Tuesday, April 22, 2014

சதி, சதி. எங்கும் சதிதான்




            
இந்தியா தேர்தல் இரண்டாம் ரிப்போர்ட்...

குஜராத்திலிருந்து மின்சாரம் கொண்டு வருவேன் என்று ஜயலலிதா 2011 தேர்தல் வாக்குறுதியில் கூறினார். ஜயலலிதாவுக்கும் மோடிக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருப்பதாக பத்திரிகைகள் கூறின ..அம்மா பதவி ஏற்பு விழாவில் மோடி கலந்து கொண்ட செய்திகளெல்லாம் பத்திரிகையில் பெரிய அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. 3 ஆண்டுகள்  ஆகியும் குஜராத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை..அங்கிருந்து மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள், ஆகக் கூடிய செலவினங்கள். .இடையில் வீணாகும்  மின்சக்தி பற்றிய விவரங்கள், அந்த துறை சார்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள்.
    சாதாரண மக்கள் அந்த வாக்குறுதியை நம்பியதே தவறு..இப்பொழுது கூடங்குளம் தரும் மின்சாரம் முழுவதையும் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்குத் தான் கொடுக்கிறது.ஆனாலும் மின்பற்றாக்குறை பிரச்னை தீர்ந்தபாடில்லை.
    சில வாரங்களாக கோடை வெய்யில் அதிகரித்துவிட்டது .தினமும் 2 மணி நேர மின்வெட்டு.அம்மா வாக்காளர்கள் அதிகம் உள்ள கிராமங்களீள் மின்வெட்டு சற்று அதிகம். எல்லா இடங்களீலும் சீராக இல்லை. இன்று முதல் மின்வெட்டு மேலும் ஒரு மணி நேரம் அதிகமாகிவிட்டது.
       ஜெயா டி.வி.யில் 24 மணி நேரமும் அம்மா நேரடி தேர்தல் பிரச்சார உரை.ஜெயா சினிமா சானலில், ஜெயலலிதா, புரட்சித்தலைவர்  நடித்த பழைய படங்கள் மாற்றி மாற்றி ஒளிபரப்பு.ஜெயா ம்யூசிக் சானலில் அம்மா, புரட்சித் தலைவர் சேர்ந்து பாடிய (வாய் அசைத்த )    டூயட் பாடல்கள் பாடிய காட்சிகள் இப்படியாக தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது
   குஜராத்தில் ஓடும் பாலையும் தேனையும் தமிழ்நாட்டுப் பக்கம் திருப்பி
விட முயற்சி செய்வோம் என்று பி.ஜே.பி.பிரசசாரம் .ட்


