Saturday, March 15, 2008

கிராமத்து நடவு

கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு விழா போலத் தான் நடக்கும். உழவர்களும், மாடுகளும், சேறும், நாற்றும், நாற்று நடும் பெண்களும் ... அப்படியே ஒரு ரம்மியமான சூழல். அதைப் பற்றி ஒரு கவிதை "கிராமத்து நடவு".

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html

Friday, March 14, 2008

என் தமிழ்!

என்தமிழ் என்கின்ற போதில்
என்உயரம்ஓர் அடியேனும் கூடும்
தீந்தமிழ்பேர் சொன்னால் நாவில்
தீஞ்சுவை தேனாறாய் ஓடும்

என்றும் பதினாறவள் இளமை
அவள் அழகைப்பாடுவதே இனிமை
அள்ளக் குறையாத ஊற்று
அவள்பெருமைக் கேதிங்கே மாற்று

காற்றாகி என்னுள்ளே படர்ந்தாள்
பெருங்கடலாகி இதயத்தில் விரிந்தாள்
உள்ளங்கவர் கள்வன்போலே - என்
உதிரத்தி லேகலந்து நிறைந்தாள்

உச்சிமுகர்கின்ற தாய்போல் - உடைந்த
உயிருக்குத் தாலாட்டும் அவளே
என்னை மறந்தாலும் மறப்பேன் - ஆயின்
என்தமிழை மறப்பேனோநானே!


--கவிநயா

Thursday, March 13, 2008

அட நம்ம ஊரு..

இந்த வாரம் அலுவலகத்துக்கு சென்றபோது, என் மேஜையில் ஒரு வாரப்பத்திரிக்கை. முகப்பைப் பார்த்து ஏதோ நம்ப ஊர் பத்திரிக்கை என்று நினைத்துவிட்டேன். பார்த்தால் இங்கே வரும் ஒரு பத்திரிக்கை. ஓசியில் வந்து கொண்டிருக்கும் பத்திரிக்கை.



இந்தியக் கம்பெனிகள் விலைமலிவான வேலைக்கு மட்டுமில்லாமல் மற்ற கில்லாடி வேலைகளும் பண்ண துடிக்கிறார்களாம். ஆனால் அவர்களால் இன்னும் கில்லாடி வேலை பண்ண முடியாது என்று ஜல்லியடிக்கிறார்கள். படத்திலுள்ள அம்மணி பற்றி ஒன்றும் சொல்லக் காணோம் :-)

இந்த பத்திரிக்கை இரண்டு மாதமாக ஓசி சந்தாவை புதுப்பிக்காவிட்டால் மேலும் அனுப்பமாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். நிறுத்தினால் நல்லது என்று நிம்மதியாக இருந்தேன். பயமுறுத்துவதை நிறுத்திவிட்டார்கள்! நமக்கு இருக்கும் நாழிக்கு இரண்டு பக்கம் படிக்குமுன் மூன்று இதழ்கள் வந்து நிற்கின்றன.

அடி பெண்ணே !

டிஸ்கி: இது என் சொந்தக் கதை அல்ல. வெகு நாட்கள் முன் ஆ.வி.யில் படித்த ஒரு கதையும் (used at climax here), பின் நண்பர்கள், அவர்தம் நண்பர்களின் கதைகள் எல்லாம் கலந்து செய்து கலவை தான் அடி பெண்ணே ! படிச்சுப் பார்த்து புடிச்சிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க !!!

பி.கு.: எங்க ஊட்டுக்காரம்மா ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க, ஏன் இந்த மாதிரி விசயங்களில் பெண்கள் தான் தவறு செய்வார்களா ? பசங்க செய்றதில்லையா என்று ! ஏன் இல்லை, அது பற்றியும் ஒரு கவிதை எழுதி போட்டுறலாம் என்று சொல்லி, நல்ல வேளை கவிதையின் நாயகி யாரு என்று அவர்கள் கேட்கும் முன்னால எஸ்கேப்ப்ப்ப்ப் ....

