Thursday, June 02, 2016

நாம் மாறவே இல்லை



முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. பசுமையாக நினைவிருக்கி/றது. பல சமயங்களில் இந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்படி நினைவுக்கு வரும்போதெல்லாம் மனம் வலிக்கும். பல நிமிடங்களுக்குப் பிறகு நானே மறந்து விடுவேன். மன நிம்மதியாக இருப்பதாக உணர்வேன்.
 
 மறதி என்ற ஒரு குணம் அல்லது திறமை என பெயரிட்டு வேண்டுமானால் அதைச் சொல்லிக் கொள்ளலாம். அந்த மறதி மனிதனுக்கு அவசியம் என்று அடிக்கடி நான் நினைப்பது உண்டு. மனதில் வலி இல்லாமல் இருக்கவாவது மறதி வேண்டும். சரி விஷயத்துக்கு வருவோம்.
 
  நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்தேன். இடைவேளை நேரம் பகல் 1 மணிக்கு மேல் இருக்கும். என்னுடைய பியூனை ஒரு வேலையாக வெளியில் அனுப்பியிருந்தேன். அவன் வருகிறானா என்று அலுவலக ஜன்னல் வழியாக அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அலுவலகம் முதல் மாடியில் இருந்தது. ஜன்னல் வழியாக ஜங்ஷனுக்கு வந்து செல்லும் பேருந்துகளைப் பார்க்கலாம். பேருந்து நின்று பயணிகளை இறக்கி விட்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்படும். பேருந்து நிற்கும் இடத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒரு பெட்ரோல் பங்க் உண்டு. இப்பொழுது அது இல்லை.

நான் மாடியில் இருந்தபடி ரயிலுக்குச் செல்லும் பயணிகளை ஜங்ஷன் உள்ளே நுழையும் வரை பார்க்கலாம். நான் அனுப்பிய பியூன் வந்து சேர வில்லை. என்னுடைய கண் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்து ஜன்னல் வழியாக திரும்பவும் நான் பார்த்தபோதுதான் அந்த சம்பவம்.நடந்தது.

  பெட்ரோல் பங்க் அருகில் சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு மாடு திடீரென்று சத்தம் போட்டது. நகரப் பேருந்தின் முன் சக்கரம் பட்டு அந்த மாடு ஐந்தாறு அடி தூரம் போய் விழுந்ததை நான் கண்ணால் பார்த்தேன். மாடியில் இருந்த நான் அடடா என்றேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்ன என்று கேட்டார்கள். பங்க் அருகில் மாடு பேருந்தில் அடிபட்டுவிட்டது என்றேன். நான் உடனடியாக மாடியிலிருந்து இறங்கி காம்பவுண்டை விட்டு வெளியேறி மாடு அடிபட்டுக் கிடந்த இடத்துக்குப் போனேன்.
நான் அங்கு போய்ச் சேருவதற்குள் 20, 30 பேர் கூடிவிட்டார்கள். நான் போய்ச் சேரவும் டிரைவர் பேருந்தை ஓட்டிக் கொண்டு போகவும் சரியாக இருந்தது. அது அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துதான்
 பங்க்கில் வேலை செய்யும் சிறுவனை விசாரித்தேன். மாடு மெதுவாக்த்தான் போய்க் கொண்டிருந்தது,சார். டிரைவர் எடுக்கும் போதே வேகமாக ஓட்டத் தொடங்கினார். மாடு அடிபட்டு எட்டிப் போய் விழுந்தது என்றான்.

மாட்டுக்கு பின்னங்கால் இரண்டிலும் அதையொட்டிய உடற்பகுதியில் நல்ல அடி. ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் பாஷையில் சொன்னால் இரண்டு ஈற்று போட்ட பசு மாடு.

வெள்ளை நிறம். சரியான தீனி இலாமல் சற்று இளைத்திருந்தது. வலியில் மாடு துடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க வேதனையாக இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த மக்கள் சலிப்படைந்தவர்களாக தங்கள் வேலையை  பார்த்துப் போகத் தொடங்கினார்கள்.

 பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இளைஞனிடம் கேட்டு போன் வாங்கி கார்ப்பொரேஷன் அலுவலகத்துக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை விளக்கமாகச் சொல்லி விட்டு யாரையாவது அனுப்பி வைக்கும்படி கூறினேன். நான் கூறியதை பொறுமையாகக் கேட்ட.  கார்ப்பொரேஷன் ஊழியர் எங்களுக்கும் இது போன்ற விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.என்று சொல்லி விட்டு போனை வைத்துவிட்டார். ஜங்ஷன் அருகில் கார்ப்பொரேஷன் தொடர்பான ஒரு சிறு அலுவலகம் உண்டு. அங்கே போய் ஊழியரைப் பார்த்து அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டேன். பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது மட்டுமே இங்கே நடக்கும். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி கையை விரித்து விட்டார்கள்

  அங்கிருந்த ஒரு ஊழியர் சார் எங்கள் வேலையைச் செய்யவே இங்கே ஆள் கிடையாது. மாட்டைக் காப்பாற்றுவதில் உஙளூக்கு அக்கறை இருந்தால் வண்டி ஏற்பாடு செய்து பாலக்கரை மாட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள் என்றார்

எப்படியாவது அந்த மாட்டைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்த எனக்கு அவருடைய யோசனை சரியாகப்பட்டது. மாட்டின் துடிப்பையும் அரற்றலையும் பார்க்க முடியவிலலை.

இன்னொருவர் மாட்டுச் சொந்தக்காரனைக் கண்டுபிடித்து அவன் மேல் கேஸ் போடலாம் என்று யோசனை கூறி தன்னுடைய சட்ட ஞானத்தைக் காட்டிவிட்டு நடையைக் கட்டினார்.

