Friday, December 14, 2012

பாரதியின் கடிதம்

பாரதியாரை விட ஏழாண்டுகள் இளையவர் பரலி .சு .நெல்லையப்பர் அவரை தன்னுடைய அருமைத் தம்பியாகவே கருதி நேசித்தார். அவருக்கு  பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். பாரதியின் தமிழ் பற்றை தன் மொழியை அவர் நேசித்த பாங்கை புரிந்து கொள்ள அந்த கடிதம் பயன்படும்.



          ஓம்
புதுச்சேரி 
19 ஜுலை 1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக

தம்பி – மாதத்துக்கு மாதம் , நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக்கமலத்திலே பேரறிவாகிய உள் – ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து,

அந்த பாஷைப் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்து கொள்ள முடியுமானால் தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மையுண்டாகும், தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க ஆனால் புதிய செய்தி, புதிய யோசனை . புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் -  தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும்

தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு ! ஏறு ஏறு  மேலே மேலே மேலே!


நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ !
பற. ! பற ! - மேலே மேலே மேலே!
**


தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது 

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி ! சக்தி சக்தி என்று பாடு

தம்பி – நீ வாழ்க

**
உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே ஜவாப் எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு  நாட்டுபாட்டுக்கள் அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞானபானுவிலும் ப்ரசுரம் செய்வித்திடுக. புதுமைப்பெண் என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் நமக்கனுப்புக. 


தம்பி – உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

                                                                                                 உனதன்புள்ள
                                                                                                  பாரதி


19-7-1917 அன்று பாரதி புதுச்சேரியிலிருந்து எழுதிய கடிதம்.


 டிசம்பர் மாதம்  பதினோன்றாம் நாள் பாரதியின் பிறந்த நாள் அதை முன்னிட்டு ஒரு கட்டுரை எழுதி அனுப்ப  வேண்டும் என்று முயற்சி செய்தேன். வேறு சில கடமைகள் காரணமாக நேரத்தை ஒதுக்கி உட்கார முடியவில்லை அதனால்  சமீபத்தில் நான் படித்த பாரதி  கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறேன். இந்த கடிதம் பாரதி பாண்டிச்சேரியில் இருக்கும்போது பரலி சு நெல்லையப்பருக்கு எழுதப்பட்ட கடிதம்.
- மு. கோபாலகிருஷ்ணன்







Friday, December 07, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 5

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 5




லாங் டாய்லட்டா  ஷார்ட்  டாய்லட்டான்னு எப்படி தான் கண்டுபிடிப்பாங்களோ? உள்ளே மெஷின் வெச்சு இருப்பாங்க போலிருக்கு.

1 ரூபாய் கொடுத்துவிட்டு லாங் டாய்லட் போனால் தண்ணிய பாதியில் நிறுத்தி விடுவாங்களோ இல்ல கதவை திறந்து விரட்டிடுவாங்களோ தெரியலியே!


Thursday, November 29, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 4

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 4

அட, பழைய சோற்ற கூட இப்படி நம்பர் போட்டு விக்கிறாங்களே நம்ம ஊரில்.










Tuesday, November 20, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3



இவரு என்னைக்கு லீவு முடிஞ்சு திரும்பி வந்து மீட்டிங்க்ல பேசி வோட்டு கேட்கப்போறாரோ. அதுக்குள்ளே எலக்ஷனே முடிஞ்சிடும்.

Sunday, November 18, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 2

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 2






பிரசவ ஆஸ்பத்திரின்னு சொல்றாங்களா இல்ல குட்டி கரடி கடைன்னு சொல்றங்களா ? தாங்க முடியலப்பா

Saturday, November 17, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 1

சென்னை மாம்பலம் ரயில் நிலையம் வாசலில் வைத்துள்ள அறிவிப்பு(சிரிவிப்பு). ஆக்ஸ்போர்டில் படித்திருப்பார்களோ?

Tuesday, November 13, 2012

ரிச்மண்டில் கொலு வலம் - 2012

ரிச்மண்டில் 2012 - கொலு வலம்

போன வருஷம் கொலுவுக்கு போகலைன்னு இந்த வருஷம் சூப்பரா ஒரு ரவுண்ட் போய் கொலு பார்த்துட்டு சுண்டல் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.  ஏங்க ஒரு ஆளு குடும்பத்தையே கூட்டிண்டு வரானேன்னு ஒருத்தர் வீட்லயும் எனக்கு goodie bag அதாங்க வெத்தலை பாக்கு பை, கொடுக்கலீங்க.  சரி சரி உனக்கு சுண்டல் ஸ்வீட்டே ஜாஸ்தின்னு யாரோ கொரல் விடரது கேக்குது.  இதெல்லாம் சகஜமப்பா....

எல்லார் வீட்டு கொலு ஃபோட்டோவும் இங்க போடலை, சாஸ்திரத்துக்கு ஒரு வீட்டு கொலுவுக்கு ஒரு ஃபோட்டோ போட்டுட்டு மீச்சம் இருக்கர ஃபோட்டோக்களை பிக்காசாவுல போட்டு ஒரு லிங்க் இந்த பதிவோட கடைசீல போட்டு இருக்கேன்.  அது மட்டும் இல்லாம, ரிச்மண்டில் கொலு வெச்சிருக்கர எல்லார் வீட்டுக்கும் நான் போகலை.  காரணம் அவங்கள எனக்கு தெரியாது இல்லைன்னா மாலதி மட்டும் தனியா போயிட்டு வந்திருப்பாங்க.  நான் போயிருந்த கொலுவைப் பத்தி மட்டும்தான் எழுதியிருக்கேன்.   நாகு கிட்ட சொல்லி அப்படி விட்டுப் போயிருக்கர கொலுவைப் பத்தி அவரை ஒரு பதிவு எழுதச் சொல்லிக் கேக்கரேன்.

மொதல்ல எங்க வீட்டு கொலுல இருந்து ஆரம்பிக்கரேன்.


ரெண்டே ரெண்டு பொம்மைதான் சேர்த்திருக்கோம்.  மொதல்ல, எங்க குருஜி எங்க வீட்டு கொலுவுல இருக்கார் அடுத்து, சஞ்சீவி மலையை கைல வெச்சிருக்கர ஆஞ்சநேயர் பொம்மை.  இந்த பொம்மையை, எனக்கு சுமா நவமி அரங்கேற்றதுக்கு வீடியோ எடுத்ததற்கு அவங்க அம்மாக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பரிசு கொடுத்தாங்க.  வழக்கம்போல இருக்கர சாண்டா க்ளாஸ் டிரெயின் செட் மிஸ்ஸிங்.  சொல்லப்போனால் பார்க் மிஸ்ஸிங்.  அடுத்த வருஷம் என்ன பண்றதுன்னு ஜனவரிலயே ப்ளான் ஸ்டார்ட் பண்ணனும் போல இருக்கு.


சுகந்தி ஆனந்த் வீட்டு கொலு

சுகந்தி வீட்டு கொலுல நிறைய சேஞ்சஸ் இருக்கு, சூப்பரா படி செஞ்சிருக்காங்க, ஸ்நோ இருக்கர மாதிரி பார்க் கட்டியிருக்காங்க, தரைல ரங்கோலி பூவால பண்ணியிருக்காங்க.  நிறைய புது பொம்மை சேர்த்திருக்காங்க.  ராமர் பட்டாபிஷேகம் அழகு வார்த்தைகள்ல சொல்ல முடியாது அவ்வளவு திருத்தம்.


வித்யா முரளி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு முதல் தடவையா போயிருந்தேன்.  குட்டியான அருமையான கொலு.  ஆலிலை க்ருஷ்ணரும், ப்ளூட் (இல்லாமல்) நின்ற கோலத்தில் க்ருஷ்ணரும் அருமை.

இந்து ஐயர் வீட்டு கொலு

கச்சிதமான காவி நிற கொலு, அருமையான பார்க்கும் கட்டியிருக்காங்க  4-5 வருஷங்களுக்கு முன்னாடி அவங்க வீட்டு கொலு பார்த்த ஞாபகம் லேசா இருக்கு.  வரலஷ்மி அம்மன் கொலுவுல இருந்து நான் முதல் தடவை பாக்கரேன்.  அம்மன் அழகோ அழகு.  குழலூதும் க்ருஷ்ணர், ஆண்டாள் அவதாரம்னு அழகா இருந்தது.




காயத்ரி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் நான் முதல் தடவையா பாக்கரேன்.  காயத்ரி சூப்பரா ஒரு சரஸ்வதி பொம்மையை பண்ணியிருக்காங்க.  ஒரு முழு புடைவையை மடிச்சு மடிச்சு கட்டி பண்ணியிருக்காங்க.  அதுக்கு அவங்களுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சாம்.  ஹூம். எனக்கு வீட்டுல தோச்சு காயவெச்ச என் துணியை அடுக்கவே ரெண்டு மணி நேரம் பத்தாது, இவங்க இப்படி அழகா ஒரு பொம்மையை செய்ய ரெண்டு மணிதான் ஆச்சுன்னு சொல்றாங்க.  பரமாச்சார்யாரின் படம் வெச்சிருக்காங்க. ஒரு சின்ன பார்க் மேசை மேல வெச்சிருக்காங்க, கலர் கலர் அரிசில அருமையா ஒரு ரங்கோலி போட்டிருக்காங்க.  



பார்கவி கணேஷ் வீட்டு கொலு


பார்கவி வீட்டு கொலுதான் எங்க வீட்டு கொலுவுக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லனும்.  இவங்க வீட்டு கொலுவை பத்தி சொன்னா புரியாது ஒரு தடவை போய் பார்த்தா தான் அனுபவிச்சு கொலு வெக்கரது எப்படி புரியும்.  படிகள்ல கொலு வெக்கரதை கொஞ்சம் மாத்தி இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு எல்லா எடத்திலயும் கொலு வெச்சுட்டு 4-5 பொட்டி பொம்மைகளை இன்னும் ஸ்டாக்ல வெச்சிருக்கரவங்க இவங்க.  கல்யாண செட், வித விதமா பிள்ளையார்கள், வசுதேவர் க்ருஷணரை கோகுலத்துல கொண்டு விட போற பொம்மை, பள்ளி கொண்ட பெருமாள், வெண்ணை திருடும் கண்ணன், ராச லீலை, காலிங்க நர்தனம், ஷீர்டி பாப, சுவாமி விவேகாநந்தர், மூஞ்சூரு இழுக்கும் ரதத்தில் பிள்ளையார் என சொல்லிலடங்கா கொலு.

லஷ்மி ஶ்ரீதர் வீட்டு கொலு

கொஞ்சம் கொஞ்சமா பெரிசாயிண்டே வர கொலு இவங்க வீட்டு கொலு.  கல்யாண செட், பீங்கான் பொம்மை செட்னு நேர்த்தியான கொலு.


ப்ருந்தா ஷங்கர் வீட்டு கொலு


கன கச்சிதமான கொலு.  தசாவதாரம் அழகோ அழகு.


சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு


பிங்க் கொலு.  ரெண்டு விதமான தசாவதார செட் வெச்சிருக்கர கொலு.  ஆதிசேஷன் மேல பெருமாள் லஷ்மியுடன் இருக்கர பொம்மை சூப்பர்.

ஷீலா கார்த்திக் வீட்டு கொலு


சத்யநாராயண பூஜை செட் முதல் தடவையா கொலுவுல பாக்கரேன். பெரிய புத்தர் பொம்மை, வழக்கம் போல கார்த்திக்கின் கை வண்ணத்துல ஒரு அருமையான கோலம். வாரகஸ்வாமியை கொலுவுல முதல் தடவையா பாக்கரேன்.  முருகர் மயில் மற்றும் சேவலோடு இருக்கார்.


வேதா சேகர் வீட்டு கொலு


வேதா வீட்டு கொலுவும் நாம் முதல் தடவை பாக்கரேன்.  பெரிய கொலு.  நல்ல செலக்‌ஷன்.  கல்யாண செட், பாட்டு கச்சேரி செட், குழல் ஊதர க்ருஷ்ணர், பூரி ஜகன்னாதர் எல்லோரும் இருக்கர கொலு.


சிவகாமி சுபாஷ் வீட்டு பூ சமர்பணம் 

சிவகாமி வீட்டுல பார்த்தது கொலு இல்லை, அரவிந்தர் ஆசிரமத்தின் அம்மாவின் பூ வழிபாடு.  ரொம்ப ரொம்ப அருமையான ஏற்பாடு.

சங்கீதா வாஞ்சி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் முதல் தடவையா பாக்கரேன்.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க, குருவாயூரப்பன், பஞ்ச முக ஆஞ்சநேயர், லஷ்மி நரசிம்மர், ராம ஆஞ்சநேய ஆலிங்கணம், ராகவேந்திரர், கைலாசத்துல சிவ பெருமான், பள்ளி கொண்ட பெருமாள், ப்ரம்மா விஷ்ணுவின் சிவ பூஜை, வராகஸ்வாமி, சத்ய நாராயண பூஜை செட்இப்படி சொல்லிட்டே போலாம்.