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post.html

Wednesday, March 12, 2008

எங்கும் சுஜாதா, எதிலும் சுஜாதா...

வாரத்துக்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சி எனக்கு சுஜாதாவை நினைவூட்டாமல் இருந்ததில்லை.

எங்காவது அரிசி சிந்தியிருப்பதைப் பார்த்தால் சுஜாதா!

குதிரைக்கு வெகு அருகே சென்றால், சுஜாதா! (டாக்டர் குதிரைக்கடியா என்று ஒரு பெரிய புத்தகத்தை எடுப்பார். மனைவி உடனே - அதில் குதிரைக்கடிக்கு இல்லை என்பாள்! போன டாக்டரின் அனுபவம்)

ரோட்டிலோ ட்ரெயினிலோ விற்கும் தின்பண்டங்களைப் பார்த்தால் சுஜாதா! (அந்த பண்டம் வேண்டாம் - இஞ்சினுக்கு போடும் ஆயிலில் பண்ணியிருப்பான்!)

டைம் மெஷின் பற்றி எங்கு படித்தாலும் சுஜாதா! (கடவுள் வந்திருந்தார்).

திருப்பதி பற்றி பேசினால் சுஜாதா - 'திமலா'.

சாடிலைட் என்றால் சுஜாதா! வானத்தில் ஒரு மௌனத் தாரகை. (கூட அவர் கிளாஸ்மேட்டும் நினைவில்)

சினிமாவிலோ விமான நிலையத்திலோ கழிப்பறையில் காத்திருந்தால் சுஜாதா! " என் ராசி - எனக்கு முன்னால் இருப்பவன்தான் குடம் குடமாக போவான்" - நிர்வாண நகரம் என்று நினைக்கிறேன்

சிறுவர்களுக்கு மகாபாரதம் கதை சொல்லும்போது தர்மன் - யட்சன் விவாதத்தில் சுஜாதா!

யாருக்காவது கலைமாமணி கிடைத்தால், சுஜாதா! - சென்ற வாரம் நானும் லூஸ்மோகனும் கலைமாமணி பெற்றுக்கொண்டோம்.

சிங்கப்பூரில் ட்ரெயின்கள் நிமிடம் தவறாமல் வருகிறது என்று நண்பன் புகழ்ந்தால் - சுஜாதா(சொர்க்கத்தீவு - don't ask me!)

சாய்பாபா கலைஞருக்கு மோதிரம் கொடுத்தார் என்றால் சுஜாதா!(கடவுள் வந்திருந்தார்)

சிப்பாய் கலகம் அல்லது  பைராகி என்றால் சுஜாதா! (ரத்தம் ஒரே நிறம்)

குடகு காபித்தோட்டம் என்றால் சுஜாதா! (கதைப் பெயர் மறந்துவிட்டது - ஒருவர் மனைவி காணவில்லை என்று கணேஷ்-வசந்திடம் கதை பண்ணுவார்)

ஸ்காட்லண்ட் யார்ட் என்றால் சுஜாதா! (ப்ரியா)

அழகான நாய்க்குட்டியைப் பார்த்தால் சுஜாதா!(மீண்டும் ஜீனோ)

நியூட்டன் விதிகள் என்றால் சுஜாதா! (ஒரு கதையில் அவ்விதிகளை வைத்து விபத்துக்கு காரணம் யார் என்று கணேஷ் கண்டுபிடிப்பான்)

சமீப காலமாக, யாருக்காவது இருதய சிகிச்சை என்றால் சுஜாதா - சிகிச்சைப்பிறகு எடுத்த என் போட்டோவைப் பார்த்து சின்ன பசங்கள் பயப்படுகிறார்களாம்.

