Showing posts with label #உள்ளூர்க்காரன். Show all posts
Showing posts with label #உள்ளூர்க்காரன். Show all posts

Tuesday, June 11, 2019

அவர் அப்படித்தான்

ஒவ்வொரு முறை அவரை ஊடகமோ மற்றவர்களோ காயும் போதும் இப்படித்தான் நினைத்துக் கொள்கிறேன்.

"என் நெருங்கிய நண்பன் தவறிச் செய்த தவறுகளுக்காக எப்படி ஒரு போதும் அவனை விட்டுக் கொடுக்க மாட்டேனோ அப்படித்தான் இவரையும்"

உண்மைதான். அப்படித்தான். அவரும் அப்படித்தான். விரும்பினால் என் பேச்சைக் கேளுங்கள் இல்லாவிட்டால் நகருங்கள் என்றே இருந்தார் /கிறார் /ப்பார்.

நெய்யில் வறுத்த முந்திரி போட்ட பாயாசத்தை புதுப் பொண்டாட்டி கொடுப்பது போல சிலதும், வெறும் வற மொளகாயும் அரைச்ச செலவும் சேர்த்து செஞ்சது இது, கண்ணு என்று ஊருக்கு போயிருக்கும் போது அம்மா ஊற்றும் கோழிக் குழம்பு போல சிலதுமாக மனதுடனேயே எப்போதும் நெருக்கமாக இருக்கும் அவரை எப்படி, யாரிடம் விட்டுக் கொடுக்கப் போகிறோம்? ஒருக்காலும் முடியாது.

அவரது பொருந்தாத பேச்செல்லாம் கொலுசு போட்ட குட்டிக் காலுடன் செல்லமகள் மார்பினில் உதைப்பது போலத்தான். எப்புடி ஒதைக்குது பாரேன் எனும் உங்கள் அக்கறையை, "உதை வாங்கும்" அப்பன்கள் கண்டு கொள்வதே இல்லை - அவரைப் போலவே.

எனவே நண்பர்களே, நண்பர் போன்றோரே, மற்றவர்களே, அவரை வைய்யும் முன் இதை அறிந்து கொள்ளுங்கள்: அவர் உங்கள் ஏச்சுகளை கண்டு கொள்வதில்லை என்ற காண்டு உங்களுக்கு இருப்பது தெரியும், அதை விட பெரிய காண்டு,  நாங்களும் கூட அப்படியே என்பதனை அறிந்து அடைக.

கண்டுகொள்ளாதது எப்படி மனதை நோகடிக்கும்? அவர் மேற்கோள் காட்டிய குறள் சொல்லுவது போலத்தான் (யாதனின்...)

கூடுதலாக, அவர் உங்கள் வசையொழிய வாழ்வாங்கு வாழ்கிறார், அவரை வைவோரும் அவர் இசைபடவே நல்வாழ்வு வாழ்வீராக. ​
அவரும் அதைத்தான் விரும்புவார்.

ஏனெனில், அவர் அப்படித்தான்.

Saturday, February 09, 2019

வள்ளுவர் எல்லாரையும் கறி துண்ண வேணாம் ​​என்றாரா?


எந்த உசுரையும் கொல்லாதீங்கடா, கொன்னு தின்னு உங்க உடம்பை வளர்க்காதீங்கடா, உன் உசுரே போகுதுன்னாலும் இன்னொரு உசுர கொல்லக் கூடாதுடா

என்றெல்லாம் சொன்னார்தான்.

கேள்வி என்னனா, எங்கே இதெல்லாம் சொல்லிருக்கார் என்பதுதான்.

துறவற இயலில் சொல்லி இருக்கார்.

ஆம், உலக வாழ்வைத் துறந்து துறவறம் பூண்டவர் எப்படி இருக்கணும் எனும் பகுதியில் இதெல்லாம் சொல்கிறார்.

புலால் மறுத்தல் துறவறவியலில் ஒரு அதிகாரம்.
அதே இயலில் நிலையாமை, மெய்யுணர்தல், அவா அறுத்தல் என *துறவு தொடர்பான * செய்யுள்கள் உள்ளன.

காமத்துப்பாலில் டிசைன் டிசைனாக, காதலிப்பது பற்றியும் கலவி கொள்வது பற்றியும் உண்டு. அதுக்காக துறவறத்தில் உள்ளோரும் பூந்து வெளாடுங்கடா/டீ என்று சொன்னார் என்றா எடுத்துக் கொள்ள முடியும்?

அந்தந்த இயல்களில் அதனதன் பொருள் ஒட்டி (relevance) பொருள் கொள்ள வேண்டும்.

துறவறத்தில் உள்ளவனைப் பார்த்து,
அடேய்.. உழவு, விருந்தோம்பல், குற்றம் கடிதல் என எல்லாமே உனக்கும்தான்டா எனக் கொத்து பரோட்டா போட்டால் தகுமா? அவருக்கு அருளுடைமை, தவம், கொல்லாமை, நிலையாமை என்பன பொருந்தும், பொருத்தம்.

போலவே, இல்லறத்தில் உள்ளோர்க்கு இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, பிறனில் விழையாமை என இல்லற இயல் செய்யுட்களையும்,

மண வாழ்விலும், அதற்கு முன்பும் காதல் கொள்வோருக்கு குறிப்பறிதல், புணர்ச்சி மகிழ்தல், ​ஊடல் வகை என *அந்தந்தந்த* பருவத்தினருக்கு ஏற்றவாறும் குறளைப் பொருள் கொள்ள வேண்டும்.

மன்னனுக்குச் சொன்னதை உழவனுக்கும், ஒற்றனுக்குச் சொன்னதை அமைச்சனுக்கும் எடுத்து பொருத்தமா இல்லையே என்பது எப்படி சிரிப்போ, அப்படியேதான் துறவிக்குச் சொன்னதை, 'என்னடா வள்ளுவரு கறி துண்ண வேணாங்கறாரு' என்று எடுத்துக் கொண்டாலும்.

எந்தச் சூழலில் எது வேண்டும், எது கூடாது என்று சொல்கிறார்.

ஆக ,
ஐயையோ கறி சோறு வேணாம்ங்கறாரே நான் எப்படி குறள் வழி வாழ்வேன் என்று பதறுமுன் கள்ளுண்ணாமையை ஏன் நட்பியலில் வைத்திருக்கிறார் என யோசித்துப் பாருங்கள்.

சூது, தீ நட்பு, பேதைமை (லூசுத்தனம்), உட்பகை என நட்புக்கு வேட்டு வைக்கும் பலதையும் தொட்டுச் செல்கிறார், சொல்கிறார்.

நட்பியலில்தான் கள்ளுண்ணாமை, மருந்து அதிகாரங்களும் வருது.

'மருந்து' அதிகாரத்தில பத்தில் ஆறு குறள்கள் உண்பதைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்.