    3 வருடங்களாக மின்சாரமே குஜராத்திலிருந்து வரவில்லை..பாலும்.,தேனும் எப்படி வரும் என்று மூளை உள்ள ,சிந்திக்கும் திறன் உள்ள பகுதி மக்கள் மட்டுமே கேட்கிறார்கள்.அவர்கள் கர்னாடகாவில் ஆட்சி செய்த காலத்தில் (எடியூரப்பா காலம் )காவிரியில்
தண்ணீர் கூட திறந்து விடவில்லை .என்று தி.மு க எதிர்ப் பிரச்சாரம்
   நாடு முழுவதும் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பி.ஜே.பிக்குத்தான் தான் முதல் இடம். மற்றக் கட்சிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.10000 கோடிரூபாய் பட்ஜெட்டில் வேலை நடக்கிறது,.அதில் 3400 கோடி ரூபாய்  பிரச்சாரத்துக்கு மட்டும் ..கேட்கவா வேண்டும் ?
      தமிழ்நாட்டில் பி.ஜே.பி சொல்லத் தக்க வகையில் இல்லை.கூட்டணியைப் பயன்படுத்திக் கொண்டு காலைப் பதிக்க முயற்சி நடக்கிறது. .ஆனால் சகுனம் சரியில்லை என்று தோன்றுகிரது.
     நிறைய ஆட்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்..அவர்களுடைய ஆட்களூம் விலை போவதாகத் தகவல் நீலகிரி தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளருடைய மணு  காலதாமதமாக ஆவணம் கொடுத்த காரணத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டது. கட்சி வேட்பாளர் வேண்டுமென்றே ஆவணத்தை காலதாமதமாகக் கொடுத்ததாக கட்சியைச் சார்ந்தவர்களே கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு வேட்பாளர் மீது மேலிடம் விசாரனை
தி.மு.க. வேட்பாளரிடம் விலை போய்விட்டதாக தகவல் கசிகிறது. 2 ஜி.அலைக்கற்றை ஊழல் புகழ் ஏ..ராஜா தான் தி.மு.க வேட்பாளர்..அவருக்கு எந்த விலையும் பெரிதல்ல.
    பெரம்பலூர் தொகுதியில் பி.ஜெ.பி.சின்னத்தில் போட்டியிடுபவர் ஒரு பெரும் பணக்காரர். பல்கலைக்கழகம் .மருத்துவக் கல்லூரி,.,மருத்துவமனை இவைகளுக்கு சொந்தக்காரர் அதுமட்டுமல்ல.சொந்தமாக ஒரு கட்சியே வைத்திருக்கிறார்.அந்த கட்சிக்கு அவரே தலைவர். மற்றும் எல்லாம் .. .அந்த பெரும் பணக்காரர் தன் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை விலைக்கு வாங்கிவிட்டதாக  இந்து நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.
     மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் தொகுதிக்கு தேர்தல் காலத்தில் விஜயம் செய்வது ஒரு தனி அனுபவம்.என்னுடைய கணிப்பில் தமிழ்நாட்டிலேயே அதிகம் பணம் செலவிடப்படும் தொகுதியாக அது இருக்கும்..
இரண்டு நாட்களுக்கு முன் டிரக் லோடு நிறைய வேட்டிகள்,புடவைகள்,பெரம்பலூர் தொகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கிறது.அதன் மதிப்பு 30 லட்சம் என்று கூறுகிறார்கள். .வஸ்திர தானம் புண்ணீயம் என்று ஹிந்து மதம் சொல்கிறது. .அந்த தானத்தை செய்ய முடியாமல் தேர்தல் ஆனையம் தடுக்கிறது. இதை எதிர்த்து ஏதாவது செய்தாக வேண்டும் இல்லையென்றால் இந்து மதம் இந்த நாட்டில் அழிந்துபோகும் என்று பல தீவிர இந்துக்கள் சங்கடப்படுகிறார்கள்
..     நேற்று வரை கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்கள் தஞ்சாவூர் தொகுதி பி.ஜே.பி வேட்பாளர் மீது 6 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
தேர்தலுக்காக கறுப்புப் பணம் நகர்வதில் தமிழ்நாடுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா முழுவதும் 214 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. .தமிழ்நாட்டில் பறிமுதல் செய்தது மட்டும் 40 கோடியைத் தொடுகிறது .தேர்தல் நெருங்க நெருங்க தொகை கூடுகிறது.
          தமிழ்நாடு எல்லவற்றிலும் எப்போதும் முதல் இடம்தான்.தமிழன் பெருமைப்படுவதில் நியாயம் இருக்கிறது.    
    அம்மா துதி பாடி பத்திரிகைகளீல் வரும் விளம்பரம் தமிழ்நாட்டின் தனித்தன்மையான அரசியல் சாதி வாரியாக போய் அம்மாவை வாழ்த்தி வணங்கி ஆதரவு தெரிவிக்கிறார்கள் ‘இங்கே பிராமண சஙத்துக்குத்தான் முதல் இடம்..கோயில் பிரசாதத் தட்டோடு சாஸ்திரிகள் புடை சூழ முக்கிய பிராமண சங்கத்துத் தலைவர்கள் ( அல்லது ஏஜண்டுகள் என்றும்
