Saturday, December 11, 2010

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!

என் மனைவி ஏறக்குறைய ஒரு பத்து வருடம் முன்பு “நம்ப வீட்டுல இந்த வருஷம் கொலு வெக்கலாமா”ன்னு கேட்ட உடனே, வடிவேலுவின் பல குரலில் ஒரு குரல் என் மண்டைக்குள் இந்தப் பதிவின் தலைப்பு போல “கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!!” என்று பதறித் துடித்தது.

முதலில் நாங்கள் இருந்தது ஒரு வாடகைக் குடியிருப்பு, அதிலும் சமையல் அறையின் சிங்க்கில் கொஞ்சம் வேகமாக தண்ணீரைத் திறந்தாலும் கீழ்வீட்டுக்காரர்கள் ஒரு கட்டையால் “டொம் டொம்” இடித்து “யோவ் சத்தம் போடாத” என்று சத்த்த்த்தமாக சொல்லும் இடம். இதில் கொலு என்றால் குறைந்தது 10-15 நண்பர்களின் குடும்பத்தையாவது கூப்பிடனும். “எப்புபுபுடி” ன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது நாங்கள் அமெரிக்கா வந்து ஏறக்குறைய ஒரு 8-9 மாதங்கள்தான் ஆயிருந்தது. எங்க நண்பர்கள் குழாமே ஒரு 5-6 குடும்பங்கள்தான். அலுவலகத்திலும் அப்படி ஒன்றும் சிலாக்கியமாகச் சொல்லக்கூடிய நண்பர்களும் இல்லை என்ன செய்யலாம் என்று தலையை பிய்த்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

என் மனைவிக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சரியாகச் சொல்லனும்னா, அவளுக்கு எல்லா விஷயமும் சின்ன விஷயம்தான். “வா மரியாதையா வந்து வண்டியை எடு, டாலர் ஷாப் போகனும்”னு சொல்லி அங்கிருந்து ஒரு 30 பொம்மைகள் வாங்கி வந்தாள்.

“இதை வெச்சு எப்படி கொலு வெப்பே, எல்லாம் நம்மூர் பொம்மை மாதிரியே இல்லை, எங்கம்மா கொலு வெச்சா அதெல்லாம் ஸ்வாமி பொம்மையா இருக்கும். இப்படி மாடர்ன் பொம்மைகள் இல்லை” என்று என் பங்கிற்கு மறுபடியும் ஒரு பிட்டை போட்டேன்.

“ஹும் உங்கம்மா நம்ம கல்யாணத்தும் போதே சொன்னா, என் பையனுக்கு சமர்த்து பத்தாது, அவனை நீதான் பார்த்துக்கனும்னு, அதை இத்தனை வருஷம் கழித்தும் கரெக்ட்டா ப்ரூவ் பண்றேள். எல்லார் வீட்டு கொலுவிலும் ஒரு செட்டியார், செட்டிச்சி, ஒரு போலீஸ்காரன், ஒரு கல்யாண செட், ஒரு காய்கறிக்காரன், ஒரு செட் நாய், பூனை, யானை ன்னு இருக்குமே அது மாதிரி நம்ம வீட்டு கொலு ஒரு அமெரிக்கா பொம்மை கொலுன்னு சொல்லிட்டு போறேன். இதைகூட சமாளிக்கத் தெரியலை உங்களுக்கெல்லம் எவன் வேலை போட்டு கொடுத்தானோ அவனைச் சொல்லனும்” என்று என்னை சொல்லும் சாக்கில் என் கம்பெனிக்காரனுக்கும் ஒரு ஃப்ரீ அர்ச்சனை நடந்தது. சரி இதுக்கு மேல ஏதாவது சொன்னா பிறகு சாப்பாட்டிற்கு நண்பர்கள் வீட்டிற்குத்தான் “நான் மாது வந்திருக்கேன்” ரேஞ்சில் கையேந்தனும்னு தெரிந்தது.

“அதுக்கில்லம்மா, யாராவது கேட்டா நான் ஒன்னு சொல்லி நீ ஒன்னு சொல்லிடக்கூடாதில்லையா அதுக்குதான் கேட்டேன். அதோட மாடர்ன் கொலுவா இருந்தாலும், கொலுங்கரது நம்ம ஊர் விஷயம் அதான் நெருடுது, வேணா ஒன்னு செய்யலாம், கலிஃபோர்னியாவில mail-bag.com ன்னு ஒரு கடை இருக்கு அங்க பொம்மைகள் விக்கராங்கன்னு கேள்வி, வேணும்னா 100-150 டாலர்ல நம்மூர் பொம்மைகள வாங்கிடலாமா”ன்னு இரண்டாவது பிட்டை போட்டேன்.

“ப்பூ இது பெரிய விஷயமா, எல்லா பொம்மைக்கும் சாந்து பொட்டு வெச்சுட்டாப் போச்சு” என்று செலவே இல்லாமல் ஒரு 30 பொம்மைகளை மத மாற்றம்/தேச மாற்றம் செய்து நம்மூர் பொம்மைகளாக்கினாள்.

அடுத்தது படி கட்ட என்ன வழி என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் முழுக்க யோசித்த பிறகும், சுலபமான வழி ஒன்றும் புலப்படாமல் ஒரு 50 டாலர் செலவில் ஒரு 3 (அ) 5 படி செய்ய ப்ளான் போட்டுவிட்டு, பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் போல பெருமையுடன் மனைவியிடம் “படிக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சியா, யோசிச்சு இருக்க மாட்டியே, நான் யோசிச்சுட்டேன், இதோ பார் என் ப்ளான்” என்றேன்.

“ப்ளான் இருக்கட்டும் செலவு என்ன ஆகும், அதை செய்ய எவ்வளவு நேரம் ஆகும்”

“ஒரு 50-60 டாலர் ஆகும், ஒரு 8-10 மணி நேரத்துல செஞ்சுடலாம்.”

“அதெல்லாம் வேண்டாம், நாம சிகாகோவில இருந்து கொண்டு வந்த அட்டை டப்பா எல்லாம் சும்மாதான கிடக்கு அதை வெச்சு 3 படி பண்ணினா போச்சு” என்று 10 விநாடிகளில் ஒரு தீர்வைச் சொன்னாள்.

இந்த இடத்தில் வாரியார் ஸ்வாமிகள் சொன்ன ஒன்று ஞாபகம் வருது. அவருடைய எல்லா கதைகளிலும் ஒன்றைச் சொல்லுவார், “பெண்ணறிவு நுண்ணறிவு” என்று அதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பவர்கள் நம் இல்லத்துப் பெண்கள். தேவையில்லாமல் ஒரு விஷயத்திற்கு செலவு செய்ய யோசிப்பவர்கள், ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் (ROI) என்பதை ஒரு பெரிய பாடமாக பல பல்கலைகழகங்களில் பயிலுவதை, நம் இல்லத்து பெண்மணிகள் சர்வ சாதாரணமாக செயலில் காட்டக் கூடியவர்கள். ஒரு 40-50 டாலர் செலவு செய்து கொலுப் படி செய்ய நான் ப்ளான் போடும் போது ஒரு 10 விநாடிகளில் 10 செண்ட் செலவில்லாமல் படி செய்ய தூண்டி அதை செயலிலும் காட்டினாள் என் மனைவி. 100-150 டாலர் செலவு செய்ய தயாராக இருக்கும் போது அதை ஒரு சின்ன சாந்து டப்பா மூலம் தடுத்தவள். ஒளவையார் ஒரு பாடலில் இல்லாள் என்பதைப் பற்றி மிக அருமையாக பாடியுள்ளார்.


இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

என்ன புரிஞ்சுதா, புரியலையா ஒன்னும் கவலைப் படாதீங்க, எனக்கும்தான் புரியலை, நான் கவலைப் பட்டேனா பாருங்க, நம்மூர் தமிழ் பண்டிதர்களிடம் அதுவும் ‘வளையாபதி, குண்டலகேசி’ எல்லாம் தெரிஞ்ச பண்டிதர்களிடம் கேளுங்க அர்த்தம் சொன்னாலும் சொல்லலாம்.

ஒரு வழியாக படி செய்ததும், அருமையான என்னுடைய இரண்டு பாம்பே வேஷ்டிகளை கொலுவுக்கு தாரை வார்த்ததும் காலத்தில் அழியாத நினைவுகள்.

படியில் மாதிரிக்கு ஒரு சில பொம்மைகளை வைத்ததும் காலி அட்டை பெட்டிகள் சற்று ஆட்டம் காண ஆரம்பித்த்து. “இது என்னடா புது கதை, யாராவது வரும்போது இப்படி ‘டப்பா’ டான்ஸ் ஆடினா, இது பொம்மை கொலுவா இல்லை டான்ஸிங் கொலுவா” ன்னு கேள்வி வருமே என்ற கவலை வந்தது. உடனடி சொல்லுஷன், என்னுடைய படிக்காத (படிக்காத என்ன, பிரித்துக்கூட பார்க்கப் படாத) கம்ப்யூட்டர் புத்தகங்கள், பழைய பேப்பர், துணிகள் என்று பலவற்றை ஒவ்வோரு டப்பாவிலும் திணித்து ஒருவழியாக ஆடாத கொலுவை அரங்கேற்றினோம்.
அடுத்தது செட்யூல், “ஏம்மா எல்லா நாட்களும் எல்லோரும் வரலாமா, இல்லை சில நாட்களுக்கு சில சிலராக வரச்சொல்லலாமா”
“தெரியாமதான் கேக்கறேன், உங்களுக்கு புத்தின்னு ஏதாவது இருக்கா”
“என்ன நான் கேட்டுட்டேன்னு இப்படி கத்தற?”
“பின்ன என்ன, எல்லா நாளும் வரலாம்ன்னு சொன்னா, நாம நாலுபேர் வீட்டுக்கு போகவேண்டாமா? அப்படி போனாதானே 4-5 பேர் சகவாசம் நமக்கு கிடைக்கும்.”
“சரி சரி புரிஞ்சுது, ஒரு ப்ளான் போட்டு சொல்லு அன்னிக்கு நான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்துடறேன், நீ கார்லயே போய்ட்டு வந்துடு”
"என்னது! நான் கார்ல போய்ட்டு வரதா, அப்ப நீங்க வரலையா, நாலு பேர் வீட்டுக்கு போய் கொலு பார்த்தாதானே நம்ம வீட்டு கொலுவை எப்படி மெருகேத்தலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம்”
எனக்குத் தெரிந்து நகைக்குதான் மெருகேத்துவார்கள்ன்னு சொல்ல எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது, மெருகுன்னா நிஜ மெருகு இல்லைங்க ஆங்கிலத்தில improvise-ன்னு சொல்வாங்களே அதுன்னு நீங்க புரிஞ்சுக்கனும்.
முதலில் இப்படி கொலுவுக்கு என்று போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு, ஒன்று, அவர்கள் வீட்டு கொலு எப்படி வைத்திருக்கிறார்கள் என்று அளவிடுவது, ரெண்டு, என்ன மாதிரி பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், எங்கிருந்து வாங்கி வருகிறார்கள், என்ன விலை, எப்படி எடுத்து வந்தார்கள் என்று தெரிந்து கொள்வது, மூனு மற்றும் நாலு, என் மனைவி சொன்னது போல அவர்கள் வீட்டு கொலுவிலிருந்து நம்ம வீட்டு கொலுவிற்கு என்று சில பல புதிய யோசனைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே கடத்திக் கொண்டு வருவது, மற்றும் அவர்கள் வீட்டிற்கு வரும் பலரை நமது நண்பர்களாக்கிகொள்ள ஒரு வாய்ப்பு, இதையெல்லாம் தாண்டி நமது நாட்டு பண்டிகை, காலாச்சாரம் இவற்றை இங்கும் பின்பற்றுவதில் இருக்கும் ஒரு அலாதி திருப்தி.
எனது பள்ளிப் பருவத்தில் 10வது படிக்கும் வரை என் அக்காவுடன் எங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு தினமும் போய் ‘ரார வேணு கோப பாலாஆஆஆஆஆ அல்லது ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதா அம்பிகேஏஏ’ என்று நீட்டி முழக்கி ஒரு பாட்டை இருவரும் பாடி விட்டு அவர்கள் தரும் சுண்டல் பொட்டலமும், சின்ன கண்ணாடி, சீப்பு, குங்கும டப்பா, வெத்திலை பாக்கு எல்லாம் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்ததும் யார் வீட்டில் என்ன சுண்டல், என்ன மாதிரி கொலு, நாங்கள் போயிருந்த போது யார் யாரெல்லாம் வந்தார்கள், அவர்கள் பாடியதை விட நாங்கள் பாடியது எப்படி சூப்பர் என்றெல்லாம் அனுபவித்து கதை விட்டிருக்கிறேன். அதிலும் எனக்கு ஏன் சீப்பு கண்ணாடி, குங்கும டப்பா தரலைன்னும் அதை பெண்களுக்கு மட்டும் தரதுக்கு என்ன காரணம்னும் என் அம்மா கிட்ட கேட்டதுக்கு இது வரைக்கும் சரியான பதிலில்லை. அதுக்கு பிறகு இந்த இனிய கொலுவுக்கு நகர் வலம் செய்யும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக +1, +2 படிக்கும் காலத்தில் 10-15 வீடுகளாக குறைந்து போய், கல்லூரி படிக்கும் காலத்தில் (அதாவது சும்மா போய் வந்த காலத்தில்) 1-2 வீடுகளாகி, என் அக்கா கல்யாணம் பண்ணிக் கொண்டு பம்பாய் போனதும் சுத்தமாக நின்னு போச்சு. அடுத்த சில ஆண்டுகளில் அடிமையாக சென்னையை விட்டு புலம் பெயர்ந்ததும் கொலு என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தது. மீண்டும் சென்னை வந்த போதும் பெரிய ஆர்வமில்லாமல் அம்மாவிற்கு உதவி செய்து கொலு வைத்தாலும், அக்காவோடு பல வீடுகளுக்கு அவளுக்கு துணையென்று (பல நேரங்களில் அவள்தான் எங்களுக்குத் துணை, அவளை என் இரண்டாவது அம்மா என்றே சொல்வேன்) போய் வந்ததும் அந்த இனிய நிகழ்வுகளை இழந்த சோகம் மனதின் ஓரத்தில் சற்று நெருடத்தான் செய்கிறது. நாம் இழந்த சந்தோஷங்கள் என்று கணக்கிட்டால் இப்படி நம் மனதை பாதித்த பல விஷயங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக வெளிவரும்ன்னு நினைக்கிறேன்.
