Thursday, December 15, 2016

கல்யாணமாம் கல்யாணம்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆனால் சொர்க்கத்திலேயே கல்யாணம் நடக்கும் என்று யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.ஆனால் செயற்கையாக மனிதன் தயார் செய்த சொர்க்கத்தில் ஒரு கல்யாணம் சென்ற நவம்பர் மாதம் 16 ம் தேதி  இனிதே நடந்தது அப்படி சொர்க்கத்தை உருவாக்கி தன் மகளூக்கு கல்யாணம் செய்தவர் பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி.இவர் மிகப் பெரிய சுரங்கத் தொழில் அதிபர் .எல்லாவற்றையும் விட இவர் ஒரு அரசியல்வாதி பி.ஜே. பி கட்சியைச் சேர்ந்தவர் இவருடைய சகோதரர்கள் இருவரும் அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரும் மாநில பி.ஜே.பி கட்சியின் முக்கியத் தலைவர்கள்.ஒருவர் பாராளூமன்ற உறுப்பினர். மற்றவர் முந்தைய எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இந்த ஜனார்த்தன ரெட்டியும் அமைச்சராக இருந்தவர்தான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மந்திரியாக இருந்தால் அது எவ்வளவு பெரிய குடும்பமாக இருக்க வேண்டும்  அதற்கு தகுந்த முறையில் எவ்வளவு கௌரவமாக திருமணத்தை நடத்த வேண்டுமோ அவ்வளவு கௌரவத்தோடு நடத்தி முடித்திருக்கிறார் திருவாளர் ரெட்டி.
 
திருவாளர் ரெட்டிக்கு இன்னொரு முகமும் உண்டு இவர் சில ஆண்டுகளுக்கு முன் பல வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யபட்டு சிறைவாசம் செய்துவிட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளீயே வந்தவர்  இன்னும் விசாரனை தொடங்கப்படாத வழக்குகளூம் இவர் மீது உண்டு.கர்நாடக மாநிலத்தின் வனத்துறை .ஆந்திர மாநில வனத்துறை இந்திய அரசாங்கத்தின் வணிக வரித்துறை.சுரங்கத் துறை, வருமான வரித்துறை., மாநில காவல் துறை இப்படி அநேகமாக எல்லா துறைகளூம் இவர் மீது வழக்கு போட்டிருக்கின்றன. எல்லா வழக்குகளூம் இன்னும் நிலுவையில் இருகின்றன.இவருடைய எல்லா வங்கிக் கணக்குகளூம் முடக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.இவருடைய தயவில் பல அரசியல்வாதிகள் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய வாய் வார்த்தையை சட்டமாகவும்,உத்தரவாகவும் ஏற்று மதித்து செயல்படும் பல தலைவர்கள் டெல்லியிலும் உண்டு.பெங்களூரிலும் உண்டு அப்படி இருக்கும் போது எத்தனை வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன என்று கேட்காமல் கேட்டிருக்கிறார் .ரெட்டி .முடக்கப்படாத வங்கிக் கணக்கிலிருந்து தன்னுடைய சொந்தப் பணத்தை எடுக்க கால் கடுக்க மணிக்கணக்காக ,அல்ல நாள் கணக்காகக் காத்திருக்கும் சாதாரண மனிதன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான் ரெட்டி 500 கோடி செலவு செய்து தன் மகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி முடித்திருக்கிறார்
திருமணத்துக்கான மொத்தச் செலவு 650 கோடி ருபாய் என்று கூறுகிறார்கள். சிலர் 500 கோடி என்கிறார்கள்.எப்படியும் ஒருராஜா வீட்டுத் திருமணம் எப்படி நடக்கும் என்று பெங்களுரு மக்களூக்கு நேரடியாகவே காட்டியிருக்கிறார். நவீன தொழில் நுணுக்கங்களை பயன்படுத்திய ரெட்டி பழங்கால முறைகளையும் கை விடவில்லை.

திருமண அழைப்பிதழ் மட்டுமே 6 கோடி ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டது என்றால் கேட்பவர்களுக்கு மூச்சு முட்டும்.அந்த  அழைப்பிதழை திறந்து நீங்கள் படிக்க வேண்டாம் அதுவே பேசும் பாடும் ஒரு பாட்டுடன் உங்களை திருமணத்துக்கு வரவேற்கிறது.
 பெங்களுரில் உள்ள மைசூர் மகாராஜாவின் அரண்மனையை ஒரு மாத காலத்துக்கு முன்பணம் கட்டி வாடகைக்கு எடுத்துக் கொண்டு அரங்க நிர்மாணம் தொடங்கியது ஹிந்தி சினிமா உலகத்தைச் சேர்ந்த கை தேர்ந்த கலைஞர்களின்,வழிகாட்டுதலில் 3000 தொழிலாளர்கள் ஒரு மாதம் வேலை செய்தார்களாம் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அந்த திருமணப்பந்தல் ஹம்பியில் உள்ள புரந்தரா கோயில் மாதிரியில் வடிவமைக்கப்பட்டது சுற்று வட்டாரம் முழுவதும் விஜயநகர அரண்மனை மாதிரியில் அமைக்கப்பட்டது. ஒருபழங்கால கிராமமே வடிவமைக்கப்பட்டது நுழை வாயிலிலிருந்து விருந்தினர்களை அழைத்து வர 40 மாட்டுவண்டிகள் செயல்பட்டன. வண்டியில் குஷன் வைத்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.

