Thursday, March 03, 2011

பஹாமாஸ் விஜயம் - 2

நாங்க போன கப்பல் ராயல் கரீபியன் கப்பல். கார்னிவல், டிஸ்னி, நார்வேஜியன் என்று பல கப்பல்கள் இருக்கு. அதில் இது கொஞ்சம் நல்லதுன்னு செவி வழி செய்தியை கேட்டு நாங்களும் டிக்கெட் வாங்கினோம்.

க்ரூய்ஸ் கப்பலில் நுழையரதுக்கு பல வழிமுறைகள் போட்டு, பல வசதிகளைச் செய்து வா வா என்று எதிர் கொண்டழைக்க சில ஆட்களைப் போட்டு நம்மள சும்மா திணரடிக்கராங்க. துறைமுகத்திலேயே கார் நிறுத்துமிடமும், அதற்கு முன்னாடியே நமது பெட்டி படுக்கைகளை வாங்கி வைத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எல்லா சாமான் செட்டையும் கொடுத்துட்டு ஹாயாக கையை வீசிகிட்டு உள்ளே போகலாம். அடுத்த நாட்டுக்குச் போவதாக இருந்தால் மறக்காமல் பாஸ்போர்ட்டை கையிலேயே வெச்சுக்கங்க. இல்லை போகவே முடியாது, ஜாக்கிரதை. கொஞ்சம் தின்பண்டம் ஏன்னா, எப்போ, எந்த குழந்தை, எப்படி, எதுக்கு கத்துமோ தெரியாது கப்புன்னு வாயில அடைச்சு ஒரு கப் தண்ணி ஊத்தி அடக்கிடலாம், தேவையான மருந்துகள், காமெரா, லேப்டாப் கம்ப்யூட்டர் இதை லக்கேஜ்ஜோடு அனுப்பினால் அது கையில் வந்து சேர்ந்து ஒழுங்காக வேலை செய்யுதான்னு தெரியர வரைக்கும் ஒரு மாதிரி அவஸ்தையா இருக்கும்.

நம்ம போர்டிங் பாஸ் கொடுக்கர இடம் ஏர்போர்டை ஞாபகப் படுத்தும் அதே சமயம், எந்த மாதிரி டிக்கெட் வாங்கியிருக்கீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சீக்கிரமாகவோ அல்லது லேட்டாகவோ உங்களை செக்கின் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு முதலில் ஒரு கைப் பட்டை போட்டு இதுங்க ரெண்டும் உங்க கூட வருதாங்கர ரேஞ்ஜில கேள்வி கேட்டுட்டு, அப்புறம்தான் “O they are so cute” ன்னு ஒரு மொக்கையை போட்டுட்டு, முக்கியமான விஷயத்துக்கு வருவார்கள். அது வேற ஒன்னும் இல்லைங்க கப்பல் உள்ளே திங்கர சோறு, காபி, டீ, எலுமிச்சை தண்ண்ண்ணீ ஜூஸைத் தாண்டி எதைச் சாப்பிட்டாலும் அதாவது மஹா ஜனங்களே இந்த லாகிரி வஸ்துகள் எதைச் சாப்பிட்டாலும் வேறு எதை வாங்கினாலும், போட்டு தாளிக்கரதுக்கு அப்பப்ப க்ரெடிட் கார்டை நீட்டு தேய் தேய்ன்னு தேய்க்க வேண்டாம், அதை செக்கின் பண்ணும் போதே வாங்கி ஒரே ஒரு முறை தேய்த்து விட்டு (அப்பாடி என்ன சவுகர்யம் இல்லை) அத நம்ம ரூம் கார்டோடு கோர்த்து விட்டுடுவாங்க. அப்படின்னா, ரூம் கார்ட் தொலைஞ்சு போனாலோ, கொஞ்ச நேரம் காணாம போனாலோ, அடி வயித்தில கரைக்கிர புளில சூப்பரா ஒரு கப்பல் கும்பலுக்கே சாம்பார் வெக்கலாம் ஜாக்கிரதை. நாங்க கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணா பரம்பரை, குழந்தைகள் கார்டில் அதைக் கோக்கவேண்டாம்னு சொல்லிட்டு, அது மட்டும் இல்லை குழந்தைகள் நாங்க இல்லாம எதுவும் வாங்க முடியாதுன்னும் சேர்க்கச் சொல்லிட்டோம். சரி, சரி, உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. வீட்டுக்காரம்மா கார்டை அப்படி கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு நான் கேக்கலை, அவங்க பக்கத்திலேயே இருக்கரச்சே எப்படி அதெல்லாம் ஒரு சாத்வீகமான மனுஷன் கேக்க முடியும்ன்னு உங்களுக்குத் தோண வேண்டாம். மொதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கங்க, கேள்வி கேக்கரது ரொம்ப ஈசி, கேள்விகளுக்கு பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.

ஒருவழியாக இதெல்லாம் கடந்து கப்பல் உள்ளே வந்தா முதல் மரியாதைல ராதா படகுல இருந்து இறங்கினதும் இழுத்து கிட்டு இருக்கும் சிவாஜி படக்குன்னு ஒரு பட்சி கொத்தினமாதிரி வெடக்குன்னு காலை உதறுவாரே அது போல ஏதாவது இருக்கும்ன்னு நினைச்சா ஒரு மண்ணும் இல்லை. ஒரு வரவேற்பாளி மாயாஜால படத்துல வர்ர மாதிரி திடீர்ன்னு தோன்றி (என்ன, டொய்ய்ய்ங் ன்னு ஒரு பேக்ரவுண்ட் ம்யூசிக்தான் இல்லை) ஒரு சூப்பர் அன்னாசி பழ ஜுஸ் கப்பை கொடுத்து குடிக்கிறியான்னு கேட்டு “நல்லா இருக்குமா”ன்னு கேக்க வாயெடுக்கரதுக்குள்ள நம்ம ரூம் கார்டை வாங்கி ஒரு தேய் தேச்சு 8 டாலர் ஆச்சுன்னு சொல்லிட்டாங்கப்பு. அப்பால நாம எப்பேர்பட்ட ராஜ பரம்பரை, ஒரே ஒரு கப்பு போதும், நிறைய பேர் வராங்க எல்லாருக்கும் வேணுமில்லையான்னு பெருந்தனமையா அவங்ககிட்ட நடந்துகிட்டு விடு ஜீட்.

இப்படியாக படாத பாடு பட்டு சொகுசு கப்பலேறிய ஒரு தமிழன் என்ற பெயரை வேறுயாரும் எடுத்துக்கரதுக்குள்ள எனக்கு நானே கொடுத்துக் கொண்டேன்.

காலை 11 மணிக்கு கப்பலுக்குள்ள வந்தா சட்டுபுட்டுன்னு நாலு எடத்த பார்த்தமா, நம்ம ரூமுக்கு வந்தமா, சின்னதா ஒரு த்யானம் செய்தமான்னு இல்லாத குறைக்கு, மதியம் 1 மணிக்குத்தான் ரூமுக்குள்ள போக முடியும்ன்னு சொல்லி வெளியிலேயே நிறுத்திட்டாங்க. “ஏண்டா என்னடா ஆச்சு உங்களுக்கு இவ்ளோ நேரம் நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு” ன்னு கேட்டே விட்டேன்.

அதுக்கு “கப்பலை நல்லா சுத்திப் பாருங்க, ராவிக்கு ஜூப்பர் ஷோ இருக்கு எங்க ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா”ன்னு அன்பா சொல்லிட்டு போய்கிட்டே இருந்தானுங்க. இவனுங்களுக்கு எங்கள பத்தி அவ்வளவா தெரியாது, இவங்களோட மிட்நைட் ஷோ எதுக்கும் போகாம நாம ஏன் வரலைன்னு இவனுங்க வருத்தப் பட வெக்கனும்னு மனசுக்குள்ளேயே கறுவிக்கிட்டோம்.

