Saturday, April 09, 2011

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி

(இணையத்தில் பல தளங்களில் காணப்படும்  இதை எழுதியவர் இவரோ... - ஜன்லோக்பால் பற்றி ஒரு அறிமுகத்துக்காக இங்கே.. என்னுடைய கருத்துக்கள் கீழே... சற்றுமுன்: கோரிக்கைகளை அரசு ஏற்றதால் உண்ணாவிரதம் முடித்தார் அன்னா )

இந்தியாவிலும் வெடித்தது புரட்சி – ஊழலுக்கு எதிராக – ஒன்று திரள்வோம் வாரீர் !


இந்தியாவிலும் வெடித்தது புரட்சி -  ஊழலுக்கு எதிராக -  ஒன்று திரள்வோம் வாரீர் !

ஊழலுக்கு எதிராக சமுதாய நல ஆர்வலர்
அன்னா ஹஜாரே (விவரங்கள்
கீழே)எழுப்பிய தீ  கொழுந்து விட்டு
எரிய ஆரம்பித்து விட்டது.

"முதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில்
கொண்டு வரப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டன.
இது வரை 8 முறை மசோதாக்கள் கொண்டு
வந்தாகி விட்டது. ஆனால் ஒன்றும்
செயல்பாட்டிற்கு வரவில்லை. ஊழல் விஷம் போல்
பரவி விட்டது.எங்கும் ஊழல் – எதிலும் ஊழல்.

கடைசி எச்சரிக்கையாக இன்னும் ஒரு மாத
அவகாசம்  கொடுக்கிறோம்.
ஊழலுக்கு எதிரான "ஜன் லோக் பால்"மசோதாவை
மத்திய அரசாங்கம் உடனடியாக இயற்றாவிட்டால் –
ஏப்ரல் 5ஆம் தேதி முதல்,நான் சாகும் வரை
உண்ணாவிரத நோன்பு மேற்கொள்வேன்"
- என்கிற இவரது அறிவிப்பை முதலில்
துச்சமாக நினைத்த மத்திய அரசு இன்று
திகைத்து நிற்கிறது.

சட்டென்று செயலில் இறங்கி விட்டார் மனிதர் !
டில்லியில் இந்தியா கேட் அருகே நேற்று முதல்
உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
மூட்டிய தீ  நாடெங்கும் பரபர வென்று பரவ
ஆரம்பித்து விட்டது.

காங்கிரஸ் அமைச்சர் வீரப்ப மொய்லி,
சட்டம் இயற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு.
வெளி மனிதர்கள் அந்த வேலையில்
ஈடுபடத் தேவை இல்லை என்று
கூறியதற்கு, அன்னா பொங்கி எழுந்து பதில்
கொடுத்தது பிரமாதம்.

"யாரய்யா வெளி மனிதர்?
இந்த நாட்டு மக்கள் தான் இந்த அரசாங்கத்தின்
எஜமானர்கள். நீ அவர்களின் ஊழியன்.
வேலைக்காரன். அவர்களாகப் பார்த்து தான்
உன்னை உள்ளே வைத்திருக்கிறார்கள்.
- வேலைக்காரர் எஜமானரைப்
பார்த்து வெளியே போ என்பதா ?
மக்கள் விரும்பும் வரை தான் நீ அங்கே
இருக்க முடியும். மக்கள் நினைத்தால்
உன்னை வெளி ஆள்  ஆக்க எத்தனை
நேரம் பிடிக்கும் " என்கிறார்.

இந்தியாவெங்கும் மக்கள்,குறிப்பாக இளைஞர்களும்
நடு வயதினரும், முக்கிய நகரங்களில் -
அன்னாவுக்கும், அவர் எழுப்பிய கோரிக்கைக்கும்
ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில்
இறங்க ஆரம்பித்து விட்டனர்.
ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில்,
எமெர்ஜென்சியின் போது கிளம்பிய எழுச்சியை
இப்போது தான் மீண்டும் காண முடிகிறது.
மக்களின் பங்கெடுப்போடும்,
பேராதரவோடும், ஒரு மகத்தான போர் -
ஊழலுக்கு எதிரான போர் -துவங்கியுள்ளது.
நம் மக்களை ஒருங்கிணைக்கவும்,
லஞ்ச ஊழலைஅடியோடு ஒழித்துக் கட்டவும் -
ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்கவும் -
அருமையான ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.

உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹஜாரே
பேசும் பேச்சுக்கள் மக்களிடையே எழுச்சியை
உண்டு பண்ணுகின்றன.அவரது உரை
இந்தியில் இருப்பதால் தமிழ் மக்களை இன்னும்
சென்றடையவில்லை !
தமிழ் தொலைக்காட்சிகளோ வடிவேலு, குஷ்பு
பேச்சுக்களை காட்டுவதிலேயே குறியாக
இருக்கின்றன.

யார் இந்த அன்னா ஹஜாரே ?-
72 வயது காந்தீயவாதி.
மராட்டியர். மஹாராஷ்டிராவில் அற்புதமான
பல சமுதாயப் பணிகளில் ஈடுபட்டவர்.
நாம் அனைவரும் இன்று பயன்பெற்றுக்
கொண்டிருக்கும்  (RTI)
Right to Information
தகவல் பெறும் உரிமை -க்கான காரணகர்த்தா.
பத்மபூஷண் பதக்கம் பெற்ற பெருமைக்குரியவர்.

முக்கியமான விஷயம் -
இவர் ஒரு அரசியல்வாதி அல்ல.
எந்த கட்சியையும் சேர்ந்தவரும் அல்ல.
மரியாதைக்குரிய சமுதாய ஆர்வலர்.
"ஜன் லோக் பால்" என்றால் என்ன ?
(இந்தி பெயர் – பயமுறுத்துகின்றதோ ?)
ஊழலை நம் நாட்டிலிருந்து
வேரோடு அழிக்கவல்ல  அருமையான ஒரு
மாதிரி சட்ட வடிவம் தான் "ஜன் லோக் பால்"

இதன் சில முக்கிய அம்சங்கள் -
சமுதாய அக்கறையுள்ள சில முக்கிய மனிதர்கள்
(கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே,
பிரசாந்த் பூஷன் போன்ற இன்னும் சிலர் )
சேர்ந்து கலந்து ஆலோசித்து தயாரித்துள்ள -
ஊழலுக்கு எதிரான -சட்ட முன்வடிவம் இது.
மாநிலங்களிலும்(லோக் ஆயுக்தா),
மத்தியிலும்(லோக்பால்) செயல்பட தனித்தனி
அமைப்புகள்.

லஞ்சம்,ஊழல், மற்றும் குற்றச்செயல்களில்
ஈடுபடும் அமைச்சர்கள், அரசியல்வாதிகள்,
நீதிபதிகள், உயர்அதிகாரிகள்,(போலீசார் உட்பட) –
ஆகியோர் மீது -
பொதுமக்கள் யார் வேண்டுமானாலும்
இந்த அமைப்பிடம் புகார் தெரிவிக்கலாம்.
புகார் கிடைத்த ஒரு வருடத்திற்குள் இது குறித்த
சகல விவரங்களும் தனிபட்ட அமைப்பால்
விசாரிக்கப்பட்டு, சாட்சியங்களும் ஆவணங்களும்
திரட்டப்படும்.

முதல் வருடம் முடிவடைவதற்குள் வழக்கு
பதிவு செய்யப்பட்டாக வேண்டும்.
அடுத்த ஒரு வருடம் முடிவதற்குள்ளாக
வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டாக
வேண்டும். எத்தகைய ஒரு வழக்கும் இரண்டு
வருடங்களுக்குள் முடிக்கக்ப்பட்டே ஆக வேண்டும் !
இதன் மூலம் – எத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும்
நபரானாலும் சரி – அவர் மீதான ஊழல் வழக்கு
இரண்டு வருடங்களுக்குள் முடிவடைந்து
தீர்ப்பு/தண்டனை  அளிக்கப்பட்டாக வேண்டும்.
குற்றவாளி நிச்சயமாக 2 ஆண்டுகளுக்குள்
சிறையில் தள்ளப்பட வேண்டும்.


லஞ்ச ஊழல் வழக்குகளில் – தண்டனையோடு
நின்று விடாமல் – சம்பந்தப்பட்ட தொகை முழுதும்
குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட
வேண்டும்.

இந்த அமைப்புகள் எப்படி இயங்கும் என்று கேட்கலாம்.
தற்போதுள்ள, சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் போன்ற
அமைப்புகள் லோக்பாலுடன் இணைக்கப்பட்டு,
அவற்றின் அத்தனை செயல்பாடுகளும்,
சகல அதிகாரங்கள் கொண்ட
இந்த லோக்பால் அமைப்பின் கீழ் வந்து விடும்.
தேர்தல் கமிஷன் போல், சுப்ரீம் கோர்ட் போல் -
சுதந்திரமான அமைப்பாக இது இயங்கும்.

இந்த அமைப்பு எந்த விதத்திலும் மாநில அல்லது
மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்,நடுநிலையான,
சமூகப் பொறுப்புள்ள, சமுதாய
நல அமைப்புகள்  -ஆகியவை சேர்ந்து
இதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த அமைப்பின் உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்தின் எந்தவிதத்
தலையீடும் இருக்கக்கூடாது.
இன்று உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாள்.
நாட்கள் செல்ல செல்ல மத்திய அரசுக்கு
இதன் உக்கிரம் உரைக்க ஆரம்பிக்கும்.