நிறைய திங்காதே, கண்ணா பின்னான்னு கண்டதையும் திங்காதே, ஏற்கனவே சாப்பிட்டது செரிச்சப்புறமா சாப்பிடு என்று நண்பர்களோடு இருக்கையில் எங்கெல்லாம் தவறுவோமோ அதையெல்லாம் குறிப்பிட்டு எச்சரிக்கிறார்.

​இத விளக்கும் போது, அப்படின்னா கள்ளாமை கூடத்தான் துறவற இயலில் வருது, இல்லறவாசிங்க திருடலாமா ​​என்று எந்த அறிவாளியாவது கேட்டால், திருடித்தான் பாரேன் செங்கோன்மை படிச்சுட்டு மன்னன் (சட்டம்) காத்திருக்கான்-ன்னு சொல்லுங்க.

அதெல்லாம் முடியாது வள்ளுவர் சொன்ன ஒவ்வொரு குறளையும் 'அப்படியே' தனித்தனியா எடுத்துதான் பொருள் கொள்வேன் என்று சொல்பவர்களிடம்,
தாராளமாக புலாலை மறுங்கள், அருளுணவாக மரக்கறி உணவையே எப்போதும் உண்ணுங்கள் அது உங்கள் விருப்பம், உரிமை என்று சொல்வோம்.

ஆனா அதுக்கும் முன்னாடி, அதே துறவற இயலில் இருக்கும் வாய்மை அதிகாரத்தில் 'தன்நெஞ்சு அறிவது பொய்யற்க' என்று சொன்னதற்கேற்ப எந்தச் சூழலிலும் பொய் சொல்லாமலும், அங்கேயே கள்ளுண்ணாமை என்று ஒரு முழு அதிகாரம் எழுதி வெச்சுஇருக்காரே அதற்கேற்ப சரக்கை கனவிலும் எண்ணாமலும் வாழத் துவங்கிட்டு புலாலையும் மறுங்கள். வள்ளுவர் இன்னும் மகிழ்வார் என்று சொல்வோம்.

ஆங்..
இன்னொன்னு.
கறியை துறவுக்கு முன்பே மறுப்பதோ ஏற்பதோ அவரவர் உரிமை, வள்ளுவர் எல்லோரையும் மறுக்கச் சொல்லலை என்பதே நம் விளக்கம்.

முடிவாக,
குறளை அணுகயில், ​எந்தச் சூழலுக்கான பொருளில் சொல்லியிருக்கார் எனப் பார்த்தால், ஒற்றைக் குறளை/அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தேவையற்ற பதற்றம், குழப்பம் அடைவதைத் தவிர்க்கலாம்.


​எனவே,
குறள் வழி நடப்போம்;
​​ஆனா, பிரியாணி குண்டானை ​மொதல்ல கழுவிட்டு கடமையாற்றுவோமாக.



========

* ​நண்பர்கள் 'புலால் மறுத்தல்' பற்றி இலக்கியக் குழுவில் பேசத் தொடங்கியதின் தொடர்ச்சியாக எழுதியது.

#​ஞாயிறு போற்றுதும்

Wednesday, January 30, 2019

சில சமூக விதிகள்


இப்படி நடந்துகிட்டா எல்லோருக்கும் நல்லது எனும் பொது விதிகள் சில:


1. உங்கள் தொலைபேசி அழைப்பை அடுத்த முனையில் ஏற்காத போது, இரு முறைக்கு மேல் அடுத்தடுத்து அழைக்காதீர்கள். அவர்கள் ஏதேனும் அவசர வேலையில் இருக்கலாம். கலவரப்படுத்தாதீர்.

2. உணவைத் தவறுதலாக எவரும் சிந்தி விட்டால் முறைக்காதீர்கள். தவறுகள் இயல்பு. மேசை / முள் கரண்டியைப் பயன் படுத்தத் தடுமாறினால் ஏளனப் பார்வை பார்க்காதீர்கள். நாம மட்டும் கற்றுக் கொண்டா பிறந்தோம்?

3. அடக்க முடியாமல் தும்மல், இருமல், ஏப்பம் (மேலேயோ/கீழேயோ) எவருக்கும் வந்து விட்டால் லார்டு லபக்கு தாசாட்டம் சிரிக்கக் கூடாது. அடக்க முடியாம தடுமாறிட்டாங்க, எவருக்கும் நடக்கக்கூடிய இயற்கையான நிகழ்வு -ன்னு கண்டும் காணது விட்டு விடுங்கள்.

4. பொதுக் கழிப்பிடங்களில் ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அறைக்கு பக்கத்து அறையை முடிந்த வரை தவிருங்கள். இருவருக்கும் நிம்மதி கெடாது.

5. வாங்கிய கடனை, கொடுத்தவர் கேட்கும் முன் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது மிகச் சிறிய தொகையாகவோ, பேனா, குடை போன்ற எளிய பொருளாகவோ இருந்தாலும் சரி. உங்கள் நாணயம் அந்தக் கடனை, பொருளை விட மதிப்பானது. அதற்கு இழப்பு வராமல் பார்த்துக் கொள்ளணும்.

6. ஏதாவது கொண்டாட்டத்துக்காக நண்பர் சாப்பாடு வாங்கிக் கொடுக்கும் போது, "மாட்னியா" -ன்னு அந்த உணவு விடுதியிலேயே விலை உயர்ந்ததை வாங்காதீர்கள். முடிந்தால் நண்பரையே உங்களுக்கும் சேர்த்துத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். அவரே நல்லதா வாங்கித் தருவார்.

7. நெளிய வைக்கும் கேள்விகளை கேட்கவே கேட்காதீர். "நீ இன்னும் மணம் முடிக்கலியா", "இன்னும் குழந்தை வெச்சுக்கலையா", "ஏன் இன்னும் வீடு வாங்காம இருக்க".
உண்மையாச் சொல்லுங்க, இந்தக் கேள்வியெல்லாம் தேவையா? உங்களைக் கண்டாலே அடுத்த முறை ஓடிடமாட்டார் உங்க நண்பர்?

8. உங்களுக்குப் பின் வர்றவங்க மூஞ்சில அடிக்காம கதவை அவர்களுக்காக திறந்து பிடியுங்கள். அவர்கள் முகம் தப்பிப்பது மட்டுமல்ல புன்னகையும் கூட வரும்.

9. சேர்ந்து போகும் வாடகை வண்டிக்கு நண்பர் வாடகை கொடுத்தால் மறுமுறை சேர்ந்து போகும் போது மறக்காமல் நீங்கள் வாடகை கொடுங்கள்.

10. மற்றவர்களின் அரசியல் பார்வை/ நிலைப்பாட்டையும் மதியுங்கள். தங்கள் அளவில் எல்லோரும் சரியே.

