Wednesday, December 16, 2015

மீனாவுடன் மிக்சர் 26: வங்கக்கடலுக்கு வேப்பிலை அடிச்சாச்சா?

ஒரு மாசம் முன்னாடி தமிழ்நாட்டில் வெள்ளம் வரப்போகுது அப்படீன்னு யாராவது சொல்லியிருந்தா லூசாப்பா நீன்னு நிச்சயமா கேட்டுருப்பேன். எனக்கு நினைவு தெரிஞ்சு தமிழ் மக்கள்  நல்ல தண்ணியை கனவுல பாத்து ஏக்கமா பெருமூச்சு விட்டு தான் பழக்கம்.  சின்ன வயசுல காலையில் பல் தேய்க்கக் கூட தண்ணி இல்லாமல் பக்கத்துக்கு தெரு குழாயில் ஒரு பக்கெட் தண்ணி அடிக்க க்யூவில் நின்ன ஞாபகம் இன்னும் எனக்கு நெஞ்சில் பசுமையா இருக்கு. அப்படி தண்ணி லாரி பின்னாடி கலர் கலர் குடத்தோட பின்னங்கால் பிடரி ல இடிக்க ஓடற மக்களை மட்டுமே இவ்வளவு நாளா  பார்த்த தமிழ்நாட்டுல  இன்னிக்கு கரைபுரளும் வெள்ளமா? வெச்சா குடுமி இல்ல செரைச்சா மொட்டையா?  என்ன கொடுமைங்க இது கார்த்திகேயன் ?  (சும்மா ஒரு சேஞ்சுக்கு தான்.  எவ்வளவு நாள் தான் சரவணனையே புடுங்க முடியும்?)

எனக்கு ஒரு சந்தேகம்.  வங்கக்கடலுக்கு கூட சாமி வருமா?  சின்ன வயசுல கோவில் பூஜையில் ஒரு தாடி வச்ச அண்ணனுக்கு சாமி வந்து பார்த்து பயந்திருக்கேன்.  நம்ம பிரபு தேவாவுக்கு அவர் ஒண்ணு விட்ட அண்ணனோன்னு சந்தேகம் வரும்படியான அதே தாடி, அதே வேகம்! அந்த மாதிரி ஆட்டத்தை  இத்தன வருஷம் கழிச்சு இப்ப தான் மறுபடியும் வங்கக்கடல்ல பார்க்கறேன்.

சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஆனாலும் இந்த வங்கிக்கு (வங்கக்கடலை சுருக்கி நான் வச்ச பேருங்க) இவ்ளோ ஆக்ரோஷம் கூடாது.  அவரவர் கஷ்டப்பட்டு, கடனோ உடனோ வாங்கி கட்டின வீடும், வீட்டு சாமான்களும் தண்ணியில் மிதக்கரதுல அப்படி என்ன தான் சந்தோஷமோ?   மழை வந்தா காகித கப்பல் மிதக்க விட்டு நான் பாத்திருக்கேன்.  இப்போ ப்ரிஜ்ஜும் , டிவியும் மிதந்து போறதாமே? ரெண்டு வாரமா சாமியாடின வங்கிக்கு  வேப்பிலை அடிச்சு மலை இறக்கின அந்த முருகனுக்கு  என் கையால சர்க்கரை பொங்கல் பண்ணி நைவேத்தியம் பண்ணலாம்னு ஒரு எண்ணம் இருக்கு.  ஆனா அதுக்கான நேரம் தான் இல்லை.

வெளிநாட்டுக்கு வந்து குடி புகுந்துட்டாலும் அமெரிக்கவுல வாழற என்னை மாதிரி தமிழர்களுக்கு நம்ம ஊர் பாசம் ரொம்பவே அதிகம்.  ஒரு வாரம் தமிழ் நாடு அங்க வெள்ளத்துல மிதந்ததுன்னா இங்க நாங்க கை நகத்தை கடிச்சு குதறி எங்க டென்ஷனை குறைக்கறோம் அப்படீங்கற பேர்ல ஒரு சோகக்கடல்ல மிதந்தோம். .  ஊர்ல அம்போன்னு  விட்டுட்டு வந்த நம்ம சொந்தமெல்லாம் நல்லபடியா இருக்காங்களான்னு  தெரியாம விலை உயர்ந்த ஷாம்பூ போட்டு உறுவி எடுத்தது போக இருந்த மிச்ச நாலே நாலு தலை முடியை கஷ்டப்பட்டு ரெண்டு கையால பிச்சுகிட்டிருந்தோம்.  ஆனா இழுக்க இழுக்க வர்றதுக்கு இது என்ன துச்சாதனன் உறுவின புடவையா?   ஒரு நிமிஷத்துக்கப்புறம் இனி இழுத்தா மண்டை ஓடு தான்னு புரியவும் அடுத்தது என்ன செய்யலாம்னு ரூம் போட்டு யோசனை பண்ணினோம்.

அமெரிக்கா  போரவங்க எல்லாம் காப்பசீனோ குடுச்சிட்டு கால் நீட்டி உக்காந்திருக்காங்கன்னு தப்பா நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருத்தரா இருந்தீங்கன்னா எங்க வாழ்க்கை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. ஒரு சராசரி இந்தியனின் தினசரி அமெரிக்க வாழ்வில் அவருக்கு பல பல முகங்கள். அவரே வீட்டு தலைவர்/தலைவி, அவரே காரோட்டி, அவரே வீட்டை பெருக்கி, துடைக்கும் ஆள், அவரே  துணிகளை இஸ்தரி செய்பவர், அவரே குழந்தைகளை பராமரிப்பவர், அவரே ப்ளம்பர், அவரே தோட்டக்காரர்....மொத்ததுல அவரே ஒரு பாவமான ஜீவன்.   இதுல அவர் எங்க காப்பசீனோ குடிச்சு காலை நீட்டறது ?