இந்த "தீ" – ஊழலை ஒழிக்க உண்டாக்கப்பட்டிருக்கும் – இந்த தீ பரவட்டும். வேகமாகப் பரவட்டும் .

----------------------------------------------------------------------------------------------------
மேலே இருப்பது மின்னஞ்சல் மூலமாக எனக்கு வந்தது.  நிறைய வலைப்பதிவுகளில் இதைப் பார்க்கலாம். இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.

முதலாக - இந்த ஜன்லோக்பால் உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுப்பது? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரி - சமுதாய நல அமைப்புகள்? நாளையே நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அப்படி ஒரு போர்ட் மாட்டிக் கொள்ளாதா?  மறுபடியும் திருடனே திருடனை நியமிக்கும் கதை நடக்கும்...

ஒரு ஆண்டுக்குள் விசாரணை ஆரம்பித்து, அடுத்த ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும். நியாயமாக ஒழுங்காக நடக்க வேண்டிய ஒரு விஷயத்திற்கு சட்டம் கொண்டு வரவேண்டிய நிலையில் இருக்கிறது இந்தியா!

இருக்கும் அரசியல்வாதிகளை கொஞ்ச்ச்ச்ச்ச்ச்ச்சசசம்ம்ம்ம்  திருத்த எனக்கு இரண்டு யோசனைகள் தோன்றுகின்றன.  ஒன்று - பதவி உச்சவரம்பு.  அமெரிக்காவில் ஜனாதிபதி பதவி இரண்டு முறை மட்டும்தான் வகிக்கலாம்.  மாநில கவர்னர் பதவியும் இரண்டு முறை மட்டும்தான் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால், என் வாழ்நாள் முழுவதும் ஒருவர் முதல்வராக இருப்பது நடக்காது. அவ்வளவு புத்திசாலிகள் நிறைந்த மேற்கு வங்காளத்திலும், தமிழகத்திலும் ஜோதிபாசுவையும், கலைஞரையும் தவிர ஆளுவதற்கு யாருக்கும் தெரியாதா? இது எந்த அரசியல்வாதிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அன்பழகனுக்கும்,  பன்னீர் செல்வத்திற்கும் மிகவும் பிடிக்கும் :-)

இரண்டாவது - அந்தந்த தொகுதியில் வசிக்கும் மக்கள்தான் அந்தந்த தொகுதியில் போட்டியிட வேண்டும். சிக்மகளூருக்கும் இந்திராவுக்கும், சீரங்கத்துக்கும் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் ரிஷிவந்தியத்துக்கும்  என்ன சம்மந்தம்? அந்தந்த ஊர் மக்களுக்குத்தானே அந்தந்த ஊர்களுக்கான தொகுதியில் நிற்க உரிமை இருக்கவேண்டும். அதுதானே ஜனநாயகத்தின் அடிப்படை?  அரசாங்கத்தில் மக்களின் பிரதிநிதி அந்தந்த மக்களிடையே இருந்துதானே வரவேண்டும்?? பண்ருட்டியில் பாட்னாவில் வாழும் ஒருவர் தேர்தலுக்கு நின்றால் கேலிக்கூத்தாகத்தானே இருக்கும்.

அப்படி செய்தால் ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் மற்றொரு ஜனநாயக மோசடியையும் தவிர்க்கலாம். எப்படியும் கொள்ளையடிக்கிறார்கள்.  கொள்ளையில் பங்கு அந்தந்த தொகுதியைச் சேர்ந்த கொள்ளையருக்கு போவதுதானே உண்மையான ஜனநாயகக் கொள்ளை?

ஆனால் இந்த இரண்டும் சட்டங்களாகும் வாய்ப்பு?  எந்தப் பூனை அதுவே தானாக மணியைக் கட்டிக் கொள்ளும்??

மத்திய அரசு அன்னா ஹஸாரேவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அவர் உண்ணாவிரதத்தை முடித்தார் என்று சற்றுமுன் வந்த செய்திகள் கூறுகின்றன. பார்ப்போம் என்ன ஆகிறதென்று.







----------------------------------------

Monday, April 04, 2011

பஹாமாஸ் விஜயம் - 4



புதன் கிழமை கார்த்தால நஸாவு துறைமுகத்துக்கு போயிடுவோம்னு ஏகப் பட்ட எதிர்பார்ப்புகளோட செவ்வாய்கிழமை ரூமுக்கு வந்தோம். முதல் நாள் பத்தி எழுதியிருந்த பதிவுல ஒரு விஷயம் சொல்லியிருந்தேன், ஞாபகம் இல்லைன்னா பரவாயில்லை ஒரு ஆள் கடை போட்டு நஸாவுல என்ன வாங்கனும்னு க்ளாஸ் எடுத்தான்:



ஏய் கைஸ்

ஏன் ஸார்,

எங்க போறோம்

நஸாவுக்கு

என்ன வாங்க

வைரம் வாங்க

என்ன வைரம்

சூப்பர் வைரம்

எங்க வாங்கனும்

நீ சொல்ற கடைல வாங்கனும்

அங்க ஏன் வாங்கனும்,

அதுதான் நல்ல கடை

எந்த கடை

…. வைரக்கடை

... இப்படி நம்மூர் கோபாலா ஏன் ஸார் மாதிரி சொல்லி சொல்லி உறு ஏத்தி ஏத்தி ஒரு 25$ க்கு புத்தகமும் வித்தான், அந்தப் புத்தகத்தில ஒரு விஷயம் இருக்கரத நம்ம வீட்டுல கண்டு பிடிச்சாங்க, அது வேற ஒன்னும் இல்லை எந்த கடைல எந்த கூப்பனைக் கொடுத்தா என்ன சமாசாரம் சும்மா கொடுக்கரான்னு. ராவோட ராவா அதுக்கு ஒரு ப்ளான் போட்டு, எந்தக் கடைக்கு யார் போரதுன்னு ஒரு முடிவு பண்ணி, தாங்க்ஸ் கிவிங் கருப்பு வெள்ளிக்கு எந்தக் கடைல சொர்க வாசல் எப்ப திறக்கராங்கன்னு பாத்து பரபரப்பா ஓடுவோமே அதுமாதிரி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டு தூங்கப் போனோம்.

செவ்வாய் கிழமை கப்பல் சிப்பந்தி ஒருத்தர் வேற, நாளைக்கு நஸாவுல ராயல் கரீபியனோட 3 கப்பலும், நார்வேஜியனின் ரெண்டு கப்பலும் வருது அதுல ராயல் கரீபியனோட ஒரு கப்பல் இருக்கரதிலேயே ரொம்பப் பெருசு (16 மாடி) அதனால பஹாமாஸே ஆடப் போகுதுன்ற ரேஞ்சில கிளப்பி விட்டாரு. அதோட விடாம, குழந்தைங்க பத்திரம் அங்க கொஞ்சம் திருட்டுப் பசங்க ஜாஸ்தி கொஞ்சம் ஏமாந்தா, குழந்தைகளை தள்ளிட்டு போயிடுவானுங்கன்னு போற போக்கில ஒரு சின்ன பிட்டை போட்டுட்டு போயிட்டாரு. அது நிஜமா, பொய்யான்னு தெரியலை, நான் கேட்டதை உங்க பக்கம் தள்ளி விட்டுட்டேன். அப்பால உங்க பாடு, அம்புட்டுதேன்.

ராயல் கரீபியனின் 16 மாடி கப்பல்


விடிய காலை 5 – 5:30 இருக்கும் அப்போ, என்ன வண்டி ஸ்லோவா போவுது, ஒருவேளை பேசின் ப்ரிட்ஜ் வந்திடுச்சான்னு தோணிச்சு. சீ எங்க வந்து என்ன பேச்சு, நாம கரீபியன் தீவு பக்கத்தில இருக்கோம், இங்க ஏது பேசின் ப்ரிட்ஜ், அந்தக் கொடுப்பினை இவங்களுக்கெல்லாம் கெடயாதுன்னு கர்வமா எழுந்து பாலகனிக்கு வந்தா துறைமுகத்துக்கு வந்தாச்சு.

கப்பலில் இருந்து நஸாவு நகரம்.

ஒவ்வொரு அரை மணிக்கு ஒவ்வொரு கப்பலா வந்து சேர்ந்தது. மொத்தம் 5 கப்பல்களை ஒரே இடத்தில் பாக்கரது நல்லாத்தான் இருந்தது. ஒரு வழியா எங்கள் கப்பலில் இருக்கரவங்களுக்கு தீவுல இறங்க அனுமதி வாங்கிட்டு வந்து எங்களை வெளியில விட ஒரு 9 – 9:30 ஆயிடுச்சு.