கொலுன்னா முதலில் எங்க வீட்டு கொலுதான் எனக்கு நினைவுக்கு வரும். எங்க வீட்டு கொலுவில் பொம்மைகளை எடுத்து அழகாக பிரித்து கொலுவைப்பதும், கொலு முடிந்ததும் மறுபடி பாதுகாப்பாக கட்டி வைக்கும் பொறுமை என் அப்பாகிட்டதான் கத்துக்கிட்டேன். அவரோட லாஜிக் சூப்பர் லாஜிக். “ஒரு நாள் கஷ்டப் பட்டு பிரிச்சு வெக்கனும், ஒரு நாள் ரொம்ப கஷ்டப் பட்டு கட்டி வெக்கனும் அப்படி செஞ்சா, வருஷா வருஷம் சூப்பரா கொலு வெக்கலாம். ஒரு பத்து நாள் விழாவுக்கு ரெண்டு நாள் கஷ்டப் பட்டா என்ன குறைச்சல்”. படிகளுக்கு சீரியல் செட் போட்டு கொலு வைப்பது, பார்க் கட்டி நடுவில் தெப்பகுளம் வைத்து அழகு படுத்துவது, சுவர் ஓரம் மண் கொட்டி அதை ஒரு மலை போல செய்து அதன் மேல் ஒரு வாரம் முன்பே கடுகு, தனியா தெளித்து செடிகளை வளர்த்து மலை மேல் சின்ன ஒரு கோபுரம் வைத்து கோவில் எழுப்புவது என்று அப்பாவும் அம்மாவும் தூள் கிளப்புவாங்க. 9 நாட்களில் என்னிக்கு என்ன சுண்டல் என்று பட்டியல் போட்டு அதுக்கு தேவையானதை அப்பா ‘பாரதி மளிகை’ ல இருந்து வாங்கிண்டு வருவார். அம்மா, சுண்டலை எப்படி பேப்பரில் கிழியாமல் மடிப்பது, வருபவர்களுக்கு எப்படி, எந்த பக்கம் நின்றபடி கொடுப்பது என்பதை எங்களுக்குச் சொல்லித் தருவா. அந்த 9 நாட்களும் வீடு ஜே ஜேன்னிருக்கும். நவராத்திரி வெள்ளிக் கிழமை கண்டிப்பாக அரிசி வெல்ல புட்டு செய்து அம்மா, ஊரையே மயக்கிடுவா. இப்படி பலவிதமான கொண்டாட்டங்களுக்கு இடையில் 9 படியில வெச்ச கொலு “இந்த வாட்டி 3 படிதான் வெச்சேன்டா”ன்னு அம்மா சொல்லும் போது சற்று கஷ்டமாக இருக்கிறது.
என் சென்னை வீட்டு கொலுவின் ஞாபகமாக சில பொம்மைகளை இங்கும் வைச்சிருக்கேன். அவை ஒரு 50-60 வருடத்திற்கு முன்பு செய்யப் பட்டவை. அவைகளின் நேர்த்தி, திருத்தம் இன்றைய பொம்மைகளில் இல்லை.
அடுத்து என்னை அசத்திய கொலு எனது தந்தையின் உறவினர் தனது ராஜாஅண்ணாமலைபுரத்து வீடான ‘நவசுஜா’ வில் வைத்த கொலு, படிகளில் வைத்த கொலுவை பார்த்தே பரவசப் பட்ட எனக்கு வீடு முழுவதும் அங்கங்கே வைக்கப் பட்ட கொலுவை ஒரு கண்காட்சி திடலை சுற்றி பாக்கர மாதிரி பார்த்ததும் “கொலுன்னா இது கொலு” என்று தோன்றியது.
சரி சரி ஆரம்பிச்ச விஷயத்துக்கு வரேன். இப்படியெல்லாம் கொலு வெச்ச குடுமபத்தில இருந்து வந்தும் நம்ம வீட்டில கொலுன்னதும் ஏன் யோசிச்சேன்னுதானே யோசிக்கிரீங்க, யோசிக்கலன்னாலும், யோசிக்கரமாதிரி நடிங்க. அது தூங்கர சிங்கத்தை பிடரில தட்டி எழுப்பர மாதிரி. கொலு வெக்கனும்னு யோசிக்கரது ஒரு சின்ன விஷயம்தான் ஆனா, அதோட துடிப்பு பிடி பட்டுடுத்துன்னா, அதுக்கு பிறகு அதை நகாசு பண்ண யோசிக்கரத நிறுத்தரது ரொம்ப கஷ்டம். எப்படி பெரிய படி செய்யலாம், எப்படி பார்க் வெக்கலாம், என்ன தீம்ல கொலு வெக்கலாம், என்ன மாதிரி லைட்டிங் செட்டப் செய்யலாம் என்று மண்டை குடைய ஆரம்பித்துவிடும். இது ஒரு மகா அவஸ்த்தை ஆனால் பிடித்திருந்தால் மட்டுமே ஈடுபட முடியும். தீபாவளி பிடிக்காது ஆனால் பட்டாசு மட்டும் பிடிக்கும் என்றோ, அல்லது பட்டாசு சத்தமே இல்லாத தீபாவளி மட்டும் பிடிக்கும் என்றோ இருக்க முடியாது இல்லையா அது போல ஈடுபாடில்லாமல் கொலு வெக்க முடியாது வெச்சாலும் அது ஒட்டு போட்ட ப்ளாஸ்டிக் பக்கெட் போல பல்லை இளிக்கும்.
கொலுன்னா என்ன அர்த்தம், எதுக்காக கொலு வெக்கனும், என்ன ப்ரயோசனம் என்றெல்லாம் யோசிச்சா பொங்கல் பண்டிகையைத் தவிர வேறு எந்த பண்டிகையையும் கொண்டாட முடியாது.
இப்படி அமெரிக்காவில் எங்கள் வீட்டு கொலு ஒரு சின்ன கொலுவாக ஆரம்பித்தது. டப்பா கொலுவில் ஒரு அவஸ்த்தை என்னவென்றால், முன் வருடம் வைத்த்து போலவே இந்த வருடமும் கொலு வைக்க முடியாது காரணம் டப்பா லொகேஷன் மாறிவிடும் அபாயம்தான். நம்ம மூளைதான் இது மாதிரி வெத்து சமாசாரத்துக்கு ரெடியா இருக்குமே, “எடு காமெராவை ஒரு படம் பிடித்து ப்ரிண்ட் போட்டு வெச்சுட்டா போச்சுன்னு” சொல்ல, கர்ம சிரத்தையா அதை கடைபிடித்தோம். முதல் இரண்டு வருடங்கள் 3 படியாக இருந்த கொலு மூன்றாவது வருடம் 5 படிக்கு பரிணாம வளர்ச்சியடைந்தது. அந்த 5 படி கொலுவுக்கும் வழக்கம் போல் பழைய டப்பா, கம்யூட்டர் டேபிள் என்று ஒரு மாதிரி ஒப்பேற்றி கொலு வைத்திருந்தோம்.
நான்காவது வருடம் புது வீடு வாங்கி அங்கு கொலு வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்து, கொலு வைக்க வேண்டிய நாள் அன்று மனைவி அதிகம் யோசிப்பதற்குள் ‘Lowes‘ போய் தேவையான மரக்கட்டைகளை வாங்கி வந்து 4-5 மணி நேரத்திற்குள் 5 படி செய்து அரங்கேற்றினேன்.