11. மிகத் தேவை என்றால் ஒழிய, இரவில் நேரம் கழித்து யாருக்கும் தொலைபேசி அழைப்பு வேண்டாம்.

12. குறுக்கே பேசாதீர். சொல்லி முடிக்கட்டும்.

13. கிண்டல் செய்வது எல்லோர் மகிழ்ச்சிக்காகவும்தான். நம் கிண்டல் பேச்சு எவரையும் காயப்படுத்தக்கூடாது.

14. உதவி செய்தவர்களுக்கு, உடனே நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

15. பாராட்டும் போது, பலர் முன்னால் தாராளமாக பாராட்டுங்கள். குறைகளைத் தனிமையில் சுட்டிக் காட்டுங்கள்.

16. உடல் எடையைப் பற்றி கேட்கவே கேட்காதீர்கள். எடைக் குறைப்பு பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்றால் அவர்களாகவே கேட்பார்கள்.

17. நீண்ட தூரப் பயணம் புறப்படும் போது குளித்து, பல்துலக்கி பின்னர் கிளம்புங்கள். பக்கத்துல உட்காருபவர் நண்பர் ஆகலைன்னாலும் எதிரி ஆகாமல் இருப்பார்.

18. தொலைபேசியில இருக்கும் ஒரு புகைப்படத்தை உங்களிடம் காண்பித்தால் அதை மட்டும் பாருங்கள். முன், பின் நகர்த்தி அடுத்த படத்தை பார்த்து நீங்களோ / நண்பரோ "பகீர்" ஆகக் கூடாதுல்ல?

19. உடன் பணிபுரிபவர், மருத்துவரை பார்க்கப் போறேன் -ன்னு சொன்னா, "ஏதாவது உதவி வேணும்னா சொல்லு" அப்படிங்கறதோட நிறுத்திக்குங்க. "என்னாச்சு, எதுக்கு, எந்த மருத்துவமனைக்கு போற, எங்க பாட்டிக்கு ஒரு நாளு இப்படித்தான் " -ன்னு எதுவும் தேவையில்லை. தேவைன்னா அவரே சொல்வார்/கேட்பார்.

20. எளிய மனிதர்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அலுவலகக் காவலாளிக்கு புன்னகையோட பதில் வணக்கம் வெக்கறதுக்காக சம்பள உயர்வு கிடைக்காதுதான்; ஆனா நம்முடைய நாளை இன்னும் கொஞ்சம் நல்ல மனநிலையோட துவக்கலாம், முடிக்கலாம்.

21. நம்மிடம், நம் கண்களைப் பார்த்து ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது நாம் கைபேசியை நோண்டுவதற்குப் பெயர்: திமிர், ஆணவம், ஏளனம், லூசுத்தனம், அல்லது இது எல்லாம் சேர்த்து.

22. உங்களிடம் வந்து கேட்காதவரை அறிவுரை சொல்லாதீர்.

23. Headphoneல பாட்டு கேட்டுகிட்டு இருக்கறவங்கள உலுப்பி கேள்வி கேட்காதீர். ஒன்னு, பதில் வராது அல்லது சரியான பதில் வராது.

24. நீண்ட நாள் கழிச்சு சந்திக்கும் போது படால்ன்னு வயசு, சம்பளம் போன்றவற்றை கேட்காதீர்.

25. தொலைபேசி உரையாடல் என்பது இருவருக்கு இடையேதான். தொலைபேசி இல்லாமலே பக்கத்து ஊர்க்காரருக்கு கேட்பது போல பெருங் குரல் பேச்சு வேண்டாம்.

26. ஏதாவது சாப்பிடக் கொடுக்கும் போது வேண்டாம் எனில் முதல்லயே சொல்லிடுங்க. முகர்ந்து பார்த்துட்டோ, நாக்குல கொஞ்சம் வெச்சுப் பார்த்துட்டோ வேண்டாம் என்பது அவமானப்படுத்துவது போல.

27. தங்கள் உடலில் உள்ள தொந்தரவைப் பற்றி பேசினால் உடனே, "எனக்கும் இது மாதிரி தான்" என உங்க கதையை ஆரம்பிக்காதீர்கள்.

28. உடலில் மாற்றங்கள் (முடி உதிர்வு, உடல் எடை கூடி/குறைந்து, முகப்பரு போல மாற்றங்கள்) ஏற்பட்ட ஒருவரை பார்க்கும் போது அதைப் பற்றி பேசாதீர்கள். என்ன ஆகி இருக்குன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும், நீங்க விளக்க வேண்டிய தேவை இருக்காது. அது பற்றி உங்களிடம் பேசணும்னா அவர்களே பேசுவார்கள், அதுவரை அதைப் பற்றி பேசாதீர்.

29. மற்றவர் குழந்தையை முத்தமிடாதீர்.

30. வாட்சப், முகநூல், கீச்சு என எங்கே வாய்ப்பு கிடைத்தாலும் சண்டைக்கு போகாதீர்.

~~~~~~~~~~

* இங்கு "அவர்" என்பது ஆண், பெண் என இரு பாலருக்கும் பொருந்தும்.

* இது கைபேசியில் ஒரு ஆங்கிலச் செய்தியாக வந்தது. நண்பன் கேட்டுக் கொண்டதற்காக, நடுநடுவே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டு மொழிபெயர்த்தது.

~~~~~~~~~~~

Saturday, October 06, 2018

இதுல உனக்கு என்ன பெரும?

//பள்ளியில் 30 குறள், மதிப்பெண்னுக்காக படிச்சவனை திருக்குறள் தெரிந்த கணக்கில் வைப்பது 👌🏽
என்னடா சொல்ற? பள்ளியில் குறள் படித்தவனெல்லாம் மதிப்பெண்ணுக்காக படித்தான் என்றால், வேதம் படிச்சவன் எல்லாம் ராக்கெட் விடவா படித்தான்? இவனாவது தினப்படி வாழ்வில் அவ்வப்போது சரியான பொருளில் இரண்டொரு குறள்கள் பயன்படுத்துகிறான். அந்த 1000 கோடி பேரும் மதச் சடங்குகளில் ஒப்பிக்கத்தானே படித்தார்கள்? அவர்களுக்குள் பொருளுணர்ந்து அவ்வப்போது சிலபல செய்யுள்களை சொல்லிக்கொள்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இரண்டும் ஒன்றுதானே? திருக்குறள் தெரிந்தவர்கள் வெறும் மதிப்பெண்ணுக்காக படித்தார்கள்; அதனால் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாதே!

//பரமசிவன், பார்வதி, சரஸ்வதின்னு சொல்லாம, பரம்பொருள்ன்னு சொன்னதை வைத்திருங்திருக்கலாம். 
பரம்பொருள் வரியை நீக்காது விட்டு வைக்க வேண்டுமென்றால் "சிதைந்து, வழக்கொழிந்த ஆரியம்" என்பதையும் வைக்கணும். இல்லையா? அதுக்கொரு சட்டம் இதுக்கு வேறயா?

