Monday, February 15, 2016

வாழ்க்கை பயணத்தில்.. அவனும் அவளும்.





வாழ்க்கை பயணத்தில்.. அவனும் அவளும்.

அடர்ந்த காடு
இருண்ட விண்வெளி
ஒரு வழி, ஒற்றையடி பாதை நெடுந்தூரம்
தூரத்தில் வெளிச்சம், வழிநடத்திட ...
கையினில் இனிப்பு, கடந்து செல்ல...
சுமக்கும் பாரம், இறக்கி வைக்கும் நேரம்
மிச்ச இரண்டு..
உடல் உயிர்

பயணம் பரவசம் ! உன்னால் என்னவளே !!
 - SK

பின்குறிப்பு:
வெளிச்சம்: - பெற்றோர், ஆசான், நோக்கு, லட்சியம், அவா
கையினில் இனிப்பு - குழந்தை, கனவு, கற்பனை, பணம்
பாரம் - கோபம், லோபம், அகங்காரம்
உடல்  - அவன்
உயிர் - அவள்

Friday, February 12, 2016

காலம், கெட்ட காலம்

 காலம் கெட்ட காலம்
காலம் என்றால் என்ன? காலம் எப்படி ஏற்பட்டது? இந்த பிரபஞ்சம் தோன்றியது எப்பொழுது? பிரபஞ்சம் தோன்றியபோது காலமும் உடன் தோன்றியதா? பூமியில் காலம் உள்ளது போல மற்ற கிரகங்களிலும் காலம் உண்டா? மற்ற கிரகங்களிலும் காலத்தை இதே அளவை முறை கொண்டு அளக்க முடியுமா? முடியும் என்றால் எப்படி காலம் கணக்கிடப்படுகிறது? இதுபோன்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோனால் படிப்பவர்களுக்கு குழப்பம் தான் வரும் நமக்கு ஏன் இந்த வம்பு என்று அடுத்த பக்கத்துக்கு புரட்டி விடுவார்கள்.
 நம் இந்து மதம் பூமியின் கால அளவையும் இதர கிரகங்களின் கால அளவையும் வெவ்வேறானவை என்று கூறுகிறது.
 இவையெல்லாம் வேதாந்திகளின் பிரச்னைகள். கேள்விகள் விஞ்ஞானிகளும் இந்த காலத்தைப் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அந்த கேள்வி இதுதான்.
நாம் கடந்த காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். நிகழ்காலத்தை நினைவில் வைத்திருக்கிறோம். எதிர்காலத்தை நினைவில் வைத்திருக்கிறோமா?
சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றும். குழப்பம் தான் மிஞ்சும்.
 கடந்த காலத்தைப் பற்றிய நினைவும் இல்லாமல் போனால் நல்லது என்று சில சமயம் மனிதன் நினைப்பதுண்டு ஆனால் கடந்த காலத்தை மறக்க முடிவதில்லை மறக்க முயன்றாலும் சிலர் மறக்க விடுவது இல்லை.
நம் தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம் ஏன் இந்தியாவையே எடுத்துக் கொள்வோம் கடந்த காலத்தை மறக்க யாராவது தயாரா? அல்லது கடந்த காலத்தை மக்கள் மறக்க யாராவது அனுமதிப்பார்களா அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், வரலாற்றாசிரியர்கள், பழம்பெருமை பேசியே காலத்தைக் கழிக்கும் பத்தாம் பசலிப் பேர்வழிகள் இவர்களுடைய பிழைப்பே கடந்த காலத்தை நினைவு படுத்துவதில் தான் இருக்கிறது.
அதனால் நாடு என்ன பாடு படுகிறது? மக்கள் என்ன பாடு படுகிறார்கள் தமிழ் பழமையான மொழியா? அல்லது வடமொழி பழமையான மொழியா? பட்டிமன்றத் தலைப்பு.
 தமிழ்நாட்டு எல்லக்குள் யாராவது வடமொழிதான் பழமையான மொழி என்று கூறி விட்டால் அவன் கதி அதோ கதிதான். தமிழ்த் துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே யாராவது தமிழ்தான் காலத்தால் மூத்த மொழி என்று சொன்னால், அவன் இந்து மத விரோதி ஆகிவிடுவான்.
கடவுள் உலகத்தைப் படைத்தவுடன் மனிதனைப் படைத்தான். மனிதன் பேச வடமொழியைப் படைத்தான். வடமொழிதான் தேவ பாஷை என்று சொன்னால் தான் அவனுடைய தலை தப்பும் .
தேசத்துரோகி, இந்துமதத் துரோகி, வெளிநாட்டு ஏஜண்ட் என்ற அர்ச்சனைகளிலிருந்து தப்பலாம்
எந்த மொழி மூத்த மொழி, எந்த நூல் காலத்தால் முந்தைய நூல் எந்த இனம் மனித குலத்தின் முதல் இனம் எந்த மதம் முதலில் தோன்றியது இப்படி எல்லா கேள்விகளிலும் அதற்கான பதில்களிலும் அடிப்படையான அம்சம் காலம் தானே?
வேதங்கள்தான் இந்தியாவில் தோன்றிய முதல் நூல் என்று சொல்கிறார்கள். அந்த வேதம் கி. மு. 1500 வாக்கில் தோன்றியதாகவும் ஆகையால் 3500 ஆண்டுகள் பழமையானவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உடனே ஒரு எதிர்ப்புக் குரல் ஆவேசமாக ஒலிக்கிறது
வேதங்களுக்குக் காலம் கிடையாது. எல்லா வேதங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டவை. நான்கு வேதங்களும் கி. மு. 8000 ஆண்டு வாக்கில் எழுத்தில் வடிக்கப்பட்டன. என்று அந்த ஆவேசக்குரல் ஒலிக்கிறது.
இவர்கள் அழுத்தமான இந்து மத நம்பிக்கையாளர்கள். மற்றவர்களுக்கு
நம்பிக்கை இல்லையென்று பொருள் அல்ல.
 நம்முடைய சமயம் கடவுளிடமிருந்து தொடங்கியது என்பதில் இவர்களுக்கு அழுத்தமான நம்பிக்கை. எல்லா மதத் தலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள் காலக் கணக்கெல்லாம் மனிதர்களுக்குத்தான். இறைவனுக்கும், இறைவன் அருளிய வேதங்களுக்கும் காலவரயறை செய்ய மனிதனுக்கு உரிமை இல்லை. என்கிறார்கள்.
 வரலாற்றை விஞ்ஞான பூர்வமாகப் பார்ப்பது என்ற பெயரால் ஆங்கிலம் படித்தவர்கள், வேத காலத்தை பின் தள்ளி போடுகிறார்கள். அவர்கள் இந்துமத விரோதிகள், என்ற கூச்சல் இப்பொழுது நாடெங்கும் ஒலிக்கிறது. சமீப காலத்தில் இந்த கூச்சல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, .