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என்னுடைய பியூனும் வந்து சேர்ந்தான்
அலுவலகத்துக்கு அரை நாள் விடுமுறை சொல்லிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு மாடு படுத்துக் கிடந்த இடத்துக்கு திரும்ப வந்தேன்.
நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருமணி நேரம் ஆகியிருக்கும் எனக்கு ஒரே குழப்பம். மாட்டுச் சொந்தக்காரன் உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை.செய்தி கேள்விப் பட்டு அவனாக வந்தால் உண்டு’.
என்னுடைய பியூனும் நானும் மட்டுமே அங்கே இருந்தோம்.
பங்கில் வேலை செய்யும் சிறுவன் என்னைப் பார்த்துச் சொன்னன் சார் அந்த பேருந்து அடுத்த டிரிப் கூட வந்துவிட்டது. இப்பொழுதுதான் போகிறது.என்றான்.

அந்த டிரைவரை பார்த்தாயா என்று கேட்டேன். பார்த்தேன் அவரும் மாட்டைப் பார்த்துவிட்டு இன்னும் இந்த மாடு சாகவில்லையா என்று கேட்டு விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விட்டார் என்றான்
எனக்கு எதுவும் சொல்ல வாயில் வார்த்தை வரவில்லை தன் கண் முன்னால் ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்கும் போது அதற்கு தான் மட்டுமே காரணம் என்று உணராமல் இருக்கும் மனிதர்களையும் இந்த உலகம் தாங்கிக் கொண்டிருக்கிறது என்ற சிந்தனையுடன் வறட்டுச் சிரிப்பை மட்டுமே உதிர்க்க முடிந்தது.  

அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்று குழப்பத்தில் இருந்த போது என் பக்கத்தில் இருந்த பியூன் ஒரு யோசனை சொன்னான். சார் பிராணிகள்
வதைத் தடுப்புச் சங்கத்தை தொடர்பு கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்றுகேட்கலாம் என்றான் அல்லது பசுமாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க பிஞ்சராபோல் என்று ஒரு இடம் இருக்கிறது.ஒரு ஆஃபீஸ் இருக்கிறது. அங்கே ஒரு ஐயர் இருக்கிறார்.அவரை போய்ப் பார்க்கலாம் என்றான்
யோசனை எனக்கும் சரியாகப்பட்டது அந்த ஆஃபீஸ் காந்தி மருத்துவ மனைக்கு அருகில் இருப்பது நினைவுக்கு வந்தது அந்த வழியாக போகும் போது பார்த்திருக்கிறேன் 

  ஆமாம் நல்ல யோசனைதான் அந்த ஐயர் பொறுப்பில் விட்டுவிடலாம். தேவையான உதவியை நாம் செய்யலாம் என்று கூறிவிட்டு அவனையும் கூட்டிக் கொண்டு அந்த ஆஃபீஸுக்குப் புறப்பட்டேன்

ஏற்கெனவே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது
அந்த சிறிய அலுவலகம்.பூட்டிக் கிடந்தது.அலுவலகத்துக்குப் பின்புறம் மாட்டுக்கான தீவனக் கிடங்கு மாடுகளூக்கு போடும் வைக்கோல் சிறிய சிறிய கட்டாகக் கிடந்தது பார்க்கும் போது அலுவலகமும் தீவனக் கிடங்கும் சரியான பராமரிப்பில் இல்லை என்று தெரிந்தது.
பக்கத்தில் இருக்கும் கடையில் விசாரித்தேன்.கடையில் இருந்தவர் ஐயர் இன்றைக்கு வரவில்லை.என்றார். இப்பொழுதெல்லாம் அவர் எப்போதாவது வருகிறார்.நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது. அவர் வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்தேன். தெரியாது அவர் ரொம்ப தூரத்திலிருந்து தான் வருகிறார் என்றார். அடுத்த கடைக்காரர் பாவம் அவர் என்ன செய்வார் அவருக்கு சம்பளம் சரியாகக் கிடைப்பதில்லை.அதற்கு தகுந்தாற்போல் தான் அவருடைய வேலையும் இருக்கும் என்றார்.

  எனக்கு அறிமுகமான ஒருவர் கடைக்குச் சென்று விசாரித்தேன்.
சார் அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்.அந்த வரிசையில் இருக்கும் கடைகளெலாம் ஒரு டிரஸ்டுக்குச் சொந்தம் அந்த டிரஸ்ட்தான் பசுமாடுகள் பராமரிப்பதற்கு ஏற்பட்டது அங்கே இருக்கும் பத்து கடைகளை  வாடகைக்கு எடுத்து கடை வைத்து வியாபாரம் செய்யும் யாரும் பல வருஷங்களாக வாடகையைக் கட்டவில்லை. இருபது வருஷத்துக்கு முன் விதிக்கப்பட்ட குறைந்த வாடகை அதையொட்டி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது இப்போதைக்கு அது முடியப்போவதில்லை வாடகை பல வருஷங்களாக வராததால் மாட்டுத்தீவனம் இதர செலவுக்கு ரொம்பவும் தட்டுப்பாடு.சில நல்லவர்கள் கொடுக்கும் தர்மத்தைக் கொண்டு அங்கே வரும் மாடுகள் பராமரிக்கப்படுகிறது. மற்றபடி ஐயர் சம்பளத்தைப் பற்றி இப்போதைக்கு யாரும் பேசமுடியாது.  அவரும் நம்பிக்கையை விட்டுவிட்டார்என்றார்

மேலும் விசாரிக்க எனக்கு நேரம் இல்லை. நான் நம்பிக்கையை இழந்து, பியூனை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தேன். .   
வரும்போது ஏதேதோ எண்ணங்கள்.ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஆகிவிட்டது.இனி அந்த மாட்டுக்கு என்னால் எதுவும் செய்யமுடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது. திரும்பவும் அந்த மாடு கிடக்கும் இடத்துக்கு வந்தேன். நான் அந்த இடத்தை நெருங்கும் முன் அந்த பெட்ரோல் பங்க் சிறுவன் சொன்னான் சார் மாடு செத்துப் போச்சு

