Friday, July 01, 2011

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா (கோயம்புத்தூர்) - 1


கோவை என சுருக்கமாக அழைக்கப்படும் கோயமுத்தூர் நான் பிறந்து வளர்ந்த ஊர். மாசுபடாத காற்று, சுவையான சிறுவாணி குடிநீர், அதிக போக்குவரத்தில்லாத சாலைகள் ஒருகாலத்தில் (பதினைந்து வருடங்களுக்கு முன்னர்) இருந்தன. இப்போது சற்று மாறிவிட்டது. இருந்தாலும் கால மாற்றத்தால் மாசுபட்டதில்  மற்ற ஊர்களை காட்டிலும் கோவையில் சற்று குறைவே என எனக்கு பட்டது. சுற்றிலும் அடர்ந்த காடுகள், பாலக்காடு கேப் (rainshadow என்று கூறுவார்கள்) இருப்பதால் என்றும் குளு குளு வென இருக்கும்.   

கோவையின் சிறப்பு - அழகு கொங்கு தமிழ்,  சிறுவர்களை கூட "ங்க" போட்டு அழைக்கும் பண்பு. இவையிரண்டும் இந்த காலத்தில் வேறு எங்கும் பார்க்கமுடியாதவை.  எங்காவது ஆட்டோ ஓட்டுனர் "வாங்க.. போங்க.."  என்று கூப்பிட்டால் அது கோவையை தவிர வேறு ஊராக இருக்காது!

அதிகப்படியான  பள்ளிகள் , சிறந்த கல்லூரிகள் இருக்கும் ஊர். அந்த காலத்தில் பெரும் நிலக்கிழார்கள் தங்கள் செல்வத்தை மூட்டை கட்டி வைக்காமல் பல நல்ல பள்ளி/கல்லூரிகளை நிறுவினர்! எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் சர்வ ஜனா மேல் நிலைப்பள்ளியின் தொன்மையை பற்றி சொல்லவேண்டுமென்றால், அந்த பள்ளியின்  விருந்தினர் வருகை கையேட்டில்  மகாத்மா காந்தி கையெழுத்திட்டிருக்கிறார்கிருஷ்ண்ணம்மாள் பள்ளி/கல்லூரி (ஹ்ம்ம்) வாசலில் பி-4 காவல் நிலையம் இருப்பதால் அந்த கல்லூரி தான் பெண் பிள்ளைகளை பெற்றவர்க்கு முதல் விருப்பத் தேர்வு! என் ஊரான 'பீளமேடு'வை  சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டர் வட்டத்துக்குள் மட்டுமே இருபது தனியார் பள்ளிகளும்  பத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளும் உள்ளன!  பி.எஸ்.ஜி., சி..டி, எஸ்.என்.ஆர்., ஜி.சி.டி., தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, ஜி.ஆர்.டி.,  என பத்திற்கும் மேற்பட்ட சிறந்த பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவக்கல்லூரிகளும் அடக்கம்! ஜி.டி.நாயுடு குழுமம் சில நல்ல தொழில் பயிற்சி கல்லூரிகளை நடத்திவருகிறது

இந்த ஊரில் மட்டும் வீதிக்கு ஒருவர் கிரைண்டர், மிக்சி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகளை நடத்துவதை பார்க்கலாம்! அது தவிர  பல பெரும் தொழிற்சாலைகள் - லஷ்மி மெசின் வொர்க்ஸ், பிரிகால் (வாகன dashboard), ஸ்பார்க் பிளக், யு.எம்.எஸ். ரேடியோ, டெக்ஸ்டூல், விஸ்கோஸ், திருப்பூர் textiles),  பஞ்சாலைகள் என வேலை வாய்ப்பிற்கு குறைவே இல்லாத ஊர்!  இந்த காலத்தில் டெக்னாலஜி பார்க் வந்தவுடன் டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ  என பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளன.

  கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி! அதற்கேற்ப  மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் (கரிகால் சோழனால் கட்டப்பட்டது!), பன்னாரி அம்மன்கோனியம்மன்மாசாணியம்மன், ஐயன்கோவில்பூண்டிஈச்சனாரி விநாயகர்தண்டு மாரியம்மன்வெள்ளியங்கிரி மலைகாரமடை  கோவில் என பல புரதான சிறப்புள்ள கோவில்கள் இங்கே உள்ளன! வெள்ளி மற்றும் சனி அன்று இங்கு கூட்டம் அதிகம். எனக்கு பிடித்த கோவில் மருதமலை மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில்.

