் என்பது இன்றி அமையாதது. (இதை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வைகோ. இவர் மழை பெய்யும் போது உப்பு விற்கக் கிளம்புவார். காற்றடிக்கும்போது உமி விற்கக் கிளம்புவார்)

Friday, July 01, 2011

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா (கோயம்புத்தூர்) - 1


கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயமுத்தூர் நான் பிறந்து வளர்ந்த ஊர். மாசுபடாத காற்று, சுவையான சிறுவாணி குடிநீர், அதிக போக்குவரத்தில்லாத சாலைகள் ஒருகாலத்தில் (பதினைந்து வருடங்களுக்கு முன்னர்) இருந்தன. இப்போது சற்று மாறிவிட்டது. இருந்தாலும் கால மாற்றத்தால் மாசுபட்டதில்  மற்ற ஊர்களை காட்டிலும் கோவையில் சற்று குறைவே என எனக்கு பட்டது. சுற்றிலும் அடர்ந்த காடுகள், பாலக்காடு கேப் (rainshadow என்று கூறுவார்கள்) இருப்பதால் என்றும் குளு குளு வென இருக்கும்.   

கோவையின் சிறப்பு - அழகு கொங்கு தமிழ்,  சிறுவர்களை கூட "ங்க" போட்டு அழைக்கும் பண்பு. இவையிரண்டும் இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாதவை.  எங்காவது ஆட்டோ ஓட்டுனர் "வாங்க.. போங்க.."  என்று கூப்பிட்டால் அது கோவையை தவிர வேறு ஊராக இருக்காது!

அதிகப்படியான  பள்ளிகள் , சிறந்த கல்லூரிகள் இருக்கும் ஊர். அந்த காலத்தில் பெரும் நிலக்கிழார்கள் தங்கள் செல்வத்தை மூட்டை கட்டி வைக்காமல் பல நல்ல பள்ளி/கல்லூரிகளை நிறுவினர்! எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் சர்வ ஜனா மேல் நிலைப்பள்ளியின் தொன்மையை பற்றி சொல்லவேண்டுமென்றால், அந்த பள்ளியின்  விருந்தினர் வருகை கையேட்டில்  மகாத்மா காந்தி கையெழுத்திட்டிருக்கிறார்கிருஷ்ண்ணம்மாள் பள்ளி/கல்லூரி (ஹ்ம்ம்) வாசலில் பி-4 காவல் நிலையம் இருப்பதால் அந்த கல்லூரி தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு முதல் விருப்பத் தேர்வு! என் ஊரான 'பீளமேடு'வை  சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே இருபது தனியார் பள்ளிகளும்  பத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் உள்ளன!  பி.எஸ்.ஜி., சி..டி, எஸ்.என்.ஆர்., ஜி.சி.டி., தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, ஜி.ஆர்.டி.,  என பத்திற்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவக்கல்லூரிகளும் அடக்கம்! ஜி.டி.நாயுடு குழுமம் சில நல்ல தொழில் பயிற்சி கல்லூரிகளை நடத்திவருகிறது

இந்த ஊரில் மட்டும் வீதிக்கு ஒருவர் கிரைண்டர், மிக்சி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளை நடத்துவதை பார்க்கலாம்! அது தவிர  பல பெரும் தொழிற்சாலைகள் - லஷ்மி மெசின் வொர்க்ஸ், பிரிகால் (வாகன dashboard), ஸ்பார்க் பிளக், யு.எம்.எஸ். ரேடியோ, டெக்ஸ்டூல், விஸ்கோஸ், திருப்பூர் textiles),  பஞ்சாலைகள் என வேலை வாய்ப்பிற்கு குறைவே இல்லாத ஊர்!  இந்த காலத்தில் டெக்னாலஜி பார்க் வந்தவுடன் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ  என பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன.

  கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி! அதற்கேற்ப  மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் (கரிகால் சோழனால் கட்டப்பட்டது!), பன்னாரி அம்மன்கோனியம்மன்மாசாணியம்மன், ஐயன்கோவில்பூண்டிஈச்சனாரி விநாயகர்தண்டு மாரியம்மன்வெள்ளியங்கிரி மலைகாரமடை  கோவில் என பல புரதான சிறப்புள்ள கோவில்கள் இங்கே உள்ளன! வெள்ளி மற்றும் சனி அன்று இங்கு கூட்டம் அதிகம். எனக்கு பிடித்த கோவில் மருதமலை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில்.