விஜி வேதகிரி வீட்டு கொலு



இவங்க வீட்டு கொலுவுல இருந்து போன தடவை ஒரு பார்க் கட்டர ஐடியாவை சுட்டுண்டு வந்தேன் அது சுத்தமா மறந்து போச்சு, இந்த தடவை ஒரு படமே புடிச்சிண்டு வந்துட்டேன்.  நல்லா ஒரு ப்ராஜெக்ட் மாதிரி போட்டுண்டு கொலு வெக்கராங்கன்னு நினைக்கரேன்.  பிள்ளையாரோடு இருக்கர சிவன் பார்வதி அழகோ அழகு.  குருவாயூரப்பன், அழகான மீரா ந்னு சூப்பர் கொலு. 3-டி ப்ரிண்டர்ல பண்ணின கோவில் வெச்சிருக்காங்க.  அடுத்து 3-டி ல பொம்மை வருமான்னு கேட்டு வரும்னா ஒரு 3-டி ப்ரிண்டர் வாங்கிடனும்.


சுஜாதா ரமேஷ் வீட்டு கொலு


கொலுவை வருஷா வருஷம் நல்லா அழகாக்கிட்டே வராங்க.  ராமர் பட்டாபிஷேகம் அருமையோ அருமை.  ராமர் சிம்மசனத்துல இருக்கரமாதிரி பொம்மையை நான் இவங்க வீட்டுலதான் பாக்கரேன். சத்ய நாராயண பூஜை செட்.  சின்ன டேபிள்ல ஒரு கல்யாண செட், மீரான்னு கலக்கிட்டாங்க.


வித்யா சுப்ரமணியம் வீட்டு கொலு

இவங்களை இப்ப சமீப காலமாத்தான் தெரியும்.  இதுதான் முதல் தடவை இவங்க வீட்டு கொலுவுக்கு போனது.  டிவி வெக்கர பிட் ல கச்சிதமா கொலு வெச்சிருக்காங்க.  பாண்டுரங்கனோட அழகுக்கு ஈடு சொல்லவே முடியாது.  பொம்மையெல்லாம் குட்டி குட்டியா இருந்தாலும் ரொம்ப நேர்த்தி.  இவங்க பொம்மை எங்க வாங்கினாங்கன்னு கேட்டுண்டு வந்து இருக்கேன்.  அடுத்த தடவை சென்னை போகும் போது கண்டிப்பா நிறைய பொம்மை வாங்கனும்.  எனக்கு தெரிஞ்சு வெள்ளிப் பாத்திரக் கடை வெச்சிருக்கர செட்டியாரம்மாவை மொதல் தடவையா இவங்க வீட்டு கொலுலதான் பார்த்தேன்.  ஒரு கொசுறு செய்தி வித்யா படம் வரையரதுலயும் கில்லாடி, சாம்பிளுக்கு இதோ ஒரு படம்.




ரேணுகா பாலசுப்ரமணியன் வீட்டு கொலு

ராசலீலை க்ருஷ்ணர், வாத்யம் வாசிக்கர பிள்ளையார், காய்கறி விக்கர வயதானவர்ன்னு நிறைவான கொலு.

சந்தியா ப்ரசாத் வீட்டு கொலு:

சந்தியா ப்ராசாத் வீட்டு குட்டி கொலு.  குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி சின்னதா ஒரு பார்க்கும் கட்டியிருக்காங்க.  வெண்ணைப் பானைல கை விட்டு கை ஃபுல்லா வெண்ணையா இருக்கர க்ருஷ்ணர் சூப்பரோ சூப்பர்.


பவானி கண்ணன் வீட்டு கொலு


குட்டியா இருந்த கொலு இன்னிக்கு 7 படில இருக்கு.  புதுசு புதுசா பொம்மைகள் வெச்சு அசத்தியிருக்காங்க.  இவங்க அடுத்து பார்க் ஒன்னு கட்டி கொலு வெக்கரதுக்குள்ள நான் ஒரு பார்க் அடுத்த வருஷம் கட்டிடனும்.


வேதுக் குட்டியின் குட்டி கொலு

வேதுக் குட்டிக்கு எவ்வளவு பெருமை பாருங்க அவளோட குட்டி கொலுவுக்கு பக்கத்துல நிக்கும் போது.


ப்ரியா ராஜேஷ் வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு மாலதி தனியா போயிட்டு வந்துட்டாங்க.  இவங்க எங்க வீட்டு கொலுவுக்கு வந்த போது உரிமையா ஏன் வரலைன்னு கோவிச்சுக்கர அளவுக்கு போயிட்டாங்க.  அதனால ஒரு ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் போட்டு ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து நேர இவங்க வீட்டுக்கு போய் கொலு பார்த்துட்டு வந்தேன்.  ஆழ்வார்கள் பொம்மைகளை பூஜைல வெச்சிருக்கரத பார்த்தேன்.  அருமையோ அருமை.  அதே ஆழ்வார்களை கொலுவுலயும் வெச்சிருக்காங்க.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க. கல்யாண செட், குருவாயூரப்பன்,  ஆஞ்சநேயர் நின்ற கோலம், பக்கத்துல ஒரு ஷெல்ஃப்ல க்ருஷ்ணனின் விளையாடல்கள்னு பின்னிட்டாங்க.

இப்படி நான் பார்த்த பல கொலுவை இங்க தொகுத்து கொடுத்துட்டேன்.  அடுத்து கொலுவோட மொத்த படங்களும் இந்த லிங்க்ல இருக்கு.

அன்புடன்,

முரளி இராமச்சந்திரன்.

Wednesday, November 07, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்னு எங்கேயோ படிச்சது






அடுத்து நம்மூர் கொலு வலம் பதிவுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Saturday, October 27, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012 - தொடர்ச்சி

வரலாறு காணாத அளவுல மூமூமூமூமூனு பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்க.  ஆனா எல்லாமே நல்லா இருக்கு சரி இன்னிக்கு வீட்டுல ஒன்னும் ஆணி புடுங்கர வேலை இல்லை, கொலுவை பத்திரமா எடுத்து வெக்கனும், சாண்டி புயல் வரதுக்கு முன்னாடி, பால் தண்ணி வாங்கி வெக்கனும் அவ்வளவுதான் சரி பதிலை ஒரு பதிவா போட்டுட்டா போச்சு, என்ன சொல்றீங்க.

மொதல்ல நாகு:

நீங்கள் போட்டிருக்கும் படம் ஜூப்பரோ ஜூப்பர். யானை தேய்ந்து கழுதை சைஸுக்கு வந்து விட்டது :-)

நான் இன்னும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் யாருக்கு ஓட்டுப் போட்டு பட்டை நாமம் சாத்திக் கொள்ளலாம் என்று. நீங்கள் சொல்வது போல ரிபப்ளிகனாக இருந்தால், தாலிபான்கள் ரேஞ்சுக்குப் போகும் முர்டாக்குகளை - மன்னிக்கவும் - மூடர்களைக் கண்டுகொள்ளாமல் ஓட்டு போட்டு விடலாம். டெமாக்ரட்டாக இருந்தால் பரப்பி நிரப்பும் சோஷலிஸ கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் குத்தி விடலாம். நடுவில் மாட்டிக் கொண்டால்தான் குழப்பமே...

அந்தப் பக்கம் போனால் Atlas Shrugged. இந்தப் பக்கம் போனால் Grapes of Wrath. இவன் தேவையில்லாமல் ஈராக் சண்டை போட்டு செலவழித்தால், அவன் கழகக் கண்மணிகளே வெட்கப்படும் ரேஞ்சுக்கு பேசித் தள்ளுகிறான். கூட திவாலாகும் ஓட்டு வங்கி நிறுவனங்களுக்கு செலவு...

ஓட்டு போட வேண்டும். ஆனால் யாருக்குப் போடுவது? யாரு லெஸ்ஸர் ஈவில்? சுஜாதா சொன்னதுபோல யாரையும் பிடிக்காவிட்டால் யாருக்கு வயது கம்மியோ அவருக்கு போடலாமா? இல்லை யாருக்கு பேங்க் பேலன்ஸ் கம்மியோ, ஜாஸ்தியோ அவருக்கு போடலாம். 

யோசித்து விட்டு ஒரு முடிவுக்கும் வராவிட்டால் வயதுதான்... :-)

ஆமாம் - யானை கீழேவிழுந்தா தின்னாதா? புதுக்கதையா இருக்கே? பணக்கார கொழுத்த யானையோ?



நாகு உங்க ஓட்டு  சின்ன வயசுகாரருக்கா?  சரி சரி புரிஞ்சிடுச்சு.  அதே சுஜாதா சொன்ன இன்னொரு அருமையான வழி இதோ:

சுஜாதா:  "எனக்கும் சகுனத்துல நிறைய நம்பிக்கை உண்டு, ஆனா, நிறைய உப கண்டிஷன்ஸ் போட்டுப்பேன்.  வீட்டை விட்டு கிளம்பினா சிங்கிள் குடுமி மாமா வரக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா, ஶ்ரீரங்கத்துல அதெல்லாம் தினமும் நடக்கும் அதனால டக்குன்னு ஒரு கிளைக் கண்டிஷன் போட்டுப்பேன்.  அவருக்கு  கைல 6 விரலிருக்கணும்னு, அப்படி ஒருத்தர் ஒருநாள் எதிரே வந்துட்டார், உடனே கண்டிஷன் 2, அவருக்கு மாறு கண் இருக்கனும்னு.  இப்படி கண்டிஷன்ஸ் போட்டு போட்டு என்னோட சகுனத்தடைகளை எல்லாம் அடிச்சு உடைச்சுடுவேன்"

அதுமாதிரி நீங்க நிறைய வெச்சுக்கலாம். ஆனா, நல்ல ஆட்சி தர வேண்டாம்னு தீர்மானம் பண்ணிக்கனும் அவ்வளவுதான்.

யானை காட்டில இருந்தா இப்படித்தான் இருக்கும்னு நானும் நிறைய படிச்சிருக்கேன்.  கீழ விழுந்தா எடுத்து சாப்பிடரது, கை நீட்டி காசு வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்றது, குனிஞ்சு பாகனை மேல ஏத்திக்கரத்து, ஒத்தைக் கால்ல நின்னு சர்க்கஸ் வேலை பண்றது எல்லாம் ஊர்ல நாட்ல இருக்கர யானைங்கதான்.

இதுக்கு ஒரு சின்ன கதை:  ஒரு சர்க்கஸ்ல யானை எல்லா வேலையையும் செஞ்சுதான், அப்போ முன் வரிசைல இருந்த 4 பசங்க ஒரு இந்தியன், ஒரு ரஷ்யன், ஒரு சீனாக்காரன், ஒரு அமெரிக்கன், அவங்களை கேட்டாங்களாம், இது எப்படி சாத்தியம்னு.  அதுக்கு இந்தியன் சொன்னானாம் யானை விநாயகர் மாதிரி அதனால அது நாம எதைக் கேட்டாலும் செய்யும்னு, சீனாக்காரன் சொன்னானாம், அதை சின்ன வயசுலயே அடிச்சு அடிச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க அதனால அது பயத்துல இதை செய்யுதுன்னானாம்.  ரஷ்யன் சொன்னானாம்,  அது சர்க்கஸ் யானையோட குட்டி அதனால அதனோட ரத்தத்துல சர்க்கஸ் வேலை பண்ற ஜீன் இருக்குன்னானாம்.  அமெரிக்கன் பையன் சொன்னானாம், அந்த யானைக்கு தன்னோட பலம் தெரியலை அது தெரிஞ்சுதுன்னா, இப்படி கேவலமான வேலையெல்லாம் செய்யாதுன்னானாம்.

யானை டைனோசர் காலத்துல இருந்து மிஞ்சியிருக்கர ஒரு சில மிருகங்கள்ல ஒன்னு.  எவ்வளவு பெரிசா இருந்தாலும் தாவர பட்சிணி, அருமையா நீச்சல் பண்ணக்கூடிய மிருகம்.  இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

அடுத்து சுப்பு தாத்தா:
இந்த அமெரிக்கன் ப்ர்சிடென்ட் எலக்சனே ஒரு சிக்கல். 
எல்க்டொரல் வோட் அப்படின்னு ஒரு பக்கம் சொல்றாங்க.
அதற்கப்பறம் மக்களுடைய நேரடியாக வோட் எண் ணிக்கையும் சொல்றாங்க.
அதற்கப்புரம் அந்தந்த ஸ்டேட்டுக்கு எத்தனை எலக்டொரல் வோட்டோ
அத்தனையும் யார் வின் பண்ராகளோ அவுகளுக்கு போயிடுமாம். 

இது பற்றி எத்தனையோ வெப் சைட்டுக்கு போனாலும் சொல்ராங்க.
இந்த சிஸ்டத்திலேயே கோளாரு இருக்கு. ஆனா சரி பண்ண அலவ் பண்ண மாட்டாங்க.
ஏன்னா இந்த ஸிஸ்டம் தான் இப்போதைக்கு ரைட் தோணுது அப்படின்னு.

நீங்க இந்த பிரஸிடென்ட் சிஸ்டம் எலக்ஷன் பத்தி கொஞ்சம் விலா வாரியா 
சொல்லுங்களேன். நம்ம இந்தியா கொஞ்சம் பெட்டரா இருக்கோன்னு தோனுது.