நாங்க போன கப்பல் 10 தளம் கொண்டது. எங்க ரூமும் 10வது தளத்திலதான். 11வது தளத்தில் நீச்சல் குளமும், கப்பலின் முன் பக்கம் 12வது தளத்தில் சாப்பாடும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கப்பலில் எங்களைப் போல பயணித்த 3000 பேருக்கு 850 சிப்பந்திகள்ன்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லக்கூடாது, கப்பலுக்குள்ளே ஒரு சின்ன நகரமே இருக்குங்க. பெரிய சூதாட்ட விடுதி, 3 சாப்பாடு ஹோட்டல், சின்ன மால், 2 ஸ்பெஷல் ‘தண்ணி’ கிடங்கு, ஒரு பெரிய இரண்டடுக்கு ஆடிட்டோரியம், குழந்தைகள், சிறுவர் சிறுமிகளை கண்காணித்துக் கொள்ள இடம், லைப்ரரி, முடிதிருத்தும் இடம், கூடைப் பந்தாட இடம், டேபிள் டென்னிஸ் ஆட இடம் என்று அசத்தோ அசத்துன்னு அசத்ராங்க. கொஞ்சம் அசந்து மறந்து எங்கெயாவது நின்னா போச்சு ஒன்னு “என்னங்க ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் தெரியனுமா, என்னைய கேளுங்க நான் சொல்றேன்” னு வந்துடரானுங்க, இல்லை “ஏதாச்சும் சாப்பிடரீங்களா, கொண்டுவரட்டுமா”ன்னு கேக்கராங்க. இப்படியெல்லாம் நம்மள கவனிச்சா நாம திரும்பத் திரும்ப கப்பல் பயணத்துக்கு வருவோம்னு எந்தப் பயபுள்ளையோ போட்டு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
ஒருவழியா ரூமுக்கு நம்மள அனுப்பி அதப் பார்த்தா கொஞ்சம் மலைப்பாத்தான் இருந்துச்சு. காசுக்கேத்த தோசைன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒரு கிங் சைஸ் பெட்

ஒரு சோபா அதைப் பிரிச்சு குயின் சைஸ் பெட்டாக்கி ரெண்டு பேர் தூங்கலாம்,
Add Image

ஒரு சின்ன பார்

ட்ரெஸ்ஸிங் டேபிள்

சின்ன குளியலறை

பால்கனி
என்று ரொம்ப தாராளமாகவே இருந்தது.
இதையெல்லாம் அனுபவிக்கரத்துக்குள்ள ரூம் சர்வீஸ்ன்னு ஒருத்தன் வந்து கதவை இடிச்சு, “என்ன ஏழரை மணி ஷோவுக்கு போகலையா”ன்னு கேட்டு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா அனுப்பிட்டான். அப்பதான் தெரிஞ்சுது எங்களை வெளியில அனுப்பினாதான் அவன் ரூமை க்ளீன் பண்ணி பளிச்சுன்னு வெக்க முடியுமாம். நேரம்டா சாமின்னு, அந்த ஷோவுக்குப் போனோம்.
இவங்க எல்லோருக்கும் ஒரு விஷயம் நல்லாத் தெரியுது, எதை வேணும்னாலும், பேசிப் பேசியே வித்துடுவானுங்க. இப்படித்தான் 25 டாலருக்கு ஒரு கூப்பன் புத்தகம் வித்தானுங்க அத வாங்கினா நமக்கு 1000 டாலர் லாபம்ன்னு சொல்லி சொல்லி வித்தானுங்க. ரஸல் பீட்டர் ஸ்டாண்டப் காமெடி கேட்டீங்கன்னா ஒன்னு சொல்வான், ரெண்டு பேர் வியாபாரத்துல மீட் பண்ணக்கூடாது, இந்தியனும் சீனனும். இந்தியன் எதையும் பேரம் பேசாம வாங்க மாட்டான், சீனன் எந்த பேரத்துக்கும் ஒத்துக்க மாட்டான். இது இவங்களுக்கு நல்லாத் தெரியும் போல இருக்கு. அப்படி புத்தகம் வாங்கினவங்கள்ள(ஹி ஹி என்னையும் சேர்த்து) பாதி பேர் இந்தியர்கள். அந்தப் புத்தகத்தில நாளான்னிக்கு நாம நசாவு (பஹாமாஸ்) போய் எல்லோரும் மூட்டை மூட்டையா வைரமும் வைடூரியமும்மா வாங்கிட்டு வரணும்ன்னு அவனுக்கு ஆசையா இருக்குன்னு சொல்லி சொல்லி கிளப்பி விட்டு “எலேய் வேலையப் பாருடா வெண்ணை”ன்னு நான் கத்தலாம்னு எழுந்ததும் டக்குன்னு கடைய மூடிக்கிட்டு ஓடிப் போயிட்டான். ரூமுக்கு வந்து அந்தப் புத்தகத்தை ஒழுங்கா படிச்சதும் தெரிஞ்சுது 1000$க்கு வாங்கினா 50$ இனாம்னு ஒரு கூப்பன் அதுமாதிரி பலதும் சேர்த்தா உங்களுக்கு 1000$ லாபமாம். அதுக்கு ஒரு 8000-10000 டாலர் செலவு பண்ணனுமாம். நாங்க இதுமாதிரி சீப்பா 1000$ லாபமெல்லாம் பாக்காம, ஸ்ட்ரெய்ட்டா 10000 டாலர் லாபமே பாத்துட்டோம். அந்த கதை 4ம் பாகத்தில வருது.
அந்தப் பயபுள்ள எழுந்து ஓடினதும் கப்பலின் நிகழ்ச்சிகளின் இயக்குனர் வந்து எல்லோருக்கும் அவரோட பல பல முறை சொன்ன ஜோக்ஸை எங்களுக்கு முதல் முறையா சொல்றாப்ல சொல்லி அவரே சிரிச்சுகிட்டு ஒரு ஸ்டாண்டப் காமெடியனை அறிமுகம் செய்துட்டு போனார். அந்த ஆள் பாவம், ஆபாச ஜோக் சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம, “என்ன கொடுமை சரவணா”ன்னு தலைல அடிச்சுகிட்டே ஜோக் சொன்னான். அதையெல்லாம் இப்ப சொல்லப் போரதில்லை அதெல்லாம் சேத்து வெச்சு நானும் ஒரு நாள் மேடைல ஸ்டாண்டப் காமெடி செய்ய வேண்டி வந்தால் சொல்றேன்.
சரியாக 8:30 மணிக்கு எங்களுக்கு சாப்பாடு போடுவதாக டைம் தந்திருந்தார்கள். சரின்னு அந்த ஹோட்டலுக்குள்ள போனா, முக்காவாசி பேர் இந்தியர்கள், மீதி சீனர்கள். எங்களுக்கு சர்வரும் சீனன் அவனோட உதவியாளியும் சீனள்.
அவளுடைய வேலை சூப்பர் ஈசி.
அவள்: “மேம், வாட்டர்ர்ர்ர்ர்”
மாலதி: “யா, வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓஓஓ ஓகே ஒன் லெமனெட்”
நான் குறுக்கிட்டு: “நோ, ஷி வாண்ட் வாட்டர் வித் ஐஸ் அண்ட் லெமென்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், ஒன் லெமனெட் அண்ட் வாட்டர்”
நான்: “நோ, ஒன்லி வாட்டர் வித் லெமன் அண்ட் ஐஸ்”
அவள்: “ஓகே சர்ர்ர்ர், வாட்டர் அண்ட் லெமனெட், ஐஸ் க்ரீம் ஆஃப்டர் ஃபுட்.
மாலதி: “டு யூ ஹாவ் எனிதிங் அதர்தன் லெமனெட்”
அவள்: “மேம், யு வாண்ட் அனதர் லெமனெட்”
நான் (தமிழில்): “கிழிஞ்சுது போ, அம்மா, நீ இவகிட்ட அதிகம் பேசாதே, அப்புறம் அவ பேசரமாதிரி உன் இங்லீஷும் ஆகிடப் போகுது பாத்துக்க”
அவள்: “சர்ர்ர்ர் யு வாண்ட் சம்திங் டு டிரிங்”
நான்: “லெமனெட்”
அவள்: (முகமெல்லாம் பல்லாக) “ஓ, லெமனெட் வெரி குட்”
இவள் இப்படின்னா சர்வர் அதுக்கும் மேல ஒரு படி போயிட்டான். அவன் பெயர் ஜார்ஜ். சீனனுக்கு எப்படி ஜார்ஜ்ன்னு பேர் வெச்சாங்கன்னு எனக்குத் தெரியலை அதை அவன் கிட்ட கேட்டு அவன் சொல்ற பதில் எனக்குப் புரியரதுக்குள்ள மாதுரி காலேஜ்க்கே போயிடுவாளோன்னு பயம் வந்துடுச்சு.

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, ஆங்கிலம் சுத்தமா தெரியாம, இவங்க எல்லாம் என்ன தைரியத்தில அமெரிக்காவுக்கு வேலைக்கு வராங்கன்னு தெரியலை, நம்ம அப்பா அம்மா வராங்களேன்னு சொன்னா அவங்க இங்க வேலைக்கு வரலை (நம்ம வீட்டுல குழந்தைகளை பாத்துக்கர வேலைக்கு வராங்கன்னு சொல்லி சிண்டு முடியாதீங்க சொல்லிட்டேன்). நம்மளோட இருக்கரதுக்குத்தான் வராங்க அதனால அவங்களுக்கு நல்லா ஆங்கிலம் பேச வரலைன்னா பரவாயில்லை. இவங்க எல்லாம் இப்படி வரதுக்கு அவங்க வருமானமும், அவங்களோட சர்வைவல் எண்ணமும்தான்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுடன் நடந்த டைலாக்கை கொஞ்சம் காமெடிக்காக இங்க போட்டாலும், அந்தப் பெண்ணையும் ஜார்ஜையும் நினைச்சா பாவமாவும் இருக்கு, பாராட்டவும் தோணுது.
இப்படியாக எங்களின் முதல் நாள் கப்பலில் முடிந்தது.