நஸாவு துறைமுகத்தில் ஒரே சமயத்தில் 5 கப்பல்கள்அம்மா, மாதுரியை கெட்டியா பிடிச்சுக்கோ, மஹிமா, எங்கூடவே நட, எல்லோரும் என் கண்பார்வைலயே இருக்கனும்னு ஏகப் பட்ட கண்டிஷன் போட்டுட்டு கப்பல்ல இருந்து கிளம்பின அஞ்சு நிமிஷத்தில மஹிமா ஒரு பக்கம், மாதுரி ஒரு பக்கம், மாலதி ஒரு பக்கம்னு நடக்க, கடைசீல அவங்கள விட்டுட்டு நான் தொலைஞ்சு போகாம என்னை காப்பாத்திக வேண்டியிருந்தது.
கப்பல விட்டு வந்த்தும் இமிக்ரேஷன்னு சொல்லி ஒரு கூத்தடிக்கராங்க, அதுக்கு உங்க பாஸ்போர்ட் கைல இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு ஒரே அலப்பர. க்யூவில நின்னு அவங்க கிட்ட பாஸ்போர்டை கொடுத்தா, கைல கூட வாங்காம, ஹும் போங்கன்னு கழுத்தில கைய வெச்சு தள்ளாத குறைதான். இதெல்லாம் கடந்து வெளியில வந்தா பெரிய அதிர்ச்சி காத்திருந்த்து.
அதிர்ச்சின்னு கூட சொல்லக்கூடாது ஒரே ஏமாற்றம்தான். அது வேற ஒன்னுமில்லைங்க, குமட்டற நாத்தமில்லை, “ஜுஜுஜுடாண காப்ப்ப்ப்பி, காப்ப்ப்பி, டீயேய், மொறுமொறு பஜ்ஜீ” ன்னு கத்தி கத்தி விக்கர ஒரு அருமையான தாயகத்துக் குரலில்லை, “அம்மா, அய்யா, சாப்ப்பிட்டு பத்து நாளாச்சுய்யா, ப்ப்ப்ப்பாபாபாவம் பச்சை புள்ளை பசியால துடிக்குதிய்யா”ன்னு கேக்க ஆளில்லை. ஆனால், “வா சார், வா, இன்னா பாக்கனும், நான் வலிச்சிகினு போறேன்”ர ரேஞ்சில ஆங்கிலத்தில பேசர டை கட்டிய டாக்ஸிக்காரர்கள் கும்பல் கும்பலா சுத்தராங்க. ஜாக்கிரதை.
நஸாவுல பார்க்க வேண்டியது ரெண்டு இடம்தான்னு எங்க வீட்டுக்காரம்மா சொல்லிட்டாங்க. அதனால அதத் தாண்டி மூனாவது இடமிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க மத்தவங்களுக்கு உதவியா இருக்கும்.
முதல் இடம் ஒரு பே தெரு (Bay Street) என்ற சின்னத் தெரு, அங்கதான் அந்த கூப்பன் புக் பிச்சை எல்லாம் எடுக்கனும்.

பே தெருவில் ஒரு வைரக் கடை
இரண்டாவது இடம், அட்லாண்டிஸ் – இது ஒரு தீம் பார்க்குன்னு ஜல்லியடிக்கராங்க.

கப்பலில் இருந்து எடுக்கப் பட்ட அட்லாண்டிஸின் படம்

முதல்ல அந்த பே தெரு. அது நம்மூர் ரங்கநாதன் தெரு மாதிரிதான் இருக்கு அங்க ஒரு நாளைக்கு வியாபாரம் சுமாரா ஒரு 1-2 மில்லியன் அமெரிக்க டாலர்ன்னு கப்பல கடை போட்டு எங்களை படுத்தினவன் சொன்னது. சின்ன தெருதான், அதுல ரெண்டுபக்கமும் கார், பஸ் வருது, சைக்கிள் ஓட்டராங்க, கும்பல் கும்பலா எங்கள மாதிரி கப்பலில் வந்தவங்க வந்து பராக்கு பாக்கராங்க. முன்னாடி சொன்ன மாதிரி படக்கு படக்குன்னு ஒவ்வொரு கடையா அதாங்க பிச்சை போடர கடையா போய், அம்மா பிச்சேய், அய்யா பிச்செய்ன்னு அவன் போட்டதையெல்லாம் பொறுகிக்கிட்டு வர ஒரு 30 நிமிஷம் செலவு பண்ணினோம். அங்க நான் விரும்பி வாங்கினது ஒரு கடைல மூங்கில்ல பண்ணின டி. ஷர்ட் விக்கராங்க, அது குளிர் காலத்துக்கு சூப்பரா இருக்கும், வெயில் காலத்தில கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கும், வியர்வை நாத்தத்தை தடுக்கும், அப்படி இப்படின்னு சொல்லி ஒன்னு 45$க்கு வித்தாங்க, அது அவங்க சொன்ன படி இருக்கான்னு தெரியலை ஆனா போட்டுகிட்டா நல்லா இருக்குன்னு ஒன்னு வாங்கிட்டு வந்தேன். அதே கடைல ஒரு கூலிங் க்ளாஸ் விக்கராங்க, கண்ணாடி கலர் மாறுவதைத்தானே பார்த்திருப்பீர்கள் அவர்கள் விற்கும் கண்ணாடியை போட்டுகிட்டு வெயிலில் சில நிமிடங்கள் இருந்தால் போதும் ப்ரேமின் கலர் மாறுது. அது மட்டும் இல்லை, அது தொலைஞ்சு போனாலோ, உடைஞ்சு போனாலோ வாழ்நாள் முழுக்க இலவசமா இன்னொன்னு தராங்கலாம். அதனால அதை ஒன்னு வாங்கிட்டு வந்து பத்திரமா வெச்சிருக்கேன்.


இப்போ அட்லாண்டிஸ். இது கடல் பக்கத்தில இருக்கர ஒரு வாட்டர் பார்க், நிறைய நடக்கனும், ரொம்ப வெயில், அதுலயே நமக்கு காத்து போயிடும். இதுக்கு டிக்கெட் விலை ஒருத்தருக்கு 180$ க்கு பக்கம், எங்க வீடு மாதிரி நாலு பேர் போனா ஒரு $720 ஆகும், அதை ஒரு $300 - $350 க்குள்ள முடிக்கனும்னா அடுத்தப் பதிவை படிங்க அதுல என் பங்கிற்கு சில டிப்ஸ் தரப்போறேன், படிச்சு என்சாய் பண்ணுங்க.


நேரா அட்லாண்டிஸ் போய் ஒரு நாள் முழுக்க குட்டை குட்டையா ஊறிட்டு, சின்னச் சின்னதா ரைடு போயிட்டு, சந்தோஷமா வந்துகிட்டு இருந்தோம். அப்போ அங்க நம்மூர் கிங்ஸ் டொமினியன்ல இருக்கர மாதிரி லேசி ரிவர் மாதிரி ஒன்னு இருந்தது, சரி நமக்கு இதெல்லாம் ஜுஜூபின்னுட்டு போய் க்யூவில நின்னோம். இதை வெளியில இருந்து பார்த்ததுமே மாதுரி ஒரு தீர்க்கதரிசி மாதிரி இந்தக் கதையெல்லாம் வேண்டாம்னு அழ ஆரம்பிக்க, அவள சமாதானம்பண்ணி திரும்பி க்யூவில நின்னதும் “அம்மா சுச்சூ வர்தூ”ன்னு அவளோட மழைலைல திரும்பித் திரும்பி பிட்டு போட்டும் நாங்க காதுல விழாத மாதிரி ஒருவழியா அவளை இழுத்துப் பிடிச்சு அந்த ரைடுக்கு போனோம். போன 5 நிமிஷத்தில சடக்கு சடக்குன்னு திசை திரும்பி பல்ஸ் எகிற வெச்சுச்ச அந்த ரைடு, ஒரு சந்தர்ப்பத்தில மாதுரியும் மாலதியும் வந்த ட்யூபை குடைசாய்க்க, அதை நான் எதேச்சையா திரும்பிப் பார்த்துட்டு என்னடா மாதுரியைக் காணும்னுட்டு நானும் மஹிமாவும் போய்கிட்டிருந்த ட்யூபிலிருந்து குதித்து அவங்க கிட்ட போகரதுக்குள்ள, “ஓ மை பேபி ஓ மை பேபி” ன்னு மாலதி கத்திக்கிட்டிருந்தா, லைஃப் ஜாக்கெட் போட்டிருந்த மாதுரி தண்ணிக்குள்ள நல்லா ஒரு முங்கு முங்கிட்டு ஜிங்ன்னு வெளில வந்துட்டா, 6 அடி தண்ணீல நானும் மாலதியும் தான் ததுங்கிணத்தோம் போட்டு அந்த எடத்தை விட்டு வெளில வந்தோம். அந்த இடத்தில 15 அடிக்கு ஒரு லைஃப் கார்ட் இருந்தாங்க, ஆனா நான் ட்யூபில இருந்து குதிச்சதும், மஹிமாவை பத்திரமா கரையேத்தினதும், மாதுரியை காப்பாத்த ஒடி வந்ததும் எங்களை மாதிரி அந்த ரைடுல இருந்தவங்கதான், லைஃப் கார்ட் ஒரே ஒரு விஷயம்தான் செஞ்சாங்க அது விசிலடிச்சு எங்களை திரும்பியும் ட்யூபுக்கு உள்ள போய் உக்காந்துக்கங்ன்னு சொன்னதுதான். நல்ல பொழப்புடா. ரைட விட்டு வெளில வந்ததும்தான் தெரிஞ்சுது அது லேசி ரிவர் ரைடு இல்லையாம், ராபிட் ரிவர் ரைடாம். கொஞ்சம் எல்லோரும் நார்மலானதுக்கு அப்புறம் மாலதி கிட்ட கேட்டேன் “என்ன மை பேபின்னு கத்தினே”ன்னு அதுக்கு “ஏங்க கொஞ்சங்கூட புத்தியில்லாம இப்படி கேக்கரீங்க, இது என்ன மெட்ராஸா தமிழ்ல கத்தறதுக்கு, இங்க இங்லீஷ்ல கத்தினாதானே ஹெல்ஃப் பண்ணுவாங்க”ன்னு பதில் வந்ததுதான் சூப்பர்.