சுப்பு தாத்தா. 
American election allows an option 
for the voter to says that I do not want to vote for either, as Indian Election rules allow?



அமெரிக்கன் எலெக்‌ஷன் பத்தி விலாவரியா எழுதினா என் விலா எலும்பை எடுத்துடுவாங்க.  ஆனா நான் இங்க இருந்த 14 வருஷங்கள்ல பார்த்த வரைக்கும், இது இந்தியாவோட தேர்தல் முறையை விட எவ்வளவோ மேல்.  அதுக்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.  மொதல்ல யார் அதிபரா வருவார்ங்கரது தேர்தலுக்கு முன்னாடியே எல்லோருக்கும் தெளிவா தெரியும்.  நம்மூர் மாதிரி, சோனியாவா, மன்மோகனா, மோடியா, அத்வானியா இல்லை வேற யாராவதான்னு தெளிவில்லாம இருக்காது.  யாரோட பார்வை எப்படின்னு முழுசா தெரியலைன்னாலும் கொஞ்சமாவது தெரிய வரும்.  4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும், ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே எப்படி வெறும் வாய்ல முழம் போட முடியும்னு தெரியவரும்.  

முக்கியமா, அதிபர் பெரிய ஆளா இருந்தாலும் திரை மறைவுல ரொம்ப பவர்ஃபுல் துணை அதிபர்ன்னு பலர் சொல்லி கேட்டிருக்கேன்.  சும்மா மீன் பிடிக்க போயிட்டு, கூட வந்த நண்பரைகூட மூஞ்சில சுட்டுட்டு ஒரு சின்ன தண்டனைகூட இல்லாம தைரியமா சுத்தலாம்.  அவ்வளவு பவர்.  அதிபரா இருந்தா பெரிய மேசை போட்டுகிட்டு தன் பொண்ணு வயசு இருக்கர பொண்ணுங்க கூட ஜாலியா இருக்கலாம்.  கேட்டா தைரியமா டி.வி முன்னாடி "ஆமா, அப்படித்தான், உங்களால முடிஞ்சத பாத்துக்கங்க"ன்னு சொல்லலாம்.  

இந்தியாவுல இருக்கர ரூல் 49-ஓ (49-O) அமெரிக்காவுல இருக்கரமாதிரி எனக்குத்  தெரியலை.  அது எவ்வளவு தூரம் சரின்னும் தெரியலை.  கண்டிப்பா ஒரு விவாதத்துக்குரிய விஷயம்தான்.  

மறுபடியும் நாகு (அல்லது அவரோட நண்பனோட அப்பா எழுதிய பின்னூட்டம்)


என் நண்பனின் தந்தையிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது:

கதையிலே கழுதை வராமே யானை மட்டும் வந்திருப்பதாலும் தம் நிலையை நடுவில் வைத்துக் கொண்டாற்போல எழுதியிருப்பதாலும் நாசகார ரிபப்லிக்கானுக்கு வாக்குப் போடுவார் போலிருக்கிறது.
என் நிலை இதுதான்.
ஒபாமாவை நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரான், லிபியா, சிரியா முதலிய இடங்களில் போருக்கு புறப்படுவார்கள். அமெரிக்காவின் ஒரு சதவீத மக்களுக்குத்தான் ஆதாயம்.
உலகின் மற்ற எல்லாருக்கும் நஷ்டம்தான். Neutrality or undecidedness is being perverse.
மொதல்ல அந்த அப்பாவுக்கு அமெரிகாவுல ஓட்டு இருக்கான்னு தெரியலை,  இப்ப சொல்லிடரேன்.  நான் இந்த விஷயத்துல கண்டிப்பா நடுநிலைமைதான்.  ஆனா அதே சமயம், கண்டிப்பா இப்போதைய அதிபருக்கு ஓட்டு போடரதா இல்லை.  ஒபாமா நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள்ன்னு ஒரு நோபல் பரிசு ரேஞ்சுக்கு எதையோ இந்த அப்பா கண்டு பிடிச்சிருக்கார் அது என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்.  தமிழ் ரொம்ப அருமையான மொழி, அவர் 'ஏதும்' ன்னு சொன்னதுனால, அதை கொஞ்சம் கூர்மையா பார்த்தா, அவர் எதுவும் செய்யலைன்னு ஆகுது.  தமிழ்ல ஒரு முறை உண்டு, அதாவது ஒரு விஷயத்தை சொன்னா இன்னொரு விஷயம் புரியும்ன்னு அதுக்கு அருத்தா பத்தின்னு சொல்லுவாங்க.  நான் இப்போ காபி குடிக்கரது இல்லைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி வரைக்கும் காபி குடிச்சுண்டு இருந்தேன்னு அர்த்தம்.  'ஏதும்' செய்ய விடலைன்னா அவர் எதுவும் செய்யலைன்னு அர்த்தம்.  4 வருஷமா கைல வீடோ பவர் வெச்சுண்டு எதுவ்ம் செய்யாம இவர் இருக்கரதுக்கு திண்ணையை காலி பண்ணிட்டு போகட்டும்.

இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிரா வழக்கமா சொல்ற வீராவேச பேச்சைக்கூட இப்போ நிறுத்திட்டாங்க அதனால தீவிரவாத ப்ரச்சனை இந்தியாவுல நின்னு போச்சா?  2001-ல அமெரிக்காவுல நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியா இவங்க எடுத்த நடவடிக்கைக்கை அப்புறம் அப்படி ஒரு தாக்குதல் நடத்த மத்தவங்க யோசிக்கராங்கன்னா அதை செய்யாம, க்ளிண்டன் அதிபரா இருந்த போது சவுதி அரேபியாவுல அமெரிக்க கான்சுலேட்ல நடந்த தாக்குதல்ல ஒரு மண்ணும் செய்யாம, மான் கொம்பு கராத்தே போட்டுட்டு வந்ததுக்கு (அப்படின்னா என்னன்னு நாகு கிட்ட தனியா கேளுங்க) பதில்தான் 2001ல அமெரிக்காவுல நடந்த தாக்குதல்.  மஹாபாரதத்துல பீஷ்ம நீதின்னு ஒரு கட்டம் வரும் அதுல அவர் தர்மருக்கு சொல்ற உபதேசம், ஒரு ராஜாவா இருக்கரது ரொம்ப கஷ்டம், அவன் அவனோட படையை நல்லா தயார் நிலைல வெச்சுக்கணும், அதே சமயம் 'யாரோடும் பகை கொள்ளலன், எனில் போர் ஒடுங்கும் புகழொடுங்காது'ங்கரார்.  அதுபோல நாம பவர்ஃபுல்ன்னு மந்த நாட்டுக்குத் தெரியனும் அப்பதான் அவங்க நம்ம கிட்ட வம்புக்கு வர மாட்டாங்க.  

கடைசியா, அமெரிக்காவுல 1% மக்களுக்கு மட்டும் நல்லது உலகத்துல எல்லோருக்கும் நஷ்டம்தான்னு எதை சொல்றாருன்னு தெரியலை.  அது எப்படின்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சத (இல்லை எனக்கு மட்டும் தெரியாததை) அவர் சொன்னா நல்லா இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, October 25, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012


2012 அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 12 நாள்ல நடக்கப்போறது.  சின்ன பசங்க ஒழுங்கா 9த் வீக் பரிச்சைக்கு படிக்கப் போங்க, பெருசுங்க மூஞ்சியை நல்லா தொடச்சு வெச்சுகிட்டா சூப்பரா ஒரு நாமம் போட கூட்டமா வந்து கிட்டு இருக்காங்க.

இதுவரைக்கும் 3 டிபேட்டை கேட்டிருப்பீங்க.  அதைத் தாண்டி இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு எல்லோரும் பேசி பேசி காதைக் கிழிச்சிருப்பாங்க.  இப்ப நாம செய்ய வேண்டியது எந்தக் கட்சியை தேர்ந்தெடுக்கரதுன்னு யோசிக்கனும்.  யாரைக் கேட்டாலும் யோசிக்க வேண்டியதே இல்லை, நீ ரிபப்ளிகன் ஆதரவாளர்ன்னா யானைக்கு ஓட்டு போடு, டெமாக்ரெட் ஆதரவாளர்ன்னா கழுதைக்கு ஓட்டு போடு இதுல யோசிக்க என்ன இருக்குன்னு சொல்வாங்க.

"நான் தீர்மானமா இருக்கேன் யாருக்கு ஓட்டு போடரதுன்னு" யாராவது சொன்னா நம்பாதீங்க.  எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அடுத்த நாளே அமெரிக்காவுல தெருவுக்கு தெரு தேனும் பாலும் ஓடாது.  பால் டாங்கரும் தேன் லாரியும் மோதிக்கிட்டா வேணா ஓடலாம்.

"மாமி கொலூலூலூலூ......." ன்னு போனவாரம் ஒருத்தர் வீட்டுக்கு போன போது அங்க என்னை மாதிரி கொலுவுக்கு  வந்த ஃப்ரெண்ட், அந்த வீட்டு மாமி, மாமா, அவங்க பொண்ணு எல்லோரும் சேர்ந்து, நான் என்னமோ இந்த ஊர் அரசியல் விமர்சகர்ன்னு நினைச்சு கிட்டு என்னை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.

நான் அவங்கள கேட்டது, கடந்த நாலு வருஷத்துல என்ன என்ன நல்லது நடந்தது (நடந்ததா?) ன்னு யோசிங்க.  இந்த ஆட்சிக்காரங்க சொன்னதை செஞ்சாங்களா,   அடுத்த நாலு வருஷம் அவங்க ஆண்டா நல்லதா இல்லையான்னு யோசிங்கன்னு கேட்டேன்.  அதுக்கு என்னா பேச்சு பேசராங்கப்பா!


இந்நாள் அதிபர் போர போக்குல அவனுக்கு 800 மில்லியன், இவனுக்கு 900 மில்லியன்னு கொடுத்து அதை வாங்கின அடுத்த வாரமோ இல்லை அடுத்த நாளோ அவங்க மஞ்ச கடுதாசி - ஐ.பி. கொடுத்துட்டு நம்மூர் பைனான்ஸ் கம்பெனிமாதிரி ஓஓஓஓஒடி  போயிட்டாங்க.  ஒருத்தன் கிட்ட ஒரு மில்லியன் இருந்தாலே அவன் பணக்காரன் (என்னை விடை ஒரு 10000 மடங்கு) அப்படி இருக்கரச்சே, எப்படி 800 மில்லியனும் 900 மில்லியனும் வாங்கிட்டு ஐ.பி கொடுக்கராங்க, இவங்களும் வழிச்சுகிட்டு அதை கேட்டுக்கராங்க.

அப்போ என் ஃப்ரெண்ட்டோட பொண்ணு ஒரு கேள்வி கேட்டா, "1928ல நடந்த போருளாதார சீரழிவு (அதாங்க க்ரேட் டிப்ரெஷன்) அதுக்கு மேலன்னு சொல்லனும்ன்னா இப்ப இருக்கரதுதான் அது 2008ல வெளியேறின அதிபர் கைங்கரியம் அதனால நீ என்ன இவரை பார்த்து இப்படி நாக்குமேல பல்லப் போட்டு கேள்வி கேக்கர"ன்னு காச்சி எடுத்துட்டா.  

நான் தெரியாமதான் கேக்கரேன் (அது சரி தெரிஞ்சா ஏன் கேக்கப் போறேன்) 1928 ல உலக மக்கள் தொகை எவ்வளவு, 2008-2012ல உலக மக்கள் தொகை எவ்வளவு.  அப்போ உலகத்துல பெரிய நாடுங்கன்னு சொன்னா, அமெரிக்கா, ப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ப்ரிட்டன், சீனா.  அதுலயும் பாதி நாடுங்க ப்ரிட்டனோட ஆதிக்கதுல இருந்தது.  அப்போ நடந்த பொருளாதார வீழ்ச்சியே நமக்கு பெரிய பாதிப்பில்லை.  ஆனா, இன்னைக்கு இருக்கர இந்த வீழ்ச்சி சுதந்திர இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கனும் ஆனா, அது அப்படி ஒரு பெரிய வீழ்ச்சியை தரல.  அமெரிக்கா, யூரோப்ல அப்புறம் சில இடத்துல வீழ்ச்சியாயிருக்கு, இதுக்கு என்ன சொல்ல முடியும்.  அமெரிக்காவோட இந்த வீழ்ச்சிக்கு காரணம், 2004-2008 ல நடந்த அதிபரோட ஆட்சின்னா, 2008-2012 வரைக்கும் இருந்த இவர் எதையும் செய்ய முடியலைன்னா, எதுக்கு மாற்றம் கொண்டு வரேன்ன்னு எம்.ஜி.ஆர் மாதிரி "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க"ன்னு பாட்டு பாடி 44 வது அதிபரா பதவிக்கு வந்து, 20 டிரிலியன் கடன் (இதுக்கு எவ்வளவு சைபர்ன்னு சத்தியமா எனக்குத் தெரியாது) ஏத்தி விட்டுட்டு இப்ப மாற்றத்தை விட்டுட்டு 'ஃபார்வேர்ட்' ன்னு ஒரு தாரக மந்திரத்தை ஆரம்பிச்சு கதை குத்திகிட்டு இருக்காரு.

