Saturday, August 29, 2009

பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது


சக ப்ளாகிகள் சதங்கா மற்றும் பரதேசி இருவரும் எனக்கு பட்டாம்பூச்சி விருது வழங்கி பல வாரங்கள் (மாதங்கள்னா சொல்லறீங்க? சே சே இருக்காது) ஆன பிறகு நிதானமா இப்படி வந்து பட்டாம்பூச்சிகள் பறக்க விடறத்துக்கு நீங்க என்னை மன்னிக்கணும். இந்த முறை லேட்டா வந்ததுக்கு சோம்பேறித்தனம் காரணம் இல்லைங்க. பட்டாம்பூச்சி பறக்காத இடமே ப்ளாக் உலகில் இல்லைன்னு நினைக்கும் அளவுக்கு எல்லா இடத்துலயும் பட்டாம்பூச்சி பறக்குது. கண்ணில் விளக்கெண்ணை விட்டு கொண்டு தேடி பார்த்ததில் (கண்ணு லேசா எரியரா மாதிரி இருக்கு) எனக்கு பிடித்த மூவர்.

முதலாவதாக இந்த விருதை நான் அளிக்க விரும்புவது
ஸ்ரீராம் அய்யர் அவர்களுக்கு. அவ்வப்போது எழுதினாலும் மிக அருமையாக எழுதுபவர் இவர். கர்நாடக இசை கீர்த்தனைகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அர்த்தத்தை விளக்குவதில் வல்லவர். இன்னும் நிறைய இது போல் எழுத இவருக்கு இந்த விருது.

அடுத்ததாக இந்த விருதை வாங்க மேடைக்கு வருமாறு அம்பி என்பவரை கூப்பிடுகிறேன். சமீப காலமாக தான் இவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்திருக்கேன். இவருடைய இயல்பான நடை எனக்கு மிகவும் பிடித்தது. கொஞ்சம் யதார்த்தம், கொஞ்சம் கிண்டல், நிறைய சிரிப்பு ன்னு கலக்கறார் இவர்.

மூன்றாவதாக இந்த விருதை நான் அளிப்பது நம்மூர் அரவிந்தனுடைய அப்பாகோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு. ரிச்மன்ட் தமிழ் சங்கத்தினுடைய புதிய ப்ளாகர் இவர். முதல் பதிவிலேய கலக்கிய இவரை மேலும் பல பல பதிவுகள் தருமாறு வேண்டி இந்த விருதை அளிக்கிறேன்.


நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

Friday, August 28, 2009

படம் பாரு கடி கேளு - 38


TTE: Footboardல தொங்கறவங்கள உடனே இறக்கிவிடறேன் பார். Driver, வண்டிய உடனே நிறுத்துங்க!
Driver: இருங்க TTE சார். என்னாலே எஞ்சின் ரூம் உள்ளே போகமுடியலே.

அடை மழை !


Photo Credit: fineartamerica.com

நமக்கெல்லாம் மிக்ஸர் படி அளக்கும் மீனா அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி, பலத்த வேலைப் பளுவிற்கு இடையிலும் (நாம சொல்லிக்காம வேற யாரு சொல்லறதாம் :)), இந்த அரைபக்கக் கதை.

-----

கருமுகில் போர்த்திய அடர்த்தியில் கனன்று கொண்டிருந்த வானம் சற்றைக்கெல்லாம் வெண் மழை தூவ ஆரம்பித்திருந்தது.

இழுத்துப் போர்த்திய கம்பளியுள், கால்கள் சுறுக்கி, கைகள் பிணைத்து கருப்பைக் குழந்தையாய் இருக்க முடியாமல், இன்றும் வேலைக்குப் போவது மாதிரி ஆன‌தே என வருந்தினாள் நந்தினி.

பஸ் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்குப் பத்துப் பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும். பாராசூட்டையும் விட சிறிதான குடை கொண்ட பஸ்டாப்பில், அண்டிய ஆட்டுக் குட்டிகளாய் அப்பிய ஜனத்திரளுடன் சில நிமிடங்கள் ஒண்டி நின்றாள். மழை நின்றபின் வீட்டுக்குப் போய், முதல் வேலையாய் இழுத்துப் போர்த்திப் படுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள். அடைம‌ழையாய் விடாது பெய்த‌து ம‌ழை.

