Tuesday, May 23, 2017

மீனாவுடன் மிக்சர் 29 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 3}

முதல் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 1
இரண்டாம் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2 

இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்ப்பு கூடம், அமெரிக்கா

நாற்காலியில் அமர்ந்திருப்போர் - பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.

திருவள்ளுவர் சற்று கோபமாக தேர்வு அறையிலிருந்து திரும்பி வந்து வரவேற்ப்பறையில் மீண்டும் அமர்கிறார்.  

Translator: அம்மா அம்புஜம், உங்களை நேர்முகத் தேர்வுக்கு அய்யா உள்ளே கூப்பிடறாங்க.  என்னோட இப்படி சீக்கிரம் வாங்கம்மா!  (வேகமாக உள்ளே செல்ல திரும்புகிறார்).

அம்புஜம்: தம்பி எனக்கும் துள்ளி குதிச்சு வேகமா உங்களோட வர ஆசை தான் ஆனால்  பாருங்க என் கால் முட்டிக்கு அது புரியலையே!  (நாற்காலியை பிடித்து கொண்டு மெதுவாக எழுந்திருக்கிறார்).  

ஏம்மா பாஞ்சாலி நான் தேர்வு முடிஞ்சு வெளியே வர கொஞ்சம் நேரமாகும்.  எனக்கு  அவா கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கு.  அதனால நீ வேணா போய் அதுக்குள்ள உன் தலைல தடவியிருக்கிற  வெந்தயத்தை அலசிண்டு வந்துடறையா?  ஏற்கனவே இந்தியர்கள்னா இவாளுக்கு இளப்பம்னு பேசிக்கறா, நீ பாட்டுக்கு தலைல ஏதோ ஒழுக தேர்வுக்கு  போனா, நன்னாவா இருக்கும்? அதான் சொல்லறேன்.  

மீனா சங்கரன்:  அம்மா,  உனக்கு இது  இப்ப ரொம்ப அவசியமா?  போய் நல்லபடியா தேர்வை முடிச்சு அமெரிக்க பிரஜையாகி திரும்பி வா, சரியா?  ஆல் தி பெஸ்ட் அம்மா.  

அம்புஜம்:  டோன்ட் வொர்ரி மீனா.  நான் தான் ரெண்டு நாளா வெங்கடாசலபதியை வேரோட பிடிங்கியிருக்கேனே.  அதோட பாதாம் கீர் வேற நைவேத்தியம் பண்ணறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அந்த பகவான் நிச்சயமா என்னை கை விட மாட்டான்.  நான் இதோ போயிட்டு வந்துடறேன்.

(மொழிபெயர்ப்பாளரின் பின்னால் அம்புஜம் தேர்வறைக்கு செல்கிறார்)

Immigration Officer:  Please have a seat Mrs. Ambujam.  Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today? 

Translator:  தயவு செய்து உட்காரவும் திருமதி அம்புஜம்.  உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர இன்று வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?

அம்புஜம்;  சூளுரைக்கறது ஒண்ணும் பிரச்சனை இல்லை தம்பி.  ஆனா வலது கையை அவ்வளவு நேரம் தூக்கி பிடிக்கறது தான் கஷ்டம்.  ஏன்னா கொஞ்ச வருஷமா வலது தோள்பட்டை ல வாதம் இருக்கு.  நானும் எத்தனையோ எண்ணை தடவிப்பாத்துட்டேன்.  ஒண்ணும் கேக்க மாட்டேங்கறது.   உங்க ஆபீசர் கொஞ்சம்ட் adjust பண்ணிண்டா நான் வலது கை சுண்டு விரலை வேணா இப்படி தூக்கிப் பிடிக்கவா?  

(looking at the Translator) தம்பி ஐயாவுக்கு புரியறா மாதிரி  எடுத்து சொல்லுப்பா.  அவர் பாட்டுக்கு நான் சூ சூ போகணும்னு சொல்லறேன்னு தப்பா நினைக்க போறார்.  அடடே என்ன இப்படி பேந்த பேந்த முழிக்கிறார்!  No going one bathroom sir, just taking oath sir.