அடுத்தப் பதிவில கோகோகே பீச்சுக்கு கூட்டிகிட்டு போய் சுத்தி காமிக்கறேன்.
-முரளி இராமச்சந்திரன்.

Tuesday, March 01, 2011

பஹாமாஸ் விஜயம் - 1

“எங்கள் பஹாமாஸ் விஜயம் (பாமா விஜயம் இல்லைங்க, தமிழ் ரொம்ப நுணுக்கமான மொழி அதனால நல்லா பார்த்து படிங்க) முதலில் பஹாமாஸுக்கு என்று ஆரம்பிக்கவில்லை. சும்மா ஒரு ரவுண்டு க்ரூய்ஸ் அதாங்க சொகுசு கப்பல்ல போய்ட்டு வரலாம்னு ஆரம்பிச்சது.”

“கோடிவீட்டு கோமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, பக்கத்து தெரு பரிமளா மாமி போயிட்டு வந்துட்டாஹ, எனக்கும் அவங்க மாதிரி நாலு எடம் போய் பார்க்கனும்னு ஆசை இருக்காதா, எல்லாம் என் தலையெளுத்து, என்னை நல்லா ஆசை ஆசையா வளர்த்து இப்படி ஒரு களிமண் பொம்மைகிட்ட மாட்டி விட்டுட்டாங்களே” ன்னு உங்க வீட்டுல சொல்ற மாதிரி என் வீட்டிலயும் சொன்னாங்கன்னு நீங்க நினைச்சா “சாரி அப்படி எந்த பிட்டும் போடாம, என் நண்பன் போன வருஷம் இப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வந்து எப்படி இருந்ததுன்னு சொன்னதும் எனக்கே அப்படி ஒரு ப்ரயாணம் போயிட்டு வரணும்னு தீ பிடித்துக் கொண்டது.”

ரிச்மண்ட்டில் சிலரிடம் பேசியபோது “அதுவா, அது ஒன்னும் காசு அதிகமான விஷயம் இல்லை, ஒரு 800$ல் எல்லோரும் போயிட்டு வந்துடலாம், சும்மா சூப்பரா இருக்கும்” என்று அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் விசிறிவிட்டார்கள். தீ கணன்று கணன்று எரிந்து, எந்த க்ரூய்ஸ் நல்லது, எதில் என்ன கிடைக்கிறது, நம் ப்ளானுக்கு எந்த க்ரூய்ஸ் ஒத்து வரும், என்றெல்லாம் பார்த்து பிறகு ஒன்றை முடிவு பண்ணினோம். அதுவரை இது கொஞ்சம் விலை அதிகமான ஒரு சமாச்சாரம் என்பது டிக்கெட் விலையை பார்க்கும் வரை உறைக்கவில்லை. பார்த்ததும் திடீர்ன்னு ஒரு பக்கெட் பச்சை தண்ணியை தலைமேல ஊத்தினா மாதிரி ஆயிடுச்சு. இதுக்குள்ள என் பெண்கள் ரெண்டு பேரும் அவங்களுக்கு தெரிஞ்சவங்க எல்லோருக்கும் இப்படி க்ரூயிஸ் போகப் போவதாக சொல்லிட்டதாக சொல்லவும், சரி நாமதான் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டோமேன்னு எங்களை சமாதானம் செய்து கொண்டுடோம் (வேற வழி). அதிலேயும் பால்கனி இருக்கனும், ரெண்டு கிங் பெட் இருக்கனும், அது இருக்கனும், இது இருக்கனும்னு வீட்டில எல்லோரும் பலப் பல கண்டிஷன்ஸ் போட்டு அதெல்லாம் இருக்கரமாதிரி ஒரு நல்ல சுப மூஹூர்த்த தினத்தில் டிக்கெட் புக் பண்ணினோம்.

என்னய்யா ஒரு ப்ரயாணத்திற்கு டிக்கெட் வாங்கிட்டு இப்படி அலுத்துகரான் இவன்னு சீப்பா நினைக்காதீங்க. டிக்கெட் வாங்கினதும்தான் தெரிஞ்சது பஹாமாஸ்ல சுத்தரதுக்கு தோதா நல்ல அரைநிஜார் இல்லை, அது இல்லை இது இல்லைன்னு சொல்லி ஒரு டப்பா சினிமால தனுஷ் பாடின மாதிரி ‘துண்ட காணோம் துணிய காணோம், தூங்கும் போது துட்ட காணோம்”ங்கர கதையா செலவுமேல செலவு செய்து ஒரு வழியா ப்ரயாணத்துக்கு தயாரானோம். இதர செலவுகளை கணக்கு பண்ணினா, ஆனை அரை காசு, அங்குசம் ஆறு காசுங்கர கதையானது ஒரு தனிப் பதிவே போடக்கூடிய சமாச்சாரம்.

நல்ல வேலையா இங்கிருந்து ஃப்ளோரிடாவில் கேப் கானவரல்ங்கர இடத்துக்கு எங்களோட வேனிலேயே போகலாம்னு முடிவு செய்தோம். இந்த இடத்தில இருந்துதான் அமெரிக்க விண்வெளி ராக்கெட்கள் செலுத்தப் படுகிறது. இவர்களுக்கும் நமக்கும் (இந்தியாவிற்கும்) என்ன வித்தியாசம்ன்னா இவங்க விண்வெளி ராக்கெட்கள் எப்போதாவது வெடிக்கிறது, நம்மூரில் எப்போதாவது வெடிக்காமல் விண்வெளிக்கு போகிறது. இதிலிருந்து தெரியும் உண்மை, இந்தியாவில்தான் நல்ல வெடிக்கும் ராக்கெட்டுகள் இருக்கிறது, பின்ன என்னங்க எத்தனை வருஷமா நாம தீபாவளிக்கு வெடிக்கர ராக்கெட், பூவாண ராக்கெட்ன்னு விட்டுகிட்டு இருக்கோம். இவ்ளோ செலவு பண்ணி ஒரு ராக்கெட் வெடிக்காம சும்மா மேல போனா, பாக்கரவன்லாம் என்ன கேணையங்களா.

எல்லா ஏற்பாடுகளும் செய்யரதுக்கு முன்னாடி, என் மனைவியும் குழந்தைகளும் ஒரு கவுண்ட் டவுன் காலெண்டர் தயாரித்து தினம் ஒரு நாளை அடித்து அடித்து அவங்க பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். இதுக்கு நடுவில நானும் கோபால் பல்பொடி விக்கரவன் மாதிரி வாரா வாரம் ஊர் ஊரா போய் வாரக் கடைசியில் வீட்டிற்கு வந்ததும் முதலில் அந்த காலெண்டரைப் பார்த்து இன்னும் எத்தனை நாள் இருக்கு என்று என் பங்கிற்கு கொஞ்சம் ப்ரெஷர் ஏத்தி விட்டேன்.

இதற்கு நடுவில் நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த வேலை ஒரு வாரம் முன்னாடியே முடிந்துவிட என்னை ப்ரயாணம் போக இருந்த வாரம் தலைநகரத்தில் வேலை செய்ய சொல்லி அனுப்பிவிட்டார்கள். வேலை ஒன்னும் பெரிசில்லை பிடிங்கின ஆணிகள் சரியா வந்து சேர்ந்ததா, ஆணி கணக்கு சரியா இருக்கா, சேதாரம் எவ்வளவு, செய்கூலி எவ்வளவுன்னு கணக்கு போட்டு கணக்கு போட்டு எல்லாம் சரியா இருக்கா, இல்லைன்னா என்ன ஆச்சுன்னு கதை விட்டு காதுல பூசுத்தர வேலை. காலைல 8:30க்கு ஆஃபீஸ் உள்ள போனா ஹோட்டலுக்கு திரும்பி போக இரவு 10-10:30 ஆகிடும். இதுக்கு நடுவில அந்த வாரம் பனி மழை பொழியப் போகுதுன்னு சொல்லப்பட வீட்டுல எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள் - அது என்ன எதுக்கெடுத்தாலும் எல்லாரும் சொல்றாங்க, சொன்னாங்க ன்னு எல்லாரும் சொல்றாப்பல நீயும் எல்லாரும்னு சொல்ல வரேன்னு நீங்களும் சொல்லாதீங்க, அப்புறம் யார் அந்த எல்லாரும்னு, எல்லாரும் கேக்கர மாதிரி நானும் கேட்பேன். மேல என்ன எழுதினேன்னு எனக்கே புரியலை உங்களுக்கும் புரியலைன்னா கவலைப் படாதீங்க. அடுத்து படிங்க.

