Tuesday, December 30, 2008

அஞ்சா நெஞ்சன் - அஞ்சன்!

ரிச்மண்டில் வாழும் வாணி, பவனிராம் கௌஷிக் தம்பதியினரின் மகன் அஞ்சன் கௌஷிக்  மார்ச் 2009ல் லூகேமியா, லிம்ஃபோமா சொசைட்டிக்கு நிதி திரட்டுவதற்காக வர்ஜினியா பீச் நகரில் நடக்கவிருக்கும் ஷாம்ராக் அரை மராத்தனில் கலந்து கொள்ளவிருக்கிறான்.

லுகேமியாவுடன் போராடும் தங்கைக்காக நிதி திரட்டாமல் அந்த நோயை எதிர்க்க இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டிருக்கும் அவன் மனதிடம் என்னை வியக்க வைக்கிறது. அவனுக்கு இருக்கும் உறுதியில் சற்றாவது நமக்கும் தொற்றிக்கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் இதில் ஈடுகொள்ள. அஞ்சனுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்பினால், உடனே விரையுங்கள் இந்தத் தளத்திற்கு => http://www.tinyurl.com/anjank 

ஷார்லட்வில்லில் மருத்துவம் படிக்கும் அஞ்சனின்  இந்த அரிய சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

நீங்கள் இதுவரை எலும்பு மஞ்சை தானத்திற்கு பதிந்திராவிட்டால், உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சந்தர்ப்பம். ஜனவரி 18ல் ரிச்மண்ட் ஹிந்து சென்டரில் நடக்கவிருக்கும் லட்சார்ச்சனையின் போது மாடியில் இலவச எலும்பு மஞ்சை பதிவு முகாம் நடக்கவிருக்கிறது.  மேல் விவரங்கள் இங்கே.

Wednesday, December 17, 2008

மாநில ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி!



சென்ற டிசம்பர் 6-7 தேதிகளில் ஹாரிஸன்பர்க்'கில் நடந்த வர்ஜினியா/வாஷிங்டன் பகுதி லெகோ ரோபாட்டிக்ஸ் இறுதிப் போட்டியில் கார்த்திக் செட்டியின் அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. கார்த்திக் படத்தில் இடது பக்கம் நிற்கிறான்.

மூடி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கார்த்திக்கையும் சேர்த்து எழுவரைக் கொண்ட இந்த அணி வர்ஜினியா மற்றும் வாஷிங்டன் டிசியில் இருந்த பல அணிகளுடன் மோதி இரண்டாம் டிவிஷன் பிரிவில்(12-14 வயதிற்குட்பட்டோர்) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அடுத்ததாக இவர்கள் வர்ஜினியா/டிசி தரப்பில் அமெரிக்க அணியாக ஏப்ரலில் அட்லாண்டாவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்கள். அந்த போட்டியிலும் அசத்த கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நமது வாழ்த்துக்கள்!

உமா, அசோக் செட்டி தம்பதியினருக்கும் தம்பி அஷ்வினுக்கும் எமது வாழ்த்துக்கள்.

லெகோ ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவது கார்த்திக்கிற்கு புதிதல்ல! சென்ற வருடமும் மாநிலப் போட்டியில் வெற்றி பெற்றான். உலக சாம்பியனாக ஏப்ரலில் வர வாழ்த்துக்கள்.

Sunday, December 14, 2008

படம் பாரு கடி கேளு - 24


சே! இந்த கம்பனி டெலிவரிமேன் வேலை ரொம்ப மோசம்பா. பெட்ரோல் விலை கட்டுப்படி ஆகலே ட்ரக்குக்கு பதிலா சைக்கிள் வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படீன்றான் அந்த படுபாவி மேனேஜர்.

படம் பாரு கடி கேளு - 23


சே! நான் கஷ்டப்பட்டு ஏதோ "பீ பீ"ன்னு வாசிச்சா, ஒரு கும்பலே சேர்ந்திடுச்சு இங்கே! கத்ரி கோபால்நாத் வாசிச்ச "டூயட்" பாட்டு வாசின்னுவேறு படுத்தறாங்க! தாங்கமுடியலப்பா இவங்க பாடு.