//உனக்கு எனக்கும் தமிழ் பிடிக்கும் என்பதால் மற்ற மொழி பற்றி அவதூறு பேசுவது சரியல்ல.
அவதூறு ஏதுமில்லை. உண்மையைச் சொல்வது அவதூறு என்றால், பேதை, பெருந்தன்மையற்றவர் என்பதை எல்லாம் எந்தக் கணக்கில் வைக்க?

//உலகலாவிய கற்றவர்களுள் அதிகம் ஆராயாப்படும் படைப்புகள் அதிகம்(தமிழை விடவும்) கொண்டது சமஸ்கிருதம்.  
"தமிழை விடவும்". 
எந்த அடிப்படையில்? உன் ஒப்பீட்டுத் தரவு என்ன? கற்பனைகள், ஆசைகள் எல்லாம் செல்லாது. சமற்கிருதத்தின் மீது நடக்கும் ஆராய்ச்சிகள் எல்லாம் மொகஞ்சதாரோ, கீழடி, டைனோசர் எலும்புகள் போன்றவற்றின் மீது நடக்கும் புதைபொருள் ஆராய்ச்சி போலத்தான். சிலப்பதிகாரம் முதல் இன்றைய காவல் கோட்டம் வரை குண்டு குண்டு புத்தகங்களாக எழுதிப் படிக்கிறோமே, அந்த "சமற்கிருதம் கற்றவர்களை" இப்போ அப்படி ஒன்னு எழுதச் சொல்லேன் பார்ப்போம். எழுதவும் ஆளில்லை; படிக்கவும் ஆளில்லை. என்றோ இருந்ததை தோண்டித் துருவி செய்யும் ஆராய்ச்சி புதைபொருள் ஆய்வு போலத்தான்.

//நாம் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி எனும் பெருமை எனக்குண்டு.
இதுல உனக்கு என்ன பெருமை? 47ல் Radcliffe கோடு போடுகையில் கொஞ்சம் இந்தப் பக்கம் வலிச்சு போட்டிருந்தார்னா இன்றைய "நாம் பிறந்த நாட்டின்" சில பகுதிகள் "டுஷ்மன் டேஷ்" ஆகி இருக்கும். அந்தப்பக்கம் வளைச்சு இழுத்து இருந்தார்ன்னா, லாகூர் "மேரா பாரத் மகான்" பகுதி ஆகி இருக்கும். அவுரங்கசீப் காலத்தில் இன்றைய சில ஈரானியப் பகுதிகள் வரை ஆக்ரா/தில்லி ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அரபி, பெர்சியன், உருது மொழிகளுக்கும் நீ பெருமைப் பட வேண்டி இருக்கும். அதனால, "நான் பிறந்த நாட்டில் தோன்றிய மொழி" ன்னு ஓவர் செண்டிமெண்ட் ஆகாதே. யாதும் ஊரே, எல்லா மொழிகளும் மனித சாதனைகளே என்று இரு. எல்லைக் கோடுகள் எல்லாம் நாமாக கற்பனையாக போட்டுக் கொண்டவை.
உனக்கு சமற்கிருதம் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. உனக்கு மத/கடவுள் நம்பிக்கை இல்லை என்றும்  சொல்கிறாய். ஆக, மதச் சடங்கு மொழியான சமற்கிருதத்துடன் உனக்கு எந்த விதத்திலும் தொடர்போ அம்மொழியால்  உனக்கு பயனோ இல்லை. தொடர்பில்லாத ஒன்றில் நீ பெருமைப் பட என்ன இருக்கிறது? நீ பெருமைப் பட வேண்டியது தமிழில் பேசி, எழுதி, சண்டை போட்டு தமிழின் நீட்சிக்கு பங்களிப்பதற்கு. "நாம் பிறந்த" என்ற பெருமை இங்கே சரி, உண்மை.
மற்றபடி, யாதும் ஊரே, யாரவரும் கேளிர்; வழக்கொழிந்த மொழிகள் உட்பட எல்லா மொழிகளும் மனிதர்கள் கூட்டாக அடைந்த உன்னதங்களே என்று பெருந்தன்மையாக இருப்பதே சரி.

மனசிலாயோ.

* இனி அடிச்சு கேட்டாக் கூட இத்தலைப்பில் பதில் பேசமாட்டேன்னு ஒருத்தருக்கு சூடம் அடிச்சு உறுதி கொடுக்காத குறையாகச் சொன்னேன். அவர் சிரிப்பது கேட்குது.



Wednesday, September 05, 2018

பக்தி இயக்கத்தால் தமிழுக்குத் தீமைதான்

உள்ளூர் இலக்கியக் குழுவில் நடந்த உரையாடல்.

நண்பர் ஒருவர் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனின் கட்டுரை ஒன்றை பகிர்ந்து இருந்தார். கட்டுரையின் சாரம் தமிழுக்கு நேர்ந்த இருண்ட காலம் என்பது இந்த நூற்றாண்டின் பகுத்தறிவு இயக்கம்தான் என்றும் அதுவே உண்மையான களப்பிரர் காலம் என்றும், நல்லவேளையாக அந்தக் களப்பிரர் காலம் முடிந்துவிட்டது என்றும், இதுகாறும் தமிழைக் காத்து வருவது சமயமே என்றும் இருந்தது.

குழுவில் சிலர் அந்தக் கருத்தை ஆமோதித்தனர், மற்றவர்கள் அமைதியாக இருந்தனர். ஒருவர் மட்டும் உண்மையில் பக்தி இயக்கத்தால் தமிழுக்கு தீங்கே நிகழ்ந்தது என்றும், காதல், வீரம் மற்றும் பிற மனித உணர்வுகள் எதிலும் கவனம் செலுத்த விடாது முழுக்க "பஜனை" ஒலி மட்டுமே கேட்கும்படி 10ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை தமிழுக்கு அமையும்படி சமயங்கள் செய்து விட்டன என்றார்.

அந்த விவாதம் நீளமாகச் செல்லவே வேறு தலைப்புக்குள் சென்றுவிட்டோம். அந்த விவாதத்தின் போது நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இறுதிப் பத்தி மட்டும் புதுசு.

---------------------

[5:22 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    வைத்தியநாதன் தப்பாகச் சொல்கிறார்.
தடம் மாறிப் போய் வெறும் "போற்றிப் பாடடி"-ன்னு இருந்ததை மக்கள் மொழியாக்கி வளமாக்கியது பகுத்தறிவு/ தமிழியக்கம்.
தமிழைக் காப்பது சமயங்கள் அல்லவே அல்ல. தமிழை பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்வது சமயங்கள் தான்.
இங்கே அரசியல்/சமயம்  பேச வேண்டாம் என்பதால் ஞான் மேற்கொண்டு பேசலை.