Translator:  I have no problems.....(Immigration officer interrupted)

Immigration Officer:  Never mind the translation.  I understood that.  Forget the oath part.  Let us begin the interview right away.

Translator:  அம்மா உங்க சுண்டு விரலை கீழே  போட்டுடுங்க.  அய்யா இப்போ தேர்வை தொடங்க போறாரு. 

Immigration Officer: Let us begin with the civics quiz.  

Ambujam: மொழி பெயர்ப்பு தம்பி, நீங்க சிரமப்படாதீங்க.  I talk good English. I will be ok.  நீங்க  பேசாம ரெஸ்ட்  எடுங்க.  

Question 1:  How many US senators are there Mrs. Ambujam? 

Ambujam:  100 senators but I have one question  sir.  Why US needs 100 senators?  Waste of money, isn't it?  இதை தான் காசை கரியாக்கரதுன்னு எங்க ஊர்ல சொல்லுவோம் sir. 

Officer:  Never mind that Mrs. Ambujam.  Let's try a different question - What does the Constitution do?

Ambujam: (தனக்குள்ளே)  என்னதிது?  Constipation பத்தியெல்லாம் இங்க கேக்கறா?  சரி, சாருக்கு வயறு உபாதை  போல இருக்கு. நமக்கு தெரிஞ்ச நாலு வைத்தியத்தை சொல்லுவோமே!

ஒண்ணும் கவலை படாதீங்க சார்.  If you follow my instructions, you will feel better in no time sir.  (Takes a ziploc snack bag from her purse).  Try taking a quarter spoon of this 'அங்காயப்பொடி' with buttermilk for 3 days and life will be smooth again sir.  This powder is magic, I tell you.  I made it myself.  (beams in pride)

Officer (shouts in exasperation):  CONSTITUTION Mrs. Ambujam, not Constipation!  

Ambujam: அடடா எதுக்கு இந்த கத்து கத்தறார்?  Do you have blood pressure sir?  You should see a doctor soon.  Health is wealth, you know.  Look at me.  I am 75 years old and I have no pressure problems at all.  Only people around me have blood pressure sir.  Never me.  (shakes head in pity)

Officer:  That does not surprise me Mrs. Ambujam.  Let's try a different approach here.  What can you do to make this country better if you are a citizen?  Will you make a positive contribution to this nation if you are a citizen?

Translator: அம்மா உங்களை பிரஜை ஆக்கினா, இந்த நாட்டுக்கு ஏதாவது உருப்படியா பண்ணுவீங்களான்னு  ஐயா கேக்கறார்.  

Ambujam: யாரை பார்த்து என்ன கேள்வி கேக்கறாரு?  நல்லா எடுத்து சொல்லுங்க உங்க அய்யாவுக்கு.  உப்பு காரமா வடாம் வத்தல் போட இந்த அம்புஜத்தை மிஞ்ச இன்னும் ஒருத்தர் பொறந்து தான் வரணும்னு. அப்புறம் உங்க ஊரு Burger King la onion rings அப்படீன்னு சொல்லி ரொம்பவே சுமாரா ஒரு பஜ்ஜி போடறாங்களே.  அவங்களுக்கு ஒரு சமையல் பயிற்சி கொடுக்க பிளான் வச்சிருக்கேன்.  இந்த நாடே என் பஜ்ஜி சுவையில மயங்கர நாள் ரொம்ப தூரத்துல இல்லைன்னு அவர்கிட்ட சொல்லுங்க தம்பி. 

Translator: Sir, this woman, apparently, is an expert chef and says that she has plans to revitalize the way this country makes food.

Officer:  Oh really?  That is as good a contribution as any.  Alright Mrs. Ambujam.  Congratulations, you have passed your citizenship test.