வழக்கம் போல இன்றும் குடை எடுத்துவர மறந்திருந்தாள். அரை மணி நேரத்தில் பொறுமை இழந்து, சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். சொட்டுச் சொட்டாய் விழுந்த மழை நீர், தலை முடியின் வழி பல கிளைகள் கொண்ட நீர்வீழ்ச்சிகளாய் கொட்டியது.

நேற்றும் இதனால் தான் அம்மாவுடன் சண்டை. "மழை நாளா இருக்கு. ரெண்டு நாள் லீவ‌ப் போட்டு வீட்டுல‌ இரேண்டி. அப்ப‌டி என்ன‌ ஆபிஸ‌க் க‌ட்டி அழுக‌றே ! பாக்குறது என்னவோ தையல் வேலை தான‌" என்று த‌வித்தார். "பெரிய குடை எடுத்துப் போகத் தான் கூச்சமா இருக்கு. ஹேன்பேக்கில் ஒரு சின்னக் குடையாவ‌து வ‌ச்சிக்க‌ வேண்டாமா ?" என்றும் திட்டினார். அத்தோடு அம்மாவுட‌ன் பேச்சை நிறுத்தி இப்போ, இருபத்தி மூணு ம‌ணி, ப‌தினைந்து நிமிட‌ம், (வாட்ச்சைப் பார்த்துக் கொண்டாள்) ஏழு நொடிக‌ள் ஆகியிருந்த‌து.

ச‌ர் ச‌ர்ரென்று க‌ட‌ந்து செல்லும் வாக‌ன‌ங்க‌ள். சாலைக் க‌ழிவோடு இர‌ண்ட‌ற‌க் க‌லந்திருந்தது ம‌ழை நீர். ச‌க‌தியாய் போன தெருக்கள் ஸ்கேட்டிங்க் போர்ட் இல்லாமலேயே வழுக்கியது. வெள்ளிக் கம்பியாய் மின்னல் கீற்றுக்கள் வேறு நடைக்குத் தடையாய் இருந்தது. 'இன்னும் கொஞ்சம் நேரம் பஸ்ஸாட்ப்பிலேயே நின்றிருக்கலாமோ ?' என‌ யோசித்தாள். 'நின்றிருந்தால் நின்று கொண்டே தான் இருப்போம். ந‌ல்ல‌ வேளை. இதோ இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் வீட்டை அடைந்து விட‌லாம் !' என்று அடிமேல் அடிவைத்து ந‌ட‌ந்தாள்.

தொப்ப‌லாய் ந‌னைந்து வீட்டுப் ப‌டியேறி, காலிங் பெல்லை அடித்துக் காத்திருந்தாள். அம்மா வ‌ந்து திற‌ப்பதற்கான‌ அறிகுறி எதுவும் தென்ப‌ட‌வில்லை. 'இன்னும் அம்மாவுக்குக் கோப‌ம் த‌னிய‌ல‌ போல‌ !' என‌ நினைத்து, ஹேன்பேக்கில் முன் பக்கம், கையை விட்டுத் த‌ன்னிட‌ம் இருக்கும் சாவியைத் தேடினாள். அக‌ப்ப‌ட‌வில்லை, 'சாவியையும் ம‌றந்து விட்டோமா ? என்ன‌திது சோத‌னை' என்று சுவ‌ற்றில் சாய்ந்தாள். ஏதோ நினைவில் மீண்டும் ஹேன்ட்பேக்கின் மைய‌ப் ப‌குதிக்குள் கையை விட‌, ரிமோட் க‌ண்ட்ரோல் போல எட்டிப் பார்த்தது, தன் குழந்தையின் குணம் அறிந்து அவளது ஹேன்ட்பேக்கில் அம்மா நேற்றிரவே போட்டு வைத்த‌ அந்த அழகிய‌ குட்டிக் குடை !

ஆகஸ்ட் 31, யூத்ஃபுல் விகடனில்

Thursday, August 27, 2009

ஆபீஸில் தூங்கலாமா?

"சபாபதிக்கு வேறொரு தெய்வம் சமானமாகுமோ" என்ற பாடல் தமிழ்நாட்டில் எல்லா சங்கீத மேடைகளிலும் கேட்கலாம்.