ஆனாலும், வைத்தியநாதன் பேச்சு சரியில்லை.


[5:26 PM, 8/30/2018] நண்பர்1:
    பக்தி இலக்கியங்கள் 😂


[5:30 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    தங்களை வளப்படுத்திக் கொள்ள சமயங்கள் தமிழைப் பயன்படுத்திக் கொண்டது.

அந்தந்த சமயங்களுக்கு பயன்பட்டது. தமிழுக்கு சுமை.
காதல், வீரம், அறிவியல் என எதிலும் கவனம் செலுத்த விடாது வெறுமனே, "போற்றி பாடடி பொண்ணே" -ன்னு வெட்டியாக காலத்தை கழிக்க வைத்து தங்களை வளர்த்துக் கொண்டன சமயங்கள்.



[5:38 PM, 8/30/2018] நண்பர்1:
    சமஸ்கிருதம் இருக்க அதை தொடாது, தமிழை கையாண்ட புலவர்கள், தமிழுக்கு அணி செய்தவர்கள்! தமிழ் அவர்களை தொழுது ஏற்க்கும்.

  
[5:42 PM, 8/30/2018] நண்பர்1:
    பக்தி இலக்கியமே தமிழை 11 நூற்றாண்டில் இருந்து 20 வரை கடத்தி வந்தது. அறம் பக்தி சார்ந்தே, அறமே கல்வி. அறிவியல் கல்வி ஆனபினே, அறம் அவரவர் பார்வைக்கு ஏற்ப நிலை குன்றியது

[5:46 PM, 8/30/2018] நண்பர்2:
    மனம் ஒன்றை பற்றுவது மாற்ற இயலா விதி. அது கடவுளை பற்றினால் அது பக்தி, ஆண் பெண்னை அல்லது பெண் ஆணை பற்றினால் அது காதல், ஒரு சிலரை பற்றினால் அன்பு, உலகை பற்றினால் அருள்......

  
[5:52 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    10 நூற்றாண்டுகளுக்கு தமிழை அழுத்திக் கொண்டிருந்தது - தன் நலனுக்காக. தமிழுக்காக அல்ல.

பகுத்தறிவு/தமிழியக்கம் அதிலிருந்து விடுவித்தது.


[6:02 PM, 8/30/2018] நண்பர்1:
    பத்தி கடவுளையும் கேள்வி கேட்டது. தமிழியக்கங்கள் இறுதியில் சில பல சீமான்களையே எச்சங்களாக விட்டு சென்றது.

  
[6:13 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    சீமான்தான் உன் கண்ணுக்கு தெரிகிறார் என்றால் தவறு தமிழியக்கத்துடையதல்ல.


[6:18 PM, 8/30/2018] நண்பர்1:
    😂 இறுதியில்....

  
[6:53 PM, 8/30/2018] நண்பர்2:
    காதல், வீரம், அறிவியல், நீதி & அறம் இவை அனைத்துமே ஒரு மனிதனின் உணர்வுகளையும் அவன் சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கக்கூடியவை, தமிழில் இல்லாத நூல்களை இவைகளை பேச?

மனித உயிரினத்துக்குமட்டுமே வாய்க்கப்பெற்றது  ஆன்மிகம் மற்றும் மொழி. ஆன்மிகம் ஒரு மனிதன் தன் ஆன்மாவை(spirit  & soul ) எவ்வாறு உயர்த்தி அடுத்த நிலைக்கு செல்வது பற்றியது.. ஆன்மீகத்தால் நடைமுறை வாழ்க்கைக்கும் (material  life) எப்படி உதவும் என்று ஆராய்ச்சி  செய்வது எப்படி முடியும்.. ஒரு மனிதனின் அன்றடா தேவைகள் முடிந்தபின்பே உண்மையான ஆன்மிகம் தொடங்கும்

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு திருமூலர் எழுதிய திருமந்திரம் வெறும் போற்றிப்பாடும் பஜனை பாடல் அல்ல என்பது அதை முழுவதுமாக படித்து உணர்ந்தவர்களுக்கு தெரியும்

நான் போகாத ஊர் என்பதால் இல்லாத ஊர் அது என்று கூறும் பகுத்தறிவு படைத்த படைப்புகள் என்ன?

ஒரு மனிதன் அந்தந்த வயதுக்கு ஏற்ற முந்திரிச்சியும் வளர்ச்சியும் வேண்டும் வெறும் உடலளவில் மட்டும் அல்லது மனதளவிலும் கூட.. ஆன்மிகம் இல்லாத மனிதன்  20  வயதில் அரைத்த மாவையே 90  வயதிலும் அரைத்து கொண்டிருப்பான்.

உதாரணம் மானாட மயிலாட... அது அந்த பெரியவரின் தவறல்ல, அவரின் தமிழ் மேல் எனக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு ஆனால் பகுத்தறிவு பாதையால் அவரின் படைப்புகள் குறுகியவட்டத்தில் அடக்கிவிட்டதாகத்தான்  நினைக்கிறேன் (நான் அறிந்தவரையில்)


[7:28 PM, 8/30/2018] உள்ளூர்காரன்:
    இங்கே அரசியல் வேண்டாம்.

  
[7:35 PM, 8/30/2018] நண்பர்2:
    இதில் அரசியல் எங்கே  அய்யா இருக்கிறது?
நான் சொன்னது எல்லாம் நம் மொழிக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பும் அதை விளக்கி பார்க்கவேண்டியது இல்லை என்பதே !
நான் கூறிய உதாரணமும் சரியானதே.. அவருடைய அரசியல் கொள்கையை, கட்சியை  பற்றி விவாதிதிக்காதவரை


[5:24 AM, 8/31/2018] நண்பர் 3:
    அருமையான உரையாடல். தொடருங்கள்.

  
[6:38 AM, 8/31/2018] நண்பர் 4:
கலக்கிட்டீங்க!
நான் போகாத ஊர் என்பதால் இல்லாத ஊர் அது
அருமையான வரி, நவீன களப்பிரர்களுக்கு உறைக்கும் அடி.
அவரவர்களின் அனுபவம். பக்தியையும், பகுத்தறிவையும்  முழுவதுமாக உணராமல் விவாதம் செய்ய முடியாது. அதனால் இரண்டும் ஒன்றாகி விடமுடியாது.


[7:49 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    தனியா கம்பு சுத்தறது என்று தீருமோ.

அரசியல் பேசப் பிடிக்கும், ஆனால் இது தளமல்ல. ஆன்மீகம் பேசப் பிடிக்காது, இது தளமும் அல்ல என்பதால் மறுக்கிறேன்.



[8:03 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    சமயங்கள் எப்படி தமிழ்த் தொண்டாற்றின என்று சொல்லுங்கள், பேசலாம்.