கொலுப் படி செய்ததை பத்தி அம்மாவுக்கு சொல்லி பெருமைப் படும் போது “ஏண்டா வெறும கொலு மட்டும் வெச்சா போதுமா, பார்க் எதுவும் இல்லையா”ன்னு தன் பங்கிற்கு அம்மா ஒரு பிட் போட, அடுத்த வருஷம் ஒரு மின்சாரத்தில் இயங்கும் ரெயில் வண்டி செட் வாங்கி, ஒரு சில நகாசுகள் செய்து ஒரு சிறிய கிராமம் தயாரித்தோம்.
இதற்குப் பிறகு வருஷா வருஷம் சில சில பொம்மைகளாக சேர்த்து சேர்த்து, போன டிசம்பரில் சென்னை போன போது உச்ச கட்டமாக 4 பெரிய பெட்டி நிறைய பொம்மைகளை அடுக்கிக் கொண்டு வந்தோம்.
இதற்கு இடையில் நான் பார்த்து பார்த்து செய்த 5 படி கொலு 7 வருடங்கள் தாக்கு பிடித்து இந்த வருடம் வளைந்து நெளிந்து “போடா நீயும் உன் கொலுவும்” என்று சற்று முரண்டு பிடிக்க, “இனி வழியே இல்லை என்று ரிச்மண்டின் தென் திசையில் இருக்கும் பார்கவி கணேஷின் வீட்டின் கொலுப் படி செய்த திரு. அனந்தராமன் என்ற பெரியவரை 8 அடி நீளத்தில் 7 படிகள் செய்யச் சொல்லி இந்த வருடம் அதையும் அரங்கேற்றியாயிற்று.
இவரைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் பல படங்கள் தரப் பட்டுள்ளது. இவரை பார்த்து பேசிய போது ஒன்னு தெளிவா தெரியுது, கற்றது கையளவு, கல்லாதது உலகளவு-ன்னு. 1952-ல் சென்னை – கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் படிச்சு, படிப்பில் புலின்னு பேர் எடுத்து பல வருடஷங்கள் வட மாநிலத்தில் சிறந்த தொழிலகங்களில் வேலை பார்த்து, 1972-ல் அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, விமான நிலயத்திலேயே நிரந்தரக் குடியுரிமை (அதாங்க பச்சை அட்டை) தரப்பட்டு, நியூ ஜெர்சியில் வசிக்கிறார். இவரது வீட்டின் – தப்பு தப்பு தப்பு அது ஒரு கலைக் கோயில் உள்ளே நுழைஞ்சா, ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ ன்னு பாரதி பாடியது போல ‘எங்கெங்கு காணினும் மண்டபமடா’ ங்கர மாதிரி சின்னதும் பெரியதுமா மண்டபங்கள், எல்லாமே இவரது கை வண்ணத்தில் உருவானவை. அது மட்டும் இல்லாமல் படங்களுக்கு செய்யப் பட்டுள்ள ஃப்ரேம்கள், ஸ்டூல்கள் பென்சுகள் என்று பலதிலும் இவரது திறமை பளிச்சிடுகிறது.
வீட்டின் பின்புறம் ஒரு பெரிய இடம் முழுவதும் மழை வெயில் தாக்காமல் பெரிய கொட்டகை – நம்மூர் கீத்துக் கொட்டகை போல வெள்ளை தார்ப் (Tarp) மூலம் மூடி நம்மை கிறங்கடிக்கிறது. அருகில் ஒரு பெரிய தொழிலகமும் அவருடைய கார் நிறுத்துமிடமும் – (இந்த ‘கராஜில்’ ஒரு நாள் கூட தனது காரை இவர் பார்க் செய்ததில்லையாம்.) இவருடைய தொழில் தொடர்பு கருவிகளின் ஆக்ரமிப்பினால் திணறுகிறது. தொழிலகத்தில் சின்ன சின்ன டப்பாக்களில் சைஸ் வாரியாக நட் போல்ட் என்று நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்கிறது. எதையும் யாரும் தேட வேண்டிய அவசியமே இல்லை.
தினமும் குறைந்தது ஒரு கொலு படி செட்டாவது செய்து விற்பனை செய்கிறார். சில நாட்கள் 2 செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறதாம். கொலுப் படிகளும் சைஸ் வாரியாக செய்கிறார். கேட்ட ‘படி’, கேட்ட படி இவரிடம் கிடைக்கிறது. இவர் பகுதி நேர DJ வாகவும் பணியாற்றுகிறார். இதற்குத் தேவையான ஒலி பெருக்கி சாதனங்கள் ஒரு பெரிய ‘வேன்’ முழுவதும் பக்காவாக நிரம்பியிருக்கிறது.
இவர் தனது கைத்தொழிலை நேசித்து செய்வதாகத் தெரியவில்லை, இவர் அதை சுவாசித்து வாழ்வது போல் இருக்கிறது. இவர்கிட்ட “ஒரு சம்மர் கேம்ப் மாதிரி ஆரம்பித்து உங்க திறமையை ஏன் அடுத்த தலைமுறைக்கு மாத்தி விடக்கூடாது” ன்னு ஒரு பிட் போட்டு பார்த்தேன். அதுக்கு அவர், “செஞ்சுட்டா போச்சு, ஒரு வாரம் வெச்சுக்கலாமா, இல்லை ரெண்டு வாரமா” ன்னு கேட்க, “நான் இதைப் பத்தி எங்க வலைப்பூவில் எழுதிடறேன். அதைப் பார்த்துட்டு யாராவது கேட்டா நானும் ஒரு வாரமோ அல்லது ரெண்டுவாரமோ லீவ் போட்டுட்டு உங்களுக்கு உதவியா இருக்கேன்”ன்னு வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கேன். அதனால நல்லா யோசிச்சு சொல்லுங்க யாரெல்லாம் ரெடின்னு. அடுத்த வருடம் ஜூலை – ஆகஸ்டில ஏற்பாடு செய்வோம்.
மறுபடி தொடங்கிய தலைப்புக்கு வரேன்.
இப்படியாக எங்க வீட்டு கொலு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று நாகுவின் பதிவிலும் இடம் பிடித்திருக்கிறது.
இந்த முறை கொலுவுக்கு வந்தவங்கள்ள சிலர், “வெறும ரெயில் செட்டை பார்த்து பார்த்து போர் அடிக்குது, வேற ஏதாவது செய்”ன்னு அன்பாக கண்டிச்சுட்டு போயிருக்காங்க. அதனால அடுத்த வருஷ கொலுவில் ஒரு சின்ன தெப்பக் குளம், ஒரு சிறிய பார்க் என்று சில பல நகாசுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில இருக்கேன். யாருக்காவது அதை செய்யரதுக்கான யோசனை தோணித்துனா, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. இந்த முறை நண்பர் அருண் நடராஜன் - விஜி நடராஜன் வீட்டு கொலுவில சூப்பரா ஒரு பார்க் கட்டியிருந்தார்கள் அதன் செய்முறையை கொஞ்சம் அவர்களுக்கே தெரியாமல் கடத்திக் கொண்டு வந்திருக்கிறேன். எவ்வளவு தூரம் அதன் செய்முறை நான் செய்யும் போது ஞாபகத்தில் இருக்குமோ தெரியாது.சரி

