நான் கர்நாடக இசையில் ரசிப்பது தமிழ், தெலுங்கு, கன்னட கீர்த்தனைகள் மட்டுமே. ராகங்கள் பற்றிய ஞானம் இல்லாததால், பாடல் பொருள் தெரிந்தால் மட்டுமே முழுமையாக ரசிக்க முடியும் என்ற கட்சியை சேர்ந்தவன் நான். ஓரளவுக்குத் தெரிந்த இந்த மூன்று மொழிகளில் இருக்கும் பாடல்களே முழுதாகப் புரிவதில்லை. பிறகு எங்கே சுத்தமாகத் தெரியாத சமஸ்கிருதத்தில் பாடல் கேட்பது? அதனால் முத்துஸ்வாமி தீட்சிதர் எழுதிய பாடல்கள் பக்கமே போவதில்லை. சமீபத்தில் நான் ஒரு கர்நாடக இசையை ரசிப்பது குறித்து ஒரு வகுப்பில் சேர்ந்திருந்தேன். அந்த வகுப்பை நடத்தும் புண்ணியவான் பாலாஜி ஒரு முத்துஸ்வாமி தீட்சிதர் பாடலை அறிமுகம் செய்வித்தார். முத்துஸ்வாமி தீட்சிதர் பஞ்சபூத சிவ ஸ்தலங்களைக் குறித்து சில பாடல்கள் எழுதியிருக்கிறார். அதில் நீருக்கான ஸ்தலம் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில். அந்த ஸ்தலத்தின் பிண்ணனி, யானை, சிலந்தி கதையெல்லாம் நீங்களே இங்கே போய் படித்துக் கொள்ளுங்கள்.
என் கதைக்கு வருவோம். தீட்சிதர் இந்த ஸ்தலத்தை குறித்து எழுதிய ஜம்புபதே என்று துவங்கும் பாடலை யமுனாகல்யாணி ராகத்தில் அமைத்திருக்கிறார். சற்று அமைதியாக உட்கார்ந்து இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரு நதியின் ஓட்டம் போலவே இருக்கும். அர்த்தம் தெரியவேண்டும் என்று கூடத் தேவையில்லை. நீருக்கான ஸ்தலம், ராகம் ̀யமுனா̀ கல்யாணி! எல்லாம் தீட்சிதரின் விளையாட்டு. பாடலில் காவேரி, கங்கை, யமுனை நதிகள் எல்லாம் குறிப்பிடப் படுகின்றன. அந்தப் பாடல் அறிமுகமானதில் இருந்து ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குப் போக வேண்டும் என்று தீர்மானித்தேன். அதுவும் இன்னொரு நண்பியும், என் அண்ணன் மகளும் அந்தக் கோவிலின் அன்னை அகிலாண்டேஸ்வரியின் தாடகங்கள் குறித்து சிலாகித்திருந்தார்கள்.
திருச்சியில் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. வெயில் தாழ்ந்தவுடன் மாலையில் கோவிலுக்குப் போனோம். அன்று காலையில் பிரதோஷமாம். கூட்டம் அப்படி அலைமோதியது. சிறப்பு வரிசையில் சற்று கூட்டம் குறைவாகத் தெரிந்ததால், அதில் போய் சேர்ந்து கொண்டோம். வரிசை மெதுவாக நகர்ந்தது. சும்மாதானே நிற்கிறோம் என்று மனதில் ஜம்புபதே பாடல் வரிகளை அசை போட்டுக் கொண்டிருந்தேன். விரல்களும் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. சற்று நேரத்தில் பாடல் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. அந்த அளவுக்கு நமக்கு இசையில் சித்தி கிடைத்து விட்டதா என்று ஒரு ஆச்சரியம். ஏதேனும் கனவா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அப்போதும் பாடல் நிற்கவில்லை. திரும்பிப் பார்த்தால் என் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்மணி அந்தப் பாடலை வாய் விட்டுப் பாடிக் கொண்டிருந்தார். What are the odds!
ஜம்புபதே பாடலை சில மாதங்கள் முன்னரே முதல் தடவையாக கேட்டுவிட்டு, ஜம்புகேஸ்வரரை சேவிக்க கோவிலில் வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது, என் அருகில் யாரோ ஒருவர் ஜம்புபதே பாடிக் கொண்டு வந்தார் என்று சொன்னால் சும்மா ஜல்லியடிக்காதே என்பார்கள்.
அவர் பாடி முடித்தவுடன், அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டேன். அந்தப் பாடலினால்தான் அந்தக் கோவிலுக்கே வந்தேன் என்று என் கதையைச் சொன்னேன். அவர் ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தவராம். இப்போது பெங்களூரில் வசிக்கிறார். கூடவே அவருடைய கணவரும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். பக்கத்தில் இருந்த அவருடைய இளைய மகனிடம் நீயும் பாடுகிறாயா என்று கேட்டேன். அவன் வெட்கத்தில் நெளிந்தான். அவன் வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்கிறான் என்றார் அந்தப் பெண்மணி. ஶ்ரீப்ரியாவிடம் கற்றுக் கொள்கிறான் என்றார். அந்தக் கோவிலில் காசு கொடுத்து வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்வது இதுதான் முதல் முறையாம். எப்போதும் காலியாக இருக்குமாம். நேராகப் போய் தரிசனம் செய்வார்களாம். அந்தக் கோவிலில் பார்க்க வேண்டியவற்றை சொன்னார். ரங்கநாதர் கோவிலும், தாயுமானவர் கோவிலும் கட்டாயம் போங்கள் என்றார்.
அடுத்து அகிலாண்டேஸ்வரி சன்னதியில் இன்னும் அதிகக் கூட்டம். இங்கே சிறப்பு வரிசையில் விலையும் இருமடங்கு, கூட்டமும் அதிகம். அம்மன் தான் இங்கே பெரிய நட்சத்திரம் போலிருக்கிறது. இங்கும் வரிசையில் அந்தப் பெண்மணி கொஞ்சம் முன்னால் நின்று கொண்டிருந்தார். கையில் ஒரு பெரிய தட்டில் தாமரை மலர்கள். அவர் இங்கே அகிலாண்டேஸ்வரி பாடலை நிச்சயமாக பாடிக்கொண்டிருந்திருக்கக் கூடும். காதில் விழவில்லை.
மறுநாள் காலையில் நாங்கள் ஶ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து வெளியே கிளம்பும்போது, இந்தக் குடும்பத்தை மறுபடியும் சந்தித்தோம். அவர்கள் கோவில் உள்ளே போய்க் கொண்டிருந்தார்கள்.
அவரிடம் கேட்க மறந்த கேள்வி. இங்கே என்ன பாட்டு பாடப் போகிறீர்கள்? "ஏன் பள்ளி கொண்டீரய்யா"வா அல்லது "ரங்கநாதுடே"வா?? ரங்கபுர விஹாரா பாடல் கூட பாடியிருக்கலாம் என்பவர்கள் இரண்டாம் பத்தியை மீண்டும் படிக்கவும்.
அவரிடம் இந்தக் கேள்வியை கொண்டு சேர்த்து விடை கொண்டு வருபவருக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியும், என் மகளும்...