Monday, November 29, 2010

படம் பாரு கடி கேளு - 47


பால் சக்கரை வேண்டாம் - அப்படியே சாப்பிடுவேன் !

Sunday, November 28, 2010

படம் பாரு கடி கேளு - 46


ஆமாம் அங்கேதான். பார்த்து சரியா கையெழுத்து போடுங்க. அப்புறம் 'zoo' லிருந்து நீங்க ரிலீஸ் பண்ணலே நானே ஓடிட்டேன்னு பிரச்சனையெல்லாம் வரக்கூடாது சொல்லிட்டேன்.

Tuesday, November 23, 2010

ஒன்று நமது பூமி

மு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தேசிய ஒருமைப்பாடு பற்றி அக்டோபர் 13, 2010 அகில இந்திய வானொலி (திருச்சி) நிலையத்தில் ஆற்றிய சொற்பொழிவு இங்கே கேட்கலாம்.

Click here for ஒன்று நமது பூமி. 

அந்த வலைப்பக்கத்தில் பிழை வந்தால், இங்கே வந்து மீண்டும் சொடுக்கவும்.

மீனாவுடன் மிக்சர் 22 - {சித்ரகுப்தா, எடு உன் லெட்ஜரை!}

அறிவிப்பு - இது வழக்கம் போலான நகைச்சுவை பதிவு அல்ல. மனிதத்தோல் போர்த்திய சில மிருகங்களின் அரக்கத்தனத்தில் மனமொடிந்து நான் எழுதிய பதிவு தான் இது. ஆரோக்யமான இருதயம் இருந்தால் மட்டுமே இதை படிக்கவும்.

-------------------------------

அரக்கத்தனமும் அசுரத்தனமும் உலகத்தில் தலைவிரித்து ஆடும் போது கடவுள் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பார் என்பது நம் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்தி சொல்கிற ஒரு விஷயம். இன்டர்நெட் வலைப்பூ மூலமாக இத்தனை நாட்களாக இனிமையான விஷயங்களை மட்டுமே பொழுது போக்குக்காக படித்து கொண்டிருந்த எனக்கு நேற்று ஒரு பலமான சாட்டை அடி. மனிதாபிமானம், மனித நேயம் - இதெல்லாம் வெறும் பைத்தியக்கார கனவுகளோ என்று எண்ண வைக்கும் அதிபயங்கரமான அசுரத்தனம் ஒன்றை நேற்று வலைப்பூ மூலம் முதல் தடவையாக பார்த்து தெரிந்து கொண்ட எனக்குள் ஏதோ உறைந்து போன மாதிரியான உணர்வு.

பாசமான உறவுகள், இனிமையான நண்பர்கள் மற்றும் அருமையான சமூக தோழமைகள் - இது தான் நான் சாதாரணமாக வாழும் ஒரு dettol போட்டு அலம்பிய உலகம். நான் பார்க்க உதித்து, அஸ்தமிக்கும் அதே சூரியனின் கீழ் மனிதத்தோல் போர்த்திய பல அசுரர்கள் நடமாடுவது நம்ப விரும்பாமல் நான் இத்தனை நாட்கள் மறுத்திருந்த ஒரு உண்மை. ஆனால் இன்று கண்கட்டவிழ்ந்து ஒரு முட்டாளின் சொர்கத்திலிருந்து வெளியே வந்து விட்ட நான் அதிகம் உணர்வது சீற்றமா, துக்கமா, அருவருப்பா, வெறுமையா? எனக்கு சொல்ல தெரியவில்லை.

பெண்களுக்கு சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புக்களும் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் இன்னும் பல இளம் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்படுவது முட்டாள்தனமென்றால் ஆமாம், நான் முட்டாள் ராஜ்யத்தின் மகாராணி தான். அதிலும் மூன்று, நாலு, ஐந்து வயது பச்சிளம் குழந்தைகளை அவர்களோட தாய் தந்தை மற்றும் உறவினர்களே சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒரு சில நூறு ரூபாய் தாட்களுக்காக விற்று விடுவதை கேட்டு இதயக்கூடு காலியாகி ஸ்தம்பித்து நிற்பது பைத்தியக்காரத்தனமென்றால் ஆமாம் நான் சட்டையை கிழித்து கொண்டு அலையாத ஒரு பைத்தியக்காரி தான்.

