நீங்க நம்ப மாட்டீங்க.  நானும் கடந்த சில மணி நேரங்களா ரொம்ப கடுமையா முயற்சி செய்யறேன்.  வீட்ல பல அறைகளில் உட்கார்ந்து பாத்துட்டேன் .  உட்கார்ந்திருந்த  நாற்காலியை மாத்தி பாத்துட்டேன்.  சோபாவில் சாய்ந்து மோட்டை வெறித்து பாத்துட்டேன்.  ஆழ்ந்த யோசனைக்கு அறிகுறியா விரல் நுனியால் மோவாய் கட்டையை தட்டி பாத்துட்டேன்.  வைரமுத்து கணக்குல குறுக்கும் நெடுக்குமா நடந்து பார்த்துட்டேன்.  ம்ஹூம் ..........பதிவுக்கு ஒரு நல்ல ஐடியா வரக்காணுமே!  நம்ம கற்பனை குதிரைய தட்டி ஓட விடலாம்னு பார்த்தா அது சுருண்டு படுத்து தூங்கிடுத்துங்க.
நாட்டுல மக்கள் அரைப்பக்கத்தில் அம்சமா கதையே எழுதறாங்க.  நமக்கு மட்டும் மைண்ட் இப்படி லைசால் ஸ்ப்ரே போட்டு தொடச்ச சமையல் மேடை போல இருக்குதேன்னு கவலையோடு  நான் ஜன்னல் வழியே தோட்டத்தை பாத்துண்டு இருந்த போது தான் அது மறுபடி கண்ணில் பட்டுது. பத்து நாளைக்கு முன்னாடி பூத்து குலுங்கிய எங்க வீட்டு செம்பரத்தி செடி இப்போ வாடி வதங்கி கொல்லையில் தொட்டியில கிடக்குது. 
முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேன்.  அந்த செம்பருத்தி செடி காலமாப்போனதுக்கு நான் காரணம் இல்லைங்க.  எங்க வீட்ல செத்துப்போன வேறு ஐந்தாறு செடிகளுக்கும் நான் பொறுப்பு இல்லீங்க.  ஊருல வேறு விதமா பேச்சு இருக்கும்.  ஆனா நீங்க நம்பாதீங்க.   நடந்ததை நான் வெவரமா உங்களுக்கு சொல்லறேன். 
என் கணவர் சில மாசங்களா அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறார்.  ஊரில் இருக்கும் போது சின்ன குழந்தைகளை பராமரிக்கிற மாதிரி செடிகளுக்கு தண்ணி விட்டு வளர்ப்பார்.  ஏன் நான் தண்ணி விட மாட்டேனான்னு கேக்கறீங்க, அப்படி தானே? விடக்கூடாதுன்னு எண்ணம் கிடையாதுங்க.  சின்ன வயசுல ஞாபக  சக்திக்கு சூரணம் குடுத்த போது நான் துப்பிட்டேன் போல இருக்கு.  எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி.  என் நினைவாற்றலின் மேல் நம்பிக்கையற்று தான் என் கணவர் தானே செடிகளுக்கு தண்ணி விட்டு, பூச்சி மருந்து அடிச்சு எல்லாம் செய்வார். 
போன மாசம் ரெண்டு வாரம் வெளியூர் போறதுக்கு முன்னாடி என்னைய உக்காத்தி வெச்சு எந்தச்செடிக்கு எத்தனை கப் தண்ணி விடணும்னு வெவரமா சொல்லிட்டு தான் போனார்.  இந்த  முறையாவது  இவர் ஊரிலிருந்து திரும்பும்போது வாய் பிளக்குமாறு நாலு இலை பச்சையாக இருக்கட்டும்னு நானும் ரெண்டு நாள் முனைஞ்சு விட்டேங்க.  மூணாவது நாள் செம்பருத்தி செடியோட இலைல கொஞ்சம் ஓட்டைங்க இருந்துது.  ரெண்டு தடவை அதை சுத்தி வந்து பாத்துட்டு யோசனையா நகந்து போயிட்டேன்.  அடுத்த நாள் முழு செடியிலும் பூச்சி கடித்து நம்மூர் சல்லடை மாதிரி ஓட்டைங்க.  
இது என்ன அனாவசியமான வம்பு?  இந்த செடிக்கு ஒண்ணுன்னா பழி என் மேலல்லவா வரும்? கவலையோட நிமிர்ந்து பார்த்த போது அறை மூலையில் இருந்த விண்டக்ஸ் கண்ணில் பட்டது.  ஆஹா, என் கை கொடுக்கும் தெய்வம்.  எல்லாக்கிருமிகளையும்  அழிக்கும் தீர்த்தம்.  இதன் வீரியத்துக்கு முன்னாடி எந்த பூச்சி ஜெயிக்கும்னு நினைச்சு  விண்டக்ஸ் பாட்டிலால் செடியை ஸ்ப்ரே பண்ணி விட்டு 'பகவானே நீ விட்ட வழி' அப்படின்னு போயிட்டேன்.  மொதல்ல எல்லா பூச்சியும் செத்து போச்சுங்க (நான் சொல்லலை இது வேலை செய்யும்னு?).  பிறகு எல்லா இலையும் உதிர்ந்து போச்சுங்க.  அப்புறம் செடியே வதங்கி, சுருண்டு படுத்துருச்சுங்க.  மனசு நிறைய துக்கத்துல அடுத்த ஒரு வாரம் நானே சரியா சாப்பாடு, தண்ணி இல்லாம வளைய வந்ததுல, மிச்சம் மீதி செடிகளுக்கு தண்ணீர் விட மறந்து போச்சு.  இது ஒரு குத்தமா?  நீங்களே சொல்லுங்க.  
ஊருக்கு போயிட்டு வந்து கோபமா என் மேல் பாய்ந்த கணவரிடம் நிச்சயமா சொல்லிட்டேன்.  அடுத்த பயணத்தின் போது வீட்டுல இருக்கிற எல்லா செடிகளையும் கூடவே எடுத்துட்டு போக சொல்லி.  இவர் பாட்டு ஊருக்கு கிளம்பி போக, இவர் தெரு முனை திரும்பறத்துக்குள்ள செடிகளெல்லாம் மறியல் போராட்டம் செய்து தற்கொலை முயற்சியில் இறங்கினா நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்க? 
-மீனா சங்கரன்