Ambujam: Thank you sir.  I knew offering பாதாம் கீர் as நெய்வேத்தியம் was a very good idea sir. (smiles widely)

Officer: Huh?? Never mind.  (to the translatorr) Please show Mrs. Ambujam out and bring Mr. Arajagasathru in for his test.
.
(தொடரும்)

- மீனா சங்கரன்


Tuesday, March 14, 2017

கிராமத்தில் ஓர் நாள்

Photo Courtesy: Internet

இப்பொழுதெல்லாம் கொசுக்களும் தம் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றியிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.  அவை வருவதும் தெரிவதில்லை, கடிப்பதும் தெரிவதில்லை, பறப்பதும் தெரிவதில்லை.

ஒலி குறைக்கும் கருவி (silencer) பொருத்தி வரும் போலும்.   நம் காதுகளுக்கு வெகு அருகில் பறந்தாலும் ரீங்காரமெல்லாம் கேட்பதேயில்லை.  நமது டமாரம் தான் காலி என்று பயந்து, சுற்றும் முற்றும் புள்ளினங்களின் ஓசை கேட்ட பின் தான் நிம்மதி.

மேலும் குத்தூசி முறை (acupuncture) கற்றிருக்கும் போல.  அவைகளுக்குள்ளும் சந்தைப்படுத்துதல் (marketing), பயிற்சிக்கூடங்கள் (training), எல்லாம் இருக்குமோ என்னவோ?  ஏனெனில் தொழிலில் அத்தனை துல்லியம், கடிப்பதே தெரிவதில்லை.

சிறிது நேரம் கழித்து, என்னடா கால் பக்கம் சுர்க்குன்ற மாதிரி இருக்கிறதே என சுர்க்கிய இடத்தில் பட்டென அடித்தால், உள்ளங்கை விரல்களில் ரத்தம்.  அட கொசு!  அப்பாடா ஒன்றை அடித்தாயிற்று என கூர்ந்து கவனித்தால், ஒரு ரெண்டு மூன்று கொசுக்கள் எனது கால்களை வட்டமடித்துக் கொண்டிருந்தன, எங்கே எப்படி தரையிறங்கலாம் என.

இவை, நான் செய்யும் செயலுக்கு மிக்க இடைஞ்சலாய்ப் போனது.  ஆப்பக்கட ஆயா மாதிரி ஈ ஓட்டினால் நம்மை விட்டு போவதாய்த் தெரியவில்லை.  அப்பொழுது, ஆரம்பித்தது எனது அபிநயங்கள்.  ஏனெனில், ஆரம்பித்த செயலை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.  பாதியில் விட்டுவிட்டு வரவும் முடியாது, வந்தால் அந்த நாள் தொலைந்தது.  பரதநாட்டியம் முதல் பரோட்டா மாஸ்டர் வரை அத்தனை கலைஞர்களும் தோற்றனர் என் அபிநயத்தில்.

ஓர் அடியில் உயிர் போய்விடும் எனத் தெரிந்தும், அவற்றின் உருவத்தை விட பன்மடங்கு பெரிய விலங்கான மனிதர்களையே மிரட்டுவதை எண்ணி வியந்து, இன்றைய அதிகாலைப் பல் துலக்கலை வெற்றிகரமாக முடித்துக் கிணற்றங்கரையை விட்டு வெளியேறினேன்!

Wednesday, February 15, 2017

கடிலக்கரையினிலே - கொய்யா(மரத்து)ல...


ராட்டடூயி படத்தில் ஒரு காட்சி வரும். உணவு விடுதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரு உணவு விமர்சகர் ஒரு கரண்டி உணவை எடுத்து வாயில் வைத்து மெல்லுவார். அப்படியே அது அவரை சிறு வயதில் அம்மா சமைத்த சாப்பாட்டில் கொண்டு விட்டுவிடும். அதைப்போல எனக்கு இந்த வாரம் நேர்ந்தது. வால்மார்ட்டில் கொய்யாப்பழங்கள் பார்த்தேன். ஒரு டப்பாவில் டஜன் வைத்திருந்தார்கள். சாப்பிட்டு நாளாயிற்றே என்று வாங்கியிருந்தேன்.