மூக்கில் சளி வந்தால் தானாக துடைக்க தெரியாத மூன்று வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தார் ரோட்டில் தடுக்கி விழுந்தால் சராய்த்து ரத்தம் வரும் கால் முட்டியை பார்த்து பயத்தில் வீறிடும் நாலு வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தன் பெயரையே முழுசாக இன்னும் எழுத தெரியாத ஒரு பச்சிளம் ஐந்து வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? குண்டு திராட்சை கண்களால் பீதியுடன் ஏறிட்டு பார்க்கும் குழந்தையை பலாத்காரம் பண்ணக் கூட ஒரு மனிதனுக்கு மனம் வருமா? சிவன் தலையில் ஊற்றெடுத்து பொங்கி ஓடும் கங்கை நதியில் சாக்கடை நீரை கொட்டக் கூட ஒரு மனிதனால் முடியுமா?

ஒரு மனிதன் அல்ல, பல மனிதர்களால் முடியும் என்பதை நேற்று பார்த்த செய்தியில் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று வயது பெண் குழந்தையை gang rape செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி ரயில் தண்டவாளத்தில் குப்பை போல தூக்கி விட்டெறிந்து விட்டு போன மனிதர்கள் எந்த நரகத்திலிருந்து தப்பி வந்த அசுரர்கள்? இவர்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் மழை எப்படி பெய்கிறது? சுனாமி இவர்களை எல்லாம் இழுத்து கடலில் மூழ்கடிக்காமல் ஏன் இன்னும் விட்டு வைத்தது? அந்த குழந்தையை பெற்று விற்ற தாய் தந்தை ஏன் இன்னும் பஸ்பமாகவில்லை? ஆஸ்பத்ரியில் உயிருக்கு அந்த குழந்தை போராடும் போது பச்சிளம் குழந்தைகளிடம் தங்கள் ஆண்மையை காண்பிக்கும் இந்த அராஜகர்களேல்லாம் எப்படி உயிரோடு நடமாடலாம்? இந்த அவலைப் பெண்கள் சுவாசிக்கும் அதே காற்றை இந்த அரக்கர்களும் எப்படி சுவாசிக்கலாம்?

என் கேள்விகளுக்கு பதில் எங்கே? நம் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் சொல்படி பார்த்தால் இந்த அசுரர்களை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவர் எங்கே? ஒ மறந்து விட்டேன். அரசன் அன்று கொல்லுவான் ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லுமோ? என்னால் முடியாது. எனக்கு அந்த பக்குவமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதோ என் கற்பனை உலகத்தில் நான் இன்றே வழங்கும் தீர்ப்புகள்.

நான் - சித்ரகுப்தா, விலகிக்கொள். இன்று ஒரு நாள் உன் லெட்ஜர் மற்றும் நாற்காலி என் கையில்.

சித்ரகுப்தன் - அப்பாடி! ஒரு நாள் எனன, ஒரு மாசம் வேணும்னாலும் நீயே இந்த வேலையை பாரு. (ஓட்டமாய் ஓடுகிறார்)

சித்ரகுப்தன் நாற்காலியில் நான் - யமதர்மா, இன்று பூமியில் ஒரு சில மனிதர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது. நீங்களே பயந்து எருமையில் ஏறி ஓட்டம்பிடிக்கும் அளவு அசுரத்தனம் எல்லாம் அங்கு நடக்கிறது. அவர்கள் முன் சூரபத்மனும், நரகாசுரனும் கமர்கட் திருடிய சிறு பிள்ளைகளாக தோன்றுகிறார்கள்.

யமதர்மன் - உனது பரிவுரை எனன மீனா?