படம் பாரு கடி கேளு - 22


நான் "இன்க்ரிமின்" டானிக் அப்படியே சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு 40 தடவை சாப்பிடுவேன். ஆனா என் பெண்சாதி மட்டும் சாப்பிடலே!

Thursday, December 11, 2008

எழுச்சியூட்டிய மனிதர் - 2008

இந்த வருடத்தின் (2008) எல்லோரையும் மிகவும் கவர்ந்த எழுச்சியூட்டிய மனிதராக சமீபத்தில் மறைந்த பேராசிரியர் ரேண்டி பாச்'ஐ தேர்ந்தேடுத்துள்ளனர்.


பரிந்துரைக்கு வந்த பல பெயர்களிலிருந்து, சிறந்த 10 மனிதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மூவர் (ஸ்டிவென் சாப்மேன் , சாரணர் சிறுவர்கள் மற்றும் பேராசிரியர் ரேண்டி பாச்) இறுதி சுற்றிற்கு தேர்வு செய்தனர். இறுதியில் எல்லோரையும் மிகவும் கவர்ந்த மனிதராக ரேண்டி பாச்'ஐ தேர்ந்தேடுத்துள்ளனர்.


இவரை நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்திருக்கலாம். இவர் பான்கிரியாடிக் கேன்சரால் தாக்கப்பட்டு தன் மரணத்திற்கு நாள் குறித்த பின் வழங்கிய "இறுதி சொற்பொழிவு" ("The Last Lecture") நம் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் முழு நிறைவுடன் வாழவும், கனவுகளையும், லட்சியங்களை அடையவும் மிகவும் ஊக்குவித்தது என்பது மிகையல்ல. இந்த சொற்பொழிவினை கேட்டால்/பார்த்தால்/படித்தால் அதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என்பது உறுதி. இவரைப் பற்றி படித்தவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது வள்ளுவனின் இந்த குறள்!




இந்த சொற்பொழிவு முதலில் கார்நகி மெல்லன் பல்கலைகழகத்தில் மிகச் சிறிய கூட்டத்தில் வழங்கப்பட்டாலும், ஊடகம் வாயிலாக உலகெங்கும் பிரசித்தி பெற்றது! இதுவரை அவரது சொற்பொழிவுகளை 20 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் என்பது இதன் தாக்கத்திற்கு சான்று!

"நம் கையில் வந்த சீட்டு அட்டைகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.. ஆனால் அதை வைத்து எப்படி ஆடி வெற்றி பெறலாம் என்பது நம் கையில் தான் உள்ளது!" என்று அவர் சொன்ன கருத்தின் தாக்கம், ஜுலை 2008ல் அவர் மறைவிற்கு பின்னும் இருப்பது இவரது வலைதளத்தின் பின்னூட்டங்களில் கண்கூடாக தெரிகிறது.

இந்த வருடத்தின் முன்மொழியப்பட்ட மற்றவர்களும் ஒவ்வொரு வகையில் மக்களை கவர்ந்துள்ளனர். அதிலிருந்து சிலர்:

பால் நுமன் : அமெரிக்கர்களுக்கு மிக பிடித்த நடிகர், இயக்குனர், அகாடமி விருது வாங்கியவர், நல்ல சமுக தொண்டாளர். 2008 வரை அவர் வழங்கிய கொடை மட்டும் $250 மில்லியன் டாலர்கள்! இவரும் 2008'ல் மறைந்துவிட்டார்.

கிரிஸ்டீனா ஆப்பிள்கேட் : இந்நாள் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நடிகை. 2008 ஆகஸ்ட்'ல் மார்பக புற்றுநோய்க்காக இரட்டை மாச்டெக்டொமி (மார்பக அகற்றல்) செய்த பின் தற்போது நலமாக இருப்பதுடன், மார்பக புற்றுநோயுடன் போராடும் அமெரிக்க பெண்களுக்கு மிக்க ஆதரவும், ஊக்கமும் அளித்தவர். இன்னமும் சினிமா/தொலைக்காட்சி சிட்காம்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!!