அடுத்த வருடம் கொலுவில் சந்திப்போம்.

-முரளி இராமச்சந்திரன்.

Wednesday, December 08, 2010

படம் பாரு கடி கேளு - 50



யோவ் அந்த பட்டன் தான்யா. சட்டுனு அமுக்கி படம் எடுய்யா பரதேசி. நீ வேற படுத்தறியே!
வீட்டுக்காரங்க வர்றதுக்குள்ளே இத்தனையும் முடிச்சுட்டு ஓடணும்.

படம் பாரு கடி கேளு - 49


இங்கே தானே என் சைக்கிளை பார்க் பண்ணினேன்.
ஐயோ! இத்தோட 37 சைக்கிள் ஆச்சு. இதுவாவது திறக்கணுமே!

Saturday, December 04, 2010

படம் பாரு கடி கேளு - 48


போங்கய்யா உங்க "ஹாலோவீனும்" நீங்களும். என் பாடு எனக்கு தான் தெரியும். "நம நமன்னு" சில்மிஷமா அரிக்குது. எந்த தலைன்னு தெரியலியே!!!

Monday, November 29, 2010

படம் பாரு கடி கேளு - 47


பால் சக்கரை வேண்டாம் - அப்படியே சாப்பிடுவேன் !

Sunday, November 28, 2010

படம் பாரு கடி கேளு - 46


ஆமாம் அங்கேதான். பார்த்து சரியா கையெழுத்து போடுங்க. அப்புறம் 'zoo' லிருந்து நீங்க ரிலீஸ் பண்ணலே நானே ஓடிட்டேன்னு பிரச்சனையெல்லாம் வரக்கூடாது சொல்லிட்டேன்.

Tuesday, November 23, 2010

ஒன்று நமது பூமி

மு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு பற்றி அக்டோபர் 13, 2010 அகில இந்திய வானொலி (திருச்சி) நிலையத்தில் ஆற்றிய சொற்பொழிவு இங்கே கேட்கலாம்.

Click here for ஒன்று நமது பூமி. 

அந்த வலைப்பக்கத்தில் பிழை வந்தால், இங்கே வந்து மீண்டும் சொடுக்கவும்.

மீனாவுடன் மிக்சர் 22 - {சித்ரகுப்தா, எடு உன் லெட்ஜரை!}

அறிவிப்பு - இது வழக்கம் போலான நகைச்சுவை பதிவு அல்ல. மனிதத்தோல் போர்த்திய சில மிருகங்களின் அரக்கத்தனத்தில் மனமொடிந்து நான் எழுதிய பதிவு தான் இது. ஆரோக்யமான இருதயம் இருந்தால் மட்டுமே இதை படிக்கவும்.

-------------------------------

அரக்கத்தனமும் அசுரத்தனமும் உலகத்தில் தலைவிரித்து ஆடும் போது கடவுள் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பார் என்பது நம் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்தி சொல்கிற ஒரு விஷயம். இன்டர்நெட் வலைப்பூ மூலமாக இத்தனை நாட்களாக இனிமையான விஷயங்களை மட்டுமே பொழுது போக்குக்காக படித்து கொண்டிருந்த எனக்கு நேற்று ஒரு பலமான சாட்டை அடி. மனிதாபிமானம், மனித நேயம் - இதெல்லாம் வெறும் பைத்தியக்கார கனவுகளோ என்று எண்ண வைக்கும் அதிபயங்கரமான அசுரத்தனம் ஒன்றை நேற்று வலைப்பூ மூலம் முதல் தடவையாக பார்த்து தெரிந்து கொண்ட எனக்குள் ஏதோ உறைந்து போன மாதிரியான உணர்வு.

பாசமான உறவுகள், இனிமையான நண்பர்கள் மற்றும் அருமையான சமூக தோழமைகள் - இது தான் நான் சாதாரணமாக வாழும் ஒரு dettol போட்டு அலம்பிய உலகம். நான் பார்க்க உதித்து, அஸ்தமிக்கும் அதே சூரியனின் கீழ் மனிதத்தோல் போர்த்திய பல அசுரர்கள் நடமாடுவது நம்ப விரும்பாமல் நான் இத்தனை நாட்கள் மறுத்திருந்த ஒரு உண்மை. ஆனால் இன்று கண்கட்டவிழ்ந்து ஒரு முட்டாளின் சொர்கத்திலிருந்து வெளியே வந்து விட்ட நான் அதிகம் உணர்வது சீற்றமா, துக்கமா, அருவருப்பா, வெறுமையா? எனக்கு சொல்ல தெரியவில்லை.

பெண்களுக்கு சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புக்களும் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் இன்னும் பல இளம் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்படுவது முட்டாள்தனமென்றால் ஆமாம், நான் முட்டாள் ராஜ்யத்தின் மகாராணி தான். அதிலும் மூன்று, நாலு, ஐந்து வயது பச்சிளம் குழந்தைகளை அவர்களோட தாய் தந்தை மற்றும் உறவினர்களே சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒரு சில நூறு ரூபாய் தாட்களுக்காக விற்று விடுவதை கேட்டு இதயக்கூடு காலியாகி ஸ்தம்பித்து நிற்பது பைத்தியக்காரத்தனமென்றால் ஆமாம் நான் சட்டையை கிழித்து கொண்டு அலையாத ஒரு பைத்தியக்காரி தான்.