உங்கள் பட்டியலை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

மும்பையைச் சார்ந்த என் சக ஊழியரிடம் ஒருமுறை பெங்களூர் மற்றும் டெல்லி ஆட்டோக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் நாம் போகுமிடத்திற்கு வராமல் அவர்கள் போகுமிடத்தை சொல்லி அழைப்பார்கள் நினைவிருக்கிறதா? அவர் தனக்கு அந்த பிரச்சினை எப்போதுமே பெங்களூரில்
இருந்ததில்லை என்றார். ஆட்டோவை நிறுத்தி பனசங்கரி காவல்நிலையம் போகவேண்டும் என்பாராம். ஒரு மறுப்பும் வராதாம். அவர் வீடு காவல்நிலையத்திற்கு பக்கத்து வீடாம். "அப்படியா, என் அபிமான எழுத்தாளர் தமிழில் அப்படி காவல்நிலையத்து பக்கது வீட்டில் இருந்தவரை வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறார் என்றேன். தமிழ் சுத்தமாக தெரியாத அந்த மனிதரிடம் இருந்து வந்த கேள்வி - "யார் சுஜாதாவா?"

எனக்கு ஒரே ஆச்சரியம். சுஜாதா அந்த வீட்டில் அவருக்கு முன்னால் குடியிருந்தாராம்!

போன மாதம் மகனுடன் ஒரு வகுப்பிற்கு சென்றிருந்தேன். அந்த வகுப்பில் இன்னொரு இந்தியர் தன் மகளுடன் வந்திருந்தார். அவருடன் பேச்சு கொடுத்தபோது அவர் பெங்களுர் பி ஈ எல்'லில் பணிபுரிந்ததாகச் சொன்னார். உடனே நமக்கு வேறு என்ன தோன்றும்? - ரங்கராஜன் என்று ஒருவர் இருந்தாரே தெரியுமா? ஏதோ நமக்கு ரொம்ப தெரிந்தவர் மாதிரி! சுஜாதா அவருடைய மேலாளருக்கு மேலாளராம். எங்காவது வேலை நிமித்தமாக பயணம் செய்ய அனுமதி வாங்க சில சமயம் பேசியிருக்கிறாராம்.

நான் பெங்களூரில் பணிபுரிந்த சமயம் சதாசிவ நகரில் இருந்த எங்கள் அலுவலத்தின் வழியாக சிலமுறை சுஜாதா காரில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஒரு முறை எம்ஜிரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சிஆரெல்லிருந்து வெளியே வந்து பக்கத்தில் நடந்து வந்தார். அவ்வளவு அருகில் சுஜாதா! எனக்கு ஸ்தம்பித்து விட்டேன். சுதாரித்து, பேசலாம் என்று பார்த்தால் சட்டென்று காரில் ஏறி சென்று விட்டார்.

அப்போது பெங்களூர் அலுவலகத்தில் CASE Tools எழுதிக்கொண்டிருந்தோம். சரியாக ப்ரோக்ராம் எழுத வராதவர்கள் போய் மற்றவர்களுக்கு எப்படி எழுதுவது என்று ட்ரெய்னிங் கொடுக்க செல்வார்கள். அப்படி செல்பவர்களில் ஒருவர் ஒரு நாள் - that Rangarajan should be shot dead என்று கூவிக் கொண்டிருந்தார். என்னய்யா விஷயம் என்றேன். பிஈஎல்லில் ட்ரெய்னிங் போயிருந்தாராம். அப்போது அங்கே ஒரு ரங்கராஜனிடம் வாக்குவாதம். ப்ரோக்ராமர்கள் தாங்கள் எழுதுவதை அவர்களே டாக்குமெண்ட் செய்யவேண்டுமா வேண்டாமா என்று. நமக்கு நம்மை சொன்னால் கூட கோபம் வராது. சுஜாதாவைச் சொல்லிவிட்டால்? எனக்கு அதில் முரணான கருத்து இருந்தாலும் அந்த ஆளிடம் சுஜாதா சார்பாக அரைதினம் சண்டை போட்டேன். சுஜாதா பற்றி ஏதாவது சொல்லிவிட்டு யார் தப்பித்தார் நம்மிடமிருந்து. சதங்காவிடம் கேட்டுப் பாருங்கள். நம் பதிவில் சதங்காவிடம் பின்னூட்டத்தில் நடந்த சண்டை பற்றி தெரியுமா உங்களுக்கு?