அதுக்கு அப்புறம் சொல்லும் படி ஒன்னும் செய்யாம சும்மா கடல் பக்கம் போய் ஒரு இடம் பிடிச்சு மண்ணுல விளையாடிட்டு வந்துட்டோம். ஞாபகம் வெச்சுக்கங்க அட்லாண்டிஸ் போனா அங்கயும் பெரிய ஹோட்டல் இருக்கு ஹொட்டல்ன்னா சும்மா ஒன்னு ரெண்டு இல்லைங்க ஒரு நகரமே ஹொட்டலா இருக்கு. கூகுளாண்டவர்கிட்ட கேளுங்க அவங்களப் பத்தி செய்தியா கொட்டுவார்.


நாங்க போயிருந்த புதன்கிழமை நல்ல சுபமுகூர்த்த தினம்ன்னு நினைக்கிறேன், பீச்சை ஒட்டி ஒரு 40-50 நாற்காலிகள் போட்டு எல்லோரும் உக்கார்ந்துண்டிருக்க நானும் மஹிமாவும் சும்மா ஒரு நடை நடக்கலாம்னு போன போது அங்க ஒரு திருமணம் நடந்ததை பார்த்துட்டு வந்தோம், ஆனா சுத்த நாகரீகம் தெரியாத பசங்க, என்னடா இப்படி ஒருத்தன் வந்து நம்ம கல்யாணத்தை பார்த்து ஆசீர்வதிக்கரானேனு, ஒரு ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்கன்னு சொல்லத் தெரியலை, அட அது கூட வேண்டாங்க ஒரு சின்னதா தேங்காய் பை கூட குடுக்கல, ஹூம் இதெல்லாம் வெளில சொன்னா நமக்குத்தான் கெட்ட பேர்.


அட்லாண்டிஸ்ல ஒரு அக்வேரியம் இருக்கு கண்டிப்பா பாக்க வேண்டிய ஒன்னு. வித விதமா மீன்கள் இருக்கு, குழந்தைகளை அங்கிருந்து கிளப்பரது ரொம்ப கஷ்டம்.


மாலை 6 மணிக்கு முன்னாடி அட்லாண்டிஸ்ல இருந்து கிளம்பினா போட் டாக்ஸி பிடிச்சு துறைமுகத்துக்கு வரலாம், நாங்க கிளம்பின 7 மணிக்கு தரை டாக்ஸி வந்ததே அதிர்ஷ்டம்தான்.


இப்படி மிக மிக எதிர்பார்ப்புகளோட காலையில் தொடங்கின எங்க நஸாவு பயணம் ராத்திரி 7:30 மணிக்கு முடிஞ்சுது. எல்லோரும் ரொம்ப டையர்டா ஆனதினால இன்னிக்கு ரெகுலரா சாப்பிடப் போகும் இடத்துக்குப் போகாம இன்னொரு இடத்துக்குப் போய் சாப்பிட்டுட்டு வந்துட்டோம்.


முந்தைய பதிவுகள்:





-முரளி இராமச்சந்திரன்.

Sunday, March 27, 2011

கோமாதா எங்கள் குலமாதா - ஒரு கண்ணோட்டம்....

'கோமாதா எங்கள் குலமாதா' என்ற கட்டுரை ரொம்பவே சென்ட்டிமேன்ட்டலாக இருந்தது. வீட்டுப் பசு என்ன, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் இறந்தாலும் இதுபோலவே சோகப் படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆமாம், பசுமாட்டின் மீது காட்டுவதுபோல் காளை மாட்டுக்கு ஏன் காட்டுவதில்லை? இருந்த இடத்திலேயே நின்று தின்னும் பசுவிடம் பால் கறக்கப் படுகிறது. அது ஒன்றும் விரும்பிக் கொடுப்பதில்லை. செயற்கைக் கருத்தரித்தல் வரும் முன்பு செக்ஸ் சுகம் கூட அனுபவித்தது. எருது, சுமை இழுக்கிறது, உழுகிறது, தண்ணீர் இறைக்கிறது, சுண்ணாம்புக் கலவை அரைக்கிறது. அதற்கு ஒரு சுகமும் இல்லை, உண்பது தவிர. இந்த வேலைகளுக்கெல்லாம் இயந்திரங்கள் வந்து விட்டதால் எருது வளர்க்கப்பட்டு, கசாப்புக் கடைக்குத்தான் அனுப்பப் படுகிறது. காப்பகங்கள் யாவும் பசுக்களுக்குத்தாம். (ஹிந்து சமூகத்தில் பசுவுக்குக் காட்டப்படும் பாசம் எருமைக்கு இல்லை. இந்தியாவில் எருமைப்பால் உற்பத்திதான் அதிகம். நிற வெறி காரணமோ?) குடும்பச் சூழலில் ஆண்களுக்குக் கிடைக்கும் recognition, பாசம் போல்தான் எருதுக்கும் போல. இந்திய சினிமாவில் தாய் சென்ட்டிமென்ட் போல் தந்தை சென்ட்டிமென்ட் இருக்கா?
அடுத்ததாக, இறப்பையும் பிரிவையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது. மாறிவரும் காலத்திற்கேற்ப முதியோர் இல்லத்தை முதியோர் பலர் தாமே opt செய்கின்றனர். அவர்களுடைய மக்களை அவர்கள் நொந்து கொள்வதில்லை. பெற்றோர்களும் பல்வகைப் பட்டவர்கள்தாம். பாரபட்சம் காட்டுதல், சுயநலம் போன்ற குணங்களைக் கொண்ட பெற்றோர் இல்லையா? இதனால், மக்கள் தம் பெற்றோரை ஆதரிக்கத் தேவையில்லை என்று நான் சொல்லவில்லை. தாம் பெற்றது இறந்தால் படும் சோகம் தம்மைப் பெற்றவர் மறையும்போது இருக்காதுதான். இது இயற்கை. பாசம் ஆற்றொழுக்குப் போலக் கீழ் நோக்கித்தான் செல்லும்.

Saturday, March 26, 2011

புரட்சி



குளிர் என்னும் அரக்கனின்
அடக்குமுறையிலிருந்து
வெடித்துக் கிளம்பிய
வசந்த கால
மஞ்சள் புரட்சி!

Wednesday, March 23, 2011

கோமாதா என் குலமாதா

            பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. முற்றிலும் புதிய சூழலில் வாழும் இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு இதை ஒரு சம்பவமாக பதிவு செய்வது தேவையா என்று கூட தோன்றலாம். இருந்தாலும் இதை அறிந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

      எங்கள் குடும்பம் கிராமத்தில்  விவசாயம் செய்து வாழ்ந்த ஓரளவு வசதி படைத்த குடும்பம். வீட்டின் பின்புறத்தில் முற்றத்தையொட்டி ஒரு மாட்டுப்பட்டி. கறவை மாடுகளும் கன்றுக்குட்டிகளும் ஐந்து அல்லது ஆறுக்கு குறையாமல் எப்பொழுதும் அங்கே இருக்கும். வீட்டின் பின்புறத்தில் உள்ள பெரிய தோப்பில் இன்னொரு பட்டி. அந்த பட்டியில் உழவு மாடுகளும் சில எருமைகளும் இருக்கும். 
 
          வீட்டின் உள்ளே இருக்கும் சிறிய பட்டியில் மற்ற எல்லா பசுக்களுக்கும் இடையில் ஒரு வெள்ளை நிறப் பசு உண்டு. வெள்ளை  கிடாரி என்று எல்லோரும் அதை குறிப்பிடுவது வழக்கம்.  சலவை செய்யப்பட்ட வேஷ்டி போல தூய வெள்ளை நிறத்தில் அந்த பசு கம்பீரமாக, ஆனால் அமைதியாக நிற்கும். சிறிய கொம்பு. யார் வேண்டுமானாலும் பக்கத்தில் தைரியமாக போகலாம். முட்டாது. யார் வேண்டுமானாலும் அதனிடம் பால் கறக்கலாம். உதைக்காது.
 