சொல்லலாம்..) போய்  அம்மாவை கண்டுகொண்டார்கள் .இவர்களீல் பலர்  மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகளீல் காண்டிராக்டர்கள்..இவர்கள் தங்களுடைய தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள சாதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் ...
  துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி எந்தக் கட்சியும் சேராத நடுநிலையாளர் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார் .இப்பொழுது அவர் பாடு திண்டாட்டம்தான்..பி.ஜே.பி அம்மா கூட்டணி முயற்சியில் தோல்வி அடைந்த பிறகு இவர் நிலையில் குழப்பம் .பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சிக்கு வாக்கு அளியுங்கள். மற்ற தொகுதிகளில் அம்மா கட்சிக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் பி.ஜெ.பி அணியில் இருக்கும் ம.தி.மு.க.,தே மு.தி.க ,பா.ம.கட்சிகளுக்கு வருத்தம்.
    சோ எப்போதுமே நடுநிலையாளர், அவர் விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது.என்று பி.ஜே.பி. கையை விரிக்கிறது..
    இது பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டாம் சோ சொல்லி வோட்டு போடுவோர் மொத்தமே பதினேழு பேர்தான் என்கிறார் ஒரு தே மு.தி.க.
யார் அந்த பதினேழு பேர் என்பதற்கும் விளக்கம் கொடுக்கிறார். சோவினுடைய மாமா,மாமி, அம்மாஞ்சி , அத்தான்குட்டி,,அக்கா.,அத்திம்பேர் வகையறாக்கள்தான் என்று விளக்கம் கொடுக்கிறார்.
.     அத்தனை வோட்டுகளும் மயிலாப்புர்,மாம்பலம் பகுதிகளில்தான் இருக்கும் .என்கிறார்
ம.தி.மு.க தலைவர் வை.கோ பேசும் போது நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது.தேர்தல் நடப்பது இந்திய பாராளூமன்றத்திற்கா அல்லது இலங்கை பாரளுமன்றத்துக்கா என்ற சந்தேகம் தான். அவருடைய பேச்சு முழுவதும் ஈழம் தான்...
இந்த லட்சணத்தில் தன்னைத் தோற்கடிக்க கேரளா சதி செய்கிறது என்று புலம்புகிறார்.கேரள அரசாங்கமா அல்லது கேரள மக்களா என்பது பற்றி அவர் விளக்கவில்லை . இந்த சதி பற்றிய பயம் கலந்த பேச்சு பல தலைவர்களுக்கு நாடகமாக ஆகிவிட்டது..
   மேற்கு வங்க முதல் அமைச்சர் தன்னுடைய தேர்தல் சுற்றுப் பயணத்தில் மால்டா என்ற நகரத்தில் உள்ள ஹோட்டலில்  தங்கியிருக்கிறார்..அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு தீவிபத்து ஏற்பட்டது.முதல் அமைச்சர் தங்கியிருந்த அறையிலிருந்து சற்று தள்ளி தான் விபத்து நடந்தது,. டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவுதான் விபத்துக்குக் காரணம் என்று பூர்வாங்க விசாரனையில் தெரிய வருகிறது..என்பது பத்திரிகைச் செய்தி.
    ஆனால் கூச்சல் நாயகி மமதா அதையும் அரசியலாக்கப் பார்க்கிறார்.’
என்னுடைய தலைமையில் மேற்கு வங்கம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.அதைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் என்னைக் கொல்லச் சதி செய்கிறார்கள் .என்று கூறுகிறார்.அதோடு நிற்கவில்லை.நான் மாண்டாலும் திரும்பவும் மேற்கு வங்கத்திலேயே பிறப்பேன்..மக்களுக்கு தொடர்ந்து தொண்டு செய்வேன்.என்று வசனம் பேசியிருக்கிறார் இந்த வசனம் புளீத்துப் போன பழைய வசனம்.
   சுதந்திரப் போராட்டக் காலத்தில் தூக்கு மேடைக்குப் போகும்போது ஒரு போராளி பாடிய வங்காள மொழிக்கவிதை இது. .அந்த பழைய கவிதையைக் கடன் வாங்கிப் பேசுகிறார்.
   தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் சூறாவளி சுற்றுப் பயணத்தில் தன்னுடைய பங்குக்கு பேசியிருக்கிறார்.இதில் பிரச்னை என்னவென்றால்
அவர்  என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை.ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்துக்கு எப்போது தாவினார் என்பதே புரிவதில்லை.
