Sunday, April 28, 2013

மேனேஜர் - பாகம் 1

குமார் படுக்கையில் புரண்டு படுத்ததும் சுளீரென்று வெய்யில் அவன் முகத்தில் அடித்தது. திடீரென்று எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். மணி 8:00. ஐயோ 7:43 மணி பஸ் போயிருக்குமே. இன்னிக்கு 8:15 மணிக்கு மேனேஜருடன் மீட்டிங் வேறு இருக்கே. இந்த அலார்ம் ஏன் அடிக்கலே? எத்தனை கனெக்டிங் பஸ் பிடித்து ஆபீஸுக்கு போக வேண்டுமோ என்று எண்ணிக்கொண்டே எழுந்திருக்கும் பொழுது “குட் மார்னிங் டார்லிங்” என்று சொல்லிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள் சந்தியா. 

“பாவம் அசந்து தூங்கிட்டு இருந்தீங்க. இன்னிக்கு 9:30 க்குத்தானே மீட்டிங்னு சொன்னீங்க? நான் தான் அலார்ம் க்ளாக்கை அணைச்சு ஒரு 5 நிமிடம் தூங்க விட்டுட்டு பெட் காபி எடுத்துக்கிட்டு வந்தேன். இந்தாங்க காபி சாப்பிட்டுவிட்டு பாத்ரூமில் எல்லாம் ரெடியா இருக்கு. சீக்கிரம் கிளம்புங்க. நான் ப்ரெக்பாஸ்ட் ரெடி பண்றேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றாள் சந்தியா. குமார் மடக் மடக்கென்று காபியை அவசரமாக குடித்துவிட்டு படுக்கையை விட்டு எழுந்து ஓடி பாத்ரூமுள் நுழைந்தான். 

அவனால் நம்பவே முடியவில்லை. ப்ரஷ்ஷில் பேஸ்ட் போட்டு ரெடியாக இருந்தது. அவசரமாக பல்லை தேய்த்துவிட்டு ஷவர் பக்கம் திரும்பினான். வாட்டர் ஹீட்டர் போட்டு வெந்நீர் வெளிவர ரெடியாக இருந்தது. ஷவர் ஸ்டாலில் நுழைந்து செட்டிங்கை வெதுவெதுப்பாக வைத்து குளித்து முடித்து ஸ்டாலை விட்டு வெளி வந்தான். டவல் ரெயிலிங்கில் புஸுபுஸுவென்ற இப்போது தான் ட்ரையரில் இருந்து எடுத்த டவல் தொங்கிக்கொண்டுருந்தது. உடம்பையும் தலையையும் துவட்டிக்கொண்டே பெட்ரூமுக்குள் நுழைந்து க்ளாஸெட்டை திறந்தான் குமார். நீட்டாக அயர்ன் செய்த சட்டையும் பேண்டும் டையும் ஹாங்கரில் ரெடியாக தொங்கிகொண்டிருந்தன. சட்டையையும் பாண்டையும் டையையும் அவசரமாக மாட்டிக்கொண்டு படியிறங்கி கீழே கிச்சனை நோக்கிச்சென்றான். டைனிங் டேபிளில் சுடச்சுட இட்டிலியும், மிளகாய்ப்பொடியும், சட்டினியும் ஆவி பறக்கும் பில்டர் காப்பியுடன் ரெடியாக காத்திருந்தது. “ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுங்க டார்லிங். நான் உங்க லன்ச் பாக் பண்ணிட்டிருக்கேன். இதோ வந்திடுவேன்” என்று சந்தியா குரல் கொடுத்தாள். குமார் வேகமாக இட்டிலிக்களை மென்று முழுங்கி, காப்பியையும் குடித்துவிட்டு வாஷ்பேஸினில் கை அலம்பி திரும்பினான். பின்னால் கை துடைக்க டவலுடன் சந்தியா காத்திருந்தாள். கையை துடைத்துவிட்டு திரும்பியவன் கையில் டிபன் காரியரை திணித்தாள் சந்தியா. “தாங்க்ஸ் டார்லிங்” என்று சொல்லிக்கொண்டே சந்தியா உதட்டில் குமார் முத்தமிட்டு மீதி சாயந்திரம் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான் குமார். “பை டார்லிங். மறக்காமல் நேரத்தில் லன்ச் சாப்பிடுங்க” என்றாள் சந்தியா.
டிபன் காரியரை விட்டு வெளியிலேயே வாசனை மூக்கை துளைக்குதே இன்னிக்கு என்ன லன்ச் டார்லிங்?” என்றான். “உருளைக்கிழங்கு கறி, வெங்காய சாம்பார், ரசம், காலிப்ளவர் கூட்டு, பப்படாம், ஸ்வீட்” என்றாள். “அடி சக்கை நேற்றே ஜோர்னா இன்னைக்கு அதைவிட படு ஜோர் லன்ச் பை டார்லிங்” என்று சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.