நான் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் சொல்லொணா கொடுமை செய்யும் மானிடப் பதர்கள் அனைவருக்கும் இந்த நரகம் பற்றாது. புதுசாக ஒன்று நிர்மாணிக்க ஏற்பாடு செய்யுங்கள். எண்ணைக் கொப்பரைக்கு பதில் அங்கு கொதிக்கும் எண்ணைக் கடல் ஒன்றை நிறுவுங்கள். இந்தப் பாவிகளை அந்த கரையோரம் நிறுத்தி, கொதிக்கும் எண்ணை அலை அலையாய் பொங்கி அடித்து அதில் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெந்து, புண்பட்டு, கதறி சாக வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் அசுரத்தனமாய் தீண்டிய அவர்கள் கைகளை வெட்டி விட்டு பின்பு தான் எண்ணை கடல் கரையோரம் நிற்க வைக்க வேண்டும்.

யமதர்மன் - செய்து விடுகிறேன் மீனா. வேறெதாவது கோரிக்கை உண்டா?

நான் - இன்னும் ஒன்றே ஒன்று மன்னா. இவர்களிடம் கொடுமைப்பட்ட அனைவரின் மனத்திலும் அந்த கொடூரமான நினைவுகளை அகற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு மற்ற நாட்களை பூமியில் கழிக்க நீங்கள் அருள வேண்டும்.

யமதர்மன் - இல்லை. அது எனக்கு அப்பாற்பட்டது மீனா. நினைவுகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. உனது பரிவுரைகளை உடனே அமுலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். இனி, நீ போய் சித்ரகுப்தனை சபைக்கு அனுப்பு.

நான் - அப்படியே ஆகட்டும் காலனே. (வெளியேறுகிறேன்)

-மீனா சங்கரன்

Friday, November 19, 2010

திருவரங்கத்தில் ஒரு தமிழ் வேள்வி

இந்திய வரலாறு படித்தவர்களுக்கு மொகலாய அரசன் ஷாஜஹானை நன்றாக நினைவில் இருக்கும். ஷாஜஹானை நினைவில் கொள்வதற்கு முக்கியக் காரணம் இறந்து போன தன் மனைவியின் நினைவாக அவர் கட்டிய தாஜ்மஹால்தான்.

ஷாஜஹான் மொகலாய பேரரசன். தன் மனைவியின் நினைவாகப் பெரும் தொகையை செலவு செய்து பல ஆயிரக்கணக்கான கட்டிடக் கலைஞர்களையும் மற்றும் தொழிலாளர்களையும் கொண்டு பல ஆண்டு உழைப்பில்  ஒரு கலைக்கூடத்தை தாஜ்மஹால் என்ற பெயரில் உருவாக்க முடிந்தது. சாதாரண மனிதன் மனைவியை இழந்தால்அவனுடையதுயரத்தை காலம்தான் ஆற்றமுடியும்.

சிலர் தன் துயரத்தை மறக்க ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவார்கள். மேலும் சிலர் மனைவியின் பெயரால் சில தருமகாரியங்களை செய்வார்கள். அவரவர்களுடைய பொருளாதார நிலைக்கு தக்கபடிஅந்த தரும காரியம் நடக்கும்.

சில அசாதாரண மனிதர்கள் தூயதொண்டுசெய்வதையே வாழ்க்கையாக மாற்றிக்கொள்கிறார்கள்.

திருச்சி திருவரங்கத்தில் ஒரு அதிசய மனிதர். அவர் பெயர் ராஜவேலு. வழக்கறிஞர். நல்லதமிழறிஞர். சிறந்த கவிஞர். நாடக நடிகர். ஆற்றல் மிக்க பேச்சாளர்.

அவருடைய மனைவி செண்பகவல்லி இறந்து போனபோது ராஜவேலு துயரத்தில் துடித்துப் போனார். ஆனால்அவருடைய தமிழார்வமும் நல்லறிவும் அவரை சிந்திக்கச் செய்தது. தன் துயரத்தைத் தீர்க்கும் வடிகாலாக இழந்த தன் மனைவியின் நினைவைப் போற்றும் வகையில் மனைவியின் பெயரால் செண்பகத் தமிழ் அரங்கு என்ற அமைப்பை உருவாக்கினார்.