"மீசை நரைத்த தாத்தா உனக்கு ஆசை நரைக்கலையே" என்ற கேலி பாட்டு தெருக்கூத்துகளில் அடிக்கடி ஓலிக்கும். இப்படி சங்கீத மேடையிலும், தெருக்கூத்துகளில் பாடும் பாடல்களையும் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் கோபலகிருஷ்ண பாரதி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகளில்தான் இந்த பாடல்கள் இடம் பெற்றன. அவர் எழுதிய பாடல்களையும் மற்ற புராணங்களையும், பாடியும் பேசியும் பிழைப்பு நடத்திய ஏழை பிராமணர் அவர். இரவு உணவு வேளைக்கு பிறகு நடைபெறும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க அந்த காலத்தில் நல்ல கூட்டம் கூடும்.

பிரெஞ்சு காரர்கள் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலுக்கு அருகில், பிரிட்டிஷார் பொறுப்பில் இருந்த தஞ்சை மாவட்ட கிராமம் ஒன்றில் கோபலகிருஷ்ண பாரதியின் தொடர்க்கதை பிரசங்கம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. காரைக்காலில் உள்ள french agent அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த 2 குமாஸ்தாக்கள் பாரதியின் பேச்சை இரவு வெகு நேரம் கேட்டுவிட்டு, விடியும் முன்பு காரைக்காலுக்கு திரும்பி போனார்கள்.

மறுநாள் ஆபீஸுக்கு வந்த இரண்டு குமாஸ்தாக்களுக்கும் நல்ல அசதி. வேலை செய்ய முடிய வில்லை. இரவில் கண் விழித்தாலும் நடந்த களைப்பும் அவர்களை கொஞ்சம் கண் மூட செய்து விட்டது. கொஞ்சம் என்ன, நல்ல தூக்கம்தான் !! அந்த சமயம் பார்த்து பிரெஞ்சு அரசாங்க அதிகாரி ( மாவட்ட கலெக்டருக்கு சமமானவர்) ஆபீஸுக்கு வந்து விட்டார். தூங்கி கொண்டு இருந்தவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். குமாஸ்தாவை அனுப்பி அந்த இரண்டு பேரையும் கூட்டிக்கொண்டு வரச் செய்தார். கையை கட்டி கொண்டு நடுங்கியபடி நின்றார்கள். அதிகாரியினுடைய மிரட்டலை கண்டு, பயந்து, இரவில் கதை கேட்க போனதையும் தூக்கம் இல்லாமல் சில மைல் தூரம் நடந்து வந்த அசதியில் தூங்கி விட்டதாக உண்மையை சொன்னார்கள். "யார் கதை சொன்னார்" என்று அதிகாரி கேட்டார். கோபலகிருஷ்ண பாரதி என்று பதில் அளித்தார்கள்.

அவ்வளவுதான்.

அதிகாரியின் முகத்தில் இப்பொழுது கோபம் போயி ஆச்சரியம். "காசே" என்ற அந்த அதிகாரி கோபலகிருஷ்ண பாரதியை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியும். அதுமட்டும் அல்ல அவருக்கு தமிழ் மொழி மீது பற்றும் உண்டு.

பாரதியின் கதை சொல்லும் திறமை பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும், தானும் அவருடைய கதை பிரசங்கத்தை கேட்க வேண்டும் என்று சொன்னார்.

கதை பிரசங்கம் நடக்கும் இடம் மற்ற விவரங்களை கேட்டறிந்தார். பாரதியின் கதை நிகழ்ச்சி தொடர்ந்து சில நாட்களுக்கு அங்கே நடக்கும் என்ற விவரங்களையும் அதிகாரியிடம் அவர்கள் சொன்னார்கள். மறுநாள் இரவு அந்த இரண்டு குமாஸ்தாக்களோடும் வேறு சில பாதுகாப்போடும் அந்த அதிகாரி இரவு நேர இருட்டில் தன்னை மறைத்துக்கொள்ளும் அளவுக்கு வேஷம் போட்டு, பாரதியின் கதை நிகழ்ச்சி நடக்கும் கிராமத்துக்கு சென்றார். வெகு தூரத்தில் நின்று நிகழ்ச்சியை கேட்டு விட்டு காரைக்காலுக்கு இரவிலேயே திரும்பினார். பிரெஞ்சு அதிகாரி ஆன அவர் பிரிட்டிஷ் நிர்வாக பகுதிக்குள் நுழைவது பற்றி  தயக்கம் இருந்ததால் தன்னை அப்படி மறைத்து கொண்டார்.