50000 விருந்தினர்கள் வருகை தந்தார்களாம். உணவுக்காக 60 கோடி ருபாய் செலவு செய்யப்பட்டது.நகரமெங்குமுள்ள மிகப்பெரிய ஸ்டார ஹோட்டல்களீல் 1500 அறைகள் புக் செய்யப்பட்டது .மாநிலத்தின் பல நகரங்களீலிருந்து விருந்தினர்கள் வர சொகுசு பேருந்துகள் பல இயங்கின உணவுக்கு மட்டும் 60 கோடி ருபாய் செலவு செய்து வந்த விருந்தினர்கள் அனைவரையும் நன்றாகவே கவனித்திருக்கிறார் ரெட்டி. .விருந்து முடித்து வெளியே வருவோருக்கு பான்பீடா கொடுகக பல லட்சம் செலவு என்றால் நமக்கு மயக்கம் வரும் அதையெல்லாம் விட முக்கிய செய்தி அந்த பீடாவை விருந்தினர்களுக்குக் கொடுக்க பம்பாயிலிருந்து 50 மாடல் அழகிகள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்... முக்கிய விருந்தினர்கள் பயணத்துக்கு ஹெலிகாப்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கேள்வி
விருந்தினர்களும் திருமணத்தில் வேலை செய்ய வரும் நபர்களும் தங்குவதற்கு, பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் 1500 தனி அறைகள் ரிஸர்வ் செய்யப்பட்டன திருமணப் பெண்ணுக்கு 40 லட்ச ரூபாயில் கூரைப்புடவை.15 கோடி ருபாய்க்கு நகைகள் என்று சொல்லுகிறது பத்திரிகைச் செய்தி..  

இன்னும் நம்ப முடியாத விவரங்களூடன் வந்த பத்திரிகைச் செய்தி எல்லோரையும் அது பற்றிப் பேச வைத்திருக்கிறது டெல்லியில் பாராளுமன்றமே இந்த திருமணம் பற்றி பேசியாகிவிட்டது என்றால் வேறு விவரங்களுக்குப் போவானேன் ? மற்ற விவரங்களூக்குப் போகாமல் மக்கள் இந்த திருமணம் பற்றி என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருந்தது 500 ரூபாய், மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அரசாங்கத்தின் ணை வந்த சமயத்தில் இந்த திருமணம் நடந்திருப்பதால் மக்கள் கருத்தைக் கேட்டறிய நல்ல வாய்ப்பாக இருந்தது வங்கியில் போட்ட தன் சொந்தப் பணத்தை எடுக்க கால் கடுக்க மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்த மக்கள் பொழுதை கழிக்கவும் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் வகையிலும் இதைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.

பேசிய யாரும் ஒத்த கருத்தை தெரிவிக்காதது தான் வேடிக்கை.நாம் சற்று பொறுமையாக இருந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் காத்துக்கொண்டிருப்பது பற்றி கவலைப் படக்கூடாது என்றார். ஒருவர் வங்கி ஊழியர்கள் மீது வசை பாடியவர்களூம் உண்டு.நூறு ரூபாய்க்கு நாம் மணிக் கணக்காக காத்துக் கொண்டு அல்லல் படும்போது ரெட்டிக்கு மட்டும் கல்யாணம் செய்ய கோடிக்கணக்காக பணம் எப்படி வந்தது என்றார் இன்னொருவர்... .

இதையெல்லாம் நாம் கேட்க முடியுமா ஸார் அவரவர்கள் வந்த வழி.பணக்காரர்கள் தங்கள் அந்தஸ்துக்கு தக்கபடித்தான் செய்வார்கள் அப்படி செய்தால்தான் மற்றவர்கள் பிழைப்பு நடத்தமுடியும் என்றார் ஒரு முதியவர் .இன்னொரு முதியவர் தன் நலெண்ணண்ணத்தை வெளீயிடும் வகையில் சொன்னதுதான் வேடிக்கை .அந்த கல்யாணப்பெண் நல்லாயிருக்கணும் ஸார் இப்படியெல்லம் ஆடம்பரமாகக் கல்யாணம் செய்தால் திருஷ்டி படும் ஸார் ஏனோ தெரியவில்லை இந்த பெற்றோர் களூக்கு இதெல்லாம் தெரிய மாட்டேன் என்கிறது என்றார் அந்த முதியவர்.சிலர் அவருடைய பேச்சை கேட்டு சிரித்தாலும் அவருடைய பேச்சில் இருந்த நல்லெண்ணம் எனக்கு தெளிவாகப் புரிந்தது
ஆக மொத்தம் எல்லோரும் அவரவர்கள் வயதுக்குத் தக்கபடியும்  உணர்ச்சி பொங்கவும் வசை பாடியும் பேசினாலும் யாரும் ஒரே கருத்தை தெரிவிக்கவில்லை...கால் வலி தீர நின்றுவிட்டு வங்கி ஊழியர் இன்று பணம் தீர்ந்துவிட்டது என்று அறிவித்த பின் .நாளைக்காவது சீக்கிரம் வந்து வரிசையில் நின்று பார்க்க வேண்டும் என்று கூறியபடி கலைந்தார்கள்
எல்லா காரியங்களுக்கும் நியாயம் பேசவும் காரணம் கற்பிக்கவும் யாராவது இருக்கும் வரை இப்படித்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் யாரையும் குறை சொல்லிப் பயன் இல்லை இதுதான் இந்தியா என்று எண்ணிக் கொண்டே நானும் நகர்ந்தேன்
                                              - மு.கோபாலகிருஷ்ணன்
.