தன் பெயரையும் ராசவேலு செண்பகவல்லி என்று மாற்றிக்கொண்டார். 1990-ம் ஆண்டு தொடங்கிய அந்த அரங்கு இன்று ஒரு பெரிய தமிழ் இயக்கமாக வளர்ந்திருக்கிறது. திருவரங்கம் காந்தி சாலையில் ஒரு தமிழ் கோயிலாக பலர் கண்ணுக்கு தெரிகிறது
.
தாஜ்மஹால் போன்ற கலைக்கூடம்தான் கட்டவேண்டுமா? இல்லை. இவரைப்போல் ஒரு இயக்கத்தையும் தொடங்கலாம்.

சென்ற இருபது ஆண்டு காலமாக இந்த அரங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று தமிழ் இலக்கிய விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கியமாக அழுத்தமாக குறிப்பிடவேண்டியது தவறாமல் சனிக்கிழமையன்று கூட்டம் நடந்தே தீரும் என்பது. சரியாக மாலை ஆறு மணிக்கு கூட்டம் தொடங்கும். இந்த அரங்கம் தொடங்கிய நாள் முதல் தவறாமல் நடக்கும் கூட்டம் இப்பொழுது ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இன்று  நடைபெறவிருக்கும் ஆயிரமாவது கூட்டம் சிறப்பான விழாவாக நடைபெறும். கடந்த பல ஆண்டுகளில் இந்த அரங்கத்தில் சிறிய பேச்சாளர் தொடங்கி தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் வரை அனைவரும் பேசியிருக்கிறார்கள். இந்த அரங்கில் பேசக் கிடைக்கும் வாய்ப்பை தமக்கு கிடைத்த பேறாக பல தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு இந்த செண்பகத் தமிழ் அரங்கு தமிழ் ஆர்வலர்களிடம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருக்கிறது. நீண்ட தூரம் பயணம் செய்து கூட்டத்தில் கலந்து கொள்ளும் பலரை நான் கண்டிருக்கிறேன்.

இந்த அரங்கில் சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, இடைக்கால பக்தி இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு பாரதி கவிதைகள் வரை சகல தலைப்புகளிலும் இலக்கிய உரை நிகழ்த்தப்படுகிறது.

அரசு உதவியுடன் பெரிய அளவில் செயல் படும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் தொடர்ந்து செயல்பட முடியாத இந்த காலத்தில் ஒரு தனி நபர் தன்னுடைய சொந்த முயற்சியில் இதைச்செய்ய முடிகிறது. என்று அறியும்போது நமக்கு வியப்புதான் ஏற்படும். வள்ளலார் வாழ்வையும் கருத்துகளையும் பரப்பும் தொண்டுபுரியும்தவத்திரு ஊரன்அடிகள், செந்தமிழ் அந்தணர் இலங்குமறனர், இயல் இலக்கண வித்தகர் தி.வே.கோபாலய்யர் போன்ற இலக்கிய அறிஞர்கள் மற்றும் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பல தமிழறிஞர்களின் படைப்புகள் இங்கே விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பல தமிழறிஞர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

தமிழ் இலக்கியம் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டு வரலாறு, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்கள், அந்த கோயில்களில் உள்ள சிற்பங்களின் பெருமை,  தலவரலாறு பற்றியும்சொற்பொழிவு நடை பெறுவதுண்டு.

சைவசமயம் வைணவ சமயம்,ஆகிய பல பிரிவுகளின் மெய்ஞான அடிப்படைகள் பற்றிய விளக்க கூட்டம் நடக்கும். கிறிஸ்தவ சமயம் இஸ்லாமிய சமய அடிப்படை கொள்கைகள் பற்றியும் ஒரு தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. ஷேக்ஸ்பியர் ,பெர்னார்ட் ஷா போன்ற ஆங்கில இலக்கிய ஆசிரியர்களின் நாடகங்களின் விளக்க சொற்பொழிவு நடந்தது இந்திய மொழிகளான வங்காளம், மராத்தி, ஹிந்தி ஆகிய பல மொழிகளின் வரலாறு, அந்த மொழிகளின் முக்கிய இலக்கிய படைப்புகள் பற்றியும் சில கூட்டங்களில் விளக்கமாக பேசப்பட்டன. ..அந்த மொழிகளில் புலமை படைத்த பலர் இந்த அரங்கில் பேசியிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் இலக்கியம் பற்றியும் இலக்கிய தொடர்பான இதர துறைகள் பற்றியும் விமர்சனங்களோடு கூடிய விளக்கக் கூட்டம் வாரம் தவறாமல் நடைபெறுகிறது.