நான் பார்த்த/சுற்றிய/உணவருந்திய/மனதில் நின்ற சில இடங்கள்  நேரு விளையாட்டரங்கம்,  வா.வு.சி.  பூங்கா, டாப் ஸ்லிப்ஸ் (மலை),  அட்டகட்டி மலைபகுதிஒப்பணக்கார வீதி (சகல விதமான பொருட்களும் கிடைக்கும்!), அன்னபூரணா உணவகம் (இட்லி சாம்பார்!), அங்கண்ணன் கடை (பிரியாணி), இராணி உணவகம்,  ஆர்யா பவன் (சில்லி பரோட்டா), சிக்கன் சம்பூர்ணா (என் அண்ணனின் நெருங்கிய நண்பர் கடை!),  ஸ்ரீபதி தியேட்டர் (ஆங்கில படங்கள் காண - ஹலோ யாரது.. அந்த மாதிரி படம் அல்ல, குடும்பத்துடன் காணும் படங்கள்., இந்த திரையரங்கம் இன்னும் இருக்கிறதா என தெரியாது ), கே.ஜிதியேட்டர் , சாய் பாபா காலனி, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் என பட்டியல் நீளும்தேன் மிட்டாய் (ஐந்து பைசா தான்!), சுகன்யா பேக்கரி பப்ஸ்,  டைமண்ட் சிப்ஸ்,   என்.எம்.பி பேக்கரி முட்டை பப்ஸ், தேங்காய் பன்  இன்றும் நாக்கில் எச்சில் ஊறவைக்கும்!  ஹிக்கீன்போதம்ஸ் புத்தக கடை, மணிகூண்டு கடைகள், டவுன் ஹால் துணி கடைகள், லஷ்மி காம்ப்ளெக்ஸ் (எண்பதில்  பல மாடி கொண்ட உள்  அரங்கு கடைகள்-mall. நான் முதன் முதலாக ஒலி நாடா வாங்கி பாடல்கள் பதிவு செய்தது இங்கே தான்!),  ஹோப்ஸ் காலேஜ் டீ கடை,  கரிவரதன் ரேஸ் மைதானம், ரேஸ் கோர்ஸ் சாலை (இங்கே தான் முதலில் ரோலர் ஸ்கேடிங் பழகினேன்) என பல இடங்கள்  இன்னமும் கண் முன்னே நிற்கிறது! 

கோவைக்கே உரித்தான லொள்ளு படித்தவர், படிக்காதவர், சிறியவர், பெரியவர் என எல்லோரிடமும் இருக்கும்!  அதை சினிமாவில் கொண்டுவந்து வெற்றிகண்டனர்  பல நடிகர்கள்!  பாக்யராஜ்சத்யராஜ், மணிவண்ணன், சிவகுமார்நிழல்கள் ரவி, கோவை சரளா, கௌண்டமணி என கோவையிலிருந்து சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம்தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (பின்னாளில் டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கம்  1900ஆம் ஆண்டு கட்டப்பட்டது !  இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்! சினிமா தவிர, உடுமலை  நாராயணகவி,  ஜி.டி.நாயுடு, F1 ரேஸ் வீரர் கரிவரதன், நரேன் கார்த்திகேயன் பல பிரபலங்கள் பிறந்த ஊர்.   

வேலைக்காக மெட்ராஸ் செல்ல வேண்டியிருந்தது. வேறு ஒரு ஊருக்கு சென்ற பின் தான் நம்ம ஊரின் சிறப்புகள் நினைவிற்கு வரும்!  சிறுவாணி தண்ணீர் குடித்தவருக்கு  மெட்ராஸில் பிஸ்லேரி தண்ணீர் கூட குடிக்கமுடியாது! 'தோடா.. வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா.. சாவு கிராக்கி' என்று மெட்ராஸ் ஆட்டோகாரர் திட்டுடன் நாள் ஆரம்பமானால் உடனே கோவை மக்கள் நினைவில் வருவார்கள்! பேருந்து நிலையத்தை தாண்டி நிறுத்தாத ஓட்டுனர், அவரசரமாக ஓடி வரும் பெரியவருக்காக வண்டியை வழியில் நிறுத்தி ஏற்றிக்கொள்ளும்  ஓட்டுனர் என அடுக்கிக்கொண்டு போகலாம்ஒவ்வொரு முறை நான் பிறந்த ஊருக்கு விடுமுறையில் வரும்போதும் இந்த பண்புகள் மாறாமல் இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன். அமெரிக்கா வந்தவுடன் எங்காவது ஒருவர் "சொல்லுங்'ணா" என பேசுவதை கேட்டால் உடனே போய் அவரிடம் கோவையில் எந்த இடம் என்று கேட்டதுண்டு!  சரி,  ரிச்மண்டில் கொங்கு தமிழ் மக்கள் யாராவது உண்டா

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா

இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக்கினால் பல இடங்களை பற்றி (விக்கி'யில் இல்லாத பல தகவல்களை) தெரிந்து கொள்ளலாம் என தோன்றியது! ஆதலால் அடுத்து நான் பண்ருட்டியாரை (அவருக்கு தெரியும் யார் என்று! உங்களுக்கு தெரியாதென்றால் அடுத்த பதிவு வரும்வரை காத்திருக்க வேண்டும்!) இந்த பதிவின் தொடர்ச்சியாக அவரது  ஊரைப் பற்றி  எழுத அழைக்கிறேன்!


Monday, June 27, 2011

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்?