வீட்டுக்கு  வந்து அதில் ஒன்றை எடுத்துக் கடித்தேன்....  ஜிவ்வென்று அப்படியே பண்ருட்டி எதிர் வீட்டு தோட்டத்து கொய்யா மரத்துக்கு டைம் டிராவல்! அந்த செங்காயின் மணமும், சுவையும் அந்த நாளுக்கு கொண்டு சென்று விட்டது. கடைகளில் எப்போதோ பறிக்கப்பட்டு பழுத்த கொய்யாக்களை தின்று அந்த சுவையும் மணமும் மறந்தே போய் விட்டது.

பண்ருட்டியில் எதிர் வீடு ஒரு ரயில்வே காலனி வீடு. வீட்டை சுற்றி பெரிய தோட்டம். முருங்கை, மருதாணி,ஆமணக்கு, காய்கறிகள் என பலவிதமான மரஞ்செடிகொடிகள். அவரை,பாகற்காய் போன்ற கொடிகள் தினமும் படர்ந்து வேகமாக வளர்வதை கண்டு அதிசயித்திருக்கிறேன். வெண்டை, கத்திரி, சுண்டை என்று பலவும் உண்டு. அண்மையில் ஒருவர் கத்திரி செடியில் வளருமா கொடியில் வளருமா என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

அந்த தோட்டத்தில் மிகவும் பிடித்தது கொய்யா மரம். அவ்வளவு பெரிய மரம் கூட கிடையாது. உங்களுக்கு கொய்யாமரம் பற்றி தெரியுமா? மிகவும் வலுவான மரம். சிறிய கிளையாக இருந்தாலும் வழுவழு என்று வலிமையாக இருக்கும். இந்த ஊரில் கிரேப் மர்டில் என்று ஒரு புதரா மரமா என்று குழப்பும் ஒரு மரம் உண்டு. அதன் கிளைகளைப் பார்க்கும்போதெல்லாம் கொய்யா மரம்தான் நினைவுக்கு வரும்.

அந்த வீட்டில் மூன்று சகோதரர்கள் - கண்ணன், ரவி, பாபு. சுருக்கி கண்ராவி பாபு என்போம்! கண்ணன் என்னைவிட ஒரு வயது சிறியவன், ரவி ஒரு வயது பெரியவன், பாபு என்னும் பாலகிருஷ்ணன் இன்னும் சற்று மூத்தவன். எங்கள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் பாபுதான். கோடைக்காலங்கள் நிறைய அங்கேதான் கழித்தேன். அவர்கள் விளையாட்டிலும் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அப்பா எங்களுக்கு நிறைய விளையாட்டுப் போட்டி நடத்துவார். ஹை ஜம்ப், லாங் ஜம்ப், கிட்டிப்புள் எல்லாம் அங்கேதான்.

கொய்யா மரத்தில் நன்றாக லூட்டி அடிப்போம். கொய்யாக்காய்கள் கொஞ்சம்கூட வளரவே விடமாட்டோம். கொஞ்சம் நெல்லிக்காய் அளவு தாண்டியதும் அம்பேல். பழுக்காத காய்கள் நிறைய தின்றதால்தானோ என்னவோ வால்மார்ட்டின் செங்காய்கள் அந்த சுவையை நினைவூட்டின. சிறிய கிளைகள் உடைந்துவிடும் என்ற பயம் இருந்தாலும் ஒரு கிளை கூட நாங்கள் ஏறி முறிந்ததாக நினைவில்லை. மேல், கீழ் கிளைகளில் நின்று கொண்டு மரமே அதிரும் அளவு குதித்து கிளைகளை ஆட்டி விளையாடுவோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சில பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மேமான்ட் பார்க் போயிருந்தேன். அங்கே கழுகுகள் இருக்கும் இடத்திற்கு எதிரில் ஒரு மேடான பகுதி இருக்கிறது. அங்கே ஏறினால் முந்திரி மரம் மாதிரி தரையில் அடர்ந்து பரந்து வளர்ந்த ஒரு மேக்னோலியா மரம் இருக்கிறது. அதனுள் போய் பிள்ளைகள் மேலே ஏறி லூட்டி அடித்தார்கள். ஒரு பிள்ளையை என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அவ்வளவு மேலே ஏறியிருந்தான்.