திருச்சி நகரத்தில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கையோடு பார்க்கும் அமைப்பாக செண்பகத்தமிழ் அரங்கு வளர்ந்திருக்கிறது. பயன் கருதாது தொடர்ந்து நடத்தப்படும் இந்த அரங்கின் ஆயிரமாவது கூட்ட நிறைவு விழா 20.11.2010 காரி (சனி)க் கிழமை முற்பகல் 09.30 மணிமுதல் ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இடம்: எசு.என்.திருமண மாளிகை (காவிரிக்கரை அம்மா மண்டபம் அருகில்), திருவரங்கம், திருச்சிராப்பள்ளி. அதையொட்டி நடைபெறவிருக்கும் விழாவில்பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.சிறப்பான முறையில்கூட்டம் நடைபெற முனைப்போடுவேலைகள்நடக்கிறது.

ஒருஆசிரியர்தன்னுடைய எம் .பில் பட்டப் படிப்பிற்காகசெண்பகத் தமிழ் அரங்குபற்றியஆய்வேடு தயாரித்து பல்கலைகழத்தில் சமர்ப்பித்திருக்கிறார். சமீபத்தில் பெங்களூர் தமிழ் சங்கம் திரு ராஜவேலுக்கு பாராட்டு தெரிவித்து அவரை கௌரவித்திருக்கிறது. அவர் சார்பாக அவருடைய குமரன்இளங்கோபெங்களூர் சென்றுபாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். திரு ராஜவேலுஏன்பெங்களூர் சென்று தானே நேரடியாக விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழலாம். இங்கேதான் ஒரு வேதனை தரும்செய்தியை குறிப்பிடவேண்டியிருக்கிறது.
திரு ராஜவேலுக்கு கடந்த பல வருடங்களாகக் கண்பார்வை சரியாக இல்லை. தன் வீட்டில் மட்டும் நடமாடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையிலும் அவருடைய தமிழ்ப்பணி தொடர்கிறது.

இதுவரை நடைபெற்ற எல்லா சொற்பொழிவுகளையும் ஒலிநாடாவில்
பதிவு செய்திருக்கிறார். விழாவில் சில முக்கிய சொற்பொழிவுகள் அடங்கிய சிறப்புமலர் வெளியிடப்படவிருக்கிறது.

திரு ராஜவேலுவின் தன்னலம் கருதாத இந்த தொடர் முயற்சியில் பல அறிஞர்கள் உறுதுணையாக நிற்கின்றனர். காலம் சென்ற புலவர் சேது மாணிக்கம் அவர்கள் தன் வாழ்நாளில் அரங்கின் செயல்பாட்டுக்கு மிக்க உறுதுணையாக இருந்தார். நண்பர் தமிழன்பனும் நல்ல துணையாக நின்று செயல்படுகிறார். இந்த அரங்கின் சார்பாக ஒரு நூல்நிலையம் செயல்படுகிறது. இதுபோன்ற தனிநபர் முயற்சியை பார்க்கும்போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை வருகிறது. தமிழை வைத்து பிழைக்க முயற்சி செய்பவர்கள் மலிந்து கிடக்கும் தமிழ்நாட்டில் தமிழுக்காக வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்று அறியும்போது நாம் ஒரு வகையில் நிம்மதிஅடையலாம்.

