Thursday, March 04, 2010

மீனாவுடன் மிக்சர் - 18 {நாற்காலியில் எனக்கு ஒரு கர்சீப் போடறீங்களா?}

உலகத்திலேயே கஷ்டமான சில வேலைகள் என்னென்னன்னு என்னை நீங்க கேட்டீங்கன்னா, இப்படித் தான் நான் பட்டியலிடுவேன்-:

* ரத்த அழுத்த வியாதியை வளர்த்துக்காமல் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லுவது.
* மசால் வடையை ஒதுக்கி விட்டு மேரி பிஸ்கட்டோடு டீ குடிப்பது.
* உஸ்மான் ரோட்டுக்கு போய் நல்லி கடைக்குள் நுழையாமல் வருவது.
* ஜொள்ளோழுகாமல் சாம்பார் வடையை பத்தி நினைப்பது.
* தாய் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் வாழும் இந்திய மக்களுக்கிடையே சமுதாய உணர்வை வளர்க்கும்னு எதிர்பார்த்து தமிழ் சங்கம் போன்ற சமூக சங்கங்களை நிறுவி அதை கெட்ட பெயர் எடுக்காமல் நடத்துவது.

மரீனா பீச்ல நம்ம காந்தி சிலைக்கு பக்கத்துல இடம் கிடைச்சா வாங்கி போடலாம்னு ஒரு திட்டம் வச்சுருக்கேன். முதலமைச்சரோட கிருபை இருந்தா நடக்க வாய்ப்பிருக்கு. எதுக்கா? பல நாட்டு இண்டு இடுக்குகளிலே எல்லாம் பூந்து 'ஹலோ.......நாங்க இங்கயும் வந்துட்டோமே, இப்ப என்ன பண்ணுவீங்க?' ன்னு வில்லத்தனமான வெற்றி சிரிப்போடு சமூக சங்கங்களை நிறுவி நடத்தறாங்களே community volunteers, அவங்களுக்கெல்லாம் சிலை எழுப்ப தான்.

எதனால சிலருக்கு இப்படி ஒரு ஆசை? எங்கிருந்து இவங்களுக்கு வருது இந்த உந்துதல்? மாசா மாசம் குடும்பத்துக்கு படி அளக்குற கொட்டாவி விடும் உத்தியோகத்தையும் கஷ்டப்பட்டு செஞ்சுகிட்டு, வீட்டில் எந்நேரமும் விஸ்வரூபம் எடுத்து குஞ்சம்மாவா பிலிம் காட்டி கொண்டு, குழந்தைகளுக்கு முழு நேர (சம்பளம், பேட்டா இல்லாத அநியாயத்தை பத்தி இன்னொரு பதிவில் எழுதறேன்) டிரைவராவும் வேலை செய்துகிட்டு ஏன் இவங்களுக்கு இப்படி சமூகத்துக்கு குப்பை கொட்ட ஆசை? முக்கியமா எந்த கடை வைட்டமின் மாத்திரை சாப்பிடறாங்க இவங்கெல்லாம்? என்னடா இவ கேள்வி மேல கேள்வியா அடுக்கறாளேன்னு பாக்கறீங்களா? தருமி சிவன் கிட்ட சொன்னது போல எனக்கு கேள்வி மட்டும் தாங்க கேட்க வரும். ஹி ஹி.........

பல நாட்களா ஒய்வு கொடுத்து பாதுக்காத்து வச்சதுல நம்ம மூளை இன்னிக்கு வேலை செய்ய தயார்னு ஒரு இருமாப்புல இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க ரெண்டு கப் ஹார்லிக்ஸ் கலந்துண்டு உக்காந்தேன். அஞ்சே நிமிஷம் தான். அப்படியே சோர்ந்து போயிட்டேன். உருப்படியா ஒரு விடையும் கிடைக்கலை. ஹார்லிக்ஸ் மேல இருந்த நம்பிக்கையே போயிடுத்துன்னா பாருங்களேன்!

சரி போறது, நமக்கு தான் விடை கண்டுபிடிக்க துப்பில்லை, ஊர் மக்கள் அபிப்பிராயம் என்னன்னு பார்ப்போம்னு காது கொடுத்து கேட்டதுல இதை தெரிஞ்சுகிட்டேன். பதவி ஆசை மற்றும் புகழ் ஆசை தான் இவங்களோட முக்கியமான உந்துதல்ன்னு சிலர் நம்பறாங்க.