இது போன்று வரலாறு எழுதும் ஆசிரியர்கள், எழுத்தாளர்களுடைய புத்தகங்களை, தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஒரு தலைவர் கூறிவிட்டார். இந்த வரலாற்றாசிரியர்கள், எல்லோரும் வாலைச் சுருட்டிக் கொண்டு மூலையில் உட்கார வேண்டிய காலம் வந்துவிட்டது, .
வேதம் போன்ற நூல்களின் காலத்தை நிர்ணயம் செய்வதில் வெறும் வரலாறு மட்டும் இல்லை. அங்கே மதம் இருக்கிறது. அதனால் தான் தன் கருத்தை உரத்த குரலில் பேச யாரும் அனுமதிக்கப்படுவதில்லை
 முஸ்லீம் மன்னன் படையெடுத்து வந்து சோமநாதபுரம் கோயிலை சூறையாடினான் என்பது அடிக்கடி பேசப்படும் வரலாற்றுச் செய்தி
ஒரு முறை அல்ல, பல மு/றை அந்த முஸ்லீம் மன்னன் படையெடுத்துக் கோயிலை அழித்தான் என்ற கதை கலந்த வரலாறு. பள்ளிப் பிள்ளைகளுக்கு போதிக்கப்படுகிறது. பலமுறை என்று சொன்னால் மட்டும் போதுமா? அழிக்கப்பட்ட கோயில் எவ்வளவு முக்கியமானது?இந்த தேச மக்களுக்கு பழங்கால கோயில் என்றால் முக்கியத்வம் கூடுதலாகத் தெரியும்.
 ஆகையால் சோமநாதபுரம் கோயில் 30000 ஆண்டுகள் பழமையான
கோயில் அவ்வளவு பழமையான கோயிலை இடித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.
 வரலாற்றாசிரியர்கள் ஆதாரங்களுடனும் தர்க்கரீதியாகவும் இந்தியாவில் கோயில்கள் கட்டப்பட்டதெல்லாம் புத்தர் காலத்துக்குப் பிறகுதான் என்று கூறுகிறார்கள் புத்தர் காலம் வரை இந்து சமய வழிபாட்டு முறைகளில் யாகங்களும், ஹோமங்களும் மட்டுமே முக்கியத்வம் பெற்றிருந்தன. என்று கூறுகிறார்கள்>
. காலத்தைக் கூடுதலாகச் சொல்வதன் மூலம் கோயிலின் புனிதம் அதிகமாகும் என்று நம்புகிறார்கள்
 தமிழ் இலக்கியத்தில் உள்ள சில முக்கிய படைப்புகள் பற்றியும் தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த காலம் பற்றியும் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. சென்ற தலைமுறையில் வாழ்ந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை என்/ற தமிழ் அறிஞர் பல நூல்களின் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ் இலக்கிய் வரலாறு என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இந்திய மொழிகளிலேயே முதன்முதலாக தமிழுக்குக் கலைக் களஞ்சியம் உருவானது பிள்ளை அவர்களுடைய சீரிய முயற்சியில்தான். பெரும்பான்மையான மக்கள் பேசும் இந்தி மொழிக்குக் கூட இன்று வரை கலைக் களஞ்சியம் தயாராகவில்லை. இந்த நிலையில் பிள்ளையவர்கள் தமிழ் மொழிக்குக் கலைக்களஞ்சியம் தயாரித்தார்.
 ஆனால் தமிழ்நாட்டில் பல தமிழ் விரும்பிகள் பிள்ளையை தமிழ் இனத்துரோகி என்று கூசாமல் கூறுவார்கள் இன்றுவரை பல இலக்கிய மேடைகளில் அவர் மீது வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறது
காரணம் பிள்ளை தொல்காப்பியத்தை கி. பி. முதல் நூற்றாண்டு நூல் என்று கணக்கிட்டிருக்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களையும் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிந்தையது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்
 அவர் தெரிவித்திருக்கும் ஆதாரங்களைப் பற்றி பேசாமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வசை பாடும் தமிழ் அறிஞர்களை இன்றும் பார்க்கலாம் ஏனென்றால் அவர்கள் கூற்றுப்படி தொல்காப்பியம் தான் தமிழின் முதல் நூல். திருவள்ளுவர் கி. மு. முதல் நூற்றாண்டு பிறந்தார். ஏசுநாதருக்கு முன் வாழ்ந்தார். தொல்காப்பியர் 7000ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்று சொல்லும் தமிழ் அறிஞர்களையும் பார்க்கலாம்.
 இங்கே ஆராய்ந்து உண்மையைக் காண்பது என்ற நோக்கத்துக்கு மேலாக ஓங்கி நிற்பது மொழிப்பற்று தான். பற்று அற்று சிந்தித்தால்தான் உண்மையை கண்டறிய முடியும் என்பது ஆராய்ச்சிக்கான அடிப்படை விதி.
 பல சந்தர்ப்பங்களில் ஏற்கெனவே அனுமானித்துக் கொண்ட ஒரு விஷயத்துக்கு அல்லது தீர்மானித்த முடிவுக்கு நியாயம் கற்பிப்பதே ஆராய்ச்சி என்று ஆகிவிட்டது, .
 ராகவய்யங்கார் என்ற தமிழறிஞர் பல தமிழ்நூல்களை எழுதியிருக்கிறார். பல துறைகளில் ஆய்வுசெய்து எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றவர். இறை பக்தி மிகுந்த வைணவர் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பாண்டித் துரைத் தேவருடைய ஆதரவில் தமிழ்த்தொண்டு செய்த அறிஞர்.
 அவர் ஆழ்வார்கள் காலநிலை என்ற ஒரு நூல் எழுதினார். அந்த நூலில் கி. பி. 4. ம் நூற்றாண்டு தொடங்கி வாழ்ந்த முதலாழ்வார்கள் ( பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர்) மற்றும் பிற்காலங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் காலம் பற்றியும் எழுதியிருந்தார். திருமங்கையாழ்வார் கடைசியாக அவதரித்த ஆழ்வார் என்றும் கருத்து தெரிவித்தார். இந்த செய்திகள் அடங்கிய கட்டுரைகளை செந்தமிழ்ச் செல்வி என்ற பத்திரிகையில் தொடர்ந்து எழுதியிருந்தார்
உடனே வைணவர்களிடமிருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு தொடங்கியது. கூச்சலும் கண்டனமும் வந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் என்ற வைணவ அறிஞர் தன்னுடைய திவ்யார்த்த தீபிகை என்ற பத்திரிகையில் ராகவய்யங்காருடைய கருத்துக்களை மறுத்து எழுதத் தொடங்கினார். அய்யங்காரை வைணவ சமயத் துரோகி என்று வசை பாடினார்