சிறு வயதில் என் சகோதரர்களுக்குள்ளே கடும்சண்டை வர ஒரு காரணம் சுஜாதா புத்தகம் - யார் முதலில் படிப்பது என்று. முதலில் படிப்பவன் சத்தமாக சிரித்து சிரித்து மற்றவர்கள் வயத்தெரிச்சலை கொட்டிக் கொள்வான். சுஜாதா பற்றி நிறைய வாக்குவாதம் சகோதரர்களுக்குள் நடந்திருக்கிறது. என் சகோதரர்கள் அறிமுகப்படுத்தியதால் என் வகுப்பில் எல்லோரும் அம்புலிமாமா படிக்கும் வயதிலேயே  நான் சுஜாதாவுக்கு தாவிவிட்டேன்.

உயர்நிலைப்பள்ளியில் கலைக்கழகப் போட்டி நடக்கும். தமிழ்க் கட்டுரையில் - உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் - இந்த தலைப்பை விட அதிகமாக அரைத்த புளி ஏதாவது இருக்கிறதா? அதிலும் வழக்கம்போல திருவள்ளுவர் அல்லது பாரதி பற்றிதான் எல்லோரும் எழுதுவார்கள். நான் ஒருமுறை பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து சுஜாதா பற்றி எழுதிவிட்டு வந்தேன். என் அண்ணன்மார் எல்லாம் சிரி சிரி என்று சிரித்தார்கள். மறுநாள் போய் பார்த்தால் எனக்கு இரண்டாம் இடம்! உமாபதி வாத்தியார் சொன்னார் - "உயிரோடு இருக்கும் எழுத்தாளரைப் பற்றி எழுதியதற்காகவே உனக்கு இரண்டாம் இடம்". அப்படியும் முதலிடத்தை பாரதியே தக்கவைத்துக் கொண்டார். இப்போது அந்த வரிசையில் அநியாயமாக சேர்ந்து விட்டார் இந்த மனுஷனும்!


கல்லூரியில் ஆங்கில வகுப்பில் உனக்கு பிடித்த விஞ்ஞானக் கதையைப் பற்றி எழுது என்று ஒரு அஸைன்மென்ட். மக்களெல்லாம் அஸிமோவ் அது இது என்று பீட்டர் விட்டுக்கொண்டிருந்தார்கள். லைப்ரரியில் இருக்கும் ஒன்றிரண்டு புத்தகங்களும் போய்விட்டன. நமக்கு என்ன கவலை? மீரா பேனர்ஜி எல்லா தலைப்புகளையும் புரட்டி விட்டு திடீரென வாய்விட்டு படித்தார்கள்: A Silent Star in space - by Sujatha! நினைவில் இருந்த கதையை ஆங்கிலத்தில் சிறிதாக மொழி பெயர்த்து சேர்த்து ஒரு விமர்சனமும் எழுதி முடித்துவிட்டேன். மீரா பேனர்ஜிக்கு ஒரே ஆச்சரியம். தமிழில் சயன்ஸ் பிக்ஷன் கூட எழுதுகிறார்களா என்று? மீரா பேனர்ஜி மேடம் கூட சென்ற மாதம்தான் காலமானார்கள்.

இதில் வருத்தமான விஷயம் மெக்ஸிகோ தேசத்து சலவைக்காரி ஜோக். மனுஷன் சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டார் என்று ரவி திருவேங்கடத்தான் கூட மின்னஞ்சலில் புலம்பியிருந்தார். அடுத்த ஜென்மத்தில் சொல்வாரா என்று பார்த்தால் மனுஷன் எங்கே திரும்பி வரப் போகிறார், அரங்கன் காலில் போய் ஐக்கியமான பிறகு? குட் பை, சுஜாதா! உங்களாலான சின்ன உதவி - சமயம் கிடைக்கும்போது அரங்கன் செவியில் ராஜேஷ் பற்றி கொஞ்சம் போட்டு வையுங்கள்.