- மு. கோபாலகிருஷ்ணன்

(செண்பகத் தமிழ் அரங்கு தொடர்பாக சில சுட்டிகள் இங்கே)

Sunday, October 17, 2010

கொலு 2010

கடந்த சில ஆண்டுகளாக கொலு சுற்றுலா போக முடியவில்லை. இந்த ஆண்டுதான் எந்த சாரண முகாமும் போகாமல் ஊரில் இருந்ததால், சுண்டல் வேட்டைக்கு கிளம்பினேன். ஆரம்பித்தது பார்கவி-கணேஷ் தம்பதியினர் வீட்டில்.கொலு என்றால் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற மனப்பான்மை ஒன்று நிலவுகிறது. அதற்காக கொலுவுக்கு நிஜமாக வேலை செய்தவர்களை வைத்து படம் பிடிக்கவேண்டும் என்று ஒரு திட்டம். அதனால் நம் நண்பர் ஆனைமுகனை நிற்க வைத்து ஒரு படம். என்ன பெருமையாக நிற்கிறார் பாருங்க...


கணேஷை மட்டும் ஏன் என்று அவர் மகனுடன்...
 பச்சை யந்திரன் தனியாக... இந்த கொலுவில் எனக்கு மிகவும் பிடித்த பொம்மை கருடனின் தோள்களில் அமர்ந்திருக்கும் மஹாவிஷ்ணு.
 இந்த திருமண காட்சியும் அருமை.
 நம் ஊரில் கிரிக்கெட் விளையாடும் பிள்ளையார், டென்னிஸ் ஆடும் பிள்ளையார் பொம்ம்மை பார்த்திருப்பீர்கள். இவர்கள் வீட்டில் சீனத்து பிள்ளையார் பொம்ம்மைகள் பார்த்தேன். இந்தப் படங்களில் தேடாதீர்கள். படம் பிடிக்கவில்லை :-)


 அடுத்ததாக திருவாசகம் மீனா சங்கரன் வீட்டு கொலு. உடல் சரியில்லாவிட்டாலும் அழகாக சிரிக்கும் அவர்கள் மகளுடன் மீனா.

 ரிச்மண்டில் இதுவரை காணாத கிரிக்கெட் மைதான அமைப்பு. ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி. ஆனால் மட்டையை காலுக்குப் பின்னால் ஒளித்து வைத்து விளையாடி பார்த்ததில்லை.


 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது தூணைப் பிளந்து வெளியே வரும் நரசிம்மர். பிளந்திருக்கும் தூணைப் பார்த்தால் எனக்கு என்னவோ நினைவுக்கு வருவது பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளச்செங்கூர் வாய் நாரைதான் :-)
 மேல்தட்டில் கஜேந்திர மோட்சமும் உண்டு.

 அடுத்ததாக சித்ரா-ரவி வீட்டு கொலு. வேறு எந்த வீட்டிலும் பார்க்காத காட்சி இங்கே - வேஷ்டியில் ரவி!

 கொலு பொம்மைகள் அழகா, இந்தப் பெண்கள் அழகா...
 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தவை அஷ்டலஷ்மிகளும் பிள்ளையார் வாத்தியக் கோஷ்டியும்.




 அடுத்த வீடும் சித்ரா-ரவி வீடுதான் :-) ஒரு சிறிய அழகான கொலு!
இந்த கொலுவி எனக்குப் பிடித்தது கொலுவின் முன்னே சித்ரா வரைந்திருந்த பெருமாள் ரங்கோலி.



 அடுததது லாவண்யா ராம்கி வீட்டு கொலு.






 இந்த கொலுவில் எனக்குப் பிடித்தது பால்குடத்தைக் கவிழ்க்கும் கண்ணன். மற்றவர்களைக் கவர்ந்தது ஒளிரும் நீலமயில்கள்.
 அடுத்ததாக மாலதி என்கின்ற சாவித்ரி - முரளி  வீட்டு பிரம்மாண்டமான கொலு.




 நான் வீட்டுக்குள் நுழையும்போது ஓடிக்கொண்டிருந்த ரயில்.

 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது மரத்தால் செய்த யானை அம்பாரி.
 கடைசியாக பவானி-கண்ணன் வீட்டுக் கொலு.


 இந்தக் கொலுவில் எனக்குப் பிடித்தது தசாவதார பொம்மைகள்.