சில நாட்களுக்கு பிறகு கோபலகிருஷ்ண பாரதியை காரைக்காலுக்கு வரவழைத்து அவர் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் பற்றி மேலும் விவரங்கள் கேட்டறிந்தார் அந்த பிரெஞ்சு அதிகாரி. அந்த காலத்தில் புத்தகங்களை அச்சிடுவது மிகுந்த செலவு பிடிக்கும் ஒரு விஷயம். ஆகையால் பாரதி தன்னுடைய நூல்களை ஓலைச் சுவடியில்தான் எழுதி வைத்திருந்தார்.

நந்தனார் சரித்திர கீர்த்தனையை புத்தகமாக வெளியிடலாமே என்று அந்த அதிகாரி கேட்டார். தன்னுடைய வறுமை நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்று பாரதி கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த பிரெஞ்சு அதிகாரி காசே கொடுத்த நிதி உதவியைக்கொண்டு நந்தனார் சரித்திர கீர்த்தனைகள் புத்தகமாக வெளிவந்தது.

இப்பொழுது சொல்லுங்கள். ஆபீஸில் தூங்கினால் நல்லதா? கேட்டதா?

எப்படியோ!! இரண்டு பேர் தூங்கியதால் தமிழுக்கு ஒரு நல்லது நடந்தது.

மு. கோபாலகிருஷ்ணன்
(அரவிந்தின் தந்தை)

Saturday, August 22, 2009

மீனாவுடன் மிக்சர் - 10 {வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை)

சமீபத்தில் நண்பர் நாகு "வார இறுதியில் மலை ஏற போகிறோம், வரீங்களா" ன்னு எங்களையும் சேர்த்து சில குடும்பங்களை கேட்டிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வந்து ஜெட் லாக்ல களைப்பா இருக்குன்னு சாக்கு சொல்லி நான் ஜாலியா படுத்து தூங்கிட்டேன். மிச்ச குடும்பங்களும் வேறு சில காரணங்களால் போகவில்லை.

நாங்க எல்லோரும் இப்படி கழுத்தறுத்த பின்னும் கூட மனம் தளராமல் சென்று மலை ஏறி வெற்றி வாகை சூடி வந்தாங்க நண்பர் நாகுவின் குடும்பத்தார். இவர்கள் மலை மேல் ட்ரெக்கிங் செய்வதில் கால் தேர்ந்தவர்கள் (கை தேர்ந்தவர்கள்னு சொன்னா ஏதோ இலக்கண பிழை போல இடிக்கிறதே!). எங்க குடும்பத்தின் கோட்டாவையும் சேர்த்து இவங்க அவ்வப்போது ஏதாவது மலை அல்லது குன்றின் மேலே ஏறி கொடி நட்டு விட்டு வந்திடுவாங்க. (கொடி நடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் கால் கடுக்க ஏறி கொடி நடாமல் திரும்பி வந்தால் என்ன பிரயோசனம்?) இந்த காலத்தில் நாற்காலி உருளைகிழன்காக(அதாங்க couch potato) உள்ள முக்கால்வாசி குடும்பங்களுக்கு நடுவில் இந்த குடும்பத்தின் 'outdoor activities' என்னை கவர்ந்த ஒன்று.