இதுல என் ஃப்ரெண்ட் ஒருத்தர், நம்ம குழந்தைங்களுக்கு 5ம் வகுப்புல பாஸ் பண்ணினதும் அவங்களுக்கு இந்த அதிபர் கையெழுத்து போட்டு ஒரு சர்டிபிகேட் கொடுத்தாரே அத போன அதிபர் செஞ்சாரன்னு கேட்டார்.  அதனால இவரே அடுத்த 4 வருஷம் பதவில இருக்கனும்னுங்கரது அவரோட வாதம்.

நானும் தான், தமிழ் சங்கத்துல அதிபரா இருந்தப்போ குழந்தைங்களுக்கெல்லாம் கையெழுத்து போட்டு சர்டிபிகேட் கொடுத்தேன், அப்போ நிறைய குழந்தைங்க 'அங்கிள் கப்பு கிப்பு ஒன்னு கிடையாதா வெறும சர்டிபிகேட்தானா'ன்னு கேட்டாங்க . ஹூம் என் கையெழுத்துக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இந்தப் பக்கம் இவர் இப்படி காமெடி பண்ணிகிட்டிருந்தா அந்தப் பக்கம் ஒருத்தர் திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி 20 டிரிலியன் கடன், 20 மில்லியன் வேலை போச்சு, பொருளாதாரம் சீரடையல, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமா போச்சு, எத்தனையோ மில்லியன் உணவு சீட்டு கொடுத்துகிட்டு இருக்கோம்.  இதெல்லாம் கேக்க நாதியில்லாம போச்சு. அது இது ன்னு வீட்டுல ரிடையர்ட் ஆகிட்டு பொளம்பிட்டிருக்கர ஒருத்தர் மாதிரி சொல்லிகிட்டிருக்காரு.  அவர் சொல்றதுல உண்மை இருந்தாலும், சும்மா சொல்லிகிட்டிருந்தா அதோட வீரியம் கொறஞ்சுடும்.

நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க.  ஆனா கண்டிப்பா ஓட்டு போடுங்க.  அப்புறம் இவங்களைப் பத்தியும், இவங்க ஆட்சியைப் பத்தியும் கத்தி பேசலாம்.

இன்னிக்கு துக்ளக்ல தலையங்கத்துல கேஜ்ரிவால் பரபரப்பா செய்துகிட்டு இருக்கரதைப் பத்தி சோ சொல்லிட்டு கடைசில இப்படி எழுதியிருக்காரு.

கடம் பிந்த்யாத்
படம் சிந்த்யாத்
ஏனகேன பிராகாரேண
பிரஸித்த புருஷோ பவ 

– என்பது ஒரு ஸம்ஸ்க்ருத சடையர் மொழி. 
அதாவது – 
பானையை உடை,
படத்தைக் கிழி,
ஏதோ ஒரு வழியில்
பிரபலமான மனிதனாகி விடு! 


இது இப்போதைய அதிபருக்கும் அடுத்து வர ஆசைப்படர அதிபருக்கும் சரியா பொருந்தும்.

கடைசியா ரெண்டு குட்டி கதைங்க :
1) ஒரு காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் யானை தான் தலைவன்.  எப்படின்னா, ஒரு நாள் ஒரு சிங்கம், எல்லா மிருகங்கள் கிட்டேயும் போய், "ஏய், இந்தக் காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சான்.  எல்லா மிருகங்களும், "நீங்க தான் ராஜா!"ன்னு பவ்யமா சொல்லிச்சாம்.

இப்படி கேட்டு கேட்டு மிதப்பா வந்த சிங்கம் தனியா போய்கிட்டிருந்த யானையைப் பாத்து, "ஏய் இந்த காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சாம்.  யானை கவனிக்காத மாதிரி போயிட்டே இருந்துச்சாம்.  சிங்கத்துக்கு கோபம் வந்து யானை முன்னாடி வந்து திரும்பியும் கேட்டுச்சாம், யானை ஒன்னும் பதில் சொல்லாம, துதிக்கையால, சிங்கத்தோட வாலை பிடிச்சு தலைக்கு மேலை மூனு தடவை சுத்தி தூக்கி போட்டுச்சாம், தூரத்துல போய் விழுந்த சிங்கம் அங்கேயிருந்து சொல்லிச்சாம். "சே இது செவுட்டு யானை போல இருக்கு, பேச்சு பேச்சா இல்லாம அனவசியமா அடிக்குதுன்னு" சொல்லிட்டு ஓடி போச்சாம்.


2) காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் உணவு போடரது யானைதான்னு குருஜி சொல்வார்.  எப்படின்னா, யானை உணவு தேடிண்டு போகும் போது, அங்க இங்க இருக்கர மரக்கிளையெல்லாம் பறிச்சு சாப்டுண்டே போகுமாம், அப்போ கீழ விழரத அது சாப்பிடாதாம், அதைச் சாப்பிட மான், வரிக்குதிரை, முயல், காட்டெருமைன்னு தாவர பட்சிணிகள்லாம் வருமாம், இதுங்க வரும்னு அதுங்கள சாப்பிட சிங்கம், புலி எல்லாம் வருமாம், இதுங்க சாப்பிட்டு மிச்சம் இருக்கரத சாப்பிட கழுதைப் புலி, நரி, ஓநாய் எல்லாம் வருமாம், இதுங்களும் சாப்பிட்டு வெக்கர மிச்சத்தை சாப்பிட கழுகு பருந்து எல்லாம் ஆகாசத்துல வட்டம் போடுமாம்.  இப்படி ஒரு காட்டுக்கே தினமும் உணவு போடரது யானை.

இந்த கதைகளுக்கும், யாருக்கு நீங்க ஓட்டு போடனும்ங்கரதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


முரளி இராமச்சந்திரன்.

Sunday, October 21, 2012

எங்க வீட்டு கொலு...


புதுசு புதுசாக வரும் தொழில் நுட்பங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்த ஆரம்பித்தால் நல்லது. இந்தப் பாடத்தை கடந்த இரண்டு நாட்களில் நன்றாகக் கற்றுக் கொண்டேன்.

கூகுள் ப்ளஸ்ஸில் ஈவண்ட்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை அங்கே போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு ஹேங்க் அவுட் ஆரம்பித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அண்மையில் ஒரு நண்பன் வீட்டு பூஜையில் ஹேங்க் - அவுட் மூலம் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் பூஜை, ஹோமம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள். மதுரையில் உட்கார்ந்து கொண்டு நியுஜெர்ஸி பூஜையில் ஐயரை ஓட்டினார் என் நண்பனின் தந்தை!

அதிலிருந்து எனக்கு ஈவண்ட்ஸ் ரொம்ப பிடித்து விட்டது. இங்கே ரிச்மண்டில் கொலுவுக்காக நண்பர்களிடம் இருந்து ஈவைட் மூலம் அழைப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு யோசனை. நவராத்திரி கொலுக்காக ஈவண்ட் ஆரம்பித்தால் அதில் உலகெங்கிலும் இருந்து அவரவர் கொலு படங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே?  அனைவரும் பார்க்கும்படியாக ஒரு பொது நிகழ்ச்சி(பப்ளிக் ஈவண்ட்) ஆரம்பித்து அனைத்து நண்பர்களையும் சேர்த்து விட்டு மற்ற வேலைகளில் மும்முரமாகிவிட்டேன்.

அரைமணி கழித்துப் பார்த்தால், அதில் ஒரு நண்பர் அழைப்புக்கு நன்றி, நாளை மாலை சந்திக்கலாம் என்று எழுதியிருந்தார். சரி யார் வீட்டு கொலுவிலாவது சந்திப்போம் என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சில மணி நேரம் கழித்து திடீரென்று தோன்றியது - மனிதர் நம் வீட்டில் கொலு என்று நினைத்துவிட்டாரா என்று. உடனே  அவருக்கு பதில் போட்டேன். ஐயா - என் வீட்டில் கொலு இல்லை. நீங்கள் கொலு போகும்போது படம் எடுத்தால் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஈவண்ட். அவரும் விளக்கத்துக்கு நன்றி என்று எழுதினார்.

மறுநாள் தொடர்ந்தது வேடிக்கை. காலையில் ஒருவர் மின்னஞ்சலில் என் முகவரி கேட்டிருந்தார். தொலைபேசியில் இருவர் அதே மாதிரி கேட்டிருந்தார்கள். தங்கமணி வேறு போன வாரம்தான் கிளம்பி இந்தியா போயிருக்கிறார். அது தெரிந்த சிலர், வீட்டில் அம்மணி வேறு இல்லையே, புதுசாக கொலு வேறு வைத்திருக்கிறாயா என்றார்கள்.  நானும் என் பிள்ளைகளும் கொலுவிருக்கிறோம், நீங்களெல்லாம் சுண்டல் கொண்டு வாருங்கள் என்றேன்.

ஒரு சிலர் விஷயத்தைப் புரிந்து கொண்டு தொலைபேசியில் இதோ வந்து கொண்டிருக்கிறோம், அதோ வந்து கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக மெசேஜ் விட்டார்கள் (வாய்ஸ் மெயிலுக்கு தமிழில் என்ன?) இது ஏதடா வம்பாகி விட்டது என்று நேற்று நாலு மணியில் இருந்து கொலு பார்க்கும் சாக்கில் வீட்டிலிருந்து ஜூட்.

இன்னொரு நண்பர், என்னடா தங்கமணி வேறு இல்லாமல் நீ கொலு வைத்திருக்கிறாய்.  'எந்த மாதிரி' கொலு என்று கடுப்பேத்தினார்.

நியுசிலாந்தில் இருந்து துளசி டீச்சர் ரிட்மண்ட் சற்று தொலைவில் இருப்பதால் வரமுடியவில்லை, எங்கள் கொலுவுக்கு வேண்டுமானால் வாருங்கள் என்று கிண்டலடித்தார்.

ஒரு ஈவண்ட் மற்றவர்களிடம் பகிர்ந்த் கொள்ளும்போது, அந்தப் பகிர்வு ஒரு அழைப்பாகப் போகிறது -  அதுதான் குழப்பத்தின் காரணம். ஆகவே மக்களே - எங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலு பற்றிய கூகுள் ஈவண்ட்  இங்கே பார்க்கலாம். இதுவரை ரிச்மண்ட், ப்ரிட்ஜ்வாட்டர்-நியுஜெர்ஸி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் வைத்திருக்கும் கொலு படங்கள் பகிரப் பட்டிருக்கின்றன. நான் பார்த்த கொலுக்கள் பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

Saturday, September 22, 2012

கை வந்த கலை

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரத்துக்குப் போயிருந்தேன். எந்த நகரத்துக்குப் போனாலும் அந்த நகரத்தில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்வது என் வழக்கம். குறிப்பாக மதுரை நகரத்தில் பழைய நாடக நூல்களும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்களும் நிறையவே கிடைக்கும்.அந்த வகையான புத்தகங்களைத் தேடிச் சென்ற எனக்கு இந்த முறை சற்று ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஆனால் எதிர்பாராவிதமாக வேறு ஒரு நூல் கிடைத்தது. அது சைவ சித்தாந்தம்
பற்றிய ஒரு சிறிய புத்தகம். ஏற்கனேவே என்னிடம் சைவ சித்தாந்தம் பற்றிய புத்தகங்கள் இருந்த போதிலும் நான் அந்த புத்தகத்தை வாங்கினேன். அதை
நான் வாங்கியதற்குக் காரணம் சைவ சித்தாந்தம் பற்றிய அந்த புத்தகத்தை
எழுதியவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு கிறிஸ்தவர் சைவ சித்தாந்தம் பற்றி என்ன
எழுதியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் வாங்கினேன்

தங்கி இருந்த அறைக்குத் திரும்பி வந்து புத்தகத்தை படிக்கத் தொடங்கியதும் வேறு சில உண்மைகளையும் தெரிந்து கொண்டேன். கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு சமயப் பிரச்சாரம் செய்ய பயிற்சி கொடுக்கும் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி தெளிவு கொடுப்பதற்காக அந்த புத்தகம் எழுதப்பட்டது என்ற செய்தியை தெரிந்து கொண்டேன். இந்த
வகையில் வைணவம் பற்றியும், மற்ற இந்திய சமயங்கள் பற்றியும் பல புத்தகங்களை அவர்கள் எழுதிவெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிந்தேன். இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ மிஷினரிகள் நடத்தும் பாதிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில்உள்ள மற்ற சமய நிறுவனங்கள் வைணவமோ, சைவமோ, அல்லது பிற சமயத்தார்களோ இத்தகைய பயிற்சியை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக நான் கேள்விப் பட்டதில்லை. பொதுவாக எல்லா சமய நிறுவனங்களும் மற்ற சமய நூல்களைப் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சமண சமயத்தவர் எழுதிய நீதி நூல்களைக் கூட படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சைவ சமயத் தலைவர்கள் கூறியிருப்பது பலருக்கும் தெரியும். வைணவர்களும் அப்படியே என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்என்று நினைத்தேன்.  16,17ம் நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவுக்கு வாணிபம்  செய்ய வந்த பிறகும்,குறிப்பாக, பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நாட்டில் வேரூன்றிய பிறகும் பல மேல்நாட்டு அறிஞர்கள் இந்திய சமய நூல்களை படிக்கத் தொடங்கினார்கள். இந்திய சமயங்களின்
அடிப்படைத் தத்துவங்களையும் இந்திய சமூக அமைப்பையும் தெளிவாகப் புரிந்து கொள்வதிலும் அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் அனைவரும் ஒரே நோக்கத்தோடு படித்தார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்திய சமயங்களின், குறிப்பாக இந்து சமயத்தின், பலவீனங்களை
கண்டறியும் நோக்கத்தோடும் இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடும் அவர்கள் இந்திய சமயநூல்களைப் படிக்கத் தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை.

