Friday, July 06, 2007

கல்விக்கு உதவுங்கள்

சமீபத்தில் செந்தழல் ரவி மூலமாக இன்னொரு இளைஞருக்கு கல்விக்கு உதவி தேவைப்படுகிறது என்று தெரியவந்தது. மேல் விவரங்களுக்கு வரவணையான் பதிவில் படித்துக் கொள்ளுங்கள்.

வரவணை பதிவில் இருந்து ஒரு பகுதி இதோ:

அந்த தம்பியின் பெயர் கௌதம் ( ராஜா முகமது) சென்னை திரைப்படக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார். தந்தை இவர் பிறந்த சில ஆண்டுகளில் தவறிவிட்டார். இவரையும் இவரின் தங்கையும் தாயார் சித்தாள் வேலை செய்து படிக்க வைத்தார். மேற்படிப்புக்கு சென்னை வந்த இந்த தம்பி பகுதி நேரம் உழைத்துக்கொண்டெ படித்துக்கொண்டிருக்கிறார் , அதில் வரும் வருமானம் அன்றாட செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இந்த ஆண்டு தன் கல்லூரிகட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தால் தன் படிப்பை நிறுத்துவதாக தெரிவித்தார் என்னிடமும் சுகுணா திவாகரிடமும்.

உங்களால் முடிந்த உதவி செய்யலாம்.

Thursday, July 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.



http://pkirukkalgal.blogspot.com/2007/07/12.html



- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

piththanp@gmail.com

Tuesday, July 03, 2007

ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...



வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்

மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்

வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்

இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)

அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்

பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்

-----

இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)

என்றும் அன்புடன்
சதங்கா

Saturday, June 30, 2007

வலைவலம்

கோடைகாலத்திற்கு நிறைய பேர் இந்தியாவிற்கு போய்விட்டு வருவார்கள். போகும்போதும், வரும்போதும் நேர வித்யாசத்தினால் பல தொந்தரவுகள். இந்த ஜெட்-லேகிற்கு ஒரு நிவாரணம் கண்டுபிடிக்க அர்ஜெண்டைனாவில் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான முயற்சி செய்கிறார்கள். அதுசரி தலைவலி போய் 'திருகு'வலி வராதா என்று கேட்காதீர்கள். அதைப்போல இந்த செய்தியை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று இந்த மருந்தைக் கேட்டால் நான் பொறுப்பில்லை.

மருத்துவர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அமெரிக்காவில் ஒரு புது ஊருக்கு போனவுடன் ஒரு நல்ல டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு உதவுகிறார் பாரதி இந்தப் பதிவில். பாரதி என்றால் முண்டாசுக்காரர் இல்லை. அவரது பதிவில் சில நல்ல வலைத்தளங்களை சுட்டியிருக்கிறார். அது மாதிரியான ஒரு தளம்தான் ரெவல்யூஷன் ஹெல்த். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அமெரிக்காவில் வலைஉலாவிற்கு AOL மூலம் வித்திட்டு பட்டை கிளப்பிய ஸ்டீவ் கேஸ்.

உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் பல மூலைகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டுமா - இந்த தளத்தில் பாருங்கள்.. எல்லா ஊருக்கும் போய் பாருங்கள். கஜுராஹோவிலேயே உட்கார்ந்து விட வேண்டாம்.(அங்கே இங்கே போய் 'அதே' இடத்துக்கு வரீங்களேன்னு பித்தன் குரல் விடுவது கேட்கிறது)

ஈபே கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியக் குடும்பம் ஒரு தலைகீழான ஈபே ஆரம்பித்திருக்கிறது. ஹம்ராஸ் தளத்தில் ஒரு பொருளை ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் எல்லாரைவிட குறைந்த விலைக்கு கேட்கவேண்டும். அது எப்படி என்கிறீர்களா? அந்த குறைந்த விலைக்கு நீங்கள் மட்டுமே கேட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு பொருளுக்கு இப்படி பேரம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1.20 - பத்து பேர்
1.23 - இரண்டு பேர்
1.24 - ஒருவர்
1.28 - மூன்று பேர்
1.39 - ஒருவர்

ஜெயிப்பவர் 1.24க்கு கேட்டவர். அவர் ஒருவர் மட்டும்தான் குறைந்த விலைக்கு கேட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அஸ்மத் மோனகன் எனும் தாயும் அவரது மகள்கள் ஆம்பரின், ஹென்னா. இதைப் பற்றி விவரமாக இங்கே படிக்கலாம்.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். ஏன் என்று தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும். நான் இங்கே பேரைச் சொல்லாமல் ஊரைச் சொல்கிறேன். நம் வலைப்பதிவில் எழுதும் ஒரு நபரின் ஊரில் நடந்த சம்பவம் மிக சுவாரசியமானது. கவிச் சக்கரவர்த்திக்கு எந்த ஊரில் சமாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாட்டரசன் கோட்டைக்காரர்கள் தவிர மற்றவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் கவிச்சக்கரவர்த்தி யாரென்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான் ஆளாளுக்கு அரசர், பேரசரர் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள். நான் சொல்லுவது கம்பரைப் பற்றி. ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம். அந்த சுவாரசியமான கதையை பிரபுவின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு Gods must be crazy யில் வரும் ஆதிவாசிதான் நினைவுக்கு வந்தான். அய்யய்யய்யய்யய்யய்.......