https://youtu.be/7cRpWwWJFD4

https://www.youtube.com/watch?v=GYpDXZ2iZuQ



Thursday, December 15, 2016

கல்யாணமாம் கல்யாணம்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம் ஆனால் சொர்க்கத்திலேயே கல்யாணம் நடக்கும் என்று யாரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள்.ஆனால் செயற்கையாக மனிதன் தயார் செய்த சொர்க்கத்தில் ஒரு கல்யாணம் சென்ற நவம்பர் மாதம் 16 ம் தேதி  இனிதே நடந்தது அப்படி சொர்க்கத்தை உருவாக்கி தன் மகளூக்கு கல்யாணம் செய்தவர் பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி.இவர் மிகப் பெரிய சுரங்கத் தொழில் அதிபர் .எல்லாவற்றையும் விட இவர் ஒரு அரசியல்வாதி பி.ஜே. பி கட்சியைச் சேர்ந்தவர் இவருடைய சகோதரர்கள் இருவரும் அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரும் மாநில பி.ஜே.பி கட்சியின் முக்கியத் தலைவர்கள்.ஒருவர் பாராளூமன்ற உறுப்பினர். மற்றவர் முந்தைய எடியூரப்பா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இந்த ஜனார்த்தன ரெட்டியும் அமைச்சராக இருந்தவர்தான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மந்திரியாக இருந்தால் அது எவ்வளவு பெரிய குடும்பமாக இருக்க வேண்டும்  அதற்கு தகுந்த முறையில் எவ்வளவு கௌரவமாக திருமணத்தை நடத்த வேண்டுமோ அவ்வளவு கௌரவத்தோடு நடத்தி முடித்திருக்கிறார் திருவாளர் ரெட்டி.
 
திருவாளர் ரெட்டிக்கு இன்னொரு முகமும் உண்டு இவர் சில ஆண்டுகளுக்கு முன் பல வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யபட்டு சிறைவாசம் செய்துவிட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளீயே வந்தவர்  இன்னும் விசாரனை தொடங்கப்படாத வழக்குகளூம் இவர் மீது உண்டு.கர்நாடக மாநிலத்தின் வனத்துறை .ஆந்திர மாநில வனத்துறை இந்திய அரசாங்கத்தின் வணிக வரித்துறை.சுரங்கத் துறை, வருமான வரித்துறை., மாநில காவல் துறை இப்படி அநேகமாக எல்லா துறைகளூம் இவர் மீது வழக்கு போட்டிருக்கின்றன. எல்லா வழக்குகளூம் இன்னும் நிலுவையில் இருகின்றன.இவருடைய எல்லா வங்கிக் கணக்குகளூம் முடக்கப்பட்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.இவருடைய தயவில் பல அரசியல்வாதிகள் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய வாய் வார்த்தையை சட்டமாகவும்,உத்தரவாகவும் ஏற்று மதித்து செயல்படும் பல தலைவர்கள் டெல்லியிலும் உண்டு.பெங்களூரிலும் உண்டு அப்படி இருக்கும் போது எத்தனை வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால் என்ன என்று கேட்காமல் கேட்டிருக்கிறார் .ரெட்டி .முடக்கப்படாத வங்கிக் கணக்கிலிருந்து தன்னுடைய சொந்தப் பணத்தை எடுக்க கால் கடுக்க மணிக்கணக்காக ,அல்ல நாள் கணக்காகக் காத்திருக்கும் சாதாரண மனிதன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான் ரெட்டி 500 கோடி செலவு செய்து தன் மகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தி முடித்திருக்கிறார்
திருமணத்துக்கான மொத்தச் செலவு 650 கோடி ருபாய் என்று கூறுகிறார்கள். சிலர் 500 கோடி என்கிறார்கள்.எப்படியும் ஒருராஜா வீட்டுத் திருமணம் எப்படி நடக்கும் என்று பெங்களுரு மக்களூக்கு நேரடியாகவே காட்டியிருக்கிறார். நவீன தொழில் நுணுக்கங்களை பயன்படுத்திய ரெட்டி பழங்கால முறைகளையும் கை விடவில்லை.