காலங்கள் எப்படி மாறி விட்டன? ஒரு தொண்ணூறுக்கு முற்பட்ட காலங்களில் நாம் எப்படி இருந்தோம், இப்போது எப்படி மாறி விட்டோம்? ஏகப்பட்ட விஷயங்கள் மாறி விட்டன. அதில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.

அன்று.

காலை 5 : 30 க்கு எந்தோ சப்தங்கள். வாசலில் சென்று பால் வாங்கும் சப்தம். (பால் சற்று முன் கறக்கப் பட்டது, அந்த சூடு இன்னும் ஆறவில்லை ) சுமார் ஆறு மணிக்கு எழுகை - ஆல் இந்திய ரேடியோ-வில் "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்" என்று TMS பக்தி பாடல்களோடு நாள் ஆரம்பிக்கிறது. பல் தேய்த்து விட்டு ஏதாவது தின் பண்டத்தை முழுங்கினால், ஜெயா பாலாஜி இன்று என்ன செய்தி என்று தொடங்குகிறார். அது முடிந்தவுடன் வாசலில் எப்போதடா பேப்பர் காரரின் பெல் சத்தம் கேட்கும் என்ற எதிர் பார்ப்பு. கொஞ்ச நேரத்தில் தினமலர் வந்து சேர்கிறது. சிறு போட்டியை சமாளித்து அதை மேய்ந்து விட்டு ஒரு வாளி தண்ணீரில் ஒரு குளியல். தலை சீவி பாண்ட்ஸ் பவுடர் இட்டு விட்டு காலை உணவுக்குத் தயார். கிடைக்கும் கொஞ்ச சமயத்தில் ஏதாவது பாட புத்தகங்களை ஒரு சிறு பார்வை. சனி கிழமைகளில் குமுதம், கல்கண்டு வந்தால், பல நாட்கள் வைத்திருந்து படிக்கும் அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள்

காலை உணவு - இட்டலி, தோசை போன்ற அற்புதமான பலகாரங்களுடன் காலை உணவு ஆரம்பிக்கிறது. அது முடிந்தவுடன், மதிய உணவை எடுத்துக்கொண்டு தோழர்களுடன் ஒரு நெடிய நடை பயணம் ஆரம்பிக்கிறது. புத்தகக் கூடையில் கனம் தாங்காமல் இந்தக்கை, அந்தக்கை என்று போராட்டம். கூடையும் கீழ் விளிம்பில் ரசம், சாம்பார் முன்பு சிந்தியதின் தடயங்கள். நடக்கும்போது, ஒரு சைக்கிள் இருந்தால் நம் வாழ்க்கை எப்படி சொர்க்க மயமாக இருக்கும் என்ற சுகமான கற்பனைகள். கூட நடக்கும் சில தோழர்களோடு சில சமயம் சண்டை, சில சமயம் சேக்கா. அதற்குத் தகுந்தால் போல சம்பாஷணைகள். அடுத்த மாதம் சொந்தக்காரரின் வீட்டு கல்யாணத்திற்கு வெளியூர் செல்லும் விவரத்தை தோழர்களிடம் சொல்லும்போது அவர்களிடம் ஒரு சிறிய பொறாமை. வழியில் உள்ள திரை கொட்டகையில் படம் மாற்றி இருப்பானா என்று ஒரு ஆவல். மாற்றிய படம் சொத்தையாக இருந்தால் ஒரு ஏமாற்றம். நல்ல படமாக இருந்தால் வீட்டில் எப்படி அனுமதி வாங்குவது என்ற தீவிர ஆலோசனை. வழியில் தாண்டி செல்லும் கணபதி, லயன் பஸ்களில் செல்லும் பிரயாணிகளை பார்த்து ஒரு சிறிய பொறாமை. எப்போதாவது கிராஸ் செய்யும் சில அம்பாசடர் கார்களை பார்த்து, என்றாவது ஒரு நாள் காரில் போக வேண்டும் என்று ஒரு நப்பாசை. அம்பாசடர் அல்லாத பியட் போன்ற கார்கள் சென்றால், அந்த அரிய விவரத்தை நண்பர்கள் மற்றும் வீட்டில் உடனடியாக சொல்ல ஒரு ஆர்வம்.

ஒரு வழியாக அப்பாடா என்று பள்ளியில் சென்று கூடையை வைத்து சில சிறிய விஷயங்களை பேசும்போது பெல் அடிக்க காலை assembly தொடங்குகிறது. அது முடிந்தால் நீண்ட வகுப்புகள். எவ்வளவு நன்றாக படித்தாலும், அடிப்பதற்கு ஆசிரியர்கள் ஏதாவது காரணம் கண்டு பிடிப்பார்கள். ஏதாவது ஒரு நாள் அடி வாங்காமல் வந்து விட்டால், அது ஒரு பொன்னாள்.