என்ன சொல்லிகிட்டு இருந்தேன், வீட்டுல கவலைப் பட ஆரம்பிச்சாங்கன்னுதானே, கரெக்ட், ஆனா அவங்க கவலைப் பட்டது நான் எப்படி தலைநகரத்தில இருந்து கொட்டர பனில வீடுவருவேன்னு இல்லை, எப்படி ப்ரச்சனை இல்லாம கப்பல்ல போகப் போறோம்ன்னு. என்ன, எல்லா வீட்டிலயும் இதே கதைதானா. சரி சரி அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம். ஒருவழியா ஒரு 8 மணிநேரம் ப்ரயாணம் செய்து தலைநகரத்தில இருந்து ஃப்ளோரிடா போக இருந்த தினத்திற்கு முன் தினம் வீடு வந்து சேர்ந்தேன். மட மட வென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து மறுதினம் மதியம் கிளம்பி மேளதாளங்கள் எதுவும் இல்லாமல், நான் எப்போது ஊருக்கு போனாலும் வீடு வரை வந்து கண்டிப்பாக இவன் ஊருக்கு போகிறானா, குறைந்த பட்சம் 10 நாளாவது இவன் தொல்லை இல்லாமல் இருக்கலாமா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் என் ‘ஆத்மார்த்த’ நண்பர்களும் வழியனுப்பாமல் ஃப்ளோரிடா நோக்கி எங்களது ரதத்தை செலுத்தினோம்.

மறுதினம் மதியம் சொகுசு கப்பல் கிளம்பர போர்ட்டுக்கு பக்கத்திலேயே ஒரு நல்ல தங்கும் இடம் போய் சேர்ந்தோம்.

பக்கத்தில் இருந்த பீச்சில் காலார நடக்கும் போது ஒரு ஸ்டிங் ரே கிடக்க, அதை தொட்டால் ‘கதை கந்தலாயிடும்’ என்று மனைவியும் குழந்தைகளும் பயப்பட, அதி பயங்கர தைரியசாலியான நான் அவர்களுக்காக என் தைரியத்தை மறைத்துக் கொண்டு ஒரு புகைப் படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். ஒரு சின்ன நடுக்கம் கூட இல்லாமல் எப்படி துல்லியமாக படமெடுத்திருக்கிறேன், என்னை பார்த்து பயம் பயந்து ஓடிடும்.
இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட்டமாக இருந்து விட்டு மூன்றாம் நாள் மதியம் மேலே இருக்கும் கப்பலுக்கு போய் சேர்ந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, February 24, 2011

பஹாமாஸ் பயணம்

முரளி: "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த கதை தெரியுமா?
தெரியாதா, எனக்கும் தெரியாது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் சமீபத்தில் க்ரூஸ் அதாங்க சொகுசு சுற்றுலா (தப்பா படிச்சுட்டு "என்னாது, சொகுசு சுந்தரியா"ன்னு கேக்கக் கூடாது) பஹாமாஸ் போய் வந்த கதை நாளைக்கு வெளியிடப் போறேன்".

நாகு: "நாளைக்கா!"

முரளி: "உடனே நாளைக்குன்னா நாளைக்கா, ம்ம்ம்ம் நாளான்னிக்கு, ஹும்ம்ம் அதுக்கு மக்கா நாள்ன்னு வெச்சுக்கங்க எழுதி ஒரு ரெண்டு பதிவு, போட்டு வாங்கிடலாம்னு இருக்கேன். உடனே ஊருக்கு போகனும், ஆஃபீஸ்ல ஆணி புடுங்கணும், தமிழ் சங்க விழாவில தட்டி தட்டி கைவலிக்குது, விசிலடிச்சு வாய் வலிக்குது, சாப்பிட்டு சாப்பிட்டு வயிறு வலிக்குதுன்னு சொல்லாம, மருவாதையா படிங்க, ரசிங்க, பின்னூட்டமிடுங்க சரியா".

-முரளி இராமச்சந்திரன்.

Wednesday, February 23, 2011

தமிழ் தாத்தா உ .வே. சா. - வறுமையிலும் செம்மை (பகுதி 2)

(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

மகன் சாமிநாதய்யரின்  வற்புறுத்தல் காரணமாக தந்தையார் தன் மகனை தமிழ் படிக்க அனுமதித்தாரே  தவிர அவருக்கும் அதில் பூரண சம்மதம் இல்லை. ஆங்கில படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்துக்கு மகனை அனுப்பினால் குடும்பம் வயிறாரச் சாப்பிடலாம் என்று எண்ணினார். அந்த நிலையில்தான் தன் மகனை அரை மனதோடு தமிழ் படிக்க அனுமதித்தார்.

ஐயரின் தந்தையார் வேங்கடசுப்பையர் பலருடைய உதவியில் வாழ்ந்து கொண்டிருந்தார். நிலையான வருமானம் இல்லை. குடும்பத்துக் கடனை அடைக்க என்றோ தானமாக வந்த நிலத்தை ஈடு வைத்துத்தான் அவருடைய சீமந்த கல்யாணம் நடந்தது. அந்த கடன் ரூபாய் 500 ரூபாயை வட்டியுடன் சேர்த்து 730 ரூபாயாக பல வருடங்களுக்கு பிறகு சாமிநாதய்யர்தான் அடைத்தார். அந்த அளவுக்கு கைக்கும் வாய்க்குமாகத்தான் அவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து  வந்தார்கள்.

ஆகையால் ஆர்வம் காரணமாக தமிழ்க்கல்வி தொடங்கினாலும் அதற்காக அதிக செலவு செய்ய வழியில்லை . ஐயருடைய தந்தையாருக்கு நன்கு தெரிந்த சடகோபய்யங்கார் தமிழ் கற்பிக்க முன்வந்தார். அரியலூர் சடகோபய்யங்கார் நல்ல தமிழறிஞர். பல நாடகங்களை எழுதியிருக்கிறார். அவருடைய குடும்பத்தில் பல முன்னோர்களும் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். அவர் எழுதிய சிவராத்திரி மகாத்மியம் என்ற நாடகம் அந்த நாட்களில் பல முறை மேடை ஏற்றப்பட்டது. . வைணவரனாலும் சமய சமரச நோக்கம் கொண்டவர்.

சாமிநாதய்யர் சில வருடங்கள் சடகோப ஐயங்காரிடம் தமிழ் கற்றார். ஐயரின் ஆர்வத்தையும் எளிதில் படித்தறியும் ஞானத்தையும் கண்டு வியந்து அவரை மேலும் பெரிய தமிழறிஞர்களிடம் சென்று தமிழ் கற்க கூறினார். அவர்.  அவருடைய முயற்சியில் அன்று பிரபலமாக இருந்த தமிழ் அறிஞரான திரிசரபுர மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் கல்வி கற்பது என்பது அன்றைய நிலையில் ஒரு கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றதற்கு சமம் என்று கூறுவார்கள் அந்த பெருமை  சாமிநாதய்யருக்கு கிடைத்தது. ஐயர் பிள்ளையவர்களுடன்  தங்கி இருந்து பாடம் கற்க வேண்டும் என்று ஏற்பாடாகி இருந்தது.
    
பிள்ளையவர்கள் அடிக்கடி திருவாவடுதுறை ஆதினத்து மடங்களுக்கு செல்வார். சென்ற இடத்தில் பல நாள் தங்குவார் சாமிநாதய்யரும் அவருடன் சென்று தங்கி பாடம் கேட்பார்.

எல்லா பாடங்களும் சுவடிகளைக்கொண்டுதான். பிள்ளை அவர்களுக்கு பல புராணங்கள் மனப்பாடமாகத் தெரியும், அவரே இருபது தலபுராணங்களை இயற்றியிருக்கிறார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையும் வறுமையில் வாழ்ந்தவர்தான்.  சைவமடங்கள் கொடுத்த பொருளுதவியைக் கொண்டுதான் அவர் வாழ்ந்தார்.

பல மாதங்கள் பிள்ளை மாயவரத்தில் தங்கி இருந்தார். சாமிநாதய்யரும் அவரோடு தங்கி தமிழ் படித்து வந்தார். அன்றைய குல ஆச்சாரப்படிசாமிநாதய்யருக்கு பிராமணர் ஒருவர் வீட்டிலிருந்து உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பாத்துரை என்ற அந்த பிராமணருக்கு மடத்திலிருந்து அரிசி முதலிய பொருட்களை கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்திலோ மடத்திலிருந்து அரிசி மற்ற மளிகைப் பொருட்கள் அப்பாத்துரை ஐயர் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. 