 காரணம் அவர்கள் கூற்றுப்படி வைணவ ஆழ்வார்கள் அனைவரும் தெய்வப் பிறவிகள் கோடான கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள் கேவலம் மனிதன் அறிந்த காலக் கட்டுக்குள் அவர்களை அடக்க முயற்சிப்பது அறிவீனம் என்கிறார்கள்.
 சைவ சமயம் வளர்த்த அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணீக்கவாசகர் ஆகிய சிவனடியார்களை நாம் அறிவோம்.
 இந்த நால்வரில் திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
 தேவாரம் பாடிய மூவருக்குப் பின் மாணீக்கவாசகர் தோன்றி சமயம் வளர்த்தார். என்பது பொதுவாக நிலவும் நம்பிக்கை. அனால் சில சைவ சமய அறிஞர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கின்றனர். மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தைய காலத்தவர் என்றும் அவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மாணிக்கவாசகர் புத்தரோடு வாதம் செய்து சைவ சமயத்தின் உயர்வை எடுத்துக் கூறி அவரை வாதத்தில் வென்றார் என்றும் கூறுகிறார்கள்.
 புத்தருடைய பிறப்பு, வாழ்வு, இறப்பு ஆகிய விவரங்கள் ஒரளவு தெளிவாகவும் நம்பக்கூடிய வகையிலும் பதிவு செய்யப்பட்டிருகிக்கிறது அவர் கி. மு. 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புத்தர் இந்தியாவின் தென்பகுதிக்கு வந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.
 ஆனால் சைவ சமய அறிஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்களுடைய நம்பிக்கையே உண்மை என்று வாதிடுகிறார்கள். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலையடிகளும் இந்த கருத்தைத் தீவிரமாக வலியுறுத்துகிறார்.
 பழமையானதெல்லாம் புனிதமானது என்ற குருட்டு நம்பிக்கையை நாம் வளர்த்திருக்கிறோம். ஆராய்ச்சி என்ற பெயரில் இது போன்று எழுதிக் குவிப்பதில் மிஞ்சி நிற்பது சைவ சமயப் பற்றுதான். உண்மையைக் கண்டறியும் நோக்கம் இல்லை
பழமையானதெல்லாம் புனிதமானது என்ற மூடநம்பிக்கைக்கு மதச் சாயல் பூசப்படும்போது விபரீதங்கள் நடக்கும் நிலை வரலாம்
. அதுதான் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்னவென்றால் இந்தியாவில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த சமயத் தலைவர்கள், ஞானிகள், இலக்கியப் படைப்பாளிகள் அரசர்கள் வாழ்ந்த காலம் பற்றி நம்பத் தகுந்த ஆவணங்கள். இல்லை
பல அரசர்களுடைய பிறந்த ஆண்டு, வாழ்ந்த காலம் எதைப் பற்றியும் தெளிவான செய்திகள் இல்லை. இந்தியாவில் வாழ்ந்த ஞானிகளில் தலையானவராக நாம் கருதும் ஆதிசங்கரர் வாழ்ந்த காலம் பற்றி கூட நம்மிடம் ஆதார பூர்வமான செய்திகள் இல்லை.
நாடாண்ட அரசர்கள் தங்களுடைய ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டுத் தான் கல்வெட்டு, சாஸனம் ஆகியவ/ற்றை படைத்தனர். குறிப்பிட்ட மன்னன் எந்த ஆண்டு பதவிக்கு வந்தான் என்பதை முதலில் தீர்மானித்த பிறகுதான் அனைவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஆண்டு பற்றி முடிவுக்கு வரமுடியும். இந்தியாவில் ஆட்சி செய்த பல மன்னர்கள் தாங்கள் இட்ட ஆனையை தாமிரபத்திரம். கல்வெட்டுக்களில் முறையாக ஆவணப்படுத்தவில்லை. வாய்மொழி உத்திரவு மூலம் மட்டுமே பல கட்டளைகள். காரியங்கள் நடைபெற்றன. அதனால் நம்முடைய நாட்டு வரலாற்றில் பெரிய இடைவெளி இருக்கிறது
 மொகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்தான் எல்லா அரசாங்க உத்திரவுகளும் நடவடிக்கைகளும் ஆவணப்படுத்தப்பட்டன. கிறிஸ்தவ சமயத்தை பரப்ப இந்தியாவுக்கு வந்த பல பாதிரிமார்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் பற்றியும் அவர்கள் சமூக வாழ்க்கை பற்றியும் நிறைய குறிப்புகளும் எழுதியிருக்கிறார்கள்.
அந்த குறிப்புகளும் கடிதங்களும் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த நாட்டில் இருந்த தலைமை மதபோதகர்களுக்கு எழுதபபட்டவை. அத்தகையகடிதங்கள், இன்றும் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சமய நிறுவனங்களின் நூல் நிலையங்களில் கிடைக்கின்றன.
 தமிழ்நாட்டு மக்களின் அன்றைய சமூக வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ள இந்த கடிதங்கள் பேருதவியாக இருந்தன
ஆகையால் தெளிவான வரலாற்றை இந்தியாவின் எந்த பகுதிக்கும் எழுதுவது. சாத்தியமில்லாமல் போய்விட்டது. கர்ணபரம்பரைக் கதைகளும், செவிவழிச் செய்திகளும் ஓரளவுக்கு உதவியாக இருந்தன.
ஒரே பகுதியில் வாழும் பல்வேறு சாதியைச் சேர்ந்த மக்கள் மற்ற சாதியினரின் பழக்கவழக்கத்தை, திரித்தும் இழிவு படுத்தியும் பேசுவதும் குறிப்புகள் எழுதுவதும் அந்த குறிப்புகளின் அடிப்படையில் வரலாறு எழுதப்படுவதுமான துரதிருஷ்டம் நடந்திருக்கிறது
இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, பல வரலாற்றாசிரியர்கள் இந்திய, வரலாற்றை கட்டுக்கதைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள் பல அறிஞர்கள் கால ஆராய்ச்சி என்ற பெயரில் நூல்கள் எழுதி பணம் காண முடிந்தது.
 எல்லாம் நம்முடைய போதாத காலம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?
-    மு. கோபலகிருஷ்ணன்.