என்னென்ன இலக்கண/இலக்கிய நூல்கள் எப்படி தமிழின் நலனுக்காக சமயங்களால் இயற்றப்பட்டன என சொல்லுங்கள் பேசலாம்.

என் நிலைப்பாடு, தமிழை சமயங்கள் தங்கள் நலனுக்கு பயன்படுத்திக் கொண்டனவே தவிர, தமிழ்த் தொண்டு என்று ஒன்றும் அதில் இல்லை என்பதே.

இன்றைய கிருத்துவ மிசனரிகள் போலவே சைவமும் தமிழைப் பயன்படுத்தித் தன்னை வளர்த்துக் கொண்டது. அவ்வளவுதான்.

தேம்பாவணி, சீறாப்புராணம் எல்லாம் இவ்வகையே.



[8:14 AM, 8/31/2018] நண்பர்1:
    எந்த படைப்பாளியும் காலம் கடந்து அவை போற்றப்படவேண்டும் என்ற நோக்கில் படைப்பதில்லை. அவை அனைத்தும் அவர் எண்ணங்களின் பதிவே, அவர் விரும்பிது/வெறுத்தது என படைப்பாளியின் பார்வை. அவர் காலம் கடந்த பின் நாம் அவற்றை தொகுத்து, தொடர்கிறோம்.
தொகுப்பதற்கு ஒரு காரணம் வேண்டும், பக்தியே நமக்கு பல அறிய படைப்புகளை தொகுத்து நாம்மை அடைய செய்தது, தமிழும் பிழைத்தது, இல்லாவிடில் தமிழ் 11 நூற்றாண்டை தாண்டியிராது.


[8:24 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
 
தப்பு.
11ம் நூற்றாண்டுக்கு முன் வந்த திருக்குறள் சிலப்பதிகாரம் மணிமேகலை எல்லாம் தாங்கள் சார்ந்த சமணத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை.

அந்நூல்கள் எல்லாம் பக்தியின் "உதவி" இல்லாமல்தான் 1000 ஆண்டுகள் கழிந்தும், இன்றும் தாண்டிக் கொண்டு இருக்கிறது.

கடைச்சங்க காலத்திற்கு பின் வந்த சமய "இலக்கியங்கள்" தமிழின் மீது பெரும் சுமையாக, வேறு எதிலும் கவனம் கொள்வதை தடுத்து விட்டது. தமிழ் அதையும் தாண்டி பிழைத்தது/கிறது.

சமயங்களுக்கு தமிழ் தேவைப்பட்டது. தமிழுக்கு சமயங்கள் சுமையாகவே இருந்து வருகிறது.



[8:30 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    ஏற்கனவே தாமதமாய்டுச்சு.

முடிந்தவர்கள் தொடருங்கள்.
சாயங்காலம் சேர்ந்துக்கறேன்.



[8:30 AM, 8/31/2018] நண்பர்1:
    😂 அவை அனைத்தும் மடங்கள்/ஆதினங்கள் வழியே மக்களை அடைந்தது

  
[9:07 AM, 8/31/2018] உள்ளூர்காரன்:
    எதன் அடிப்படையில் சொல்கிறாய்? என்ன தரவு? அதைக் காண்பி.
உன் கற்பனைகள் தரவு ஆகா.


[2:37 PM, 8/31/2018] நண்பர்2:
    நண்பர்1 கூறுவது சரியே.. உதாரணம் சம்ஸ்கிருதம்!  நடைமுறைவாழ்க்கைக்கு சமஸ்க்ரிதத்தில் இல்லாத நூல்களா சொல்லாத மனித உணர்வுகளா ? இருந்தும் மற்ற மொழிகள் அந்த இடத்தை நிரப்பினாலும் ஆன்மீகத்தில் மட்டும் இன்றும் உபயோகத்தில் இருப்பதே சான்று!
எத்தனை மொழிபெயர்ப்பு செய்தாலும் ஆன்மீகத்திர்ற்கும்   மொழிக்கும் உள்ள தொடர்பை அவ்வளவு எளிதாக மொழிபெயர்த்துவிடமுடியும் என்று தோன்ற வில்லை ..
நம் திருமந்தித்ரத்தையும் சிவபுராணத்தையும் என்தனைமுறை மொழிபேயர்த்தாலும் தமிழால் அதைஉணர்வதுபோல அமையாது


[8:59 AM, 9/1/2018] நண்பர் 3:
    மொழியை சமயம் தன் நலனுக்காக பிடிச்சுகிச்சு எனும் கருத்து ஏற்புடையதாய் இல்லை.  மற்ற வீர தீர செயல்கள் செய்ய விடாமல் தடுத்து விட்டது என்று சொல்வதும் அடுக்குமா எனத் தெரியவில்லை.  தமிழ் இலக்கணம் தொல்காப்பியனுக்கு முன்பே அகத்தியன் எழுதினான் என்ற குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.  அகத்தியன் யாரிடம் மொழியைக் கற்றான் என்றும் அறிஞர் பெருமக்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள்.  கம்பனின் உதாராணங்கள் விக்கியிலிரிந்து …  இதெல்லாம் ‘சும்மா’ என்று சட்டுனு பகுத்துஅறிந்து புறந்தள்ளிவிட முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

கம்பர் கருத்து[தொகு]
தொடர்புள்ள கம்பராமாயண மூலம்
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் - 47
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41
கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் - 38
விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D


[6:55 PM, 9/1/2018] உள்ளூர்காரன்:
    தொல்காப்பியருக்கு முன் இருந்ததாகச் சொல்லப்படும் அகத்தியம் நமக்குக் கிடைக்கவில்லை.
கிடைக்காத நூலைப் பற்றி அதன் ஆசிரியரைப் பற்றி அவரவருக்கு வசதியானவற்றை சொல்லிக் கொள்ள முடியும் என்பதால் அதை எப்படி ஏற்பீர்கள்?

எப்படி இருந்தாலும், அதே ஆசிரியர்தான் "அகஸ்திய" முனிவர் என்பது சரியாக வரவில்லை. தமிழிலேயே இல்லாத கிரந்த எழுத்தைக் கொண்ட ஒரு "முனிவர்"தான் தமிழ் இலக்கணமே எழுதிக் கொடுத்தார் என்பது மதவாதிகளின் பொருந்தாத் தற்பெருமையாகத் தெரியவில்லையா? அவர் மனைவி "லோபாமுத்திரை"யாம். தமிழ்ச் சொற்கள், பெயர்கள் லகாரத்தில் துவங்காது. பொய்யாவது பொருந்தச் சொல்கிறார்களா பாருங்கள்.