சில மாதங்களுக்குப் பிறகு ஐயர் பிள்ளையவர்களுடன் வேறு ஊருக்கு புறப்படவேன்டியதாயிற்று. தான் உணவு சாப்பிட்ட வீட்டிற்கு எந்த கைம்மாறும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அவரை உறுத்தியது. அப்பாத்துரை ஐயரை நேரில் பார்த்து மடம் கொடுக்க ஒப்புக்கொண்ட அரிசி மற்ற மளிகைப்பொருளை பெற்றுத் தருவது பற்றி பேசினார். சாமிநாதய்யர்  தான் ஊருக்கு செல்வதற்கு முன் எதுவும் நடக்கப்போவதில்லை என்று உணர்ந்தார்.அந்த நாட்களில் உள்ளாடை அணிவதற்காக ஆண்கள் இடையைச் சுற்றி அணியும் ஒரு கயிறு.  பிராமணசிறுவர்களுக்கு உபநயன நாளில் வெள்ளியால் செய்த இந்த கயிற்றை மாமன் சீராகக் கொடுப்பது வழக்கம். தன் இடையில் கட்டியிருந்த வெள்ளி அரைஞான் கயிற்றை கழற்றி அப்பாத்துரை ஐயரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு தனக்கு சில மாதம் உணவு அளித்ததற்கு மாறாக அதை விற்று பணத்தை எடுத்தக் கொள்ளும்படி வேண்டினார்.

ஆனால் அப்பாத்துரை ஐயர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். "எனக்கு அந்த அளவுக்கு பணம் முக்கியம் இல்லை. நீ ஊருக்குப் போய் உன் தமிழ்ப் படிப்பை தொடர்ந்து படித்து முன்னேறினால் போதும்", என்று பெரிய மனதோடு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். பிற்காலத்தில் அப்பாத்துரை ஐயர் குடும்பத்திற்கு ஐயர் சில உதவிகளை நன்றியுணர்வோடு செய்தார்.

கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் பொறுப்பை ஏற்ற பிறகு நேரம் கிடைத்தபோதெல்லாம் சுவடிகளை தேடி பல ஊர்களுக்கு போனார். சுவடி தேடி அவர் செய்த பயணத்தில் அவருடைய கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லலாம்.

பழங்காலத்தில்  புலவர்கள் வாழ்ந்த சிற்றூர்கள், ஜமீன்தார்கள் இல்லங்கள், இப்படியாக பல ஊர்களுக்கு போனார். மருத்துவம் செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள், புலவர்களின் சந்ததியினர், இப்படி பலதரப்பட்ட மக்களை சந்தித்தார். பலர் செய்த உதவியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான சுவடிகளைச்  சேகரித்தார்.

மருத்துவம், சோதிடம் தொடர்பு உடைய நூல்கள் உள்ளிட்ட பல்துறை சார்ந்த சுவடிகள் அவருக்கு கிடைத்தன. தலபுராணம், சமயம் சார்ந்த பல நூல்கள், இலக்கியங்கள் ஆகியவை அதிகமாகக் கிடைத்தன. சீவகசிந்தாமணி என்ற சமண சமய இலக்கியத்தை இருபது இடங்களிலிருந்து கிடைத்த பல பிரதிகளை ஒப்பிட்டு அச்சில் ஏற்றி புத்தகமாக வெளியிட்டார்.

அந்த நாட்களில் பெரிய புத்தகத்தை அச்சிட்டு வெளியிட தகுந்த அச்சகங்கள் சென்னையில்தான் இருந்தன.ஆகையால் புத்தகம் அச்சாகும் வேலையை கவனிக்கவும் புருப்  படித்து திருத்தி கொடுக்கவும் ஐயர் அடிக்கடி கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வர வேண்டியதாயிற்று. சீவகசிந்தாமணி என்ற நூலை அச்சிட பல தமிழன்பர்களின் உதவியை நாடினார். சில பேரிடமிருந்து மட்டுமே உதவி கிடைத்தது. ஒரு கட்டத்தில் அச்சாகி பிரஸ்ஸில் இருந்த புத்தகத்தை எடுக்கவேண்டியிருந்தது. அச்சகத்துக்கு அச்சுக்கூலி கொடுக்க சாமிநாத அய்யரிடம் பணம் இல்லை. இதுபோன்ற நேரங்களில் அவர் கடன் வாங்கி சமாளிப்பது வழக்கம். ஏற்கனவே கடன் சுமை அதிகமாகிவிட்டது.. அச்சுக்கூலியைக்கொடுத்து புத்தகத்தை எடுத்து வெளியிட அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஆழ்ந்த யோசனைக்கு பிறகு தனக்கு  பாண்டித்துரை தேவர் கௌரவிக்கும் வகையில் போர்த்திய பொன்னாடை பற்றிய நினைவு வந்தது.

விலை உயர்ந்த பொன்னாடை அது. அந்த பொன்னாடையை எடுத்துக்கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்த சுப்ரமணிய தேசிகரிடம் காட்டி இது என்ன விலைக்கு போகும் என்று கேட்டார். அதிர்ச்சி அடைந்த தேசிகர் ஏன் இதை விற்கப் போகிறீர்களா?இது தேவர் போர்த்திய பொன்னாடை அல்லவா என்று கேட்டார். எனக்கு வேறு வழி தெரியவில்லை அச்சகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று ஐயர் கூறினார். நீங்கள் இதை விற்ற செய்தி தேவருக்கு தெரிந்தால் அவர் மிகுந்த வேதனை படுவார்  என்று கூறினார் ஆதீனகர்த்தா. அந்த பொன்னாடையை விற்கவிடாமல் தடுத்து ஆதீனகர்த்தா தானே வாங்கி வைத்துக் கொண்டார். தற்காலிகமாக அய்யருக்கு பண உதவி செய்து நூல் வெளியிட ஏற்பாடு  செய்தார்.

இப்படி பல சோதனைகளுக்குமிடையே தான் அய்யர் தமிழ் நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்த பழந்தமிழ் நூல்களை அச்சில் ஏற்றி புத்தகமாக வெளிக்கொணர்ந்தார்,. .மிகப்பிற்காலத்தில்தான் சாமிநாதய்யருடைய பணிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்காக அவர் கொடுத்த விலை அதிகம்.

வெளிநாட்டில் வாழ்ந்த சில தமிழறிஞர்கள் அய்யரின் அரிய பணியை பாராட்டினார்கள். ஜூலியஸ் வின்சோன் என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஐயர்  பதிப்பித்த நூல்களைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ஜி..யு. போப் அவர்களும் அய்யரைத் தொடர்பு கொண்டு பாராட்டு கடிதம் எழுதினார்.

சாமிநாதய்யருடைய பணியின் சிறப்பையும் அந்த பணியை நிறைவேற்றுவதில் அவர் சந்தித்த சோதனைகளையும் பற்றி பாரதியார் நன்கு அறிந்திருந்தார். அய்யருடைய தமிழ்ப்பணியின் பெருமையை வெள்ளையர் அரசாங்கம் உணர்ந்து அவருக்கு டாக்டர் பட்டமும் மற்ற சில விருதுகளும் வழங்கியது. ஆனால் அவர் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்ததையும் பாரதியார் அறிந்திருந்தார். சாமிநாதய்யருடைய பெருமையை பாரதியார் இப்படி பாடினார்.

சாமிநாதய்யருடைய புகழ் வளர்ந்ததில் அதிசயம் ஏதும் இல்லை. சூரியனுக்கு ஒளிஇருப்பது அதன் இயற்கை. தேவர்கள் அமரத்வம் பெற்றது இயல்பானதுதான், இதில் அதிசயப்பட எதுவும்.இல்லை. அதுபோலவே சாமிநாதய்யருக்கு புகழ் வளர்வதும் இயல்பானதுதான் என்று பாரதியார் பாடினார். தமிழறியாத அன்னியரான வெள்ளையரே இப்படி ஐயரை புகழ்ந்தார்கள் என்றால் சங்கம் வைத்து தமிழ்  வளர்த்த பாண்டிய மன்னர் காலத்தில் ஐயர் வாழ்ந்திருந்தால் அவருடைய பெருமை எப்படி இருந்திருக்கும் என்று பாரதி கேட்கிறார்.

மேலும் ஐயருக்கு ஆறுதல் கூறுவதுபோல அடுத்த கவிதையில் கூறுகிறார். பணம் இல்லையே, பலவகை சுகங்களை அனுபவிக்கும் இனிய வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை வேண்டாம் ஐயரே. உங்களுக்கு ஒரு பெருமை உண்டு. பொதியமலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் கொடுத்த தமிழ் மொழி உள்ளவரை புலவர்கள் வாய் உங்களை வாழ்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு இறப்பு என்பதே இல்லை.என்று பாரதியார் பாடுகிறார். இப்பொழுது பாரதியார் பாட்டை பார்ப்போம்.

 நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம்  என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே.