டாரா டொரெஸ் : இவர் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்ட மிக வயதான (41 வருடம், 125 நாட்கள்) வீராங்கனை என்ற பெருமையுடன், 2008ல் 50 மீட்டர் freestyle, 4×100 'medley relay' மற்றும் 4×100 freestyle relay' போட்டிகளில் 3 வெள்ளி பதக்கம் அள்ளியவர்! சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என ஊக்கம் அளித்தவர்!

வில்லியம் கிப்சன்: போரில் குண்டடிபட்டு ஒரு காலை இழந்த பின்னும், செயற்கை கால் பொருத்தப்பட்டு மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தவர்.

டாக்டர் ஹலிமா பஷிர்: சுடான் நாட்டில் டார்ஃப்ர் பகுதியில் நடக்கும் இனப் படுகொலைகளுக்கு எதிராகவும், சிறுமிகள் நாசப்படுத்தப் படுவதை தடுக்கவும், தன் உயிரை பொருட்படுத்தாமல் போராடும் பெண். சமீபத்தில் இவரை வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் சந்தித்து அங்கு நடக்கும் அவலங்களை பற்றி பேசினார்! இவர் எழுதிய "Tears of the Desert" என்ற புத்தகத்தை பற்றி அதிபர் மிக பெருமையாக குறுப்பிட்டார்!

டாரின் ஹெட்ரிக்: கன்சாஸ் மாகாணத்தின் க்ரீன்ஸ்பர்க் என்ற குக்கிராமத்திலுள்ள பள்ளியின் மேலாளர், புயலால் தாக்கப்பட்டு அனைத்தும் இழந்த தங்கள் ஊரில் "பசுமை" பள்ளிகளை நிறுவ உதவி புரிந்து மக்களை மீண்டும் அந்த ஊருக்கு திரும்ப வர வைத்தவர்!

டாக்டர் ஜில் போல்ட் டெய்லர்: மூளை ஆராய்ச்சியாளர்; மிக அரிய மூளைத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்ததுடன் அதைப்பற்றிய அனுபவங்களை சொற்பொழிவாற்றியவர்.

சாரணர் சிறுவர்கள்:: ஐயோவா மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து "தலைமை வகித்தல்" பயிற்சிக்காக வந்த சாரணர் தங்கியிருந்த முகாமினை சுழல் காற்று (Tornado) தாக்கியது. அவர்கள் பதற்றமடையாமல், தயார் நிலை பயிற்சியை நினைவிற்கொண்டு தங்களை காத்துக்கொண்டதுடன், மற்ற மாணவர்களையும் காத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தனர்!

ஸ்டிவென் சாப்மேன்: கிருத்துவ பாடகரான ஸ்டிவென் சாப்மேனின் தத்தெடுத்தல் பிரச்சாரத்தினால் கவரப்பட்டு, அதன் தாக்கத்தினால் பல சீன அனாதை குழந்தைகள் மக்கள் அமெரிக்காவில் தத்தெடுக்கப்பட்டனர். தான் தத்தெடுத்த மகளை ஒரு விபத்தில் இழந்தும், குடும்பத்தில் அனைவரையும் தேற்றி முன் சென்ற தீரம், மற்ற துன்பப்படும் பெற்றோரின் மனதினில் நம்பிக்கை வளர்த்தது!

நம்ம நாட்டிலிருந்தும் இது போல வருடா வருடம் மக்களுக்கு அறிமுகமில்லாத ஊக்கமூட்டிய மனிதர்களை பத்திரிக்கைகள்/ஊடகங்கள் சிறப்பித்தால்,
மக்களிடையே நன்னெறியும், நற்பண்பும், தொண்டாற்றும் ஆர்வமும் வளரும் என்பது என் கருத்து! ('டைம்' சஞ்சிகை இது போல இந்திய மக்களை கவர்ந்த மனிதர்களை அறிமுகம் செய்துவருகிறது!)