         வீட்டில் உள்ள எல்லா குழந்தைகளும் அந்த பசு கொடுத்த பாலில்தான் வளர்ந்ததாக அம்மா அடிக்கடி  சொல்வாள் .வீட்டில் உள்ள சில உழவு காளைகளும்அந்த பசு ஈன்ற கன்று குட்டிகள்தான் நானும் என் அண்ணனும் பக்கத்து கிராமத்தில் உள்ள பள்ளிகூடத்துக்கு போக ஒத்தை மாட்டு வண்டியில் கட்டபபடும் காளையும்அந்த வெள்ளை கிடாரி ஈன்ற கன்று தான் என்று என் அப்பா கூறுவார்.
            எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் வெள்ளை கிடாரி பால் வற்றிப்போய்விட்டது. இந்த காலத்தில் பால் வற்றிப்போன மாடுகளை  அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் வீட்டில் உள்ள பால் வற்றிப்போன மாடுகளை விற்கும் வழக்கம் இல்லை.
           இதெல்லாம் பழைய கதை.
 
         இப்பொழுது  அந்த வெள்ளை கிடாரி மேய்ச்சலுக்கு  கூட வெளியே போவதில்லை. மிக மெதுவாக நடப்பதால் பட்டியிலேயே அதற்கு புல்லையும் வைக்கோலையும் வேலைக்காரர்கள் போட்டார்கள். மாட்டுக்கு பல் தேய்ந்து போய்விட்டது.  வைக்கோலை அதக்கி விட்டு வெளியே போட்டுவிடுகிறது. தீனி கூட சரியாக எடுப்பதில்லை. அப்பா ஒரு நாள் சொன்னார், "வெள்ளை கிடாரி இன்னும் அதிக நாள் தாங்காது தீனியை தள்ளிவிட்டது" என்று. 
           நான் பட்டியில் போய் அந்த பசுவை பார்த்தேன். பழைய தூய வெள்ளை நிறம் கூட இல்லை. சற்று மங்கிய வெள்ளை .கீழே விழுந்ததால் பின்புறம் ஏற்பட்ட புண்ணில் உட்காரும் ஈயை விரட்ட கூட வேகமாக வாலை  அசைக்க முடியவில்லை  நான் சிறிய புல்லுக்கட்டை எடுத்து கொஞ்சம் புல்லை எடுத்து அதன் வாயருகில் கொண்டு போனேன். சற்று நேரம் புல்லை வெறிக்கப் பார்த்துக்கொண்டே இருந்து விட்டுபிறகு நாக்கால் நக்கியது.  பிறகு கீழே தள்ளிவிட்டது.

          நான்கைந்து நாட்களுக்குப்  பிறகு அந்த வெள்ளை கிடாரி படுத்துவிட்டது. காலையில் எவ்வளவோ முயற்சி செய்தும் அது எழுந்திருக்கவில்லை. பக்கத்தில் உள்ள மற்ற பசுமாட்டையும் கன்றுகளையும் வேலைக்காரர்கள் அப்புறப்படுத்தி விட்டு அது படுக்க தாராளமாக இடத்தை ஏற்பாடு செய்தனர். நான்கு கால்களையும் நீட்டி அந்த கிடாரிப்பசு படுத்திருந்த காட்சியை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அவ்வப்போது தலையை அசைத்துக் கொண்டிருந்தது.
            அடுத்த வாரம் ஒரு நாள் காலை நான் எழுந்திருந்தபோது என் அம்மா "வெள்ளைக் கிடாரி செத்துப்போச்சு " என்றாள் நான் ஓடிப்போய் பட்டியில் பார்த்தேன். நான்கு  கால்களை நீட்டியபடி தலை ஒரு புறம் சாய்ந்து அந்த பசு இறந்துகிடந்ததைப் பார்த்ததும் எனக்கு என்னவோ செய்தது. அழுகை அழுகையாக வந்தது.கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தேன், என் அம்மா முகம் கலங்கியிருந்தது.அம்மா செயலிலும் ஒரே குழப்பம் தெரிந்தது. அப்பா நீண்ட நேரம் பக்கத்தில் நின்று இறந்துகிடந்த மாட்டை  பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வேலைக்காரனை கூப்பிட்டு இறந்த மாட்டை எடுப்பதற்கு ஆட்களை கொண்டுவரச்  சொன்னார்.
           என் அம்மா என்னைக் கூப்பிட்டு "பாட்டியிடம் போய் சொல் " என்றாள். பத்து வீடு தள்ளி என் சித்தப்பா வீட்டில் இருந்த பாட்டியிடம் போய் "பாட்டி வெள்ளைக் கிடாரி செத்துப் போச்சு" என்றேன். "அப்படியா" என்று கேட்ட பாட்டி சற்று நேரம் மனக்கலக்கத்துடன் அமைதியாக நின்றாள். நான் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அம்மாவிடம் நான் இன்னிக்கு பள்ளிக்கூடம் போகவில்லை" என்றேன். அம்மா சரி என்று சொல்லி விட்டாள்
 
          சற்று நேரத்தில் எங்க பாட்டி கொல்லைப்புறமாக மெதுவாக நடந்து மாட்டு பட்டிக்கு வந்தாள் "நீ எதற்காக இப்படி கஷ்டப்பட்டு நடந்து வரணும் " என்று கேட்டுவிட்டு பாட்டி உட்கார ஒரு நாற்காலியை கொண்டு வந்து முற்றத்தில் போட்டார். பாட்டி நாற்காலியில் உட்கார்ந்தாள். உட்கார்ந்தபடி பாட்டிவெள்ளைக் கிடாரியின் பாரம்பரியத்தைப்  பற்றி, அதன் தாய் சிவப்புப்பசுவின் பெருமை பற்றி, அந்த காலத்தில் அதுகொடுத்த பால் பற்றி பழைய கதையை எல்லாம் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். என் அம்மா அடுக்களை  வேலையை  எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர்களை கவனிக்கவும் பாட்டியிடம் பேசுவதுமாக இருந்தாள்
      
பாட்டி வேலைக்காரனைக் கூப்பிட்டு" கோயில் பண்டாரத்திடம் போய் கொஞ்சம் பூ வாங்கிக்கொண்டு வா" என்றாள் சற்று நேராத்தில் பூ வந்து சேர்ந்தது. என் அம்மாவைக் கூப்பிட்டு இறந்து கிடந்த வெள்ளைக் கிடாரியின் முகத்தில் மஞ்சளையும் குங்குமத்தையும் இடச் சொன்னாள் இரு கொம்புகளுக்கு இடையிலும்  கழுத்திலும் பூவை கட்டும்படி வேலைக்காரனிடம் கூறினாள் அவனும் அப்படியே செய்தான். எல்லாம் முடிந்த பிறகு மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு என் அம்மா புடவைத் தலைப்பால் கண்ணை துடைத்துக்கொண்டாள்.
 
            சற்று நேரத்தில் பண்ணை  ஆள் நான்கு பேரோடு வந்து சேர்ந்தான்.வந்தவர்கள் ஒரு பெரிய கனமான கழியைக் கொண்டு வந்தார்கள். வந்த நான்கு பேரும் இறந்து கிடந்த அந்த கிழட்டு பசுவின் இரன்டு முன்னங்கால்களையும் ஒன்றாக ஒரு கயிற்றைக் கொண்டு வரிந்து  காட்டினார்கள் அப்படியே பின்னங்கால்களையும் ஒரு சேரக் கட்டினார்கள். கட்டப்பட்ட இரு கால்களுக்கும் இடையே அந்த பெரிய கழியை செலுத்தினார்கள்.
   என் வீட்டில் உள்ள வயதான வேலைக்காரி அம்மா எல்லோரும் கும்பிடுங்க அம்மா என்றாள் என் அம்மாவும் பக்கத்தில் இருந்த சில பெண்களும  விழுந்து கும்பிட்டார்கள்.  அந்த நான்கு ஆட்களும்
"சரி தூக்குடா என்று ஒரு குரல் கொடுத்தவாறே இரன்டு பக்கமும் தூக்கி தோளில் வைத்துக்கொண்டார்கள். வெள்ளைக் கிடாரி இப்பொழுது தன் இறுதிப் பயணத்தை தொடங்கி விட்டது. தலை மட்டும் தனியாக அந்தரத்தில் ஆடுவதைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. இவ்வளவு நேரமும் என் அப்பா வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மேல் துண்டை தலைப்பாவாக கட்டிக்கொண்டு அவர்களுடைய வேலையில் உதவியாக இருந்தார்.  
 
       அவர்கள் தோளில் தூக்கிக்கொண்டு புறப்பட்டபோது என் அம்மா ஓவென்று கதறி அழுதபடி அவர்களுக்கு அருகில் போனாள் அதைப் பார்த்தோ என்னவோ நானும் அழுதேன். என் பக்கத்தில் நின்ற தங்கையும் அழுதாள் . அருகில் நெருங்கிய அம்மாவைப் பார்த்து அப்பா "சரி சரி போ அந்தப் பக்கம். " என்று கூறி  அம்மாவை மெதுவாக தள்ளினார்.
       மாட்டை தூக்கிக்கொண்டு போனவர்கள் கொல்லைப் புறம் நெருங்கியதும் என் அப்பா தலைப்பாவாக கட்டியிருந்த மேல் துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார். கண்ணில் கசிந்த கண்ணீரை துடைக்கத்தான் அப்பா அப்படி முகத்தை துடைத்துக் கொண்டார் என்பதை என்னால் அப்பொழுது உணர முடிந்தது.
        ஏனோ தெரியவில்லை என் சிறுவயது காலத்தில் நடந்த இந்த சம்பவம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். குறிப்பாக நிர்ப்பந்தம் காரணமாகவோ, பாசம் பற்றாக் குறை காரணமாகவோ, வேறு ஏதோ காரணத்துக்காக முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்ட பெற்றோர்களை பார்க்கும்போது அவர்கள் நிலை பற்றி கேள்விப் படும்போது இந்த பழைய சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.
 