                                                                            - மு.கோபாலகிருஷ்ணன்
(உ.வே.சா. பகுதி 1 இங்கே... )

Monday, February 21, 2011

நாளின் நிறம்



பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

--கவிநயா

பி.கு. நாகு ரொம்ப வருத்தப்பட்டாரேன்னு, இப்போதான் எழுதிய கவிதை இங்கே... சுடச் சுட... :)

Sunday, February 20, 2011

குற்றுயிரும் குலையுயிருமாய்...


நேற்று சும்மா முயற்சி செய்து பார்க்கலாம் என்று நம் வலைப்பதிவில் வலது பக்கம் 'அந்த நாள் ஞாபகம்' என்று ஒரு பகுதியைச் சேர்த்தேன்.  அந்தப் பகுதியில் நம் பதிவுகளில் இருந்து சீட்டு குலுக்கல் முறையில் (randomக்கு தமிழில் என்ன) ஒரு ஐந்து பதிவுகளைப் பொறுக்கி காண்பிக்கப்படும். ஏன் என் பதிவு தெரியவில்லை என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். அந்த ராண்டம் பகவானிடம் முறையிடுங்கள். பல பழைய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹூம்... ஆஹா ஓஹோ என்று இருந்த பதிவு இப்படி கேட்பாரற்று கிடக்கிறது என்று வருத்தமாக இருந்தது. என்ன செய்ய? எழுதிக்கொண்டிருந்த ஒரு சிலரும் தனிக்கட்சி பிடித்துப் போய்விட்டார்கள். எழுதுங்கள், எழுதுங்கள் என்று நான் தொந்திரவு செய்வதால் நீர்வைமகள் பார்க்குமிடங்களில் எல்லாம் ஓடி ஒளிகிறார்.  ஏதோ அந்த கோபாலகிருஷ்ணர் தயவிலும், மீனா, முரளி தயவிலும் கொஞ்சம் உயிர் காட்டுகிறது. பரதேசியை வேண்டுமென்றே விட்டிருக்கிறேன். என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் :-)

படிப்பவர்களும் தங்களுக்கு முடிந்த மொழிகளில் - ஆங்கிலமோ, உருதுவோ, அரபியோ, ஹிந்தியோ - பின்னூட்டம் இட்டால் - எழுதுபவர்களுக்கும் எழுதுபவர்களைத் தேடும் எனக்கும் கொஞ்சம் தெம்பாயிருக்கும். அதுவும் மு.கோ.விடம் தென்னிந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் கோபால் பல்பொடிக்கு அடுத்ததாக பாவிப்பது நம் பதிவுத்தளம்தான் என்று ஜல்லியடித்து வைத்திருக்கிறேன். அனலிடிக்ஸ் கிராபிக்ஸ் காட்டு என்று அவர் கேட்காமலிருக்கும்வரை அந்த பஜனை நடக்கும். ஆனாலும் மனிதர் கலக்குகிறார். தமிழ் இசை, இலக்கிய உலகின் நடமாடும் சைக்ளோபிடியாவாக இருக்கிறார் அவர்.

கல்கியின் பொன்னியின் செல்வன் இணையத்தில் இன்னும் பிரபலமாக இருக்கிறது. சில புண்ணியவான்கள் அந்த புத்தகத்தை இந்த காலக் கருவிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். உங்கள் ஆப்பிள் கருவிகளில் நிறுவிக் கொள்ள இந்த தளத்தில் பாருங்கள். ஆன்ராய்ட் கைப்பேசியில் வேண்டுமானால் இக்கட சூடு. படங்களும் உண்டா என்று நொட்டைக் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது. படங்கள் புத்தக வடிவிலேயே இல்லை. வேண்டுமானால் திருச்சி நெல்லித் தோப்பில் பாருங்கள். யாராவது கல்கியில் வந்த தொடரை பைண்ட் பண்ணி வைத்திருக்கலாம். முக்கியமான விஷயம். இந்தக் கதை ஆரம்பிப்பது நான் வளர்ந்த திருமுனைப்பாடி நாட்டினில். அதுவும் ஊழல் ஓங்கி வளர்ந்த வீராண ஏரிக்கரையில் :-)

ஆப்பிள் கருவிகளில் திருக்குறள், ஆத்திச்சூடி எல்லாம் கிடைக்கிறது. நம் பதிவுகள் போல படிக்கத்தான் ஆளில்லை. :-)

Thursday, February 10, 2011

தமிழ்த்தாத்தா உ. வே. சா.

தமிழ்த்தாத்தா உ. வே. சா.

- மு.கோபாலகிருஷ்ணன்

தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுடைய பிறந்தநாள் பிப்ரவரி மாதம் 19ம் தேதி வருகிறது. 155 ஆண்டுகளுக்கு முன் 1855ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார் . குடும்பத்தில் எல்லோருக்கும் சங்கீதம்தான் பிழைப்பாக இருந்தது.

ஐயர் தன்னுடைய சிறிய தகப்பனாரிடம் ஹரிகதா காலட்சேபம் செய்ய பயிற்சி பெற்றார் .ஆனால் ஐயருக்கு தமிழ் படிக்க வேண்டுமென்று ஆவல். குடும்பத்தில் உள்ளவர்கள் அவருக்கு ஆங்கில கல்வி கொடுத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பினார்கள். வேறு சிலர் சங்கீதத்தில் ஈடுபடும்படி அவருக்கு அறிவுரை கூறினார்கள். எல்லோருடைய விருப்பத்துக்கு மாறாக பிடிவாதமாக தமிழ் கற்பதுதான் தன் நோக்கம் என்று கூறி தந்தையாருடைய சம்மதத்தை பெற்று தமிழ் கல்வியில் ஈடுபட்டார்.

ஐயர் அப்படி பிடிவாதமாக தமிழ்க்கல்வி கற்க முனைந்தது தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய பேறாக அமைந்தது என்பதை கணக்கிட்டு சொல்ல முடியாது. அவர் கல்வி கற்கத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டு மத்திய காலத்தில் தமிழ்க்கல்வி கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் ஏட்டுச்சுவடிகள் மூலம்தான் கற்பிக்கப்பட்டது. அந்த சுவடி பற்றியும் சுவடிக்கல்வி முறை பற்றியும் தெரிந்தால்தான் சாமிநாதய்யரின் தமிழ்ப்பணியின் பெருமையை புரிந்து கொள்ள முடியும். கணினி மூலமும் அச்சிடப்பட்ட புத்தகத்தின் துணையோடும் கல்வி பெறும் இந்நாளில் அன்றைய நிலை பற்றி கற்பனை கூடச்செய்ய முடியாது. அச்சுக் கலை அப்பொழுதுதான் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அன்று அச்சகங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவ மிஷனரிகள் வசம்தான் இருந்தன அச்சாகும் நூல்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அரசாங்கம் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆகையால் அன்றைய நிலையில் புத்தகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருந்தது.

பள்ளிக்கல்விக்கு இன்று உள்ளதுபோன்று நோட்டு புத்தகங்கள் கிடையாது. செய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.

எழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எழுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.

அப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.

ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா

என்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.

நாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.

படிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .

கல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.

இப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.

அடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.

பல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.

தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். .சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. .பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி
குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.

சுவடி எழுதியவர்கள் எத்தனை தவறு செய்திருக்கிறார் எத்தனை சொற்களை விட்டிருக்கிறார் என்று தெரியாது. பல புலவர்கள் எழுதிய சொற்களை திரித்தும், தவறாகவும் எழுதப்பட்டது. பல நூற்றுக்கணக்கான நூல்கள் அழிந்துபோய்விட்டன. தப்பித் தவறி சைவமடங்களில் அகப்பட்டுக்கொண்ட மாற்றுச் சமய நூல்கள் கவனிப்பாரின்றி அழிந்து போயின. மிகச் சிறிய அளவிலான சுவடிகள் மட்டுமே காப்பாற்றப்பட்டன. அந்த நாட்களில் யாரிடமாவது நூல் ஒன்றின் சுவடிப்பிரதி இருப்பதாக அறிந்தால் பலர் அவரை நாடி வந்து கையால் எழுதி பிரதி எடுத்துச் செல்வார்கள.

வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி என்ற நூல் ஓலைச் சுவடியில் இருந்தது. அந்த சுவடிப்பதிப்பை பெற பெர்சிவல் என்ற கிறிஸ்தவப் பாதிரியார் 19ம் நூற்றாண்டில் ரூபாய் 150 கொடுத்து வாங்கினார். அந்த நாட்களில் ரூபாய் 150 எவ்வளவு பெரிய தொகை என்பதை நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. அந்த காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் நஞ்சை நிலம் ஒரு ஏக்கர் விலை ரூபாய் 500 ஆக இருந்தது. 150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பதை அனுமானம் செய்து கொள்ளலாம்.