இதில் அதிசயம் என்னன்னா ஏற்கனவே ஒருதரம் எங்கள் குடும்பத்தோடு ட்ரெக்கிங் செய்த அனுபவம் இருந்தும் நாகு மறுபடி எங்களை கூப்பிட்டது தான். என்னை மலை ஏறக் கூப்பிடறதும் பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பாக்கறதும் ஒண்ணு தான். ஏணியில் நாலு படி ஏறினாலே நான் அசந்து போய் ஸ்டூல் கொண்டு வரச்சொல்லி உட்கார்ந்து நீர்மோர் கேப்பேங்க. போன மாசம் சென்னை போயிறந்தப்போ கூட நல்லி கடைக்குள்ள போய் சில்க் காட்டன் செக்ஷன்லேந்து தஸ்ஸர் சில்க் செக்ஷன் போறதுக்குள்ள காத்து போன பலூன் போல தொஞ்சு போய் ஒரு பன்னீர் சோடா குடிச்சுட்டு அரைமணி உட்காராமல் இனியொரு புடவை பாக்க மாட்டேன்னு என் தங்கை கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். அவளும் உடனே என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டா - இனி ஒருதரம் நான் அவளை கடைக்கு போகலாம் வான்னு கூப்பிட்டால் உடனே நாட்டு எல்லையை தவழ்ந்தாவது கடந்து பாகிஸ்தானுக்கு குடிபோயிடுவாள்னு. அவளை சொல்லி குத்துமில்லைங்க பாவம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாண்டிபஜார்ல ஒரு சின்னக் கடைக்கு என் துணிகளுக்கு மாட்சிங்கா வளையல் வாங்க போயிருந்தோம். என்னை விட எனக்காக அதிக சிரத்தையோடு எல்லாக்கலர் வளையலையும் எடுத்து காமிக்க சொல்லி என் தங்கை கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு ரொம்ப முக்கியமா உட்கார ஒரு பெஞ்சும் குடிக்க ரெண்டு சோடாவும் கொண்டு வர சொல்லி கேட்டேன். கோவம் வருமா வராதா சொல்லுங்க? ஒரு வழியா இனி எங்கே கிளம்பினாலும் நாலு சோடா பாட்டிலும் மடக்குற நாற்காலியும் மறக்காமல் கொண்டு வருவேன்னு சத்தியம் பண்ணினப்புறம் தான் என் தங்கை கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இதுக்கு முன்னாடி ஒருதரம் நாங்களும் இன்னும் சில நண்பர்கள் குடும்பங்களும் நாகுவின் ஊக்குவித்தலில் ட்ரெக் செய்ய கிளம்பிச் சென்றோம். கையில் எலுமிச்சம்பழசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ், பழவகைகள், ஜூச்வகைகள், சோடாவகைகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பாக் பண்ணிண்டு கிளம்பிப்போனோம் (பின்ன மலை ஏறிட்டு வந்தா பசிக்காதா? கண்ணு போடாதீங்க). போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம். முதல் கொஞ்சம் நேரம் கேலியும் சிரிப்புமா ஜாலியாக தான் இருந்தது. அப்புறம் தான் ஆரம்பிச்சது அவஸ்தையே. முதலில் குதி கால் வலிக்கற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் பின்னங்காலும் பங்க்சர். அப்புறம் கீழ்கால் தசைகளில் தபலா அடிக்கும் எபெக்ட். குழந்தைகளால் புகழ்பெற்ற "Are we there yet?" கேள்வியை நான் திருடி கெஞ்ச ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த ஒரே பதில் "இதோ வந்துடும். ரொம்ப தூரம் இல்லை." மந்திரி குமாரி படத்தில் மாதுரி தேவிக்கு "வாராய் நீ வாராய்" பாட்டின் போது எப்படி இருந்திருக்கும்னு எனக்கு அப்போ நல்லா புரிஞ்சது. ஒரு பெரிய கதையை சுருக்கனும்னா கடைசி அரை மைல் இருக்கும் போது கடவுள் என் கதறலை கேட்டு தாங்க முடியாமல் ஒரு பெரிய பாறையை கண்ல காமிச்சார். அவ்வளவு தான். நானும் எங்கள் கும்பலில் இருந்த குழந்தைகளும் தாவி ஏறி அதில் உட்கார்ந்து இனி நடக்க மாட்டோம்னு மறியல் பண்ணினோம். வேறு வழியில்லாமல் மத்தவங்க எல்லோரும் மிச்ச தூரம் இறங்கி போய் காரை எடுத்துண்டு வந்து எங்களை கூட்டி கொண்டு போனாங்க.

இப்போ சொல்லுங்க. என்னை மலை ஏற நீங்க கூப்பிடுவீங்களா?


-மீனா சங்கரன்

Sunday, August 16, 2009

படம் பாரு கடி கேளு - 37



ஐயோ! போதும் நிறுத்து! இனிமேல் தினமும் தக்காளி ரசம், தக்காளி சாதம், தக்காளி சட்னி கேட்கமாட்டேன்.

Tuesday, August 11, 2009

நியூயார்க் குவீன்ஸ்'ல் ஒரு ஏஞ்சல்!