பேராசிரியர் ரேண்டி பாச்'ன் பிற சொற்பொழிவு விடியோக்கள்:
இறுதி சொற்பொழிவு (Last Lecture) - http://www.cmu.edu/uls/journeys/randy-pausch/index.html அல்லது http:\\www.thelastlecture.com

நேர மேலாண்மை (Time Management):
http://video.google.com/videoplay?docid=-5784740380335567758
அவர் எழுதிய ப்ளாக் (Blog Journal): http://download.srv.cs.cmu.edu/~pausch/news/index.html
அவர் எழுதிய "An Injured Lion Still Wants to Roar" - http://www.beliefnet.com/Inspiration/Most-Inspiring-2008/Last-Lecture.aspx

Wednesday, December 10, 2008

ராமசுப்பையர் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலை வெளியீடு

தினமலர் நிறுவனரான டி.வி.ராமசுப்பையரின் நூற்றாண்டு நினைவு அஞ்சல்தலையை இந்திய அரசு வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் திரு ஆ. ராசா அவர்கள் வெளியிட, தமிழக முதல்வர் கலைஞர் திரு மு.கருணாநிதி பெற்றுக் கொண்டு பேருரையாற்றுவதுடன் இந்த அஞ்சல்தலை வெளியீட்டு விழா இனிதே நடக்கவிருக்கிறது.

ரிச்மண்ட் தமிழ் குடும்பத்தின் அங்கத்தினர்களான ராமசுப்பையரின் பேத்தி மல்லிகா மற்றும் நடராஜமூர்த்தி தம்பதியினருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.



அழைப்பிதழ் அனுப்பிய தினமலர் பிரசுரகர்த்தா டாக்டர் ரா. லஷ்மிபதி அவர்களுக்கு எமது நன்றி.

Tuesday, December 09, 2008

நடராஜ்னு பேரு வச்சா சும்மாவா?

அடுத்த தமிழ் சங்க கமிட்டில கலாச்சார டிபார்ட்மெண்ட் இந்த தடவ மாதிரியே ரொம்ப ஸ்ட்ராங். ஒரு சாம்பிள் பாக்கணுமா?



என்னய்யா ஏதோ ஏரிக்கரைல இந்த ஆட்டம் ஆடியிருக்கியே, ஏதாவது உபயோகமாச்சான்னு கேட்டேன். ஒண்ணும் பதில் வரல :-)

ரிச்மண்ட் மக்கா - இனிமே நடராஜ் கூட ஆடனும்னா இந்த ஸ்டெப்புல்லாம் போட்டு பழகி ’ஆடி’ஷன் காமிச்சாதான் யோசிப்பமே...

கைல இன்னும் நடராஜ் ஆடின ஆட்டம் வீடியோல்லாம் கொஞ்சம் இருக்கு. எல்லாத்தையும் இங்க போட்டா அப்பறம் சிலபஸ் அவுட்டாயிரும். அதான் போடல.

Monday, December 08, 2008

வலை வலம்!

ஒலி பரிமாற்றுச் சேவை (VOIP)