அவர் தன்னுடைய சுற்றுப் பயணத்தில் தன் மனைவி பிரேமலதாவைக்
கூட்டி வர வேண்டும் என்று ஒரு தொண்டர் கூறுகிறார்..அவருடைய யோசனை நல்லதுதான்  என்று  பல தொண்டர்கள் கூறுகிறார்கள்
   விஜயகாந்த் பேசி முடித்தவுடன் அவர் மனைவி கணவருடைய பேச்சை புரியும்படி விளக்கிப்ப் பேசலாம்..அவர் தடுமாறும் போது தாங்கிப்  பிடித்துக் கொள்ளவும் வசதியாக இருக்கும்
     மோடி நிச்சயமாக வித்தை தெரிந்தவர். வடநாட்டில் சாமியார் ராம்தேவ்  (யோகா குரு ) மற்றும் பல சாமியார்களோடு சேர்ந்து
நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்..ஆனால் தமிழ்நாட்டில் அவர் போஸ்கொடுக்க சாமியார்களைத் தேடுவதில்லை.இங்கே அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள எத்தனையோ சாமியார்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் .அவர்களை எல்லாம் விட்டு விட்டு மோடி சினிமா நடிகர் ரஜனியுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார் இளைய தளபதி விஜய் யுடன்  . சேர்ந்து போஸ் கொடுக்கிறார்.
   மோடி டிரேட் தெரிந்தவர்,.எந்த சரக்கு எங்கே விலை போகும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்.
     அதனால் மோடி வித்தை ஜயித்துவிடும் என்று பலர் நம்புகிறார்கள்/.அல்லது நம்பவைக்கிறார்கள்..தேர்தலுக்குப் பிறகு
மோடியை எதிர்ப்பவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை. அவர்களெல்லாம் பாக்கிஸ்தானுக்குப் போக வேண்டியதுதான் என்று பி.ஜே.பி.தலைவர் ஒருவர் இப்பொழுதே கூறிவிட்டார்.இதைக் கேட்டு பலர் இப்பொழுதே மூட்டை.முடிச்சுகளுடன் தயாராகிவிட்டதாகக் கேள்வி. பாவம் எல்லைப்புறத்தில் வாகா  பகுதியில் எப்படி நெரிசலை சமாளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
        கோலிவுட்டில் கொஞ்ச நாட்களாக படப்பிடிப்பு நடக்கவில்லையாம்..எல்லா எக்ஸ்ட்ராக்களூம்தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்பி விட்டார்கள். சின்னத்திரை நடிகர்களூம் கிளம்பிவிட்டார்கள்.வில்லன் பொன்னம்பலம் என்ற பெயரை யாராவது கேள்விப் பட்டதுண்டா ?அவரும் அம்மா கட்சிக்கு வாக்குகேட்டு பிரச்சாரம் செய்கிறார்.  நாலு வாரத்தில் ஊத்திக் கொண்டு நின்று போன சீரியலில் மூனு தடவை முகம்காட்டிய மூன்றாம் தர நடிகர்களூக்கு கூட நல்ல கிராக்கி..
  இந்த நிலையிலும் கரடிக்கு எந்த சான்ஸும் இல்லை அந்த அடுக்கு மொழியெல்லாம் இப்பொழுது எடுபடாது என்று கலைஞருக்கே தெரியும்  தனக்கு சான்ஸ் கிடைக்காத்தால் தன்னை யாரும் மதிக்கவில்லை ஆகையால் தன்னுடைய கட்சியைப் புதிப்பிக்கப் போவதாகக் கூறிவிட்டார்
     ஆம் ஆத்மி கட்சி அந்தோ பரிதாபம் .டெல்லியில் காட்டிய பலத்தை எல்லா இடத்திலும் காட்டலாம் என்ற முயற்சி..கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் கன்னத்தில் விழுந்த அறை கூட வாக்காக மாறும் என்று நம்புகிறார்கள்> 
  எப்படியோ புதிய சிந்தனையுடன் களம் இறங்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏகப்பட்ட சோதனை.மோடியை எதிர்த்து வாரணாசியில்
போட்டியிடுகிறார்.உருப்படியாக ஒரு கூட்டம் கூட நடத்த முடியவில்லை.எல்லா கூட்டத்திலும் கலகம், கல்லெறி கைகலப்பு கூச்சல்.இப்படிப்பட்ட ஜனநாயக வழிமுறைகளீல் பி.ஜே.பி யினர் கெஜ்ரிவாலை திணரச் செய்து கொண்டிருக்கிறார்கள்..புனிதத் தலமான வாரணாசி இப்பொழுது குருஷேத்ரமாக மாறி விட்டதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்
இதெல்லாம் மிகைப் படுத்தப்பட்ட தேர்தல் உத்திகள் .
  ஆனால் இந்த குருஷேத்ரத்தில் யார் பஞ்சபாண்டவர்  யார் கவுரவர்கள் என்பதுதான் தெரியவில்லை.
    இது எப்படி ஆனாலும் ஜனநாயகத் திருவிழா வந்துவிட்டது,.
      நிறைய செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது எல்லாவற்றையும் விமர்சனத்துடன் எழுத நேரம் இல்லை. இப்போதைக்கு இவ்வளவுதான்