 - மு .கோபாலகிருஷ்ணன்

Wednesday, March 16, 2011

புகுஷிமாவின் ஐம்பது சாமுராய்கள், ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை!


ஜப்பானியர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை வெகு காலமாக உலகப்போர்  வரலாறு மூலம் பலரும் எடுத்துகாட்டியதுண்டு.  இப்போது நம் காலத்தில் அதை மீண்டும் நேரடியாக  உணர வேண்டியிருக்கும் என நான் நினைத்து பார்க்கவில்லை. கடந்த வாரம் வந்த 9.0 நிலநடுக்கமும் அதை தொடர்ந்து வந்த சுனாமியும் முடிந்த போது சரி இத்தோடு விட்டதே இயற்கை என்று நினைத்தால்,  அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவுகிறது! 

ஒரு பெரும் நகரத்தில் மின்சாரம் இல்லை, எரிபொருள்  தட்டுப்பாடு, நீர் மற்றும் உணவு தட்டுப்பாடு, இவை நடுவே உற்றார் உறவினரை தொலைத்து முகாமில் தங்கி இருக்கும் போதும் அம்மக்களின் முகத்தில் ஒரு அசாதாரண எழுச்சி தெரிகிறது. எவரும் ஆளும் கட்சியையோ அரசாங்கத்தையோ திட்டி கோஷம் போடவில்லை. நில நடுக்கம் வந்த போது அங்காடியிலிருந்து வெளியே ஓடிய மக்கள் அது முடிந்த பின் எடுத்த பொருளுக்கு பணம் கட்ட  உள்ளே வந்து நின்றது வேறு எங்கும் நடக்காது. மீண்டும் திங்கள் அன்று எல்லோரும் (ரயில் மற்றும் எந்த போக்குவரத்தும் இல்லாதபோதும்) தம் வேலைக்கு திரும்பிவிட்டனர்! 

வாகனங்கள் பெட்ரோல் போட நிற்கும் வரிசையில் ஒரு ஒழுங்கு/பொறுமை, இருக்கும் சின்ன உணவு பொட்டலத்தை முகம் தெரியாத பிறர்க்கு பகிர்ந்தளிக்கும் முதியவர்,  அங்காடிகள் இருக்கும் உணவு பொருட்களை அநியாய விலைக்கு விற்காமல் விலையை குறைத்து விற்பது, ஒரு இடத்தில கூட கடை சூறையாடல் போன்ற வன்முறை இல்லாதது, இந்த பகுதி மக்களுக்காக மொத்த ஜப்பானியர்களும் சிக்கனமாக எரி பொருள் செலவு செய்தல், ஒருவருக்கு ஒரு பாட்டில் குடிநீர் என்ற போதும் சண்டையிடாமல் வாங்கி செல்தல், சிலருக்கு நீர் திறந்துவிட்டது என்று சொன்ன பின்பும் சத்தம் ஏதும் இல்லாமல் வீடு திரும்புதல் என ஒழுக்கம், கட்டுப்பாடு, நாட்டுப்பற்று, மனித நேயமும்  தாங்கள் என்றும் பின்பற்றுபவர்கள் என மீண்டும் நிரூபித்துள்ளனர். 


# புகுஷிமாவின் ஐம்பது சாமுராய்கள்

  அணு உலை வெடித்து அதை விட பல மடங்கு ஆபத்தான அணுக்கதிர்கள் வெளிபட்டுவிடும் அபாயம் நிலவும் இடத்தில் முகம் தெரியாத  (எந்த கட்டாயமும் இல்லாமல் தாமே முன் வந்த) ஐம்பது பேர் மட்டும் தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த அணு உலை ஆலையில் தீயை அணைக்கவும், வெப்பத்தை கட்டுபடுத்தவும் மின்சாரம் இல்லாமல் உடல் உழைப்பில் வேலை செய்துகொண்டுள்ளார்கள்! இவர்கள் மீண்டும் திரும்பி வருவார்களா என தெரியாது, அப்படி வந்தாலும் பெரும் உடல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் தம் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாதென தம்முயிரையும் கொடுக்கும் இவர்கள் தான் நிஜ சாமுராய்கள். பல நாட்கள் இவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது நடக்கும் ஒரு உரையாடல் - இது போல ஒரு ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியதே! 
தம் மனைவி மக்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் இந்த ஆபத்தான இடத்தில இருக்க முடிவு செய்வதை என்னவென்று சொல்வது!  

என்னுடன் வேலை செய்யும் ஒரு ஜப்பானிய பெண் இவை  தனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை என சாதாரணமாக சொன்னார்.  "வீண் ஆர்ப்பாட்டமும், குழப்பமும் அந்த இடத்தை மேலும் மோசமாகவே ஆக்கிவிடும் அதனால் எல்லோரும் பொறுமையாகவே இருப்போம்! பொதுவாக எங்களுக்கு முதலில்  நாடும், நாட்டு  மக்களும், பிறகே தம் குடும்பம், ஆகவே இந்த ஐம்பது பேர் இதே மனநிலையில் தான் இருப்பார்கள்" என்றார்.  அமெரிக்கர் ஒருவர் சொன்னது "இங்கு நாங்கள் நாட்டை நேசிக்கிறோம். ஆனால் எமக்கு எது நல்லதோ அதை தான் செய்வோம்.  ஜப்பானியர் நாட்டை நேசிப்பவர்கள், நாட்டிற்கு எது நல்லதோ அதையே செய்வார்கள்.". ஒரு நாட்டில் வெகு சில மனித நேயமிக்கவர்களை காண்பது அதிசயமில்லை. பெரும்பாலானவர்கள் மனித நேயமிக்கவர் என்பது வேறு எங்கும் காண இயலாது. 

தற்போது நம்மால் முடிந்தது அவர்களுக்காக பிரார்த்திப்பது
ம்
,  முடிந்தால் http://www.redcross.org/ ரெட்கிராஸ் தளத்தில் (ஜப்பான் நில நடுக்கம் என்ற முதல் ஆப்ஷன் தெரிவு செய்யவும்) பண உதவி செய்வதுமே [::ஜாக்கிரதை:: - வேறு பல போலி இணைய தளங்கள் பணம் சேர்க்க  உலவுகின்றன, செய்யும் உதவி பலனில்லாமல் போகலாம்]

 ட்விட்டரில் தற்போது அதிகம் பேர் ட்விட் செய்யும் இந்த வாக்கியம் தான் எனக்கும் அவர்களுக்கு சொல்ல தோன்றியது. 
 "Ganbatte Nihon"  - "Do your best, Japan. Never give up." ( மன்னிக்கவும் இதற்கு எனது தமிழாக்கம் தகுந்த நிறை செய்யவில்லை).

Tuesday, March 15, 2011

வம்பு

வம்பு

அன்பு என்று சொல்லி
பண்பை சொல்ல அது வம்பாய் மாறி
என் என்பு எங்கு என்று
கேட்கும் அளவுக்கு கம்பு பேசியது என்றால்
அது வம்பா? இல்லை என் தெம்பா?

நண்பா நீ என்னை நம்பு.
நான் தூக்க சொல்ல வில்லை சொம்பு.
வம்பாய் நீயும் மறுக்காமல்
தமிழ் மன்றத்தில் இடு ஒரு வெண்பா.

சிலம்பின் வம்பு காப்பியம்
சினத்தின் வம்பு நெற்றிக்கண்
பழத்தின் வம்பு திருவிளையாடல்
நம்மின் வம்பு நாளைய ....

அது இந்த தமிழ் மன்றம் சொல்லட்டும்
வா நாம் வம்பு பேசலாம். அது பயனுள்ளதாக இருக்கட்டும்.

வேதாந்தி

Monday, March 14, 2011

பஹாமாஸ் விஜயம் - 3

முதல் நாள் இரவு கப்பலில் சாப்பாடு முடிந்ததும் ஒரு சின்ன வாக்கிங் போயிட்டு ரூமுக்கு வந்தால் ஒரு பொம்மை செய்து கட்டிலின் மேலே தொங்க விட்டிருந்தார் எங்கள் அறையை சுத்தம் செய்யும் ஒரு கப்பல் சிப்பந்தி லீ ராய். அது என்னங்கரதை பதிவின் கடைசியில் கொடுத்திருக்கேன். நாங்கள் கப்பலில் இருந்த நான்கு நாட்களும் காலையில் வந்து அறையை சுத்தம் செய்து, படுக்கையை சரி செய்து, எல்லா இடத்தையும் பளபளவென்று செய்து எங்க வீட்டு அம்மணி கிட்ட நல்லா திட்டு வாங்க ஒரு வசதி செய்து விட்டு போயிடுவார். சும்மா சொல்லகூடாது செய்யர வேலையை ஒழுங்காதான் செய்யறார். மறுபடி இரவு 8 மணிக்கு வந்து படுக்கையை சரி செய்து, சோபாவை படுக்கையாக மாற்றிவிட்டு, துண்டு சோப்பு சீப்பு எல்லாம் மாத்திட்டு, ஒவ்வொரு தலையணை மேலும் ஒரு சின்ன சாக்கலேட் வெச்சுட்டு, ஒரு துண்டுல சின்ன பொம்மை செய்து தொங்க விட்டுட்டு போயிடுவார்.