மூக்கில் சளி வந்தால் தானாக துடைக்க தெரியாத மூன்று வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தார் ரோட்டில் தடுக்கி விழுந்தால் சராய்த்து ரத்தம் வரும் கால் முட்டியை பார்த்து பயத்தில் வீறிடும் நாலு வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தன் பெயரையே முழுசாக இன்னும் எழுத தெரியாத ஒரு பச்சிளம் ஐந்து வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? குண்டு திராட்சை கண்களால் பீதியுடன் ஏறிட்டு பார்க்கும் குழந்தையை பலாத்காரம் பண்ணக் கூட ஒரு மனிதனுக்கு மனம் வருமா? சிவன் தலையில் ஊற்றெடுத்து பொங்கி ஓடும் கங்கை நதியில் சாக்கடை நீரை கொட்டக் கூட ஒரு மனிதனால் முடியுமா?

ஒரு மனிதன் அல்ல, பல மனிதர்களால் முடியும் என்பதை நேற்று பார்த்த செய்தியில் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று வயது பெண் குழந்தையை gang rape செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி ரயில் தண்டவாளத்தில் குப்பை போல தூக்கி விட்டெறிந்து விட்டு போன மனிதர்கள் எந்த நரகத்திலிருந்து தப்பி வந்த அசுரர்கள்? இவர்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் மழை எப்படி பெய்கிறது? சுனாமி இவர்களை எல்லாம் இழுத்து கடலில் மூழ்கடிக்காமல் ஏன் இன்னும் விட்டு வைத்தது? அந்த குழந்தையை பெற்று விற்ற தாய் தந்தை ஏன் இன்னும் பஸ்பமாகவில்லை? ஆஸ்பத்ரியில் உயிருக்கு அந்த குழந்தை போராடும் போது பச்சிளம் குழந்தைகளிடம் தங்கள் ஆண்மையை காண்பிக்கும் இந்த அராஜகர்களேல்லாம் எப்படி உயிரோடு நடமாடலாம்? இந்த அவலைப் பெண்கள் சுவாசிக்கும் அதே காற்றை இந்த அரக்கர்களும் எப்படி சுவாசிக்கலாம்?

என் கேள்விகளுக்கு பதில் எங்கே? நம் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் சொல்படி பார்த்தால் இந்த அசுரர்களை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவர் எங்கே? ஒ மறந்து விட்டேன். அரசன் அன்று கொல்லுவான் ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லுமோ? என்னால் முடியாது. எனக்கு அந்த பக்குவமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதோ என் கற்பனை உலகத்தில் நான் இன்றே வழங்கும் தீர்ப்புகள்.

நான் - சித்ரகுப்தா, விலகிக்கொள். இன்று ஒரு நாள் உன் லெட்ஜர் மற்றும் நாற்காலி என் கையில்.

சித்ரகுப்தன் - அப்பாடி! ஒரு நாள் எனன, ஒரு மாசம் வேணும்னாலும் நீயே இந்த வேலையை பாரு. (ஓட்டமாய் ஓடுகிறார்)

சித்ரகுப்தன் நாற்காலியில் நான் - யமதர்மா, இன்று பூமியில் ஒரு சில மனிதர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது. நீங்களே பயந்து எருமையில் ஏறி ஓட்டம்பிடிக்கும் அளவு அசுரத்தனம் எல்லாம் அங்கு நடக்கிறது. அவர்கள் முன் சூரபத்மனும், நரகாசுரனும் கமர்கட் திருடிய சிறு பிள்ளைகளாக தோன்றுகிறார்கள்.

யமதர்மன் - உனது பரிவுரை எனன மீனா?

நான் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் சொல்லொணா கொடுமை செய்யும் மானிடப் பதர்கள் அனைவருக்கும் இந்த நரகம் பற்றாது. புதுசாக ஒன்று நிர்மாணிக்க ஏற்பாடு செய்யுங்கள். எண்ணைக் கொப்பரைக்கு பதில் அங்கு கொதிக்கும் எண்ணைக் கடல் ஒன்றை நிறுவுங்கள். இந்தப் பாவிகளை அந்த கரையோரம் நிறுத்தி, கொதிக்கும் எண்ணை அலை அலையாய் பொங்கி அடித்து அதில் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெந்து, புண்பட்டு, கதறி சாக வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் அசுரத்தனமாய் தீண்டிய அவர்கள் கைகளை வெட்டி விட்டு பின்பு தான் எண்ணை கடல் கரையோரம் நிற்க வைக்க வேண்டும்.

யமதர்மன் - செய்து விடுகிறேன் மீனா. வேறெதாவது கோரிக்கை உண்டா?

நான் - இன்னும் ஒன்றே ஒன்று மன்னா. இவர்களிடம் கொடுமைப்பட்ட அனைவரின் மனத்திலும் அந்த கொடூரமான நினைவுகளை அகற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு மற்ற நாட்களை பூமியில் கழிக்க நீங்கள் அருள வேண்டும்.

யமதர்மன் - இல்லை. அது எனக்கு அப்பாற்பட்டது மீனா. நினைவுகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. உனது பரிவுரைகளை உடனே அமுலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். இனி, நீ போய் சித்ரகுப்தனை சபைக்கு அனுப்பு.

நான் - அப்படியே ஆகட்டும் காலனே. (வெளியேறுகிறேன்)

-மீனா சங்கரன்

Friday, November 19, 2010

திருவரங்கத்தில் ஒரு தமிழ் வேள்வி

இந்திய வரலாறு படித்தவர்களுக்கு மொகலாய அரசன் ஷாஜஹானை நன்றாக நினைவில் இருக்கும். ஷாஜஹானை நினைவில் கொள்வதற்கு முக்கியக் காரணம் இறந்து போன தன் மனைவியின் நினைவாக அவர் கட்டிய தாஜ்மஹால்தான்.

ஷாஜஹான் மொகலாய பேரரசன். தன் மனைவியின் நினைவாகப் பெரும் தொகையை செலவு செய்து பல ஆயிரக்கணக்கான கட்டிடக் கலைஞர்களையும் மற்றும் தொழிலாளர்களையும் கொண்டு பல ஆண்டு உழைப்பில்  ஒரு கலைக்கூடத்தை தாஜ்மஹால் என்ற பெயரில் உருவாக்க முடிந்தது. சாதாரண மனிதன் மனைவியை இழந்தால்அவனுடையதுயரத்தை காலம்தான் ஆற்றமுடியும்.

சிலர் தன் துயரத்தை மறக்க ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும் சிலர் மனைவியின் பெயரால் சில தருமகாரியங்களை செய்வார்கள். அவரவர்களுடைய பொருளாதார நிலைக்கு தக்கபடிஅந்த தரும காரியம் நடக்கும்.