சுவடியை எழுதவதும் எழுதிய சுவடியை காப்பாற்றுவதும் கடினமாக இருந்ததால்தான். கல்வி என்பது அந்த நாட்களில் மனப்பாடம் செய்யும் முறையைச் சார்ந்து இருந்தது. இந்த சூழலில்தான் தமிழுக்கு பணி செய்வதற்காக சாமிநாதய்யர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அழிந்து கொண்டிருந்த சுவடிகளை காப்பாற்றி அவற்றை புத்தக வடிவில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். சுவடிகளை தேடி அவர் தமிழ்நாடு முழுவதும். பயணம் மேற்கொண்டார். ரயிலில் ,கட்டைவண்டியில் ,வண்டி செல்ல சாலை வசதியில்லாத இடங்களில் கால் வலிக்க நடந்து சென்று ஊர் ஊராக போய் கண்ணில் பட்டசுவடிகளை எல்லாம் கொண்டு வந்தார். பலர் சுவடிகளை கொடுத்து உதவினார்கள். .பலர் கொடுக்க மறுத்துவிட்டனர். இப்படி அரும்பாடு பட்டுஅவர் சேமித்த சுவடிகளிலிருந்து பல பழைய நூல்களை புத்தக வடிவில் பதிப்பித்தார்.

ஐயர் சேமித்த பல ஆயிரம் சுவடிகள் இன்றும் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருக்கிறது. இன்று அரசாங்க உதவியோடு இயங்கும் உ. வே. சாமிநாதய்யர் நூல் நிலையம் சென்னை அடையாறில் செயல்படுகிறது. பழைய நூல்களை பதிப்பிக்கும் முயற்சியில்.இன்றும் அந்த நூல்நிலையம் தொடர்ந்து செயல்படுகிறது. .

Thursday, February 03, 2011

மீனாவுடன் மிக்சர் 23 - {ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம்}

முதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு!


கல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா?' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்? இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது! எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.

இதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு? பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா?' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா? எப்போ?' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.

'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்?)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.

இமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம்? எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு! "என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன்? கை நாட்டு போடவா கூப்பிடறாங்க? என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்சு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.

சரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன!

ஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு?) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்? அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.

இதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன? ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே! ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.

என் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே!

இனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராயறதை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை? இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல்? ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ? அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.

பூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது? நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.

ஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு! நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது?

இப்ப என்ன? பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க? அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா? இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.

-- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்

-மீனா சங்கரன்

Tuesday, January 18, 2011

கொலுவ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆ!!! – 2

(கைப்பிள்ளை (வடிவேலு) மற்றும் அவருடைய இரண்டு அள்ளக் கைகளுக்கும் இடையில் நடக்கும் ஒரு சிறிய உரையாடல். இதை வின்னர் திரைப்படத்தில் தேடவேண்டாம். ஆனால் கைப்பிள்ளை வடிவேலுவின் குரலில் படித்து பார்க்கவும்.)

கைப்பிள்ளை கை கால்கள் கோணிக்கொண்டு தடுமாறி தடுமாறி நடந்து வந்து ஸ்டார்பக் கடை ஒன்றின் உட்புறம் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்கிறார். அவருடைய அள்ளக் கைகள் இருவர் தயங்கி தயங்கி அவர் அருகில் வருகின்றனர்.

கை.பி: “அம்ம அம்ம, யப்பா, எப்பிடி அடிக்கராங்க, ஹும் ஒரு பச்ச புள்ளையாச்சே, இத இப்படி அடிக்கரமேன்னு ஒருத்தருக்கும் தெரியலையே”
பேசியபடியே திரும்பி பார்க்கிறார், அள்ளக் கைகள் வருவது தெரிகிறது. “என்ன, எப்படி அடி பட்டு இருக்குதுன்னு பாக்கரீங்களா?”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அவிங்க நீங்க ஒரு பச்ச புள்ளைன்னு அடிக்கல”

கை.பி: “பொறவு”

அ.கை-1: “கைப்புள்ளன்னு அடிக்கராங்கண்ணே”
அவர்களை பார்த்து கோபமாக கையை ஓங்கி அடிக்க வருகிறார், வலி தாங்காமல் கையை இழுத்துக் கொள்கிறார்.

கை.பி: “எனக்கு வர கோவத்துக்கு உங்களையெல்லாம் மர்டர் பண்ணிடுவேன் பீ கேர்புல், இடியட் ஆஃப் த ஸ்டுபிட் ஆஃப் தி நான்சென்ஸ்”

அ.கை-2: (ரகசியகுரலில்) “ஏய் இது பேசரது ஏதாச்சும் புரியுதா”

அ.கை-1: (அதே ரகசியக் குரலில்) “நமக்கு அடுத்து ஒரு குடாக்கு கிடைக்கர வரை இதோடதான் காலந்தள்ளனும், அதனால வாய மூடிகிட்டு இரு”

கை.பி: “ஏய்ய்ய் அங்க என்ன குசு குசுன்னு பேச்சு”

அ.கை-1: “அது ஒன்னும் இல்லை அண்ணே, கொலு பத்தி நீங்க எழுதின பதிவுக்கு மூமூமூனு பேர் பதில் எழுதியிருக்காங்கன்னு சொல்லிகிட்டு இருந்தேன், அவ்வளவுதான்”.

கை.பி: “மூமூமூனு பேரா, சொல்லவேயில்ல, எப்பவும் நாகு மட்டும் தான படிப்பாரு, என்ன ஆச்சு மக்களுக்கு, சரி சரி படிங்க”

அ.கை-1: சலித்தபடி “என்னத்த படிக்கரது”

கை.பி: “ஏய்ய், என்ன வாய்ஸ் டவுன் ஆகுது”

அ.கை-1: “அதில்ல அண்ணே, அதையெல்லாம் வெறும படிக்கக்கூடாது, அனுபவிச்சு படிக்கனும்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “சரி சரி ரொம்ப மொக்கை போடாம படி”

அ.கை-1: “முதல் பதில் நம்ம மீனா வீரப்பன் எழுதியிருக்காங்க”

கை.பி: “அப்படியா!, அப்படி போடு அருவாள, படி படி கேக்கலாம்”

அ.கை-2: ‘உங்க வீட்டு கொலு போலவே உங்க பதிவும் நல்லா இருக்காம்”

கை.பி: (அ.கை-1 சொன்னதை கேட்டவுடன் ஒரு மயக்க நிலையில்) “ரியலி, போதுண்டா போதுண்டா ரொம்ப புகழராங்க”

அ.கை-1: ‘ஆமாம் அண்ணே அதுதான் நானும் நினைச்சேன்”

கை.பி: (அவன் சொல்வதை கவனிக்காது) “ம் மேல படி”

அ.கை-2: “அடுத்து நம்ம மு.கோ. இந்தியாவில இருந்து எழுதியிருக்காரு”

கை.பி: (பரபரப்பாக) “மு.கோ வா!, படி படி”

அ.கை-1: “உங்க பதிவு ப்ரமாண்டமாம், உங்க வீட்டு கொலுவைப்போலவே, அதோட ....” என்று இழுக்கிறான்

கை.பி: (எரிச்சலாக) “என்னடா, அதோட ன்னு இழுக்கர”

அ.கை-1: “அதில்ல உங்க மனசும் உங்க பதிவும் கொலுவும் போல ப்ரமாண்டமாம்”

கை.பி: “ஏண்டா நிஜமாவே அப்படியா எழுதியிருக்காரு”

அ.கை-2: “ஆமாண்ணே, வேனா நீயே படிச்சு பாரு”

கை.பி: “அதில்லடா, இந்த ஊரு இன்னமுமா நம்மள நம்பிகிட்டு இருக்கு”

அ.கை-1: “அத விடுங்க அண்ணே, அடுத்தது யார் எழுதியிருக்காங்க தெரியுமா”

கை.பி: “அது தெரியாதா நம்ம நாகுவா இருக்கும், எப்ப்புடி!”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே”

கை.பி: “போதும் மூடிக்கிட்டு மேல படி”

அ.கை-1: “உங்க தலைவர் பதவி பாரம் இப்ப இல்லைங்கரதுன்னால நிறைய எழுதுவீங்கன்னு எதிர் பாக்கரார்”

கை.பி: (சலிப்பாக ) “அது சரி”

அ.கை-1/2: (கோரஸ்ஸாக) “என்ன அண்ணே சலிச்சுக்கரீங்க”

கை.பி: “பின்ன என்னடா, இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிடராங்க, வெளில வாசல்ல பாத்தா சொல்லி சொல்லி அடிக்கராங்க”

அ.கை-1: "அப்படின்னா ஏன் எழுதறீங்க"

கை.பி: "டேய், ஒரு எழுத்தாளரா இருக்கரது என்ன பெரிய பதவி தெரியுமா, அது உங்கள மாதிரி அள்ளக் கைகளுக்கு எங்க தெரியப் போவுது"
அ.கை-1: “அது சரி அண்ணே, ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தடயம்ன்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சீங்களே....” என்று இழுக்கிறான்.