சைவ, வைணவ, அத்வைத சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்தால்தான் இந்தியர்களை புரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தோடு பாதிரியார்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி பாடம் நடத்தப்பட்டது.

சாதாரண மக்களுக்கு அவர்களுடைய பழக்கவழக்கங்களிலிருந்து உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகளையும் கூறினால்தான் எளிதில் விளங்கிக் கொள்வார்கள். இந்த சாதாரண உண்மையை கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். பல நூற்றாண்டுகளாக மற்ற மதத்தினரை தன் மதத்துக்கு மாற்றுவதில் தனிக் கவனம் செலுத்திய அவர்களுக்கு இது கை வந்த கலையாக இருந்தது. தமிழ்நாட்டில் மதப் பிரச்சாரம் செய்து தமிழுக்கும்தொண்டு செய்த வீரமாமுனிவர் பிராமணர் போல் உடை அணிந்து பூணுலுடனும் காவி உடையுடனும் வாழ்ந்தார். காலில் கட்டையால்  ஆன காலணி அணிந்துதான் நடந்தார் என்பது நன்கறிந்த செய்தியாகும்.

தங்கள் மதத்தை பரப்ப அவர்கள் இந்திய சமயங்களை மிக மோசமாக கொச்சைப் படுத்தினார்கள். தப்பித் தவறி அவர்களுடைய பார்வையில் நல்லதாகப் பட்ட அம்சங்களை இந்துக்கள் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கியதாகவும், காப்பி அடிக்கப் பட்டதாகவும் கூறிப் பிரச்சாரம் செய்தார்கள்.

உதாரணத்துக்கு ஒரு செய்தி.

ஹோரஸ் ஹேமாஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் 1840ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.

இந்திய சமயங்களில் காணப்படும் குற்றம், குறைகளை மெய்ப்பித்துக் காட்டி இந்திய மக்களை கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும்படி தூண்டும் பொருட்டு இந்திய சமயங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வது மிக முக்கியமான கடமையாகும். இருளில் மூழ்கிக் கிடக்கும், அதே நேரத்தில் மதிநுட்பம் மிக்க இந்தியர்களை அவர்களுடைய சமயப் பொய்மைகளிலிருந்து காப்பாற்றி கிறிஸ்தவ சமய உண்மைகளை உணரச் செய்ய வேண்டும்.

இது அவருடைய உரையின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். பலகலைக் கழக உரையே இந்த தரத்தில் இருந்தால் இந்தியாவில் பாமர மக்களிடையில் பிரச்சார மேடையில் எப்படி பேசியிருப்பார்கள் என்று அனுமானம் செய்து கொள்ளலாம். இவர்தான் விஷ்ணு புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து பல (கிறிஸ்தவ மதப் பிரச்சார ) கட்டுரைகளை எழுதினார்.

இவருடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கல்கத்தா பல்கலைக் கழகம் இந்திய சமயங்களின் அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு துறையை ஏற்படுத்தியது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல ஐரோப்பிய நாட்டு அறிஞர்கள் இந்திய சமயங்கள் பற்றி ஆரரய்ச்சி கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு பல பாதிரியார்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் பல மதப் பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிட்டனர். கிருஷ்ண பகவான் மற்றும் கிருஷ்ண னுடைய பிறந்த நாள் பண்டிகை(கோகுலாஷ்டமி ) பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிய வெபர்  என்பவர் வைணவ சமயத்தில் உள்ள பக்தி மார்க்கம் பற்றிய கொள்கைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்று எழுதினார்.

(An investigation into the origin of kirishna janmaashtami)

இந்த முறையில் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் உலகத்தில் எந்த மூலையில் ஏதாவது நல்ல அம்சம் இருந்தால் அது ஐரோப்பிய நாகரீகத்தின் பங்களிப்பு என்றும், கிறிஸ்தவ சமயமே மனித குலத்தை நாகரீகப் படுத்த தோன்றிய முதல் மதம் என்றும் கூசாமல் எழுதினார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய வல்லது கிறிஸ்தவ சமயம் மட்டுமே என்று பிரச்சாரம் செய்தார்கள்.

மாக்ஸ் முல்லர் என்ற மேல்நாட்டவரும் இதற்கு விலக்கல்ல. லண்டனில் உள்ள இந்திய செயலாளருக்குஎழுதிய கடிதத்தில் அவர் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டார். இந்து சமயம் கூடிய சீக்கிரம் அழியப் போகிறது. அந்த காலிஇடத்தை இட்டு நிரப்பும் கடமையை மேல்நாட்டு கிறிஸ்தவ சமயம்தான் செய்தாக வேண்டும். இதற்கான எல்லா உதவியையும் அரசாங்கம்
செய்ய வேண்டும்.

இவர்தான் கீழ்த் திசை நாடுகளின் புனித நூல்கள் என்ற தொகுப்பை தயாரித்தார். அந்த நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் இவருடைய நோக்கத்தையும் சமயச் சார்பையும் தெளிவாகப் புரிந்து
கொள்ளலாம். ஆராய்ச்சி கட்டுரை என்ற பெயரில் இத்தகையவர்கள் எழுதிய
எல்லாவற்றிலும் மேல் நாட்டவர்கள் மட்டுமே உலகத்தை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதை காணக் கிடக்கிறது.

நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிக் கிடந்த ஆப்பிரிக்க நாடுகளைப் போல்
அல்லாமல் இந்தியாவில் அவர்கள் முழுமையான நாகரீகம் உள்ள சமுதாயத்தை கண்டார்கள்.இங்கே அவர்களுடைய கடையை விரித்து ஆன்மீக வியாபாரம் செய்ய இந்து சமய நிறுவனங்களும், கல்வியில் சிறந்த ஒரு சில மேன்மக்களும் தடையாக இருந்ததை அறிந்தனர். அந்த தடைகளை உடைத்தெறிய அவர்கள் செய்த முயற்சியாக பல  ஆராய்ச்சி( ?) கட்டுரைகள் அமைந்தன.

எல்லா மேல்நாட்டு அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று
கூறமுடியாது. சிலர் ஒவ்வொரு சமூக வளர்ச்சியிலும் பல்வேறு சமயங்கள் எப்படி தொழிற்பட்டிருக்கிறது என்பதை கண்டறியும் ஆர்வத்தில் ஆராய்ச்சி
மேற்கொண்டனர்.

இந்த வகையில் ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல இந்திய நாட்டு அறிஞர்கள் மறுப்புக் கட்டுரைகள் எழுதினார்கள். ஆர் ஜி.பண்டார்கர் என்ற அறிஞர் இவர்களில் மிக முக்கியமானவர். இந்து சமயம் தன் பலவீனங்களை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியர்களுக்கு அறிவுரை கூறினார். மற்ற சமயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்இந்திய சமயங்களின் நிறை, குறைகளை கண்டறிய வேண்டும் என்றார் அவர். பிரஜெந்திரநாத் என்ற அறிஞர் ரோம் நகரத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பேசும்போது கிறிஸ்தவ சமயத்தோடு ஒப்பிடும்போது,கீழை நாட்டு சமயங்கள் மிகச் சாதாரணமானவை என்ற மேல்நாட்டு அறிஞர்கள் கருதுவது பற்றி கடுமையாக விமர்சித்தார். 20. மநூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழி காட்டக் கூடிய விலை மதிப்பற்ற அம்சங்கள் இந்திய சமயங்களில் உண்டு என்று கூறி பதிலடி கொடுத்தார்.


அச்சுத் தொழில் ஓரளவு வளர்ந்த பிறகும் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் மட்டுமே அச்சகங்களை வைத்துக் கொள்ள உரிமை பெற்றிருந்தார்கள். உள்நாட்டவர்கள் அச்சு யந்திரங்கள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட யந்திரங்கள் விலை மிகுந்திருந்தது. இந்தியர்கள் அச்சகங்களை இயக்க பெரும் தொகையை காப்புத் தொகையாக அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிதாயிற்று.


பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான பிரசுரங்கள் அச்சடிக்கப் படுவதை
தவிர்க்கவே இத்தகைய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. இந்த வகையான கட்டுப்பாடுகள் இல்லாத கிறிஸ்தவ மிஷினரிகள் நிறைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தன. 19 ம நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளில் (1880 to 1900 ) வெளியாகிக் கொண்டிருந்த பிரசுரங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை கிறிஸ்தவ சமயப் பிரச்சார ஏடுகள்தான் என்ற உண்மை இன்று நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் காரணமாக இந்திய சமயங்களை மேலை நாட்டு சமயங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் முறையும் வளரத் தொடங்கியது. அதன் விளைவாகத்தான் பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் வளர்ந்தன. சாதி என்ற அமைப்பு இந்து சமயத்தை பலவீனப் படுத்தி சமூக ஒற்றுமையை சிதைக்கிறது என்ற செய்தி மக்களிடம் பரவியது. அரசாங்க ஆதரவோடு கிறிஸ்தவ மிஷினரிகள் தொடங்கிய சமயப் பிரச்சாரமும்,இந்து சமய எதிர்ப்பு பிரச்சாரமும் இந்திய மக்களிடம் முதன் முறையாக ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று இறுகிப் போன சாதி அமைப்பில் இந்த காலகட்டத்தில்தான் ஒரு கீறல் விழத் தொடங்கியது. ஆனால் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடக்கூடிய அளவில் அது வளரவில்லை.

பிற்காலத்தில் இந்து சமயத்தவர்களும் பொறுப்புள்ள பொதுவாழ்வு பிரமுகர்களும் அது பற்றி கவனமாக சிந்திக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்தவ மிஷினரிகள் இந்து மதத்தின் மீது தொடுத்த பிரதானமான தாக்குதல் இந்த சாதி வேறுபாடு மீதுதான். ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்கள் மத்தியிலும் சாதி அமைப்பும் அதன் அடிப்படையிலான வேறுபாடும் இன்றும் தொடர்கிறது என்பதுதான் உண்மை

படிப்படியாக இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் சகல மக்களிடமும் கல்வி வளர்ச்சி பற்றிய நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

பர்மா,சிலோன் (இன்றைய மியான்மர், ஸ்ரீலங்கா ) போன்ற மற்ற காலனி நாடுகளிலும் பௌத்த சமயத்தவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றையும் பௌத்த மதக் கொள்கைகளையும் திரித்தும்,மலினப் படுத்தியும் பல நூல்களை வெளியிட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இனக்குழுக்களின் சச்சரவைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை வளர்த்து அந்த மக்களை அடிமைப் படுத்திய வரலாறு மிகக் கொடுமையானது. ரத்தக் கறை படிந்த அந்த வரலாறு பற்றி எழுதிய ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளருடைய வாசகத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மதப் பிரச்சாரத்தின் சுயரூபத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தோல் உரித்துக் காட்டும் அந்த வாசகம் இதுதான்.

அவர்கள் வந்தபோது எங்கள் கையில் நிலம் இருந்தது,
அவர்கள் கையில் பைபிள் இருந்தது.
இப்பொழுது எங்கள் கையில் பைபிள் இருக்கிறது.
அவர்கள் கையில் நிலம் இருக்கிறது.
- மு.கோபாலகிருஷ்ணன்



Wednesday, September 19, 2012

வள்ளலாரும் பாரதியும் நாமும்


நமக்கு எப்பவுமே ஒரு இலக்கு இருந்து கொண்டே இருக்கும்.  நாம் வைத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஒரு இல'க்கு' வைத்து விடும்.  இதற்கு சிலபல உதாரணங்கள் இன்றைய நடைமுறை வாழ்வில் நாம் காணலாம்.

ஒரு பள்ளி சிறந்த பள்ளி என்று பெயரெடுத்துவிட்டால் போதும், அவர் பையனை அங்கு விட்டார் என்று, இவரும் விடுவார்.  இவர் ஏழையாக இருந்தாலும், சமூக உந்துதல் இவரை விடாது.  இதே போல சைக்கிளுக்கே வழியில்லாதவராக இருந்தாலும், அவர் வைத்திருக்கிறார் என இவர் கார் வாங்குவார்.  இப்படித் தொடங்கிய பயணம் ஒரு முடிவுக்கே வராது, அது வேண்டும், இது வேண்டும் என்று தவிதவிக்கும்.