 நான் அருகில் சென்று பசுமாட்டை உற்றுப் பார்த்தேன். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பது போல அது இறந்து கிடந்தது.மாட்டின் மேல் ஈக்கள் மொய்க்கத் தொடங்கியது.சுற்றியும் சிதறிய ரத்தத் துளிகள்
தெருவில் அலையும் மாடுகளைப் பற்றி கவலைப் படாமல் இயங்கும் ஒரு   நகராட்சி நிர்வாகம் பாலைக் கறந்து கொண்டு, இனி பால் கறக்காது என்றவுடன் மாட்டை தெருவில் விரட்டி மேய வைக்கும் மாட்டுச் சொந்தகாரர்கள். அடி பட்ட மாட்டின் துடிப்பை உணராமல் அலட்சியமாக வண்டி ஓட்டும் டிரைவர்கள். பசு பாதுகாப்பு அமைப்பு என்று வைத்துக் கொண்டு அதை சரியாக இயக்காமல் முடக்கி வைக்கும் ஒரு சமூகம்

புனிதமான காரியத்துக்கு உதவி.செய்கிறோம் என்ற எண்ணத்தோடு  வாடகையை கொடுக்காமல் சாமர்த்தியம் செய்யும் வியாபாரிகள், ,எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப் போகும் மக்கள் இவர்களுக்கு மத்தியில் ஒரு ஜீவனைக் காப்பாற்ற முடியாமல் தோல்வி அடைந்தது பற்றி அதிக வேதனைப் படாமல் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தேன் அலுவலகம் மூடும் நேரம் நெருங்கிவிட்டது. லீவ் போட்டுவிட்டு ஏன் திரும்ப வந்துவிட்டாய் என்று கேட்ட நண்பருக்கு பதில் சொல்லாமல் சீட்டில் போய் உட்கார்ந்தேன்

    முஸ்லீம்களை வம்புக்கு இழுப்பதற்கு மட்டும்தான் பசுபாதுகாப்பு பற்றி வாய் கிழியப் பேசுவோம் மற்ற நேரங்களில் நாம் அதுபற்றி என்ன செய்கிறோம்? என்று காந்தியடிகள் ஒரு முறை கேட்டது என் நினைவுக்கு வந்தது. எனக்கு வெட்கமாக இருந்தது.அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி ?

                              - மு.கோபாலகிருஷ்ணன்.

Friday, May 20, 2016

கிரீன்ஸ்பரோ நால்வர்

இந்த வாரம் வேலை நிமித்தமாக வடகரோலினாவில் இருக்கும் கிரீன்ஸ்பரோ என்ற ஊருக்கு சென்றிருந்தேன். வேலை முடிந்ததும் சக ஊழியர்களுடன் மாலையில் அந்த ஊரின் உள்ளே ஒரு சுற்று போகலாம் என்று நடந்தோம். ஒரு தெருவுக்கு பெயர் பிப்ரவரி 1-ம் தெரு. இதில் ஏதோ கதை இருக்கலாம் என்று ரிச்மண்டில் இருந்து வந்திருந்த சக ஊழியர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு ஏதும் தெரிந்திருக்க வில்லை. அந்தத் தெருவில் ஒரு சம உரிமைப் போராட்ட அருங்காட்சியகம்(civil rights movement museum) இருந்தது.

நிச்சயமாய் ஏதோ கதை இருக்கவேண்டும் என்று நாம் அன்றாடம் வழிபடும் கூகுளாண்டவரிடம் அலைபேசியில் முறையிட்டேன். கண் முன்னே விரிந்தது 1960 பிப்ரவரி ஒன்றாம் தேதி நடந்த ஒரு சம்பவம். அந்தக் காலத்தில் வெள்ளையர்களுக்கான உணவகங்கள் இருந்தன. அவற்றில் கருப்பின மக்களுக்கு அனுமதியில்லை. அவ்வாறான ஒரு உணவகம் உல்வொர்த். உல்வொர்த்தில் நான்கு  கருப்பின கல்லூரி மாணவர்கள் போய் உட்கார்ந்து கொண்டு உணவு கொடுக்கும்வரை போகமாட்டோம் என்று போராடினார்கள்.  வன்முறையில்லை, ஒரு கோஷம் இல்லை. பதட்டமில்லாமல் ஆரம்பித்தது இந்தப் போராட்டம். தினமும் போய் உட்கார்ந்து உணவு கேட்பது. கொடுக்கும்வரை போகமாட்டேன் என்று உட்கார்ந்து இருப்பது. இப்படி ஆரம்பித்த போராட்டம் விரைவில் வடகரோலினாவின் மற்ற ஊர்களுக்கு பரவியது. தொடர்ந்து பல தென் மானிலங்களுக்கும் பரவியது - நம் ரிச்மண்ட் உட்பட.

அனைத்து ஊர்களிலும் இதே கதைதான். போய் உட்கார்ந்து கொண்டு உணவு பரிமாறும்வரை போகமாட்டேன் என்பது... இதனால் இந்த உணவகங்கள் நஷ்டத்தில் போக ஆரம்பித்தன. அதனால் மெதுவாக உணவகங்கள் இந்த பிரிவினை பழக்கத்தை கைவிட ஆரம்பித்தன. இந்த கிரீன்ஸ்பரோ நால்வர்களுக்கு உணவு பரிமாற மறுத்த அந்த மேசையை வாஷிங்டன் ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறார்களாம்.

 என் சக ஊழியர்கள் மெத்தப் படித்தவர்கள்தான். ஆனாலும் அவர்களுக்கு இந்தக் கதை தெரிந்திருக்கவில்லை.  அனைவர்க்கும் அலபாமா மாண்ட்காமரியில் ரோஸா பார்க்கின் பேருந்துப் பயணம் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கதை தெரியவில்லை. இது மாதிரி எத்தனையோ கதைகள் பல ஊர்களில் இருக்கலாம். வெளியில் தெரிவதில்லை.