ஆனா இதே 'பேக்கு' என்று செல்லமா அழைக்கப்படும் அயல்நாட்டு இந்தியர்கள்  நம்ம ஊர் மக்கள் யாருக்காவது கஷ்டம்னு மட்டும் கேள்விப்பட்டாங்க அவ்ளோ தான்.  வரிஞ்சு கட்டிண்டு  உதவ கிளம்பிடுவாங்க.  எங்கயோ போய் உக்காந்துண்டு எப்படி உதவுவீங்கன்னு கேக்கறீங்களா?  வேறெப்படி நிதி திரட்டி தான்.  இதுல மட்டும் எங்களை மிஞ்சிக்க ஆளே கிடையாது.  ஆ,வூன்னா டென்ட் போட்டு நிதி திரட்ட கூடிடுவோம்.

ரெண்டு நாள் முன்னாடி அப்படி தான். போற வரவங்களை எல்லாம் வந்து 10 டாலரை இந்த கல்லாப்பெட்டில  போட்டுட்டு ஆசை தீர பாடுங்க, ஆடுங்க நாங்க ரசிக்கரோம்னு அடிச்சு சொல்லி எங்க ஊர் தமிழ் சங்கம் செய்த சூப்பர் ஏற்பாடின் படி கலை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டி, தமிழ் நாட்டுக்கு வெள்ள நிவாரணியாய் அனுப்ப இருக்காங்க.  அமெரிக்காவின் எல்லா ஊருலேயும் தமிழர்கள் இது போல நிதி திரட்டி அவங்களால முடிஞ்ச உதவியை பண்ணறதா கேள்விப்பட்டேன்.  இந்த மனித நேயத்தை நினைச்சு பெருமை படாம இருக்க முடியலை.

எங்க ரிச்மண்ட் ஊர் மக்கள் இதோட விடுவாங்களா?  அதான் இல்லை. வெள்ளத்துல அடிச்சுண்டு போனது வீடு மட்டும் இல்லை, எல்லோரோட துணியும்னு யார் சொன்னாங்களோ தெரியலை.  உடனே அவங்க அவங்க அலமாரியை திறந்து கவுத்து போட்டு அவங்க போடற/போடாத, பிடிச்ச/பிடிக்காத. துணிகளை எல்லாம் அள்ளி போட்டு ஊருக்கு அனுப்ப தயாராகிட்டாங்க.  ஒரு வாரமா கர்ணப்பரம்பரைல வந்த அக்கம்பக்கத்து மக்கள் கொடுத்த துணி மூட்டைகளை பிரிச்சு அடுக்கினதுல என் தோழிகள் பலருக்கும் தூக்கத்துல கூட புடவையும், சல்வார் கமீசுமா கண் முன்னாடி வலம் வருதாம்.

பக்கத்து அறைல இருக்கற மிச்ச துணி மூட்டையை டப்பாவுல அடுக்கிட்டு அடுத்த வேலை வங்கிக்கு வந்த சாமியை மலை ஏத்தின குமரனுக்கு நைவேத்தியதுக்கு சர்க்கரை பொங்கல் செய்யறது தான்.

-மீனா சங்கரன் 

6 comments:

  1. மீனா சூப்பர் BLOG , அங்க நடக்கிற கூத்துகளைப் பார்த்தா நாம ஒரு பில்லியன் டாலர் குடுத்தாக் கூடப் பத்தாது போல இருக்குதே?

    ReplyDelete
  2. மீனா சூப்பர். இவ்வளவு எழுதிட்டீங்க, அப்படியே அம்மாவுக்கு ரெண்டு லட்சம் ஸ்டிக்கரும் அடிச்சு அனுபியிருந்தா அந்த ஆத்தாவும் வாழ்த்தியிருக்கும்…. ஹும்.

    முரளி

    ReplyDelete
  3. அதென்னவோ சரி தான் சத்யா. இருந்தாலும் ராமருக்கு ஒரு அணில் மாதிரி ஏதோ நம்மால ஆன சின்ன உதவி, அவ்வளவு தான். சிறு துளி பெருவெள்ளம்ன்னு சும்மாவா சொன்னாங்க?

    ReplyDelete
  4. இந்த மாதிரி சூப்பர் ஐடியா எனக்கு வராம இருக்குமா முரளி. :-) பெரியாத்தா என்னை வாழ்த்தரதும் அந்த வசிஷ்டர் வாயால ப்ரும்மஷி பட்டம் வாங்கரதும் கிட்டத்தட்ட ஒண்ணு தான். இதுக்கு முயற்சி செய்யரதுக்கு சென்னை மாங்காடு அம்மனுக்கு 100 குடம் பாலபிஷேகம் பண்ணினா அந்த ஆத்தாவாவது கண்ணை திறக்க சான்ச் இருக்கு. அதனால அனாவசியமா 2 லட்சம் ச்டிக்கரை ஏன் நாசம் பண்ணனும்னு தான் அந்த ஐடியாவை கை விட்டுட்டேன். :-))

    ReplyDelete
  5. மீனா,
    வச்சா குடுமி மாதிரியாக ரெம்ப காலத்துக்கு அப்புறமாக வங்கி போல கலக்கலாக இருக்கு. வேப்பிலை அடிச்சாங்க, ஆனால் காய்ச்சல் தான் குறைய வில்லை.

    ReplyDelete
  6. கின்னஸ் புத்தகத்துல போடற அளவு லேட்டா வந்து உங்க பின்னூட்டதுக்கு பதில் போடரதுக்கு நீங்க என்னை மன்னிக்கனும் வேதாந்தி. ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!