ஒவ்வொரு வார நாளிலும் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை நியூயார்க்'ல் குவீன்ஸ் நகரத்தில் பலர் வீதியோரங்களில் கட்டிட வேலை, தோட்ட வேலை போல பல வேலைகளுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பலர் முறையாக குடியேற்றம் அல்லது விசா பெறாமல் வந்த லத்தினிய, தென்-அமெரிக்க மக்களாவார்கள், மற்றும் பலர் தமது குடும்பத்தை விட்டு இங்கு பணம் சேர்க்க வந்தவர்கள். இவர்களுக்கு இந்த கடின காலத்தில் வேலை கிடைப்பது மிக அரிதாகிவிட்டது. வேலை கிடைக்காவிடில் அந்த நாளில் உணவும் கிடையாது.
கடந்த 2004- முதல் இவர்களுக்கு தினமும் இரவு ஒரு வேளையாவது சூடான உணவு கிடைத்துவருகிறது. அதற்கு காரணம் 21 வருடத்திற்கு முன் கொலம்பியாவிலிருந்து முறையாக குடியேற்றம்/விசா பெறாமல் இங்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறிய 43 வயதான ஹொர்ஹெ (ஜோர்ஜ்) முனோஸ், இவரை எல்லோரும் 'கார்டியன் ஏஞ்சல்' என்று புகழ்கின்றனர்! மேலும் படித்தால் நீங்களும் அதை ஆமோதிப்பிர்கள்.
ஒவ்வொரு இரவும் சரியாக 9:30 மணிக்கு குவீன்ஸ் நகரத்தில் 73 வது தெருவிற்கு தனது வெள்ளை வேனில் வீட்டில் சமைத்த உணவுடன் ஜோர்ஜ் முனோஸ் வந்துவிடுவார். சுமார் 100 முதல் 150 பேர் இந்த உணவுக்காக காத்திருப்பார்கள். பல நியூயார்க் மக்கள் நன்றியளிக்கும் நாள் (Thanksgiving) அன்று தங்கள் சர்ச்'ல் ஒரு வேளை உணவு அளிப்பது வழக்கம். ஆனால் ஜோர்ஜ்க்கு அது மற்றுமொரு சாதரண நாள்!

“ஒவ்வொரு இரவும் ஜோர்ஜ் இங்கு தவறாமல் வந்துவிடுவார்.,” என்கிறார் ஒரு தொழிலாளி. “மழை, புயல், காற்று, என்ன ஆனாலும் தவறாமல் வந்துவிடுவார். எங்களுக்கு ஒரு வேளை உணவாவது தருவது முக்கியம் என நினைக்கும் ஜோர்ஜ், எங்களை பொருத்தவரை ஒரு ஏஞ்சல்.”
“கடவுள் உங்களை காக்கட்டும்,” என வாழ்த்தி கண் கலங்குகிறார் ஒரு பெரியவர். “நான் மூன்று நாட்களாக உணவில்லாமல் தவித்தேன்.”. உடனே ஜோர்ஜ் அவரிடம் புன்னகையுடன், "இனி நீங்கள் ஒவ்வொரு நாளும் 9:30 மணிக்கு இங்கு வந்தால் உணவு கண்டிப்பாக கிடைக்கும்" என்கிறார்.
ஜோர்ஜ்'கும் அங்கு வரும் பலருக்கும் இடையே உள்ள நட்பு மேலும் நெருக்கமானது! "யுரிப், உனக்கு இன்னும் கொஞ்சம் காபி வேண்டுமா?" என்று ஒருவரை பார்த்து கேட்கிறார். மற்றொருவரிடம், "சைமன், இன்னும் கொஞ்சம் பாஸ்தா வேண்டுமா? " என்கிறார்.
ஒருவகையில், இவர்களுக்கு ஜோர்ஜ் எவ்வளவு முக்கியமோ அதைவிட ஜோர்ஜ்'கு இவர்கள் முக்கியம். இவர்களால் தான் தனது வாழ்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதாக கூறுகிறார் ஜோர்ஜ்.
“எனக்கு தெரியும், இவர்கள் எனக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார்கள் என்று. இவர்களிடம் நான் கொடுக்கும் உணவினை உண்டபின் காணும் மகிழ்ச்சி எனக்கு இந்த சேவைக்கு கிடைக்கும் பரிசாக நினைக்கிறேன்!" நெகிழ்கிறார் ஜோர்ஜ்!