இந்த சம்பவத்தினால் எனக்கு நான் அமெரிக்கா வந்த புதிதில் நடந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அப்போது என்னுடம் சில மராத்தியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் தீவிரமான சிவசேனை பக்தர்களும் இருந்தார்கள். ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு சுதந்திரப் போராட்டத்திற்கு திரும்பியது. அவர்களில் ஒருவன் ஒரு போடு போட்டான். நீங்கள் தெற்கே அனைவரும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகள், சுதந்திரத்திற்கு போராடவில்லை என்றான். இன்னொரு மேதாவி உங்கள் ராஜாஜி ஆங்கிலேய ஆட்சி நீடிப்பதுதான் நல்லது என்று கருதினார் என்றான். நான் ஆச்சரியத்தில் வாயைப்  பிளந்தேன். 

சரி கொஞ்சம் இவர்களுடன் விளையாடலாம் என்று ஆமாமய்யா உங்கள் மராத்திய, மும்பாய் மக்களால்தான் நமக்கு சுதந்திரம்  கிடைத்தது. தெற்கே நாங்கள் எல்லாம் தொடைநடுங்கிகள். ஒன்றுமே செய்யவில்லை என்றேன். ஒருவன் கொஞ்சம் யோசித்தான். இல்லை இல்லை ஒருவர் இருந்தார் என்றான். யாரடா என்றேன். பா  பா ர தியோ என்னவோ வரும் என்றான். சுப்ரமண்ய பாரதியா? ஆமாம் அவரேதான். முண்டாசு கட்டி பெரிய மீசை வைத்திருப்பான் என்றான். மனசுக்குள் மகாகவியை வணங்கிவிட்டு சொன்னேன்.  அந்த ஆள் இருப்பதிலேயே பெரிய தொடைநடுங்கி, அவரை கைது செய்ய வந்தபோது பயந்து பாண்டிச்சேரிக்கு ஓடிவிட்டார் என்றேன்.  அனைவரும் சிரித்தார்கள். 

அப்போது ஒருவனுக்கு கொஞ்சம் பொறி தட்டியது. நான் கிண்டல் செய்கிறேன் என்று புரிந்து கொண்டான். உனக்கு இந்த பெயர் தெரியுமா அந்தப் பெயர் தெரியுமா என்று சில மராட்டிய சுதந்திர போராட்ட வீரர்கள் பெயர்கள் சொல்லிக் கேட்டான். எனக்கு அவர்களில் யாரையும் தெரிந்திருக்கவில்லை. இவர்களெல்லாம் புகழ் பெற்ற மராத்திய வீரர்கள். இவனுக்கு இவர்களை தெரியாத மாதிரி அந்த ஊர் வீரர்கள் பற்றி நமக்கும் தெரியாமலிருக்கலாம் என்றான் மற்றத் தோழர்களிடம்.

அப்படி யார் யார் என்று கேட்டான். நான் வாஞ்சி நாதன், கொடி காத்த குமரன், வ.உ.சி போன்ற சில பெயர்களையும் அவர்களின் போராட்டங்களையும் கொஞ்சம் சொல்லிவிட்டு நீ பழித்த ராஜாஜியை காந்தியின் மனசாட்சியின் காவலர் என்பார்கள் தெரியுமா என்றேன்.  அவர்களை கேலி செய்தேன் - என்னவோ நீங்கள்தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தது போல் அளக்கிறீர்களேடா!

நீங்கள் ஒரு புது இடத்திற்கு போனால் அந்த ஊர் விஷேசம் என்ன என்று  கேளுங்கள். இது மாதிரி கதைகள் கிடைக்கக்கூடும். கிரீன்ஸ்பரோவில் இருந்த ஒரு வளைவுச் சின்னம். பெரிது படுத்திப் பாருங்கள். அமெரிக்க வரலாறே தெரியும் :-)




Tuesday, May 10, 2016

மீனாவுடன் மிக்சர் 27: காமாவுக்கு சோமா!

இப்படி ஒரு சவாலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே!  இந்த மனுஷனை என்ன தான் செய்யறது?

சின்ன வயசுல என் கூட பிறந்தவங்களோட  நான் போடாத போட்டியா? ஜெயிக்காத சவாலா?  ஒவ்வொரு ராத்திரியும் வீட்டு கூடத்துல தொங்கற அந்த ஒத்த உஷா சீலிங் fan நேர் அடியில இடம் பிடிச்சு படுக்கற போட்டியில  எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி என் தமக்கையோட ஜெயிச்சிருப்பேன்? சரி அப்படியே ஏதோ ஒரு போட்டியில தோத்து போயிட்டா கூட கவுந்து படுத்து அழாம இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படீன்னு தட்டி விட்டுட்டு அடுத்த சவாலை தேடிப்போற நான் இன்னிக்கு வாழ்க்கைல எதிர்ப்பாராத வந்த இந்த போட்டியில் ஸ்தம்பிச்சு போய் நிக்கறது என்னவோ உண்மை.

இந்த நூற்றாண்டிலேயே விஷயத்துக்கு வருவியா இல்ல நான் போயிட்டு நிதானமா அப்புறமா வரட்டான்னு நீங்க கோபமா கேக்கறது எனக்கு காதுல விழறது. ஏன்னா எனக்கு தான் பாம்பு செவியாச்சே!  உங்க நெற்றிக்கண் என் ஐயன் திருச்சிற்றம்பலத்துது  மாதிரி அம்சமா தான் இருக்கு. இருந்தாலும் அதை நீங்க தயவு செய்து மூடியே வைங்க.  இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு.

இன்னிக்கி என் புலம்பலின் காரணகர்த்தா எங்க ஊர் சாஸ்த்ரிகள்.   நல்ல மரியாதைக்குரிய மனிதர்.  வேதங்களை கரைச்சு குடிச்சவர்.   எங்க குடும்பத்தோட வைதீக காரியங்களை முன்னின்று அருமையா செய்து வைப்பவர்.  ஆனால் அதோட நிறுத்தாம  கல்யாணம் ஆகி கடல் தாண்டி வந்த என் வாழ்க்கைல கடந்த பத்து வருஷமா தமிழ் சீரியல் வில்லி மாதிரி விளையாடுவது தான் முடியலை.