Saturday, January 23, 2016

பனிப்புயல்



பள்ளிகளை மூடி
கடைகளை அடைத்து
வீட்டில் காய்கறி, பால் ரொட்டி குவித்து
சினிமா, பாடல்கள் தேர்ந்தெடுத்து வைத்து
பஜ்ஜி, பலகாரம் செய்து
பனி வரும் என்ற ஆவலும் பயமும் கலந்த எதிர்பார்ப்பில்...

பொய்க்காமல் வந்த பனிப்புயலே - நன்றி!

பனிக்காலப் பகல்



விழித்தெழ விடியும் நேரம்
இருளைத் தழுவி மயக்கும் ஒளி
மேகச் சுறுக்கமின்றித் திரையென வான்
பறந்து பறந்து இறங்கும் பனி
விண்ணும் மண்ணும் ஒரே நிறம்
படிந்தவற்றை வாரிவாரி இறைக்கும் காற்று
நடுங்கும் குளிரில் நிமிர்ந்த மரங்கள்
கிளைவிட்டு கிளை மாறும் ஓரிரு பறவைகள்
இயற்கையின் பகல்காட்சி இனிதே ஆரம்பம்

Sunday, January 10, 2016

இந்த நாள் இனிய நாள்

மழைக்குப்பின் தெளிந்த வான்
மரத்திடை கலங்கிய ஆறு
மாறிமாறி ஒலிக்கும் காற்றின் இசை
மாற்றமில்லா மார்கழிக் குளிர்
மனைவியின் அன்பில் இனிக்கும் தேனீர்
மற்றும் ஒருமுறை மயங்கிய உயிர்

Sunday, January 03, 2016

பித்தனின் கிறுக்கல்கள் - 50

அனைவருக்கும் 2016 புது வருட வாழ்த்துக்கள்.

ஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.

புதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது.  அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார்.  அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம்.


சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம்

நாஞ்சில் சம்பத்தின் பேட்டி

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Monday, December 21, 2015

மனிதனால் வந்த பேரிடர் (Man made Disaster )



           
   சென்ற நவம்பர் முதல் வாரம் வரை குடிநீர்த் தட்டுப்பாடு வரும் என்று அஞ்சிய சென்னை மக்களுக்கு வடகிழக்குப் பருவமழை நன்றாக இருக்கும் என்று கூறிய வானியல் ஆய்வு மைய்யச் செய்தி சற்று நம்பிக்கை கொடுத்தது. ஆனால் 2 வது வாரத்தில் கனமழை எச்சரிக்கை அடிக்கடி வரத் தொடங்கியது. எல்லோருடைய எதிர்பார்ப்பையும் மீறி பெய்த கனமழை ஒரு சில நாளில் 47செ.மீ, 49 செ.மீ என்றும் பெய்து செனனை நகரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது.
      பல ஆண்டுகளாக இயற்கையைச் சீண்டி விளையாடிக் கொண்டிருந்த மனிதன் மீது இயற்கை ஆக்ரோஷத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மேம்போக்காக எழுதுவதை விட சில விவரங்களைக் குறிப்பிட்டு எழுதுவது  நல்லது என்று நினைக்கிறேன்
      சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் சுமார் 3700 ஏரிகள் உண்டு. சில ஏரிகள் பெரியவை, பல ஏரிகள் சிறியவை.பெரிய ஏரிகளும்,முக்கியமான சில சிறிய ஏரிகளும் தமிழ்நாடு அரசாங்கத்தின் பொதுப்பணித் துறையின் நேரடி   கட்டுப்பாட்டில் உள்ளன. புழல் ஏரி,செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய பெரிய ஏரிகள் சென்னை மாநகரத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படும்.நவம்பர் 1 ம்தேதி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிலை மிகமிகக் குறைவு.( 228 மில்லியன் கன அடி).வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 46.மில்லியன் கன அடி. ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் பெருகிய நீர்வரத்தை சரியாக கணிக்காமல் திடீரென்று நவம்பர் 17 ம் தேதி 18000 மில்லியன் கன அடியும் டிசம்பர் 1 ம்தேதி 29000 மி.கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.
 இது பற்றி எதிர்க்கட்சிகள் கூறும் புகார்களுக்கு அதிகாரிகளூம் மாறுபட்ட, முரண்பட்ட அறிக்கையை காலம் கடந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி விவாதிப்பது எந்த பயனையும் கொடுக்கப் போவதில்லை .ஆளும் கட்சியின் அதிகாரக் குவியல் முறைக்கு இது நல்ல உதாரணம். அவ்வளவுதான் இந்த அதிகாரக் குவியல் கடந்த பல ஆண்டுகளாக அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. பல ..எஸ் அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் தன்மானத்தை இழந்து உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 இந்த விவரங்களுக்குள் இப்பொழுது போக வேண்டாமென்று நினைக்கிறேன் இப்பொழுது வெள்ளத்துக்கான உண்மையான காரணங்களைப் பற்றி மட்டும் சிந்திப்போம்
45 ஏரிகளின் உபரி நீர் கூவம் நதியில் கலந்து சென்னை நேப்பியர் பார்க் அருகில் கடலில் கலக்கும்.200 ஏரிகளின் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்து சென்னை அருகில் கடலில் கலக்கும்.இந்த கொசஸ்தலை ஆறு ஆந்திராவில் உற்பத்தியாகி 130 கி.மீட்டர் தமிழ்நாட்டில் ஓடுகிறது. இறுதியாக சென்னை அருகில் கடலில் கலக்கிறது.
 ஆந்திராவில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் 140 கி. மீட்டர் தூரம் ஓடும் ஆரணி ஆற்றில் 210 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.இந்த ஆறும் சென்னை அருகில் கடலில் கலக்கிறது.
 தமிழ்நாட்டின் நீர்வளம் நிலவளம் என்று எப்படியோ எவ்வளவோ பெருமை பேசினாலும் இங்கே ஓடும் பெரும்பாலான நதிகள் பிற மாநிலங்களில் தான் உற்பத்தியாகின்றன என்ற உண்மையை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டில் ஓடி, தமிழ்நாட்டிலேயே கடலில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணி மட்டும்தான்.