கை.பி: “ஏய்ய், எவனாவது தடயம் பத்தி பேசினா, பிச்சுபுடுவேன் பிச்சு, என்ன்ன்னது இது சின்னபுள்ளத்தனமா இருக்கு”

அ.கை-1: “அதில்லண்ணே, இத்தனை வருஷமா ஒரு தடயம் கூடவா கிடைக்கலைன்னு, ஊர்ல நாட்ல பேச்சு இருக்குன்னு சொல்ல வந்தேன்”

கை.பி: “அத ஏண்டா என்கிட்ட சொல்ற”

அ.கை-1: “அண்ணே நான் என்ன சொல்ல வந்தேன்னா ...”

கை.பி: “ஒன்னும் சொல்ல வேண்டாம், வாய மூடு”

அ.கை-1: “இருந்தாலும் .....”

கை.பி: “எனக்கு ஒன்னும் கேக்க வேண்டாம்” என்று நொண்டி நொண்டி ஓடுகிறார்.

அ.கை-2: “ஏம்பா அது என்னப்பா தடயம்”

அ.கை-1: “இது தடயம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சு, முடிக்காம ரெண்டு மூனு வருஷமா இழுத்துக்கிட்டு இருக்கு, இத தொரத்தனும்னா இந்த மாட்டர எடுத்தா போதும் ஓடிடும்”

அ.கை-1: “சரி சரி நம்ம ரெண்டு பேருக்கும் சூப்பரா காபி சொல்லு”

அ.கை-2: “காசு”

அ.கை-1: “அது ஒடர அவசரத்துல வாலட்டை விட்டுட்டு போயிருக்கு பார், வா பெரிய பொங்கலே கொண்டாடிடலாம்”

அ.கை-2: “அண்ணே நீங்க பெரிய ஆளுன்னே, உங்க சகவாசம் கெடச்சது நான் செஞ்ச புண்ணியம்”

அ.கை-1: “இது மட்டுமா, எங்கிட்ட வந்திட்ட இல்லை இனி இந்த அண்ணனை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுப்ப, வா முதல்ல காபி சாப்பிடலாம்”

முரளி இராமச்சந்திரன்.

Monday, January 17, 2011

தாயே, கவலையை விடு

சங்க இலக்கியங்களில் அற்புதமான கருத்துக்களை மறைமுகமாக  நயம்பட  சொல்லும் பல கவிதைகளை காணலாம், கலக்கமடைந்து இருக்கும் தாய்க்கு  மனக்கவலை தீரும் வகையில்  சொல்லப்பட்ட ஒரு ஆறுதலான செய்தியை  இங்கே  பார்க்கலாம்.
நவீன காலத்தில் ஒரு பெண் தனக்கு விருப்பமானவனை பெற்றோருக்கு தெரியாமல், அல்லது அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி மணந்து கொண்டு போவது பற்றி நிறையவே கேள்விப் படுகிறோம்.  இது ஒன்றும் புதிதல்ல. மனித குலம் தோன்றிய காலம் தொடங்கி நடைபெறும் சம்பவம்தான்.
ஒரு நாள் வழக்கம் போல் காலையில் எழுந்த தாய் தன் மகள் படுத்திருந்த படுக்கை காலியாக இருப்பதைப பார்த்து ஆச்சரியப்பட்டாள். எப்பொழுதும் அதிக நேரம் தூங்கி எல்லோருக்கும் பிறகு கடைசியாக எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் அந்தப் பெண் . வீட்டில் எல்லோருக்கும் அவள் செல்லப் பெண். 
அவள் வெளியில் இருக்கிறாள் என்று நினைத்து கூவி அழைக்கிறாள் தாய். பதில் இல்லை. தேடிப் பார்க்கிறாள். அவளைக் காணவில்லை.
       நெடுநேரமாகியும் அவள் வரவில்லை. தாய்க்கு கவலை அதிகமானது. வயதுப்பெண். தனியாக வெளியில் அதிக தூரம் போய் பழக்கம் இல்லாதவள்.  அதிக நேரம் தாயை விட்டு பிரிந்து  இருந்தவளுமில்லை.
 
           தாய்க்கு அடுத்தபடியாக அந்த பெண்ணை நன்கு அறிந்தவள் செவிலித்தாய்பல நேரங்களில் அந்த பெண் செவிலித்தாயுடன் அதிக  நேரத்தை கழிப்பதுண்டு.
 
        வந்த செவிலித்தாயிடம் கேட்கிறாள் எங்கே அவள் என்று. செவிலித்தாய்க்கும் தெரியவில்லை என்று அறிந்து அதிர்ச்சி  அடைகிறாள். இப்பொழுது தாயின் முகத்தில் சோகம் படர்ந்து விட்டது. முகம் வாடிவிட்டது.  அழாத குறைதான்

என் மகள் எங்கே போயிருப்பாள்  என்று திரும்பத் திரும்ப கேட்டு புலம்பிக்கொண்டிருந்த  தாய்க்கு பதில் கூறுகிறாள் செவிலித்தாய்.

           கடுமையான வெயிலடிக்கும் பாலைவனம். நண்பகல் நேரம். நல்ல கோடைக்காலம். அனல் பறக்கும் நீண்ட  நிலப்பரப்பில் எங்காவது குடிக்க நீர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில்  இரண்டு மான்கள் அலைகின்றன .

கோடை வெயில் காரணமாக எல்லா உயிர்களுக்கும் நீர்  அதிகம் தேவைப்படும்.
வெயிலில் அலைவதால் கூடுதலான நீர் தேவைப்படுகிறது. நீரைத்தேடி  ஓடிக்களைத்து  சோர்வால் பெண்மான் விழுந்து விடுமோ என்று ஆதங்கத்துடன் பார்க்கிறது ஆண்  மான்.
       பல நேரங்களில் கானல்நீர் கண்டு ஓடிக்களைத்து ஏமாந்து சோர்வு மிகுந்த நேரத்தில் ஒரு சுனையை பார்கிறது ஆண் மான். அந்த சுனை மிகச்சிறியது. .அதில் இருக்கும் நீர் மிகக் குறைவு. இரன்டு மான்களுக்கும் இருக்கும் தாகத்திற்கு அந்த நீர் நிச்சயமாக போதாது என்று ஆண் மான் உணர்கிறது.

           இரன்டு மான்களும் சுனையின் அருகில் வந்து நின்றன. பெண் மான் ஆண் மானை பார்த்தது. ஆண் மான் சுனை நீரில் வாயை  வைத்தது. பெண் மானும் சுனை நீரில் வாயை வைத்து நீரை குடிக்கத் தொடங்கியது.  ஆனால் ஆண்   மான் நீரில் வாயை வைத்ததே  தவிர  நீரைக் குடிக்கவில்லை. குடிப்பதுபோல் நடித்தது.  தாகமிகுதியாலும் சோர்வாலும் பெண்மானுக்கு எந்த நினைவும் இல்லை.
 
        தான்  நீர் குடிக்காவிட்டால் பெண்மான் நீர் குடிக்காது என்று ஆண் மானுக்குத்  தெரியும்அதனால் சுனையில் வாயை வைத்ததே தவிர உண்மையில் நீரைக்  குடிக்கவில்லை.  குடிப்பது போல் ஆண் மான் நடித்தது.
 
     பாலைவனத்தில் உள்ள அந்த ஆண்மானுக்கு பெண்மான்  மீது அவ்வளவு காதல். தன்னை வருத்திக்கொண்டு தன் இணையை காக்கும் பண்பு கொண்ட ஆண்மான் அது.
 
    அந்த வழியில்தான் உன் மகள் தனக்கு உரியவனுடன் போயிருக்கிறாள். இதுதான் செவிலித்தாய் கொடுத்த பதில். ஆண் மானுக்குள்ள அந்த பண்பு அந்த வழியில் செல்லும் உன் மகளின் காதலனுக்கும் நிச்சயமாக உண்டு. அவளை அவன் கண்  போல் வைத்து காப்பாற்றுவான். . ஆகையால் உன் கவலையை விடு. என்பது சொல்லாமல் சொன்ன செய்தி.

இப்பொழுது பாட்டை பார்ப்போம்


சுனை வாய்ச்சிறு நீரை எய்தாதென்றெண்ணி
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான் தன் 
கள்ளத்தினூச்சும் சுரமென்ப  காதலர்  தம் 
உள்ளம் படர்ந்த  நெறி.      
--- ஐந்திணை  ஐம்பது


இது போன்ற இனிமையான நயம் மிகுந் கவிதைகள் பலவற்றை  சங்க இலக்கியங்களில்  காணலாம்.
- மு. கோபாலகிருஷ்ணன்.