இவர் சாதுர்ய போன் (அதான் smart phone) எப்போ வாங்கினாரோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு ஏழரை நாட்டு சனி.  இந்த குட்டி டப்பாவுக்குள்ள இத்தனை அதிசயமான்னு ஆச்சர்ய குறி போட்டு அதுக்குள்ள முழுசா ஐக்கியமானவர்  சில வாரங்களுக்கு பின்னாடி  அந்த குகையிலேர்ந்து வெளியே தலை தூக்கின போது இன்றைய கல்லூரி பசங்களை எல்லாம் தூக்கி சாப்படற மாதிரி சமூக வலைத்தள வல்லுநரா தான் வெளியே வந்தார்.   இன்னிக்கு வைதீகம் போக மிச்ச நேரம் எங்க குடும்ப மரத்தில் (family tree) இருக்கற எல்லாரோட (குஞ்சு குளுவான் உட்பட) பிறந்த நாள், மண நாள் மேலும் பல முக்கிய நாட்களுக்கு whatsapp, facebook மற்றும் ஈமெயில் மூலமா முதல் ஆளா வாழ்த்து சொல்வதை தொழிலாக செய்கிறார்.

காமாவுக்கு சோமா அப்படீங்கற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?   என் பெரியப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சொற்சொடர் அது.  எங்க வீட்டு மூணாவது தெருவில் உள்ள ஒரு மாமி ஒரு நாள் அவங்க நாத்தனாரோட மச்சினர் பெண் கல்யாணத்துக்கு எங்களுக்கு பத்திரிகை வச்சு கூப்டுட்டு போனா.   அந்த மாமி கிளம்பி வாசல் கேட் கூட மூடியிருக்காது.  நானும் என் தமக்கையும் உடனே ஓடி போய் உள் அலமாரியை திறந்து அந்த கல்யாணத்துக்கு  எந்த புடவை கட்டலாம்னு முக்கியமான ஒரு சர்ச்சையில இருந்த போது தான் எங்க பெரியப்பா 'காமாவுக்கு சோமா' வை பத்தி எங்களை உக்கார வச்சு விளக்கமா சொன்னார்.   அதை சிரத்தையாக கேட்டுட்டு நாங்க விடாம கல்யாணம் போய் வந்தோம்ங்கறது வேற விஷயம்.

போன மாசம் என் சின்ன பெண்ணோட பிறந்த நாள்.  நான் பார்த்து பார்த்து அவளுக்கு பிடிச்ச பரிசுகள்  மற்றும் துணிமணிகள் வாங்கி முதல் நாளே பாக் செய்து ஆசையா அவள் எழுந்ததும் முதல் ஆளா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தா, எங்க சாஸ்த்ரிகள் கத்தி கபடா இல்லாமலே என் கழுத்தை சூப்பரா வெட்டி சாய்த்தார்.   நடு ராத்திரி  12 மணிக்கு போர் களத்தில் படை வீரர்கள் மாதிரி வரிசையா whatsapp, email மற்றும் facebook மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சகட்டு மேனிக்கு தட்டி விட்டிருக்கார்.  ஒரு தாய் என்ன தான் செய்ய முடியும்?

போன வருஷம் கொந்தளிச்சு எழுந்தேன் நான். இன்னிக்கு நானா நீங்களா பார்க்கலாம்னு கங்கணம் கட்டி எங்க திருமண நாளுக்கு என் கணவர் கண் திறந்ததும் அவர் போன் பாக்கறதுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லி "அப்பாடா, ஒரு வழியா சாஸ்திரிகளை beat பண்ணிட்டேன்" னு சந்தோஷமா கை தட்டி கெக்கலி கொட்டின என்னை 'ஐயோ பாவம்' ங்கற மாதிரி பார்த்தார் என் கணவர். விசாரித்ததுல முதல் நாள் இரவே சாஸ்திரிகள் ஈமெயில் வாழ்த்து அனுப்பிட்டாராம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு இல்லைன்னு என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லற நான் காந்திஜியின் கொள்கைகளை கடைசி வரை விடாமல்  கடைப்பிடிக்க  சாஸ்த்ரிகள் விடுவாரா?  காலம் தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்.

-- மீனா சங்கரன்

Note:  There is absolutely no offense intended towards the subject of the post.  He is a highly revered man in the family and has my utmost respect.  The post is simply meant as light entertainment and should be taken as such with a pinch of salt. :-)

Monday, February 15, 2016

வாழ்க்கை பயணத்தில்.. அவனும் அவளும்.





வாழ்க்கை பயணத்தில்.. அவனும் அவளும்.

அடர்ந்த காடு
இருண்ட விண்வெளி
ஒரு வழி, ஒற்றையடி பாதை நெடுந்தூரம்
தூரத்தில் வெளிச்சம், வழிநடத்திட ...
கையினில் இனிப்பு, கடந்து செல்ல...
சுமக்கும் பாரம், இறக்கி வைக்கும் நேரம்
மிச்ச இரண்டு..
உடல் உயிர்

பயணம் பரவசம் ! உன்னால் என்னவளே !!
 - SK

பின்குறிப்பு:
வெளிச்சம்: - பெற்றோர், ஆசான், நோக்கு, லட்சியம், அவா
கையினில் இனிப்பு - குழந்தை, கனவு, கற்பனை, பணம்
பாரம் - கோபம், லோபம், அகங்காரம்
உடல்  - அவன்
உயிர் - அவள்