இந்த சேவைகளை செய்ய நல்ல மனது மட்டும் போதுமா?! இதற்காகும் செலவுகள் எல்லாம் ஜோர்ஜ்'இன் $600 பள்ளி பேருந்து ஓட்டுனர் வேலை செய்து வரும் வார சம்பளத்திலிருந்து வருகிறது என்பது மேலும் ஆச்சர்யம்! இவருக்கு உதவியாக 66-வயதான தாயாரும், ஒரு சகோதரியும் மட்டுமே!
ஒவ்வொரு நாளும் காலையில் 4:30 மணிக்கு எழுந்து தன்னிடம் இருக்கும் உணவு பொருட்களை கணக்கு எடுத்து தேவையானவற்றை குறித்துகொள்கிறார். வேலையிலிருந்து வீட்டிற்கு வரும் வழியிலே தாயிடம் அன்றைய இரவு மெனுவிற்கு தேவையானவற்றை கூறிவிடுகிறார். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது தேவையானவற்றை வாங்கி வந்துவிடுவார். வீட்டிற்கு வந்தவுடன் சமையல் ஆரம்பமாகிறது.
இவருக்கு சில நண்பர்கள் உண்டு. ஆனால் எந்த பொழுதுபோக்கும் கிடையாது! இதை ஆரம்பித்ததிலிருந்து ஒரு சினிமா கூட போனதில்லை என்கிறார்! இவரது சகோதரி "அவருக்கு இதை தவிர வேறு வாழ்கை இல்லை. ஆனால் மிக பெரிய மனது இருக்கிறது!" என்கிறார்.

இவருக்கு சில மெக்சிகன் உணவகங்கள் தங்களிடம் மீதமுள்ள உணவுகளை கொடுத்து உதவுகிறார்கள். பல நண்பர்கள் உணவிற்கு தேவையான பொருட்களை கொடுத்து உதவுகிறார்கள்.
“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நல்ல காலை உணவும் கொடுக்க இயலும். ஒவ்வொரு நாளும் கடவுள் உதவ எனக்கு கொடுக்கும் நல்ல வாய்ப்பாக இதை நினைக்கிறேன்" என்று புன்னகைக்கிறார் ஜோர்ஜ். உதவி செய்ய பணம் இருந்தால் போதாது, மனம் இருப்பது முக்கியம் என்பதற்கு ஜோர்ஜ் முனோஸ் சிறந்த எடுத்துகாட்டு. இவருக்கு கடவுள் நல்ல ஆயுளை கொடுக்க வேண்டுவோம்.
இவரது அறக்கட்டளை விபரங்கள் www.anangelinqueens.org என்ற தளத்தில் காணலாம்.

மேலும்:
http://www.cnn.com/SPECIALS/cnn.heroes/archive09/jorge.munoz.html
http://www.facebook.com/group.php?gid=14835060244

மீனாவுடன் மிக்சர் - 9 {அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?)

அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன். எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள் கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டு படிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா? இதோ கேளுங்க.

நான் இந்தியாவில் கோடை கால விடுமுறையை கழித்து விட்டு ரிச்மன்ட் வந்து சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆகியிருக்கும். ஜெட் லாக் என்று பேர் பண்ணி கொண்டு என் தோழிகளின் அருமையான நளபாகத்தை அனுபவித்து கொண்டிருந்த போது தான் அந்த போன் கால் வந்தது. வாரக்கடைசியில் நடக்கவிருக்கும் கோவிலுக்கு நிதி திரட்டும் நாட்டிய விழாவில் பங்கு கொள்ள முடியுமா என்று என்னை கேட்க ஊரில் நாட்டிய ஆசிரியையாக இருக்கும் என் தோழி தான் கூப்பிட்டாள்.

அச்சச்சோ! என்னங்க ஆச்சு? மூச்சு விட மறந்துட்டீங்களா? பரவாயில்லை ஆசுவாசப் படுத்திக்கோங்க. உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க. பரதக்கலைக்கும் எனக்கும் அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் உள்ள அதே தொடர்பு தான். (சும்மா ர்ய்மிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேங்க. வேற ஒண்ணும் இல்லை..ஹி ஹி). அதுவும் நடிகை ஊர்வசியின் தங்கையா அப்படீன்னு பலரால் கேட்கப்பட்ட எனக்கு பரத நாட்டிய மேடைக்கு அழைப்பா? மேடை தான் தாங்குமா? அதுவும் சமீபத்தில் தான் ஒரு சின்ன பூகம்பம் வந்து உலுக்கி விட்டு போன எங்க ஊருக்கு இப்படி ஒரு கெட்ட நேரமா? அப்படியே ஆடி போயிட்டேன்.

தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் இருந்து மூச்சு பேச்சு இல்லாமல் போகவே பதறிப் போன என் தோழி அவசரமாக விஷயத்தை சொன்னாள். மேடை ஏற சொல்லி கூப்பிட்டது நாட்டியமாட இல்லையாம். முருகன் தெய்வானை கல்யாணம் பற்றிய நாட்டியத்தில் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் போல வந்து மணமக்களை பூப்போட்டு ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு சின்ன ரோல் தான், பயப்பட வேண்டாம்னு சொன்னாள். அப்பாடா.....கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு. விஷயம் சொல்லிவிட்டு போனை வைக்கும் முன் மாலை ரிஹர்ஸலுக்கு கட்டாயம் வந்துவிடும்படி சொன்னாள்.

ரிஹர்ஸலா? இந்த ஜுஜுபி ரோலுக்கா? எப்படி யோசிச்சாலும் நின்னு பூப்போடுவதில் சொதப்ப முடியும்னு எனக்கு தோணலை. நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலுன்னு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? இப்படி நினைச்சு தான் கொஞ்சம் கொழுப்பும் மிச்சம் நமுட்டு சிரிப்புமா ரிஹர்ஸலுக்கு போனேன். என் ஆணவத்தை பாத்து கலியுக கிருஷ்ணன் கண் மறைவா நின்னு கை கொட்டி சிரித்திருப்பான் போல இருக்கு.

மேடை ஏறி நாலு தப்படி நடந்து சிரித்த முகத்தோடு எங்கே நிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. மேடை ஏறுவது வரை எல்லாம் சூப்பரா செய்தேன். பிறகு தான் எல்லாமே ரிப்பேர். பளிச்சுன்னு பத்து விளக்குக்கு அடியில் நின்னு சிரிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்னு தெரியணும்னா என்னை கேளுங்க, நான் சொல்லறேன். இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். சரி அதை விடுங்க. நாலு தப்படி எடுத்து மேடைக்கு அந்தப் பக்கம் போகணுமே? நடக்க முடியாமல் பின்னி போயிருந்த கால்களோடு நின்றிருந்த எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. ஒருவழியா மேடைக்கு அந்தப்பக்கம் வந்தவுடன் அடுத்த பிரச்சனை பூப்போடும் வரை கைகளை என்ன செய்யறது? மொத்தத்துல அந்த அஞ்சு நிமிஷம் முடியறதுக்குள்ளே சொதப்பி தள்ளினேன். இதுல அக்கிரமம் என்னன்னா எனக்கு முன்னால் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்த பதினைந்து இருபது வயசு கலைஞர்கள் எல்லாம் நூறு பேர் முன்னாடி மேடையில் ஆடுவது என்னவோ அவர்கள் தினமும் செய்யும் டெக்ஸ்ட் மெசேஜிங் போல யதார்த்தமா, இயல்பா, அற்புதமா செய்தாங்க.

மேடை ஏறி பத்து பேர் முன்னாடி நின்று ஆடியோ, பாடியோ, நடித்தோ மக்களை மகிழ்விக்கும் perfoming artists அனைவருக்கும் என் தொப்பி தூக்கி வணங்கி (hats off ) விடைபெறுகிறேன்.

-மீனா சங்கரன்

Monday, August 03, 2009

Swim For Life - Apurva's Fundraiser for St.Jude's Hospital


Swim-For-Life 2009
Apurva Pande, a senior in Henrico High School, is organizing a fundraiser to benefit St. Jude's Children's hospital! She conducted this in 2007 and 2008 also.
Date: August 15, 2009, starting at 6.30pm


You can see the flyer for the same here.  And here is a message from her.

Hope you guys are having fun and relaxing summer! Time is ticking down to Swim-for-Life 2009! All of you have been a huge support in the past, attending the events and helping make them a huge success. I couldn’t have done it without you. Me and my friend Alix Meardon, who is helping me this year, hope that with your support, we can make this year’s event bigger than ever! Swim-for-Life 2009 will be on August 15that the Tuckahoe YMCA at 6:30. As usual there's going to be food and fun, but this year we're going to have raffles to give away gift cards as well! As usual, you can make a flat donation, or pledge on a swimmer, but please help us and St. Jude's by contributing! Also, if anyone in your family is planning of swimming, please register with me by email ahead of time. So mark your calendars!

Thanks!
Apurva Pande
apurva.pande at yahoo dot com

Saturday, August 01, 2009

படம் பாரு கடி கேளு-36



நல்ல வேளை சீக்கிரம் போய் முதலில் நின்றதாலே வயலின் கொண்டையோடு போச்சு. கடைசியில் வந்தவளை நினைச்சா தான் குஷியா இருக்கு. பெரிய drum set கொண்டை போட்டுட்டாங்க!