Monday, March 10, 2008

சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா காலமாகிவிட்டார் என்பதை நாகுவின் பதிப்பில் பார்த்தவுடன் எனக்கு சில நிமிடங்கள் ஏதும் செய்யத் தோன்றவில்லை. இது வெறும் வதந்தி என்ற செய்தி வரக்கூடாதா என்ற ஏக்கம் அடிமனதில் குடைந்து கொண்டிருந்தது நிஜம். காலனின் கணக்கை யார் அறிவர். அவர் சிவாஜி படத்தில் எழுதிய ஒரு வசனம், "சாகிற தேதி தெரிஞ்சுட்டா, வாழற காலம் நரகமாயிடும்". அது முற்றிலும் சரி. ஆனால் இதைத்தான் மயான வைராக்கியம் என்கின்றனர் பெரியோர்.


பொதுவாக கதை படிக்கும் ஆவலை எனக்குள் புகுத்தியது எனது சகோதரர்களும் எனது சகோதரியும் அது ஒரு சுவாரசியமான முயற்சி அதைப் பற்றி பிறகு ஒரு கிறுக்கலில் தொடருகிறேன். எனக்கு சுஜாதாவின் எழுத்தை அவர்கள் அறிமுகம் செய்தது நடந்து ஒரு 30 வருடங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய நைலான் கயிறு நாவல்தான் நான் முதலில் படித்த அவருடைய படைப்பு. கதையின் கட்டமைப்பு, அதில் தனியாக வரும் கணேஷின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, வார்த்தைகளில் சொல்லி விளக்க முடியாதது. அவருடைய அந்தக் கதை அந்தக் காலத்தில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனை. மோர் குழம்பில் இருக்கும் வெண்டைக்காய் போல சவ சவ என எழுதி வந்த பலருடைய பதவிக்கு வேட்டு வைத்து தனக்கென மிக பெரிய ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்த ஒருவர் சுஜாதா.

இவருடைய படைப்புகள் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். சில எனது கையிருப்பிலும் இருக்கிறது. என்னைப் போல பலருக்கும் கணிப்பொறியை (கம்ப்யூட்டர்) அறிமுகம் செய்து வைத்த புண்ணியவான். மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை இப்போ சொல்றேன், அப்பறம் சொல்றேன்னு சொல்லி கடைசிவரை சொல்லாமல் ஏமாற்றியவர். கணேஷ் வசந்த் என்ற இரு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்கள் நிஜம் என்று பலரையும் நம்ப வைத்தவர். அதில் வசந்த் கதாபாத்திரம் பற்றி பல அபிப்ராய பேதங்கள் இருந்த போதும் அதைப் பற்றி கவலைப் படாதவர். மேடை நாடகங்களில் மாற்றங்களை சர்வ சாதாரணமாக கொண்டு வந்தவர். இவருடைய மறைவு தமிழுக்கு கண்டிப்பாக ஈடு செய்ய முடியாத மிகப் பெரிய இழப்பு.

கணையாழியில் வந்த இவருடைய கடைசிப் பக்கங்கள் என்னை கிறுக்கல்கள் எழுதத் தூண்டியதும் நிஜம். இவரை தனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவராக என்னைப் போல பலரும் கருதுவதும் நிஜம். இவரது பாதிப்பில்லாமல் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதும் நிஜம். நாகு குறிப்பிட்டது போல், சிறுகதை, நாவல், நாடகம், சங்க இலக்கியம், அறிவியல் என்று எல்லாத் துறையிலும் கால் பதித்து தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்தவர்.

இவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

- பித்தன்.


Wednesday, March 05, 2008

அபார்ட்மென்ட் எண் 26

அபார்ட்மென்ட் பத்தி ஒரு செய்தியைக் கதையாய் எப்படி சொல்லலாம் என்று எண்ணி, ரொம்ப நாளா எழுதணும் என்று நினைத்து இப்ப தான் நேரம் கிடைத்தது. எழுதியிருக்கிறேன், வந்து படிச்சு பார்த்து உங்க கருத்துகளச் சொல்லுங்க.

http://vazhakkampol.blogspot.com/2008/03/26.html

Tuesday, March 04, 2008

சின்னக் கண்மணி…

பட்டுப்பா வாடை கட்டி
பச்ச மரு தாணி வச்சு
பட்டுக் கன்னம் பளபளங்க
பச் சரிசிப் பல்லு மின்ன

சின்னப் பெற நெத்தியிலே
செந் தூரப் பொட் டொளிர
வன்னப் பிஞ்சுப் பாதத்துல
வெள்ளி மணிக் கொலு சொலிக்க

சுத்திஜொ லிக்கும் கண்ணு
சூரி யனத் தோக்கடிக்க
கத்திக் கல கலக்கும்
கைவளையல் கதைகள் பேச

தத்தி நடை பழகும்
தங்கப் பொண்ணே தங்கப் பொண்ணே
கொத்திக்கொத்தி என் மனச
கொள்ளை கொண்ட சின்னப் பொண்ணே

மோகமுல்லச் சிரிப்பக் கண்டு
சோகந் தொலஞ்சு போச்சுதடி
பால்நெலவின் குளிர்ச்சி யிலே
பார மெல்லாங் கரைஞ்சதடி

ஒன்னழகப் பாக்கையிலே
உள்ளம் உருகிப் போகுதடி
வாரி ஒன்னக் கட்டிக்கத்தான்
வாஞ்ச மீற ஏங்குதடி


--கவிநயா

Monday, March 03, 2008

ஷ்யாம்!

பரதேசியாரே - அமெரிக்கர்களும் மற்றவர்களும் நம்ப ஊரில் சேலை கட்டுவது இருக்கட்டும். இங்க நம்ப சங்கத்து குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் எல்லோருக்கும் சாந்து பொட்டும், சந்தனப் பொட்டும் வைக்கிறானே, கவனித்தீர்களா? வெங்கட், வித்யா தம்பதியினரின் இளைய குட்டி ஷ்யாம் பற்றித்தான் சொல்கிறேன். நம் ஊர் செய்தித்தாளில் வந்த இந்த செய்தியைப் பாருங்கள்.

நான் அடுத்த முறை ஷ்யாமைப் பார்க்கும்போது ஒரு ஆட்டோகிராப் வாங்கி வைத்துக்கொள்ளப் போகிறேன். சின்ன வயதிலிருந்தே டென்னிஸ் மட்டையும் கையுமாக இருந்த ஷ்யாம் இப்போது டென்னிஸ் கோர்ட்டில் 'சும்மா அதிருதுல்ல..'ன்னு சொல்லாமல் சொல்கிறான். இவன் பெயரை சொல்வது கஷ்டமா, இவன் கூட விளையாடுவது கஷ்டமா என்று எல்லோரும் விழிக்கப் போகிறார்கள். மேலும், மேலும் டென்னிஸ் உலகில் உயர எங்கள் வாழ்த்துக்கள்.
அது எல்லாம் இருக்கட்டும். வெங்கட் அவர்களே - செய்தித்தாளில் போட்டிருக்கிறதே அது யார் மீனா? :-)

டென்னிஸோ டென்னிஸ்


எல்லாம் இந்த ஸானியா மிர்ஸாவினால வந்த வினை - புடவையோடு தான் டென்னிஸ் ஆடணும்னு ரூல் போட்டுவிட்டாங்க. என்ன பண்றது?