                                     - மு.கோபாலகிருஷ்ணன்

Tuesday, April 15, 2014

இந்தியத் தேர்தல் குறித்து மு.கோ...



     சென்ற 2011 ம் ஆண்டு நான் ரிச்மண்ட் வந்து சில மாதம் தங்கியபோது தமிழ்ச்சங்க நண்பர்கள் கூட்டத்தில் பேச என்னை அழைத்தார்கள். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நேரம் அது. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி  நிறையவே கேள்விகளைக் கேட்டார்கள். அரசியல் பேசுவதை நான் விரும்பவில்லை என்றாலும் அவர்களுடைய கேள்விகளுக்கு நான் தொகுப்பாகக் கொடுத்த பதில் சற்று அரசியலாகவே அமைந்தது. சிலருக்கு என்னுடைய நிலைப்பாடு திருப்தி அளிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் பலர் மகிழ்ச்சி அடைந்தார்கள். நிறையவே செய்திகளைத் தெரிந்து கொண்டதாகக் கூறினார்கள்.
   நான்  எதிர்பார்த்ததை விட  அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் ஆர்வத்தோடு தமிழ்நாட்டு அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறார்கள், அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
    இப்பொழுது இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் பல கட்டங்களாக தேர்தல் நடக்கும்.
    இந்த நேரத்தில் சுவையான செய்திகளுக்கு குறைவே இல்லை. வாய் விட்டுச் சிரிக்கவும் செய்திகள் உண்டு. நமுட்டுச் சிரிப்போடு நிறுத்திக் கொள்ளவும் செய்திகள் உண்டு.
இந்த தேர்தலில் அநேக மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்ப்பது புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் சாதனை பற்றித்தான். டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் மக்களின் ஆர்வம் கூடியிருப்பதாகச் சொல்வதில் உண்மை இருக்கிறது.
பத்திரிகைகள் சூடான செய்திகளை வெளியிட்டு பரபரப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மாலையில் வெளியாகும் தினசரிகள் இரண்டு மடங்கு கூடுதலாக அச்சிடப்படுவதாக பத்திரிகை நண்பர்  ஒருவர் கூறுகிறார்.       
    டீக்கடை பெஞ்சுகளுக்கு ஏகக் கிராக்கி. கடைகளில் டீ கூடுதலாக விற்பனையாகிறது. 
   இப்பொழுதெல்லாம் மக்கள் பொதுக் கூட்டங்களுக்கு அதிகமாகப் போவதில்லை. வேட்டியை மடித்துக் கொண்டு மண் தரையில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை ஏக வசனத்தில் பேசும் வாய் வீச்சுப் பேச்சாளர்களின் கூட்டங்களுக்கு யாரும் போவதில்லை. ஆகையால் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதிகளில் ஜீப்பை நிறுத்திக் கொண்டு சுருக்கமாகப் பேசி வாக்கு கேட்கிறார்கள். பெரிய கூட்டங்களுக்கு ஆகும் செலவுக்கு உண்மையான கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆனையம் கூறிவிட்டது. அதனால் கூலிப் பேச்சாளர்களுக்கு இப்பொழுது கிராக்கி குறைந்து விட்டது. வருமானம் சரியாக இல்லாததால் இந்த கூலிப் பேச்சாளர்கள் கட்சி மாறத் தொடங்கி விட்டார்கள். 
   தேர்தலுக்கு முதல் நாள் இரவில் பணம் பட்டுவாடா செய்வதெல்லாம் பழைய பழக்கம் இப்பொழுதெல்லாம் பணம் இரண்டு மூன்று தவணையாக பட்டுவாடா ஆகிறது. நிலைமையை கண்காணித்து பணம் கொடுக்கப்படுவதாக தகவல். ஏழை, எளிய மக்கள் வாழும் குடிசைப் பகுதிகள் சேரிகளில் மட்டும் பணம் மொத்தமாகக் கொடுத்த காலம் மாறிவிட்டது. மத்திய தர வர்க்கம், அலுவலகம் செல்லும் மக்கள் வாழும் பகுதிகளுக்கும் பணம் சென்றடைகிறது. பெண்களுக்கு ரகசியமாக தட்டில் பணம் வைத்துக் கொடுக்கப்படுவதாகத் தகவல்.
சமூகத்தின் எல்லா பகுதி மக்களும் ஏதாவது ஒரு வகையில் ஊழலை ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பதை உணர முடிகிறது. ஊழலுக்கு யார் காரணம் என்பதைப் பொருத்து ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்வினை மாறுபடுகிறது .காங்கிரஸ் ஊழலை எதிர்ப்பவர்கள் அம்மா ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை.சாதாரண பொது மக்களே இன்று பல வகையான ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
    அரசியல் தலைவர்களின் சவால் விடும் பேச்சுக்கு குறைச்சலே இல்லை. எதிர்க்கட்சித் தலைவர்களூக்கு மட்டுமல்ல,தேர்தல் ஆனையத்துக்கும் சவால் விடத் தொடங்கி விட்டார்கள் தமிழ்நாட்டு அம்மா தேர்தல் ஆனையத்துக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகக் கூறியிருக்கிறார்..பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