கூடுமான வரை இடையில் பசிப்பதில்லை. ஒரு வழியாக மதிய உணவிற்கான இடை வேளை. அவரவர் சாப்பாடு எடுத்துக்கொண்டு, பிடித்த நண்பர்களோடு ஏதாவது கதை பேசி கொண்டு சாப்பாடு. சாப்பிட்ட பின் பாத்திரம் கழுவ பைப்பில் கொஞ்சம் அடிதடி. இதில் சில சமயம் சம்படம் மற்றும் தூக்கு வாளியின் விழிம்புகள் நெளிந்து வீட்டில் திட்டு வாங்க வாய்ப்புகள் அதிகம். சாப்பிட்ட உடன் பள்ளிக்கு அருகே உள்ள சில வீடுகளில் சென்று தண்ணீர் கொடுங்கள் என்ற வேண்டுகோள். சில வீடுகளில் தருவார்கள். சில வீடுகளில் துரத்துவார்கள். சில பணக்கார மாணவர்கள் வாட்டர் பாட்டில் போன்ற அரிய பொருட்களைக் கொண்டு வருவார்கள் . பள்ளிக்கருகில் உள்ள அதிருஷ்ட சாலிகள், வீட்டில் சென்று உண்ணுவார்கள். ஆனால் நண்பர்கள் அவர்களுடன் வருவதைக் கடுமையாகத் தவிர்ப்பார்கள்.

உணவு உண்டவுடன், சில வசதியுள்ள மாணவர்கள் குச்சி ஐஸ் பற்றும் சில தின் பண்டங்களை வாங்கித் தின்பார்கள். அதைக் குறித்து பெரிதளவும் பொறாமை படுவதில்லை. (பழகி விட்டது). மத்தியானம் போரடிக்கும் பாடங்கள் ஒரு தவிப்பை ஏற்படுத்தும். எப்போதாவது வகுப்பில் சாக்பீஸ் தீரும் போதோ, தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் இருந்து ஏதாவது எடுத்து வரவோ ஆசிரியர் அனுப்பும்போது, மற்ற மாணவர்களின் ஒரு வயிற்றெரிச்சல். அந்த இரண்டு நிமிட சுதந்திரத்தில் ஒரு அலாதி இன்பம். எப்போதாவது விமான சத்தம் கேட்டால், எல்லாரும் ஓடி சென்று பார்க்கலாம்.

வகுப்பறையில் உள்ள ஒரு சில ஓட்டைகள் மூலம் சூரிய வெளிச்சம் சில இடங்களில் விழும். அதன் மூலம், ஓரளவுக்கு கடைசி பெல் அடிக்கும் நேரத்தை கணிக்கலாம். ஜன்னல் ஓரத்தில் உள்ள மாணவர்கள், அவ்வப்போது பெல் அடிக்க பள்ளி பியூன் வருவானா என்று சூரிய வெளிச்சத்தையும் ஜன்னலையும் மாறி மாறிப் பார்ப்பார்கள்.

ஒரு வழியாக பெல் அடிக்கும்போது உலகை வென்ற ஒரு திருப்தி. பரபரப்பாக ஒரு வெளியேற்றம். சிறு விளையாட்டுகள் முடிந்து போக ஒரு ஆசை. ஆனால் uniform அழுக்கானால் வீட்டில் வரப்போகும் விளைவுகளைக் குறித்து ஆலோசிக்கும்போது, வேண்டாம் என்ற தீர்மானம்.

மீண்டும் ஒரு நெடிய நடை பயணம். அத்தி பூத்தாற்போல தெரிந்த ஒருவர் சைக்கிளில் வருவார். வீட்டிக்கு ஒரு இலவச பயணம். 45 நிமிட நடை மிச்சம். அந்த நாட்களின் இனிமை நெடு நாள் மனதில் நிற்கும். வீட்டில் சென்றவுடன் ஒரு சாப்பாடு. பின்பு இருட்டும் வரை விளையாட்டு. கிரிக்கட் போன்ற விளையாட்டுகள் சென்னை போன்ற மாநகரங்களிலே மாத்திரம் உள்ள சமயம். அதனால் விளையாட்டுகள் சீசன் மாறும்.

செல்லாங்குச்சி(கில்லி), டயர் உருட்டுதல், கபடி, முதுகில் கை வைத்து தாண்டுதல், கோலிக்காய், ஓடி விளையாடுவது போன்றவை முக்கியமானவை. பெண் தோழிகள் இருந்தால் நொண்டி அடிப்பது, சில்லு தாண்டுவது, தாயம், பல்லாங்குழி, கோல கொலையா முந்திரிக்கா போன்ற விளையாட்டுகளையும் ஆடலாம். ஊர்களுக்கு தகுந்தாற்போல பட்டாம் பூச்சி பிடித்தல், வைக்கபோரில் குதித்தல் போன்ற விளையாட்டுகளும் உண்டு. விளையாட்டு பொருட்கள் பற்றி கேள்வி பட்டதுண்டு. அதிகம் பார்த்ததில்லை. சிக்கி முக்கி கல்லில் சிவப்பு விளக்கு எரியும் ஒரு கார் பக்கத்து வீடு பையன் வைத்து பார்த்ததுண்டு. தீபாவளிக்கு வாங்கும் துப்பாக்கிகள் பல வருடங்கள் பாதுகாக்கப்படும்.