பாரதியாரும் அவர் பங்கிற்கு எழுதிய பாடல் எத்துனை சான்று.

காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், – அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும், – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே – அம்மா! நின்றன்
காவலுற வேணும், – என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

அவர் வேண்டியவற்றை, நாம் அப்படியே பின்பற்றி, காணி நிலம் என்ன, கண் காணும் இடமெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு(ம்) இருக்கிறோம்.  பாரதியார் கேட்டவை ஒரு சிறு காணி நிலமும், அதனைச் சுற்றி அழகிய சுற்றுப் புறமும், ஒரு மாளிகையும், அன்பு மனைவியும், கத்தும் குயிலோசையும்.  படிக்கக் கேட்க பாடல் அற்புதம்.  அதில் சிறு மாற்றுக் கருத்தும் இல்லை.  ஆனால், இந்த நிலையில் நில்லாது, அடுத்து அடுத்து எனத் தாவி இன்று எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பது எவருக்குமே தெரியும்.

இத்தனையும் வேண்டும் என்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஒன்றுமே உதவாது என்பதை நாம் உணரவேண்டும்.  உணர்ந்தால், நமது இலக்கை நமக்கு அடுத்தவர் எப்படி அமைக்க முடியும்?!  வேடிக்கை என்னவென்றால், இந்தக் காலத் தலைமுறையினர், பொய் சொல்வது குற்றம் என்றோ, பெரியவர்களை அவமதிப்பதைத் தவறு என்றோ உணர்ந்தார்களில்லை.  எல்லா 'வேண்டும்'களுக்கும் பின்னே, பெற்றோர் அலைவதால் ஏற்பட்ட கொடுமை தானோ இது ?!!!

அன்றைய காலகட்டத்தில், பலரும் தத்தமது 'வேண்டும்'களைப் பாடல்களில் தெரிவித்து இருக்கலாம்.  அப்படி, வள்ளலாரின் 'வேண்டும்'கள் சமீபத்தில் கேட்ட பொழுது உடல் சற்றே சிலிர்க்கத் தான் செய்தது.  மேற்கண்ட 'வேண்டும்'களில் இருந்து மிகவே மாறுபட்டு, நல்லறிவும், நல்உறவும், நற்சிந்தனையும் வேண்டும் என்கிறார்.

  ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
  உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
  பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
  பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
  மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
  மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
   நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
  தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
   தலமோங்கு கந்த வேளே
  தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
   சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

காணி நிலம் நம் மனதை ஆக்கிரமித்தது போல வள்ளலாரின் மேற்கண்ட பாடல் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!!!

Tuesday, August 28, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 3

ஆரத்தியின் திருமணம் - பகுதி 2.

"என்னப்பு, டக்கு டக்குன்னு ரெண்டு-மூனுன்னு பதிவைப் போட்டு வாங்கரே, என்ன சமாசாரம்"ன்னு நீங்க கேக்க நெனைக்கரது எனக்கு தெரியும்.  அப்படி ஒரு நெனைப்பே இல்லைன்னாலும், இருக்கரமாதிரி  நடிக்கவாவது செய்ங்கப்பா.

நீங்க நெனைச்சாமாதிரியும் அதுக்கு நான் பதில் சொன்னா மாதிரியும் இந்த பதிவுன்னு வெச்சுக்கங்க.

என்னோட சில அன்பு நண்பர்கள் ஃபோன் பண்ணி, "யோவ், நாங்க ஆரத்தி கல்யாணத்துல டான்ஸ் ஆடினோம்னு பொத்தாம் பொதுவா சொன்னியே, அதுக்கு முன்னாடி நாங்க எவ்வளவு பொறுமையா சாப்பாட்டை வெளுத்து வாங்கினோம்னு சரியா சொன்னியா? அதுல என்ன என்ன வெரைட்டின்னு சொன்னியா? அது முடிஞ்சதும், ஸ்நாக்ஸை ஒரு கட்டு கட்டினோமே அதை பத்தி எழுதினியா இல்லை? அதுல என்ன ஐட்டம் இருந்ததுன்னு எழுதினியா?  அட அதெல்லாம் போகட்டும், இதை எல்லாம் பார்த்து பார்த்து ஏற்பாடு பண்ணின  ஷீலாவைப் பத்தி எழுதாம உன் ஃப்ரெண்ட் கார்த்தியைப் பத்தி மட்டும் எழுதினியே, என்ன பொட்டி கிட்டி வாங்கினியா?   கார்த்தியோட ஸ்பீச்சைப்  பத்தி எழுதினியா? அவர் பையன் அர்ஜுன் பேசி வெளுத்து வாங்கினானே அதைப் பத்தி எழுதினியா" ன்னு கேட்டு, வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையை கேள்வி கேட்டா மாதிரி கேட்டுட்டானுவ.

இதுல இவங்க சொல்லாத ஒன்னு மாலை மாத்தும்  விளையாட்டையும் விடாத நடத்தினதை நான் சொல்லாததை யாரும் கண்டுபிடிச்சி திட்டலை.  நீங்களும் சொல்லாதீங்க.  அப்புறம் அதுக்கும் சண்டை பிடிக்கப் போறாங்க.

ஒரே ஒரு நண்பர், "ஏம்பா இவ்வளவு எழுதினியே, சாயங்காலம், வெஸ்டர்ன் ஸ்டைல்ல நடந்த கல்யாணத்தைப் பத்தி ஒன்னும் சொல்லலியே அதப் பத்தியும் சொல்லிடு.  ஏன்னா நீ நல்லா அனுபவிச்சு ரசிச்சு இந்தக் கல்யாணத்தைப் பார்த்துட்டு இருந்தே" அவர் இப்படி சொல்லவும், எனக்கு என்னவோ, என்னோட கதைக்கு ஒரு 'சாகித்ய அகாடமி' அவார்ட் கொடுத்தா மாதிரி இருந்தது, அதுவும் ஒரு ரெண்டு செகண்டு தான், உடனே அவர், "நாங்க எல்லாம், வெள்ளிக்கிழமை காலைல இருந்து சனிக்கிழமை சாயங்காலம் ஒரு 7-7:30 மணி வரைக்கும் கல்யாணத்துல அவ்வளவு வேலை பார்த்திட்டிருந்தோம், கல்யாணத்தை சரியா பாக்க முடியலை.   நீதான், ஒரு வேலையும்  செய்யாம பெரிய எழுத்தாளன் கணக்கா வேஷ்டி ஜிப்பா மூக்குக் கண்ணாடியோட போஸ் கொடுத்திட்டு இருந்தே, அதனால கண்டிப்பா கல்யாணத்தை நல்லா வேடிக்கை பார்த்திருப்பே, நீ ப்ளாகுல எழுதினா அதை படிச்சுக்கரோம்"ன் சொல்லி என் சாகித்ய அகாடமி கனவுல கத்தியை சொருகிட்டார்.

எல்லாரும் (யார் அந்த எல்லாரும் னு எல்லாரும் எல்லார் கிட்டயும் கேக்கரமாதிரி யாரும் யார் கிட்டயும் இனிமே கேக்காதீங்க.  உஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!)  கேட்ட எல்லா கேள்விகளுக்கு பதில் சொன்னா விடிஞ்சுடும்.

கார்த்திக்கு க்ரியேடிவிட்டி அதிகம்னா, அதை தூண்டிவிட்டு அதை அணையாம பார்த்துக்கரது ஷீலான்னு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அதுலயும் இந்தக் கல்யாணத்துல அவங்க எப்படி டென்ஷனே ஆகாம சிரிச்சுகிட்டே எல்லா வேலையையும் செஞ்சாங்கன்னு யோசிச்சா ஆச்சர்யமா இருந்தது.  ஒரு சின்ன சமாச்சாரம் சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்கு போயிரலாம்னு இருக்கேன்.  கமல் நடிச்ச மூன்றாம் பிறை படத்துக்கு அவருக்கு 'பாரத்' - இந்தியாவுல அந்த வருடத்துல வந்த படங்கள்ல நல்லா நடிச்ச ஹீரோவுக்கு கொடுக்கர பரிசு, கெடச்சதுக்கு படத்தோட டைரக்டர் பாலு மகேந்திராவை பேட்டி காண்றாங்க அப்போ அவர ஒருத்தர் கேட்டார், இந்தப் படத்துல கமல் கடைசி சீன்லதான் கொஞ்சம் ஏதோ நடிச்ச மாதிரி இருந்துது அதுக்கு அவருக்கு 'பாரத்' அவர்டா?  ஶ்ரீதேவி படம் பூரா சூப்பரா மனநிலை சரியில்லாத ஒரு சின்னப் பொண்ணா நடிச்சங்களே அதுக்கு அவங்களுக்கு ஏன் 'ஊர்வசி' அவார்ட் தரலைன்னு.  இதுக்கு பாலு மகேந்திரா சொன்னார், "ஶ்ரீதேவிங்கர காட்டாறு எப்படி வந்துச்சுன்னு நீங்க படத்துல பார்த்தீங்க, அந்தக் காட்டாற்றோட இருக்கர கமல் தனக்கும் நடிக்கத் தெரியுங்கரதுனால நடிச்சிருந்தா அந்தக் கேரக்டர் கெட்டுப் போயிருக்கும், அவர் தன்னால இப்படி அமுக்கமாவும் நடிக்க முடியும்னு நிருபிச்சுட்டு அவர் கடைசி சீன்ல ஶ்ரீதேவியோட நிலைமைக்கு வந்ததும் ஶ்ரீதேவியை தூக்கி சாப்பிடரமாதிரி நடிச்சார் அதனால அவருக்கு பாரத் அவார்ட் கொடுத்தாங்க.  ஶ்ரீதேவிக்கு ஏன் கொடுக்கலைன்னு நீங்க எல்லாம் அந்தக் கமிட்டிக்கு தந்தி அடிங்க"ன்னா ர்.  அந்த ரிப்போர்டருக்கு இருந்த குறை உங்களுக்கெல்லாம் இருக்கக் கூடாதுன்னு, ஶ்ரீதேவி மாதிரி வேலை பார்த்த கார்த்திக்கு அவார்ட் கொடுத்துட்டு, கமல் மாதிரி அநாயசமா எல்லா வேலையையும் பார்த்த ஷீலாவுக்கு அவார்ட் தரலை.  யப்பா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.  ஒரு கவனக் குறைவுல விட்டுடேன், அதப் பெரிசாக்கி, எங்க வூட்ல வேர சொல்லி அவங்க பங்குக்கு இடிக்க.  யம்மா, இனிமே அடிவாங்க நம்ம ஒடம்புல சக்தியில்லை.  விட்டுடுங்க.

மத்தியானம் நடந்த வெஸ்டர்ன் கல்யாணம் நான் மொத மொதலா பாத்த வெஸ்டர்ன் ஸ்டைல் கல்யாணம்.  இதுக்கு கோ-ஆர்டினேடர்கள் - ராஜி தேவதாசனும், க்ரிஸ்டஃபர் தேவதாசனும்.  இவங்க இந்த நிகழ்ச்சிக்கு பக்காவா ப்ளான் பண்ணியிருந்தாங்க.  இடது பக்கம் இத்தனை சேர்ஸ், வலது பக்கம் இத்தனை சேர்ஸ்ங்கரது வரைக்கு ப்ளான் பண்ணியிருந்தாங்கன்னா பார்த்துக்கங்க.

மொதல்ல அந்த சேர்ஸ்ல உக்காரதுக்கு மைக்கேல் சார்புல அவரோட அம்மா, அப்பா, தாத்தா பாட்டி வந்தாங்க, ஆரத்தி சார்புல ஷீலா, ஷீலாவோட அம்மா, சகோதரி, அர்ஜுன் வந்தாங்க.  அதுக்கு அப்புறம்,  ஆரத்தி சார்புல ஒரே மாதிரி புடைவை கட்டிகிட்டு 5 பெண்கள் வந்தாங்க அதே மாதிரி மைக்கேல் சார்புல ஒரே மாதிரி குர்தா பைஜாமா போட்டுண்டு 5 பசங்க வந்தாங்க.  அப்புறம் எல்லோரும் எழுந்து நிக்க கார்த்தி ஷீலாவை அழைச்சுண்டு வந்தார்.  மேடைக்கு கீழ மைக்கேலும், ப்ரீஸ்டும் இருந்தாங்க, கார்த்தி வந்து ஆரத்தி கையை மைக்கேல் கைல கொடுத்துட்டு நகர்ந்துட்டார்.  அதுக்கப்புறம் ப்ரீஸ்ட் கல்யாணம்ங்கரது எவ்வளவு முக்கியங்கரதைப் பத்தி சொல்லிட்டு பைபிள்ல இருந்து ஒரு சில வாக்கியங்களப் படிச்சுட்டு, ரெண்டு பேரையும் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதமான்னு கேட்டுட்டு, அவங்களை உறுதி மொழி எடுத்துக்க வெச்சுட்டு, மோதிரம் மாத்திக்கச் சொல்லி, கல்யாணம் முடிஞ்சாச்சுன்னு சொன்னார்.  இது ரத்ன சுருக்கமா இருந்தாலும், ஒரு ஒழுங்கு இருக்கரதா எனக்குப் பட்டுது.  இதுக்கு அப்புறம்தான் தாகசாந்தி, ஸ்நாக்ஸ், டான்ஸ் (என்கிற உடான்ஸ்) எல்லாம்.

