Sunday, April 08, 2018

ஒரு கதை சொல்லட்டுமா..



பெரியவர்களுக்கான பொதுவான மாத்திரையை சிறியவர்களுக்கு கொடுக்கும்படி வந்தால் என்ன சொல்வாங்க? முழு மாத்திரை தேவை இல்லைங்க, பாதியா உடைச்சு அரை மாத்திரை குடுங்க போதும்-ன்னு நம்ம ஊர்ல சொல்லிக் கேட்டிருப்போம், இல்லையா? அதாவது, தேவையைப் பொறுத்து அளவை மாற்றிக் கொள்வோம்.

அது மாதிரியே பாதியா வெட்டி அரை மாத்திரை எடுத்துக் கொள்ளும் எழுத்து வகை தமிழில் உண்டு.

குற்றியலுகரம்.

மேலே சொன்ன மாத்திரைக் கதை ஒரு புரிதலுக்காக. உண்மையில் தமிழில் மாத்திரை என்பது கால அளவு. ஒரு எழுத்து, ஒலிக்கும் நேரத்தைக் குறிக்க பயன்படுத்துவது. தோராயமாக, கண் இமைக்கும் நேரம், கை சொடுக்கும் நேரம் எல்லாம் ஒரு மாத்திரை என்பார்கள். இன்றைய அளவுப் படி கிட்டத்தட்ட அரை நொடி.
ஆச்சா?

தமிழின் குறில் எழுத்துக்களுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரைகள், மெய்யெழுத்துக்களுக்கு அரை மாத்திரை அளவு என்பது விதி.

இப்போ தலைப்புக்கு வருவோம்.

ஒரு கதை சொல்லட்டா?
உங்க மேல ஒருத்தி/ஒருவன் கிறுக்கா இருக்கறதா வைப்போம்.

ஒரு நாள், உங்க கிட்ட வந்து "உம்மேலே கிறுக்கு" அப்படின்னு சொல்றாள்/ன்.
நீங்களும் சொக்கிப் போயிடறீங்க.
அப்புறம்?

மேலே என்ன ஆச்சுன்னு ஆராயலாம் தான், ஆனா இப்போ நம்ம ஆர்வம் இருக்க வேண்டியது இலக்கணத்தின் மீது.

"உம்மேலே கிறுக்கு"
அந்தச் சொற்களில் உள்ள இரண்டு "உ" க்களையும் சொல்லிப் பாருங்கள். முதல் உ-வை முழுசாச் சொல்வோம். கிறுக்கு-ல் (கு=க்+உ) உள்ள "உ" பாதில நின்னுடும்.  சொல்லித்தான் பாருங்களேன். "கிறுக்உ" என்று ஒலிக்காது.

உங்க ஆளு சொன்னதுல, வெட்கத்தில குறுகிப் போய் நீங்க நிக்கறீங்களோ இல்லையோ, அந்த "உ" குறுகி நின்னுடும். இப்படிக் குறுகி, முழு மாத்திரை அளவுக்கு ஒலிக்காகாமல் அரை மாத்திரையில் ஒலிக்கும் உகரம், குறுகிய + உகரம் = குற்றியலுகரம்.
அம்புட்டுதான்.

கதை சொல்லறேன்னு உங்க காதை வாங்கி இலக்கணம் சொல்வது தப்பா?
தெரியாது. ஆனா இன்னொரு குறிப்பு சொல்ல தெரியும்.

தெரியாது ->  இந்தத் "து"வில் உள்ள "உ" (து=த்+உ) முழுசா ஒலிக்குது. அதனால இது முற்றிய + உகரம் = முற்றியலுகரம்.

அவ்வளவுதான் குற்றிய/முற்றிய உகரங்கள்.

ஒரே கல்லுல இரண்டு மங்கா:
ஒரே கதையில குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்.

 ​#ஞாயிறு போற்றுதும்.


Sunday, April 01, 2018

முதிர்ச்சி

வேட்டி அணிவதை
தொலைத்ததில் இருந்து
வேலியில் ஓணான்களையும் காணோம்.

Sunday, March 25, 2018

பசியாறல்


அடிக்கடி என் மலேசிய நண்பர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதே பிழைப்பாய் போய்விட்டது.

சில வருடங்களுக்கு முன் இங்கு வசித்துவந்த ஒரு மலேசியத் தமிழ்த் தம்பதிகள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரிச்மண்ட் வந்திருக்கிறார்கள். அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது நாளைக்கு பசியாறைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டார்கள். அது என்ன பசியாறல் என்றேன். அங்கிருந்த அனைத்து மலேசியர்களும் என்னை ஆச்சரியமாகப் பார்த்து தெரியாதா - நாங்கள் காலைஉணவை பசியாறல் என்போம். பசி ஆறுதல் என்பதை சுருக்கமாக அப்படி சொல்வோம் என்றனர்.

இது breakfast என்பதனை அப்படியே தமிழாக்கம் செய்தது போல இருக்கிறதே என்றேன்.

நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார்.

நானும் தங்கமணியும் ஒரேகுரலில் சொன்னோம்.

டிபனு...

இப்போது  அந்த இருவரும்  கடும் வயிற்றுவலிக்காக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Saturday, March 24, 2018

பள்ளிக்கூடம்

ஆப்பிள் (Android) ஏந்தும் கையில் ஆயுதம் எதற்கு 

ஆடிப்பாடி மகிழ்ந்து
அன்பில் திழைத்து 
புத்தகங்களில் புதைந்து
நட்பைச் சுவைத்து
ஆனந்தத்தில் மூழ்கி
அனுபவிக்கும் வயதில்
தன்னயும் மாய்த்து
தன்னைப் போல் பலரையும் மாய்த்துக்
கனவுகளை கல்லறையில் புதைத்து
கண்ணீர்க் குருதி ஆறாய்ப் பாய 
மனதில் பயத்தோடு தினமும் ....


பள்ளிக்கு

Thursday, March 08, 2018

மகளிர் தின வாழ்த்து



எல்லையில்லாத் தொல்லைகளை 
வில்லைகளாக விழுங்கியும்
முல்லைகளாகச் சூடியும்
புன்னகையால் புறக்கணித்தும்
வெற்றி காணும்
பெண்களுக்கு

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 🎊😃