இருக்குமோ? நாற்காலி மேலே ஆசைப்பட்டு தான் இந்த மக்களெல்லாம் இப்படி சங்கத் தலைவர், செயலர், காசாளர், உறுப்பினர் அதிகாரி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக மற்றும் விளையாட்டு தொடர்பு இப்படிப்பட்ட வேலைகளுக்கு எல்லாம் கை தூக்கராங்களோ? இந்த வேலைக்கு பணம் கூரையை பிச்சுகிட்டு கொட்டுமா? தினமலர் பத்திரிகை முதல் பக்கத்தில் இவங்க (நிர்வாக குழுவின்) போட்டோ வருமா? சன் டிவியில் இவங்களை நேர்முக பேட்டி எடுப்பாங்களோ? இவங்க நடத்தும் கலாசார நிகழ்ச்சிகளை ஊர் மக்கள் வானளாவ புகழ்வாங்களா? மற்றுமொரு பெரிய கேள்விக்கணைக்கு மன்னிக்கவும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் 'ஆமாம்'ன்னு நீங்க சொல்லறீங்களா? சமூக சேவை செய்ய முன் வர்றவங்களோட முக்கிய காரணங்கள் பதவி மற்றும் புகழ் ஆசை தான்னு நீங்க இன்னும் நம்பிநீங்கன்னா அடுத்த தேர்தல்ல எனக்கு ஒரு நாற்காலியில் கர்சீப் போட்டு வைங்களேன் ப்ளீஸ்? என் முகமும் தான் பத்திரிகையில் ஒரு தடவை வரட்டுமே!

வருஷத்தில் மூணு அல்லது நாலு முறை எங்க ஊர் தமிழ் சங்கம் அருமையான கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. இதுக்கு ரிச்மன்ட் ஊர் பெண்கள் சார்பாக நான் நிர்வாக குழுவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவிக்கிறேன். ஏன்னா நாங்க அப்புறம் எங்கே போய் எங்களோட புது புடவையை எல்லாம் கட்டி நாலு பேருக்கு காமிக்கறது?

போன மாசம் நடத்தின நிகழ்ச்சி எப்பவும் போல் கலக்கலாக இருந்தது. எத்தனை குழந்தைகள் பங்கேற்றாங்க தெரியுமா? நாட்டியம், நாடகம், பாட்டுன்னு ரொம்ப அருமையா இருந்தது நிகழ்ச்சி. நடுவில் நான் தான் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன். தமிழ் dictionary கொண்டு போக மறந்துட்டேனா, பாத்தா குட்டி பசங்கல்லாம் சுத்த தமிழ்ல பேசி வயத்தில் கொஞ்சம் புளி கலக்கினாங்க. என் பள்ளி நாட்களோட செய்யுள் புத்தகங்களை தூசு தட்ட நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். டிவி தொகுப்பாளர்கள் நல்ல தமிழ் பேச பயிற்சி எடுக்க டீச்சர் தேடறாங்கன்னு கேள்விப்பட்டீங்கன்னா எங்க ஊர் பசங்களுக்கு ஒரு போன் போட சொல்லுங்க.

இப்படி ஒரு மூணு மணி நேர நிகழ்ச்சி நல்லபடியா நடக்கணும்னா குறைஞ்சது ஒரு மூணு மாசமாவது தமிழ் சங்க நிர்வாக குழு அதுக்கு அசராமல் உழைக்கணும். எத்தனை எத்தனை வேலை! ஹால் எடுத்து, மைக் செட்டப் செய்து நிகழ்ச்சிக்கு நடுவில் மக்கள் சாப்பிட டீ, பலகாரம் ஏற்ப்பாடு செய்து.... இது போல இன்னும் பல பல வேலைகள். இந்த உழைப்புக்கு ஒரு குட்டி கல்யாணமே பண்ணிடலாம். ஆனால் இதில் வருத்தம் என்னன்னா சக மக்களுக்காக, அவர்கள் கண்டு களிக்க என்று இந்த குழு இவ்வளவு உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பது பெரும்பாலும் ஒரு முழ நீள குத்தப் பத்திரிகை தான். சமோசாவில் உப்பு தூக்கல், டீயில் சர்க்கரை குறைச்சல், பெரியவங்க நிகழ்ச்சி ரொம்ப குறைவு - இது போல குற்றங்களை அடுக்கும் ஊர் மக்களுக்கு எங்க சங்கத் தலைவர் நிகழ்ச்சிக்கு நடுவே "இது எங்க சங்கம் இல்லை, உங்க சங்கம்." ன்னு அழகாக சொன்னார். நாமெல்லாம் வெளியாட்களாய் நின்னு குத்தம் சொல்லாமல், எல்லோரும் சேர்ந்து பங்கேற்றால் தான் நம்ம ஒரு சங்கம்னு சொல்லி கொள்ளரதுல பெருமைப்பட முடியும்னு நான் நினைக்கிறேன்.