இவ்வளவு கொலு படம் காட்டிவிட்டு, பாட்டில்லாவிட்டால் எப்படி? கடைசியாக ஒரு பாட்டு...

இவ்வளவு பொம்மைகள் பார்த்துவிட்டு எனக்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டது. உங்களுக்கெல்லாம் இப்போது பண்ருட்டியென்றால் பலாப்பழம்தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் பொம்மைகளுக்கு பெயர் போனது பண்ருட்டி. முத்தையர் பள்ளியில் படிக்கும்போது சுற்றுவட்டார வீதிகளில் நிறைய பொம்மைகள் செய்து வெளியே காயவைத்திருப்பார்கள். சப்பாணி செட்டி தெரு முழுக்க பொம்மைகள் நிற்கும். தெருவில் ஜாதிப்பெயர்கள் நீங்கி பொம்மைகளும் அகன்று இப்போது வெறும் சப்பாணி ஆகிவிட்டது அந்தத் தெரு.

பல வீடுகள் இந்தப் பட்டியலில் நீங்கிவிட்டன. இந்த வாரம் பிள்ளையாண்டான்களுக்கு சாரதித்துவம் செய்ததால் சில வீடுகளுக்கு என்னால் போகமுடியவில்லை. போனவள் காமிரா கொண்டுபோகவில்லை. அதனால் விட்டுப்போன கொலுக்களுக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்.


Wednesday, October 06, 2010

ஒரு பாக்யராஜ் ரசிகனின் கதை

"கன்னி பருவத்திலே" என்னோட நண்பன் கனகராஜ் "தாவணி கனவுகள்" கண்டு கொண்டு இருந்த சில பொண்ணுங்க கிட்டே "டார்லிங் டார்லிங் டார்லிங்" சொல்லி, அவங்களை முதல்ல "வீட்ல விசேஷங்க"-ன்னு சொல்ல வச்சு பிறகு "ஆராரோ ஆரிராரோ" பாட வைக்கலாம்னு ஆசைப்பட்டு பல தடவ "வேட்டிய மடிச்சு கட்டி"க்கிட்டு போயிருந்தாலும், எப்போதும் அவனுக்கு முதல்ல கிடக்கிற பதில் "விடியும் வரை காத்திரு", அப்புறம் "இன்று போய் நாளை வா". 

காலேஜில NSS கேம்ப்-ன் கடைசி “அந்த 7 நாட்களில்” கனக்ஸ் யாரு கிட்டயோ  காதல்ல “புதிய வார்ப்புகள்” உருவாக்க முயற்சி  பண்ணி அதுக்கு அவங்க குடுத்த  டோஸ்-ல அவனோட  ஜொள்ளு “தூறல் நின்னு போச்சு".  கொஞ்சம் "பொய் சாட்சி" செட்டப் பண்ணியும் பிரயோஜனம் இல்ல.  இதுல நொந்து போன கனக்ஸ் "சுவரில்லா  சித்திரங்கள்" எப்படி போடறது,  "ஒரு கை ஓசை" -ல எவ்வளவு நாள்தான் ஓட்டறது,  நமக்கு "சுந்தர காண்டம் " சரிப்படாதுன்னு முடிவுக்கு வந்துட்டான். அத எல்லாம் நெனச்சு அப்பப்போ "மௌன கீதங்கள்" பாடுவான். 

"ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரி"- யை "முந்தானை முடிச்சு" பண்ணின பிறகு "இது நம்ம ஆளு"ன்னு பேசாம சௌதியில "ராசுக்குட்டி" போல இருக்கான் "எங்க சின்ன ராசா". அங்கே "சின்ன வீடு" தேடி  "பாமா ருக்மணி" வீட்டுக்கு போனா "அவசர போலீஸ் 100 " கூப்பிட்டு உள்ளே தள்ளிருவாங்கல்லே. கல்யாணத்தப்போ என்னதான் "பவனு பவுனுதான்" எல்லாம் வேண்டாம்னு சொன்னாலும் அவன் ஒரு "ஞான பழம்"னு யாரும் நெனச்சிராதீங்க.