Friday, February 12, 2016

காலம், கெட்ட காலம்

 காலம் கெட்ட காலம்
காலம் என்றால் என்ன? காலம் எப்படி ஏற்பட்டது? இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்பொழுது? பிரபஞ்சம் தோன்றியபோது காலமும் உடன் தோன்றியதா? பூமியில் காலம் உள்ளது போல மற்ற கிரகங்களிலும் காலம் உண்டா? மற்ற கிரகங்களிலும் காலத்தை இதே அளவை முறை கொண்டு அளக்க முடியுமா? முடியும் என்றால் எப்படி காலம் கணக்கிடப்படுகிறது? இதுபோன்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோனால் படிப்பவர்களுக்கு குழப்பம் தான் வரும் நமக்கு ஏன் இந்த வம்பு என்று அடுத்த பக்கத்துக்கு புரட்டி விடுவார்கள்.
 நம் இந்து மதம் பூமியின் கால அளவையும் இதர கிரகங்களின் கால அளவையும் வெவ்வேறானவை என்று கூறுகிறது.
 இவையெல்லாம் வேதாந்திகளின் பிரச்னைகள். கேள்விகள் விஞ்ஞானிகளும் இந்த காலத்தைப் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அந்த கேள்வி இதுதான்.
நாம் கடந்த காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். நிகழ்காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். எதிர்காலத்தை நினைவில் வைத்திருக்கிறோமா?
சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றும். குழப்பம் தான் மிஞ்சும்.
 கடந்த காலத்தைப் பற்றிய நினைவும் இல்லாமல் போனால் நல்லது என்று சில சமயம் மனிதன் நினைப்பதுண்டு ஆனால் கடந்த காலத்தை மறக்க முடிவதில்லை மறக்க முயன்றாலும் சிலர் மறக்க விடுவது இல்லை.
நம் தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம் ஏன் இந்தியாவையே எடுத்துக் கொள்வோம் கடந்த காலத்தை மறக்க யாராவது தயாரா? அல்லது கடந்த காலத்தை மக்கள் மறக்க யாராவது அனுமதிப்பார்களா அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், வரலாற்றாசிரியர்கள், பழம்பெருமை பேசியே காலத்தைக் கழிக்கும் பத்தாம் பசலிப் பேர்வழிகள் இவர்களுடைய பிழைப்பே கடந்த காலத்தை நினைவு படுத்துவதில் தான் இருக்கிறது.
அதனால் நாடு என்ன பாடு படுகிறது? மக்கள் என்ன பாடு படுகிறார்கள் தமிழ் பழமையான மொழியா? அல்லது வடமொழி பழமையான மொழியா? பட்டிமன்றத் தலைப்பு.
 தமிழ்நாட்டு எல்லக்குள் யாராவது வடமொழிதான் பழமையான மொழி என்று கூறி விட்டால் அவன் கதி அதோ கதிதான். தமிழ்த் துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே யாராவது தமிழ்தான் காலத்தால் மூத்த மொழி என்று சொன்னால், அவன் இந்து மத விரோதி ஆகிவிடுவான்.
கடவுள் உலகத்தைப் படைத்தவுடன் மனிதனைப் படைத்தான். மனிதன் பேச வடமொழியைப் படைத்தான். வடமொழிதான் தேவ பாஷை என்று சொன்னால் தான் அவனுடைய தலை தப்பும் .
தேசத்துரோகி, இந்துமதத் துரோகி, வெளிநாட்டு ஏஜண்ட் என்ற அர்ச்சனைகளிலிருந்து தப்பலாம்
எந்த மொழி மூத்த மொழி, எந்த நூல் காலத்தால் முந்தைய நூல் எந்த இனம் மனித குலத்தின் முதல் இனம் எந்த மதம் முதலில் தோன்றியது இப்படி எல்லா கேள்விகளிலும் அதற்கான பதில்களிலும் அடிப்படையான அம்சம் காலம் தானே?
வேதங்கள்தான் இந்தியாவில் தோன்றிய முதல் நூல் என்று சொல்கிறார்கள். அந்த வேதம் கி. மு. 1500 வாக்கில் தோன்றியதாகவும் ஆகையால் 3500 ஆண்டுகள் பழமையானவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உடனே ஒரு எதிர்ப்புக் குரல் ஆவேசமாக ஒலிக்கிறது
வேதங்களுக்குக் காலம் கிடையாது. எல்லா வேதங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டவை. நான்கு வேதங்களும் கி. மு. 8000 ஆண்டு வாக்கில் எழுத்தில் வடிக்கப்பட்டன. என்று அந்த ஆவேசக்குரல் ஒலிக்கிறது.
இவர்கள் அழுத்தமான இந்து மத நம்பிக்கையாளர்கள். மற்றவர்களுக்கு
நம்பிக்கை இல்லையென்று பொருள் அல்ல.
 நம்முடைய சமயம் கடவுளிடமிருந்து தொடங்கியது என்பதில் இவர்களுக்கு அழுத்தமான நம்பிக்கை. எல்லா மதத் தலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் காலக் கணக்கெல்லாம் மனிதர்களுக்குத்தான். இறைவனுக்கும், இறைவன் அருளிய வேதங்களுக்கும் காலவரயறை செய்ய மனிதனுக்கு உரிமை இல்லை. என்கிறார்கள்.
 வரலாற்றை விஞ்ஞான பூர்வமாகப் பார்ப்பது என்ற பெயரால் ஆங்கிலம் படித்தவர்கள், வேத காலத்தை பின் தள்ளி போடுகிறார்கள். அவர்கள் இந்துமத விரோதிகள், என்ற கூச்சல் இப்பொழுது நாடெங்கும் ஒலிக்கிறது. சமீப காலத்தில் இந்த கூச்சல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, .
இது போன்று வரலாறு எழுதும் ஆசிரியர்கள், எழுத்தாளர்களுடைய புத்தகங்களை, தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறிவிட்டார். இந்த வரலாற்றாசிரியர்கள், எல்லோரும் வாலைச் சுருட்டிக் கொண்டு மூலையில் உட்கார வேண்டிய காலம் வந்துவிட்டது, .
வேதம் போன்ற நூல்களின் காலத்தை நிர்ணயம் செய்வதில் வெறும் வரலாறு மட்டும் இல்லை. அங்கே மதம் இருக்கிறது. அதனால் தான் தன் கருத்தை உரத்த குரலில் பேச யாரும் அனுமதிக்கப்படுவதில்லை