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் விவசாயிகள் ஏரியில் இருக்கும் நீரை நம்பித்தான் விவசாயம் செய்தார்கள்.சில வருடங்கள் தஞ்சை மாவட்டத்தில் இல்லாத அளவுக்கு வட மாவட்டங்களில் மூன்று போக விவசாயம் நடப்பதுண்டு தேக்கி வைக்க முடியாத அளவுக்கு நீர் நிரம்பினால் ஏரியின் உபரி நீர் பாலாறு,ஆரணி ஆறு போன்ற ஆறுகளில் கலந்து கடலில் சேரும் .
2005 ம் ஆண்டு வந்த வெள்ளத்தில் கொசஸ்தலை ஆற்றில். எவ்வளவுநீர் பாய்ந்ததோ அதே அளவு நீர்தான் இந்த ஆண்டும் பாய்ந்த்தாகச் சொல்கிறார்கள். ஆனால் இப்பொழுது ஆற்றின் படுகையின் அளவு 50 மீட்டர்  குறுகி விட்டது.ஆற்றின் கொள்ளளவு குறைந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
  2005 ம் ஆண்டு அடையாற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் ஓடியது.அதே அளவு நீர்தான் இந்த வெள்ளத்திலும் ஓடியது. இடையில் உள்ள முக்கிய ஏரிகள் பல ஆக்கிரமிப்புக்குள்ளானதால் ஆற்று நீர் ஆக்ரோஷமாக பல பகுதிகளில் புகுந்து பழி தீர்த்தது
      கூவம், அடையாறு,  கொசஸ்தலை,ஆறுகள் கடலில் கலக்கும் இடம் மணல், சேறு நிரம்பி, பல மைல்களூக்கு தூர் வாரப்படாமல் இருப்பதால் நீர் கடலை அடைவதில் தாமதம் ஆகிறது, தூர் வாரும் கடமையை பல ஆண்டுகள் செய்யாததாலும், பல இடங்களில் பேப்பரில் மட்டும் தூர் வாரியதாக கணக்கு காட்டியதாலும் ஏற்பட்ட பலனைத்தான் இன்று மக்கள் அனுபவிக்கிறார்கள்.
  ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்று பெருமையுடன் குறிப்பிடப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு ஏரியை நிரப்பி மேடாக்கி கட்டப்பட்டிருக்கிறது. மதுரையில் புதிய பேருந்து நிலையமும் அப்படி உருவாக்கப்பட்டதுதான்
  நூற்றுக்க்ண்க்கான பெரிய ஏரிகள் பல ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.தூர் வாரப்படவில்லை.ஏரிக்கு நீர் வரும் பகுதிகளும் ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகிறது,இந்த வகையில் எல்லோருமே குற்றவாளிகள்.பொதுமக்கள்,  மணல் மஃபியாக்கள்,ஒப்பந்தக்காரர்கள்,ரியல் எஸ்டேட் முதலாளிகள்,பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளையில் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அமைதியாக சீரழிந்து கொண்டிருக்கிறது.
  பல ஏரிகள் மேடாக்கப்பட்டு,கட்டிடங்கள் எழுப்பபட்டன. தனியார் வீடுகள்,அடுக்குமாடிக் கட்டிடங்கள்,கம்பெனி அலுவலகங்கள், அரசாங்க அலுவலகங்கள்,இப்படி வகை வகையாக  இயற்கையின் மீதான வன்முறை சூறையாடல் கேட்பாரற்றுத் தொடர்ந்தது.
திருநெல்வேலியில் ஸ்ரீவைகுண்டம் அணை தூர் வாரப்படவேண்டும் என்று கோரி விவசாயிகள் இயக்கம் நடத்தினார்கள்.விவசாயிகளுக்கு ஆதரவாக நல்லகண்ணு என்ற பெரியவர் நீதிமன்றத்துக்குப் போய் வெற்றி பெற்றார்.ஆனால் அரசாங்கம் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தவிலை. நீதிமன்றத்துக்குப் போக பெரியவருக்கு உதவியாக இருந்து பல விவரங்களைக் கொடுத்த பக்கத்து கிராம பஞ்சாயத்துத் தலைவர் 80 வயது முதியவர் கொலை செய்யப்பட்டார்.நேர்மையாக நடக்க முயன்ற அதிகாரிகள்,தாசில்தார்கள் மீது லாரி ஏற்றிக் கொல்வதும் அதை விபத்தாகச் சித்தரிப்பதும் நிறையவே நடந்திருக்கின்றன.எந்த விசாரணையும் நடந்ததில்லை.
   30 அடி அகலமுள்ள வாய்க்கால்கள் இன்று 8 அடி அல்லது 10 அடி அகலமுள்ளதாகச் சுருங்கிவிட்டன. காரணம் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தை விஸ்தரித்துக் கொண்டேபோகிறார்கள்.எந்த கிராம  நிர்வாக அதிகாரியும் அளந்து பார்ப்பதிலை.கேட்பதில்லை.இதன் விளைவாக வாய்க்காலின் கடைசியில் உள்ள நிலத்துக்கு நீர் போவதில்லை. கிராமங்களில் சண்டை, சச்சரவு. இதேபோல் தெருக்களில் சாலைகளில் நீர்வழிப்பாதைகள். மறிக்கப்படுகிறது.எல்லா ஏரிகளும் அளவில் சுருங்கிப் போய்விட்டன. பல ஏரிகள் காணாமல் போய்விட்டன.
  சென்னையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களின் நீர்வழிப்பாதை சீரழிக்கப்பட்டதுதான் இந்த வெள்ளத்துக்கு காரணம்.அசாதாரணமான மழை என்பது உண்மையாக இருக்கலாம் ஆனால் இன்று அல்ல,பல ஆண்டுகளாகவே சென்னை நகரம் இந்த மழையின் அளவில் பாதியைக் கூடத் தாங்க முடியாத அளவுக்கு சீர் கெட்டுவிட்டது பெரும்பகுதி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.சென்னையின் பெருமை என்று பேசப்படும் அண்ணா சாலை கூடமூழ்கியது.சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தின் கைப்பிடிச் சுவற்றுக்கு மேல் 5 அடி உயரத்துக்கு வெள்ள நீர் போனதைப் பார்க்கும் போது உலகம் பிரளய காலத்தை நெருங்கிவிட்டது போலத் தோன்றியது.