கடைசியா கேக் கட் பண்ணினதும், கார்த்தி வழக்கம் போல நல்லாத்தான் பேசினார், ஆனா அவர் பேச்சை தூக்கி சாப்டு ஏப்பமே விட்டுட்டான் அர்ஜுன்.  மைக்கேலோட ஃப்ரெண்டு ஒருத்தர் பேச வந்துட்டு, டெல்லி தமிழ்காரங்க "எனக்கு அவ்வளவா பேஷ வராது, மன்னிச்சுக்கோங்கோ"ன்னு மழலைத் தமிழ்ல பேசரமாதிரி, ஆரம்பிச்சுட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடி தோத்து போர ரேஞ்சுக்கு பேசி அசத்தினார்.

அடுத்தது தமிழ்நாட்டு விஷயம்:

நித்திக்கும் - ஆதீனம் அருணகிரிக்கும் லாடாய்ன்னு சில பத்திரிகைகள்ல போட்டிருக்காங்க.  நிஜமான்னு தெரியலை.  க்ராணைட் குவாரில ஊழல்ன்னு எல்லாரும் தாம் தூம்னு குதிக்கராங்க.  அதுல   பெரிய தலைன்னு ஒருத்தரை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.  அழகிரி பையன் தலைமறைவா இருக்கானாம்.  என்னய்யா காமெடி பண்றீங்க, எப்படியா இவ்வளவு பேருக்கு தெரிஞ்ச ஒருத்தன் சட்டுன்னு தலைமறைவாக முடியும்.  இதே ரேஞ்சுல போனா, தாத்தாவும்  சக்கர நாற்காலியோட காணலன்னு சொன்னாலும் சொல்வாங்க.  பாராளுமன்றத் தேர்தல் சீக்கிரம் வரலாம்னு ஒரு புரளி இந்தியாவுல ஓடுது, அதுக்கு ஜெவும் தேர்தல் வந்துட சான்ஸ் இருக்குனு கருத்து சொல்லிட்டு ஒரு நால்வர் அணியை ஃபார்ம் பண்ணியிருக்கார்.  அது எதுக்குன்னு தெரியலை, எப்படியும் இவர்தான் முடிவெடுக்கப் போரார், அப்புறம் எதுக்கு நால்வர் அணி?

தமிழ்ப் படம் நான்
விஜய் ஆண்டனி தயாரிச்சு, நடிச்சு, ம்யூசிக் போட்டு இருக்கர படம் நான்.  கதை Talented Mr. Ripley படத்தோட கதையையும் Taking Lives கதையையும் மிக்ஸ் பண்ணி அங்கங்க திகிலை சேர்த்து, சில இடங்கள்ல திரைக் கதைல சொதப்பி எடுத்திருக்காங்க.  சுமாரா ஆக்ட் பண்ணியிருக்கார் விஜய் ஆண்டனி.  பாட்டு சுமார்ன்னு வெப்ல பல இடங்கள்ல சொல்றாங்க எனக்கு அப்படி ஒன்னும் பெரிசா தெரியலை.  போரடிச்சா பாருங்க.

இனிமே அடுத்த வாரம் அலாஸ்கா பயணக் கட்டுரை 2ல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.


Monday, August 27, 2012

செய்திகள் வாசிப்பது - முரளி - 2

அலாஸ்கா பயணம் பத்தி அடுத்த பகுதி எழுதரதுக்கு முன்னாடி கொஞ்சம் லைட்டா சமீபத்துல ரிச்மண்ட்ல நடந்த ஒரு கல்யாணம் அதுக்கப்பரம் சமீபத்துல நான் பார்த்த சில சினிமா பத்தி எழுதிடரேன்.

ஆகஸ்ட் 25ம் தேதி நம்ம தமிழ்சங்கத்து முன்னாள் செயலாளர், எங்க நாடகக் குழு (தமிழ்த்தென்றல் நாடகக் குழு)வின் ஆஸ்தான இயக்குனர், நடிகர், கதாசிரியர், ஓவியர், யோகா மாஸ்டர், பல மொழி வித்தகர், பண்முகக் கலைஞர், திரு கார்த்திகேயனின் மகள் ஆரத்திக்கும், மைக்கேல் சலாட்டிக்கும் நடந்த கல்யாணத்துக்கு போய் நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டுட்டு ஒரு வேலையும் செய்யாம,  செஞ்சாமாதிரி ஆஸ்கார் அவார்ட் ரேஞ்சுல நடிச்சுட்டு வரும்போது சாத்துக்குடி பையும் வாங்கிண்டு வந்தேன்.

சாவியின் வாஷிங்டனில் திருமணம் எத்தனைப் பேர் படிச்சீங்களோ தெரியாது, அதை நேர்ல பார்த்தேன்னுதான் சொல்லனும்.  கார்த்தால நம்ம ஊர் மாதிரி கல்யாணம், மத்தியானம் அமெரிக்க ஸ்டைல்ல கல்யாணம்னு கலக்கிட்டாங்க.  மொதல்ல காசியாத்திரைல ஆரம்பிச்சு, ஊஞ்சல், பாலிகை தெளிக்கரது, கூரப்புடைவை தரது, கன்யாதானம்னு நம்மூர் கல்யாணத்தை சூப்பரா நடத்தினார்  நம்ம கண்ணன் சாஸ்திரிகள்.  கடைசியா மைத்துனன் அர்ஜுன் பொரி தர அதை ஆரத்தியும்,   மைக்கேலும்  யாக குண்டதுல இட்டுட்டு எல்லோருக்கும் சாஷ்டாங்கமா கீழ விழுந்து நமஸ்காரமும் பண்ணினாங்க.

கல்யாணம் ஃபங்ஷன்ல,  என்ன ஒரு பர்ஃபெக்ட் ப்ளானிங், என்ன ஒரு டைமிங், என்ன ஒரு அரேஞ்மெண்ட்னு எந்த ஒரு ஏரியாவை பார்த்தாலும் அதை நகாசு பண்ணி அசத்தியிருந்தாங்க.  யார் எந்த வேலை செஞ்சிருந்தாலும் அதுக்கு சூத்ரதாரி, இயக்குனர் எல்லாம் கார்த்திக்னு யாருக்கும் தெரியாத மாதிரி சூப்பரா ஆக்ட் வேற கொடுத்தார்.  நடுவுல ஆரத்தி கூட டான்ஸ் ஆடரேன் பேர்வழின்னு இங்கயும் அங்கயும் நடந்து நடந்தே ஒப்பேத்திட்டார்.

சாயங்காலம் எல்லாரும் தாக சாந்தி பண்ணிட்டு அதுக்கப்புறம் என்ன பண்றதுன்னு யோசிச்சு, சாப்பிட்ட லஞ்ச், ஸ்நாக்ஸ் எல்லாம் செறிக்கனும்னு டான்ஸ் வேற ஆடினாங்க.  அதுல நாகு, ஹரி, ரவின்னு பல பேர் குதி குதின்னு குதிச்சாங்க அது மாக்கரீனா டான்ஸுன்னு நாம நம்பிடனும்.  (இன்னும் நிறைய பேர் குதிச்சாங்க, எல்லார் பேரையும் சொன்னா, வெளில வாசல்ல பாத்தா கண்டிப்பா தர்ம அடிதான் எனக்கு).

இனிமே சினிமா பத்தி கொஞ்சம்.

மொதல்ல மார்ஜின் கால் (Margin Call).  கெவின் ஸ்பேசி, டெமி மூர் மற்றும் பலப் பலர் நடிச்சு வந்திருக்கர படம்.  படத்துல அடிதடி இல்லை, கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் இல்லை, நல்ல நடிப்பு, ஒவ்வொரு சீனும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்காங்க.  ஒரு ரெண்டு மணிநேரம் நல்ல படம் பாக்க ஒதுக்க முடியும்னா கண்டிப்பா பாக்கவேண்டிய படம்.  கதை: ஒரு ஃபைனான்சிங் கம்பெனில ஒரு நல்ல நாள் பார்த்து 80% ஆளுங்களை வீட்டுக்கு அனுப்பராங்க, அதுல ஒருத்தர் வீட்டுக்கு வருத்ததோட போறப்ப, தன் கீழ வேலை செய்யர ஒரு சின்ன பையன் கிட்ட ஒரு ஃப்ளாஷ் டிரைவை கொடுத்து இதை கொஞ்சப் பார்த்துடு ஆனா ஜாக்கிரதைன்னு சொல்லிட்டு போயிடரார்.  அதுக்கு அப்புறம் இருக்கர ஒரு 12 மணி நேரம் என்ன ஆகுதுங்கரதுதான் கதை.


ரெண்டா வது க்ராண்ட் மாஸ்டர் (மலையாளம்)
மோகன்லால், நரேன் (சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ல நடிச்சவர்), ப்ரியாமணி, சீதா, ஃபாத்திமா பாபு, ஜகதி ஶ்ரீகுமார், பாபு ஆண்டனி அப்புறம் தேவன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.  இந்த ரோலை, கமல், அமிதாப் ஏன் ரஜனி கூட பண்ணலாம். என்ன மோகன்லால் மாதிரி நடிப்புல அடக்கி வாசிக்கனும்.   தோள்ள துண்டைப் போட்டுன்டு கூட இருக்கர எல்லோருக்கும் சேர்த்து நடிக்கக் கூடாது.   கதை மோகன்லால் MCSC (Metro Crime Stoppers Cell)க்கு தலைவர்.  இவரோட முன்னால் மனைவி ப்ரியாமணி.  இவரை டைவர்ஸ் பண்ணினதும் இவர் ரொம்ப தனிமைப் பட்டுப் போய் எந்த ரெஸ்பாண்சிபிலிடியும் இல்லாம இருக்கரவர்.  இவரை சவால் விட்டு ஒரு சீரியல் கில்லர்  கொலைகளை செய்ய ஆரம்பிக்க, இதுக்கு நடுவுல இன்னொரு போலீஸ் ஆஃபீஸர் கொடச்சல் கொடுக்க ஆரம்பிக்க,  இவர் எப்படி எல்லோரையும் சமாளிக்கரார்ங்கரதுதான் கதை.  ஃபைட்டு,  பாட்டு, செண்டிமெண்ட், த்ரில் என்ன வேணும்னாலும், இந்தப் படத்துல இருக்கு.  கண்டிப்பா பாருங்க.

மூனாவது தமிழ்ப் படம் கலகலப்பு.
சுந்தர் சி டைரக்ட் பண்ணியிருக்கர படம்.  விமல், சந்தானம், மனோபாலா, மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, வி.எஸ். ராகவன் இவங்களையெல்லாம் தூக்கி சாப்பிடர ரோல்ல இளவரசு நடிச்சு வந்திருக்கர படம்.  லாஜிக் பாக்காம, காமெடி காமெடி காமெடி (சரி சரி ஒரே ஒரு டப்பாங்கூத்து டான்ஸும்) பாக்க ரெடின்னா கண்டிப்பா வீட்டுல எல்லோரோட பாக்கலாம்.  விமல் ஒரு டப்பா ஓட்டல் நடத்தரார், அவர் தம்பி மிர்ச்சி சிவா திருடன் வீட்டுக்கு பரோல்ல வந்திருக்கான், ஓவியா அந்த ஓட்டல் சரக்கு மாஸ்டர் வி.எஸ். ராகவனோட பேத்தி(சிவாவுக்கு ஜோடி), அஞ்சலி ஹெல்த் இன்ஸ்பெக்டர் (விமலுக்கு ஜோடி), 5 வட்டி அளகேசனா இளவரசு, அஞ்சலியோட முறை மாமன் வெட்டுப் புலியா சந்தானமும், அவரோட மாமனா மனோபாலாவும் வந்து கல்லா கட்டியிருக்கர படம்.

நாலாவது பில்லா 2
அஜித் அடிக்கடி ஸ்க்ரீன்ல நடக்கரார், அடிக்கரா, சுடரார்.  ஹூம். அப்பப்ப டான்ஸ் ஆடர சாக்குல குதிகரார்.  பாட்டு எல்லாம் தண்டம். ஃபைட் சூப்பர்.  படம் எடுக்கும் போது எந்த ஆர்டிஸ்ட் பணம் கேட்டாலும் படத்துல உடனே போட்டு தள்ளிடராங்க.  கடைசியா அந்த டைரக்டரையும் போட்டு தள்ளியிருக்கலாம்.  தமிழ்நாட்டுக்கு அகதியா வந்திருக்கர டேவிட் பில்லா (அஜித்), எங்கயிருந்துன்னு காமிக்கல, நாம அது இலங்கைன்னு யூகம் பண்ணிக்கனும்னு சொன்னா அத விட கேவலம் இல்லை.  ஒருத்தர் கூட இலங்கைத் தமிழ் பேசல.  மொதல்ல சின்னதா கள்ளக் கடத்தல் பண்ண ஆரம்பிச்சு பெரிய அளவுல எப்படி தொழில் பண்றார்ங்கரதுதான் கதை.