பஸ்ஸில் வெளியூர் செல்லும்போது உட்கார இடம் கிடைத்தால் சந்தோஷம். ஜன்னல் ஒட்டி கிடைத்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டே பொழுது போவதில் ஒரு பூரிப்பு.. இன்னொரு பேருந்தை முந்தும்போது அடுத்த பேருந்தில் இருக்கும் பயணிகளைப் பார்த்து ஒரு ஏளனம். ஓட்டுனர் அருகே இருக்க முடிந்தால், ஸ்பீடோ மீட்டரை எட்டி பார்ப்பதில் ஒரு ஆனந்தம். இப்படிப் பல சிறிய சந்தோஷங்கள் ஈடு இணையற்றவை.

மாலை நேரம் குழந்தைகள் விளையாடும் சமயம் பெரும்பாலும் தந்தைகள் வெளியில் செல்வதுண்டு. அவர்கள் எங்கே போகிறார்கள் என்று கேட்டால் கடுமையான கோபத்தை நேரிடலாம். அவர்கள் வெளியில் செல்லும் நேரத்தில் தாய்க்குலங்கள் அருகில் உள்ள வீடுகளின் வாசலில் அமர்ந்து மற்ற வீடுகளின் கதைகளைப் பேசுவது வழக்கம்.

அப்பாக்கள் வீட்டுக்கு வரும் முன்னர் விளையாட்டை முடித்து விட்டு வீட்டுக்கு வர வேண்டியது அவசியம். தூரத்தில் அவர் வரும்போது அம்மாக்கள் மெதுவாக கலைந்து வீட்டுக்கு சென்று உணவை தயார் செய்வார்கள். அப்பா நுழையும் போது குறைந்த பட்சம் படிப்பது போல் நடிப்பது பிள்ளைகளின் வழக்கம்..

இரவு 7 : 15 மணிக்கு சரோஜ் நாராயண சாமி ஆகாசவாணியில் நாட்டு படைப்புகளை கரகரத்த குரலில் விவரித்து முடிக்கும் போது, உணவுக்கு ஆயத்தமாகலாம். டயபடீஸ் அதிகம் பாதிக்காத (அல்லது அறியப்படாத) காலமானது கொண்டு, சப்பாத்தி அதிகம் தலை காட்டாத காலம். நல்ல ஒரு தமிழ் உணவுக்கு பின், தேவை என்றால் சிறிது நேரம் படிப்பு, எட்டரைக்குப் பின் உறங்கத் தயார். குளிர்ந்த பாயும், இலவம் பஞ்சு தலையணையும். ஆஹா, என்ன ஒரு உறக்கம்.

ஒன்பது மணிக்குப் பின் ஒரு நிசப்தம். ஊரங்கு சட்டம் இட்டது போல ஒரு சூழ்நிலை. சினிமா இரண்டாவது ஆட்டம் பார்ப்பவர்களை மக்கள் கொஞ்சம் ஒதுக்கி வைப்பதும் போலீஸ் காரர்கள் அவர்களிடம் சந்தேகப்பட்டு டிக்கெட் கேட்டு, இல்லா விட்டால் சந்தேக கேசில் லாக்-அப் கொண்டு போவதும் வழக்கம்.

சாப்பிடும் ஹோட்டல்கள் பஸ் ஸ்டாண்டுகள் பக்கத்தில் பார்த்ததுண்டு. அதில் என்ன உண்டு, யார் சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. ஒரு முறை வெளியூர் செல்லும்போது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நெல்லை வசந்த பவனில் சாப்பிட்ட ஒரு அற்புதமான அனுபவம்.

கல்யாண அழைப்புகளை உறவினர்களை எங்கிருந்தாலும் தேடி பிடித்து நேரில் சென்று அழைத்தார்கள். கல்யாண வீடுகளுக்கு செல்லும்போது, குடும்பத்தோடு சில நாட்கள் சென்று, அங்கு இருக்கும் வேலைகளை பகிர்ந்து கொண்டு, இருக்கும் உணவை உண்டு விட்டு , கிடைத்த இடத்தில் படுத்துக்கொண்டு கல்யாணம் முடிந்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.

பெரும்பாலான நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ பெரிய அளவுக்கு பணமோ சொத்தோ கிடையாது. அதனால் பொறாமைப்பட வாய்ப்புகள் இல்லை. சொத்து தகராறுகள் குறைவு. (சொத்து இருந்தால் தானே?) உறவினர்களை வழி அனுப்ப குழந்தைகளை பஸ் நிலையத்துக்கு கூட அனுப்புவதுண்டு. உறவினர்கள் 25 அல்லது 50 பைசாவை குழந்தைகளிடம் தருவார்கள். அதில் சிறிய ஆசைகளை பூர்த்தி செய்வதுண்டு.