Saturday, October 02, 2010

பித்தனின் கிறுக்கல்கள் – 39

சாமியார் உஷார்:
சில காலங்களுக்கு முன்பு செல்வம் சித்தர் என்ற டுபாக்கூர் சாமியாரைப் பற்றி கிறுக்கியது நினைவிருக்கலாம்

சமீபத்தில் இவரைப் பற்றி எனது நண்பன் சொல்லி இவர் மீண்டும் வெளியே தலைகாட்ட ஆரம்பித்து விட்டாரே இப்போ என்ன செய்வாய் என்று கிண்டலடிக்க, இந்தியாவை விட்டு இங்கு புலம் பெயர்ந்து நான்கு கால் ப்ராணியை விட கேவலமாக நடத்தப் பட்டும் (வீட்டில் இல்லை, அலுவலகத்தில்) இங்கு விடாப்பிடியாக வாழும் எம்மைப் பார்த்து இப்படி சொல்லிவிட்டானே என்று கவலைப் படலாமா என்று யோசிக்கலாமா என்று பூவா தலையா போட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கலாம் என்று இருக்கும் போது, கை வசம் ஒரு டாலர் செப்புக் காசு (அது செப்பா இல்லை வேறு ஏதாவதா, நாகு பதில் ப்ளீஸ்) இல்லாததால் தள்ளிப் போட்டு விட்டேன். அப்பா! எப்படியெல்லாம் ஜல்லியடிக்க வேண்டியிருக்கிறது.

..................

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

Friday, September 24, 2010

எந்திரன் திரைப்படம்: ரிச்மண்ட்'ல் - Enthiran Premiere Show in Richmond!!!

Enthiran Movie will be Screened in Richmond!!

ரிச்மண்ட் தமிழ் சங்கம் எந்திரன் திரைப்படத்தை ரிச்மண்ட்'ல் திரையிடவுள்ளது!!








Tickets will be available online on 09/25/10 at  
Fandango.com  or Carmike.com or 

You can purchase At the Box Office.





For Other Details Contact: 804-502-8771 Or 804-502-8068 Or 804-303-6416

Wednesday, September 08, 2010

பித்தனின் கிறுக்கல்கள் - 38

பல மாதங்களுக்குப் பிறகு கிறுக்கத் துவங்குவதால் சமீபத்தில் நடந்த சில தமாஷ்களைப் பற்றி எழுதி இந்தப் பதிவை சற்று லைட்டாக வைக்கலாம் என்றிருக்கிறேன்.

டமாஸ் நெ.1:

உலகச் செம்மொழி மாநாடு:

இது ஒரு கால விரயம் என்றும், பண விரயம் என்றும் பலர் எழுதி குவித்துவிட்டார்கள். இந்த மாநாட்டினால் என்ன பயன் என்று எதற்காக இப்படி எல்லோரும் அடித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை. இதில் அவரை கூப்பிடவில்லை, இவரைக் கூப்பிடவில்லை, அவருக்கு மரியாதை செய்யவில்லை, இவருக்கு மரியாதை செய்யவில்லை என்று புகார்கள் வேறு வந்து கொண்டேயிருக்கிறது. நடந்தது ஒரு அதிகார மமதையில் இருக்கும் ஒரு கழகத்தலைவரின் சுயதம்பட்டத்திற்காக நடத்தப் பட்ட கூத்து. பக்க வாத்தியமாக பல விதூஷகர்களை வைத்து நட்த்தப்பட்ட ஒரு டமாஸ், இதில் காரண காரியத்தை தேடுவதுதான் முதல் கால விரயம். இந்த டமாஸ்களையும் மீறி ஒரு சில நல்ல தமிழ் ஆய்வுகளும், சில கருத்தரங்கங்களும் நடந்தது என்றும் தெரியவருகிறது. இவைகள் இப்படி ஒரு டமாஸுக்காக காத்திருக்காமல் வருடந்தோரும் நடந்து வருகிறது என்பதும் சில வலைப் பதிவிலிருந்து தெரியவருகிறது.

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்