70 சதவிகித மக்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. ஒரு வார காலத்துக்கு நகரத்தில் மின்சாரம் இல்லை. தொலைபேசி இல்லை. .செல்போன் இல்லை.போக்குவரத்து இல்லை.நகரம் தமிழ்நாட்டில்
இருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளீல் உடைப்பு எடுத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 70 க்கு மேற்பட்ட பாலங்கள் உடைந்தன.சமீப காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட,5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட புதிய பாலங்கள் உடைந்தன.
   திருநெல்வேலி மாவட்டத்தில் 16 ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு இந்த மழைக்கு ஈடு கொடுத்து நின்றது.நவீன விஞ்ஞான யுகத்தில் வளர்ச்சி அடைந்த கல்வி முறையில் படித்து பட்டம் பெற்ற பொறியாளர்கள் கட்டிய பாலங்கள் சிதறிப் போய் கட்டியவர்களூடைய தொழில் நேர்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த வெள்ளம்.
  கழிவுநீர் வெளியேற்றம் போன்ற எந்த திட்டமும்  நிறைவேற்றப்படவில்லை.இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு வழிகாட்டும் வகையில் 1976 ம் ஆண்டு தொடங்கி அமைக்கப்பட்ட 8 கமிட்டி ரிப்போர்ட்கள் பத்திரமாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றன. .பொறுமை இழந்த சாக்கடை நீர் ரிப்பன் கட்டிடத்தைத் தேடி செனை நகரம் முழுவதும் வலம் வந்துவிட்டது
  வெள்ளநீர் தெருவில் வரும்போது சாக்கடைநீருடன் சேர்ந்து கழிவுநீராகவே வீடுகளில் புகுந்தது.குழிகள் இருக்கும் இடம் தெரியாமல் குழியில் விழுந்த மனிதர்கள் எத்தனை பேர் அவர்கள் கதி என்ன என்பது இன்னும் முழுதாகத் தெரியவில்லை.இடுப்பளவு நீர் உள்ள தெருக்களில் கூட நடப்பது அபாயகரமானதாகவே இருந்தது.திடீரென்று குழிகள் தட்டுப்படும். இரு சக்கர வாகனங்கள்,கவிழ்ந்த வாகனங்கள் தட்டுப்படும்
மழை வெள்ளத்தில் இறந்தவர்கள் பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படவிலை.சென்னை நகரத்தில் மட்டும் 1000 த்தைத் தாண்டும் இன்று வரை 350 பேர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. பரிதாபமான முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய விவரம் கண்களை ஈரமாக்கும்.
  பொதுவாக வெள்ளம் நதிக்கரயில் உள்ள ஏழைகளின் குடிசைகளையும் உடைமைகளையும் தான் சேதப்படுத்தும் என்ற நிலை மாறி இந்த வெள்ளம் மத்தியதர வர்க்க மக்களின் வீடுகளையும், மாடிக் கட்டிடங்களையும் கடுமையாக பாதித்துவிட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் முழுகி, நீர் இரண்டாம் தளத்துக்குச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமானது.மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து பல நாட்கள் பசியாலும்,மனவேதனையிலும் மக்கள் குன்றிப் போனார்கள். ஆதம்பாக்கம்,நங்கநல்லூர்,கீழக்கட்டளை போன்ற புதிய குடியிருப்புப் பகுதிகள் பல நாட்கள் நீரில் மூழ்கிக் கிடந்தன.
    கர்ப்பிணிப் பெண்கள்,  வயோதிகர்கள், நோயாளிகள்,ஆகியோருக்கு எந்த உடனடி உதவியும் செய்ய முடியவில்லை .மாம்பலம் போன்ற பகுதிகளில் பல மளிகைக் கடைகளின் பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன.எந்தப் பொருளையும் காப்பாற்ற முடியவில்லை.பல இரு சக்கர வாகனங்கள், கார்கள்.பல நாட்கள் நீரில் மூழ்கி உருத் தெரியாமல் சிதைந்து போய்விட்டன.பெரும்பாலான வாகனங்களை இனி இயக்க முடியாது என்கிறார்கள்.
     அண்ணா சாலை போன்ற நகரத்தின் மைய்யபகுதியில் வெள்ளம் வரும் என்று யாரும் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள்.நகரத்தின் பெரும் பகுதி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடே கலகலத்துப் போனது
முதல் சில நாட்கள் குலைந்து போய் நின்ற மக்கள் பிறகு பிரச்னையை எதிர்கொள்ளத் தொடங்கினார்கள்.தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டார்கள் அரசாங்கம் ஆபத்து காலத்தில் பெரியதாக உதவி செய்து விடப் போவதில்லை என்று உணர்ந்தவர்களய்த் தாங்களே செயல்பட்டனர்.