திருமண அழைப்பிதழ் மட்டுமே 6 கோடி ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டது என்றால் கேட்பவர்களுக்கு மூச்சு முட்டும்.அந்த  அழைப்பிதழை திறந்து நீங்கள் படிக்க வேண்டாம் அதுவே பேசும் பாடும் ஒரு பாட்டுடன் உங்களை திருமணத்துக்கு வரவேற்கிறது.
 பெங்களுரில் உள்ள மைசூர் மகாராஜாவின் அரண்மனையை ஒரு மாத காலத்துக்கு முன்பணம் கட்டி வாடகைக்கு எடுத்துக் கொண்டு அரங்க நிர்மாணம் தொடங்கியது ஹிந்தி சினிமா உலகத்தைச் சேர்ந்த கை தேர்ந்த கலைஞர்களின்,வழிகாட்டுதலில் 3000 தொழிலாளர்கள் ஒரு மாதம் வேலை செய்தார்களாம் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அந்த திருமணப்பந்தல் ஹம்பியில் உள்ள புரந்தரா கோயில் மாதிரியில் வடிவமைக்கப்பட்டது சுற்று வட்டாரம் முழுவதும் விஜயநகர அரண்மனை மாதிரியில் அமைக்கப்பட்டது. ஒருபழங்கால கிராமமே வடிவமைக்கப்பட்டது நுழை வாயிலிலிருந்து விருந்தினர்களை அழைத்து வர 40 மாட்டுவண்டிகள் செயல்பட்டன. வண்டியில் குஷன் வைத்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.

50000 விருந்தினர்கள் வருகை தந்தார்களாம். உணவுக்காக 60 கோடி ருபாய் செலவு செய்யப்பட்டது.நகரமெங்குமுள்ள மிகப்பெரிய ஸ்டார ஹோட்டல்களீல் 1500 அறைகள் புக் செய்யப்பட்டது .மாநிலத்தின் பல நகரங்களீலிருந்து விருந்தினர்கள் வர சொகுசு பேருந்துகள் பல இயங்கின உணவுக்கு மட்டும் 60 கோடி ருபாய் செலவு செய்து வந்த விருந்தினர்கள் அனைவரையும் நன்றாகவே கவனித்திருக்கிறார் ரெட்டி. .விருந்து முடித்து வெளியே வருவோருக்கு பான்பீடா கொடுகக பல லட்சம் செலவு என்றால் நமக்கு மயக்கம் வரும் அதையெல்லாம் விட முக்கிய செய்தி அந்த பீடாவை விருந்தினர்களுக்குக் கொடுக்க பம்பாயிலிருந்து 50 மாடல் அழகிகள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்... முக்கிய விருந்தினர்கள் பயணத்துக்கு ஹெலிகாப்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கேள்வி
விருந்தினர்களும் திருமணத்தில் வேலை செய்ய வரும் நபர்களும் தங்குவதற்கு, பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் 1500 தனி அறைகள் ரிஸர்வ் செய்யப்பட்டன திருமணப் பெண்ணுக்கு 40 லட்ச ரூபாயில் கூரைப்புடவை.15 கோடி ருபாய்க்கு நகைகள் என்று சொல்லுகிறது பத்திரிகைச் செய்தி..  