  கொல்கத்தா அம்மா ( மமதா பானர்ஜீ ) ஒரு படி மேலே போய்விட்டார்.சமீபத்தில் எதிர்க்கட்சியின் புகாருக்குள்ளான 8 அதிகாரிகளை மாற்றும்படி தேர்தல் ஆனையம் மேற்கு வங்க அரசாங்கத்துக்கு உத்திரவு பிறப்பித்தது. 
 அடேயப்பா’ உடனே அம்மா போட்ட சத்தம் கொல்கத்தா  நகரத்தையே அதிர வைத்தது..டி.வி.யில் அம்மா பேச்சை கேட்டு எனக்கு பயம் என் வீட்டு டி.விக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று  அவ்வளவு உரத்த குரல். ஆனையத்துக்கு அம்மா விட்ட சவாலைக் கேட்டு டெல்லியில் ஒரே கலக்கம்..தேர்தல் ஆனையத்து உத்திரவை ஏற்றுக் கொள்ள முடியாது அதிகாரிகளை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். கொல்கத்தா அம்மா...வந்து பார் ஒரு கை பார்க்கிறேன் என்ற பாணியில் பேசினார். அதோடு நிற்கவில்லை.காங்கிரசும் கம்யூனிஸ்ட்களும் பிஜே,பியும்  சேர்ந்து தனக்கு எதிராகச் செய்யும் கூட்டுச் சதி இது என்று கூச்சல் போட்டார். 
   அடுத்த நாள் நடந்ததுதான் வேடிக்கை .தலைமைத் தேர்தல் ஆனையர்”உத்திரவு அமுல் நடத்தப்பட்டவிட்டால் மாநில அரசாஙத்தின் தலைமைச் செயலாளர்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதோடு மேற்கு வங்கத்தில் தேர்தலை ஒத்திவைக்கவும் தயங்க மாட்டேன் என்றார் .
   அடுத்த நாளே அம்மாஇறங்கி வந்துவிட்டார்.சம்பந்தப்பட்ட 8 அதிகாரிகளையும் மாற்றி உத்திரவு போட்டார். 
   இப்படி கூச்சல் போடவும் வேண்டாம்.. போட்ட கூச்சலின் எதிரொலி அடங்குவதற்கு முன் சரணாகதி அடையவும் வேண்டாம் .ஆனால் இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று சொல்லி சிரித்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். எப்படி ஆனாலும் 2014 ம் ஆண்டு பொதுத்  தேர்தலில் இந்த சவால் உடன் சரணாகதி தான் மறக்க முடியாத ஜோக்காக இருக்கும் என்று நினைக்கிறேன் 
தேர்தல் ஆனையத்தின் அதிகாரம் என்ன என்பதை முதன் முதலாக உணர்த்திய டி. என். சேஷனை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
   வாய் விட்டுச் சிரிக்கவும் எத்தனையோ வாய்ப்புகள் கிடைக்கத்தான் செய்கிறது.
  மும்பையில் சிவசேனா தலைவர் ராஜ் தாக்கரே பேச்சைக் கேட்டால் கவலையை மறந்து சிரிக்கலாம்.கூட்டத்தில் கூடியிருந்த மக்கள் ஓயாமல் சிரித்துக் கொண்டெ இருந்தார்கள். அவர் மராத்தியில் பேசினார் .மொழி தெரியாமல் கூட அவருடைய அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய அரசியல் தரத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.பேச்சில் பெரும்பகுதி சோனியா காந்தி பேச்சை மிமிக்ரி செய்து பேசினார்..ஒரே கை தட்டல்.இடைவிடாத சிரிப்பு. அலைகள். அந்த பேச்சைக் கேட்டு ரசிக்கும் மக்களின் அரசியல் தரத்தையும் எடை போடலாம்.
    அவருடைய தந்தை சிவசேனா முன்னாள் தலைவர் பால் தாக்கரேயும் அப்படித்தான் மிமிக்ரி செய்து பேசுவார் என்று கேள்விப்பட்டேன் .பரம்பரை வியாதிகளுக்கு அவ்வளவு எளிதில் மருந்து கிடைக்கப் போவதில்லை.
    2011 ல் ஆட்சிக்கு வந்தவுடன் மின் பற்றாக்குறையை தீர்த்துவிடப்போவதாக அம்மா வாக்குறுதி கொடுத்தார். 3 ஆண்டுகள் ஆகியும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.மின்வெட்டு நேரம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.அதன் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள்  பல இன்னும் திறந்தபாடில்லை. 
     கூடங்குளம் அனுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே கிடைக்கிறது அனால் பிரச்னை தீர்ந்தபாடில்லை/..இப்போதைய மின்வெட்டுக்கு காங்கிரஸ் ஆளும் மத்திய அரசாங்கமும் தி.மு.கவும் செய்த கூட்டுச் சதிதான் காரணம் என்று அம்மா சமீபத்தில் கண்டு பிடித்திருக்கிறார் அந்த உண்மையை எல்லா பொதுக் கூட்டங்களிலும்  சொல்லிவிட்டு சதிகாரர்களூக்கு பாடம் புகட்டுவேன் என்று சபதம் போடுகிறார்..