5வது படம் ஸ்நாட்ச் (Snatch)
இது ஒரு விதமான படம், இந்தப் படத்தை மாதிரி இந்தியாவுல படம் வந்தாலும் மக்களுக்கு புரிஞ்சு ஓட ஆரம்பிக்கரதுக்குள்ள மாதுரியோட பேரன் பேத்திக்கே பேரன் பேத்தி வந்திருக்கும்.  அங்கங்க நடக்கர பலதை ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து அசத்தியிருக்காங்க.  எனக்கு ப்ராட் பிட், ஜேசன் ஸ்டாதம் ரெண்டு பேரோட நடிப்பு ரொம்ப பிடிக்கும்.  இந்த படத்துல ப்ராட் பிட்  அடிக்கர கூத்தும், அவர் பேசர ஸ்டைலும் சூப்பர்.  வீட்டுல குழந்தைங்க இருந்தா அவங்களை வெச்சுண்டு பாக்காதீங்க.

6வது படம் கேப்டன் அமெரிக்கா
அம்புலிமாமா கதை, படம். அதுக்கு மேல இதுல ஒன்னும் இல்லை.

கடைசியா சங்கத் தலைவர் சத்தியாவோட உணர்வுகளைத் தூண்டும் ஒரு யூ ட்யூப் வீடியோ.

http://www.youtube.com/watch?v=BzmDgxduteM&feature=player_embedded

என்சாசாசாசாய்ய்ய்ய்ய்ய்ய்ய்......


சரி சரி எல்லோரும் "டேய் அடங்குடா"ன்னு சொல்றது காதுல விழுது, அதனால,  அடுத்து அலாஸ்கா பயணக் கட்டுரை ரெண்டுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, August 23, 2012

அலாஸ்கா பயணக் கட்டுரை - 1

காஸ்ட்கோவில் போனவாரம் ஒரு சிறிய உரையாடல்:

ரவி திருவேங்கடத்தான்: "ஹேய் முரளி, என்னப்பா அலாஸ்காலாம் போயிட்டு வந்தாச்சா, இல்லை இனிமேதான் போகப் போறியா?"

நான்: "போயிட்டு வந்தாச்சுப்பா, ஏன் என்ன திடீர்ன்னு கேக்கர?"

ரவி: "என்னமோ இதோ அடுத்த வாரம் அதப் பத்தி எழுதப் போறேன்னு சொன்னியே, அப்படி சொல்லி 7-8 வாரம் ஓடி போச்சே, அதான் கேட்டேன்.  ஒரு சின்ன தடயம் கதையே 5-6 வருஷமா நம்ம ப்ளாகுல ஓடுது, இது என்ன ஜுஜுபி."

நான்:  "இருப்பா ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு, அதுக்குள்ள இப்படி பப்ளிக்கா மானத்தை வாங்காதே.."

ரவி: "உங்க ஆஃபீஸ்ல ஆணி புடுங்கர வேலை ஜாஸ்தியா, யார் கிட்ட காது குத்தரே, என் தம்பியும் அங்கதான் வேலை செய்யரான்.  இந்த சம்மர் லீவுல பாதி பேர் வேலைக்கே வரப்போரதில்லை.  ஹூம் நீயும் நல்லா கதை விடர, நானும் நம்பறமாதிரி கேட்டுக்கரேன். "

நான்: "யப்பா இன்னும் ஒரு வாரத்துல ஆரம்பிச்சுடரேன்.  போதுமா?"

ரவி:  "தடயம் கதை மாதிரி, ஆரம்பிச்சா மட்டும் போதாது ஒழுங்கா முடிக்கனும்."

ரவி அடுத்த விஷயம் பேச ஆரம்பிக்கரதுக்குள்ள வுடு ஜூட்.

பூர்வாங்க வேலைகளை பத்தி ரொம்ப சொல்லாம, டைரக்ட்டா அலாஸ்கா டிரிப் பத்தி சொன்னா க்விண்டின் டராண்டினோ படம் மாதிரி இருக்கும் அதனால ரவியோட நடந்த ஒரு சின்ன பேச்சை மொதல்ல போட்டுட்டேன், இப்ப மெயின் கதைக்கு வருவோம்.

அலாஸ்கா க்ரூய்ஸ் டிரிப் போகலாம்னு மொதல்ல ஒரு பிட்டை போன வருஷம் ஆகஸ்ட்-செப்டம்பர்ல போட்டது,  என் வீட்டுக்காரம்மாவோட அம்மாவோட அக்காவோட ரெண்டாவது பையன்(அதாவது மாலதியோட கசின், சுருக்காமா சொன்னா சுவாரசியமா இருக்காதுன்னு கொஞ்சம் இளுத்து புடுச்சு எளுதிட்டேன்).  அவன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்.  வடிவேலு மாதிரி ஒரு பெரிய பிட்டை போட்டுட்டு, சும்மா இருந்த சங்கை நல்லா ஊதி விட்டு, அமெரிக்காவுல இந்தக் கோடியில எங்க வீடும், அடுத்த கோடி கலிஃபோர்னியாவுல ஒரு 7 வீட்டு மக்களும், சியாட்டில்ல ஒரு வீடும் சேர்ந்து பேசிப் பேசிப் பேசிப் பேசிப் (நிஜமாவே அவ்வளவு பேசியிருக்காங்க) பேசி ஒரு வழியா 44 பேர் சேர்ந்து க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினாங்க.

(நாகு: "என்னது முடிவு பண்ணினாங்கன்னு எழுதர அப்போ நீ முடிவு பண்ணலையா? "

நான்: "நானும் சேர்ந்து முடிவு பண்ணலா மா?  சொல்லவே யில்லை!!!!  அடுத்த வாரம் காஸ்ட்கோ போய் பால், தயிர் பர்ச்சேஸ் பண்ணும் போது நானே முடிவு பண்ணி ஒரு செட் சாக்ஸ் வாங்கிட்டு வரப்போறேன் அப்பதான் இவங்களுக்கு நம்ம பவர் என்னன்னு தெரியும், எப்ப்புடி?"

நாகு: "சூப்பர் இப்படியே இரு,  வெளங்கிடும்.... " )

உடனே இருவர் குழுவை ஃபார்ம் பண்ணி அவங்க ரெண்டு பேர் மட்டும் காஸ்ட்கோ கிட்ட பேசி நல்லா  திட்டம் போட்டு, தேவையான ரூமெல்லாம் புக் பண்ணி ஒரு வழியா புக்கிங் விஷயம் முடிச்சதும், எதிர்பாராத விதமா சில பேர் வரமுடியாத சூழ்நிலை உருவாகி, கடைசியா 18 பேர் மட்டும் க்ரூய்ஸ் போகலாம்னு முடிவு பண்ணினோம்.  இதுல காமெடி என்னன்னா,  க்ரூய்ஸ் போகலாம்னு பிட்டை போட்ட மகானுபாவன் ஜகாவாங்கிட்டு, பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான், அவனை அப்பால பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். (வேற வழி).

காஸ்ட்கோ நல்லாவே டிரிப்பை மேனேஜ் பண்ணினாங்க.  அப்பப்போ என்ன கேள்வி கேட்டாலும், டக்குன்னு பதில் சொல்லி, தேவையானதை தேவையான நேரத்துல செஞ்சு கொடுத்தாங்க.  மொதல்ல புக் பண்ணும் போது ஒருத்தருக்கு  100$ ந்னு வாங்கிட்டு இந்த வருஷம் ஏப்ரல் மாசம் மொத வாரம் மொத்த பணத்தையும் கட்டினா போதும்னு சொல்லிட்டாங்க.  இது ரொம்ப சவுகரியமா இருந்தது, மாசா மாசம் கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சுட்டு அதை ஏப்ரல் மாசம் கட்டிட்டோம்.

க்ரூய்ஸ் ஸ்டார்ட் பண்றது சியாடில்லருந்து அதுக்கு நாலு பேருக்கு டிக்கெட் போட்டு அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணினா, ரிச்மண்ட் ஏர்போர்ட் போனதும் அதுக்கு ஒரு கேட்டை போட்டுடானுவ.  எங்க டிரிப் ரிச்மண்ட் - சார்லேட் - சியாடில், அதுல ரிச்மண்ட் - சார்லேட் ஃப்ளைட் சார்லேட்லயிருந்து வரும்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராதுன்னு ப்ளைட் கிளம்பர டைமுக்கு 5 நிமிஷம் முன்னாடி சொன்னானுவ,  சொல்லிட்டு, இங்க வாங்க நாங்க நாளைக்கு ஃப்ளைட்டுக்கு டிக்கெட் போட்டு கொடுக்கறோம்ன்னு சொல்லி ஒரு லைன் ஃபார்ம் பண்ண சொன்னாங்க.  குடும்பமே கெளண்டர் முன்னாடி லைன்ல நின்னுகிட்டே மெதுவா ஹரே ராமா மஹா மந்திரம் சொல்ல ஆரம்பிச்சோம்.  5 நிமிஷம் கூட சொல்லியிருக்க மாட்டோம், நம்ம நாட்டுகாரர் ஒருத்தர் திடீர்ன்னு வந்து "நான் யு.எஸ் ஏர்வேஸ்லதான் வேலை செய்யரேன், வாங்க நான் ஏற்பாடு பண்றேன்" சொல்லி யார் யாரையோ பிடிச்சு 15 நிமிஷத்துல ஃபிலடெல்ஃபியா வழியா சியாட்டில் போக ஏற்பாடு செஞ்சு தந்தார்.  மஹா மந்திரத்துக்கு பலன் உண்டுன்னு மனப்பூர்வமா நம்பர ஆளுங்க நாங்க, ஆனா இப்படி சொன்ன 5 நிமிஷத்துல பலன் கை மேல கிடைச்சதும், ஏர்போர்ட்ல டான்ஸ் ஆடாத குறைதான்.  டிக்கெட் போட்டு கொடுத்ததும், அவருக்கு தாங்க்ஸ் சொன்னா, "முரளி என்னை தெரியலையா, நான் உன்னை நிறைய தடவை நம்ம கோவில்ல பாத்திருக்கேன்.  உனக்கு என்னை நியாபகம் இல்லை போல இருக்குன்னு" போற போக்குல ஹிந்தில அடிச்சு விட்டார்.

ஒருவழியா ஃபிலி வழியா சியாட்டில்ல மாலதியோட கஸின் (சிஸ்டர்) வீட்டுக்கு ராத்ரி 1:30 மணிக்கு போய் சேர்ந்தோம்.  காலைல 10:30 மணிக்கு கிளம்பி சியாட்டில் ஹார்பர் போய் நாங்க போக வேண்டிய நார்வேஜியன் க்ரூய்ஸ் கப்பல்ல ஏறினோம். 



மஹிமா இழுத்து பிடிச்சு கட்றாளே இந்த கப்பல்தான் அது.  இந்தக் கப்பல மொத்தம் 14 மாடி அதுல 13, 14 மாடி கொஞ்சம் பெருந்தனக்காரங்களுக்காம்,  என்னைய மாதிரி ஏழை பாழைங்களுக்கு கிடையாதாம், சீசீ அலாஸ்கா குளிர்ல 14ம் மாடில போயி எவன் இருப்பான்னு நாங்களும்  போகல.

ஆக, அலாஸ்கா கப்பல்ல ஏறியாச்சு.  அடுத்து, அலாஸ்காவோட காபிடல் ஜுனு போன கதை அடுத்த பாகத்துல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Tuesday, July 31, 2012

இந்திய அரசியலில் மீண்டும் ஒரு அராஜகம்

'சோ' வை நிறைய பேருக்கு புடிக்காது, எவ்வளவு கேவலமா திட்டனுமோ திட்டுவாங்க, போன வார துக்ளக்ல ஒரு கேள்வி பதிலுக்கு அவரோட பதிலைப் படிங்க அது எவ்வளவு பர்ஃபெக்ட்டா இருக்குன்னு தெரியும்.

கே: ‘பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்வார்’ என்று ப. சிதம்பரம் கூறியுள்ளாரே? 

ப: ஒரு குறிப்பிட்ட அமைச்சரை, வேட்டி கட்டுபவரை, தென்னகத்திலிருந்து வருபவரை, நிதியமைச்சராக இப்போது நியமித்தால், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும், அந்த நியமனம் உதவும். அதுதான் சரியான நடவடிக்கை. அதைப் பிரதமர் எடுப்பார் - என்று சிதம்பரம் நம்புகிறார். அது நடக்கிறதா, பார்ப்போம். 


நேத்திக்கு ப.சிதம்பரத்தை மறுபடி நிதி அமைச்சரா நியமிச்சுட்டதா தகவல்.


எவ்வளவுதான் அரசியலைப் பத்தி எதுவும் எழுதாதேன்னு ஆளாளுக்கு மதிச்சும்,  சில சமயம் மிதிச்சும் சொன்னாலும், எதோட வாலையோ நிமிர்த்த முடியாதுன்னு சொல்லுவாங்களே அதுமாதிரி தான் இதுவும்.  கவுண்ட மணி சொல்ற மாதிரி "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா".


முரளி.