      உடல்கட்டும்,மனவலிமையும் உள்ள இளைஞர்கள் பகுதி, பகுதியாகக் கூடி, சாதி, சமய எல்லைகளைக் கடந்து, பக்கத்து
வீட்டார், எதிர்வீட்டார், பக்கத்துத் தெருவினர் என்ற உறவில் உதவத் தொடங்கினார்கள்.படகுகளைக் கொண்டு வந்து பெண்களையும்,குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சேர்த்தார்கள்.இடையில் ராணுவமும் வந்தது.வேலை துரிதமானது.
ராணுவம், பேரிடர் மீட்புப் படை ஆகிய அமைப்புகளின் பயிற்சி பெற்ற ஊழியர்கள் வந்த பிறகுதான் நிலைமை ஓரளவுசரியானது.இளைஞர்கள் தொண்டுள்ளத்தோடு அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.எல்லா கட்சியினரும்,பல தொண்டு அமைப்புகளும் வரிந்து கட்டிக் கொண்டு செயலில் இறங்கினார்கள்.மனிதன் தனக்குத் தானே வரைந்து கொண்ட எல்லா எல்லைகளையும் களைந்தெறிந்து விட்டுச் செயல்பட்டான்
   மொட்டைமாடியில் நின்று கொண்டிருந்த மக்கள் ஹெலிகாப்டர் மூலம் கொடுத்த உணவுப் பொருட்களை வாங்கும்போது ஆதங்கத்தோடு மேல்நோக்கி அவர்கள் கை ஏந்தும்போது அவர்களுடைய முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவர்கள் யாரும் இல்லாதவர்கள் இல்லை. பல லட்சம் முதல் போட்டு கட்டிய வீட்டின் சொந்தக்காரர்கள்.கவுரவமான உத்தியோகம் பார்ப்பவர்கள். பசி அவர்களை மாற்றி விட்ட கொடுமையை வார்த்தைகளில் அடக்க முடியாது. குழந்தைகள் என்ன பாடு பட்டிருக்கும்?.நெஞ்சை உலுக்கும் வகையில் அவர்களுக்கு கொடுமை இழைத்துவிட்டது இந்த வெள்ளம்
 எளிய மக்கள் தங்களுடைய குடிசைகளை இழந்து விட்டார்கள். இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு சுவடு தெரியாமல் வெள்ளம் அழித்து விட்டது வெள்ளம் ஏற்படுத்திய அழிவால் குவிந்த குப்பைகள் பல லட்சம் டன் இருக்கும் என்கிறார்கள், மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து முனிசிபல் ஊழியர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.சுத்தம் செய்யும் வேலை முடிய ஒரு மாதம் ஆகலாம்.
  தி.மு.,.தி.மு.,.தி.மு. தே.மு.தி.. தொண்டர்களும் காங்கிரஸ் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல முஸ்லீம் அமைப்புகளும்.இப்படி எல்லா அமைப்பினரும் தீவிரமாக வேலை செய்ததை பல பத்திரிகைகள் பாராட்டியிருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சியினரும் அவர்களுடைய தொழிற்சங்கத் தொண்டர்களும் பல நாட்கள் இரவு பகல் கண்விழித்து செயல்பட்டதாக ஹிந்து பத்திரிகை எழுதுகிறது.
   திருவல்லிக்கேணீயில் பிராமண சங்கத்தினர் 2000 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தனர்.ஆனால் அதை விநியோகம் செய்ய அவர்களிடம் தேவையான தொண்டர்கள் இல்லை.பக்கத்தில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் தலைவருக்கு அவர்கள் தகவல் கொடுத்தார்கள் அந்த முஸ்லீம் 20 தொண்டர்களுடன் போய் அந்த உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தார். பிராமணர்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது என்று நா தழுதழுக்க அவர் கூறினார் .அவர் கண்களில் கண்ணீர் சுரந்தது.
  சென்னை தங்கசாலைத் தெருவில் ஜெயின் சமூகத்தினர் அதிக எண்ணீக்கையில் வாழ்கிறார்கள் சேட்டு என்று தமிழ்நாட்டில் அவர்களைக் குறிப்பிடுவார்கள் தமிழ் சினிமாக்களில் அதிக வட்டி வாங்கும் கொள்ளையர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள் )அவர்கள் அற்புதமான தொண்டு செய்தார்கள்.தினமும் பல ஆயிரக் கணக்கான உணவுப் பொட்டலங்கள் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள் குடும்பப் பெண்கள்,சிறுவர்கள் அணைவரும்  உணவு தயாரிக்கும் வேலையில்  ஈடுபட்டனர்.சுமார் 2 லட்சம் உணவுப் பொட்டலங்களை அவர்கள் மட்டும் கொடுத்திருப்பார்கள்
    நிவாரண வேலையிலும் அங்கும் இங்குமாக சில அபஸ்வரம் இருக்கத்தான் செய்தது.தனக்கும் தன்னுடைய அமைப்புக்கும் பெயர் தேடிக் கொள்ள வாய்ப்பாக சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள் அந்த விவரங்களுக்குள் போக விரும்பவில்லை மனிதனுடைய இருப்புக்கு சவால் வரும்போது அவன் எல்லா எல்லைகளையும் கடந்து இணைந்து நின்று சவாலை எதிர்கொள்கிறான் என்பது சற்று ஆறுதலான விஷயம்தானே? .குறைபாடுகளை மறக்க முயற்சிப்போம் அல்லது அந்த குறைபாடுகள் திரும்ப நிகழாமல் பாடம் கற்போம் .  
                                         மு.கோபாலகிருஷ்ணன்.