முந்தைய பதிவில் நாகு கூகிளில் இருந்து "Video / Voice" அரட்டையடிப்பது பற்றி எழுதியிருந்தார். இணையத்தின் பல நல்ல வசதிகளில் ஒன்று VOIP (Voice over Internet Protocol) எனப்படும் ஒலி பரிமாற்றுச் சேவை. பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. சில சேவைகளை பாவிக்க உங்களுக்கு விசேட உபகரணங்கள் (Broadband Internet, VOIP Router) தேவைப்படும். இதற்கு மாதச் சந்தா கட்டினால், சில நிறுவனங்கள் Router இலவசமாக வழங்குகிறன. சந்தா இல்லாமல், விசேட உபகரணங்கள் இல்லாமல் உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு (PC-to-phone) பேசவும் இப்போது வசதிகள் உள்ளன! அந்த வகையில் www.freeringer.biz என்ற இணையதளத்திலிருந்து சுமார் 30 நாடுகளுக்கு இலவசமாக உலவியிலிருந்தே தொலைபேசிகளுக்கு பேசலாம்! இதை பாவிக்க எந்த மென்பொருளையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவித்துள்ளனர்! (சோதித்ததில் இதற்கு "Adobe Flash Player" மட்டும் தேவைப்படும் என தெரியவந்தது.). இதை பாவிக்க உங்களிடம் Broadband இணைப்பு தேவைப்படும். இல்லாவிட்டால், நீங்கள் பேசி 2 நிமிடம் கழித்து எதிரே உள்ளவருக்கு போய்ச்சேரும். (இந்த நிறுவனத்திற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை).


பி.பி.சி இணைய வானொலி:

சிலருக்கு தமிழில் கட்டுரைகள் வாசிப்பது சற்று சிரமமாக இருக்கும். அதுவும் பல பக்கங்கள் கொண்ட கட்டுரைகள் வாசிப்பதற்கு பொறுமையும் அவசியம். அந்த சிரமங்கள் இல்லாமல் நல்ல விடயங்கள் "ஒலி" வடிவத்தில் இருந்தால் எவ்வளவு வசதி! BBC இணைய தளத்தினில் நம்மில் பலரும் அடிக்கடி உலவியிருப்போம். அதில் பல நல்ல "ஒலி" தொடர்கள் உள்ளன. அதிலிருந்து உங்களுக்காக சில இங்கே:


1. நெஞ்சம் மறப்பதில்லை

நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள், சிரிக்கவைத்த சிந்தனையாளர்கள், சிந்திக்கவைத்த இயக்குநர்கள் என்று தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த வித்தகர்கள் பற்றிய தொடர். சம்பத்குமார் தயாரிப்பில். இங்கே கேட்கலாம்

2. தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை
தமிழ் இசையின் வரலாறு கூறும் இந்தத் தொடர், தமிழ் இசையின் தொன்மை, அதன் பரிமாணங்கள், வளர்ச்சிப் போக்கு, அது எதிர்கொண்ட மாற்றங்கள் ஆகியவை பற்றிப் பேசுகிறது. இசைக் கலைஞர்கள், மற்றும் இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்களின் கருத்துக்களைத் தாங்கிவருகிறது இந்தப் பெட்டகத் தொடர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் இத்தொடரைத் தயாரித்து வழங்குவது BBC சென்னை நிருபர் த.நா.கோபாலன்

3. பாட்டொன்று கேட்டேன்
அக்காலத்து 'மன்மத லீலையை வென்றார் உண்டோ' முதல் இன்று உங்களை தாளமிடவைக்கும் 'மன்மத ராசா!' வரை தமிழ்த் திரையிசை நடந்துவந்த பாதையைப் படம்பிடிக்கும் வரலாற்றுத் தொடர், சம்பத்குமார் தயாரிப்பில்.


மேலும் சில சுட்டிகள்:

1. தமிழோசை: நேரடி ஒலிபரப்பு

2. செய்தியறிக்கை: (மறு-ஒலிபரப்பு - On-Demand)

3. தமிழ் பண்பலை:: (மறு-ஒலிபரப்பு - On-Demand)


உதவி: கணினியில் தமிழோசை கேட்பதற்கு வகைசெய்யும் ஒலிச் செயலியை பெறுவது எப்படி?