  கோடை வெய்யில் சுட்டெரிக்கும் இந்த நேரத்தில் சலிப்பில்லாமல் வோட்டு வேட்டையில் இறங்கியுள்ள வேட்பாளர்களீன் நிலையைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது அதிலும் பாருங்கள் பெண் வேட்பாளர் நிலை இன்னும் பரிதாபம் அம்மா கட்சியச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் வாக்கு கேட்கப் போன  கிராமத்தில் ஒரு அம்மன் கோயில். .அங்கே போய் அம்மனை கும்பிடப் போன வேட்பாளருக்கே சாமி வந்துவிட்டது. உடனே ஊர் மக்கள் கூடி சாமியாடிய வேட்பாளரிடம் அருள்வாக்கு கேட்க அம்மன் எல்லோருக்கும் அருள்வாக்கு சொல்லியது..பிள்ளை வரம். ,குடும்ப விவகாரம் இதையெல்லாம் பற்றி அம்மன் அருள்வாக்கு சொன்னதெல்லாம் நமக்கு முக்கியமில்லை. 40 தொகுதிகளிலும் அம்மா கட்சியே ஜெயித்து அம்மாவினுடைய ஆட்சி நாட்டுக்கு வரப் போவதாக சொன்ன அருள்வாக்குதான் மிக முக்கியமாகப் பேசப்பட்டது 
   சாமியே சொல்லிவிட்ட பிறகு ஏன் கவலை அம்மா ஆட்சிதான் மத்தியிலும் என்கிறார்கள் தொண்டர்கள். .இவர்களூடைய கடவுள் பக்தியைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன் 
      மதுரை ஆதீனம் தமிழ்நாட்டின் முக்கியமான சைவத் திருமடங்களீல் ஒன்று..அந்த மடத்தின் தலைமைப் பீடத்தில் இருக்கும் தற்போதைய ஆதீனம் அடிக்கடி அரசியலுக்கு வந்து வந்து போவார்.அது அவருடைய பொழுது போக்கு. இது எவ்வளவோ தேவலாம் .பொழுதுபோக்காக எதை எதையோ செய்துவிட்டு மாட்டிக் கொண்டு பல சாமியார்கள்  அவமானப்பட்டு நிற்கிற இந்த காலத்தில் இந்த சாமியார் பொழுது போக்காக அரசியலுக்கு வருவதில் தவறே இல்லை இது தேர்தல் காலம் கேட்கவா வேண்டும்?
அவர் சொல்லிவிட்டார். சைவம் தழைக்கவும் சிவபெருமானுடைய அருள்தமிழ்நாட்டுக்கு முழுமையாகக் கிடைக்கவும் அம்மா ஜயலலிதா 40 இடங்களில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க வேண்டும் என்று அதற்கான ஆசியையும் அம்மாவுக்கு வழங்கிவிட்டார்.அதோடு நிற்கவில்லை. ஊர் ஊராகப் போய் கூட்டங்களீல் பிரச்சாரமும் செய்கிறார்.
    சென்ற ஆண்டு இதே ஆதீனம் தான் தன்னுடைய மடத்துக்கு இளவல் பட்டத்தை நித்யானந்தாவுக்கு (சினிமா நடிகை ரஞ்சிதா புகழ் )கொடுத்து பட்டம் கட்டினார் பிரச்னை பெரிதாக வெடித்தது .சில மாதங்களில் நித்யானந்தாவை கழற்றிவிட்டார்.தொடர்ந்து பல சிக்கல்கள்.இது தொடர்பான வழக்கு  நீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எப்படியோ நித்யானந்தாவிடமிருந்து மடத்தைக் காப்பற்றிக் கொண்டு விட்டார். மதுரை ஆதீனம் நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறாரோ  பொறுத்திருந்து பார்க்க வேண்டும்  .  .
   ஸ்ரீராமுலு பெல்லாரியில் ராஜா மாதிரி வாழும் அரசியல் பிரமுகர். பி.ஜே.பியிலிருந்து வெளியேறி எடியூரப்பா போலவே தனிக்கட்சி தொடங்கி சென்ற சட்ட சபைத் தேர்தலில் பி.ஜே.பி.க்கு தண்ணி காட்டியவர். இப்பொழுது எடியூரப்பா போலவே திரும்பவும் பிஜே.பி யில் ஐக்கியமாகி விட்டார் 
  சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களுடைய கடுமையான எதிர்ப்பையும் மீறி ஸ்ரீராமுலு கட்சியில் சேர்க்கப்பட்டார் .சேர்ந்தவுடன் பெல்லாரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது..எல்லாம். மோடி தயவில்தான்.என்று சொல்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாம் சமீப காலத்திய செய்திகள்
  இப்பொழுது அவரைப் பற்றிய லேட்டஸ்ட் நியூஸ்தான் மிக முக்கியம்
பெல்லாரி தொகுதி வேட்பாளர் ஸ்ரீராமுலுவின் தேர்தல் பிரச்சார துண்டு பிரசுரங்களும் 10 கோடி ரூபாய் பணமும் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து காவல் துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள் மோடி படம் போட்ட 5000 (ஐயாயிரம் ) புடவைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல்
பெல்லாரி மக்கள் துரதிருஷ்ட சாலிகள் இனாமாகக் கிடைக்கவிருந்த பணத்தையும் புடவைகளையும் இழந்து நிற்கிறார்கள். 
திருச்சியில் சென்ற 2011 சட்டசபைத் தேர்தல் காலத்தில் விடியல் காலை நேரத்தில் பேருந்துவில் (பஸ் ) 5 கோடி ரூபாய் கைப்பற்றாப்பட்டது. இன்று வரை யாரும் அந்த பணத்துக்கு உரிமை கோரி வரவில்லை.
இப்படி கோடிக்கணக்கில் பறிமுதல் ஆகும் போது காவல் துறையினரும் கணிசமான தொகையை அமுக்கிவிடுகிறார்கள் இது தொடர்பாக ஒரு
இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்   
  தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 34 கோடிரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தல் நாள் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது..