இப்படி ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார் ரவிசங்கர்.



புரியவில்லையா?

தமிங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டாமென்கிறார். ஆங்கில அடிமை என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் வேகமானது என்கிறார் ரவி. வேகமான முறை என்பதற்காகவே முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த விசைப்பலகையை பார்த்தால்தான் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.




ஆனால் இந்த முறை ஆங்கில மோகத்தைக் குறைக்குமென்றால், தட்டச்சும் வேகத்தை அதிகமாக்குமென்றால் கண்டிப்பாக அனைவரும் முயலவேண்டும். நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இப்போதே வலைபதிய உட்காரும்போது 'கருத்து' கேட்க வேண்டியிருக்கிறது. இதில் இந்த விசைப்பலகையை முயன்றால், 'கருத்து' 'புராணமாக' மாறும் அறிகுறிகள் வலுக்கின்றன.

கடேசியாக நமது வர்ஜீனியா மாவட்டத்தில் மோசமாக காரோட்டுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்த முறை கன்னாபின்னாவென்று ஓட்டி மாமாவிடம் மாட்டினால் நீதிபதி தீட்டுவது மட்டுமல்லாமல் மூன்று வருடங்களுக்கு தண்டல் கட்டவேண்டும். முழு விவரங்கள் இதோ.

Friday, June 29, 2007

ஔவையார் vs [க|வ]ம்பர்

ஒரு நாள், சோழன் அவையில் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது சொற் குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக் கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஔவையாரை ஆரைக்கீரையோடு ஒப்பிட்டு, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாகக் கூற, ஔவையார் கோபம் கொண்டார்.

கம்பரின் குறும்பினை புரிந்து கொண்டு அதே பாணியில் ஒரு பாடலைச் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.


எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா ?


தமிழில் 'அ' என்பது எண் 8 ஐக் குறிக்கும். 'வ' 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் 'அவ' என வரும். இந்த மாதிரி எழுத்தையும், எண்ணையும் தொடர்பு படுத்தி, வார்த்தை விளையாட்டுக் கவிதைகள் எராளம் உண்டு அக்காலத்தில்.

"அவலட்சணமே ! எமனின் வாகனமான எருமையே ! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே ! முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே ! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே ! அடே ! ஆரைக் கீரையைச் சொன்னாயடா !" என்று பொருள் பட பாடினார்.

டயலாக்ஸ்.. ரிலாக்ஸ்..

லைப்ரரியில்..


"சார்.. இந்த புத்தகத்துல கதைய காணோம்.. ஆனா எல்லா பாத்திரங்க பெயர் மட்டும் இருக்கு?"

"யோவ்.. நீ தான் அந்த டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனவனா?"
-------------------------------------------------------------------------

பார்க் அருகில்.

"ஏண்டா டிரைவிங் லைசன்ஸ புதைச்சுட்டிருக்க?"


"அது expire ஆயிடுச்சுடா"


-------------------------------------------------------------------------

ATM முன்.


"டேய்.. நான் உன்னோட பாஸ்வோர்ட்'ஐ பார்த்துட்டேன்.. அது ***** தானெ?"


"போடா முட்டாள்.. என்னோட பாஸ்வோர்ட் 12345"

-------------------------------------------------------------------------


[-- சுட்ட பழமானாலும், சுவைதானே!]

காய் காயா காய்த்திருக்கு

உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.

பாடல் :

படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்

படங்கள் :













Thursday, June 28, 2007

அரிசியை விட சிறிய யானை பார்த்திருக்கிறீர்களா ?

அன்பர்களே,

ஒரைகாமி, ஆரிகாமி ஏதோ ஒன்னு ! Origami நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தெரியாதவங்களுக்கு, நம் பள்ளிப் பருவத்தில் நாம் அனைவருமே இதில் ஈடுபட்டிருப்போம். அதாங்க காகிதத்தில கப்பலு, ராக்கெட்டு எல்லாம் செய்வோமே, அதே தான்.

கிரிகாமி (Kirigami) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னது கிருக்குப் புடிச்சிருக்கானு கேட்டு அடிக்க வராதீங்க ;-) காகித்தில் வெட்டி ஏதாவது உருவம் கொண்டு வரும் கலைக்குப் பேரு தாங்க Kirigami.

கீழே உள்ள you tube-ஐ play பண்ணி பாருங்க. சும்மா மனுசன் கத்தரியையும், காகிதத்தையும் வைத்துப் புகுந்து விளையாடுவதைப் பார்த்து அதிசயுங்கள்.



அரிசியை விட சிறிய யானை எப்படி வந்தது-னு பார்த்து அசந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு



-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா

Tuesday, June 26, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2007/06/11.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com