 குமார். வழக்கமாக நிற்கும் கும்பலைக் காணோம். 8:30 மணி பஸ்ஸும் போயிடிச்சா? சரி அடுத்த பஸ் எப்போ வருமோ? இன்னைக்கு மட்டும் ஆட்டோவில் போயிடலாமா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் சென்றான். மெதுவாக முதலில் நின்ற ஆட்டோவிடம் சென்று “என்னப்பா ஆட்டோ மவுண்ட் ரோடு L I C பக்கம் போகணும் வர்றியா?” என்று பயந்துகொண்டே கேட்டான். “என்ன சார் பஸ் போயிடுச்சா? கவலப்படாதீங்க. அடுத்த பஸ் இன்னும் 2 நிமிஷத்தில வந்திடும். நான் தான் உங்களை தினமும் பார்க்கிறேனே. எதுக்கு ஆட்டோக்கு குடுத்து வேஸ்ட் பண்றீங்க? பஸ் அதோ வந்திடிச்சு சார். கலக்கப்படாம போங்க சார்” என்று மரியாதையாக சொன்னான். 

பஸ்ஸில் ஏகப்பட்ட கூட்டம். பின் படிக்கட்டு வழியாக ஏறுவதற்கு இடமில்லை. “Backல ஏற முடியாதவங்களெல்லாம் frontல ஏறுங்க. நான் வந்து டிக்கட் கொடுக்கிறேன்” என்றார் கண்டக்டர். முன் படிக்கட்டு வழியாக முட்டி மோதிக்கொண்டு ஒரு வழியாக ஏறினான். கண்டக்டர் எல்லோரையும் தாண்டி முன்னால் வந்து “டிக்கட் டிக்கட் எங்க சார் போகணும்?” என்றார். “LIC” என்றான் குமார். “ஐயோ change இல்லையே. 10 ரூபாய் தான் இருக்கு” என்றான் குமார். “அதுனால என்ன சார். நோ ப்ராப்ளம். குடுங்க. நான் change தர்றேன்” என்று சொல்லி 10 ரூபாயை வாங்கி, டிக்கட்டை கிழித்து குமார் கையில் திணித்தார் மீதி சில்லரையுடன். “LIC எல்லாம் இறங்கு” என்று கேட்டவுடனே ஆபீஸுக்கு போகப் பறக்கும் பலர் மடமடவென்று இறங்க குமாரும் “அப்பாடா ஆபீஸ் வந்தாச்சு” என்று எண்ணிக்கொண்டே இறங்கினான். 

“கொஞ்சம் லேட். சரி மேனேஜரிடம் எப்படியாவது ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியதுதான்” என்று எண்ணிக்கொண்டே ஆபீஸினுள் நுழைந்தவன் எதிரில் மேனேஜர் வந்தார். “குட் மார்னிங் சார்” என்றான். “குட் மார்னிங் மிஸ்டர் குமார்”. “சார் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சார்” என்று சொன்னவனின் முதுகில் தட்டிக்கொடுத்து கை குலுக்கி “Congratulations மிஸ்டர் குமார்” என்றார். “என்ன சார் சொல்றீங்க?” என்று சொல்லி திரும்பினான் குமார். ஆபீஸிலிருக்கும் அனைவரும் குமாரை சுற்றி நின்றுகொண்டு “Congrats Kumar கங்ராட்ஸ் குமார்” என்று சொல்லி கைதட்டலுடன் சிலர் குமாரிடம் கை குலுக்க முன்னேறினர். குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சார் இது?” என்றான் மேனேஜரைப்பார்த்து. “மிஸ்டர் குமார் – நீங்க தான் இந்த ஆபீஸின் புதிய மேனேஜர். நான் இன்னும் 2 வாரத்துல நம்ம ஹெட் ஆபீஸுக்கு ஜெனெரல் மேனேஜராக ஜாயின் பண்ணப்போறேன்” என்றார், குமாருக்கு ஒன்றும் புரியவில்லை. “Congrats Kumar Congrats Kumar என்று ஒரே சத்தத்துடன் சிலர் குமார் முதுகில் தட்டினர். 
----- தொடரும்  

3 comments:

  1. கடேசி வரில தூக்கம் கலைஞ்சு ஏந்திரிப்பான்னு பாத்தேன். தொடரும்னு போட்டுட்டிங்க...

    நல்லா விறுவிறுப்பாதான் இருக்கு.

    டேய் ஆட்டோக்காரா - நீ அவ்ள நல்லவனாடா? :-)

    ReplyDelete
  2. Congrats Congrats என்று ஏன் சொன்னார்கள் என்று அறிய ஆவல்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. திண்டுக்கல்லாரே,

    அதுதான் மேனேஜராகராகருன்னு சொல்றாங்களே. அதுக்குத்தான் கங்கிராட்ஸ். எப்படி ஆனார்னுதான் அவருக்கே தெரியலை :-)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!