 முஸ்லீம் மன்னன் படையெடுத்து வந்து சோமநாதபுரம் கோயிலை சூறையாடினான் என்பது அடிக்கடி பேசப்படும் வரலாற்றுச் செய்தி
ஒரு முறை அல்ல, பல மு/றை அந்த முஸ்லீம் மன்னன் படையெடுத்துக் கோயிலை அழித்தான் என்ற கதை கலந்த வரலாறு. பள்ளிப் பிள்ளைகளுக்கு போதிக்கப்படுகிறது. பலமுறை என்று சொன்னால் மட்டும் போதுமா? அழிக்கப்பட்ட கோயில் எவ்வளவு முக்கியமானது?இந்த தேச மக்களுக்கு பழங்கால கோயில் என்றால் முக்கியத்வம் கூடுதலாகத் தெரியும்.
 ஆகையால் சோமநாதபுரம் கோயில் 30000 ஆண்டுகள் பழமையான
கோயில் அவ்வளவு பழமையான கோயிலை இடித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
 வரலாற்றாசிரியர்கள் ஆதாரங்களுடனும் தர்க்கரீதியாகவும் இந்தியாவில் கோயில்கள் கட்டப்பட்டதெல்லாம் புத்தர் காலத்துக்குப் பிறகுதான் என்று கூறுகிறார்கள் புத்தர் காலம் வரை இந்து சமய வழிபாட்டு முறைகளில் யாகங்களும், ஹோமங்களும் மட்டுமே முக்கியத்வம் பெற்றிருந்தன. என்று கூறுகிறார்கள்>
. காலத்தைக் கூடுதலாகச் சொல்வதன் மூலம் கோயிலின் புனிதம் அதிகமாகும் என்று நம்புகிறார்கள்
 தமிழ் இலக்கியத்தில் உள்ள சில முக்கிய படைப்புகள் பற்றியும் தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த காலம் பற்றியும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. சென்ற தலைமுறையில் வாழ்ந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை என்/ற தமிழ் அறிஞர் பல நூல்களின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ் இலக்கிய் வரலாறு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக தமிழுக்குக் கலைக் களஞ்சியம் உருவானது பிள்ளை அவர்களுடைய சீரிய முயற்சியில்தான். பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தி மொழிக்குக் கூட இன்று வரை கலைக் களஞ்சியம் தயாராகவில்லை. இந்த நிலையில் பிள்ளையவர்கள் தமிழ் மொழிக்குக் கலைக்களஞ்சியம் தயாரித்தார்.
 ஆனால் தமிழ்நாட்டில் பல தமிழ் விரும்பிகள் பிள்ளையை தமிழ் இனத்துரோகி என்று கூசாமல் கூறுவார்கள் இன்றுவரை பல இலக்கிய மேடைகளில் அவர் மீது வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறது
காரணம் பிள்ளை தொல்காப்பியத்தை கி. பி. முதல் நூற்றாண்டு நூல் என்று கணக்கிட்டிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களையும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்
 அவர் தெரிவித்திருக்கும் ஆதாரங்களைப் பற்றி பேசாமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வசை பாடும் தமிழ் அறிஞர்களை இன்றும் பார்க்கலாம் ஏனென்றால் அவர்கள் கூற்றுப்படி தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல். திருவள்ளுவர் கி. மு. முதல் நூற்றாண்டு பிறந்தார். ஏசுநாதருக்கு முன் வாழ்ந்தார். தொல்காப்பியர் 7000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று சொல்லும் தமிழ் அறிஞர்களையும் பார்க்கலாம்.
 இங்கே ஆராய்ந்து உண்மையைக் காண்பது என்ற நோக்கத்துக்கு மேலாக ஓங்கி நிற்பது மொழிப்பற்று தான். பற்று அற்று சிந்தித்தால்தான் உண்மையை கண்டறிய முடியும் என்பது ஆராய்ச்சிக்கான அடிப்படை விதி.
 பல சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே அனுமானித்துக் கொண்ட ஒரு விஷயத்துக்கு அல்லது தீர்மானித்த முடிவுக்கு நியாயம் கற்பிப்பதே ஆராய்ச்சி என்று ஆகிவிட்டது, .
 ராகவய்யங்கார் என்ற தமிழறிஞர் பல தமிழ்நூல்களை எழுதியிருக்கிறார். பல துறைகளில் ஆய்வுசெய்து எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றவர். இறை பக்தி மிகுந்த வைணவர் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித் துரைத் தேவருடைய ஆதரவில் தமிழ்த்தொண்டு செய்த அறிஞர்.
 அவர் ஆழ்வார்கள் காலநிலை என்ற ஒரு நூல் எழுதினார். அந்த நூலில் கி. பி. 4. ம் நூற்றாண்டு தொடங்கி வாழ்ந்த முதலாழ்வார்கள் ( பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர்) மற்றும் பிற்காலங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் காலம் பற்றியும் எழுதியிருந்தார். திருமங்கையாழ்வார் கடைசியாக அவதரித்த ஆழ்வார் என்றும் கருத்து தெரிவித்தார். இந்த செய்திகள் அடங்கிய கட்டுரைகளை செந்தமிழ்ச் செல்வி என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதியிருந்தார்
உடனே வைணவர்களிடமிருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு தொடங்கியது. கூச்சலும் கண்டனமும் வந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் என்ற வைணவ அறிஞர் தன்னுடைய திவ்யார்த்த தீபிகை என்ற பத்திரிகையில் ராகவய்யங்காருடைய கருத்துக்களை மறுத்து எழுதத் தொடங்கினார். அய்யங்காரை வைணவ சமயத் துரோகி என்று வசை பாடினார்
 காரணம் அவர்கள் கூற்றுப்படி வைணவ ஆழ்வார்கள் அனைவரும் தெய்வப் பிறவிகள் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள் கேவலம் மனிதன் அறிந்த காலக் கட்டுக்குள் அவர்களை அடக்க முயற்சிப்பது அறிவீனம் என்கிறார்கள்.