இப்போதைக்கு இவ்வளவுதான். முடிந்தால் இன்னும் தொடரும். 
                               - மு.கோபாலகிருஷ்ணன்

     

Thursday, March 27, 2014

ஒரு கொழாப்பரேட்டிவ் முயற்சி

முன்னொரு காலத்தில் ஒரு கூட்டு முயற்சியாக கதை கவிதை எழுதினோம் நம்ம ஊர் பிளாகிகள் எல்லாம் சேர்ந்து. இப்போது இந்தப் பதிவு ஒரே நாலாம் உயிரெழுத்து ஓட்டுவதால், அந்த கூட்டு முயற்சியை மறுபடியும் துவங்கலாமே...  முகப்புத்தகத்தில் சிலர் பின்னி பெடலெடுக்கிறார்கள். இந்தப் பதிவுப் பக்கம் வாருங்களய்யா என்றால் ஜகா வாங்குகிறார்கள். அதனால் இரண்டுக்கும் மத்தியில் கூகுளார் வீட்டில் எழுதலாமே?

முன் எழுதிய கதை கவிதைகளை இங்கே படிக்கலாம்...

கூட்டாங்கதை 1
கூட்டாங்கதை 2
கூட்டாங்கவிதை 1
கூட்டாங்கவிதை 2

இனி  கூட்டாங்கதை 3 - இங்கே நீங்கள் போய் படிக்கலாம். அதுக்கு முதல்ல எழுதனும்....

கவிதைதான் எழுதுவேன் என்கிறவர்கள் இக்கட சூடண்டி... கூட்டாங்கவிதை - 3.

அப்பாடா. அவுட்சோர்ஸ் பண்ணியாச்சு.