மக்களிடம் பணமில்லை. பணம் அல்லாத உதவிகளை மக்கள் மதித்தார்கள். உறவினர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் மனம் கோணாது சாப்பாடு தயார் செய்தார்கள். வங்கிகள் பணம் போடுவது பற்றி கேள்விப்பட்டதுண்டு. புது துணிகள் தீபாவளிக்கும் மட்டுமே சாத்தியம். பிறந்த நாட்கள் பள்ளிக்கு சேரும் நாட்கள் மட்டுமே பிரயோஜனப்படும்.

ரேடியோவில் நேயர் விருப்பம் வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று வரும். அதை தவற விடுவதில்லை. தொலை காட்சி வைத்திருக்கும் அதிர்ஷ்ட சாலிகள், வாரம் ஒரு தமிழ் படம், ஒரு ஒளியும் ஒளி பார்க்கலாம். அரை மணி நேரம் வயலும் வாழ்வும் பார்க்க கூட மக்கள் தயாராக இருந்தார்கள். கிரிக்கெட் இந்தி கமெண்டரி கேட்க வேண்டிய கட்டாயத்தில், ஏக் சௌ பச்பந்த் என்று சொன்னால் 155 அன்று அறியும் அளவுக்கு இந்தி புலமை இருந்தது. எந்த படம் ஆனாலும், கொட்டகை சென்று படம் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது. தீபாவளிக்கு ஆயிரத்தில் ஒருவன் அல்லது அடிமைப்பெண் போன்ற படங்கள் எத்தனை தடவை வந்தாலும் ஆரவாரமான வரவேற்புடன் மக்கள் சென்று பார்த்தார்கள்.

சைக்கிள் வைத்திருந்தவர்கள் பாக்கியசாலிகள். போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது பெரும் ரௌடிகளிடம் மாத்திரமே புல்லட், ஜாவா, எஸ்டி, ராஜ்தூத் போன்ற பைக்குகள். ஊரில் கார் வைத்திருப்பவர்கள் எண்ணி விடலாம்.

15 பைசா கார்டு மூலம் ஊருக்கு திரும்பி வந்த விபரம் அறிவிக்கலாம். ரெண்டு மூன்று நாட்களுக்கு பின்தான் அது கிடைத்தாலும், அதில் திருப்தி. 35 பைசா செலவழித்தால் ரகசியங்களை பரிமாறிக் கொள்ளளலாம். தபால்காரர் வரும்போது ஒரு பரவசம்.

சில கசப்பான விஷயங்கள் இல்லாமல் இல்லை. படித்தாலும் வேலை உறுதியில்லை என்ற நிலைமை.

பெரிய அளவுக்கு மக்களிடம் பண புழக்கம் இல்லை. ஆனால் ஆசைகள் அதிகம் இல்லை. குழந்தைகளை படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி கொடுப்பது மாத்திரமே ஒரே குறிக்கோள். சொந்த வீடு கட்டுவது, சொத்து வாங்குவது ஆகிய ஆசைகள் இருந்தாலும், அதையே நினைத்து தூக்கத்தை யாரும் இழக்கவில்லை.

இன்று எப்படி மாறி இருக்கிறது?

அறிமுகம் இல்லாத பலர் அடுத்த வீடுகளில். நடக்க இடம் இல்லாத apartment -கள். காலையில் வீட்டுக்கு குளிர்ந்த பாக்கெட் பால் வருகிறது. அவசர அவசரமாக அலுவலகத்துக்கு கிளம்ப கணவனும் மனைவியும் தயார் ஆகிறார்கள். எல்லோருக்கும் காலையில் கெல்லாக்ஸ் சீரியல். மத்தியானத்துக்கு அவசரமாக தயார் செய்யப்பட்ட அல்லது fridge -ல் உள்ள ஒரு பழைய உணவு.

பள்ளிக்கு அழைத்து செல்ல ஒரு ஸ்கூல் வான் அல்லது ஒரு ஆட்டோ வருகிறது. கணவன் மனைவி ஒரு டூ வீலரில் கிளம்புகிறார்கள். பலப் பல SMS தகவல்கள் நடுவில். அதில் ஒரு தேவை இல்லாத நாட்டம்.

பள்ளியில் தொலைகாட்சி சானல்களில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றி நண்பர்களுக்குள் ஒரு ஆராய்ச்சி. அப்பா புதிதாக வாங்கி இருக்கும் மொபைல் போன் பற்றி ஒரு பெருமை.

மாலை வீட்டிக்கு வந்ததும் பல் வேறு ஸ்நாக்குகள். (குர் குரே, லேய்ஸ் சிப்ஸ்). பின்பு நண்பர்களுடன் கிரிக்கெட். இரவு வீட்டிக்கு வந்ததும், இன்று சமைக்கலாம அல்லது வெளியில் சென்று chineese food சாப்பிடலாமா என்று ஆலோசனை.

பின்பு தொலைக்கட்சியில் பத்திருபது சானல்களில் பல்வேறு சீரியல்கள், படங்கள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள். பழைய பாடல்களை அடிக்கடி பார்க்கவும் கேட்கவும் செய்து அவற்றின் அருமைகள் போயின.