கூகிள் மொழி மாற்று செயலி:

நமது வலைபக்கத்தில் தமிழில் தட்டச்சு செய்ய உதவி பக்கம் இருப்பினும், சிலருக்கு அவற்றை பாவிக்க சற்று கடினமானதாக(!) இருக்கிறது என்று கூறியுள்ளனர். சிலர், "நான் ஆங்கிலத்தில் எழுதி தருகிறேன், நீங்களே தமிழுக்கு மற்றிக் கொள்ளுங்கள்" என்று பின்வாங்கிவிடுவதுண்டு! அவர்களுக்காகவே இந்த மொழி மாற்று செயலியை கூகிளாண்டவர் கொடுத்துள்ளார். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை "பொனெடிக்" முறையில் தட்டச்சு செய்தால் அதை தமிழில் உடனே மாற்றி காட்டும்!! உதாரணத்திற்கு, "sangam" என்று தட்டச்சு செய்தால் அதை "சங்கம்" என மாற்றிடும்.

அதே போல தட்டச்சு செய்த வார்த்தையின் மேல் சொடுக்கினால், அதனை பல விதங்களில் காட்டும் (ஆனால், செயலியே சரியான எழுத்துக்களை தேர்ந்தெடுப்பதும், பிழையான வார்த்தையை சுட்டிக்காட்டிடவும் இன்னமும் வசதிகள் இல்லை!). நீங்கள் தட்டச்சு செய்தவற்றை ஈமெயில் அல்லது கோப்புகளில் வெட்டி ஒட்டிக் (Copy & Paste) கொள்ளலாம்! இதுவும் மிகச்சுலபமான முறையில் தமிழில் தட்டச்சு செய்ய உதவும் கருவி! ஆங்கில பிழை திருத்தி போன்ற வசதிகள் கொண்ட தமிழ் தட்டச்சு செயலிகள் இன்னமும் சில காலத்தில் வந்துவிடும். மேலும் விபரங்கள் மற்றும் உதவி பக்கத்தை இங்கே காணலாம்


சில நாட்களாக நாகு வலை வலம் பற்றி சொல்லாததால், நான் அறிந்த சில தகவல்களை இங்கே கொடுத்துள்ளேன்..

Sunday, December 07, 2008

பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

நேற்று ரிச்மண்டில் இந்த ஆண்டின் முதல் பனியாக ஒரு சின்ன பனித்தெளிப்பு இருந்தது. புல்தரை கூட முழுதாக மூடப்படாத அளவு குறைவான பனிச்சிதறல். குழந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் சிறிதாக விழுந்த பனியால் பெரிய மனக்குறை. எங்கள் மாவட்டத்தில் (கவுண்டிக்கு தமிழில் வேறென்ன?) பள்ளிக்கூட தினங்களில் கொஞ்சம் பனி விழுந்தாலும் பள்ளிக்கூடங்களை இழுத்து மூடிவிடுவார்கள். சனிக்கிழமை இவ்வளவு குறைவாக விழுந்தால் என்ன ஆகும்...


அரைகுறையாக மூடப்பட்ட புல்தரை...

ஞாயிறு மதியம் வெளியே கிளம்பினோம். எப்பொழுதும் வேனில் போகலாம் எனும் என் மகன், காரில் போகலாம் என்றான். என்னடா என்றால், வெயில்பட்டு எல்லா பனியும் மாயமாய் மறைந்திருக்க வேன் மறைத்ததால் புல்தரையில் ஒரு சின்ன இடத்தில் மட்டும் பனி இருந்தது. வேன் எடுத்தால் அந்த பனியும் உருகிவிடுமாம்! அதனால் வேனை எடுக்க விடவில்லை. அவனால் காப்பாற்றப்பட்ட புல்தரையும், தேரும்...


பனித்துளிக்கு தேர் கொடுத்த வள்ளல்....

Tuesday, December 02, 2008

ஓடிய பொருளாளர்...

உங்க பொருளாளர்(அதாம்பா தமிழ்ல ட்ரெஷரர்னுவாங்களே) ஓடப் போறார்னு செய்தி வந்தவுடனே, என்னடா கணக்க எல்லாம் அடுத்த கமிட்டி கிட்ட ஒப்படைக்கற நேரத்துல இப்படி பண்ணப் பாக்கறாரேன்னு கொஞ்சம் கவலையா இருந்துது. பாத்தா அரை மராத்தன் ஓடறாராம். நிம்மதி!