நீண்ட நாட்களாகவே இப்படி நம்மை குழப்ப முயற்சி செய்துகிட்டேதான் இருக்காங்க. நம்பாதீங்க. கலைஞர், தன் மகன் மு.க முத்துவை கொண்டு வர முயன்றது போலவே வீரசோழியம்-ன்னு எல்லாம் "தமிழ் இலக்கணம்" எழுதிப் பார்த்தார்கள். மு.க முத்து போலவே அதுவும் ஆகிப் போனது.

காக்கா தட்டிவிட்டு காவிரி உருவாக்கக் காரணமான அகஸ்தியர் என்பது போன்ற அறிவுக்கொவ்வாத கதைகளை விடுத்து தகவல்களை மட்டும் பார்ப்போம்.

* சிலப்பதிகாரம் போன்ற பெரும் காப்பியங்களைக் கூட விட்டு விடலாம். பொன்னியின் செல்வன் போன்ற கதைகள் கூட 10 நூற்றாண்டுகளுக்கு யாரும் எழுத மாட்டார்களா?
* ஏன் வெறும் அந்தாதிகள் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டன?
* மடாதிபதிகள், சமயக் குரவர்கள் தவிர்த்து எல்லோரும் தமிழைக் கண்டுக்காமல் விட்டுட்டாங்க.
* சங்க காலம் தொட்டு மக்கள் மொழியாக இருந்தது, திடீர்ன்னு வெறும் "போற்றி போற்றி" ஆகி விட்டது.
* ஒரே ஒரு பெரிய படைப்பு கூட 1000 ஆண்டுகளுக்கு "தற்செயலாக" வராது போயிற்று.

இதெல்லாம் தானாக நடந்தது என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது?

அந்நாட்களில் பொருளுதவி இருந்தால்தான் இலக்கியம், இலக்கணம் படைக்க முடியும். ஓய்வு நேரத்தில் தமிழ் படித்து அட்டகாசமான இலக்கியம் படைக்கலாம் என்பதெல்லாம் நடைமுறைக்கு முடியாதது. அன்றைய மிசனரிகள் மூலம் பொருளுதவி சமய நூல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. உதவி வேண்டும் என்றால் "பஜனை" பாடு, மற்றவற்றிக்கு எல்லாம் ஒன்னும் கிடையாது என்றால் எப்படி வேறு இலக்கியங்கள் படைப்பது?

20ம் நூற்றாண்டில் அந்தத் தளை உடைக்கப்பட்டது. மொழி மக்களிடம் வந்து சேர்ந்தது. "பஜனை" ஒலி நின்றது/குறைந்தது. அதுதான் வைத்தியநாதன்களின் கடுப்புக்கு காரணம்.




[7:11 PM, 9/1/2018] நண்பர் 4:
    1200 க்குப் பிறகு தமிழகத்தை ஆண்டவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி இரண்டாம் பட்சம் கூட இல்லை

  
[3:00 PM, 9/2/2018] நண்பர்2:
    ஆன்மீகத்தையும் சமயத்தையும்அடக்கிவிட்டு (நாத்திகத்தால்) தான் மற்ற விஷயங்களை வளர்க்க முடியும் என்பதிலிருந்தே தெரியவில்லையா மற்ற விஷயங்களின் நிலையற்ற தன்மையை?

வள்ளலார் அவர்கள் எந்த மன்னரின் பொருளுதவிக்காக திருவருட்பாவை எழுதினார் என்று கூறினால் நன்றாக இருக்கும்.  ஆன்மீகத்தை எழுதிய  பெருன்பாலான அன்பர்களுக்கு வேறு வருமானம்  இல்லாமல் சன்யாசிகளாக திரிந்ததானால்  தாங்கள்  எழுதியவகைகள் நிலைபெற்று அடுத்ததலைமுறைக்கும்  உதவ கல்லலிலும் தாமிரபட்டயத்திலும் வடிக்க மன்னனர்களை நாடினார்கள்

அவ்வாரு ஆதரித்த மன்னர்கள் மற்றவிஷ்யங்களை இல்லை என்று விளக்கிவிடவில்லையே.. தங்களை புகழ்ந்து  எழுதிய புலவர்களுக்கு சன்மானம் அளிக்காமலிருந்தார்கள்? (பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா இல்லையா என்ற ஆராய்ச்சி வேறு, அதற்க்கு 1000 பொற்காசுகள்  )  ஆனால் அவைகள் எல்லாம் அந்த மன்னன் அழிந்த உடன் அழிந்துவிட்டவை...

கடந்த 800 வருடங்களாக இந்தியா அந்நிய படையெடுப்பின் காரணாமாக அடிமை நாடாக வாழ்ந்துதான் மற்ற இலக்கியங்கள் வளராமல் போனதற்கு காரணம்.பக்தி இலக்கியங்கள் thappi  பிழைத்தார்க்கும் வளர்ந்ததற்கும் அதை படைத்தவர்கள் சாதாரண material  life விட மேலான ஒன்றின் மேல் ஈர்க்கப்பட்டதனால் மட்டுமே.

இன்னும் கூட எழுத ஆசைதான், நான் விவாதித்துக்கொண்டிப்பவரின் அறிவுக்கூர்மை என்னக்கு தெரியும். நான் மேலே கூறியவகையெல்லாம் அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்?  தூங்குபவர்களை மட்டுமே எழுப்பமுடியும் என்பதால் என் வாதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நன்றி !!!


[4:43 PM, 9/2/2018] நண்பர் 4:
    //அதை படைத்தவர்கள் சாதாரண material  life விட மேலான ஒன்றின் மேல் ஈர்க்கப்பட்டதனால் மட்டுமே.//
அருமையாகச் சொன்னீர்கள்!!


[2:03 PM, 9/3/2018] உள்ளூர்காரன்:
    800 ஆண்டுகள்.. அந்நியப் படையெடுப்பு.. அடிமை இந்தியா.. இதெல்லாம் "தமிழ் இலக்கியம் வளராததற்கு" காரணம்ங்கறீங்க. :)

வாதத்தை முடித்துக் கொண்டீர், வாதத்துக்கு நன்றி.

வள்ளலார், வைத்தியநாதன் பொரும்பும் 19ம் நூற்றாண்டு "களப்பிரர்" காலத்தவர். உங்கள் எடுத்துக்காட்டு செல்லாததாகி விட்டது.

மேலும், வள்ளலார் வசதியானவர். பசிப் பிணியே பெரும் பிணியென ஊருக்கெல்லாம் வெகு காலத்துக்கு சாப்பாடு போட்டு வந்திருக்கிறார். பொருளாதரச் சிக்கல் அவருக்கு இருந்ததில்லை. அதனால் அவர் உங்களுக்கு சரியான எடுத்துக்காட்டல்ல.

இந்தக் குழுவின் நோக்க எல்லைக்கப்பால் இருப்பதால், மதங்களைப் பற்றிய பேச்சுகள் வேண்டாம். ஒரு கோடி மட்டும் காட்டுகிறேன், ஆர்வம் இருப்போர் தேடிப் பாருங்கள்.