கல்யாண அழைப்புகள் மொபைல் போனிலும் கடிதத்திலும் மாத்திரமே. இனி கொஞ்ச நாள் கழித்து facebook மூலம் மட்டுமே அழைப்பு வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கல்யாணங்களுக்கு இப்போது யாராவது ஒருவர் மட்டுமே, அதுவும் விடுமுறை நாட்களில் வந்தால் மட்டுமே. கல்யாணம் முடிந்த உடனே கண் இமைக்கும் முன்பு மறைந்து விடுவார்கள்.

எந்த பொருளானாலும் தவணை முறையில் உடனே வாங்கிப் போட வேண்டியது. வீடு, கார், பைக், டிவி எதுவும் விதி விலக்கல்ல. வீடு சாமான் கூட கிரெடிட் கார்டு மூலம் வாங்கி விட்டு பின்னால் கொடுக்கலாம். கிரெடிட் கார்டு பணம் அடைக்க முடியா விட்டால் வீடு மாற்றி கொஞ்ச நாள் தலை மறைவாய் நடக்கலாம்.

சினிமாக்கள் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால் நூற்றுக்கணக்கான ரூபாய்களை டிக்கட்டுக்கும், ஆட்டோக்களுக்கும், ஐஸ்கிரீம்களுக்கும் கொட்ட வேண்டும். பின்பு மலிவு விலையில் VCD /DVD . இல்லாவிட்டால் இருக்கிறது இன்டர்நெட். ஓசியில் படம் பார்த்தாலும், மனுஷன் பார்ப்பானா இந்த படத்தை என்று அலுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் கொஞ்ச நாளிலேயே உலக தொலை காட்சிகளில் முதன் முதலாக வரும்.

எப்போதோ வாங்கப்பட்ட பூர்வீக சொத்துக்கோ அல்லது பழைய வீட்டுக்கோ இன்று நிலத்துக்கு விலை கூடி இருந்தால், குடும்பத்தில் அடிதடி, வெட்டு குத்து. உறவினர்களுக்குள் பொறாமை. வேலை கிடைத்தால் சொர்க்கம் என்ற நிலைமை பொய், எவ்வளவு சம்பளம் வந்தாலும் திருப்தி இல்லை என்ற ஒரு சூழ்நிலை.

மாணவர்கள் இயற்கை திறன் கொண்டு படிப்பது போய், அவர்களிடம் படிப்பைத் திணித்து மதிப்பெண்கள் ஜிம்பாப்வே currency போல ஆகி விட்டது. எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் படிக்க ஏதாவது ஒரு வகையில் பண வசூல்.

எப்போது பார்த்தாலும் மொபைல் போனில் ஒரு பார்வை. யாரோடாவது வெட்டி பேச்சு. அல்லது யாராவது அனுப்பிய உபயோகமில்லாத SMS -ஐ forward செய்தல். இல்லாவிட்டால் FM ரேடியோவை ஸ்பீக்கர்-இல் போட்டு அருகில் இருப்பவர்களுக்கு தொல்லை. எங்கு நின்றாலும் பல்வேறு ரிங் டோன்-களின் சத்தம் மூலம் காதில் ஒரு இரைச்சல்.

இன்னும் இருபது வருடங்கள் போனால் எப்படி இருக்கும்?

Wednesday, June 22, 2011

1986 Tied Test - 25 வருடங்களுக்குப் பின் ஒரு நினைவு கூறல்

1986 Tied Test - 25 வருடங்களுக்குப் பின் ஒரு நினைவு கூறல்

1986 -
ல் சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடை பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி tie -ல் முடிந்து சரித்திரத்தில் இடம் பெற்றது. இன்று நடைபெற்றது போல் இருக்கிறது. அதனுடைய வெள்ளி விழா வருடத்தில் அந்த போட்டியை நினைவு கூற விரும்புகிறேன்.

சங்கரன்கோவிலில் பத்தாவது படித்துக்கொண்டிருந்த பருவம். இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஆன முதல் டெஸ்ட் பந்தயம். புதன் கிழமை செப்டம்பர் 18 - ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடை பெறுவதால் ஒரு திருப்தி. இந்தி கமெண்டரி-யின் தலைவலி விட்டு கொஞ்சம் தமிழ் கம்மேண்டேரி கேட்கலாம். பந்துகளை ஸ்ரீக்காந்த் மடக்கி (pull ) அடிப்பதையும், விரட்டுவதையும் (drive ) காது குளிர கேட்கலாம். ராமமூர்த்தி என்று ஒரு IAS அதிகாரியின் கமெண்டரி அருமையாக இருக்கும். வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாதது கொண்டும், புதன், வியாழன், வெள்ளி விடுமுறை போட்டு கமெண்டரி கேட்கும் அளவுக்கு ஆசை இருந்தாலும் சுதந்திரம் இல்லாதது கொண்டும், முதல் மூன்று நாள் ஆகாஷ வாணி செய்திகளிலும் பள்ளி அருகில் உள்ள பெட்டிக்கடையில் உள்ள transistor -ல் அவ்வப்போது கமெண்டரி கேட்பதிலும் ஓடியது.