 சைவ சமயம் வளர்த்த அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணீக்கவாசகர் ஆகிய சிவனடியார்களை நாம் அறிவோம்.
 இந்த நால்வரில் திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
 தேவாரம் பாடிய மூவருக்குப் பின் மாணீக்கவாசகர் தோன்றி சமயம் வளர்த்தார். என்பது பொதுவாக நிலவும் நம்பிக்கை. அனால் சில சைவ சமய அறிஞர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தைய காலத்தவர் என்றும் அவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாணிக்கவாசகர் புத்தரோடு வாதம் செய்து சைவ சமயத்தின் உயர்வை எடுத்துக் கூறி அவரை வாதத்தில் வென்றார் என்றும் கூறுகிறார்கள்.
 புத்தருடைய பிறப்பு, வாழ்வு, இறப்பு ஆகிய விவரங்கள் ஒரளவு தெளிவாகவும் நம்பக்கூடிய வகையிலும் பதிவு செய்யப்பட்டிருகிக்கிறது அவர் கி. மு. 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புத்தர் இந்தியாவின் தென்பகுதிக்கு வந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.
 ஆனால் சைவ சமய அறிஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்களுடைய நம்பிக்கையே உண்மை என்று வாதிடுகிறார்கள். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலையடிகளும் இந்த கருத்தைத் தீவிரமாக வலியுறுத்துகிறார்.
 பழமையானதெல்லாம் புனிதமானது என்ற குருட்டு நம்பிக்கையை நாம் வளர்த்திருக்கிறோம். ஆராய்ச்சி என்ற பெயரில் இது போன்று எழுதிக் குவிப்பதில் மிஞ்சி நிற்பது சைவ சமயப் பற்றுதான். உண்மையைக் கண்டறியும் நோக்கம் இல்லை
பழமையானதெல்லாம் புனிதமானது என்ற மூடநம்பிக்கைக்கு மதச் சாயல் பூசப்படும்போது விபரீதங்கள் நடக்கும் நிலை வரலாம்
. அதுதான் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்னவென்றால் இந்தியாவில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த சமயத் தலைவர்கள், ஞானிகள், இலக்கியப் படைப்பாளிகள் அரசர்கள் வாழ்ந்த காலம் பற்றி நம்பத் தகுந்த ஆவணங்கள். இல்லை
பல அரசர்களுடைய பிறந்த ஆண்டு, வாழ்ந்த காலம் எதைப் பற்றியும் தெளிவான செய்திகள் இல்லை. இந்தியாவில் வாழ்ந்த ஞானிகளில் தலையானவராக நாம் கருதும் ஆதிசங்கரர் வாழ்ந்த காலம் பற்றி கூட நம்மிடம் ஆதார பூர்வமான செய்திகள் இல்லை.
நாடாண்ட அரசர்கள் தங்களுடைய ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டுத் தான் கல்வெட்டு, சாஸனம் ஆகியவ/ற்றை படைத்தனர். குறிப்பிட்ட மன்னன் எந்த ஆண்டு பதவிக்கு வந்தான் என்பதை முதலில் தீர்மானித்த பிறகுதான் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஆண்டு பற்றி முடிவுக்கு வரமுடியும். இந்தியாவில் ஆட்சி செய்த பல மன்னர்கள் தாங்கள் இட்ட ஆனையை தாமிரபத்திரம். கல்வெட்டுக்களில் முறையாக ஆவணப்படுத்தவில்லை. வாய்மொழி உத்திரவு மூலம் மட்டுமே பல கட்டளைகள். காரியங்கள் நடைபெற்றன. அதனால் நம்முடைய நாட்டு வரலாற்றில் பெரிய இடைவெளி இருக்கிறது
 மொகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்தான் எல்லா அரசாங்க உத்திரவுகளும் நடவடிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டன. கிறிஸ்தவ சமயத்தை பரப்ப இந்தியாவுக்கு வந்த பல பாதிரிமார்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் பற்றியும் அவர்கள் சமூக வாழ்க்கை பற்றியும் நிறைய குறிப்புகளும் எழுதியிருக்கிறார்கள்.
அந்த குறிப்புகளும் கடிதங்களும் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த நாட்டில் இருந்த தலைமை மதபோதகர்களுக்கு எழுதபபட்டவை. அத்தகையகடிதங்கள், இன்றும் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சமய நிறுவனங்களின் நூல் நிலையங்களில் கிடைக்கின்றன.
 தமிழ்நாட்டு மக்களின் அன்றைய சமூக வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ள இந்த கடிதங்கள் பேருதவியாக இருந்தன
ஆகையால் தெளிவான வரலாற்றை இந்தியாவின் எந்த பகுதிக்கும் எழுதுவது. சாத்தியமில்லாமல் போய்விட்டது. கர்ணபரம்பரைக் கதைகளும், செவிவழிச் செய்திகளும் ஓரளவுக்கு உதவியாக இருந்தன.
ஒரே பகுதியில் வாழும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்கள் மற்ற சாதியினரின் பழக்கவழக்கத்தை, திரித்தும் இழிவு படுத்தியும் பேசுவதும் குறிப்புகள் எழுதுவதும் அந்த குறிப்புகளின் அடிப்படையில் வரலாறு எழுதப்படுவதுமான துரதிருஷ்டம் நடந்திருக்கிறது
இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, பல வரலாற்றாசிரியர்கள் இந்திய, வரலாற்றை கட்டுக்கதைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள் பல அறிஞர்கள் கால ஆராய்ச்சி என்ற பெயரில் நூல்கள் எழுதி பணம் காண முடிந்தது.
 எல்லாம் நம்முடைய போதாத காலம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?
-    மு. கோபலகிருஷ்ணன்.