இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன்.  அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம்.  விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம்.  இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க.  இது ஒரு சோக கதை.  இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க.  ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான். 
 
பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன்.  விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு.  என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள்.  அது என்ன நகைக்கடை?   அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு.  அவளுக்கென்ன தெரியும்?  இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன்.  இருந்தா முடிய மாட்டேனா?  வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்?  சரி அது போகட்டும்.  சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன்.  என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன்.  இது வரையில் என் சபதம் வெற்றி தான்.  அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.   
 
என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன்.  திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம்.  எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.  என் போறாத நேரம்,  என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு.  சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45.   கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது. 
 
இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும்.  இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு.  வைத்தியரை பார்க்கும் அறை.  ஊசி போடும் அறை.  மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள்.  ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார்.  உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள்.  மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன்.  இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார்.  அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார்.  பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும்.  ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி.  பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?
 
என் விஷயத்துக்கு வருவோம்.  நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல  ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை.  சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று.  பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது.  அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம். 
ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது.  உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள்.  நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு.  அசந்தே போனேன் நான்.  இவரென்ன தீர்கதரிசியா?  நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை.  அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை.  அதுக்குள்ள அட்மிஷனா?  அரை நொடியில் வீல் சேர் வந்தது.  நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள்.  அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா  இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது.  சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை.  திடுக்கிட்டு போனேன்.  என்ன செய்யறது?  சரி நம்ம குடும்ப பாட்டை  பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு  எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது.  நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா. 
அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம்.  கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள்.  பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க.   எனக்கு பயங்கர சந்தேகம்.  இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு.  கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு  வாய் திறக்காமல் படுத்திருந்தேன்.  குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா?  உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார்.   கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன்.  உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு.  இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா?  சொகுசா தங்கிட்டு போக.  "அதெல்லாம் வேணாம் டாக்டர்.  நாலு மாத்திரை எழுதி குடுங்க.  நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன்.  ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர்.  "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்?  நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான்  கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது.  அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி.  திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு.  நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு.  அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க.  எது எப்படியோ வைத்தியர் நல்லவர்.  மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்.  அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
---------------------------------------
அவ்வளவு தாங்க என் சோக கதை.  கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.  
-மீனா சங்கரன்