முதல் இன்னிங்ஸ்
toss ஜெயித்த ஆலன் பார்டர், பாட்டிங் தேர்ந்தெடுத்தார். பூன் சதம் அடித்து ஆஸ்திரேலியாவிற்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த டீன் ஜோன்ஸ் சென்னையின் கொளுத்தும் வெயிலில் துவண்டு போய், பல கட்டங்களில் அவஸ்தைப்பட்டு வரலாறு காணாத ஒரு 210 எடுத்தார். அப்போது நான் டீன் ஜோன்ஸ் மற்றும் மார்டின் குரோவ் ஆகியோரின் பரம ரசிகன். இந்திய முதல் மூன்று நாள் கண்டிப்பாக தோல்வி என்ற நிலமையில் இருந்தது. இருந்தாலும் டீன் ஜோன்ஸ்-இன் 210 - ஐ ரகசியமாக ரசித்தேன். ஸ்ரீக்காந்த் bruce reid -ஐ விரட்டி விரட்டி அடித்து சென்னை சூட்டை அதிகரித்தார். கபில் தேவ் ஒரு அதிரடி 119 அடித்து follow -on - ஐ தவிர்த்தார். ஆஸ்திரேலியா 177 ரன்கள் முன்னிலை எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
நான்காவது நாள் பாட்டிங் தொடங்கிய ஆஸ்திரேலியா, இறுதியில் ஐந்து விக்கட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 347 ரன்கள் புன்னிலையில் இருந்தது. ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் பார்டர் சவாலுடன் டிக்ளர் செய்தார்.
87 ஓவர்களில் சரியாக 348 ரன்கள் எடுத்தல் வெற்றி. நான்கு ரன்கள் ரன் ரேட் தேவை. கொஞ்சம் மெதுவாக தொடங்கிய ஆட்டம் இந்தியா டிராவுக்கு ஆடும் என்ற தோற்றத்தை கொடுத்தது. கவாஸ்கரும் அமர்நாத்தும் 103 ரன்கள் partnership எடுத்து கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார்கள். அசாருதின் ஒரு 42 ரன் எடுத்து கொஞ்சம் பலம் கூட்டினார்,
கபில்தேவ் ஆர்டரில் முன்னாள் வந்து உடனே அவுட் ஆனார். சந்திரகாந்த் பண்டிட்டும் சாஸ்திரியும் 290 வரை கொண்டு வந்தார்கள். சேதன் ஷர்மா நன்றாக ஆடி 331 வரை கொண்டு போனார். கிரண் மோர் தங்க வாத்து முட்டை வாங்கினார். ஷிவ்லால் யாதவ் எதிர் பாராத வகையில் ஒரு சிக்ஸர் அடித்தார். நான்கு ரன் எடுக்க வேண்டிய நேரத்தில் ஷிவ்லால் யாதவ் போல்ட் ஆகி கடைசி விக்கட் ஆன மணிந்தர் சிங் இறங்கினார். இரண்டு பந்துகளை சமாளித்தார்.
கடைசி ஓவர். மாத்தியூஸ் வீசுகிறார். இரண்டாவது பந்தில் சாஸ்திரி இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் ஒரு ரன்னையும் எடுத்து சம நிலைக்கு கொண்டு வந்தார். நான்காவது பந்தை சமாளித்த மணிந்தர், ஐந்தாவது பந்தை காலில் வாங்கினார். LBW கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியர்கள் மகிழ்ச்சியில் குதிக்க, இந்த டெஸ்ட் மாட்ச் சரித்திரத்தில் இடம் பெற்றது.
கடைசி நாள் மாத்திரம் தொலைக்காட்சியில் பார்க்கும் அதிர்ஷ்டம் கிட்டியது. சங்கரன் கோவில் தெற்கு ரத வீதியில் ரவி என்று ஒரு வக்கீல் டிவி வைத்து இருந்தார். 20 to 30 மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அங்கு பார்த்தோம். ரவி பெருந்தன்மையாக அனுமதித்தார். அந்த அனுபவம் இன்றும் நினைவில் நிற்கிறது. நான்கைந்து வருடங்களுக்குப் பின் ஒரு முறை அவரை ஒரு இரயில் பயணத்தில் பார்த்தேன். அவருக்கு நினைவில்லை. ஆனாலும் என் நன்றியை தெரிவித்தேன்.
1986 -ல் இந்த டெஸ்ட் மேட்ச் tie ஆன போது, இதற்கு முன் tie ஆன டெஸ்ட் 25 வருடங்களுக்கு முன்பாகும் (1961 ) ஆண்டு செய்தி தாள்களில் வந்து இருந்தது. அடேங்கப்பா என்று பிரமிப்பாக இருந்தது. இப்போது, இன்னொரு 25 வருடங்கள் போய் விட்டன.
ஒரு இனம் புரியாத சோக உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.