சில அசாதாரண மனிதர்கள் தூயதொண்டுசெய்வதையே வாழ்க்கையாக மாற்றிக்கொள்கிறார்கள்.

திருச்சி திருவரங்கத்தில் ஒரு அதிசய மனிதர். அவர் பெயர் ராஜவேலு. வழக்கறிஞர். நல்லதமிழறிஞர். சிறந்த கவிஞர். நாடக நடிகர். ஆற்றல் மிக்க பேச்சாளர்.

அவருடைய மனைவி செண்பகவல்லி இறந்து போனபோது ராஜவேலு துயரத்தில் துடித்துப் போனார். ஆனால்அவருடைய தமிழார்வமும் நல்லறிவும் அவரை சிந்திக்கச் செய்தது. தன் துயரத்தைத் தீர்க்கும் வடிகாலாக இழந்த தன் மனைவியின் நினைவைப் போற்றும் வகையில் மனைவியின் பெயரால் செண்பகத் தமிழ் அரங்கு என்ற அமைப்பை உருவாக்கினார்.

தன் பெயரையும் ராசவேலு செண்பகவல்லி என்று மாற்றிக்கொண்டார். 1990-ம் ஆண்டு தொடங்கிய அந்த அரங்கு இன்று ஒரு பெரிய தமிழ் இயக்கமாக வளர்ந்திருக்கிறது. திருவரங்கம் காந்தி சாலையில் ஒரு தமிழ் கோயிலாக பலர் கண்ணுக்கு தெரிகிறது
.
தாஜ்மஹால் போன்ற கலைக்கூடம்தான் கட்டவேண்டுமா? இல்லை. இவரைப்போல் ஒரு இயக்கத்தையும் தொடங்கலாம்.

சென்ற இருபது ஆண்டு காலமாக இந்த அரங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தமிழ் இலக்கிய விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கியமாக அழுத்தமாக குறிப்பிடவேண்டியது தவறாமல் சனிக்கிழமையன்று கூட்டம் நடந்தே தீரும் என்பது. சரியாக மாலை ஆறு மணிக்கு கூட்டம் தொடங்கும். இந்த அரங்கம் தொடங்கிய நாள் முதல் தவறாமல் நடக்கும் கூட்டம் இப்பொழுது ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இன்று  நடைபெறவிருக்கும் ஆயிரமாவது கூட்டம் சிறப்பான விழாவாக நடைபெறும். கடந்த பல ஆண்டுகளில் இந்த அரங்கத்தில் சிறிய பேச்சாளர் தொடங்கி தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் வரை அனைவரும் பேசியிருக்கிறார்கள். இந்த அரங்கில் பேசக் கிடைக்கும் வாய்ப்பை தமக்கு கிடைத்த பேறாக பல தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த செண்பகத் தமிழ் அரங்கு தமிழ் ஆர்வலர்களிடம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருக்கிறது. நீண்ட தூரம் பயணம் செய்து கூட்டத்தில் கலந்து கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன்.

இந்த அரங்கில் சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, இடைக்கால பக்தி இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு பாரதி கவிதைகள் வரை சகல தலைப்புகளிலும் இலக்கிய உரை நிகழ்த்தப்படுகிறது.

அரசு உதவியுடன் பெரிய அளவில் செயல் படும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட முடியாத இந்த காலத்தில் ஒரு தனி நபர் தன்னுடைய சொந்த முயற்சியில் இதைச்செய்ய முடிகிறது. என்று அறியும்போது நமக்கு வியப்புதான் ஏற்படும். வள்ளலார் வாழ்வையும் கருத்துகளையும் பரப்பும் தொண்டுபுரியும்தவத்திரு ஊரன்அடிகள், செந்தமிழ் அந்தணர் இலங்குமறனர், இயல் இலக்கண வித்தகர் தி.வே.கோபாலய்யர் போன்ற இலக்கிய அறிஞர்கள் மற்றும் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பல தமிழறிஞர்களின் படைப்புகள் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பல தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்கள், அந்த கோயில்களில் உள்ள சிற்பங்களின் பெருமை,  தலவரலாறு பற்றியும்சொற்பொழிவு நடை பெறுவதுண்டு.

சைவசமயம் வைணவ சமயம்,ஆகிய பல பிரிவுகளின் மெய்ஞான அடிப்படைகள் பற்றிய விளக்க கூட்டம் நடக்கும். கிறிஸ்தவ சமயம் இஸ்லாமிய சமய அடிப்படை கொள்கைகள் பற்றியும் ஒரு தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. ஷேக்ஸ்பியர் ,பெர்னார்ட் ஷா போன்ற ஆங்கில இலக்கிய ஆசிரியர்களின் நாடகங்களின் விளக்க சொற்பொழிவு நடந்தது இந்திய மொழிகளான வங்காளம், மராத்தி, ஹிந்தி ஆகிய பல மொழிகளின் வரலாறு, அந்த மொழிகளின் முக்கிய இலக்கிய படைப்புகள் பற்றியும் சில கூட்டங்களில் விளக்கமாக பேசப்பட்டன. ..அந்த மொழிகளில் புலமை படைத்த பலர் இந்த அரங்கில் பேசியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இலக்கியம் பற்றியும் இலக்கிய தொடர்பான இதர துறைகள் பற்றியும் விமர்சனங்களோடு கூடிய விளக்கக் கூட்டம் வாரம் தவறாமல் நடைபெறுகிறது.


திருச்சி நகரத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கையோடு பார்க்கும் அமைப்பாக செண்பகத்தமிழ் அரங்கு வளர்ந்திருக்கிறது. பயன் கருதாது தொடர்ந்து நடத்தப்படும் இந்த அரங்கின் ஆயிரமாவது கூட்ட நிறைவு விழா 20.11.2010 காரி (சனி)க் கிழமை முற்பகல் 09.30 மணிமுதல் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இடம்: எசு.என்.திருமண மாளிகை (காவிரிக்கரை அம்மா மண்டபம் அருகில்), திருவரங்கம், திருச்சிராப்பள்ளி. அதையொட்டி நடைபெறவிருக்கும் விழாவில்பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.சிறப்பான முறையில்கூட்டம் நடைபெற முனைப்போடுவேலைகள்நடக்கிறது.

ஒருஆசிரியர்தன்னுடைய எம் .பில் பட்டப் படிப்பிற்காகசெண்பகத் தமிழ் அரங்குபற்றியஆய்வேடு தயாரித்து பல்கலைகழத்தில் சமர்ப்பித்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூர் தமிழ் சங்கம் திரு ராஜவேலுக்கு பாராட்டு தெரிவித்து அவரை கௌரவித்திருக்கிறது. அவர் சார்பாக அவருடைய குமரன்இளங்கோபெங்களூர் சென்றுபாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். திரு ராஜவேலுஏன்பெங்களூர் சென்று தானே நேரடியாக விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். இங்கேதான் ஒரு வேதனை தரும்செய்தியை குறிப்பிடவேண்டியிருக்கிறது.
திரு ராஜவேலுக்கு கடந்த பல வருடங்களாகக் கண்பார்வை சரியாக இல்லை. தன் வீட்டில் மட்டும் நடமாடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் அவருடைய தமிழ்ப்பணி தொடர்கிறது.