சாப்பாடு பரிமாறும் சிப்பந்திகளின் தலைவர் நம்ம மும்பையை சேர்ந்த ஒருவர். எங்களை ரொம்ப நல்லா பார்த்துகிட்டார், ஆனா அப்பப்ப வந்து சின்னதா ஜல்லி அடிச்சுட்டு போயிடுவார்.

ராத்திரி ரூமுக்கு வந்தா கப்பலின் ஆட்டம் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம்ன்னா சாதாரண ஆட்டந்தான், ஆனா அதோட எஃபெக்ட் கேப்டன் பிரபாகரன் படத்தில ரம்யா க்ருஷ்ணன் போட்ட கெட்ட ஆட்டத்தை விட கேவலமா ஒரு ஆட்டம் என் காதுக்குள் போட்டு எப்படா இது நிக்கும்னு தோணித்து. இப்படி இருக்கும்னு பல பேர் சொன்னதால, கப்பல் ஏற்றதுக்கு முன்னாடியே, காதுக்கு பின்புறம் தடவ ஒரு தைலம், கைல போட்டுக்க க்ரிப், உள்ளுக்கு சாப்பிட மருந்துன்னு ஒரு சின்ன மெடிகல் ஷாப்பே கைல இருந்தது. அதையெல்லாம் போட்டுகிட்டு ரூமை விட்டு வெளியில வந்ததும் என்னவோ பெரிய போருக்கு போற மாதிரி ஒரு பில்டப் கிடைச்சுது. இதுலயும் ஒரு ஆச்சர்யமான விஷயம், மஹிமாவுக்கும் மாதுரிக்கும் ஒரு சின்ன ஆட்டமும் இல்லாம சாதாரணமா விளையாடிகிட்டு இருந்தாங்க, அது எப்படின்னு தெரியலை.

இப்படியாக பலப் பல எதிர்பார்புகளோட துவங்கிய எங்கள் கப்பல் பயணத்தின் முதல் நாள் சின்ன ஆட்டம் பாட்டங்களோட முடிய மறுநாள் காலை கோகோகே பீச்சு போவதாகப் ப்ளான் (எனக்கு தெரிஞ்சு க கா கி கீ கு கூ கெ கே தானேன்னு ப்ளேடு போடாதீங்க) இது ராயல் கரீபியன் கப்பல் கம்பெனியின் சொந்த தீவு.

செவ்வாய் விடிய காலையில் அந்த தீவின் அருகில் நங்கூரம் போட்டு கப்பலை ஆடாமல் அசையாமல் நிறுந்தி விட்டு, “ஹும் வாங்க வாங்க”ன்னு மிரட்டாத குறையா கூப்பிட்டு போனாங்க. நாம எப்படி பட்ட ஆளு, சாதாரணமாவே ப்ரேக் ஃபாஸ்ட்ன்னு ஒன்னு வெச்சா பொளந்து கட்ற கூட்டம், இப்படி பலப் பல வகைகளை வெச்சு வேணும்னா சாப்பிடுன்னு சொன்னதுக்கு அப்புறம் சாபிடலைன்னா அவங்க மனசு கஷ்டப்படுமில்லையா அதனால அந்த வெரைட்டியான ப்ரேக் ஃபாஸ்ட்டை ஒரு காட்டு காட்டிட்டு பொறுமையா விடிய காலைல தீவுக்கு போனவங்க எல்லாம் கப்பலுக்குத் திரும்ப வர ஆரம்பிக்கும் போது நாங்க சாவகாசமாக தீவுக்கு புறப்பட்டு போனோம்.

நாங்க போயிட்டு வந்த கப்பல்
தீவுல ஸ்நார்கலிங் என்ற ஒரு பயிற்சிக்கு பணம் கட்டியிருந்தோம். நான் பெரிய பருப்பு மாதிரி, ‘எவ்வளவு ஆழம் இருக்கும்”ன்னு கேட்டதும் ஒரு சிப்பந்தி “அது ஒன்னும் பெரிசில்ல ஒரு அடில இருந்து 4 அடிவரைக்கும் ஒரு பகுதி, உனக்கு தோதா ஒரு 15 ல இருந்து 35 அடி வரைக்கும் இன்னோரு பகுதி”ன்னு என் நீச்சல் திறமையை அவன் கொடுத்த ஸ்விம் ட்ரெஸ்சை நான் போட்டுகிட்டு நின்ன ஸ்டைல பார்த்தே கண்டுபிடிச்சிட்டான். அவனை அமெரிக்காவின் துப்பறியும் சாம்புன்னு அறிவிக்கலாம்னா அவனுக்கு பாவம் தமிழ் தெரியாதேன்னு விட்டுட்டேன். மகா ஜனங்களே காசு நிறைய இருந்தா இப்படி ஸ்நார்கலிங்குகெல்லாம் பணம் கட்டாம என்கிட்ட கொடுங்க உங்க பெண்/பையன் கல்யாணத்துக்கு குடும்பத்தோட வந்து வயிறார சாப்பிட்டுட்டு, வாய் நிறைய வாழ்த்திட்டு, ஒரு சின்ன சோப்பு டப்பா பரிசா கொடுக்கறேன்.

சரி பணத்தை கட்டிட்டோமேன்னு ஸ்நார்கலிங் போகலாம்னு தண்ணில இறங்கினா, கச்சா முச்சான்னு காலெல்லாம் கல்லு கல்லா குத்துது, சரி நம்ம ரேஞ்சுக்கு இதுலெல்லாம் போகமுடியாதுன்னு வெளில வரலாம்னா, நம்ம வீட்டுக்காரம்மா, “ஏங்க கொடுத்த காசுக்கு ஒரு தடவை நல்லா தண்ணில நனைஞ்சுட்டாவது வாங்க, இப்படி வெறும வந்தா அக்கம் பக்கத்துல பார்த்தா நம்மள பத்தி தப்பா நினைப்பாங்க” ன்னு அன்பாக எடுத்து சொன்னதும், சரி நம்மள வெச்சு இன்னிக்கு காமெடி பண்ணரதுன்னு முடிவு பண்னிட்டாங்கன்னு தெரிஞ்சுது. நானும் குட்டைல ஊறின ஒரு ஜந்து மாதிரி எவ்வளவு நேரம்தான் இருக்கரது, சின்ன சின்ன வாண்டுங்கள்லாம் சூப்பரா நீச்சல் அடிக்கும் போது, நமக்கு அது தெரியாதுன்னு அவங்களுக்குத் தெரியரதுக்கு எவ்வளவு நேரம் ஆகும், சொல்லுங்க. நாம பள்ளிக்கூடத்தில வெளில முட்டி போட்டு கிட்டு இருக்கர அழகைப் பாத்து டீச்சரே “ஹூம் போனா போகுது நாளைக்கு ஒழுங்கா பாடம் படிச்சிட்டு வந்திடுன்னு” சொல்ல வெச்சவங்களாச்சே, ஒரு 30 நிமிஷத்துக்கு அப்புறம் எங்க வீட்டில “ஏங்க இப்படியே தண்ணில இருந்தா உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது, போதும் வந்திடுங்க”ன்னு சொல்ற வரைக்கும் தண்ணிலயே இருந்து மைக்கேல் பெல்ஃப்ஸ், பதக்கம் வாங்கிட்டு வந்த ஸ்டைல் தோக்கரமாதிரி வந்தம்ல.

அந்தத்தீவு ஆனா அநியாயத்துக்கு அமைதியா இருக்குங்க. அங்கு கடை போட்டிருந்த பல பேர எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சா, அவங்க எல்லாம் கப்பல்ல வேலை செய்யரவங்க. இது கப்பல் கம்பெனியோட சொந்தத் தீவு அதனால கப்பல்ல மக்களை கொண்டுவரும்போது, கடைக்கு வேலைக்கும் ஆட்களையும் கொண்டு வந்துடராங்க. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா, இது எப்படி இருக்கு.

இங்க ஒரு க்ளாஸ் பாட்டம் ட்ரிப்ன்னு ஒன்னு இருக்கு கண்டிப்பா போய் பாருங்க, தண்ணி ஸ்படிகம் மாதிரி இருக்க, அதுல இருக்கர மீன்களை பாக்கரது அழகோ அழகு. அப்பப்ப சுறா – பயப்படாதீங்க நம்ம நடிகர் விஜய் இல்லை, நிஜ சுறாமீன், டால்ஃபின், கடல் பசு எல்லாம் பாக்கலாம். இந்தத் தீவுல நம்ம குழந்தைகளை கொஞ்சம் காபந்து பண்ணி கூட்டிகிட்டு போய், கூட்டிகிட்டு வரணும். அங்கங்க சில பல இளஞ்சோடிகள் ரொம்ப ‘அன்யோன்யமா’ இருப்பாங்க, அவ்வளவா நல்லது இல்லை சொல்லிட்டேன்.