ரெண்டரை மணி நேரத்துல ஓடினதா கேள்வி. வெகு ஜோர். அடுத்த தடவை வீட்ல உருட்டுக்கட்டை எடுத்துட்டு பின்னாடியே வரச்சொல்லுங்க. ஒரு மணிநேரத்துல முடிச்சிறலாம்.

படத்து மேல கிளிக்குங்க...  அரவிந்த் விஸ்வரூபம் எடுப்பார்.





இன்னும் கொஞ்சம் படங்க பாக்கனும்னா, இங்க வாங்க! அந்த தளம் வேலை செய்யாட்டி இந்த பக்கத்துல போயி BIB number 10477னு போட்டுப் பாருங்க. நம்ம அரவிந்த் இன்னா ஷ்டைலா ஓடறாருன்னு... நிறைய படத்துல தனியா ஓடறத பாத்தா சந்தேகம் வருது, சும்மா ஆக்ட்டு குடுக்கறாரோன்னு. ஆனா பினிஷ் பண்ணிக்கிறார்பா. அதுவும் மராத்தன் ஓடிட்டு அன்னக்கி மத்யானம் நடந்த நம்ப தீபாவளி பங்ஷ்னுக்கும் வந்துட்டாரு மனுஷன்.


அடுத்த வருஷம் நானும் கூட ஓடனும்னு சொல்லியிருக்கார். என்னை பாதி தூரம் உப்பு மூட்டை தூக்கிட்டு போறதுன்னா சரின்னு சொல்லியிருக்கேன். நாமளே முருங்க மரத்துல இருந்து இறங்கிட்டா மரம் என்ன ஆவறது?

கங்கிராட்ஸ் அரவிந்த்!

Monday, December 01, 2008

ரிச் மெலடிஸ் இன்னிசை இரவு

சென்ற சனிக்கிழமை மாலை ரிச்மண்டில் ஆர் சி லாங்கன் துவக்கப்பள்ளியில் ரிச் மெலடிஸ்(RichMelodies)குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. தயா என்று அழைக்கப்படும் பால் ஞானோதயனின் குழுவினர் அசத்தினார்கள். ரிச்மண்ட் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான அனைத்து பாடகர்களும்(தயா, ஜெயக்குமார், ரமேஷ், கலா, நாராயணன், அரவிந்தன், சிவாந்தி, அங்கிதா, சுதா, சுரேஷ், அஸ்வின், சூர்யா மற்றும் பலர்) அழகாகப் பாடி மகிழ்வித்தார்கள்.
நிகழ்ச்சியை ஜெயந்த் கீபோர்டில் வசீகரா பாடலுடன் துவக்கினான். ஆர்த்தி கிளாரினட்டில் 'ஒரு மாலை'யுடன் தொடர்ந்தாள். இருவரும் அற்புதமாக வாசித்தார்கள்.
கார்த்திகேயனும் அட்லாண்டாவில் இருந்து வந்த ஒரு பெண்மணியும் நிகழ்ச்சியை வழங்கினார்கள்.

நிறைய குழந்தைகளும், பெரியவர்களும் பிரமாதமாகப் பாடினார்கள். என் நினைவில் நிற்பது சூர்யா கணீர்க்குரலில் திருத்தமாக பாடிய 'உன்னை அறிந்தால்' பாட்டு. அஸ்வின் பாடிய ராப் கலந்த பொன்மகள் வந்தாள் ரிமிக்ஸும் அட்டகாசம். பெரியவர்கள் பாட்டு வரிசை மிக நீளம். யாரையாவது விட்டு விடப்போகிறேன் என்ற பயத்தால் அனைவரையும் விட்டுவிடுகிறேன் :-)

உணவிற்குப் பின் டிஜே வைத்து மக்களின் ஆட்டம் கூட சூப்பர். படங்கள் இங்கே....(முழுதாகப் பார்க்க இங்கே)