இதுவரை நடைபெற்ற எல்லா சொற்பொழிவுகளையும் ஒலிநாடாவில்
பதிவு செய்திருக்கிறார். விழாவில் சில முக்கிய சொற்பொழிவுகள் அடங்கிய சிறப்புமலர் வெளியிடப்படவிருக்கிறது.

திரு ராஜவேலுவின் தன்னலம் கருதாத இந்த தொடர் முயற்சியில் பல அறிஞர்கள் உறுதுணையாக நிற்கின்றனர். காலம் சென்ற புலவர் சேது மாணிக்கம் அவர்கள் தன் வாழ்நாளில் அரங்கின் செயல்பாட்டுக்கு மிக்க உறுதுணையாக இருந்தார். நண்பர் தமிழன்பனும் நல்ல துணையாக நின்று செயல்படுகிறார். இந்த அரங்கின் சார்பாக ஒரு நூல்நிலையம் செயல்படுகிறது. இதுபோன்ற தனிநபர் முயற்சியை பார்க்கும்போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை வருகிறது. தமிழை வைத்து பிழைக்க முயற்சி செய்பவர்கள் மலிந்து கிடக்கும் தமிழ்நாட்டில் தமிழுக்காக வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்று அறியும்போது நாம் ஒரு வகையில் நிம்மதிஅடையலாம்.

- மு. கோபாலகிருஷ்ணன்

(செண்பகத் தமிழ் அரங்கு தொடர்பாக சில சுட்டிகள் இங்கே)

Sunday, October 17, 2010

கொலு 2010

கடந்த சில ஆண்டுகளாக கொலு சுற்றுலா போக முடியவில்லை. இந்த ஆண்டுதான் எந்த சாரண முகாமும் போகாமல் ஊரில் இருந்ததால், சுண்டல் வேட்டைக்கு கிளம்பினேன். ஆரம்பித்தது பார்கவி-கணேஷ் தம்பதியினர் வீட்டில்.கொலு என்றால் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற மனப்பான்மை ஒன்று நிலவுகிறது. அதற்காக கொலுவுக்கு நிஜமாக வேலை செய்தவர்களை வைத்து படம் பிடிக்கவேண்டும் என்று ஒரு திட்டம். அதனால் நம் நண்பர் ஆனைமுகனை நிற்க வைத்து ஒரு படம். என்ன பெருமையாக நிற்கிறார் பாருங்க...


கணேஷை மட்டும் ஏன் என்று அவர் மகனுடன்...
 பச்சை யந்திரன் தனியாக... இந்த கொலுவில் எனக்கு மிகவும் பிடித்த பொம்மை கருடனின் தோள்களில் அமர்ந்திருக்கும் மஹாவிஷ்ணு.
 இந்த திருமண காட்சியும் அருமை.
 நம் ஊரில் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், டென்னிஸ் ஆடும் பிள்ளையார் பொம்ம்மை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வீட்டில் சீனத்து பிள்ளையார் பொம்ம்மைகள் பார்த்தேன். இந்தப் படங்களில் தேடாதீர்கள். படம் பிடிக்கவில்லை :-)


 அடுத்ததாக திருவாசகம் மீனா சங்கரன் வீட்டு கொலு. உடல் சரியில்லாவிட்டாலும் அழகாக சிரிக்கும் அவர்கள் மகளுடன் மீனா.

 ரிச்மண்டில் இதுவரை காணாத கிரிக்கெட் மைதான அமைப்பு. ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி. ஆனால் மட்டையை காலுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விளையாடி பார்த்ததில்லை.


 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது தூணைப் பிளந்து வெளியே வரும் நரசிம்மர். பிளந்திருக்கும் தூணைப் பார்த்தால் எனக்கு என்னவோ நினைவுக்கு வருவது பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளச்செங்கூர் வாய் நாரைதான் :-)
 மேல்தட்டில் கஜேந்திர மோட்சமும் உண்டு.

 அடுத்ததாக சித்ரா-ரவி வீட்டு கொலு. வேறு எந்த வீட்டிலும் பார்க்காத காட்சி இங்கே - வேஷ்டியில் ரவி!

 கொலு பொம்மைகள் அழகா, இந்தப் பெண்கள் அழகா...
 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தவை அஷ்டலஷ்மிகளும் பிள்ளையார் வாத்தியக் கோஷ்டியும்.




 அடுத்த வீடும் சித்ரா-ரவி வீடுதான் :-) ஒரு சிறிய அழகான கொலு!
இந்த கொலுவி எனக்குப் பிடித்தது கொலுவின் முன்னே சித்ரா வரைந்திருந்த பெருமாள் ரங்கோலி.



 அடுததது லாவண்யா ராம்கி வீட்டு கொலு.






 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது பால்குடத்தைக் கவிழ்க்கும் கண்ணன். மற்றவர்களைக் கவர்ந்தது ஒளிரும் நீலமயில்கள்.
 அடுத்ததாக மாலதி என்கின்ற சாவித்ரி - முரளி  வீட்டு பிரம்மாண்டமான கொலு.




 நான் வீட்டுக்குள் நுழையும்போது ஓடிக்கொண்டிருந்த ரயில்.

 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது மரத்தால் செய்த யானை அம்பாரி.
 கடைசியாக பவானி-கண்ணன் வீட்டுக் கொலு.


 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது தசாவதார பொம்மைகள்.

இவ்வளவு கொலு படம் காட்டிவிட்டு, பாட்டில்லாவிட்டால் எப்படி? கடைசியாக ஒரு பாட்டு...

இவ்வளவு பொம்மைகள் பார்த்துவிட்டு எனக்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் இப்போது பண்ருட்டியென்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் பொம்மைகளுக்கு பெயர் போனது பண்ருட்டி. முத்தையர் பள்ளியில் படிக்கும்போது சுற்றுவட்டார வீதிகளில் நிறைய பொம்மைகள் செய்து வெளியே காயவைத்திருப்பார்கள். சப்பாணி செட்டி தெரு முழுக்க பொம்மைகள் நிற்கும். தெருவில் ஜாதிப்பெயர்கள் நீங்கி பொம்மைகளும் அகன்று இப்போது வெறும் சப்பாணி ஆகிவிட்டது அந்தத் தெரு.

பல வீடுகள் இந்தப் பட்டியலில் நீங்கிவிட்டன. இந்த வாரம் பிள்ளையாண்டான்களுக்கு சாரதித்துவம் செய்ததால் சில வீடுகளுக்கு என்னால் போகமுடியவில்லை. போனவள் காமிரா கொண்டுபோகவில்லை. அதனால் விட்டுப்போன கொலுக்களுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.