இன்னும் நம்ப முடியாத விவரங்களூடன் வந்த பத்திரிகைச் செய்தி எல்லோரையும் அது பற்றிப் பேச வைத்திருக்கிறது டெல்லியில் பாராளுமன்றமே இந்த திருமணம் பற்றி பேசியாகிவிட்டது என்றால் வேறு விவரங்களுக்குப் போவானேன் ? மற்ற விவரங்களூக்குப் போகாமல் மக்கள் இந்த திருமணம் பற்றி என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருந்தது 500 ரூபாய், மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அரசாங்கத்தின் ணை வந்த சமயத்தில் இந்த திருமணம் நடந்திருப்பதால் மக்கள் கருத்தைக் கேட்டறிய நல்ல வாய்ப்பாக இருந்தது வங்கியில் போட்ட தன் சொந்தப் பணத்தை எடுக்க கால் கடுக்க மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்த மக்கள் பொழுதை கழிக்கவும் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும் வகையிலும் இதைப் பற்றி பேசிக் கொண்டார்கள்.

பேசிய யாரும் ஒத்த கருத்தை தெரிவிக்காதது தான் வேடிக்கை.நாம் சற்று பொறுமையாக இருந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் காத்துக்கொண்டிருப்பது பற்றி கவலைப் படக்கூடாது என்றார். ஒருவர் வங்கி ஊழியர்கள் மீது வசை பாடியவர்களூம் உண்டு.நூறு ரூபாய்க்கு நாம் மணிக் கணக்காக காத்துக் கொண்டு அல்லல் படும்போது ரெட்டிக்கு மட்டும் கல்யாணம் செய்ய கோடிக்கணக்காக பணம் எப்படி வந்தது என்றார் இன்னொருவர்... .

இதையெல்லாம் நாம் கேட்க முடியுமா ஸார் அவரவர்கள் வந்த வழி.பணக்காரர்கள் தங்கள் அந்தஸ்துக்கு தக்கபடித்தான் செய்வார்கள் அப்படி செய்தால்தான் மற்றவர்கள் பிழைப்பு நடத்தமுடியும் என்றார் ஒரு முதியவர் .இன்னொரு முதியவர் தன் நலெண்ணண்ணத்தை வெளீயிடும் வகையில் சொன்னதுதான் வேடிக்கை .அந்த கல்யாணப்பெண் நல்லாயிருக்கணும் ஸார் இப்படியெல்லம் ஆடம்பரமாகக் கல்யாணம் செய்தால் திருஷ்டி படும் ஸார் ஏனோ தெரியவில்லை இந்த பெற்றோர் களூக்கு இதெல்லாம் தெரிய மாட்டேன் என்கிறது என்றார் அந்த முதியவர்.சிலர் அவருடைய பேச்சை கேட்டு சிரித்தாலும் அவருடைய பேச்சில் இருந்த நல்லெண்ணம் எனக்கு தெளிவாகப் புரிந்தது
ஆக மொத்தம் எல்லோரும் அவரவர்கள் வயதுக்குத் தக்கபடியும்  உணர்ச்சி பொங்கவும் வசை பாடியும் பேசினாலும் யாரும் ஒரே கருத்தை தெரிவிக்கவில்லை...கால் வலி தீர நின்றுவிட்டு வங்கி ஊழியர் இன்று பணம் தீர்ந்துவிட்டது என்று அறிவித்த பின் .நாளைக்காவது சீக்கிரம் வந்து வரிசையில் நின்று பார்க்க வேண்டும் என்று கூறியபடி கலைந்தார்கள்
எல்லா காரியங்களுக்கும் நியாயம் பேசவும் காரணம் கற்பிக்கவும் யாராவது இருக்கும் வரை இப்படித்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் யாரையும் குறை சொல்லிப் பயன் இல்லை இதுதான் இந்தியா என்று எண்ணிக் கொண்டே நானும் நகர்ந்தேன்
                                              - மு.கோபாலகிருஷ்ணன்
.