நான் பார்த்த/சுற்றிய/உணவருந்திய/மனதில் நின்ற சில இடங்கள்  நேரு விளையாட்டரங்கம்,  வா.வு.சி.  பூங்கா, டாப் ஸ்லிப்ஸ் (மலை),  அட்டகட்டி மலைபகுதிஒப்பணக்கார வீதி (சகல விதமான பொருட்களும் கிடைக்கும்!), அன்னபூரணா உணவகம் (இட்லி சாம்பார்!), அங்கண்ணன் கடை (பிரியாணி), இராணி உணவகம்,  ஆர்யா பவன் (சில்லி பரோட்டா), சிக்கன் சம்பூர்ணா (என் அண்ணனின் நெருங்கிய நண்பர் கடை!),  ஸ்ரீபதி தியேட்டர் (ஆங்கில படங்கள் காண - ஹலோ யாரது.. அந்த மாதிரி படம் அல்ல, குடும்பத்துடன் காணும் படங்கள்., இந்த திரையரங்கம் இன்னும் இருக்கிறதா என தெரியாது ), கே.ஜிதியேட்டர் , சாய் பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் என பட்டியல் நீளும்தேன் மிட்டாய் (ஐந்து பைசா தான்!), சுகன்யா பேக்கரி பப்ஸ்,  டைமண்ட் சிப்ஸ்,   என்.எம்.பி பேக்கரி முட்டை பப்ஸ், தேங்காய் பன்  இன்றும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும்!  ஹிக்கீன்போதம்ஸ் புத்தக கடை, மணிகூண்டு கடைகள், டவுன் ஹால் துணி கடைகள், லஷ்மி காம்ப்ளெக்ஸ் (எண்பதில்  பல மாடி கொண்ட உள்  அரங்கு கடைகள்-mall. நான் முதன் முதலாக ஒலி நாடா வாங்கி பாடல்கள் பதிவு செய்தது இங்கே தான்!),  ஹோப்ஸ் காலேஜ் டீ கடை,  கரிவரதன் ரேஸ் மைதானம், ரேஸ் கோர்ஸ் சாலை (இங்கே தான் முதலில் ரோலர் ஸ்கேடிங் பழகினேன்) என பல இடங்கள்  இன்னமும் கண் முன்னே நிற்கிறது! 

கோவைக்கே உரித்தான லொள்ளு படித்தவர், படிக்காதவர், சிறியவர், பெரியவர் என எல்லோரிடமும் இருக்கும்!  அதை சினிமாவில் கொண்டுவந்து வெற்றிகண்டனர்  பல நடிகர்கள்!  பாக்யராஜ்சத்யராஜ், மணிவண்ணன், சிவகுமார்நிழல்கள் ரவி, கோவை சரளா, கௌண்டமணி என கோவையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம்தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (பின்னாளில் டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கம்  1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது !  இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்! சினிமா தவிர, உடுமலை  நாராயணகவி,  ஜி.டி.நாயுடு, F1 ரேஸ் வீரர் கரிவரதன், நரேன் கார்த்திகேயன் பல பிரபலங்கள் பிறந்த ஊர்.   

வேலைக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது. வேறு ஒரு ஊருக்கு சென்ற பின் தான் நம்ம ஊரின் சிறப்புகள் நினைவிற்கு வரும்!  சிறுவாணி தண்ணீர் குடித்தவருக்கு  மெட்ராஸில் பிஸ்லேரி தண்ணீர் கூட குடிக்கமுடியாது! 'தோடா.. வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா.. சாவு கிராக்கி' என்று மெட்ராஸ் ஆட்டோகாரர் திட்டுடன் நாள் ஆரம்பமானால் உடனே கோவை மக்கள் நினைவில் வருவார்கள்! பேருந்து நிலையத்தை தாண்டி நிறுத்தாத ஓட்டுனர், அவரசரமாக ஓடி வரும் பெரியவருக்காக வண்டியை வழியில் நிறுத்தி ஏற்றிக்கொள்ளும்  ஓட்டுனர் என அடுக்கிக்கொண்டு போகலாம்ஒவ்வொரு முறை நான் பிறந்த ஊருக்கு விடுமுறையில் வரும்போதும் இந்த பண்புகள் மாறாமல் இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன். அமெரிக்கா வந்தவுடன் எங்காவது ஒருவர் "சொல்லுங்'ணா" என பேசுவதை கேட்டால் உடனே போய் அவரிடம் கோவையில் எந்த இடம் என்று கேட்டதுண்டு!  சரி,  ரிச்மண்டில் கொங்கு தமிழ் மக்கள் யாராவது உண்டா

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா

இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக்கினால் பல இடங்களை பற்றி (விக்கி'யில் இல்லாத பல தகவல்களை) தெரிந்து கொள்ளலாம் என தோன்றியது! ஆதலால் அடுத்து நான் பண்ருட்டியாரை (அவருக்கு தெரியும் யார் என்று! உங்களுக்கு தெரியாதென்றால் அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்க வேண்டும்!) இந்த பதிவின் தொடர்ச்சியாக அவரது  ஊரைப் பற்றி  எழுத அழைக்கிறேன்!