வள்ளலார் ஏன் எரித்துக்கொல்லப்பட்டார் எனத்தேடிப் படியுங்கள். சமயங்களின் இன்னொரு நன்முகம் புரியக்கூடும்.



[4:14 PM, 9/3/2018] நண்பர்2:
    இங்கே மதங்களை பற்றி பேசக்கூடாது என்றுதான் அமைதியாக இருந்தேன்... வள்ளலார் ஜோதியில் ஐக்கியமானதாகத்தான்   நான் படித்தவரை.. ஒரு சில நாத்திகர்களுக்குத்தான் (அவர் எரித்துக்கொள்ளப்பட்டார்) என்ற நினைப்பு.

  
[4:46 PM, 9/3/2018] நண்பர் 4:
    வள்ளலாருக்கும் இப்படி ஒரு நாத்திக முடிவு இருக்கா? நான் நந்தனாருக்கு மட்டும்தான் அப்படின்னு கேள்விப்பட்டிருந்தேன்

  
[4:51 PM, 9/3/2018] நண்பர்2:
    விட்டால் ராகவேந்திரரைஉயிரோடு அவர்களின் சாகாக்களே புதைத்தார்கள் என்றுதான் சொல்வார்கள்... அவர்களை சொல்லி குற்றமில்லை.. அவர்களக்கு தெரிந்தது அவ்வளவுதான்

  
[10:03 PM, 9/5/2018] உள்ளூர்காரன்:
    இன்றைய இந்திய தண்டனைச் சட்டப்படி தற்கொலையும் அதற்கு உதவுதலும் குற்றம். இராகவேந்திரர் போல ஒருவர் இன்று முயன்றால் தற்கொலை முயற்சிக்கும் அவரது மாணவர்கள் அதற்கு உடந்தையாக இருந்ததற்கும் வழக்கு பதிய வேண்டி இருக்கும்.

எக்காரணம் கொண்டும் தன்னுயிரை ஒருவர் மாய்த்துக் கொள்ளுவதற்குப் பெயர் தற்கொலையே.

சமயம், தன் நலனுக்காக மற்றவர்களைக் கொல்வதையோ ஒருவர் தன்னையே மாய்த்துக் கொள்ளச் செய்வதையோ காலகாலமாக செய்தே வருகிறது. மனிதர்களுக்கே இக்கதி எனும்போது மொழி எல்லாம் எம்மாத்திரம்?

வாடிய பயிரைக் கூட கண்ட போதெல்லாம் வாடிய பெருங்கருணையாளர் வள்ளலாரையே எரித்துக் கொன்றது சமயம். "ஜோதியில் ஐக்கியமாயிட்டார்" என்று அவரைப் பின்பற்றுபவர்களே சொல்லும்படி செய்திருக்கிறது.

"அருட்பெரும் சுடரே, தனிப் பெரும் கருணை" என்று சொன்ன வள்ளலாரின் சொற்களுடனேயே முடித்துக் கொள்வோம்.

தமிழையும், நம்மில் யாரையும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.



Sunday, April 08, 2018

ஒரு கதை சொல்லட்டுமா..



பெரியவர்களுக்கான பொதுவான மாத்திரையை சிறியவர்களுக்கு கொடுக்கும்படி வந்தால் என்ன சொல்வாங்க? முழு மாத்திரை தேவை இல்லைங்க, பாதியா உடைச்சு அரை மாத்திரை குடுங்க போதும்-ன்னு நம்ம ஊர்ல சொல்லிக் கேட்டிருப்போம், இல்லையா? அதாவது, தேவையைப் பொறுத்து அளவை மாற்றிக் கொள்வோம்.

அது மாதிரியே பாதியா வெட்டி அரை மாத்திரை எடுத்துக் கொள்ளும் எழுத்து வகை தமிழில் உண்டு.

குற்றியலுகரம்.

மேலே சொன்ன மாத்திரைக் கதை ஒரு புரிதலுக்காக. உண்மையில் தமிழில் மாத்திரை என்பது கால அளவு. ஒரு எழுத்து, ஒலிக்கும் நேரத்தைக் குறிக்க பயன்படுத்துவது. தோராயமாக, கண் இமைக்கும் நேரம், கை சொடுக்கும் நேரம் எல்லாம் ஒரு மாத்திரை என்பார்கள். இன்றைய அளவுப் படி கிட்டத்தட்ட அரை நொடி.
ஆச்சா?

தமிழின் குறில் எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள், மெய்யெழுத்துக்களுக்கு அரை மாத்திரை அளவு என்பது விதி.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

ஒரு கதை சொல்லட்டா?
உங்க மேல ஒருத்தி/ஒருவன் கிறுக்கா இருக்கறதா வைப்போம்.

ஒரு நாள், உங்க கிட்ட வந்து "உம்மேலே கிறுக்கு" அப்படின்னு சொல்றாள்/ன்.
நீங்களும் சொக்கிப் போயிடறீங்க.
அப்புறம்?

மேலே என்ன ஆச்சுன்னு ஆராயலாம் தான், ஆனா இப்போ நம்ம ஆர்வம் இருக்க வேண்டியது இலக்கணத்தின் மீது.

"உம்மேலே கிறுக்கு"
அந்தச் சொற்களில் உள்ள இரண்டு "உ" க்களையும் சொல்லிப் பாருங்கள். முதல் உ-வை முழுசாச் சொல்வோம். கிறுக்கு-ல் (கு=க்+உ) உள்ள "உ" பாதில நின்னுடும்.  சொல்லித்தான் பாருங்களேன். "கிறுக்உ" என்று ஒலிக்காது.

உங்க ஆளு சொன்னதுல, வெட்கத்தில குறுகிப் போய் நீங்க நிக்கறீங்களோ இல்லையோ, அந்த "உ" குறுகி நின்னுடும். இப்படிக் குறுகி, முழு மாத்திரை அளவுக்கு ஒலிக்காகாமல் அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம், குறுகிய + உகரம் = குற்றியலுகரம்.
அம்புட்டுதான்.

கதை சொல்லறேன்னு உங்க காதை வாங்கி இலக்கணம் சொல்வது தப்பா?
தெரியாது. ஆனா இன்னொரு குறிப்பு சொல்ல தெரியும்.

தெரியாது ->  இந்தத் "து"வில் உள்ள "உ" (து=த்+உ) முழுசா ஒலிக்குது. அதனால இது முற்றிய + உகரம் = முற்றியலுகரம்.

அவ்வளவுதான் குற்றிய/முற்றிய உகரங்கள்.

ஒரே கல்லுல இரண்டு மங்கா:
ஒரே கதையில குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்.

 ​#ஞாயிறு போற்றுதும்.