ஆஹா ஆனந்தமா இருக்கேன்னு அங்கங்க கட்டித் தொங்க விட்டிருக்கர தூளியில கொஞ்சம் படுத்தா அட அட அந்த சுகமே தனிங்க. தூளின்னா என்னவா? அதாங்க ஹம்மாக். என்னங்க இது தமிழ் பாடத்துக்கு விளக்கமா கோனார் நோட்ஸ் கேக்கர இஸ்கூல் பசங்க மாதிரி கேள்வி கேக்கரீங்க.

ஆமா கதையை எங்க விட்டேன், ஆங் தூளில படுத்துகிட்டு ஒரு சின்ன தீவுல காத்து வாங்கிகிட்டு இருந்தேன், பட்டுன்னு எங்க வீட்டுகாரம்மா வந்து “என்னங்க இன்னிக்கு ஃபார்மல் நைட் அதனால கப்பலுக்கு போய் நல்லா ட்ரெஸ் பண்ணிக்கிட்டுதான் சாப்பிட போகனும் ஞாபகம் வெச்சுக்கங்க”ன்னு சொல்லி ஃப்யூஸை பிடிங்கிட்டாங்க. ஃபார்மல் ட்ரெஸ் போட்டுகிட்டு போய் சாப்பிடனும்னா கோட்டு டை போட்டு, கல்யாண ரிசப்ஷன் போல அலங்காரம் பண்ணிகிட்டு போகனும்னு அர்த்தம். எந்த மடையன் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணினானோ அவனை கொஞ்சம் தனியா கவனிக்கனும். சும்மா சொகுசு கப்பல் ஏறி பஹாமாஸ் பாத்தமா, போக வர கப்பல்ல சுத்தி சுத்தி வந்தமா, தேவைப்பட்ட போதெல்லாம் சாப்பாடு அறைக்கு போய் கிடைச்சதையெல்லாம் சாப்பிட்டமா, நல்லா நாலு அஞ்சு பவுண்டு எடையை ஏத்தினமான்னு இல்லாத, இப்படி கோட்டு டைய்ன்னு படுத்தராங்க. நாங்க போன கப்பல் பரவாயில்லையாம், என் மனைவிக்கு தெரிஞ்ச ஒருத்தர் இது மாதிரி ஒரு கப்பல்ல போகனும்னு எடையை குறைச்சுட்டுப் போனாங்களாம், அப்படி ஒரு கண்டிஷன் இருந்த்தாம் அவங்க கப்பல்ல.

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லாம விட்டுட்டேன். கப்பல்ல அங்கங்கே காமிராவும் கையுமா 4-5 ஆட்கள் அலைவாங்க இங்கன நில்லுங்க அங்கன நில்லுங்கன ஒரு படம் எடுக்கறேன்னு அலப்பரை பண்ணி படம் எடுப்பானுவ, அங்கங்க நம்மூர் கிராமத்து திருவிழால இருக்கரமாதிரி படுதா கட்டி நடுவில நம்ம எல்லோரையும் நிக்க வெச்சு படம் பிடிப்பானுவ. இவனுங்க தொல்லை இல்லாத ஒரே இடம் உங்க ரூம் மட்டும்தான். ஒவ்வொரு படமும் $19.95+ வரி, எப்படியும் ஒரு 200$ இதுல தண்டமா போயிடும தயாரா இருங்க.

நாகு, நான் அந்த சீனப் பெண் பேசியதை எழுதியதை நீங்க நிஜம்னு நம்பளைன்னு நினைக்கிறேன். உண்மையைச் சொல்லனும்னா, அந்தப் பெண்ணுக்கும் எங்களுக்கும், பிறகு எங்களுக்கும் வெயிட்டர் ஜார்ஜ்ஜுக்கும் நடந்த உரையாடலை ஒரு சின்ன காமெடி நாடகமாகவே போடலாம். ஆனால், அந்தப் பெண் மற்றும் ஜார்ஜ் போன்ற பல சீன நாட்டினர்களை அந்தக் கப்பல்ல பார்த்தேன், அவங்களோட அந்த தைரியம் நிஜமாகவே பாரட்டப் படவேண்டியதுதான். அங்கு வெயிட்டராக இருக்கும் பல இந்தியர்களையும், தமிழர்களையும் பார்த்தேன் அவர்களும் ஏறக்குறைய இவர்களைப் போலத்தான், ஆனால் ஆங்கிலம் கொஞ்சம் சுமாராகப் பேசுகிறார்கள் அவ்வளவுதான். நாகு பின்னூட்டத்தில் சொன்னது போல் 6 மாதத்திற்கு ஒரு முறை இந்தியா போகலாம். மற்ற நாள் எல்லாம் கப்பலிலேயே இருக்கிறார்கள். எப்படின்னு தெரியலை.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில டவலில் செய்து மாட்டியிருக்கிறது குரங்கு பொம்மை. இதை எப்படி செய்யரதுன்னு ஃப்ரீயா க்ளாஸ் எடுத்தாங்க, ஆனா அதை செய்யர வேகத்துல ஒரு மண்ணும் ஞாபகத்துல இல்லை.

சரி அடுத்த பதிவில் நசாவு, பஹாமாஸ் விஜயம் பத்தி பார்க்கலாம். அதுக்கு முன்னாடி கப்பல்ல இருந்து நாங்க பார்த்த சூரிய அஸ்தமனம் பார்த்திட்டு போங்க. நான் தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி ஒன்னும் சொல்லலைங்க, நீங்கள் படித்துக் கொண்டிருப்பது எங்களோட பஹாமாஸ் விஜயம் பத்திதாங்க. நம்புங்க.

-முரளி இராமச்சந்திரன்.

Thursday, March 10, 2011

சிரிப்பு

என் தந்தை அழுவார் என்று எங்கள் கோமளவல்லி சொன்னால் கூட்டம் சிரிக்கிறது.
செந்தில் அழுதால் கவுண்டமணியுடன் சினிமா ரசிக்கிறது.
சில நேரம் நாம் அழ அழ சிரிக்க வைக்கிறார் ஆனந்த கண்ணீர் என்று
பிறர் அழ நாம் சிரிப்பதில் எத்தனை சந்தோசம் - இது காமெடி

பிறந்த குழந்தை அழுதால் தாய் சிரிக்கிறாள் சுகப்பிரசவம் என்று
குழந்தை அடித்து தாய் அழுதால் மழலை சிரிக்கிறது பாசாங்கு என்று
இதிலும் தான் எத்தனை சந்தோசம் - இது தாய்மை உணர்வு

குடிகாரன் சிரித்தால் குடும்பம் அழுகிறது
குடும்பஸ்தன் அழுதால் ஊரே சிரிக்கிறது
ஏழை அழ பணக்கரான் சிரிக்கிறான்
பணக்காரன் அழுதால் உலகம் சிரிக்கிறது
இதனை என்னவென்று சொல்ல --

பிறர் சிரித்து நாம் சிரித்தால் அது சிறப்பு
பிறர் அழ நாம் சிரித்தால் அது வெறுப்பு
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு
உலகம் சிறக்க நீ சிரித்தால் அது பொறுப்பு
உன் தாய் சிரிக்க நீ சிறந்தால் அதுவே உன் பிறப்பு.

வேதாந்தி

நிலவின் வண்ணம்

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
நாளில் நீ இல்லை என்று கவிநயா
சொன்னதால் உன் நிறம் வெண்மையோ?
நாகு வானவில்லும் இல்லை என்றதால் நீ கருமையோ ?

அறிவியல் அறிங்கனோ உன்னில் பல வண்ணம் என்பார்
அருகில் சென்றவரோ நீ மஞ்சள் என்பார்
தொலைவில் நின்றவரோ நீ சாம்பல் என்பர்
இலக்கியமோ நீ களங்கம் என்று
குறை கூறியதால் நீ கரு வெண்மையோ

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ?
உன் வண்ணம் பார்க்கத் தானோ
என் தாய் உன்னை அருகில் அழைத்து
எனக்கு அமுதும் ஊட்டினாளோ

கவிஞரும் காதலரும் விரும்பும் உன்னை
ஓவியனும் மழலையும் விரும்பும் உன்னை
இந்த தமிழ் மன்றம் மறந்ததேனோ ?


கணினியில் பார்த்தால் உன் வர்ணம் தான் எத்தனை
அறிவியலும் உன் உலோக ஆடையால் தான்
உன் உடலும் சிலிர்ப்பதாக சொல்லுகிறதே
உன்னில் என்ன தான் உள்ளது?

நிலவே உன் வண்ணம் தான் என்னவோ
உள்ளத்தின் வண்ணம் தான் உன் வண்ணமோ
அதனால் தானோ என்னவோ உன்னை வெள்ளை என்கிறார் ?

நீ குறைந்தாலும் மறைந்தாலும் வளர்ந்தாலும்
உன் வண்ண எழில் காண எத்தனை குஷி

உன்னில் வண்ணம் தேடும் என்னை
உரைகல்லில் இடாமல் உன் வண்ணம் தன்னை
எனக்கு மட்டும் உரைப்பாயோ ?
நிலவே உன் வண்ணம் தான் என்னவோ ?

வேதாந்தி