நிர்வாக குழுவுக்கு மட்டுமில்லாமல், அத்தனை குழந்தைகளையும் வாரத்தில் பல முறை practice க்கு சளைக்காமல் காரோட்டி அழைத்துப் போன பெற்றோர்களுக்கும் ரிச்மன்ட் தமிழ் சமுதாயம் சார்பில் நான் நன்றி தெரிவிச்சுக்கிறேன்.

-மீனா சங்கரன்

7 comments:

  1. அட.. விடுங்கம்மா.. ஊருக்கு ஊருக்கு வாசப்படி.. எங்க ஊர்லயும் இதேதான். கடமையை மட்டும் செய்வோம்.. பலன் (பாராட்டு) கண்டிப்பாகக் கிடைக்காது

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா......நான் தமிழ் சங்க நிர்வாகக் குழுவை சேர்ந்தவள்னு நினைச்சுட்டீங்களா அனானி? இல்லவே இல்லைங்க. நான் ரிச்மன்ட் நகரத்தோட ஒரு சாதாரண குடிமகள் தான். நம்ம மக்களோட 'easy chair criticism' ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி குத்தம் கண்டு பிடிக்க எப்பவும் தயாரா இருக்கும் மனநிலையை நினைச்சு வருத்தப்பட்டு பொதுவா தான் எழுதினேன்.

    வந்து மறுமொழி இட்டு 'விட்டு தள்ளுங்க'ன்னு தேத்தினதுக்கு நன்றி.

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள் மீனா.

    தமிழ் சங்க நிர்வாகக் குழுவிற்கும், பெற்றோர்களுக்கும், முக்கியமாக பங்கேற்ற சிறார்களுக்கும் ஒரு பெரிய 'ஓ' போடுங்க...

    சிறப்பாக விழா எடுத்ததற்கு வாழ்த்துக்கள். ஏசுபிரான் பிறந்த கதை அழகாக மேடைவடிவில் கொண்டுவந்த மார்சலினுக்கு வாழ்த்துக்கள்.

    அனைத்து நிகழ்ச்சிகளும் சூப்பர். முகுந்தா, முகுந்தா பாட்டுக்கு நடனம் இன்னும் மனதில் ஓடுகிறது...


    //வருஷத்தில் மூணு அல்லது நாலு முறை எங்க ஊர் தமிழ் சங்கம் அருமையான கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவாங்க. //
    ஆனா சந்தடி சாக்குல இப்படி ஒரு பிரஷர் போடுறீங்களே - முரளி டென்ஷன் ஆயிடுவார்... :-)

    அடுத்த நிகழ்ச்சிக்கு ஆவலாக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. மீனா,
    பதிவுல வழக்கம்போல கலக்கிட்டீங்க. குழந்தைகளோட தாய்மார்கள் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமில்லை அதை சரியா சொல்லி அவங்களுக்கு ஒரு பாராட்டு பத்திரம் வாசிச்சீங்களே அதுக்கு ஒரு பெரிய நன்றி. இந்த விழாக்களின் சிறப்புக்கு முதல் காரணம் முக்கிய காரணம், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் இயக்குனர்கள். இவங்க இல்லைன்னா நிகழ்ச்சிகள் இப்படி கலைகட்டியிருக்காது. அவங்க பொறுமை, ஈடுபாடு வார்த்தைகளில் சொல்லமுடியாத ஒன்று.

    முரளி.

    ReplyDelete
  5. எல்லா ஊரிலும் நடப்பதுதான். விமர்சனம் செய்வது எளிது ஆனால் வேலை செய்து பார்ப்பது கடினம்.

    ReplyDelete
  6. நன்றி நாகு, நன்றி முரளி.

    ReplyDelete
  7. //விமர்சனம் செய்வது எளிது ஆனால் வேலை செய்து பார்ப்பது கடினம்.//

    கல்லுல பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் LK. உங்க வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!